privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஎதிர்கால பிரதமர் லக்கன் மனோஜ் கைது

எதிர்கால பிரதமர் லக்கன் மனோஜ் கைது

-

லிங்கம் குடிகொண்டிருக்கும் இடமாக மனோஜ் காட்டியது தேசிய நெடுஞ்சாலை எண் 163.

பெரும் அபச்சாரம் நிகழ்ந்துள்ளது. எதிர்காலத்தில் பிரதமராகும் வாய்ப்புள்ள லக்கன் மனோஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெரும் சிவனடியாரான லக்கன் மனோஜுக்கு கடந்த ஐந்தாண்டுகளாக சொப்பனத்தில் அவ்வப்போது எம்பெருமான் எழுந்தருளியுள்ளார். ”இந்தா இங்கனக்குள்ள மண்ணுக்கு கீழ லிங்க ரூபத்தில் புதைஞ்சி கிடக்கேன்” என்று தொடர்ந்து சொல்லி வந்துள்ளார்.

லக்கன் மனோஜும் தனது பெம்பார்த்தி கிராமத்து மக்களிடம் தென்னாடுடையானின் திருவிளையாடலை எடுத்துச் சொல்லி வந்துள்ளார். மேலும், அவ்வப்போது மனோஜின் பூதவுடலில் எழுந்தருளும் உமையொருபாகத்தான், மண்ணைத் தோண்டி தன்னை காராக்கிரகத்திலிருந்து வெளியே எடுத்து அதே இடத்தில் திருக்கோவில் ஒன்றை எழுப்பவும் உத்தரவிட்டுள்ளார். கோவிலின் உண்டியலை சிவனார் அடிக்கடி வந்து போகும் திருத்தலமான மனோஜின் பூதவுடலின் பொறுப்பிலேயே விடுமாறு கேட்டுக் கொண்டாரா என்பது நமக்குக்குத் தெரியாது.

மக்களுக்கும் ஆசை தான். ஆனால், லிங்கம் குடிகொண்டிருக்கும் இடமாக மனோஜ் காட்டியது தேசிய நெடுஞ்சாலை எண் 163. ஹைதராபாத் – வாராங்கல்லை இணைக்கும் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை. அதன் நட்ட நடுவில் குழிதோண்டி – கோயில் கட்டினால் போக்குவரத்து பாதிக்கப்படுமே என ஐந்தாண்டுகளை பிடறியைச் சொறிந்தே கடத்தியுள்ளனர். இறுதியாக கடந்த 5ம் தேதி ஜே.சி.பி இயந்திரத்தின் துணையோடு சிவனின் அடி மற்றும் முடியைத் தேடி தேசிய நெடுஞ்சாலையின் மத்தியில் பள்ளம் பறிக்க திருவுளம் கொண்டனர்.

குழிக்கு உள்ளிருந்து சிவனார் வருவார் எதிர்பார்த்திருந்த நிலையில் – போலீசார் தான் வந்துள்ளனர். மோடியின் இந்தியா என்பதால் ஆன்மீக நடவடிக்கையில் தலையிட முதலில் தயங்கியுள்ளனர் போலீசார் – ஆனால், லிங்கம் வராத நிலையில் குழியை மேலும் தோண்ட உத்தரவிட்டுள்ளார் லக்கன் மனோஜின் உடலில் தற்காலிகமாக எழுந்தருளியிருந்த பரமேசுவரன். லிங்க வெறியில் குழி நீண்டு, அது பூமியின் மறுபுறம் நியூயார்க் தெருவில் முடிந்து, அமெரிக்க சாலையும் பழுதாகி, டொனால்ட் டிரம்பின் சாபத்தை சம்பாதிக்க நேரும் அபாயத்தைத் தவிர்க்க வேறு வழியின்றி கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளது போலீசு.

புராண காலத்தில் விமானத்தையும், பிள்ளையாரின் மூஞ்சியில் பிளாஸ்டிக் சர்ஜ்ஜரியையும் தரிசித்துள்ளவர் இன்றைய பிரதமராகவும் – பூசாரிகள் மாநில முதல்வராகவும், மசூதிக்குக் கீழ் ராமனைத் தேடும் கட்சி ஆளும் கட்சியாகவும், மாட்டுச் சாணியைக் கிளறி முகர்பவர்கள் விஞ்ஞானிகளாகவும் ஆகும் வாய்ப்புள்ள இந்தியாவில் லக்கன் மனோஜ் மட்டும் என்ன பாவம் செய்தார்?

செய்தி ஆதாரம்:

Lord Shiva asked Telangana man to dig national highway? Lakhan Manoj claims he was searching for Shiva ling
Telangana: Man digs highway in search of Shiva Lingam, says ‘Lord asked him’