Thursday, May 1, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கஇல. கணேசனே வெளியேறு ! சென்னை பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்

இல. கணேசனே வெளியேறு ! சென்னை பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்

-

நாடு முழுவதும் உயர்கல்வி நிலையங்களில் முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒழித்துக்கட்டி காவிமயமாக்கி வரும் இந்து மதவெறி பாசிச கும்பல் சென்னைப் பல்கலைக்கழகத்தையும் காவிக்கூடாரமாக்கும் நோக்கத்துடன் சைவ சித்தாந்த துறை தலைவர் சரவணனை பொறுப்பாக்கி விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையம் என்கிற பெயரில் ஒரு இருக்கையை உருவாக்கியுள்ளது. இது தனித்துறை அல்ல ஆனால் விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையத்தின் பெயரில் உயர்கல்வி குறித்த கருத்தரங்கம் என்கிற பெயரில் பாஜக ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலை அழைத்து வந்து அவ்வப்போது கூட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

நேற்று 15.6.17 காலை 10.45 மணிக்கு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையத்தின் சார்பில் ‘விவேகானந்தரின் உயர்கல்விக்கொள்கையும் அதன் நோக்கமும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டிருந்தனர். கருத்தரங்கிற்கு வரலாற்றுத்துறை பேராசிரியரும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான சுந்தரம் முன்னிலை வகித்தார். இந்தியாவுக்காக தமிழகத்தை பலியிடுவதில் தவறில்லை என்று பேசிய பா.ஜ.க எம்.பி இல.கணேசன் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். தன்னை முற்போக்காளராக காட்டிக்கொள்ளும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவும் இந்த காவி கூட்டத்தோடு ஐக்கியமாகியிருந்தார்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவிருக்கும் தகவலே எங்களுக்கு அன்று காலை 8 மணிக்கு தான் தெரியும். தற்போது இன்டர்ன்ஷிப் நடந்து கொண்டிருப்பதால் மாணவர்கள் பெரும்பாலும் பல்கலைக்கழகத்திற்கு வருவதில்லை எனவே குறுகிய காலத்திற்குள் இயன்ற மாணவர்களை அணிதிரட்டிக் கொண்டு கருத்தரங்கம் நடக்கவிருந்த பெரியார் அரங்கிற்குள் சென்று அமர்ந்தோம்.

நீதிபதி சந்துரு பேசும் போது இந்துக்கள் பசுவை உண்ணலாம் என்று விவேகானந்தர் கூறியதாக பலர் கூறுகின்றனர் அதற்கெல்லாம் ஆதாரமில்லை என்று கூறினார். விவேகானந்தர் கூறியது உண்மையா பொய்யா என்பது ஒருபுறமிருக்க சந்துரு காவி கும்பலோடு உட்கார்ந்துகொண்டு காவித்தனமாக பொய் பேசிக்கொண்டிருந்ததுதான் பிரச்சினை. மேலும் அவருடைய உரை முழுவதும் மாட்டுக்கறியை மாட்டுக்கறி என்றோ மாட்டிறைச்சி என்றோ கூறவில்லை பக்தாளை போல பசுக்கள்… பசுக்கள்… என்று மிகவும் மென்மையாகவே பேசிக்கொண்டிருந்தார்.

அடுத்து இல.கணேசன் பேச எழுந்ததுமே ‘வெளியேறு வெளியேறு காவி கும்பலே வெளியேறு’ என்று முழக்கமிடத் துவங்கினோம். நிகழ்ச்சி தடைபட்டது. காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தும் விதமாக தொடர்ந்து முழக்கமிட்டோம். அரங்கிற்குள் ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆட்கள் இருப்பது அப்போது தான் எங்களுக்கு தெரிந்தது. மாட்டுக்கறி உரிமை எல்லாம் உரிமை கிடையாது என்று ஒருவன் எங்களை மிரட்டும் விதமாக பேசினான். அதற்கடுத்து மாட்டுக்கறி எங்கள் உரிமை தடை போட மோடி யாரு என்று முழக்கமிட்டோம்.

அரங்கிற்குள் காவி கும்பலுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருப்பது பல்கலைக்கழகம் முழுவதும் பரவியது. அரங்கிற்கு வெளியே வந்து முழக்கமிட்ட போது சுற்றிலும் நின்றவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். முன்பு மாட்டுக்கறி விருந்து நடத்திய போது பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் காவலர் ஆர்வத்துடன் விருந்தில் கலந்துகொண்டு மாட்டிறைச்சியை கேட்டு வாங்கி உண்டார். நேற்றைய போராட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தவர் அருகில் வந்து என்னப்பா போராட்டம் மட்டும் தானா பீஃப் இல்லையா என்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வலுவான முற்போக்கு இடதுசாரி மாணவர் சங்கங்கள் எதுவும் இல்லாத நிலையில் காவி பயங்கரவாதிகள் பல்கலைக்கழகத்தை கைப்பற்றத் துடிக்கின்றனர். தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவதை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல் கும்பல் செய்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தருண் விஜையை அழைத்து வந்தனர். இன்று இல.கணேசனை அழைத்து வந்திருக்கின்றனர். இது போல தி.மு.க, சி.பி.எம், வி.சி.க போன்ற கட்சிகள் வந்து இங்கே கூட்டம் போட நிர்வாகம் அனுமதிக்குமா? காவி கும்பலை வளர்த்துவிட பல்கலைக்கழகத்திற்குள் இருந்துகொண்டே சிலர் வேலை செய்கின்றனர். நிர்வாகமும் அதை கண்டு கொள்ளாமல் துணைபோகிறது.

பார்ப்பன பாசிச கும்பல் பல்கலைக்கழகத்தில் நுழைந்து மதவெறியை தூண்டிவிட்டு மாணவர்களை பிளவுபடுத்த நினைத்தால் இனிமேல் இதை விட பெரிய ஆர்ப்பாட்டஙகளை பெருந்திரளான மாணவர்களோடு நடத்துவோம் என்று எச்சரிக்கிறோம். காவி கும்பலுக்கு துணை போவதை பல்கலைக்கழக நிர்வாகம் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். பார்ப்பன பாசிச கும்பலுக்கெதிராக மாணவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்!

இது பெரியார் பிறந்த மண் இங்கே காவி கும்பல் தலை தூக்கினாலே நசுக்கி எறிவோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் (செ.ப)
APSC (MU)