privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதமிழ்நாடுமோடியின் குடியுரிமை சட்டத்துக்கு இந்து தமிழ் திசையின் மானங்கெட்ட ஜிஞ்சக்கு ஜிஞ்சா !

மோடியின் குடியுரிமை சட்டத்துக்கு இந்து தமிழ் திசையின் மானங்கெட்ட ஜிஞ்சக்கு ஜிஞ்சா !

இந்து குழுமத்தின் பத்திரிகைகளில் ஊடக அறம் என்பது எவ்வளவு மட்டமான பொருளாக இருக்கிறது என்பதற்கு இந்த பகிரங்க பொய்ச்செய்தி ஒரு சான்று!

-

குடியுரிமை சட்டத்துக்கு அமெரிக்கா, சீனா ஆதரவு என்றொரு தலைப்பில் 20.12.2019 தேதியன்று “இந்து தமிழ் திசை” நாளிதழ்,  ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இதழியல் அறம் என்றால் ‘என்ன’ என்பதை பத்திரிகையாளர்கள் கற்றுக் கொள்வதற்கு தமிழ் இந்துவின் இந்த ஒரு செய்தி ஒரு மைல் கல்!

தலைப்பை பார்த்த உடனே உங்களுக்கு என்ன தோன்றும்? இந்தியாவில் இச்சட்டத்துக்கு எதிராக மாணவர்களும் பல்வேறு அமைப்பினரும் நாடெங்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உலகநாடுகள் அமித்ஷாவின் ஆணவச் சட்டத்திற்கு ஆதரவு தந்திருக்கிறார்களே என்று ஆச்சரியப்படுவீர்கள்!

தலைப்பில் தெளிவாக ஆதரவு என்று போட்டிருக்கும் தமிழ் இந்துவின் செய்தி என்ன என்பதை உற்று நோக்கும் போது உங்கள் ஆச்சரியத்திற்கு செருப்பால் அடி கிடைத்தது போல இருக்கும்.

முதலில் அமெரிக்க ஆதரவை தமிழ் இந்துவின் வரிகளிலேயே பார்ப்போம்!

“இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயக நாடு. மத சுதந்திரம், மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அங்கு பல அமைப்புகள் உள்ளன, அந்த வகையில் அங்கு புதிதாக இயற்றப்பட்ட சட்டம் குறித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து அங்குள்ள அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. எனவே, இந்த நடைமுறைகளை நாங்கள் மதிக்கிறோம்.”

மேற்கண்ட வரிகளில் அமெரிக்க அதிகாரியின் சட்டத்துக்கான ஆதரவை எந்த சந்து பொந்துகளில் தேடினாலும் கிடைக்கவே கிடைக்காது. இச்சட்டத்திற்கு இந்தியா முழுவதும் நடக்கும் எதிர்ப்பு போராட்டங்கள், உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ய இருப்பதை நாங்கள் மதிக்கின்றோம் என்றால் என்னய்யா பொருள்? இந்திய மக்கள் இச்சட்டத்தை எதிர்ப்பதை நாங்கள் மதிக்கிறோம் என்றல்லவா பொருள்! அதை அப்படியே மடைமாற்றி அமெரிக்கா ஆதரவு என்று போடுவதற்கு என்ன ஒரு குண்டத்தனம் இருக்க வேண்டும்? பொய்ச்செய்திகள் வாட்ஸ் அப்பில் மட்டும்தான் பரப்பப்படுகிறது என்பது எவ்வளவு பெரிய பொய்!

அடுத்து அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு போவோம்!

“குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சீன துணைத் தூதரக அதிகாரி ஜா லியூ செய்தியாளர்களிடம் கூறும் போது, “அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இது உங்கள் நாடு. உங்கள் சொந்தப் பிரச்சினைக்கு நீங்கள்தான் தீர்வு காண வேண்டும்” என்றார்”.

இதில் சீனத் தூதர் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். இதையும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான நிலை என்று தலைப்பில் போடுவதற்கு எவ்வளவு முரட்டு திமிர் வேண்டும்! குடியுரிமை சட்டம் பிரச்சினை என்று இந்திய மக்கள் கருதினால், அதற்கு அவர்கள்தான் போராட வேண்டும். இச்சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இரண்டு கருத்துக்களை சொல்லியிருக்கிறார் தூதர். முதல் கருத்தின் படி சட்டத்தை எதிர்த்து இந்திய மக்களின் போராட்டத்தை சீனா ‘ஆதரிப்பதாக’வும் செய்தி போடலாம். அதையே சட்டத்தை ஆதரிப்பதாக போடுவது என்றால் இந்து தமிழ் திசை அலுவலகம் பாஜக-வின் கமலாலயத்தில் உள்ள கழிப்பறைக்கு அருகில் இருப்பதாக புரிந்து கொள்ளலாம்.

படிக்க :
குடியுரிமை சட்டம் : 144 தடையை மீறி நாடு முழுவதும் போராட்டம் !
♦ சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா ! புதிய ஜனநாயகம் டிசம்பர் இதழ் !

சீனா போல வங்க தேசமும் குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பதாக சொல்கிறது இந்து தமிழ் திசை. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் சர்வதேச விவகாரத் துறை ஆலோசகர் கவ்ஹர் ரிஸ்வி கூறும் போது, குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை திரும்ப அழைத்துக் கொள்வதற்கு தயாராக உள்ளோம். ஆனால், அதை இந்தியா ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்த செய்தியில் வங்க தேசம் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதோடு இந்தியாவிற்கு ஆப்பு வைத்திருக்கிறது என்பதே முக்கியமானது. இந்தியாவில் இருக்கும் ‘சட்டவிரோத’ வங்கதேச மக்கள் உண்மையிலேயே வங்கதேச மக்கள்தான் என்றால் ஆதாரத்தை இந்தியா தரவேண்டும் என்பதன் பொருள் என்ன? அவர்களது வங்கதேச ரேசன் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை இந்தியா தரவேண்டும் என்றாகிறது. இது எந்தக் காலத்திலும் நடைபெற முடியாத ஒன்று. இப்படியாக வங்க தேசம் வைத்திருக்கும் ஆப்பை, ஆப்பமாக மாற்றி சட்டத்திற்கு ஆதரவு என்று ஒரு தரகனைப் போல கூசாமல் புளுகுகிறது இந்து தமிழ் திசை!

‘தி இந்து’ குழுமத்தின் பத்திரிகைகளில் ஊடக அறம் என்பது எவ்வளவு மட்டமான பொருளாக இருக்கிறது என்பதற்கு இந்த பகிரங்க பொய்ச்செய்தி ஒரு சான்று! நேரடியாக மோடியின் கூஜா என்று அறிவித்து விட்டால் நாங்களும் வேலை மெனக்கெட்டு இந்த சில்லறை ஜால்ராக்களை எல்லாம் எதற்கு எழுதிக் கிழிக்க வேண்டும்?


மதன்