privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்சிறப்புக் கட்டுரை : பிக்பாஸ் ரசிக்கப்படுவது ஏன் ?

சிறப்புக் கட்டுரை : பிக்பாஸ் ரசிக்கப்படுவது ஏன் ?

-

பிக்பாஸ் ஆரம்பித்து ஒன்றரை மாதமாகி விட்டது. நமது மக்கள் பல்வேறு கோணங்களில் சில பல ஆய்வுகளையே நடத்தி விட்டனர். யூ டியூப் சானல்கள் பல பிக்பாஸின் அன்றாட நடவடிக்கைகளை திடுக்கிடும் தலைப்புக்களால் போட்டு கம்பெனியை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட்டுகின்றனர். ஃபேஸ்புக்கிலோ முற்போக்கு, பிற்போக்கு, சமூகவியல், பெண்ணியம், உளவியல் என்று எல்லா பிரிவுகளிலும் ஆய்வுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

வாட்ஸ் அப்பில் ஓவியா படை போர் முரசு கொட்டுகிறது. வார நாட்களில் டிவிட்டரிலும், வார இறுதியில் விஜய் டிவியிலும் கமலஹாசன் பேசும் தத்துவங்கள் பல சமூகவலைத்தளங்கள் மட்டுமல்ல, ஊடகங்களாலும் ஆராயப்படுகின்றன. அசைவ உணவு உண்பவர்களை முரடர்களாக கருதுகிறார், சேரி பிகேவியர் வார்த்தைகளை அனுமதிக்கிறார், மனநலம் பாதிக்கப்பட்டோர் கேலி செய்யப்படுவதை ஏற்கிறார் என்றெல்லாம் தொலைக்காட்சி விவாதங்கள் தொடர்கின்றன. அனைத்தையும் கணக்கில் கொண்டு அடுத்த வாரம் பதிலளிக்கிறார் கமல். அந்தக் குற்றங்களுக்குத் தான் காரணமில்லை என்கிறார்.

நேரடியாக போட்டி நடத்துபவர்களையும், விஜய் டிவியையும் மெல்லிய தொனியில் விமர்சிக்கிறார். மக்களுக்கோ இது போட்டி என்பதால் பொழுது போக்காக எடுத்துக் கொள்ளவும், அதே நேரம் சில வாழ்வியல் பாடங்களை கற்கலாமெனவும் முடிந்த மட்டும் வகுப்பு நடத்துகிறார்.

தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு அருகாமைப் பகுதியிலிருந்து வந்த கிராமப்புற தம்பதியினர் இரவு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென நினைவு வந்தவர்கள் போல “ஐயோ இன்று பிக்பாஸ் பார்க்க முடியாதே, ஓவியா காதல் என்னவாகும்” என்று பேசிக் கொண்டனர்.

ஒவ்வொரு நாளிலும் அந்த இளம் தம்பதியினர் இரவானதும் இரு குழந்தைகளை நல்லபடியாக தூங்க வைத்து விட்டு பிக்பாஸில் பயணிக்கின்றனர். நாள் முழுவதும் அந்தப் பெண் இரு குழந்தைகளை பராமரித்தும், வீட்டு வேலைகளில் மூழ்கியும் போகிறார். அந்தக் கணவரோ அன்றாட வணிக வேலைகளை வாடிக்கையாக செய்கிறார். இரவுதான் அவர்களுக்கு பிக்பாஸ் நினைவுக்கு வருகிறது. பிறகு அவர்களது உலகம் பிக்பாஸ் குடும்ப வீட்டில் நிலை கொள்கிறது.

பிக்பாஸ்  நிகழ்ச்சியை மக்கள் ஏன் பார்க்கிறார்கள்?

சீரியல், சினிமா வகையறாக்களை மக்கள் பார்ப்பது கேள்விக்கப்பாற்பட்ட ஒன்றாக மாறிவிட்ட போது இந்தக் கேள்விக்கே இடமில்லை! ஆனால் சீரியல் – சினிமா இரண்டின் சாயல்களோடு, ‘புதுமை’களையும் கொண்டிருக்கும் பிக்பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ என்பதால் இன்னும் கூடுதலாக வரவேற்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இந்தப் புதுமை என்பது அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு சூப்பர் சிங்கர், காமடி நிகழ்வுகள், பிரபலங்களின் மேடை போட்டிகள், நடனப் போட்டி போன்ற ரியாலிட்டி தொடர்களை அறிமுகப்படுத்திய விஜய் டிவியின் பிக்பாஸ் மற்றவற்றில் இருந்து கொஞ்சம் வேறுபடுகிறது.

மேற்கே அஸ்தமனமான ரியாலிட்டி ஷோக்கள் கிழக்கில் உதிக்கின்றன

அடுத்தவர் படுக்கை அறையை எட்டிப் பார்க்கும் மக்களின் பலவீனம்தான் பிக்பாஸ்-ன் பலம் என்று சிலர் இதை எளிமையாக முடித்து விடுகிறார்கள். “எனது படுக்கையறையை எட்டிப் பார்க்காதீர்கள், அது எனக்கானது” என்று கமலஹாசன் முன்பொரு முறை சொல்லியதை எடுத்துப் போட்டு இப்போது அவரே படுக்கையறையை காட்டுகின்றார் என்றும் விமர்சிக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தமது படுக்கையை மட்டுமல்ல, 24 மணி நேரமும் தமது நடவடிக்கைகள் வெளிச்சப்படுத்தப்படுபவதை ஏற்பதாகத்தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள் என்று கமல் பதில் சொன்னார். இது தனக்கு வந்தால் தக்காளி மாதிரியா?

உலகெங்கிலும் செலிபிரிட்டி எனப்படும் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை ஊடகங்களின் முக்கியமான விற்பனைப் பொருள். மேலை நாடுகளில் இத்தகைய செலிபிரிட்டி கிசுகிசுக்கள் இருந்தாலும் மக்களிடையே முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் “தனிநபர்வாதமும்” கொஞ்சம் “ஜனநாயகமும்” இருப்பதால் நமது நாடுகளைப் போல் அங்கே இந்த கிசுகிசுக்களுக்கு பெரிய அசைபோடுதல் இல்லை.

இருப்பினும் ஊடகங்களின் “பேஜ் – 3” வகை நொறுக்குத் தீனி துணுக்குகளில் பிரபலங்களின் பரபரப்பான மசாலா ‘செய்தி’களே இன்றும் உலக அளவில் உத்திரவாதமான விற்பனை உத்தி. கிசுகிசுக்களை தடை செய்துவிட்டால், தமிழகத்தின் தினமலர் – குமுதமோ இங்கிலாந்தின் சன் நாளிதழோ முன்னறிவிப்பு இன்றி செத்துப் போவது உறுதி. யூ டியூபில் தமிழ் சினிமாவின் முக்கல் முனகல்களை பொறுக்கி எடுத்து கிசுகிசுவாக மாற்றி வாந்தி எடுக்கும் நூற்றுக்கணக்கான சானல்களின் வருமானம் சமீபத்திய சான்று.

கிசுகிசுக்கள் என்றால் அவை படுக்கையறையில்தான் ஜனித்தாக வேண்டும். கமலஹாசன் காலையில் இட்லி சாப்பிட்டார், மாலையில் போண்டா தின்னார், இரவில் குளித்தார் போன்றவையை விட அவரது படுக்கையறையை பகிர்பவர் யார் என்பதே ‘சேதி’ மதிப்புடையவை.

இன்றைய கால சினிமாக்களை விளம்பரப்படுத்த ரியாலிட்டி ஷோக்களின் சாயலில், படத்தின் நாயக – நாயகிகளது கிசுகிசுக்களையோ, இல்லை நயன்தாரா பீர்பாட்டில் வாங்குகிறார் போன்ற அதிர்ச்சி மதிப்பீடுகளையோ உண்மை போல வெளியிடுகின்றனர். அடுத்தவர் படுக்கையறையை காண்பித்துத்தான் ஒரு படம் ஓட வேண்டுமா என்று எவரும் இதற்கு பொங்குவதில்லை.

சிம்ரன் – கமல் தொடர்பான கிசுகிசுக்கள் பேசப்பட்ட காலத்தில் அதையே வைரமுத்து பாட்டெழுதி, “பஞ்ச தந்திரம்” படத்தில் ஊரே பார்ப்பதற்கு கமல் அனுமதித்தார். காரணம் என்ன? கிசுகிசுக்கப்படும் சேதிகளில் எந்த அளவுக்கு அடிபடுகிறார்களோ அந்த அளவுக்கு சினிமா மாந்தர்களின் சந்தை “டிஆர்பி” மதிப்பிடப்படுகிறது. அதில் படுக்கையறை, எனது வாழ்க்கை, பெண்ணுரிமை, அநாகரிகம் போன்ற வார்த்தைகளுக்கு மதிப்பேதுமில்லை.

எனினும் சினிமா நடிகர்களும் மனிதர்கள்தானே என்ற சமத்துவ உணர்வு அவர்களுக்கு எப்போதாவது தோன்றும். சந்தை இழந்த பிறகு கண்டிப்பாக தோன்றுவது, உச்சத்தில் இருக்கும் போது சலிப்பு காரணமாகவும் பிதுங்கும். அப்போதெல்லாம் என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்று செல்லமாக சீறுவார்கள்! கமலஹாசனைப் பொறுத்த வரை போத்தீஸ் விளம்பரம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்து போக முடியாது.

போத்தீஸ் துணிகளில் உண்மை, நியாயம், நம்பிக்கை இருப்பதாக அவர் சொல்வதை ஒதுக்கி வைத்து விட்டு, கமலின் நடிப்பு, செட், விளம்பர உத்தி குறித்தே மக்கள் அலசுகிறார்கள். பிக்பாசிலோ நாள் ஒவ்வொன்றின் வார்த்தைகளும், திருப்பங்களும், பிரச்சினைகளும், மக்களால் அலசப்படும் போது கமலும் விவாதப் பொருளாகிறார். முக்கியமாக மக்கள் பங்கேற்பை வைத்தே பிக்பாசின் வணிகம் கட்டமைக்கப்பட்டிருப்பதால் தனது இமேஜுக்காவும், டிஆர்பிக்காகவும் அவர் சில பல நியாயங்களை பேச வேண்டியிருக்கிறது.

சரி, மக்கள் பிக்பாஸை ஏன் பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலே இல்லையா?

அதற்கு நம்மைப் போன்ற ஏழை நாடுகளின் சமூகவியலைக் கொஞ்சம் புரட்டலாம். அதற்காக ‘பணக்கார’ நாடான அமெரிக்காவிற்கு பயணிப்போம்.

பில் கிளிண்டன்

பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகை பணியாளரான மோனிகா லிவின்ஸ்கியிடம் முறைகேடாக நடந்து கொண்டார். அந்தப் பெண்ணுக்கு சிறப்பான எதிர்காலத்தை தருவதாக ஆசை காட்டி முயன்றார். இது வெளியே தெரிய வந்து பிறகு பாராளுமன்ற உறுப்பினர்களின் விசாரணை வரை போனது. குட்டைப் பாவாடையில் விந்துக் கறை இருந்தது உள்ளிட்டு இந்த விசாரணை நுட்பமாக நடக்க நடக்க உலக ஊடகங்களின் உற்சாகம் பீறிட்டு வழிந்தது.

அமெரிக்கா போன்ற “பாலியல் சுதந்திரம்” உள்ள முன்னேறிய நாடுகளில் இதற்கெல்லாமா விசாரணை வைப்பார்கள்? நேரெதிராக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் அதற்கு பிறகும் தி.மு.க பெரிய கருப்பன், அ.தி.மு.க ரமணா சார்பான வீடியோக்கள் வெளிவந்தன. பெரிய கருப்பன் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக வாட்சப்பில் ஓடுவதாக அ.தி.மு.க-வினர் கேலியுடன் பிரச்சாரம் செய்தாலும் தேர்தலில் கருப்பன் பெரு வெற்றி பெற்றார். அதே போன்று ரமணாவின் அமைச்சர் பதவிக்கும் பெரிய ஆபத்தில்லை.

இதே போன்று கே.ஏ.செங்கோட்டையனின் இல்லத்தரசிகளது எண்ணிக்கை கூடும் பிரச்சினையை ஒட்டி ஜெயலலிதா அவர் மீது நடவடிக்கை எடுத்து ஒதுக்கினார். இன்று அவர் கல்வி அமைச்சராக வலம் வருகிறார். எவரும் அவரது பாலியல் உறவுகள் குறித்த விவாதங்களை எழுப்புவதில்லை. பா.ஜ.கவின் இளைய நட்சத்திரமும், மேனகா காந்தி பெற்றெடுத்த சீமந்த புத்திரனுமாகிய வருண் காந்தியின் வீடியோ வெளியானாலும், ஏக பத்தினி விரத ராமனை வைத்து சர்க்கஸ் நடத்தும் பாரதிய ஜனதாவோ, பிரம்மச்சாரி பிரச்சாரக் மோடியோ கண்டு கொள்ளவில்லை.

பாலியல் சுதந்திரம் இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் கிளிண்டனுக்கு நடந்த விசாரணை நடப்பதில்லை. அமெரிக்காவில் அதிபரின் ஒழுக்கம் தவறக் கூடாது என்பது இங்கே இல்லை. ஏனிந்த முரண்பாடு? தனிநபர் வாழ்வில் சுதந்திரம், பொது வாழ்வில் கட்டுப்பாடு எனும் அமெரிக்க விதி சொல்வது என்ன?

முதலாளித்துவ நாடுகளில் ‘விதிமுறை’ப்படி சமூக அரசியல் பொருளாதார அமைப்பு இயங்குவது முக்கியம். ராஜிவ் காலத்தில் துவங்கிய ஃபோபார்ஸ், ஃபேர்பாக்ஸ் முதல் வாஜ்பாய் காலத்தில் வந்த கார்கில் சவப்பெட்டி ஊழல் வரை என்ன பிரச்சினை? பன்னாட்டு ஆயுத தளவாட நிறுவனங்கள் இந்தியாவில் ஆர்டரைப் பிடிப்பதற்கு சில தரகர்களை அணுகி கழிவு கொடுத்தனர். இங்கே இத்தகைய தரகுச் சேவைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. மேலை நாடுகளில் இத்தரகுகள் மட்டுமல்ல, சூதாட்டம், வரம்புக்குட்பட்ட அளவில் விபச்சாரம் வரை பல விசயங்கள் சட்டப்படியே அனுமதிக்கப்படுகின்றன.

அதாவது இந்தியாவில் லஞ்சம் சட்டப்படி தடை என்றால் அங்கே பல அளவுகளில் சட்டப்படியே கொடுக்கலாம். புஷ்ஷுக்கோ இல்லை ட்ரம்புக்கோ மருந்து, எண்ணைய், ஆயுத அதிபர்கள் பெரும் நன்கொடை அளித்து ஈராக் – ஆப்கான் மீட்புபணி ஒப்பந்தங்களை வளைப்பதற்கு தடை இல்லை. இத்தகைய முதலாளிகளுக்கு எதிர் வரிசை முதலாளிகள் ஜனநாயகக் கட்சி மூலம் சவுண்டு எழுப்பலாமே தவிர சட்டப்படி எதிர்க்க முடியாது.

ரஜத் குப்தா

பங்குச் சந்தையில் எப்படி வேண்டுமானாலும் சூதாடலாமே ஒழிய அதன் உள் வட்ட செய்திகளை எதிர்தரப்பில் கசிய விட்டால் அது குற்றம். அதன்படி இந்திய வமிசாவளியைச் சேர்ந்த (ரஜத் குப்தா திறம் வேறல்ல ! அறம் வேறல்ல !!) ரஜத் குப்தா தண்டிக்கப்பட்டார். வேறு வகையில் சொல்வதாக இருந்தால், ஒரு முதலாளித்துவ நாட்டில் சட்டப்படியே மக்களைக் கொள்ளையடிக்க ஆயிரம் வழிகள் இருக்கும் போது ‘சட்ட விரோதமாக’ சுருட்ட நினைப்பதை அந்த அமைப்பு அனுமதிக்காது. அதனால்தான் உள்வட்ட வர்த்தக மோசடி குற்றத்திற்காக ரஜத் குப்தாவை விசாரித்த நீதிபதியும், நடுவர்களும் அவருக்காக கிட்டத்தட்ட அழுது கொண்டேதான் தண்டித்தனர்.

அதனால்தான் பாலியல் சுதந்திரம் இருந்தாலும் அதிபர் ஒருவர் மணவாழ்க்கைக்கு வெளியே மண உறவு வைப்பது என்பது அங்கே இலக்கண மீறலாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலோ சட்டவிரோதமாக கொள்ளையடிப்பதையே மறைமுகமாக சட்டங்கள் அனுமதிப்பதால் இங்கு அனைத்தும் தலைகீழாக இருக்கின்றது. இங்கே பிடிபடாமல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அதில் சிகரம் தொட்ட அம்பானி இந்திய முதலாளிகளுக்கு ஒரு முன்மாதிரி என்றால் மிகையில்லை.

அமெரிக்காவில் லஞ்சம், ஊழல் சட்ட ரீதியாக்கப்பட்டிருக்கிறது. பொது வாழ்வில் ஒழுக்கம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் லஞ்சம் தடை செய்யப்பட்டிருக்கிறது. பொது வாழ்வில் ஒழுக்கம் வரையறுக்கப்படவில்லை.

நமது அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படி இப்படி இருப்பதை மக்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – சட்டங்களும் கூடத்தான். மேலும் ஒரு நிலவுடமை சமூகத்தில் இத்தகைய மேன்மக்களின் பாலியல் நடவடிக்கைகள் கேள்விக்கு அப்பாற்பட்டவை என்பதை கடவுளர்கள் துவங்கி வார்டு கவுன்சிலர்கள் வரை மக்கள் அங்கீகரிக்கிறார்கள். பத்தினி விரதன் என்பதற்காக இராமன் இந்தியாவில் போற்றப்படுகிறான் என்றால் இந்த நாட்டு மக்களின் மண ஒழுக்கத்தைப் பற்றி மற்ற நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? இப்படி இரண்டு விதங்களிலும் அதாவது மக்கள் தம்மை தாழ்வாக நினைப்பதிலும், மேன்மக்களின் சொந்த வாழ்க்கை மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதிலும் இங்கே கிளிண்டன் வகை பாலியல் முறைகேடுகள் பிரச்சினையாவதில்லை.

மேலும் இங்கே ஜனநாயகம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஒரு சடங்காகவே கொண்டு செல்லப்படுவதால் தமது தனிப்பட்ட வாழ்வில் நீதி நேர்மை நியாயங்களை கடைபிடிக்கும் மக்கள் தேர்தல்களில் அதை புகுத்துவதில்லை. ஆதலால் ஊழல் ராணி ஜெயாவோ, பாலியல் ஊழல் தலைவர்களோ இங்கே நெருப்பாக புடம் போடப்படுவதில்லை.

எப்படிப் பார்த்தாலும் பிக்பாசில் என்னதான் இருக்கிறது? பிக்பாஸ் செட்டில் வாழும் அந்த ‘செயற்கையான’ குடும்பத்தின் சண்டை சச்சரவுகள், காதல் மோதல்கள், சாப்பாடு – வேலை குறித்த அக்கப்போர்கள், பொறாமை – கோள் மூட்டுதல், சகிப்பின்மை, ஆணவம் போன்ற தனிநபர் பிரச்சினைகள், வீட்டில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க் எனப்படும் சோதனைகள் அதனால் வரும் சுவராசியங்கள் அல்லது வேதனைகள்….. இவ்வளவுதானே? இதை ஏன் மக்கள் ஒரு நாள் விடாமல் காத்திருந்து பார்க்க வேண்டும், பேச வேண்டும்?

பிக்பாஸ் தொடர் பெரு வெற்றி அடைந்த இங்கிலாந்தின் சானல் 4 -5 தொலைக்காட்சிகளில் தற்போது அந்த வெற்றி தொடரவில்லை என்கிறார்கள் விமர்சகர்கள். பல்தேசிய இனத்தோர் வாழும் ஐரோப்பாவில் பிக்பாஸ் தொடர் என்பது ஒரு பொழுதுபோக்கு வகையில் வரும் ரியாலிட்டி ஷோ மட்டுமே. சானல் 4 தொலைக்காட்சி பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்பாளர்கள் நிறைய ‘புரட்சிகள்’ செய்து விட்டார்கள். உடலுறவு கொள்வது, அதீத கெட்ட வார்த்தைகள் பேசுவது, நிறவெறி – பாலியல் குறித்த பிரச்சினைகள், ஒரு சீசனில் திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றது என எல்லாப் பரிசோசனைகளும் அங்கே முடிந்து விட்டன.

ஐரோப்பாவிலிருந்து மும்பையில் இறக்குமதியான பிக்பாஸ் நிகழ்வு சுதேசி மண்ணிற்குரிய பாலிவுட் மசாலாவை தூக்கலாக சேர்த்துக் கொண்டது. தொகுப்பாளர் முதல் பங்கேற்பாளர் வரை சினிமா மாந்தர்களை கோத்து விட்ட பிறகு அதன் வீச்சை வணிகமாக்குவதில் பிரச்சினை இல்லை.

பின் நவீனத்துவமாக இருந்தாலும் சரி பிக் பாஸாக இருந்தாலும் சரி மேற்கே அஸ்த்தமித்த பிறகே கிழக்கே உதிக்கின்றன. எப்போதும் அஸ்தமனம் அடக்கத்தோடும், உதயம் ஆர்ப்பாட்டமாகவும் இருக்கும் என்பதால் இங்கே பிக்பாஸ் குறித்துப் பேசுவது இருட்டுக் கடை அல்வாவை சிலாகிப்பது போல தேசிய ரசனையாகி விட்டது.

ஸ்ரீ-யின் மௌனம், கஞ்சா கருப்பின் ஏய், அனன்யாவின் ஓபனிங் சரியில்லை பரணியின் நியாயமான கோபம், ஆர்த்தியின் சடசட, நமீதாவின் சீமாட்டித்தனம், ஜூலியின் அழுகை, காயத்திரியின் குழாயடி, ஆரவ்-வின் அது வந்துட்டு, ரைசாவின் நாசுக்கு, ஓவியாவின் சுதந்திரம், சக்தியின் நான்தான், வையாபுரியின் வீட்டு நினைவு, கணேஷின் காரியவாதம், கடைசியாக பிந்து மாதவியின் ஒண்ணுமே இல்லை…..வரை மக்கள் அந்தந்த போட்டியாளர்களை அக்குமேல் ஆணிகளாக அலசுகிறார்கள்.

பிக்பாஸில் பதினான்கு பங்கேற்பாளர்கள் நூறு நாட்கள் தங்கி, உண்டு, கழித்து, பேசி, பஞ்சாயத்தாக்கும் சாதாரண நிகழ்வுகளோடு மக்கள் அசாதாரணமாக ஒன்றுபடுவது ஏன்?

மக்களிடம் எது இல்லையோ, எது மறுக்கப்பட்டதோ, எது சாத்தியமில்லையோ, எது கனவோ அவையெல்லாம் ஆழ்மனம் தொட்டு அன்றாட அசைபோடுதல் வரை அலைக்கழிக்கிறது.

பாலியல் தேவைகள் மறுக்கப்படும் போது கனவுப் புனைவுகள் அடக்கப்பட்ட வேகத்துடன் சீறுகின்றன. வாழ்வியல் தேவைகளுக்கு உழலும் போது உண்டு களிக்கும் ரோட்டரி கிளப் செல்வந்தர் வாழ்வு மீது ஏக்கம் எட்டிப் பார்க்கிறது. அநீதியை தட்டிக் கேட்க சக்தியில்லாத போது கானாப் பாடலாக லாவணிக்கிறது. ஜனநாயகம் ஏட்டில் மட்டும் இருக்கும் போது அடிமைத்தனம் இயல்பில் வேர்விட்டு விடுகிறது.

நேற்று யாம் அரசியல் பேசவில்லை என்பது மெய்யே, அஃது முதிரா மழலை, இப்போது முதிரும் பாதையில் இருப்பதால் அதிர்கிறேன், குத்திக் காட்டாதீர்கள் என்பதாக கமல் சொல்வது பொதுவில் அவர் மீது வரும் விமர்சனங்களுக்கான பதில் மட்டுமே. மக்களுக்கோ அந்த கேள்விகளே இல்லை. பெரிய இடத்துப் பிள்ளை தெருவில் கோலி ஆடுது பாரும்மா என்று இரக்கப்படுவார்கள். பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு வாக்கப்பட்டாலும் டயானாவை தமது பிரதிநிதியாக மக்கள் கருதியதால்தான் அவர் பிரபலமானார். ராயல் குடும்பத்தின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியின் ஒரு முகம் இது.

என்ன இருந்தாலும் ஜெயலலிதா ஒரு இரும்புப் பெண்மணி என்று அவர்கள் கருதுவது கூட தோலிலும் சூழலிலும் கருப்பே அண்டாத வெள்ளை வசதி கொண்ட ஒரு சீமாட்டி குறித்த அடிமைகளின் வியப்பு. தங்களது வாழ்வில் இல்லாத இன்பத்தையும், விடாத துன்பத்தையும் வாடிக்கையாக வரித்துக் கொண்டு ஓடும் மக்கள் ஜெயா – சசிகலாவை சிறையில் கடிக்கும் கூவத்து கொசு குறித்து வருந்துகிறார்கள். என்ன இருந்தாலும் அந்தக் கொசு அவர்களுக்குரியது அல்லவா!

இந்த உலகில் இன்னமும் நிலவுடமை சமூகத்தின் பாதிப்பில் இருக்கும் நம்மைப் போன்ற ஏழ்மை நாடுகளும் சரி, எந்தப் புரட்சியும் இன்றி தொழிற்துறை நாடாக மாறிய ஜப்பான் போன்ற நாடுகளும் சரி இன்னும் “சென்டிமெண்ட் இடியட்ஸ்” ஆகவே இருக்கின்றன. இது தமிழ் மக்களுக்கு மட்டுமே உரிய பண்பல்ல. சீமான் சொல்வது போல  காதலும், வீரமும், விருந்தோம்பலும், நாட்டு வைத்தியமும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களர்கள், சிங்கப்பூர் சீனர்கள், அனைவருக்கும் சொந்தமானதுதான். அது போல “அலைக்கழிக்கும் அற்பவாதிகள்” (சென்டிமெண்ட் இடியட்ஸ்) என்ற நிலையும் மூன்றாம் உலகிற்கு சொந்தமான பொது உணர்ச்சிதான். இங்கே பார்ப்பனியம் இருப்பதால் அந்த உணர்ச்சிகள் இன்னும் தூக்கலாக காட்டுகின்றன.

வளர்ச்சியடைந்த முதல் உலகின் உணர்ச்சியை பணம் எனப்படும் பொருளாதார நிலை தீர்மானிக்கும் போது மூன்றாம் உலகில் பணமே இருந்தாலும் பழைய சமூகத்தின் உணர்ச்சிகள் அவ்வளவு சீக்கிரம் மாறி விடுவதில்லை. மேற்கின் பன்னாட்டு நிறுவனங்கள் தமது நிர்வாகத்தை தொழிற்முறை நிர்வாகிகளைக் கொண்டு இயக்கும் போது இந்தியாவின் தரகு முதலாளிகளது நிறுவனங்களை குடும்ப உறுப்பினர்களே கட்டுப்படுத்துகின்றனர். மேற்குலகு பணத்தால் திறமையை வாங்கிக் கொள்கிறது. கிழக்கோ பணம் மட்டும் போதாது என்று சாதி, இனம், ரத்த உறவு போன்றவற்றையும் கணக்கில் கொள்கிறது.

ரஜினியின் “முத்து”  “அண்ணாமலை” படங்களுக்கு கிடைத்த விசிலும், விசும்பலும் தமிழகத்தில் மட்டுமல்ல ஜப்பானிலும் எதிரொலித்தன. இந்திய ஊடகங்களால் நாய்க்கறி டிராகனாக சித்தரிக்கப்படும் சீனாவில், அமீர்கானின் “டங்கல்” படம் வெற்றியடைந்ததற்கு காரணமும் அதே அலைக்கழிக்கும் அற்பவாத அடிப்படையே.

எனவே இன்னமும் சமூகத்தின் அனைத்துத் துறையிலும் ஜனநாயகமயமாக்கம் பூர்த்தியடையாத இந்தியாவில், தமிழகத்தில் நாம் அழுவதும், சிரிப்பதும், இரங்குவதும், பேசுவதும் நம் கையில் இல்லை. அதை பிக்பாஸே தீர்மானிக்கிறார்.

ஒரு பெண்ணை வித விதமாகத் துரத்தும் கதைகள் தமிழ் சினிமாவில் இன்னும் நின்றபாடில்லை. இதை ஐரோப்பாவில் பார்க்கும் ஒரு நபர் “பிளடி இண்டியன்ஸ்” என்று வைது விட்டு பஃபேவுக்கு சென்று துக்கம் அனுசரிப்பார். ஆக காதலோ, அப்பா – அம்மா பாசமோ, அண்ணன் – தங்கச்சி நேசமோ, பணக்காரன் மகள் – ஏழை இளைஞர் கலகக் காதலோ, இங்கே அற்பவாத உணர்ச்சிகள் இடைவெளியில்லாமல் ஆதிக்கம் செய்கின்றன.

இதற்கு மேலாக சாதி, மதம், மொழி இன்னபிற பிரிவுகள் மக்களின் ஜனநாயக வெளியை முடிந்த மட்டும் அழுத்துகின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஒரு மாணவரோ இல்லை இளைஞரோ நம்மவர்கள் போல வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் மூழ்குவதில்லை. அவற்றில் அவர்களுக்கு கணக்கிருந்தாலும் அவைகளுக்கு மொத்த வாழ்வில் சிறுபகுதியையே ஒதுக்குகின்றனர். காரணம் அவர்களது ஏனைய வாழ்க்கையில் பொதுவெளிகளில் கலத்தலும், ஜனநாயக வெளிகளில் சண்டை போடுவதும் சகஜம். ஆகவே வாட்ஸ்அப்பில் வரும் ஒரு வைரல் செய்தியைக் கொண்டு மட்டும் அவர்கள் பொங்க வேண்டியதில்லை.

இங்கோ ஒரு துண்டுப் பிரசுரம் கொடுத்ததற்கே குண்டர் சட்டம் என்றால் நம்மவர்கள் மெய்நிகர் உலகை விட்டு ஏன் வெளியேற வேண்டும்? இதனால் தான் இங்கு அரசியலோ இல்லை சினிமாவோ இல்லை போராட்டமோ இல்லை பொதுத்தேர்தலோ அனைத்திலும் நாம் “அலைக்கழிக்கும் அற்பவாதிகளாகவே” இருக்கிறோம். இறுதியில் நம்மிடம் ஜனநாயகம் எனும் பெரிய கோடு இல்லாததால் புனைவுகளில் வரும் தம்மாத் துண்டு நானோ புள்ளிகளை வைத்து திருப்தி கொள்கிறோம்.

விளம்பரங்களின் நீட்சியாகவே திரைப்படமெடுக்கும் ராஜீவ் மேனனின் கதை ஒரு “மல்டி வாட்டர் கலர்” செட்டில் நடந்தால் அதுதான் பிக்பாஸ். வையாபுரியே வியக்குமளவு கணேஷுக்கு பத்து செட்டு ஷூக்கள், பதினைந்து பெட்டியில் ஆடைகள்… என்றால் ஓவியா –  ரைசா – நமீதா-க்களது செட் பிராப்பர்டிகளை எடுத்துச் செல்ல ஒரு எய்ச்சர் லாரிதான் வரவேண்டும். பிறகு நுனிநாக்கு ஆங்கிலம். சினிமா மாந்தர்களின் “ஆழ்வார் பேட்டை ஆண்டவா” வகை எல்ஐசி பதினாலாவது மாடியிலிருந்து தெருவைப் பெருக்கும் தொழிலாளியை பார்க்கும் பேச்சுக்கள், தேய்வழக்கான போட்டிகள்…

இதில் சண்டை காதல் சச்சரவு இத்யாதிகள்………..

இத்துடன் முடிந்தால் கூட பிரச்சினை இல்லை. இன்னும் கொஞ்சம் உள்ளே போய் பார்ப்பனியம், மேட்டுக்குடி, திராவிடம், தமிழ், மெரினா எழுச்சி என்று ஏகப்பட்ட முன்னெடுப்புகள்….

கூட்டிக் கழித்துப் பார்த்தால் பிக்பாஸ் உருவாக்கியிருக்கும் புனைவெளியில் நமது மக்கள் அடைந்திருக்கும் குழப்ப உணர்ச்சி முன்னர் கண்ட “அற்பவாத அலைக்கழிப்புக்களையும்” விஞ்சுகிறது.

இரண்டாம் பகுதியில் பரிசீலிப்போம்.

– தொடரும்

_____________

இந்தப் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி

  1. //பாலியல் தேவைகள் மறுக்கப்படும் போது கனவுப் புனைவுகள் அடக்கப்பட்ட வேகத்துடன் சீறுகின்றன. // இல்லை இதில் இன்னும் பல கோணங்கள் உண்டு.
    எழுத நினைக்கிறேன்

    • கண்டிப்பாக எழுதுங்கள் டாக்டர், பலரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    • டாக்டர்,

      மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

      முன்னர் வினவின் பதிவுகளில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ததோடு விவாதங்களிலும் பங்கெடுத்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.. (மலரும் நினைவுகள்..)

      நீண்ட நாட்களுக்குப் பின் வினவில் உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கிறேன்.
      மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

      உங்கள் எழுத்துக்களுக்கு ரசிகன் நான்.. சாமியார்கள் மற்றும் ஆன்மீகம் பற்றி நீங்கள் தொடர் எழுத ஆரம்பித்து பின்னர் அது பாதியிலே நின்றுவிட்டது.. மிகுந்த வேலைப் பளுவும், நேரமின்மையும் காரணமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

      ஆனாலும், எங்களைப் போன்றவர்களுக்காக..
      எழுதுங்கள் டாக்டர், மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.

      உளவியலை அதன் பல்வேறு கோணங்களை, சமூகவியல் பின்னணியில் நீங்கள் விளக்குவது சிறப்பாக அமையும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  2. பிக்பாஸ் வெற்றியடைய காரணம் எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும்.
    என்னுடைய கவலையெல்லாம், ஜூலி என்ற பெண் அந்த வீட்டிலிருந்து வெளியேறி அவள் வீட்டிற்க்கு போகும் வீடியோ பதிவு ஒன்றை யுடியுபில் பார்க்க நேர்ந்தது..
    முகம் மூடி தன் அடையாளம் மறைத்து கொலை கொள்ளை வெடிகுண்டு குற்றவாளி போல அவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று போகும் காட்சி பெரும் மன வலியை கொடுத்தது.
    உண்மையில் அந்த பெண்ணின் நிலை அதுதானா சேனலின் அரவணைப்பில் தான் அவள் இருக்கிறாளா?அந்த முகமூடி பயணமும் அந்த சேணலின் செட்டப்தானா என்பது ஒருபுறம் இருக்க..
    மக்களின் ம்னோபாவம் ஏன் இவ்வளவு தரம்தாழ்ந்து கிடக்கிறது என்ற வலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது..

    “அவளை செருப்பால் அடிக்கனும் கொல்லனும்.. காயத்ரி வீட்டில் போய் இருந்து கொள்..நீயெல்லாம் ஒரு பெண்ணா ” என்ற ரீதியில் அந்த வீடியோவிற்க்கு கீழே பதிவுகள்.

    என்ன மக்கள்..இவர்களின் சிந்தனைதான் என்ன புரிதல்தான் என்ன..
    ஜூலி என்ப்து ஒரு குணாதிசய்முள்ள பெண்..ஓவியா என்பது வேறொரு குணாதிசய்முள்ள பெண்
    ஜூலி ஓவியா காயத்ரி ரைசா கணேஷ் சக்தி வையாபுரி எல்லோருமே எல்லோர் வீட்டிலும் இருக்கிறார்கள்.
    எல்லோரும் ஓவியாவாகவும் இருக்க முடியாது ஜூலியாகவும் இருக்க முடியாது
    அனைவரும் கலந்ததுதான் குடும்பம் அப்படித்தான் எல்லோர் வீடும் இருக்கிறது எல்லோரும் வாழ்கிறோம்.
    ஜூலியும் அப்படித்தான் இருந்தாள்.
    எந்த ஒரு குணாதிசயத்தையும் இரண்டு விதமாகவும் பார்க்கலாம்.
    ஓவியாவை அனுசரிக்கத்தெரியாத பிடிவாதக்கார பெண்ணாகவும் பார்க்க முடியும்.
    ஜூலியை தான் நினைத்ததை சாதிக்க எல்லா அவமானக்களையும் புறக்கணிப்புகளையும் பொறுத்து அப்படி அவமானப் படுத்தியவ்ர்களோடே சேர்ந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்கிற பெண்ணாகவும் பார்க்க முடியும்.
    இதுபோக அங்கே எல்லோரும் நட்சத்திர ஜொலிஜொலிப்போடு இருக்கிறவர்களின் மத்தியில் எப்படி தன்னை வெளிப்படுத்துவது என்ற தடுமாற்றத்தால் வந்த ஆர்வக்கோளாறாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.
    இது எதையுமே கருத்தில் கொள்ளாமல் அந்த டீவி காரனின் சூழ்ச்சியும் புரியாமல் அந்த பெண்ணை மனிதகுல விரோதியாகவே , அந்த ஓவியாவை மாதர்குல மாணிக்கமாகவே பார்க்கிற பைத்தியக்காரத்தனத்தை என்னவென்பது?
    எல்லோரும் ஓவியாவாகிவிட்டால் வீடு என்னாவது?

    • அய்யயையே சஹீபு, என்னையா இது விடிய விடிய ராமர் கதை விடிஞ்ச ராமர் மோடிக்கு என்னவோ என்றது போலிருக்கிறது உங்கள் கருத்து, நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது இங்கு அலசு பொருள் அல்ல. நிகழ்ச்சின் ரிஷிமூலம் நதிமூலம் தெளிவுபடுத்துவதே. அல்லது வினவு வாசகர் வட்டத்தையும் இவ்வாறான நைச்சியமான கமெண்டுகள் மூலம் திசைதிருப்ப முடியும் என்று என்னிவிட்டீரோ. இது வேலைவெட்டியில்லா பேஸ்புக் வாட்சப் குரூப்புகள் இல்ல. இது வேற குரூப்.

      • சின்னா, வினவின் கட்டுரை அலசுவது தத்துவார்த்த, மனோதத்துவ பின்னணியெல்லாம் சேர்த்து ஒரு ஆராய்ச்சி.அதே சமயம் மீரான் சாஹிபு ஆதங்கம் இந்த சானலின் வர்த்தக சூதாட்டத்தில் கழித்துகட்டப்பட்ட ஒரு மனிதப்பிறவி வெளியே நடமாடவே முடியாதபடி இயல்பு வாழ்க்கையை தொலைக்க வேண்டுமா என்ற மனிதாபிமானம்.ஊழல் மந்திரிகள் வெளியே நடமாட பயப்படவில்லை, காலாவதியான மருந்தை தேதி மாற்றி விற்பனை செய்து கொள்ளையடித்த பெரிய மனிதன் பயப்படவில்லை,இயற்கை வளங்களை கொள்ளையடித்து திரியும் பெருந்திருடர்கள் பயப்படவில்லை எனும் போது ஒரு சாதாரண பெண்ணை வெளியே பத்திரமாக நடமாட செய்ய கமலஹாசனின் ’கருணை’ நிறைந்த வேண்டுகோள் தேவைப்படுகிறது என்று சொன்னால் ‘சீ’ என இகழ தோன்றவில்லையா? உங்களின் பிரமிப்பான “பெரும்பாலனவர்கள் புரிந்து கொள்ளகூட முடியாத” ( ஆனால் அது உங்களால் முடிகிறது )இந்த கட்டுரை தான் முக்கியம், சக வாசகனின் எளிமையான ஆதங்கம் ஒரு ரசனை குறைவான விமர்சனம் என்கிற மேட்டிமைத்தனத்தை விட்டொழியுங்கள்.

      • திரு சின்னா
        ராஜன் அவர்களின் அதே பார்வையில் தான் என் கருத்தை நான் வைத்தேன்.
        பிக்பாஸின் நதிமூலம் ரிஷிமூலம் மேதாவிகள் பலருக்கு தெளிவாய் புரிந்திருக்கலாம்.
        அது ஏற்படுத்தும் தாக்கம் சமூகத்தில் எந்த நிலையில் இருக்கிறது சமூகம் அவற்றை எப்படி எதிர் கொள்கிறது..எப்படி எதிர் கொண்டாக வேண்டும் என்பதும் முக்கியமில்லையா..

        வினவு வாசரை எதிலிருந்து நான் திசை திருப்புகிறேன்..இதில் திசை திருப்ப என்ன இருக்கிறது?
        எனக்குள் இருந்தது எந்த நோக்கமுமல்ல..ஆதங்கம் ஒன்றே…

  3. அப்பா, இப்படி பிரித்து மேய வினவை தவிர யாரால் முடியும்? ஆனால் வேதனை என்னவென்றால் இந்த அலசலை பெரும்பாலனவர்கள் புரிந்து கொள்ளகூட முடியாதளவு மொன்னைகளாக்கப்பட்டிருக்கிரார்கள்.

    நான் நினைத்தபடியே நடந்துவிட்டது, ரஜனி எனும் பொம்மைக்கு இந்த வித்தைகள் வராது, அதனால் கமலே இப்படி நைச்சியமாக குழப்பும் கருமத்துக்கு பாவிக்கபடுவார் என்று கணித்திருந்தேன், நடந்து விட்டது.

  4. பிக்(பாக்கெட்)பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை பொதுவெளியில் விவாதிக்கும் பொழுது கலாசசாரசீரழிழுவு கமயத்தனம் நாட்டூக்கு இது தேவையா என்று சாதாரணமாகவே பேச முடிகீறது.ஆனால் நம் பண்பாட்டின் மீது இது எப்படி தாக்குதல் தொடுக்கிறது அரசியல் ரீதியாக இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நாம் எப்படி புரிந்து கொண்டு விவாதிக்க வேண்டும் என்பது சிரமமாகவே உள்ளது.இதை சரி செய்து கொள்ள வேண்டுமாயின் இது போன்ற சீறப்பான ஆய்வு கட்டுரைகற் மிகவும் அவசியம்.மீண்டும் மீண்டும் படித்துடும் போது புரிந்துகொள்ளமுடியும் என நம்புகிறேன்.தொடரட்டும் கட்டுரையின் அடுத்த பாகமும் இந்த சிறப்பான பணியும்.

  5. ராஜன், இது மேட்டிமைத்தனம் இல்லை, உண்மை, இந்த கட்டுரை பெரும்பாலானவர்களுக்கு புரியாதுதான், அந்தளவுக்கு பகுத்தறிவு மொன்னையாக்க பட்டிருப்பதால்தான் இந்த நிகழ்ச்சியையே பார்கிறார்கள், பேசுகிறார்கள், பேசி பேசியே மேலும் பலரை பார்க்க வைக்கிறார்கள். ஒலி ஒளி ஊடகங்கள் என்பது உயிரியல் நுன்மங்களை போன்றவை. யோகர்ட் ஆக்கவும் பயன்படும், இரத்தம் கக்கி சாகடிக்கவும் முடியும். இரண்டாவதை தன மக்களின் சிந்திக்கும் திறனுக்கு இவை செய்துகொண்டிரிக்கின்றன. மீரான் சாஹிப்பின் ஜூலியை பற்றிய ஆதங்கம் என்ன? மீண்டும் அவரின் கருத்தை படித்து பாருங்கள், இதில் ஆதங்கப்பட என்ன இருக்கிறது ?
    //இந்த சானலின் வர்த்தக சூதாட்டத்தில் கழித்துகட்டப்பட்ட ஒரு மனிதப்பிறவி//
    அந்த மனித பிறவிக்கு சூதாட்ட கேக்கில் ஒரு துண்டு கிடைத்துதனே இருக்கிறது?
    அந்த பொண்ணு என்ன விரலை வச்சா கடிக்க தெரியாத பாப்பாவ? அந்த பெண்ணின் மானேஜர் அல்லது லாயரை கேட்டே எல்லாம் ஒப்பந்தம் போட்டிருக்கும், இந்த மாதிரி தான் ஸ்க்ரிப்டு, இப்படித்தான் ஒரு இமேஜ் உருவாகும் என்பதெல்லாம் தெரியாத? மீண்டும் பணம் கொடுத்தால் இதே போலொரு நிகழ்ச்சிக்கு போகும் அந்த பொண்ணு. மீரான் சாஹிப்பின் ஜூலியை பற்றிய ஆதங்கம் என்பது சாமி பட திரிஷாவை அப்படியே நம்புவதை போன்றது. வினவே கூறுவது போல் நரகலில் நல்லரிசி தேடமுடியுமா?

    மீரான் சாஹிபு அப்படியே அப்பாவியாக அந்த கருத்தை வெளியிட்டிருந்தால் என் தொனிக்கு மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் அவரின் கருத்து வழமையான பேஸ்புக் வகையறா நிகழ்ச்சியை பற்றி விமர்சனம் எனும் போர்வையில் விளம்பரம் செய்வது போல் இருகிறது.

    • //”மீரான் சாஹிபு அப்படியே அப்பாவியாக அந்த கருத்தை வெளியிட்டிருந்தால்…//”
      என்னங்க இது.அவர் ஏன் அப்பாவியாக இருக்க வேண்டும்?ஒரு நிகழ்ச்சியின் பிறப்பு ,வளர்ச்சி என்கிற வரலாறு அது மனோதத்துவ முறையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்துதல் தேவையானது தான்.அதனை இந்த கட்டுரை பேசுகிறது, ருத்ரன் போன்றவர்கள் இந்த பொருளில் எழுத வரும் போது இன்னும் நுட்பமாக இதனை நாம் உள்வாங்கிகொள்ள முடியும் தான்.

      அதே சமயம் இந்த விவாதமெல்லாம் தொடர்ந்து கொண்டிருக்கிற அதே வேளையில் இந்த நிகழ்ச்சியில் சாதாரண குடும்ப பின்னணி கொண்ட ஒரு பெண் பிழைப்பு வாதத்தில் முழுகி, குழுமனப்பான்மையுடன் செயல்பட்ட(இது ஒரு குற்றமா? பிழையா? குற்றமென்றால் எத்தகைய தண்டனைக்குரிய குற்றம்?)காரணத்தாலேயே சகஜமாக நடமாட முடியாதபடி மக்களின் உளவியல் கட்டமைக்கப்பட்டு விட்டது உண்மையானால் அது குறித்து ஆதங்கப்படுவது ரசனைக்குறைவானதல்ல.
      உண்மையில் அந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மனதில் தொற்றிக்கொள்ளும் அனைத்து விதமான உணர்ச்சிகளையும் அலசுவதை விட அந்த பெண்ணை துரத்தும் பொதுப்புத்தியை கேள்வி கேட்பது ஒன்றும் கீழானதோ தேவையற்றதோ இல்லை.மீரான் அந்த நிகழ்ச்சியை பற்றிய அவர் மதிப்பீட்டை வைக்கிறார்.ஆனால் அது திசை திருப்பல் அல்லது ரசனைக் குறைவாக உங்களுக்கு படுகிறது.அதே சமயம் அவரது ஆதங்கத்தை கிண்டலடிக்க உங்களால் //”சாமி பட திரிஷாவை அப்படியே நம்புவதை போன்றது”// என்று ஒரு திரைப்பட பாத்திரத்தை தான் காட்ட முடிகிறது.இது தான் ரசனைக் குறைவு என நான் கருதுகிறேன்.

    • //”வினவே கூறுவது போல் நரகலில் நல்லரிசி தேடமுடியுமா?’’// இந்த வரிகளை 30 வருடங்களுக்கு முன் புதியகலாச்சாரம் இதழ்களில் நான் படித்த போது உங்களைப்போலவே நானும் கவரப்பட்டிருக்கிறேன்.ஆனால் ஒரு விஷயத்தை அப்படி முத்திரை குத்தி ஒதுக்கிவிட முடியாது என நான் இப்போது கருதுகிறேன்.இந்த வரியை இந்த கட்டுரைக்கே கூட பொருத்திப் பார்க்க முடியும் தானே? பிக் பாஸ் சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வில்லை மக்களை மொன்னைகளாக ஆக்கி வைத்திருக்கிறது என்பது வெளிப்படையாக பட்டவர்த்தனமாக தெரியும் போது அது பற்றி ஆராய்வது வீண் வேலை என்று ஒதுக்கிவிடத்தான் வேண்டுமா?அல்லது ஒரு மலப்பரிட்சை தான் செய்கிறோம் என்று ஆய்வாக கருத வேண்டுமா?

  6. திரு சின்னா
    ஒரு சின்ன திருத்தம்..நான் என் பதிவில் ஒரு கருத்தை சேர்த்தே குறிப்பிட்டிருந்தேன்..
    அந்த பெண் முகமூடி போட்டு அலைவதும் சேனலின் செட்டப்பாகவும் இருக்கலாம் என்று..

    ஜூலியை விரட்டி விரட்டி துரத்தும் கூட்டமும் சமூக ஊடகங்களில் கழுவி கழுவி களையும் எழுத்தர்களும் பலதரப்பட்டர்வர்ளாக இருக்கிறார்கள்.வெளிநாடுகளில் மிக உயர்ந்த வேலைகளில் பெரிய படித்த தமிழர்களும் அதில் அடக்கம்.இவர்களைப் பற்றிய ஆதங்கமும் சேர்ந்ததுதான் என்னிடமிருந்து வெளிப்பட்டது.
    சரி…ஜூலி அந்த சேனலின் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தலையாட்டி சம்மதித்து வந்திருந்தால் கூட அவளுக்கு கிடைக்கும் “மரியாதை” எதில் சேர்த்தி?
    அவளுடைய இப்போதைய நிலையை முழுவதுமாக உணர்ந்துதான் அந்த பெண் வந்திருப்பாள் என்பதற்க்கும் என்ன ஆதாரம்?
    அறிவுப்புலியாய் உங்கள் ஆய்வை நீங்கள் தொடருங்கள்.. நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை…
    மடத்தனமான மக்களில் பலரை நினைத்தே நான் பதறுகிறேன்

  7. மீரான்சாஹிப் நண்பா நம்பியாரை வில்லனாக நம்பி நிஜமான வில்லன் எம்ஜியாரை முதல்வராக்கி அக மகிழ்ந்தது நம் தமிழ்ச்சமூகம்.நம்பியார் எங்கேனும் தனியே சிக்கீனால் எம்ஜியாரிடம் வாங்கியதை விட நம் மக்களிடம் அதிகமாக வாங்கியிருக்க நேர்ந்தீருக்கும்.வில்லன் நம்பியாராலோ வில்லாதி வில்லன் எம்ஜியாராலோ என்ன நன்மை கிடைத்து விட்டது தமிழ்நாட்டு மக்களுக்கு?இந்த மனோபாவத்தின் தொடர்ச்சிதான் இப்போது மக்களால் ஜீலி நம்பியாராகவும் ஓவியா எம்ஜீயாராகவும் சித்தரிக்கப்பட்டுவிட்டார்கள்.மேற்படி ஜீலி ஓவியாக்களால் பொருளற்ற ஒரு சின்ன மகீழ்ச்சீயில் தீளைத்ததை விட மக்களுக்கு வேறு வாய்த்துவிட்டது?நிகழ்ச்சியின் வழீ அதாவது தொலைக்காட்சியின் பிக்பாஸில் கவிழ்ந்து அதன்மூலமாக ஒருவர் தன் கருத்தை கூருவது போல் நம் கருத்தும் அமைந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே சின்னா அவர்களின் கருத்து.ஜீலி உட்பட பதினாறு சிேனேகன்மார்களும் பிக்பாஸ்வீட்டை ஒப்புக்கொண்டுதானே உள் நுழைந்திருக்கிறார்கள்?அதுவும் ஜல்லிக்கட்டு ஜீலியே பிக்பாஸோடு மல்லுக்கட்ட ஒப்புக்கொண்டுதானே வந்தார் சென்றார்.நமக்குதேவை இதுதான் நண்பா.இது பிக்பாஸ் அல்ல பிக்பாக்கெட் பாஸ் என்று நாம் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டு மக்களுக்கு அதை எடுத்து சொல்லும் கடமை நமக்கு உண்டல்லவா?அந்த கடமையை நாம் ஆற்ற வேண்டுமாயீன் வினவின் கட்டுரை வழி நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.நானும் கட்டுரையை மீண்டும் மீண்டும் படித்து வீவாதித்து புரிந்துகொள்ளவே முயல்கின்றேன் முப்பது முறை படித்தாவது.நீங்களும் முயல்வீர்கள்தானே நண்பா.

  8. தோழா..நெப்போலியன்

    என் பதிவை முழுமையாய் படித்தீர்களா…எம்ஜியார் நம்பியார் உதாரணங்கள் மிக மலிவாய் இருக்கிறது ந்ண்பா..
    ஜூலிக்கு கண்ணீர் வடிக்கும் சீரியல் ரசிகனாக என் ஆதங்கம் இல்லை நண்பா..
    இந்த நிகழ்ச்சியும் அது மக்களை ஏற்படுத்தும் தாக்கமும் மிக கேவலமாய் இருக்கிறது நண்பா..
    பல்வேறு மாநிலங்களிலும் மொழிகளிலும் இது நடப்பதாக நடந்ததாக சொல்லப்படுகிறது
    ஆனால் தமிழ்நாடும் தமிழனும் காட்டுகிற ரசனை சகிக்கல…
    நம்பியாரையும் எம்ஜியாரையும் தமிழன் பார்த்த காலத்திலேயே இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
    என்ன அறிவியல் வளர்ந்தாலும் உலகை ஆளும் தொழில்நுட்பத்தை அறிந்தாலும் நாம் கற்கால சிந்தனையோடுதான் இருப்பேன் என்ற நம்மில் பெரும்பாலோரின் சிந்தனை இருந்தால் இது கேவலமாக இல்லையா…
    உங்களின் நுட்பமான ஆய்வுக்கு என் ஆதங்கம் பொறுத்தமற்றதாக தெரியலாம்.
    ஆனால் இது திசைதிருப்பலோ ஜூலி என்ற ஒரே ஒரு பெண்ணின் மேல் உள்ள பரிவு மட்டுமோ அல்ல

  9. ஹஹா பார்த்தீர்களா மீரான்,

    \\எம்ஜியார் நம்பியார் உதாரணங்கள் மிக மலிவாய் இருக்கிறது\\

    \\தமிழ்நாடும் தமிழனும் காட்டுகிற ரசனை சகிக்கல\\

    மீண்டும் மீண்டும் நீங்கள் நிகழ்ச்சியின் ஆழ்ந்த உளவியல் போரையும் அது உண்மையில் நம்மை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிப்பதையும் உணராமல் தவிர்த்துவிட்டு நமது ரசனை சகிக்கல மலிவு என்கிறீர். இது எப்படி இருக்கிறது தெரியுமா? மாடர்ன் ஆர்டுகளை என்ன கருமம்டா என்று குழம்பி போய் பார்க்கும் ஒருவரை ரசனை இல்லாத பயல் என்று முகம் சுளிக்கும் கனவான்களின் கூற்று போல் இருக்கிறது. (மீண்டும் அளவில்லா உதாரணங்களுக்கு நன்றி வினவு XD) அங்கேதான் இருக்கிறது ‘அவர்களின்’ வெற்றி. நீரும் இந்த நிகழ்ச்சியை இவ்வாறே ஒரு மேட்டிமை மேடையில் வைத்து பார்த்துக்கொண்டு அதில் தெரிந்தே மாட்டிய ஒரு பெண்ணை பற்றி வலையில் சிக்கிய மக்களின் ரசனை சகிக்கல என்கிறீர். நரகலை அள்ளி எறிவதை விட்டு அதை மோந்து பார்க்கும் மக்கள் மூக்குதான் சரியில்லை என்கிறீர். ராஜனும் கூறுவதை போல் இது ஒன்றும் வெறுமனே பீ கிளறி பார்க்கும் ஆய்வுக்கட்டுரை இல்லை. ராஜன் கேட்க ஆவலாக இருக்கிறேன் சொல்லுங்கள் ஒரு பொட்டளவு ‘நல்ல’ விஷயத்தை இந்த நிகழ்ச்சியை பற்றி. முத்திரை குத்தி ஒதுக்க மாட்டோம். மக்களுக்கு நரகல் என்று காட்ட வேண்டுமில்லையா? அதற்கு கிளறி ஆகணும்? அதை சொன்னால் அறிவுபுலி, மேட்டிமைதனம் என்று சார்காசம்.
    பாருங்கள் வேறு மாநிலங்களிலும் மொழிகளிலும் நடக்கின்றதாம், தமிழனின் ரசனை சகிக்கலையாம். மீரான் , தமிழனை விடுங்கள்பொதுவாக வினவு கட்டுரைகள் ரசனை பற்றி பேசுவதில்லை. ரசனை பற்றி பேச வேண்டுமானால் பிக்பாசை பற்றி எண்ணற்றோர் பதிவிடுகிறார்கள். அங்கு பேசலாம். மீரான் சகிப்பை இங்கு பேசவேண்டாம் எனவில்லை. அவரின் பார்வையும் கட்டுரையின் பார்வையும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதற்கே.

  10. மீரான்சாஹிப் நண்பா நுட்பமான ஆய்வெல்லாம் இல்லை நண்பா.நீங்கள் பதிவிடும் கருத்துக்கள் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டது?நாம் அனைவருமே எந்தவொரு விஷயத்தையும் சரியான கண்ணோட்டத்தோடு புரிந்துகொள்ள வேண்டும் அதன் வழி செயல்படவேண்டும்.அவ்வளவே நண்பா.

  11. “சாமி படத் திரிஷாவை அப்படியே நம்புவதைப் போன்றது”.

    ‘சாமி’ படம் ரொம்ப நாள் முந்தி பார்த்தது! கதை மறந்து போச்சு! கொஞ்சம் ஞாபகப் படுத்துறீங்களா?!

    சினிமா விரும்பி

  12. பீடிகை பெரிதாக உள்ளது, அடுத்த பாகம் விசயத்திற்கு வருமென நம்புகிறேன்.

  13. அதாங்க அந்த பனி போல் உடலும் கண்ணாடி மனசும் கொண்ட தயிர்சாதமும் பஸ்சுக்கு மட்டும் காசும் கொண்டு வருமே ஆத்து பொண்ணு.

Leave a Reply to சின்னா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க