privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாபுனே: சவுஹான் ஒரு செக்ஸ் நடிகர் - அஜயன் நேர்காணல்

புனே: சவுஹான் ஒரு செக்ஸ் நடிகர் – அஜயன் நேர்காணல்

-

புனே திரைப்படக் கல்லூரியில் வினவு

றுநாள் இந்தியா முழுவதும் நடக்கவுள்ள போராட்டங்களுக்கான தயாரிப்பு வேலைகளில் அந்த மாணவர்கள் மும்முரமாயிருந்தனர். சில நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அந்த ஆலமரத்தின் அடியில் மாணவர்கள் கூடி விவாதம் செய்து கொண்டிருந்தனர். ஒரு மாணவன் தன்னைச் சுற்றியிருந்த சூழலில் பரவியிருந்த விவாதச் சூட்டை தாளமாகக் கொண்டு கண்களை மூடி தம்போலின் இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்தான். போராட்டச் சூழலும் அந்த இனிமையான இசையும் சேர்ந்து ஒரு இசை ஓவியமாக காற்றில் பரவிக் கொண்டிருந்தது.

ajayan-adat“வாங்க காம்ரேட். பயணம் எப்படி இருந்தது? இவங்க தான் எங்க போராட்ட கமிட்டித் தோழர்கள். இதோ இந்த மரம் தான் எங்களோட விவாத அரங்கம் – நாங்க இதை போதி மரம் (Wisdom Tree) என்று சொல்வோம்” அஜயன் உற்சாகமான வார்த்தைகளில் வரவேற்றார்.

வினவு செய்தியாளராகிய நாங்கள் பூனாவில் இயங்கி வரும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியின் வளாகத்தில் இருந்தோம். கல்லூரி மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது போராட்டக் குழுவின் மையக் கமிட்டியின் உறுப்பினரான அஜயன் அதாத் கேரளத்தைச் சேர்ந்தவர்.

அஜயன்: “வாங்க நாம் தனியே கொஞ்சம் சத்தமில்லாத இடத்திலிருந்து பேசுவோம்” போதி மரத்திலிருந்து சில பத்து மீட்டர்கள் தள்ளி ஒரு பெரும் புல்வெளியில் அமர்ந்தோம்.

வினவு: ”அஜயன், எங்களோட இணையதளத்தில் உங்கள் போராட்டம் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளோம். இதன் மற்ற விசயங்கள் குறித்து பேசும் முன், உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லி விடுங்கள்.

அஜயன்: ”கேரளாவின் கன்னூர் மாவட்டம் தான் எனது சொந்த ஊர். அப்பாவுக்கு இடதுசாரி இயக்கங்களோடு தொடர்பு உண்டு. சில காலம் எம்.எல் இயக்கங்களோடும் தொடர்பில் இருந்துள்ளார். அந்த வகையில் நான் இடது ’வாசனையை’ சின்ன வயதிலேயே முகர்ந்திருக்கிறேன். அப்புறம்… கல்லூரி நாட்களில் இந்திய மாணவர் பெருமன்றம் (SFI) அப்படித்தானே இருக்க முடியும்? அந்த அமைப்பில் மாவட்ட அளவிலான பொறுப்பில் இருந்திருக்கிறேன். சில காலம் சி.பி.எம் கட்சியின் கலாச்சார அமைப்பான புரோகமன கலா சாகித்ய சங்கம் அமைப்பில் தோழர் எம்.என் விஜயனோடு இணைந்து செயல்பட்டேன். அப்போது கட்சிக்குள் என்.ஜி.ஓ அரசியல் குறித்த சித்தாந்த போராட்டத்தை எம்.என் விஜயன் முன்னெடுத்திருந்தார். நாங்கள் அவரோடு இருந்தோம்”

“சங்கத்தின் மீது விஜயன் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ளாமல் மானநஸ்ட வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கின் தீர்ப்பு இறுதியில் தோழர் விஜயனுக்கு சார்பாக வந்தது. அதைத் தொடர்ந்து நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் தோழர் விஜயன் பத்திரிகையாளார்களோடு பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பில் இறந்து போனார். நான் அந்த செய்தியாளர் சந்திப்பில் இருந்தேன். பின்னர் சில காலம் புரட்சிகர மார்க்சிய கட்சி என்ற அமைப்பில் செயல்பட்டேன். பிறகு இங்கே படிக்க இடம் கிடைத்ததும் கேரளத்தை விட்டு வந்து விட்டேன். இப்போது நேரடி அரசியலில் இல்லை”

ftiiவினவு : சரி அஜயன், நீங்கள் இடதுசாரி அரசியல் அறிமுகம் உள்ளவர் என்பதால் இந்த முதல் கேள்வி. உங்கள் போராட்டம் குறித்து பத்திரிகைகளில் வரும் செய்திகளில் “நாங்கள் அரசியல் தொடர்பற்ற சங்கம்” என்பதை வலியுறுத்திச் சொல்கிறீர்கள் அல்லவா? அது அரசியல் கட்சிகளின் மேலான ஒவ்வாமையில் இருந்து சொல்லப்படுகிறதா அல்லது அரசியலின் மீதே உள்ள நம்பிக்கையின்மையா?

அஜயன்: எங்கள் மாணவர் சங்கத்தில், அதன் பொறுப்புகளில் உள்ளவர்களில் என்னைப் பொறுத்தவரை முந்தைய காலத்தில் கட்சி ரீதியிலான இடதுசாரி அரசியல் பரிச்சயம் உண்டு என்பது சரி தான். இன்னும் சிலர் இடது சாய்வுக் கண்ணோட்டம் கொண்டவர்களாக உள்ளனர். இடது சாய்வு என்று நான் சொன்னதை கவனியுங்கள். மற்றபடி, இவர்கள் கலைஞர்கள். கலைஞர்கள் என்பதாலேயே வலது சாரி கண்ணோட்டத்திற்கு முற்றிலும் மாறான கருத்து நிலை கொண்டவர்கள். அப்படித்தானே இருக்க முடியும்? வலதுசாரிகளால் கலைஞர்களாக இருக்க முடியுமா என்ன? பொதுவாகவே இவர்கள் முற்போக்காக சிந்திக்க கூடியவர்கள். என்றாலும், நீங்கள் ஒரு கட்சி ரீயிலான வேலைத்திட்டம் போன்ற முறைகளுக்குள் இவர்களைக் கொண்டு வர முடியாது. இது ஒரு விசயம்

மற்றபடி நாங்கள் கட்சி சாயம் இல்லாதவர்கள் என்பதாலேயே எங்களது குரலுக்கு ஒரு கவனம் கிடைக்கிறது. இப்போது நடக்கும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் இந்த கல்லூரியின் வரலாற்றில் நாற்பதாவது போராட்டம். இந்த நாற்பது போராட்டங்களில் இது தான் பெரியது. இன்றோடு நாங்கள் வகுப்பைப் புறக்கணிக்கு முடிவெடுத்து இருபது நாட்களாகிறது. இப்போது அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு முன்வந்துள்ளது. முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள் சார்பாக ஒரு குழு அமைச்சர் அருண் ஜேய்ட்லியைச் சந்திக்கச் செல்கிறார்கள்.

வினவு : அமைச்சரை சந்தித்து பேசுவதன் மூலம் உங்கள் கோரிக்கையை வெல்ல முடியும் என்று கருதுகிறீர்களா?

அஜயன் : ஆம் சந்தேகமின்றி.

ftiiவினவு : உங்கள் கோரிக்கையின் மையமாக கஜேந்திர சவுஹான் இருக்கிறார்…

அஜயன் (இடைமறிக்கிறார்) : அவ்வாறு பத்திரிகைகள் சொல்கின்றன. நாங்கள் கஜேந்திராவை மட்டுமில்லை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மொத்த ஆட்சிக்குழுவையும் நிராகரிக்கிறோம்.

வினவு : ஆனால், கஜேந்திர சவுஹான் குறித்த உங்கள் குற்றச்சாட்டுகளே ஊடகங்களில் பிரதான இடம் பிடிக்கின்றனவே?

அஜயன் : இருப்பதில் அவர் கொஞ்சம் ஆபத்தில்லாத கோமாளி என்பதால் ஊடகங்கள் அவர் மேலான எங்கள் விமர்சனங்களுக்கு ஊடகங்கள் அதிக அழுத்தம் கொடுக்கின்றன என்று கருதுகிறேன்.

வினவு : சரி. மற்றவர்கள் பற்றிய உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் வருவோம். அதற்கு முன் கஜேந்திர சவுஹான் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?

அஜயன் : என்னவென்று சொல்வது? உங்களுக்கு அவர் மகாபாரத தொடரில் தருமராக நடித்தவர் என்று தெரிந்திருக்கும். ஆனால், அவர் ஒரு செக்ஸ் பட நடிகர் என்பது தெரியுமா? அவர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்தாள் காசு கொடுத்தால் எதற்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்யக் கூடியவர். இணையத்தில் தேடிப்பாருங்கள் தோழரே… ஆசாராம் பாபுவோடு சேர்ந்து டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்… அப்புறம் இந்த ராசிக்கல் விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சுருக்கமாக சொன்னால், இந்தக் கல்லூரியை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தாளை எங்கள் தலையில் கட்டப் பார்க்கிறார்கள்.

குறிப்பு : கஜேந்திராவைக் குறித்து அஜயன் ஒரு சிறிய வீடியோவைத் தயாரித்துள்ளார்

வினவு : ஆக, உங்களுடைய பிரச்சினை எல்லாம் நியமிக்கப்பட்டவர்களின் தகுதி தொடர்புடையது மட்டுமே என்கிறீர்களா?

அஜயன் : இது வெறும் தகுதி குறித்து மட்டுமில்லை என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இது மத்தியில் அதிகாரத்திற்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் காவிமயமாக்கல் திட்டத்தின் ஒரு அங்கம் தான். எனினும் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் எல்லாம் யார்? நாங்கள் ஒட்டுமொத்தமாக இந்தப் புதிய நிர்வாக குழுவையே நிராகரிக்கிறோம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த நிர்வாக குழுவில் இருப்பவர்கள் யார்?

அனகா கெய்சாசின் கணவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக். நரேந்திர பதக் மகாராஷ்டிர மாநில முன்னாள் ஏ.பி.வி.பி தலைவர் ராகுல் ஷோலாபூர் பாரதிய ஜனதாகாரர், பங்கஜ் ஷாய்க்கியா ஆர்.எஸ்.எஸ்சின் முகமூடி அமைப்பான சம்ஸ்கார் பாரதியின் பொறுப்பாளர்.

அனகா தன்னை ஒரு ஆவணப்பட இயக்குனர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால், எடுத்த சில மொக்கையான ஆவணப்படத்தில் வேறு நபர்கள் தான் பெயர் குறிப்பிடப்படாமல் வேலை செய்து கொடுத்திருக்கிறார்கள். தனக்காக ஆவணப்பட வேலை செய்து கொடுத்தவருக்கு சரியாக ஊதியம் கொடுக்காத விவகாரத்தில், நீதிமன்ற வழக்கொன்று நடந்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பில் அனகாவுக்கு ஆவணப்படம் என்றால் என்னவென்றே தெரியாது என்று நீதிபதியே குறிப்பிட்டுள்ளார். இதோ இது தான் அந்த வழக்குத் தீர்ப்பின் நகல் – இதை நான் சில நாட்களுக்கு முன்பு தான் செய்தியாளர்கள் முன் அம்பலப்படுத்தினேன்.

அடுத்து யார் இந்த நரேந்திர பதக்? 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இதே வளாகத்தில் நாங்கள் ஆனந்த் பட்வர்த்தனின் “ஜெய்பீம் காம்ரேட்” திரையிட்டோம். அப்போது நான் எனது நண்பர்களோடு வெளியே வந்தபோது சில ஏ.பி.வி.பி குண்டர்கள் என்னையும் எனது நண்பர்களையும் வழிமறித்து தாக்கினர். அந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டதே இந்த நரேந்திர பதக் தான். மாணவர்களைத் தாக்கிய ஒரு ரவுடி இந்த வளாகத்திற்குள் அடியெடுத்து வைக்க நாங்கள் அனுமதிப்போமா? அந்தளவுக்கு நாங்கள் வெட்கம் கெட்டவர்களா சொல்லுங்கள்?

(அஜயன் தாக்கப்பட்டது குறித்து இந்து பத்திரிகையில் வெளியான செய்தி)

வினவு : தற்போதைய விவகராங்களுக்குள் தனியார்மயமாக்கல் என்ற ஒரு கோணம் இருக்கும் என்று சந்தேகிக்கிறீர்களா?

அஜயன் : தனியார்மயமாக்கலுக்கான முயற்சியை முன்பு யு.ஆர்.அனந்தமூர்த்தி தலைவராக இருந்த போது காங்கிரசு அரசு செய்து விரலைச் சுட்டுக் கொண்டது. அப்போது நாங்கள் ஸ்ட்ரைக் அடித்தோம். இதே போதி மரத்தினருகில் யு.ஆர்.அனந்தமூர்த்தியை நாங்கள் கெரோ செய்தோம். காங்கிரசு பின்வாங்கி விட்டது. பின்வாங்கியது மட்டுமல்ல, சில கட்டணப் பிரிவு பாடத்திற்கான கட்டணங்களை குறைக்கவும் செய்தது.

இப்போது நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் பேசும் போது இந்தக் கல்லூரியை நாட்டிலேயே ஒரு ப்ரீமியம் கல்வி மையமாக – அதாவது ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம் போன்று – உயர்த்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவர் சொல்வதன் பொருள் என்னவென்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆக, தற்போதைய நடவடிக்கைகளின் பின்னே தனியார்மயத்தைப் புகுத்தும் ஒரு உள்நோக்கம் இருக்கிறதா என்றால் – உத்திரவாதமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இது காவிமயமாக்கலின் அங்கம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

வினவு: காவிமயமாக்கல் குறித்து சொன்னீர்கள். அது எந்த அளவில் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்:?

அஜயன் : நாங்கள் இதே வளாகத்தில் கபீர் கலா மன்ச்சை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். இந்த வளாகமே முற்போக்கான சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான இடமாக இருந்து வந்துள்ளது. இப்போது அவர்கள் அதிகாரமிக்க கமிட்டிகளில் பின்வாசல் வழியே நுழைந்து விட்டால் என்னவாகும்? இந்த போதி மரத்தைச் சுற்றி ஆர்.எஸ்.எஸ் ஷாகா நடத்துவார்கள். வலதுசாரிகள் உள்ளே நுழைந்து விட்டால் அதன் பின் கலைகளுக்கும் கலைஞர்களுக்கு என்ன கதியாகும் என்று நீங்கள் புரிந்து கொள்ள நிர்வாக குழு உறுப்பினராக தற்போது நியமனம் வாங்கியிருக்கும் சைலேஷ் எடுத்த ‘மோடியின் சபதம்’ என்ற குறும்படத்தைப் பாருங்கள் உங்களுக்கே விளங்கும். சப்ளாக்கட்டையோடு பஜனை பாடுவதே சங்கீதம் என்கிற ஒரு நிலை ஏற்படும். பின்னர் கலைகள் என்றால் அது ராமாயணமும் மகாபாரதமும் தான் என்றும், அதன் கதைகளை சீரியல்களாக எடுத்து மக்களை முட்டாள்களாக்குவதே கலைஞனின் கடமை என்றும் நிலைநிறுத்தப்படும். காவி செயல்திட்டத்தை மேலும் மேலும் மக்களிடம் கொண்டு செல்ல அவர்களிடம் ஊடகங்கள் உள்ளன; அதில் செயல்பட இங்கிருந்து இனிமேல் கலைஞர்களை உருவாக்குவார்கள்.

ஆனால், இந்த மாணவர்கள் இருக்கும் வரை அதை அவர்களால் நிறைவேற்றிவிட முடியாது. நாங்கள் என்ன செய்தாவது அதைத் தடுத்து நிறுத்தியே தீருவோம்.

வினவு : அஜயன், நீங்கள் ஒரு மிகப் பெரிய செயல்திட்டத்தின் ஒரு சிறிய பகுதி அமல்படுத்தப்படுவதை எதிர்க்கிறீர்கள். ஆனால், உங்கள் பிரச்சாரங்களில் ஊடக பேட்டிகளில் இந்த ‘காவிமயமாக்கல்’ என்ற பதம் கொஞ்சம் அமுக்கிவாசிக்கப்படும் தொனியில் தெரிகிறதே?

அஜயன்: நீங்கள் கேட்பது புரிகிறது. நாங்கள் வெளிப்படையாக காவிமயமாக்கலுக்கு எதிரான போராட்டமாக இதை முன்னெடுக்கவில்லை. நிர்வாக கவுன்சில் நியமனங்களை எதிர்ப்பது என்ற அளவில் தான் இந்தப் போராட்டம் நகர்கிறது. நாங்கள் ஏன் காவிமயமாக்கலை வெளிப்படையாக எதிர்க்கவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலும் உங்கள் முதல் கேள்விக்கான பதிலும் ஏறக்குறைய ஒன்று தான். ஆனால், நியமன எதிர்ப்பு என்பதன் உள்ளடக்கம் காவிமயமாக்கலுக்கான எதிர்ப்பு தானே? தவிற எங்கள் முழக்கங்களில் காவிமயமாக்கல் முக்கிய இடத்தைப் பிடிக்கவில்லை என்றாலும், பிற சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்படுகிறது.

வினவு : அரசு தனது காவிமயமாக்கல் திட்டத்தை முணுமுணுப்புகளை நசுக்கியவாறே முன்னெடுத்துச் செல்கிறது. அறிவியல் கழக தலைமைப் பதவி, கல்வி அமைச்சகம், தொல்பொருள் துறை என்று எல்லா இடங்களிலும் தான் நினைத்ததை இந்த அரசாங்கம் சாதித்துள்ளது. தமது நோக்கத்தை அவர்கள் மறைத்துக் கொள்ளவிலை. ஆனால், அதற்கெதிரான தற்காப்பு நடவடிக்கைகள் மட்டும் ஏன் சுற்றி வளைத்து இருக்க வேண்டும்? தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள மோடி அரசு எந்த தயக்கமும் தடுமாற்றமும் இன்றி செயல்பட்டு வருகிறது. அரசின் வேகத்தையும், உங்களது எதிர்ப்பையும் கணக்கிலெடுத்துக் கொண்டு சொல்லுங்கள் – நீங்கள் வெல்வீர்கள் என்று சந்தேகமற நினைக்கிறீர்களா?

அஜயன் : சந்தேகம் தான். ஆனால், அவர்கள் வெற்றி பெறுவதும் அத்தனை சுலபமல்ல என்றே கருதுகிறேன். அல்லது அவ்வாறு நம்பவே விரும்புகிறேன்.

வினவு : சரி அஜயன். பாரதிய ஜனதாவின் அரசியலுக்கு எதிர்தரப்பில் உள்ள வேறு தேர்தல் கட்சிகளிடம் நீங்கள் உதவி கேட்க முயற்சிக்கவில்லையா?

அஜயன் : ஹ ஹ ஹ… யாரிடம் கேட்கச் சொல்கிறீர்கள் காம்ரேட்? ஒரு பாதி மகாராஷ்டிரா சிவசேனையிடமும், மறுபாதி தேசியவாத காங்கிரசிடமும் (சரத்பவார்) உள்ளது. இவர்கள் இருவருமே வலதுசாரிகள். சி.பி.ஐ சி.பி.எம்…… முன்னொரு காலத்தில் இருந்தார்கள். விடுங்கள்….புதைபொருள் ஆராய்ச்சி செய்யும் விருப்பம் எங்களுக்கு இல்லை.

வினவு : நமது பேட்டி முடிவுக்கு வந்து விட்டது. ஒரே ஒரு கடைசி கேள்வி. உங்கள் பேட்டியில் இடையிடையே இந்தக் கல்லூரியின் பாரம்பரிய பெருமை குறித்தும் இது தயாரித்தளித்த கலைஞர்கள் குறித்தும் நிறையச் சொன்னீர்கள். அவர்கள் செய்த சமூகப் பங்களிப்பு என்ன? இங்கிருந்து சென்றவர்கள் யாரும் பாலிவுட்டுக்குச் செல்லவில்லை என்று நான் புரிந்து கொள்ளலாமா?

அஜயன் : மைய நீரோட்ட சினிமாவுக்கு வெளியே சிலர் செயல்பட்டு வருகிறார்கள். பலரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிரீஷ் காஸரவல்லி போன்ற சிலரின் பெயர்களை என்னால் சொல்ல முடியும்.. ஆனாலும், இவர்கள் சிறுபான்மையினர் என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

பாலிவுட்..? நான் பாலிவுட்டை வெறுக்கிறேன். ஆனால் நானே கூட யாஷ்ராஜ் நிறுவனத்திற்கு வேலை செய்து கொடுத்திருக்கிறேன். சில தமிழ்படங்களுக்கும் கூட வேலை பார்த்துக் கொடுத்திருக்கிறேன். இவர்களெல்லாம் கார்ப்பரேட்டுகள் என்றும், சினிமா கலைக்கு எதிரிகள் என்றும் எங்களுக்குத் தெரியும். எமது தனிப்பட்ட கலையார்வமும் விருப்பத் தேர்வுகளும், இவர்களது தொழில் ஆர்வங்களும் (Business interest) எந்தக் காலத்திலும் சந்தித்துக் கொள்ள முடியவே முடியாது. என்றாலும் இங்கிருந்து சென்ற பலரும் – சந்தோஷ் சிவன், ரசூல் பூக்குட்டி உள்ளிட்டு – பாலிவுட்டில் கொடி நாட்டியுள்ளனர். நாளை நானும் கூட கார்ப்பரேட் சினிமா உலகில் தான் செயல்பட்டாக வேண்டும்; அது எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்றே நினைக்கிறேன்.

வினவு : ஏன்?

அஜயன் : பிழைப்பு தான் வேறென்ன?

வினவு : உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்காக நன்றி அஜயன். உங்கள் போராட்டம் வெல்ல வினவு இணையதளத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

– வினவு செய்தியாளர்கள், பூனாவிலிருந்து…