சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவராக படித்து வருகிறார் குபேரன். இவர் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும், தமிழக இளைஞர் முன்னணியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கிறார். கதிராமங்கலத்தில் மக்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மீத்தேன் திட்டத்தை கைவிட கோரியும் , பேராசிரியர் தா.ஜெயராமன், விடுதலைசுடர் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 20 -ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த செய்தியை அறிந்த சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார், நள்ளிரவில் குபேரனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு “உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும், காவல்நிலையத்திற்கு வந்து விட்டு போங்கள் என்றார்கள். அதற்கு குபேரன், நான் காலையில் வருகிறேன், என்றிருக்கிறார். அதனை ஏற்காத போலீசு குபேரனை மிரட்டி அன்றிரவே காவல்நிலையம் வரவழைத்து, மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்த தூண்டியதாக” வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கடந்த 17-ம் தேதி கதிராமங்கலம் பிரச்னைக்கு ஆதரவாக போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 65 பேரை போலீசுடன் கூட்டு சேர்ந்து இடைநீக்கம் செய்தது கல்லூரி நிர்வாகம். சேலம் கல்லூரி மாணவி வளர்மதி கதிராமங்கலத்திற்கு ஆதராவாக பிரச்சாரம் செய்ததாக கூறி அவரை கைது செய்து குன்ற சட்டத்தில் அடைத்தது போலிசு. தற்பொழுது அவரை பெரியார் பல்கலைக்கழகம் தற்காலிக இடைநீக்கமும் செய்துள்ளது. தற்பொழுது மாணவர் குபேரனை கைது செய்துள்ளது போலிசு.
தமிழகத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடக்கூடிய மாணவர்களை கைது செய்து அச்சுறுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது போலிசு. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 19 வழங்கும் அடிப்படை உரிமையை, ஆயுதமின்றி கூடும் உரிமையை பறித்து ஒரு பாசிச ஆட்சியை நடத்தி வருகிறது மோடியின் அடிமையான எடப்பாடி அரசு. இந்த அடிமைக்கு மாணவர்களின் எழுச்சி மூலம் தான் சரியான பாடம் புகட்ட முடியும்.
_____________
இந்தச் செய்தி உங்களுக்கு பயனளித்ததா?
- தமிழக மக்களின் போராட்டச் செய்திகளை அஞ்சாமல் தரும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி