privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்வரலாற்றுப் பார்வையில் தாலி - சிறப்புக் கட்டுரை

வரலாற்றுப் பார்வையில் தாலி – சிறப்புக் கட்டுரை

-

‘ஆமா..நல்லா வேலை செஞ்சு தாலியத்தே…போவியா” –

கரிசல் வட்டாரங்களில் ஆத்திரத்தில் மக்களிடம் புழங்கும் வசவு, இது. தாலியின் மதிப்பு ‘மயிர்’ என ஏசுவதன் ‘இடக்கரடக்கலாக’வோ, இளக்காரமாகப் பேசும்போது, ‘ஆமா..ஒன் தாலி’ என்றோதான் இருக்கிறது. ஆனால் பேனைப் பெருமாளாக்கி, பெருமாளைப் பெத்த பெருமாளாக்கும் இந்துவெறிக்கும்பலோ ‘தாலி’ பற்றிப் பேச நினைத்த புதியதலைமுறைத் தொலைக்காட்சியின் மீது ‘வீரமாக’க் குண்டு வீசி, பெரியார் திடலில் உருட்டுக்கட்டையால் அடிவாங்கிச் சுருண்டிருக்கிறது.

தாலி - இந்து கலாச்சாரமா?
இந்துவெறிக்கும்பலோ பெரியார் திடலில் உருட்டுக்கட்டையால் அடிவாங்கிச் சுருண்டிருக்கிறது.

இந்து வானரப்படைகள் வெளியிட்டிருக்கும் வெளியீடுகளில் “எது இந்துக்கலாச்சாரம்” எனப் பார்த்தால் நெற்றியில் பொட்டுவைப்பதில் தொடங்கி கோலம் போடுவது, பூவைப்பது என அப்பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. ஒன்றை நன்றாகக் கவனியுங்கள். இந்தப் பட்டியலை முழுக்கப் பெண்களுக்காகவே ஒதுக்கி இருப்பது தெரியும். அப்பட்டியலில் தாலியும் இருக்கின்றது.

உண்மையில் தாலி புனிதமானதா? அடிமைச் சின்னமா? தமிழர்களின் கலாச்சாரமா? கற்பின் சின்னமா? என்பதைப் போன்ற பல கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டியுள்ளது.

இதனை அலசுவதற்கு முன், கால தேச வர்த்தமானத்தைக் கணக்கில் எடுத்தபடி, திருமணம் காலந்தோறும் மாறி வருவதையும் மனதில் கொள்வது நல்லது. உதாரணமாக, 1990-களின் கடைசி வரை, ‘தாலிகட்டிய பின்னர்தான் திருமண வரவேற்பு’ என்று இருந்த நிலை மாறி, தாலிகட்டு சடங்குக்கு முந்தைய நாளே பெண்ணும் மாப்பிள்ளையும் வீடியோ ஒளிவெளிச்சத்தில் நனைந்தபடி நிற்பது என்ற மாற்றம் நடந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் திருமணங்களோ பல நாட்களாக நடந்திருக்கின்றன.

தாலி இந்து கலாச்சாரமா?
“சங்க காலத்தில் தாலிகட்டு இல்லை, 11-ம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வழக்கம் அது”

இதில் தாலி கட்டுவது தமிழர் திருமணத்தில் எப்போது ஆரம்பித்தது என்பதைப் பற்றி ஒரு விவாதத்தை பேரா.ராசமாணிக்கனார் 1954-ல் நடத்தியுள்ளார். “சங்க காலத்தில் தாலிகட்டு இல்லை” என்பதும், 11-ம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வழக்கம் அது” என்பதும் அவரின் வாதம். பல்வேறு இலக்கியச் சான்றுகளை வைத்து அதனை நிறுவினார்.

ம.பொ.சி. இதனை மறுத்து, “சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல அணி என்பது தாலிதான், எனவே சிலப்பதிகார காலத்திலேயே தாலி இருந்தது” என்றும் அடித்துப் பேசிக் கொண்டிருந்தார். பெரும்பாலான தமிழறிஞர்கள் ராசமாணிக்கனாரின் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

விவாதம், “எப்போது தாலி நுழைந்தது” என்பதோடு முடிந்துபோனது. யாரும், “தாலி ஏன் திருமணத்தில் நுழைந்தது” என்பதை விளக்கவில்லை. இதனைப் பின்னர் பார்ப்போம். அதற்கு முன், திருமண முறைகளையும், தாலியைப் பற்றி பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளையும் பார்த்து விடுவோம்.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கருநாடகம் ஆகிய நான்கு மாநிலங்களில் வாழும் மக்களின் பண்பாடுகளுக்கிடையே பல ஒற்றுமைகள் இருப்பதால், இந்த ஆய்வுக்கு இம்மாநில மக்களிடையே நிலவிய, நிலவுகின்ற திருமண முறைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வோம்.

‘பொய்யும் வழுவும் தோன்றிய’ பின் ‘ஐயர் யாத்தனர் கரணமென்ப’ எனத் தொல்காப்பியர் உரைத்த திருமணம், பெரும்பான்மை மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. பார்ப்பனர், வேளாளர் போன்ற ஆதிக்கத்தின் உச்சியில் இருந்தவர்களுக்கே உரித்தது ‘விவாகம்’. மந்திரச்சடங்குகள் இடம்பெறும் விவாகத்தை சூத்திரத் தமிழர்களும், நாயர் உள்ளிட்ட பார்ப்பனரல்லாத மலையாளிகளும் செய்திட அனுமதி இல்லை.

தாலி நமது கலாச்சாரமா?
பார்ப்பனர், வேளாளர் போன்ற ஆதிக்கத்தின் உச்சியில் இருந்தவர்களுக்கே உரித்தது ‘விவாகம்’.

பின்னர் எந்த மணமுறை அனுமதிக்கப்பட்டது? “சம்பந்தம்” அனுமதிக்கப்பட்டது.

‘சம்பந்தம்’ என்பது என்னவென்றால் மணமகன் சார்பில் புதுச்சேலை ஒன்று தரப்படும். அதைப் பெண்வீட்டார் பெற்றுக்கொண்டு பெண் அணிந்து கொள்வது, இதுதான் சம்பந்தம். இதுதான் மொத்தமாகவே திருமணம்.

பல்வேறு சாதிகளிடையே இதற்குள் சில சில வேறுபாடுகள், உதாரணமாக மாப்பிள்ளையே பெண்ணிடம் சேலையை அளிப்பது போன்ற வழக்கங்கள், இருக்கலாம்.

இன்னமும் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ‘சம்பந்தி’ என்றே அழைக்கின்றனர். சம்பந்த திருமணம் மறைந்து விடாமல் நிச்சயதார்த்தம் எனப்பெயர் மாறி அதன் பின்னொட்டாக அய்யர் வைத்து சடங்கு செய்வதும் சென்ற நூற்றாண்டில் சேர்ந்து கொண்டது.

தற்போது நடப்பிலுள்ள பெரும்பாலான திருமண வகைகளில் தாலி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தாலியைப்பற்றிப் பொதுப்புத்தியில் சொல்லப்பட்டுள்ளவைகளைப் பார்ப்போம்.

1. தாலிகற்பின் அடையாளம்.

தாலி அகற்றும் நிகழ்ச்சியை கி.வீரமணி அறிவித்த நாளிலிருந்தே தினமணியில் தொடங்கி சரத்குமார் வரைக்கும் சவுண்ட் விடாத ஆட்களே இல்லை.

தாலி - நமது கலாச்சாரமா?
தாலி அகற்றும் நிகழ்ச்சியை கி.வீரமணி அறிவித்த நாளிலிருந்தே தினமணியில் தொடங்கி சரத்குமார் வரைக்கும் சவுண்ட் விடாத ஆட்களே இல்லை.

”தாலி இல்லைன்னா ‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்கிற கற்பு என்னாகுறது” என்றெல்லாம் பேசினார்கள். தாலி என்பது கற்பின் சின்னம் என்று மக்களும் நம்புகின்றனர். கற்புக்கும் தாலிக்கும் தொடர்பு ஏதும் கிடையாது. சான்றாகச் சில சாதிகளில் 100 ஆண்டுகளுக்கு முன் நடப்பில் இருந்த திருமண முறைகளைப் பார்ப்போம். (அவற்றில் சில மாற்றங்கள் வந்திருந்தபோதும் சில மரபுகள் தொடர்வதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.)

மலையாளக் கம்மாளர், கணக்கன், பணிக்கன், தோல்கொல்லன், மண்ணான் போன்ற சாதிகளில் வீட்டில் மூத்த அண்ணன் மட்டுமே ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுவான். அவனின் தம்பிகளும் அப்பெண்ணோடுதான் (அதாவது அண்ணியோடு) உறவு வைத்துக்கொண்டு வாழ்வார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளிடையே எவ்வித பேதமும் பார்ப்பதில்லை.

தாலி நமது கலாச்சாரமா?
ஆக கற்புக்கும் தாலிக்கும் தொடர்பு இல்லை. கற்பின் வரையறை கூட சாதியைப் பொறுத்து மாறுபடுகிறது.

அனுப்பர், கம்மா, காப்பிலியர், வல்லம்பன் ஆகிய சாதிகளில் உறவு விட்டுப்போகக் கூடாது (நிலம் போய் விடக் கூடாது என்பதன் வேற்றுவடிவம்) என்பதற்காக பருவ வயதை அடையாத சிறுவன் குமரிப்பெண்ணுக்குத் தாலி கட்ட வைக்கப்படுகிறான். அச்சிறுவன் வயதுக்கு வரும் வரை அவனுடைய சித்தப்பனோ, தந்தையோ, அல்லது நெருங்கிய உறவினரோ அப்பெண்ணோடு உறவுகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். அக்குழந்தைகள், தாலி கட்டிய சிறுவனுக்குப் பிறந்தவர்களாகக் கருதப்படுவர். (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் – 7 தொகுதிகள் – எட்கர் தர்ஸ்டன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வெளியீடு )

ஆக கற்புக்கும் தாலிக்கும் தொடர்பு இல்லை. கற்பின் வரையறை கூட சாதியைப் பொறுத்து மாறுபடுகிறது.

2. கட்டிய புருஷனின் உயிருக்கு ஆதாரம்தாலி என்பதைப் போன்ற புனிதபிம்பங்கள் தொடர்ச்சியாகப் போதிக்கப்பட்டு வருவதால் சமூகத்தில் பலரும் ‘தொட்டுத் தாலிகட்டிய புருஷனையே எதிர்த்துப் பேசலாமா?’ என்பதைப் போன்ற அடிமைச் சிந்தனைகளைப் பரப்பி வருகின்றனர். மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதை மட்டுமே திருமணம் என்பதான பாவனையை சினிமாவும் சீரியலும் முன்னிறுத்துகின்றன. ஆனால் பல சாதிகளின் திருமணச் சடங்கில் மாப்பிள்ளை தாலி கட்டுவது கூட இல்லை. யார் தாலி கட்டுவார்கள்?

  1. கோமட்டி, கப்பேரர், குருபர், யாடர் ஆகிய சாதிகளில் புரோகிதன் தாலியைக் கட்டுவான்.
  2. படகர் சாதியில் நான்கைந்து மனைவியை உடைய பெரிய மனிதர் வந்து பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவார்.
  3. காடர், காட்டுப்பட்டர், கோட்டை வெள்ளாளர், தொட்டியர், ஊராளி, வலையன் ஆகிய சாதிகளில் மணமகனின் உடன்பிறந்தவளோ, தாயோ தாலியைக் கட்டுவர்.
  4. புலையன் சாதியில் மணமகனும் அவன் தோழனும் சேர்ந்து பெண்ணுக்கு தாலி கட்டுவர்.
  5. உப்பரர் சாதியில் பெண்ணின் ஊரைச் சேர்ந்த சீர்க்காரி என்பார் தாலி கட்டுவாள்.
  6. நாட்டுக்கோட்டைச் செட்டிகளில் தாலியை மண நாளன்று மணமகளின் கோவிலைச் சேராத பெரியவர் ஒருவரும், பெண்ணின் நாத்தனாரும் கட்டுவர்.

ஆக தாலி கட்டும் முறை கூட சாதிக்கு சாதி மாறுபடுகிறது. புருஷனுக்கும் தாலிக்கும் சம்பந்தமும் இல்லை.

3. தாலிஇந்துக்களின் கலாச்சாரமா?

தாலி இந்து கலாச்சாரமா?
தாலி கட்டும் முறை கூட சாதிக்கு சாதி மாறுபடுகிறது. புருஷனுக்கும் தாலிக்கும் சம்பந்தமும் இல்லை.

தாலி கட்டும் வழக்கம், இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது அர்த்தமற்றது. வேண்டுமானால் தென்னிந்தியாவிலுள்ள பல சாதிகளிலும் பல மதப்பிரிவைப் பின்பற்றுவோரிடமும், சுருக்கமாகச் சொன்னால் திராவிட மக்களின் ஒரு பகுதியினர் தாலிகட்டலை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று கூறலாம்.

தக்ணி இசுலாமியர் பிரிவில் தாலிக்கு மாற்றாக கருப்புப் பாசிமணிமாலை அணிவிக்கின்றனர். தூதே குலர், மாப்ளா, மரக்காயர், கொடிக்கால் லெப்பை பிரிவு இசுலாமியர்களும் தாலி கட்டுகின்றனர். வெள்ளை யூதர்கள் தாலி கட்டுகின்றனர். மின்னுகெட்டு எனும் மின்னு (தாலி) கட்டும் வழக்கம் சிரியன் கத்தோலிக்க மதப் பிரிவினரிடம் உள்ளது.

தாலி கட்டுதல் என்பது தென்னிந்தியாவின் பரவலான பழக்கம் எனச் சொல்லலாமே தவிர இந்துக்களின் பழக்கம் என்பது பச்சைப் பொய்.

4. தாலிஎல்லா இந்துக்களும் கட்டுகின்றனரா?

திருமணத்தன்று தாலி கட்டுவது என்பது 2 நூற்றாண்டுகளாகத்தான் வழக்கத்துக்கு வந்துள்ளது. பல சாதிகளில் பெண் வயதுக்கு வரும் முன்னரே பெண் வீட்டாரோ, அல்லது உறவினரின் மகன்,மகள் இவர்களை வைத்தோ கட்டுத்தாலி கட்டுவது என்பது வழக்கம். தாலி என்பதன் பொருள் தொங்குதல் என்பதே. காத்து கருப்பு அண்டாமல் இருக்கட்டும் என நரிப்பல் போன்றவற்றை சிறுவர் கழுத்திலோ இடையிலோ கட்டித் தொங்கவிடுவது போன்ற வழக்கம்தான் இது. கோலாயன் சாதியில் தந்தையே தன் மகளின் கழுத்தில் கெட்டுத்தாலியைக் கட்டுவார்.

தாலி நமது கலாச்சாரமா?
திருமணத்தன்று தாலி கட்டுவது என்பது 2 நூற்றாண்டுகளாகத்தான் வழக்கத்துக்கு வந்துள்ளது.

இவ்வாறு கட்டுத்தாலி கட்டும் மரபினர் திருமணத்தின்போது தாலி கட்டுவதில்லை. அதற்கு மாற்றான சடங்குகளைச் செய்த உடன் திருமணம் முடிந்துவிடுகின்றது. கீழ்க்கண்ட திருமண முறைகளை 100 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியர்கள் பின்பற்றியுள்ளனர்.

  1. விரும்பிய பெண்ணின் சேலையைக் கிழித்து அவளின் கழுத்தைச் சுற்றிக் கட்டிவிட்டு அவள் ஓடாமல் இருந்தால் அவனுக்கு சொந்தம் எனக் கைக்கோளர்களும், மணமக்களின் கைகளை அல்லது சில இடங்களில் சிறுவிரல்களை இணைத்து வைப்பது சில சாதிகளிலும், மணமகளின் கழுத்தில் குதிரையின் மயிர் ஒன்றினைக் கட்டி விடுவது பிரான்மலைக் கள்ளரிடத்திலும் வழக்கத்தில் இருந்தன.
  1. இருவருக்கும் பால்,சர்க்கரை,பழம் கலந்த இனிப்பு வழங்கப்படுதல்தான் பணிக்கரின் திருமணம்.
  1. இருவரின் கைகளை ஒன்றாகக் கோர்த்து அந்தக்கைகளின் மீது தண்ணீரை வார்ப்பர், கெலசியர்.
  1. மணமக்கள் தலையில் அரிசி தூவப்படுதல்தான் கொரகர் திருமணத்தில் முக்கிய சடங்கு.
  1. கோண்ட் சாதியில் பெண்ணின் இரு கரங்களிலும் 20 முதல் 30 பவுண்ட் எடையுள்ள 2 பித்தளை வளையல்கள் அணிவிக்கப்படும். திருமணம் முடிவடையும்போது வளையல்கள் கழற்றப்படும்.
  1. லம்பாடிகளில் கன்னிகள் மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வளையல் அணிவதும், மணமானோர் முழங்கை முதல் தோள் வரை வளையல் அணிவதும் திருமண வழக்கம்.
  1. தோம்பர்களில் சாதிக்காய், அரிசி, செப்பு நாணயங்கள் முடியப்பட்ட துணி மணமக்கள் மீது போர்த்தப்படும்; இருவரின் சிறுவிரல்கள் இணைக்கப்பட்டு வீட்டுக்குள் நுழைவர்.
  1. கொல்லிமலை மலையாளி சாதியில் மணமகன் மரத்தாலான சீப்பை செதுக்கி வைத்திருப்பான். அதைப் பெண்ணின் கூந்தலில் செருகுவதுதான் திருமணம்.
  1. பைராகி சாதிக்கு திருமணமே கிடையாது. விரும்பியவர்கள் சேர்ந்து வாழலாம். காட்டுக்குறும்பரில் வெற்றிலை பாக்கு மாற்றினாலே அதுதான் திருமணம். இருளரிடத்தில் கறிவிருந்து மட்டுமே திருமணம்.
  1. முதுவர் சாதியில் திருமணம் செய்ய உள்ள இருவரையும் குகைக்கு அனுப்பி சிலகாலம் இருக்க செய்வர்.. அதன்பின் இருவருக்கும் பிடித்திருப்பின் திருமணம். இல்லாவிட்டால் வேறு ஜோடியைத் தேடவேண்டும்.

இவை சில உதாரணங்கள் மட்டுமே. தாலி இல்லாத திருமண முறைகளைப் பின்பற்றும் சாதிகளின் எண்ணிக்கை மட்டும் 70 க்கும் மேற்பட்டதாகும்.

தாலியின் வரலாறு என்ன?

தாலி நமது கலாச்சாரமா?
பொட்டு கட்டுதல் எனும் சடங்கின் மூலம் கோவிலுக்கு சேவை செய்ய பெண்களை நேர்ந்துவிடும் சடங்கில் தேவதாசிப் பெண்டிருக்கு தாலி கட்டப்பட்டது.

“தென்னிந்தியாவில் ஆரம்பம் முதலே தாலி திருமணத்தின் முக்கியமான அம்சமாக இருந்தது கிடையாது. இவ்வழக்கம் முதன்முதலில் 11-ம் நூற்றாண்டில் முதலாம் ராசராசன் காலத்தில் இருந்து ஆரம்பித்தது” என்று கூறுகிறார், வரலாற்று அறிஞர் கே.கே.பிள்ளை.

பொட்டு கட்டுதல் எனும் சடங்கின் மூலம் கோவிலுக்கு சேவை செய்ய பெண்களை நேர்ந்துவிடும் சடங்கில் தேவதாசிப் பெண்டிருக்கு தாலி கட்டப்பட்டது. கோவில் நிலமெல்லாம் பார்ப்பன, வேளாளர்கள் அனுபவித்த காலத்தில் தேவதாசிகள் பொட்டு (பொட்டு – தாலி) கட்டியபோது அவர்களுக்கு மானியமாக நிலம் எழுதிவைக்கப்பட்டது. நிலத்தோடு தொடர்புக்குள்ளானது, பொட்டு எனும் தாலி.

தமிழ்ச் சமூகத்தின் இயக்கத்தில் ஒரு விசயத்தை உற்று நோக்கினால் பெண்களுக்கு விதிக்கப்பட்ட பல விசயங்கள் முதலில் தேவடியார்களிடத்தில் இருந்தே ஆரம்பமாவது தெரிய வரும்.

தாலியை முதலில் அணிந்தது அவர்களே..

அதே போல முகத்தில் மஞ்சள் பூசுவது அவர்களுக்கு மட்டுமான ஒன்றாக இருந்த்து.

முகத்தில் பவுடர் பூசுவதும் அலங்கரித்துக்கொள்வதும் அவர்களுக்கானதாக இருந்தது.

சமூகத்தின் அசைவியக்கத்தில் மெல்ல அது இல்ல மகளிரையும் வந்தடைந்துள்ளது. சான்றாக முகத்துக்குப் பூசும் மஞ்சளை விரலி மஞ்சள் என்பர். விரலி எனப்படுவது பொதுமகளிரைக் குறிக்கும்.

சமூகத்தில் தாலி வழக்கத்தில் இருந்திருக்குமேயானால் கம்பரின் ராமாயணத்தில் ராமன் சீதைக்கு தாலி கட்டி இருப்பான். ஆனால் அவன் கட்டவில்லையே!

கல்வெட்டு, செப்பேடுகளை உற்று நோக்கினால் விஜய நகரப் பேரரசுக்காலத்தின்போது மறவர் சீமைகளை ஆதிக்கம் புரிந்த சேதுபதிகளுக்கு ‘தாலிக்கு வேலி’ என்ற பட்டம் வருவது தெரியும். அதற்கு முன்பு இருந்த சோழர்கள் யாருக்கும் இப்பட்டம் இல்லை.

சோழர்களின் காலத்தில் இருந்துதான் சாதிகள் இறுக்கமாகி அவற்றுக்கிடையே வலங்கை, இடங்கை பூசல்கள் ஆரம்பித்து கிழக்கிந்தியக் கம்பெனியின் காலம் வரை அவை தொடர்ந்தன. பார்ப்பனர், வேளாளர்கள் தவிர்த்த ஏனைய விவசாயம் சார்ந்த சாதிகள் எல்லாம் வலங்கை எனவும், வணிகம், கைவினைத்தொழிலில் ஈடுபட்ட சாதிகள் எல்லாம் இடங்கை எனவும் பிரிந்தன.

தாலி நமது கலாச்சாரமா?
தாலி கட்டும் வழக்கமுடைய பின்வரும் சாதிகள், விவசாயத்தில் நில உடைமையாளராகவும், விவசாயத் தொழிலாளராகவும் இருந்துள்ளனர்.

வலங்கை இடங்கைகளின் தோற்றத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டிருப்பினும், மறைந்த மார்க்சிய லெனினியப் போராளி அனுராதா காண்டி சொல்லியிருக்கும் காரணம் பொருத்தமானதாகும். அவர், “11-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட உழைப்புப்பிரிவினை கைவினைஞர்கள், வணிகர்களை நகரங்களை நோக்கி நகர்த்தி இடங்கைகளாகவும், விவசாயம் நில உடைமை சார்ந்த ஆதிக்க சாதிகளை வலங்கைகளாகவும் பிரித்தன, ஒரு நூற்றாண்டுக்குப் பின் இதே உழைப்புப் பிரிவினை வட இந்தியாவில் ஏற்பட்டு கைவினைஞர்கள், வணிகர்கள் எல்லாம் இசுலாமுக்கு மாறியதும் ஏற்பட்டன” என்று கூறியுள்ளார்.

இடங்கைச் சாதிகள் பொருளாதார ரீதியில் கை ஓங்கும்போது சில புதிய பழக்கங்களை, உதாரணமாக தங்களது திருமணத்தில் பல்லக்கு வைத்தல், தோரணம் கட்டுதல் ஆகியவற்றை கொண்டுவர முற்படும்போது வலங்கையினர் தாக்கிக் கலகம் செய்வதும், இவர்கள் திருப்பித் தாக்குவதும் பல நூற்றாண்டுகளாக நடந்துள்ளன. இந்த சர்ச்சைகள் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை கவர்னரிடம் ஒரு முறை வழக்காக வந்துள்ளது. புதுச்சேரி கவர்னரிடமும் ஒரு பிராது வந்துள்ளது. தஞ்சாவூரை ஆண்ட சரபோஜியின் மகன் சிவாஜி காலத்தில் ஒரு சர்ச்சை பைசல் செய்யப்பட்டுள்ளது. சிவாஜி காலத்திய பஞ்சாயத்திலும் திருமணத்தில் என்னென்ன உரிமைகள் உள்ளன என்பது பேசித் தீர்க்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து : “பேரி செட்டி கலியாணத்துக்கு பந்தலுக்கு வெள்ளை செவப்பு கலந்து கட்டி கொள்ளுகிறதும் அல்லாமல் வாழை கூந்தல் நெட்டிமாலை இதுகளும் கட்டி ஆனை அறசாணி வைத்துகொம்பு..தப்பு மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் அபேக்சிச்ச தூயது தரித்துக்கொண்டு கொம்பு தப்பு சங்கீதமேளம் யிதுகளுடன் கல்யாணம் செயிது ஊர்கோலத்துக்கு செகப்பு துதி நா பல்லாக்கு கட்டி இதுகளில் உள்கார்ந்து செகப்பு பாவாடை பிடிச்சு கொண்டு தீவட்டி மத்தாப்பு வாணவித்தையுடன் என்று சாதிவாரியாக திருமண விழாவில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்துப் பேசப்படுகின்றன. ஆனால் தாலி பற்றி இந்தப் பஞ்சாயத்து ஏதும் பேசவில்லை. தாலிக்குப் பெரிதாக முக்கியத்துவம் ஏதும் இல்லை அப்போது.

எந்தெந்த சாதிகளுக்கெல்லாம் தாலி கட்டுதல் வழக்கத்தில் இருந்தன என்பதற்கு இப்போது நமக்குக் கிடைக்கும் ஆவணம், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் எட்கர் தர்ஸ்டன் தொகுத்த ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ – 7 தொகுதிகள் ஆகும். அத்தொகுப்பில் ஒவ்வொரு சாதியிலும் திருமண முறை எவ்வாறு இருந்தன என்பதை ஆவணப்படுத்தியுள்ளார், தர்ஸ்டன்.

இச்சாதிகளை தாலி கட்டுவோர், கட்டாதோர் எனப் பட்டியலிட்டு அச்சாதிகளின் குலத்தொழிலை ஆராயும்போது ஓருண்மை புலப்படுகின்றது.

தாலி கட்டும் வழக்கமுடைய பின்வரும் சாதிகள், விவசாயத்தில் நில உடைமையாளராகவும், விவசாயத் தொழிலாளராகவும் இருந்துள்ளனர்.

தேவதாசி, உடையார், கொடிக்கால் லெப்பை முஸ்லிம், மாப்ளா, கம்மா, ஒக்கிலியர், பள்ளர், அகமுடையோர், பைதி, தொரெயர், கொங்கு வேளாளர், கன்னடியர்

தாலி கட்டாத பின்வரும் சாதிகள் வேட்டை, வணிகம், கைவினைத் தொழில் போன்றவற்றைத்தான் செய்து வந்தனரே தவிர விவசாயம் சார்ந்த சாதியாக இருக்கவில்லை.

கைக்கோளர், மலையாளக் கம்மாளர், பணிக்கன், ஒட்டர், கெலசியர், கோத்தர் , குறிச்சன், லம்பாடியர், செஞ்சு, செறுமான், சித்தூர் வட்ட ஈழவர்கள், கூடகுலம், தோல்கொல்லன், பளியன்

இந்த ஆவணத்திலிருந்து திருமணத்தில் தாலி கட்டும் உரிமைக்கும், விவசாயத்துக்கும் தொடர்பு உள்ளது என்பதும் அது வலங்கை சாதியின் வழக்கம் என்பதும் புலனாகின்றது.

இவற்றில் சில விதிவிலக்குகளும் உள்ளன. அவற்றுக்குப் பிரத்யேகக் காரணங்கள் உள்ளன. இடங்கை வலங்கைப் பட்டியல் பிறபகுதிகளிலிருந்து குடியேற்றங்கள் இப்பகுதிக்குள் வந்தபோது அச்சாதிகளை எப்பட்டியலில் வைப்பது என்ற சர்ச்சைகள் தலை தூக்கியதுண்டு. புதியதாக வந்தவர்களை இடங்கையில் சேர்ப்போம் எனச்செய்தனர். ஆனால் தாங்கள் வலங்கையர்தான் என்று நிறுவும் முயற்சியில் பல புராணங்களை எழுதி அவற்றை நிலை நாட்டிட முயன்றனர் புதியவர்கள். அதனை ஆதிக்க சாதிகள் ஏற்காமல் கலவரம் செய்துள்ளனர்.

உதாரணம் சிவகாசி கலவரம். ஈழத்திலிருந்து தென்னகத்தில் குடியேறிய சாதிகளில் ஒன்று சாணார் சாதி. அச்சாதியினர் இடங்கையில் வைக்கப்பட்டு கடுமையாக ஒடுக்கப்பட்டனர். ஓலை முடியப்பட்ட தாலியே அவர்களின் வழக்கம். சிறுதெய்வ வழிபாடே பிரதானம். ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் பருத்தி ஏற்றுமதியில் அவர்கள் இறங்கியபின் பொருளாதார வலிமையை அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக, பெருங்கோவில்கள் கட்டுவதும் அவற்றுக்கு பார்ப்பன பூசாரிகளை நியமிப்பதும் தொடங்கியது. பழைய வலங்கை இடங்கை பூசல் தலைதூக்க, மறவர்கள் ஏனைய வலங்கை சாதிகளைத் திரட்டி வந்து சிவகாசி சாணார்கள் மீது தாக்குதல் நடத்தியதே 1899-ல் நடந்த சிவகாசிக் கலகம்.

வலங்கை சாதிக்கு உரித்தானதாக இருந்த தாலி அனைவருக்கும் பொதுவானது எவ்வாறு?

கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவைக் கைப்பற்றியபின்னர்தான் இந்த நாட்டுக்கு இந்தியா என்றும் இங்குள்ள மக்களுக்கு இந்து என்றும் நாமகரணம் சூட்டப்பட்டது. இந்து சட்டத் தொகுப்பு எழுதப்பட்டது. மையப்படுத்தப்பட்ட அரசை உருவாக்கினர். இதையொட்டி உருவாகிக் கொண்டிருந்த இந்து தேசியத்துக்குள் பல்வேறு குழுக்களையும் பழக்க வழக்கங்களையும் பார்ப்பனியம் உட்செரித்து ‘எல்லாமே இந்துக் கலாச்சாரம்தான்’ எனச் சாதித்தது.

புதிய வழிபாடுகள், புதுப்பழக்கங்கள் எல்லாம் புகுந்து திருமண முறையில் இருந்து கோவில் வழிபாடுகள் வரை பல கலாச்சார மாற்றங்கள் நடந்தன. அவற்றில் ஒன்றுதான் தாலி பொதுக்கலாச்சாரமாக மாற்றப்பட்ட நிகழ்ச்சிப்போக்கு. வணிக, கைவினை சாதிகளிலும் தாலி 19-ம் நூற்றாண்டில் புகத் தொடங்கியது. இதனால்தான் இன்னமும் பா.ஜ.க கோரும் பொது சிவில் சட்டத்தைப் போல ஒரே வடிவிலான தாலி என்பது இந்துக்கள் அனைவருக்கும் இல்லை. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தாலி உள்ளது. (தமிழ் சினிமாவில் குளோஸ் அப்பில் காட்டப்படும் தாலி ஆந்திர மாநில சாதிகளில் ஒன்றான ரெட்டி சாதித் தாலியை ஒத்திருக்கிறது)

தாலி என்பது மாப்ளா முஸ்லீமிடமும், சிரியன் கிறித்துவரிடமும், ஏனைய இந்து சாதிகளிடமும் காணக் கிடைக்கும் தென்னிந்திய வழக்கம் என்பதும், இது நில உடைமையின் அடையாளம் என்பதும் தெரிய வருகின்றது.

இதனை வேறு வழியிலும் புரிந்து கொள்ளலாம். தென்னிந்தியாவிலுள்ள பெரும்பாலான சாதிகள் ஒரு காலத்தில் தாய்வழி சமூகமாக இருந்து மெல்ல மெல்ல தந்தைவழிக்கு மாறி வந்துள்ளன. இம்மாற்றமும் சாதிக்கு சாதி வேறுபடக்கூடியது. திருமணத்தில் தாய்மாமனுக்குத் தரப்படும் முக்கியத்துவமும், ‘முதல் பிரசவம் தாய் வீட்டில்தான்’ என்பதும் தாய்வழி சமுதாயத்தின் மிச்ச சொச்சங்களாகும். ஆனால் சில சமூகங்கள் இறுக்கமான தந்தை வழி சமூகங்களாகி விட்டன. அதற்கு சான்று அச்சாதிகளில் நடப்பில் இருக்கும் மதினி மண முறையாகும்.

அஃதென்னவென்றால் ஒரு வீட்டில் சகோதரர்கள் பலரிருக்க, மூத்தவர் இறந்து போனால் அவரின் மனைவியை (மதினியை) கொழுந்தன் மறுமணம் செய்தாக வேண்டும். அதாவது சொத்துடைமை தந்தைவழி இரத்த வாரிசுகள் வழியே செல்வதை இம்மணம் உறுதிப்படுத்துகின்றது. இங்கே சொத்தின் அடையாளமான தாலி கணவனின் மரணத்தின் பிறகும் பெண்ணின் கழுத்தில் ஏறி, சொத்தைக் காப்பாற்றுகிறது. சொத்துடைமையின் அடையாளமே தாலி.

இதில் இந்துக் கலாச்சாரம், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என ‘ஒரு தாலியும் கிடையாது’ (கரிசல் வட்டார வழக்கில் ‘ஒரு இழவும் கிடையாது’ என்பதை இவ்வாறும் குறிப்பிடுவர்).

இப்புரிதலோடு செல்லும்போது ஒரு கேள்வி எழுகிறது. பெண்ணடிமைச் சின்னமல்லவா, தாலி? ஆம், நிச்சயமாக அது அப்படித்தான். நிலவுடைமைச் சின்னத்தில் ஜனநாயகமா இருக்க முடியும்? அச்சமூகம் பெண்ணையே சொத்தாகத்தான் கருதுகின்றது எனும்போது, சொத்துடைமையை ஒழிக்கும் இலட்சியத்தில் உள்ள நாம் தாலியை எவ்வாறு ஆதரிக்க முடியும்?

இன்னொரு வரலாற்றுக் கடமையாகவும் தாலி அகற்றலைக் காணவேண்டும்.

ராசராசன் ஆரம்பித்து வைத்ததுதான் தேவதாசி முறை. அவன் காலத்தில் இருந்துதான் தாலியும் ஆரம்பிக்கிறது. சென்ற நூற்றாண்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் செய்த தீவிரமான பிரச்சாரத்தாலும் அரசின் சட்டத்தாலும் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு விட்டது. ராசராசன் காலத்தில் இருந்து இன்னமும் ஒழிக்கப்படாமல் நீடிக்கிறது, தாலி. அதை ‘அகற்றி’ ஒழித்திடும் கடமையும் நமக்கு உள்ளது.

ஆதாரங்கள்:

  1. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் – 7 தொகுதிகள் – எட்கர் தர்ஸ்டன்
  2. மராட்டிய மன்னர்களின் மோடி ஆவணங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு
  3. ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்புகள்
  4. தமிழர் மானுடவியல் – பக்தவத்சல பாரதி

– கற்பக விநாயகம், வசந்தன்.