Saturday, May 3, 2025
முகப்புகலைகவிதைமயிலே என்றால் கடை மூடாது ! மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது !

மயிலே என்றால் கடை மூடாது ! மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது !

-

அவசியம் வருக! அரசியல் பெறுக!

விளம்பரக் காயங்கள்…
தேர்தல் தேமல்கள்…
வெட்டி அலம்பல்கள்…
பட்டப் பெயர்கள் பட்டுப் பட்டு
பட்டுப் போன தமிழகச் சுவர்கள்
ஒற்றைச் சொல்லில்
உயிர்த்தெழுந்தன
“மூடு டாஸ்மாக்கை!”

azhividaithangi-tasmac-siege-09
மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது (கோப்புப் படம் : அழிவிடை தாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்)

கிடந்த கோலத்தில் கிடப்பது
திருவரங்கப் பெருமான் மட்டுமா?
கூடவே,
ஆடை அவிழ்ந்த கோலத்திலும்
அங்கங்கே தெருவரங்க
டாஸ்மாக் குடிமகன்களும்தான்.

ஆல்கஹால் ஊற்றி
அழிக்கப்படும் தமிழகம் மீட்க
அழைகிறது திருச்சிக்கு
மக்கள் அதிகாரம்

உண்மையின் உரைகல்லாக
சுவரில் தெரிபவை
வெறும் சொற்களா?
இல்லை!
மது அடிமைத்தனத்திலிருந்து
மீளத்துடிக்கும்
மானமுள்ள தமிழகத்தின்
உணர்ச்சிகள்!

தேர்தல் வேட்கையைத் தாண்டி
மக்களின்
வாழ்க்கை இலக்கை
எதிரொலிப்பதால்
மக்கள் அதிகாரம்
மக்களின் குரலாய் ஒலிக்கிறது!

வள்ளுவர் படைத்தார்
குறள் அதிகாரம்
இளங்கோ வடித்தார்
சிலப்பதிகாரம்
வாழ்வை மீட்க
இயற்கையை காக்க
எண்திசை எங்கும்
இனி மக்கள் அதிகாரம்
என,
உவகை பொங்க
ஒளியின் குரல்கள்
இருளைக் கிழிக்கிறது!

அனைத்து அதிகாரமும்
மக்களுக்கு வேண்டும்
என்ற எளிய நியாயத்தின் முன்
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால்”
என்ற
எல்லா பாவனைகளும்
கலைந்து போகின்றன

நாடும் மக்களும்
நலம் பெற
வீடும் சுற்றமும்
மறந்து வேலை செய்யும்
தோழர்களைப் பார்த்து
காடும், மலையும்
கவின்மிகு அருவியும்
ஆனந்தக் கண்ணீரில்
நனைகின்றன,
காண்பவர் நெஞ்சம்
புதிய உறவில் மகிழ்கின்றன

மக்களின் துயரம்
துடைக்கப் புகுந்தால்
தனக்கென தனியே
துயரம் கிடையாது
மக்களின் மகிழ்ச்சிக்கு
வேலை செய்தால்
தனக்கென மகிழ்ச்சிக்கு அளவேது!

அதனால்தான்
உங்களையும் அழைக்கிறது
மக்கள் அதிகாரம்!

வளரும் தலைமுறை
வாழ்வின் இலக்கை
டாஸ்மாக் இலக்கு
அழிக்கிறது.
கணவனை இழந்து
அலறும் கைம்பெண் ஓலம்
ஒவ்வொரு ஊரிலும் ஒலிக்கிறது

தெருவெங்கும் சாராயம்
ஆறாக ஓடினால் – இனி
கருவிலேயே குழந்தை தள்ளாடும்
அயந்திணை அர்த்தங்கள் இழந்து
“குடியும் குடி சார்ந்ந நிலமுமாய்”
அருமைத் தமிழகம் அடையாளமாகும்

செம்பரம்பாக்கத்தில்
திறந்து விடப்பட்ட கன அடி
எத்தனை என்பது தெரியும்
அன்றாடம்
டாஸ்மாக்கில் திறந்து விடப்படும்
கன அடி எத்தனை?
அபாயம் அறிவீரா?

மயிலே மயிலே என்றால்
கடைகள் மூடாது
மக்கள் திரண்டால்
டாஸ்மாக் கிடையாது

சிக்கலை எப்படி தீர்ப்பது?
சிந்திக்க அழைக்கிறது
மக்கள் அதிகாரம்!
தங்கள் வரவு
தாரணிக்கே அரசியலின் நல்வரவாகுக!

– துரை சண்முகம்