இந்தியாவில சுமார் 33 கோடி மக்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவை சேர்ந்த மாரத்வாடா பகுதியில் வறட்சியோ தலைவிரித்தாடுகிறது. மோடி அரசு முன்வைக்கும் “வளர்ச்சி” அரசியலின் உண்மை முகம் காண விரும்புவோர் மராட்டிய மாநிலத்திற்கு செல்ல வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இந்த வறட்சியும் அந்த வறட்சியை எதிர் கொள்ளாமல் போகும் மத்திய மாநில அரசுகளும் சேர்ந்து மராட்டியத்தின் மராத்வாடா பகுதியில் யாரும் வாழ முடியாத நிலையை கொண்டு வந்துள்ளது.
அங்கே சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசையும் தாண்டி மக்களை வதைக்கிறது. வெயிலின் கொடுமையால் கிராமப்புறத்தில் வசிக்கும் மக்கள் எங்கெல்லாம் நீர் ஆதாரங்கள் கிடைக்கின்றதோ அதை அலைந்து திரிந்து பருகி உயிர் வாழும் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இங்குள்ள கிணற்று நீரை பருகுவதினால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தும், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வேறுவழியின்றி மேலும் மேலும் கிணற்றை தோண்டி அதே நீரை குடித்து அவதிக்குள்ளாகின்றனர். மருத்துவ துறை தனியார் மயமாகி, அரசு கைவிடும் போக்கினால் இம்மக்கள் வாழ்வில் மட்டுமல்ல, நோயிலும் தாக்கப்படுகின்றனர்.
வறட்சி மற்றும் அரசுகளின் அலட்சியம் காரணமாக பலர் ஊரை விட்டே சென்றுவிட்டனர். இங்குள்ளவர்கள் தங்களின் கிணறுகளில் தோண்டும் ஒவ்வொரு மீட்டரிலும் வரும் நீரில் கால்சியமும் உப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
யானைப்பசிக்கு சோளப்பொறி போல, மகாராஷ்டிரா அரசு இரயில்களின் மூலம் தண்ணீரை சொட்டு சொட்டாக அளிக்க முயல்கிறது. அதுவும் கிடைக்காத மக்கள் தண்ணீருக்கு அவ்வட்டாரம் முழுவதும் அலைகிறார்கள். தமிழகத்தில் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருப்போர் கொஞ்சம் மராட்டியத்தின் அவலத்தை பாருங்கள்! தமிழகமும் இந்நிலை நோக்கித்தான் செல்கிறது.
இதைவிட கொடுமை இதனை மீடியாக்களும் அடுத்து இதனை போன்று பாதிப்புக்களை எதிர்கொள்ளவிர்க்கும் சாமானிய மக்களும் இதன் உன்மை கோரமுகத்தை உனராததே.