privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாசிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி - உலகம் தன் தலை மீது நின்ற காலம்...

சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் !

-

பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறாமாண்டை ஒட்டி (1789 – 1989) புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை. பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றையும் கவித்துவத்தையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது. அரசியல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

– வினவு

ந்த விடியலில் நாம் வாழ்ந்திருந்தோம் என்பதே பெருமகிழ்ச்சி. பிரெஞ்சுக் கொடுங்கோல் முடியரசின் அரணாக நின்ற பாஸ்டி சிறைக்கூடம் மக்களால் தகர்த்தெறியப் பட்டதைக் கேட்டவுடன் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த் குதுகலத்தில் துள்ளினான்.

பிரெஞ்சு புரட்சி
பிரெஞ்சு புரட்சி

படைகளை அனுப்பாமலேயே ஐரோப்பாவை பிரான்ஸ் ஆக்கிரமித்து விட்டது. புரட்சியின் சிந்தனை ஐரோப்பாவென்ன உலகெங்கிலும் தீ போலப் பரவியது. பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களே அதைத் தங்கள் நாட்டின் உள் விவகாரமாகக் கருதவில்லை. புரட்சி மனித குலத்தின் தேவையெனக் கருதினார்கள்.

”உலகம் தன் தலையின் மீது நின்ற காலம் அது” என்றார் ஹெகல். மனிதனது மூளையும் (தலையும்) அதன் சிந்தனையால் வந்தடையப்பட்ட கோட்பாடுகளும் நாங்கள் தான் மனிதனின் எல்லா உறவுகளுக்கும் செயல்களுக்கும் அடிப்படை என்று அறைகூவின. மதம், விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – எதுவாக இருந்தாலும் சரி, அவை ஈவு இர்க்கமின்றி விமரிசிக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் அறிவின் சன்னதியில் தங்கள் யோக்கியதையை நிருபிக்க வேண்டும் இல்லையேல் ஒழிந்து போகவேண்டும். ஆம்! உலகம் உண்மையிலேயே தலை மேல் தான் நின்றது.

வாழ்வதற்குத் தகுதியிழந்த முடியாட்சியும், மத ஆதிக்கமும் அவற்றின் அதிகார பீடங்களிலிருந்து கேலிக் குரல்களின் நடுவே இழுத்து வீசியெறியப்பட்டன. சமுதாயம் தலைகீழாக மாற்றப்பட்டது. உலகம் உண்மையிலேயே தன் தலைமீது தான் நின்றது.

தயங்கித் தடுமாறிக் கொண்டிருந்த மனித சமுதாயத்தை பிரான்ஸ் உசுப்பிவிட்டது ”இதோ இதுதான் நிகழ்ச்சிநிரல் முன்னோக்கிச் செல்” என்று ஆணையிட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிரபுக்களையும் மன்னர்களையும் சக்ரவர்த்திகளையும் தன் முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்து தள்ளடிக் கொண்டிருந்த மனிதனை நிமிர்ந்து நில், நீ சுதந்திர மனிதன் என்ற பிரான்சின் அறைகூவல் நிமிர்த்தியது.

பொருட்களை அடமானம் வைத்து உணவை பெறுகின்றனர்.
பாரிஸை சேர்ந்தவர்கள் கடுமையான பசியானால் உணவை வாங்க பொருட்களை விற்கின்றனர்.

மாபெரும் பிரெஞ்சு ஜனநாயகப் புரட்சி, இரண்டு நூற்றாண்டுகள் கடந்தபின்னும் சுதந்திரத்தையும் விடுதலையையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் இதயத்தையும் தனது கம்பீரமான சிம்மாசனமாக்கிக் கொண்டது.

”மக்கள் இங்கே புல்லைத் தின்று உயிர் வாழ்கிறார்கள் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கும். பிச்சைக்காரர்களுக்கும் மன்னராயிருப்பவரை மாட்சிமை தாங்கிய சக்ரவர்த்தி என்று எப்படி அழைக்க முடியும்?” –

1725 இல் 15ம் லூயி மன்னனின் பிரான்சைப் பற்றி ஒரு கிறித்தவ மதகுரு கொடுத்த நற்சான்றிதழ் தான் இது. அவனது மகன் 16ம் லூயி மன்னனின் ஆட்சியைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்.

“இரு கழுதைகளை அவன் ஓட்டிச்
சென்றான்.
ஒரு கழுதையின் முதுகில் ஒட்ஸ் தானிய
மூட்டை.
இன்னொரு கழுதையின் முதுகிலோ
உப்பு வரி ரசீது கட்டுகள்.”

”Third Estate” மக்கள் மீது கடுமையான வரிச்சுமை செலுத்தப்பட்டது
நாடு தழுவிய பஞ்சத்தால் நொடித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது.

என்று விவசாயிகளின் அவலநிலையைப் பாடினான் ஒரு கவிஞன். பண்ணைகளும், குறுநில மன்னர்களும் கிறித்தவ மடாலயங்களும் நாட்டைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தன. விவசாயி ஒண்ட வந்தவனைப் போல துண்டு நிலத்தில் உயிரை விட்டுக் கொண்டிருந்தான் காடுகளும் புல்வெளிகளும் மேட்டுக்குடியினரின் பரம்பரைச் சொத்தாக இருந்தது. வன விலங்குகளோ மேட்டுக்குடி இளவல்களின் வேட்டை விளையாட்டுக்காக பாதுகாக்கப்பட்டன. ஆம் கண்ணைப் போல் போற்றி வளர்த்த தனது பயிரை குழி முயல்கள் நாசம் செய்தாலும் அவற்றைக் கொல்லும் விவசாயி குற்றவாளியானான்.

வேட்டையாடுவதற்கு குதிரை மீது பவனி வந்த மன்னர்குலக் கொழுந்துகள் விவசாயிகளின் வயல்களை நாசம் செய்தனர். வேட்டையாடிக் களித்தனர். விவசாயியின் வியர்வையையும் ரத்தத்தையும் குத்தகையாகப் பிழிந்து குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டனர். பூலோகத்தில் வாழ்வதற்கு லூயி வரி வசூலித்தான். பரலோகத்தில் இடம் போடுவதற்கு பாதிரிகள் வரிவசூல் செய்தனர். விவசாயிகள் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர். தங்கள் எதிரியைக் கொல்வதற்கோ நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தனர்.

நகரம் ரொட்டி கிடைக்காமல் செத்துக் கொண்டிருந்தது. வியாபாரிகள், வழக்கறிஞர்கள், பட்டறை முதலாளிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பட்டறைத் தொழிலாளிகள், உதிரி வேலை செய்வோர், கைவினைஞர்கள் விதிவிலக்கின்றி அனைவரின் வெறுப்பும், ஆத்திரமும் மன்னராட்சியின் மீதும் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடியினர் மீதும் ஒன்று குவிக்கப்பட்டிருந்தது.

மன்னனின் வரம்பில்லாத அதிகாரத்திற்கு எதிராகவும், மத நிறுவனத்திற்கு எதிராகவும் வால்டேர் எழுப்பிய போர்க்குரல் தனது படையணியில் ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டிக் கொண்டிருந்தது. தீத்ரோவின் நாத்திகப் பிரச்சாரமும் பொருள் முதல்வாதக் கருத்தும் அறிவுஜீவிகளையும் மதக் கொடுங்கோன்மைக்கு ஆளாகியிருந்த மக்களையும் தன்பால் வெகுவேகமாக ஈர்த்தது.

மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?"
மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?”

”வன்முறையைப் பயன்படுத்த முடியும் வரையில்தான் கொடுங்கோலன் எசமானனாக இருக்க முடியும். அவன் வெளியே துரத்தப்பட்டால் அவன் (தனக்கெதிராக) வன்முறை பயன்படுத்தப்பட்டது குறித்துப் புகார் செய்ய முடியாது…. வன்முறை மட்டுமே அவனை அதிகாரத்தில் வைத்திருந்தது. வன்முறை மட்டுமே அவனை வீழ்த்துகிறது” என்று ரூசோவின் விரல் செல்ல வேண்டிய பாதையைக் காட்டிக் கொண்டிருந்தது.

1789 – பிரெஞ்சுப் பொருளாதாரம் நிலைகுலைந்து கிடந்தது; தேசம் திவாலாகி விட்டது. உடனடியாக சிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னார்கள் மந்திரிகள்.

மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?” நாடு தழுவிய பஞ்சத்தால் நொடித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. மன்னனின் கேளிக்கைக்காகவும், மகாராணியின் பீதாம்பரத்திற்காகவும், இளவல்களின் மதுவிற்காகவும், பாதிரிகளின் விருந்துக்காகவும் மக்கள் மேலும் சில துளி ரத்தத்தைத் தியாகம் செய்யுமாறு கோரப்பட்டனர். மக்களும் ஒப்புக் கொண்டனர் தியாகம் செய்வதற்கு. தங்கள் உதிரத்தை அல்ல; மன்னராட்சியை!

மன்னர்களாலும், மத குருமார்களாலும் பன்னூறாண்டு காலமாக கறைப்படுத்தப் பட்ட தங்கள் இனிய தேசத்தை, அந்த மேட்டுக்குடிப் பன்றிகளின் ரத்தத்தைக் கொண்டே கழுவினார்கள் பிரெஞ்சு மக்கள்.

1789 முதல் 1794ஆம் ஆண்டுவரையிலான காலம் முழுவதும் துப்பாக்கி வேட்டுச் சத்தமே மக்களின் இசையாக இருந்தது.

பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி
பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி

ஆம்! புரட்சி வெடித்தது – திடீரென்று அல்ல; எதிர்பாராமல் அல்ல. வால்டேரும். தீத்ரோவும், ரூசோவும் தோற்றுவித்த அறிவொளி இயக்கம் திரியில் வைத்த தீயாகப் பிடித்துப் புகைந்து, எரிந்து பின்னர்தான் வெடித்தது. ’பாஸ்டி’ சிறை தகர்க்கப்பட்ட போதுதான் அந்த வெடிச்சத்தத்ததை உலகம் கேட்டது.

”சகோதரர்களே அணிதிரளுங்கள் சுதந்திரம் உங்களை அழைக்கிறது” என்று முழங்கினார்கள் புரட்சியாளர்கள். மன்னனின் வாளையும், மதகுருவின் சிலுவையையும் நெற்றியில் கட்டிக்கொண்டிருந்த தேசம் இப்போது சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற தங்களின் லட்சியம் பொறித்த பதாகையுடன் முன்னேறிச் சென்றது.

பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் மன்னனையும், மதத்தையும், சட்டத்தையும், அரசையும், பிரபுக்கள் சபையையும் குறித்து பெருமை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிரெஞ்சு மக்களோ தங்கள் அரசாங்கத்தை எதிர்த்தார்கள். பாதிரிகளை இகழ்ந்தார்கள். பிரபுக் குலத்தை வெறுத்தார்கள் சட்டங்களுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி, இலக்கண சுத்தமாக, துப்புரவாக நிலப்பிரபுத்துவத்தை துடைத்தெறிந்தது.

அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அனைத்துத் துறைகளிலும் அனைத்து விஷயங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளாய் விவசாயிகளின் பக்தி நிறைந்த உதடுகளால் முத்தமிடப்பட்ட சிலுவை. காலால் மிதிப்பதற்கும் தகுதியற்ற மலத்தைப் போல வெறுத்தொதுக்கப்பட்டதென்றால் மற்றவற்றைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

”மக்களை மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்வானேன்? அவர்கள் அங்கிருந்து தங்கள் சாம்ராச்சியத்தைப் பார்ப்பார்கள். பிறகு அவர்களைக் கீழே இறக்கி அவர்களுக்கு உரிய இடத்தில் உட்கார வைக்க வேண்டும் உட்காருவார்களா?” என்று மன்னராட்சிக்கு வக்காலத்து வாங்கிய அறிஞன் ஒருவன் எச்சரித்தான்.

ஆனால், அது காலங்கடந்த எச்சரிக்கையாகிப் போனது.

பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர்.
பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர்.

18ம் நூற்றாண்டின் அறிஞர்களால் அறிவொளியூட்டப்பட்ட மக்கள்திரள் சிகரத்தின் உச்சியிலிருந்து தங்கள் சாம்ராச்சியத்தை பார்த்ததுடன் நிற்கவில்லை. தங்களைக் கீழே இறக்கிவிடுவதற்குள் அவர்கள் சிகரத்தின் உச்சியில் கோலோச்சிக் கொண்டிருந்த பதினாறாம் லூயியை – மன்னராட்சியை – கீழே தள்ளினர். சிவப்பு. வெள்ளை, நீல நிறத்தில் தங்கள் கொடியை அங்கே பறக்கவிட்டனர். எல்லா மனிதர்களும் சம உரிமையுடன் தான் பிறக்கிறார்கள் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கருத்துக்களைப் பேசவும், எழுதவும், அச்சிடவும் – அவை கேடாகப் பயன்படுத்தப் படாதவரை – உரிமை உண்டு என்று அறிவித்தனர்.

அடக்கி வைக்கப்பட்டிருந்த கருத்துச் சுதந்திரம் பீறிட்டுக் கிளம்பியது. முடியாட்சியை எதிர்த்த போராட்டத்தில் உழைப்பாளி மக்களுடன் தோளோடு தோள் நின்று போரிட்டு மக்களுக்காகவே தன் உயிரையும் கொடுத்தான் மாரட் என்ற இளம் பத்திரிகை யாளன். ”நான் ஒரு குடியரசுவாதி, மன்னர்களை எதிர்த்து எழுதுபவன். நான் ஒரு குடியரசுவாதி என் தாயின் கருப்பையிலிருக்கும்போதே நான் ஒரு குடியரசுவாதி” என்று முழங்கினான் லாவிகோம்டே என்ற பத்திரிக்கையாளன். மன்னன் அதிகாரத்திலிருந்து முற்றிலும் தூக்கியெறியப்படாத போதே தன் உயிரைத் தூசாக மதித்து ”மன்னர்களின் கிரிமினல் குற்றங்கள் – க்ளோவி முதல் பதினாறாம் லூயி வரை” என்று கட்டுரை எழுதினான். ”பத்திரிகையாளனை தண்டிப்பதற்கு எங்கே அரசுக்கு அதிகாரம் இருக்கிறதோ, அங்கே கொடும் குற்றமிழைத்த அதிகாரிகளைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை எழுத முடியாது” என்று முழங்கினான் ரோபஸ்பியே என்ற புரட்சியாளன். ஆனால் எதிரிகள் விஷயத்தில் புரட்சியாளர்கள் எச்சரிக்கையாகவே இருந்தனர். மன்னராட்சிக்கு ஆதரவான துதிபாடிகள் வாய் திறந்தால் தூக்கிலேற்றப்படுவர் என்று எச்சரித்தனர்.

அச்சத்திலும், அடிமைத்தனத்திலும் ஆழ்த்தப்பட்டிருந்த மக்களை நோக்கி அறைகூவினான் ஒரு எழுத்தாளன். ”மாபெரும் மனிதர்கள் எனப்படுவோர் அப்படித் தோன்றக் காரணம் என்ன தெரியுமா? நாம் மண்டியிட்டிருப்பதுதான். எழுந்து நில்லுங்கள்” என்று ஆணையிட்டான். விவசாயிகள் எழுந்து நின்றனர்.

இளவரசர்கள், பிரபுக்கள். மத குருமார்களின் மாளிகைகளில் ஆயுதம் தரித்த விவசாயிகள் புகுந்தனர். தங்களுடைய பாஸ்டி சிறைகளை அவர்கள் தகர்த்தெறிந்தனர். ”பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர். காடுகளையும். குளங்களையும் ஆறுகளையும் பண்ணைகளின் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் அனைத்து சட்டங்களையும் கொளுத்துங்கள். மனிதனையும் முயலையும் ஒன்றாகக் கருதும் அறிவுக்குப் புறம்பான மனித சமுதாயத்துக்கே இழுக்கான அனைத்து சட்டங்களையும் கொளுத்துங்கள்” என்ற குரல் எழுந்தது. ”பிரபுக்குலத்தோரின் பட்டாக்கள் அனைத்தும் மூன்றூ மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவை நகர கவுன்சில் மற்றும் மக்களின் முன்னிலையில் கொளுத்தப்பட வேண்டும்” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர்.
அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களுக்கு நட்டஈடு கிடையாது என்பது மட்டுமல்ல. மீண்டும் இவற்றை விலைகொடுத்து வாங்கும் உரிமையும் பிரபுக்களுக்கும் மதபீடங்களுக்கும் அடையாது என்று அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் புரட்சிக்கு இலக்கணம் படைக்கப்பட்டது.

சொத்துக்களை இழந்த கத்தோலிக்க மதபிடம் பொறுமிக் கொண்டிருந்தது. போப் புரட்சியைக் கண்டித்து அறிக்கை விட்டார். ஆனால் கண்டனக் குரல் எழுப்புவதற்காகப் பாதிரிகள் வாய் திறப்பதற்குள் அடுத்த அடி விழுந்தது.

பிராட்டஸ்டென்டுகள், யூதர்கள் மற்றும் கறுப்பின மக்கள் மீது கத்தோலிக்க மடாலயம் செலுத்திவந்த ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது. கிறித்தவர்களிடம் ஊட்டப்பட்டிருந்த யூத எதிர்ப்பு வெறியை எதிர்த்து கிரெகோ என்பவர் பேசினார்: “உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் விட்டுச்செல்லும் சொத்தில் யூத எதிர்ப்பு வெறியும் இடம்பெறப் போகிறதா? யூதர்களின் ஊழல்களையும், குற்றங்களையும் பற்றி பேசுபவர்களே கேளுங்கள்! அவர்களது ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் தோற்றுவாய் நீங்கள்தான் – கிறித்தவர்களாகிய நீங்கள் தான் உங்கள் பாவத்துக்கும், உங்கள் முப்பாட்டன்களின் பாவங்களுக்கும் கழுவாய் தேடுங்கள்! அவர்களை நல்லொழுக்க சீலர்களாக மாற்றுவதற்கும் நீங்களே முயல்வதன் மூலம் அதைச் செய்யுங்கள்”

உள்நாட்டின் சமூக நிலை பற்றி மட்டும் பேசுவதுடன் புரட்சிக்காரர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. மனித சமூகத்தின் சுதந்திரத்துக்கு எதிராக எவ்வித ஆக்கிரமிப்புப் போரிலும் ஈடுபடமாட்டோம் என்று அறிவித்தார்கள்.

ரொகெட் டி லிஸ்லி
ரொகெட் டி லிஸ்லி

”குடியரசின் கைக்கூலிகளிடம் இருந்து புரட்சியைப் பாதுகாக்க இளைஞர்கள் போர் முனைக்குச் செல்லுங்கள். மணமான ஆண்கள் ஆயுதங்களைத் தயார் செய்யுங்கள். சிப்பாய்களுக்கு உணவு கொண்டு செல்லுங்கள். பெண்கள் பாசறைகளை அமைக்கட்டும் மருத்துவமனைகளில் சேவை செய்யட்டும். சிறுவர்கள் காயங்களுக்குக் கட்டுப் போடும் துணிகளை சேகரிக்கட்டும். முதியவர்கள் வீதிமுனைகளில் நின்று சிப்பாய்களை உற்சாகப்படுத்துங்கள் சக்ரவர்த்திகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள். நாட்டின் ஒற்றுமைக்காகப் பிரச்சாரம் செய்யுங்கள்” என்று அறைகூவல் விட்டது புரட்சி அரசு.

விஞ்ஞானம், கலை, கல்வி என்று பண்பாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதுமலர்கள் பூத்தன. புரட்சிப் படையணியின் கீதமாக இறவாப் புகழ்பெற்ற ’மார்செயில்ஸ்’ கீதத்தை உருவாக்கியதன் மூலம் கோஸ்ஸெக் புரட்சியின் இசையமைப்பாளன் ஆனான். சுதந்திரத்திற்கு சமத்துவத்திற்கு, மனித சமூகத்திற்கு தாய் நாட்டிற்கு இயற்கைக்கு என்று அவனது இதயத்துடிப்பையே இசையாக மாற்றி அர்ப்பணித்தான். விஞ்ஞானமோ முன்னெப்போதும் கண்டிராத அளவு முன்னோக்கிப் பாய்ந்து சென்றது. பால்சாக், ஹியூகோ போன்ற மாபெரும் எழுத்தாளர்களை பிரான்ஸ் கருத்தரித்தது.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூட்டும் உரிமை, உயிர்வாழும் உரிமை, ஆயுதம் ஏந்தும் உரிமை அனைத்தையும் வென்றெடுத்த பிரான்ஸ் அன்றைய மனித நாகரிகத்தின் முன்வரிசையில் எக்காளமிட்டு சென்று கொண்டிருந்தது. நூற்றாண்டுகளை நொடிகளில் கடந்து சென்று கொண்டிருந்தது புரட்சி. அகன்ற விழிகளுடனும், நின்று போன இதயத் துடிப்புடனும் பிரான்சைப் பார்த்துக் கொண்டிருந்தது உலகம். ஆம்! பிரான்சில் தோன்றிய புரட்சிப் பூகம்பம் மனித சமூகத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கி ”வா… என்பின்னே” என்று ஆணையிட்டது.

பிரெஞ்சுப் புரட்சி மன்னராட்சியை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டியது என்பதும் அது முதலாளித்துவ ஜனநாயகம் மட்டுமே என்ற விஷயமும் நாம் அறிந்தது தான். ஆனால் தொழில்துறை முதலாளிகளாலேயே தலைமை தாங்கப்பட்டு நடத்தப்பட்ட புரட்சி என்றோ, புரட்சியின் தத்துவ ஆசிரியர்களான ருஸோ, தித்ரோ பாபெஃப் போன்றோர் முதலாளிவர்க்கத்தின் உணர்வு பூர்வமான சேவகர்கள் என்றோ புரிந்து கொள்வது தவறு.

1794 ல் ஆஸ்திரிய, டச்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஒன்று சேர்ந்து பிரெஞ்ச் புரட்சிகர படையினை தோற்கடித்தது.
1794 ல் ஆஸ்திரிய, டச்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஒன்று சேர்ந்து பிரெஞ்ச் புரட்சிகர படையினை தோற்கடித்தது.

மன்னராட்சியும், மத நிறுவனங்களும் காலத்தின் தேவையை நிறைவு செய்ய வில்லை; அவை அறிவுக்கு ஒவ்வாதவை; இனி இவையெல்லாம் ஒழிக்கப்பட்டு அவற்றினிடத்தில் நிரந்தரமான உண்மையும். இயற்கையின் அடிப்படையிலான சமத்துவமும் இழக்கவோ துறக்கவோ இயலாத மனித உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அவர்களது லட்சியமாக இருந்தது. அவர்கள் முதலாளி வர்க்கத்திற்காகப் புரட்சி செய்யவில்லை. மனிதகுலம் முழுமைக்குமாகச் செய்வதாகத்தான் அறிவித்தார்கள் அவ்வாறுதான் நம்பினார்கள். அவர்கள் மனிதகுலத்தின் விடுதலை என்று பேசினார்களே ஒழிய பாட்டாளிவர்க்கத்தின் சர்வாதிகாரம் பற்றிப் பேசவில்லை. காரணம் அவர்களால் பேச இயலாது வரலாறு அவர்களது சிந்தனைக்கு விதித்திருந்த வரம்பு அது. ஸ்பார்ட்டகஸ் சோசலிசத்திற்காகப் போராடியிருக்க முடியாது!

தீத்ரோவிடம் இயங்கியலின் துவக்க வடிவம் தென்பட்டதையும், பாபெஃப் இன் கற்பனா சோசலிசத்தையும், ரூசோ புரட்சியில் வன்முறையின் பங்கு குறித்துக் குறிப்பிட்டதையும் எங்கெல்ஸ் நினைவு கூறுகிறார். இவர்கள் மட்டுமல்ல பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களான போராளிகள் புரட்சியின் ஊடாக எழுப்பிய முழக்கங்கள் மனிதகுல விடுதலையைக் கோரும் அவர்களது தணிக்கவொண்ணாத தாகத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன. புரட்சியின் உக்கிரமானதொரு கட்டத்தில் அவர்கள் அறிவித்தார்கள். ”எல்லா அரசுகளுக்கும் நாங்கள் எதிரிகள், எல்லா மக்களுக்கும் நாங்கள் நண்பர்கள்” என்று. “முடியாட்சியின் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுங்கள் நாங்கள் உதவுகிறோம்” என்று பகிரங்கமாகப் பிற நாட்டு மக்களுக்குப் பிரகடனம் செய்தார்கள். 1793 இல் முடியரசுவாதிகளின் கலகத்தை ஈவிரக்கமின்றி ஒடுக்கினார்கள். அவர்களுக்கு ஜனநாயகம் கிடையாது என்பதை பகிரங்கமாக அறிவித்தார்கள். 1794க்குப் பின் எதிர்ப்புரட்சி சக்திகளின் கை மேலோங்கிய போது உவகையுடன் புரட்சியின் நலனுக்காக – மனிதகுலத்தின் நலனுக்காக தம் உயிரை ஈந்தார்கள்.

ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் (பாரிஸ் கம்யூனின் தொழிலாளி வாக்கப் போராளிகள்) தோன்ற வேண்டியிருந்தது.
ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் தோன்ற வேண்டியிருந்தது.

அறிவின் ஆட்சி குறித்த தனது கேட்பாடு மக்களுக்கெதிரான பயங்கர ஆட்சியாக மாறும் என்று ரூசோ கற்பனையும் செய்திருக்க முடியாது. ஆனால் நடந்தது அதுதான். தனது ஆற்றலில் நம்பிக்கை இழந்த முதலாளிவர்க்கம் நெப்போலியனின் எத்தேச்சாதிகாரத்திடம் சரணடைந்தது. சுதந்திரம், சிறு விவசாயிகளும் சிறு முதலாளிகளும் தங்கள் சொத்தை விற்பதற்கான சுதந்திரமாக மாறியது. எங்கெல்லின் சொற்களில் சொல்வதானால் வாளுக்குப் பதிலாகத் தங்கம் வந்துவிட்டது, முதலிரவு உரிமை நிலப்பிரபுக்களிடமிருந்து முதலாளித்துவப்பட்டறை அதிபர்களுக்கு மாற்றப்பட்டது.”

ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை  உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் (பாரிஸ் கம்யூனின் தொழிலாளி வாக்கப் போராளிகள்) தோன்ற வேண்டியிருந்தது. 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சைத் தனது அச்சாகக் கொண்டுதான் உலகம் சுழன்றது என்பதை யாரால் மறுக்க முடியும்?

எனில் 20ம் நூற்றாண்டு? சமீபத்தில் தமிழகத்திற்குச் சுற்றுப்பயணம் செய்யவந்த ஒரு பிரெஞ்சுப் பேராசியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பெருமைமிக்க புரட்சிகரப் பாரம்பரியத்தைப் பெற்ற பிரான்ஸில் ஒரு பாசிஸ்டு கட்சி சமீபத்திய தேர்தலில் ஒரு பிராந்தியத்தில் 14 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்று கவலையுடன் குறிப்பிட்டார். சிறிதுநேர சிந்தனைக்குப்பின் இல்லை. நாங்கள் ஜனநாயகப் பாரம்பரியமிக்கவர்கள் ஒருபோதும் அங்கே பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வரஇயலாது. அனுமதிக்கவும் மாட்டோம் என்று பதற்றத்துடன் கூறினார். ஆம் ரூசோவின் எழுத்துக்களும் ஜாகோயின் புரட்சிக்காரர்களின் முழக்கங்களும் காற்றில் கரைந்துவிடக் கூடியவையா என்ன?

அன்று புரட்சியின் போது ஒரு தத்துவார்த்த பாத்திரம் ஆற்றிய ரூசோ, இன்றைக்கு மற்ற நாடுகளின் சோசலிசப் புரட்சியில் ஒரு கிளர்ச்சிப் பாத்திரம் ஆற்றுகிறார் என்றூ எங்கெல்ஸ் குறிப்பிட்டார். பிரான்சின் புரட்சியாளர்கள் இந்தியப் புரட்சிக்கும் உத்வேகமூட்டுவார்கள். மார்செயில்ஸ் கீதம் இங்கேயும் ஒலிக்கும்.

– சூரியன், புதிய கலாச்சாரம் 1989

 

புரட்சியின் வரலாறு:

பிரஞ்சுப் புரட்சியின் கோரிக்கைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நிறைவேறி விட வில்லை முடியாட்சியும் சட்டெனத் துக்கியெறியப் பட்டு விடவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள், இழுபறி நிலைமைகள், துரோகம் ஆகியவற்றைக் கடந்துதான் புரட்சி வெற்றி பெற்றது. அந்நிகழ்ச்சிகளின் தொகுப்பைக் கீழே தருகிறோம்.

பாஸ்டில் தகர்ந்தது!

பாஸ்டில் சிறை தகர்ப்பு
பாஸ்டில் சிறை தகர்ப்பு

1789 மே 5ம் தேதி பிரான்சின் தேசிய அசெம்ளியைக் கட்டுகிறான் மன்னன் தேசிய அசம்பிளியில் மூன்று பிரிவினர் இருந்தனர். பிரபுக்கள், மத குருமார்கள், மக்கள். இதில் அதிக வரி செலுத்தியவர்கள் மக்கள்தான். ஆனால் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு ஒட்டு மட்டுமே இருந்ததால் மக்கள் தரப்பிலிருந்து சொல்லப்படும் கருத்து எப்போதுமே எடுபடுவதில்லை. எனவே ’அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர். சில பிரபுக்களும் மத குருமார்களும் கூட அவர்களுடன் சேர்ந்தனர்.

ஜூலை 14 பாரிஸ் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு சென்று பாஸ்டி (Bastile) சிறையைத் தகர்க்கின்றனர். செய்தி கேள்விப்பட்ட மன்னன் ”எதற்காக கலாட்டா செய்கிறார்கள்?” என்று அமைச்சர்களைக் கேட்டானாம். ”கலாட்ட அல்ல மன்னர் பெருமானே இது புரட்சி” என்று பதில் சொன்னாராம் அமைச்சர். சிறை தகர்ப்பைத் தொடர்ந்து நடுத்தரவாக்கத்தினர் அடங்கிய புரட்சிக் கமிட்டி பாரிஸ் நகரத்தின் நிர்வாகத்தைக் கையிலெடுத்தது. இதைப் பின்பற்றி நாடு முழுவதும் புரட்சி அரசாங்கங்கள் தோன்றின விவசாயிகள் பிரபுக்களின் மாளிகைகளைக் சூறையாடினர் கடன் பத்திரங்களுக்கும். பிரபுக்களின் நிலப் பட்டாக்களுக்கும் தீ வைத்தனர்.

பிரபுக்கள் ஒட்டம்! குடியரசு மலர்கிறது!

பெண்களின் அக்டோபர் அணிவகுப்பு
பெண்களின் அக்டோபர் அணிவகுப்பு

ஆகஸ்ட் 4: விவசாயிகளின் எழுச்சியில் பீதியுற்ற பல பிரபுக்கள் நாட்டைவிட்டே ஓடுகிறார்கள் அசெம்பிளி (மக்கள்) கூடுகிறது. நிலைமையைப் புரிந்துகொண்ட பிரபுக்களில் சிலர் தாங்களே முன்வந்து தங்கள் பரம்பரை சலுகைகளை தியாகம் செய்வதாக அறிவிக்கிறார்கள். பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. டென்னிஸ் அரங்கத்தில் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கத் தொடங்குகி அசெம்பிளி.

அக்டோபர் 5: கடும் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஆத்திரமுற்ற மக்கள் கூட்டம் (பெரும்பாலும் பெண்கள்) மன்னனின் வெர்சேய் அரண்மனையை முற்றுகையிடுகிறது. அரசனையும், அரசியையும் பிணையக் கைதிகளாகப் பிடித்து பாரிசுக்குக் கொண்டு வருகிறது.

கிறித்தவ மடங்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப் படுகின்றன. மன்னன் நாட்டைவிட்டுத் தப்பியோட முயன்று எல்லையில் பிடிபடுகிறான். இருந்தும் அவனை மன்னனாக அங்கீகரிக்கிறது அசெம்பிளி.

1791 அக் 1: முதல் குடியரசு அறிவிக்கப்படுகிறது. மனிதனின் அடிப்படை உரிமைகள் குறித்த பிரகடனம் வெளியிடப்படுகிறது. மன்னனை வைத்துக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு தேசிய சபைக்குத் தரப்படுகிறது. மன்னனை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கோஷ்டி உருவாகின்றது. பெரும் மக்கள் கூட்டம் மன்னனின் அரண்மனையில் புகுந்து அவனது காவலர்களைக் கொல்கிறது. மன்னன் சிறையிலிடப்படுகிறான். எல்லையில் போர் தொடங்குகிறது.

மன்னனுக்கு மரணதண்டனை!

பதினாறாம் லூயி கில்லட்டில் ஏற்றப்படுகிறார்
பதினாறாம் லூயி கில்லட்டில் ஏற்றப்படுகிறார்

1792 செப் 21: பெயரளவில் மன்னனை வைத்துக் கொள்வதும் இல்லையென அறிவிக்கப்படுகிறது. பாதிரிகள் அனைவரும் குடியரசின் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. போப் புரட்சிக்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிரான்சில் இருந்த வாட்டிகனின் (போப்பின்) சொத்துக்கள் பறிகுதல் செய்யப்படுகின்றன.

இதற்கிடையே குடியரசின் அமைச்சரவை கவிழ்கிறது. புரட்சிக் கமிட்டிகள் அதிகாரத்தை மேற்கொள்கின்றன. ஓடிப்போன பிரபுக்கள் அண்டை நாடுகளின் உதவியுடன் புரட்சியை ஒழிக்க முயல்கின்றனர். லூயி மன்னன் விசாரனைக்குட் படுத்தப்படுகிறான். அந்நியருடன் கூட்டு சேர்ந்து பிரஞ்சு மக்களுக்கு எதிராக சதி செய்ததற்காக அவனது தலை (கில்லட்டினில்) துண்டிக்கப்படுகிறது. அவனது மனைவியான அரசி மேரி அண்டாய்னேட்டுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு தலை துண்டிக்கப்படுகிறது. குடியரசுக்கு எதிராகவும், மன்னனுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட ஆயிரக்கணக்கான கைக்கூலிகள் கில்லெட்டினுக்குப் பலியாகின்றனர்.

ஜாகோபின் கழகம்
1789இல் துவக்கப்பட்ட புரட்சிக்குழு. இக்கழகத்தைச் சேர்தவர்கள் தீவிர ஜனநாயகவாதிகள். 1791இல் மன்னன் தப்பியோட முயன்றதிலிருந்து இவர்களின் அரசியல் செல்வாக்கு பெறத்தொடங்கியது. 1792இல் அமைச்சரவை கவிழ்ந்தவுடன் இவர்கள் தான் உறுதியாக நின்று முடியரசுவாதிகளின் கலகத்தையும், அயல் நாட்டு ஆக்கிரமிப்பையும் ஒருங்கே முறியடித்தார்கள். பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களான ரொபாஸ்பியே, மாரட், டாண்டன் ஆகியோர் இக்கழகத்தைச் சேர்ந்தவர்களே!

 

பிரஞ்சு புரட்சியின் முன்னோடிகள்:

வால்டேர் (1694-1778): பிரெஞ்சு எழுத்தாளர் நாடகாசிரியர். முடியாட்சியை

எதிர்த்து எழுதியதற்காகச் சிறைசென்றவர்; நாடு கடத்தப்பட்டவர். மதம் நிறுவனமாக இருப்பதையும், கத்தோலிக்க மதக் கொடுங்கோன்மையையும் சாகும் வரை எதிர்த்தார். எனவே இவரது உடலைப் புதைக்கக்கூட இடுகாட்டில் இடம்தர முடியாதென்று கத்தோலிக்க மடாலயம் மறுத்துவிட்டது.

ரூசோ (1712-1778): பிரெஞ்சு தத்துவவியலாளர். அறிவொளி இயக்கவாதி. ”ஆரம்பத்தில் சமமாக இருந்த மக்கள் நாகரீகம் வளர்ந்தபின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆளாயினர். இந்த ஏற்றத்தாழ்வு விவேகமான அரசு ஒன்றின் மூலம் நீக்கப்பட வேண்டும்” என்பது இவரது தத்துவம்.

தீத்ரோ (1713 – 84): பிரெஞ்சு பொருள்முதல்வாத தத்துவவியலாளர், எழுத்தாளர்.

டான்டன் (Danton): 1787இல் இவர் மன்னரது ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினர். 1790 இல் மாரட் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜாகோயின் கழகத்தில் இணைந்தார். புரட்சியின் சிறந்த ராஜதந்திரி எனப் போற்றப்படுபவர்.

ரோபஸ்பியே (Robespierre): தனது 31 வயதிலேயே அசெம்பிளி உறுப்பினரான இவர் ரூஸோ’வின் தத்துவத்தைப் பின்பற்றுபவர். ஜாகோபின் கழக முன்னோடி.

மாரட் (Marat): மனிதனும் அடிமைச் சங்கிலியும் எனும் நூலை எழுதியவர். பாரிஸ் புரட்சிக் கமிட்டி உறுப்பினர். மன்னனின் தலையைச் சிவவேண்டும் என முதல் குரல் கொடுத்தவர். முடியாட்சியின் கைக்கூலிப் பெண் ஒருத்தியால் குளியலறையில் கொல்லப்பட்டார். மக்களுக்காக மடிந்த தியாகி என்பதால் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவர் பெயரைச் சூட்டினர். ஒவியம், நாடகம், கதை என்று பல வடிவங்களில் மாரட்டின் புகழ் பிரான்சில் நிலை பெற்றுவிட்டது.

__________________________________

இந்த வரலாற்றுக் கட்டுரையை விரும்புகிறீர்களா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. இளைஞன்,திருமணமானவன்,முதியவர்,பெண்கள்,சிறுவர்கள் எனப் பிரெஞ்சுப் புரட்சியில் பணிகள் வரயறுக்கப் பட்டுள்ளது கண்களில் நீர் வரவளைத்தது.நெறிமுறைகளுடன் உழைப்பவர் அனைவரும் சமம் என உணர்த்தும் விவேகமான அரசு தோன்ற, என் பணி செய்ய புரட்சியை எதிர் நோக்கும் யான்….

Leave a Reply to babubagath பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க