03.06.2025
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த தோழர்களே!
ஜூன் 2, 2025 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில தலைமைக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆப்ரேஷன் ககர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் பசவராஜுக்கு வீரவணக்கத்துடன் நிகழ்வு தொடங்கியது.
“மாபெரும் ஆயுதம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள, மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையை சென்னையில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சியில் ம.அ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் வெளியிட்டார். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அதனைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பல ஜனநாயக சக்திகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
மேலும், கோவை, மதுரை, தூத்துக்குடி, கடலூர் போன்ற பல மாவட்டங்களில் இந்த கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சிகளை எழுச்சிகரமாகவும் உற்சாகமாகவும் தோழர்கள் நடத்தி வருகின்றனர். மேற்கண்ட வேலைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன.
அறிக்கை அறிமுக நிகழ்வுகளில் கொள்கை அறிக்கை மீதான தங்களது கருத்துகளைத் தெரிவித்த ஜனநாயக சக்திகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொள்கை அறிக்கை விளக்கக் கூட்டங்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேற்கொள்வது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், கடந்த ஒரு மாதத்தில் அரசியல் ரீதியாக நடந்த முக்கியமான நிகழ்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் பசவராஜ் உள்ளிட்ட 27 மாவோயிஸ்ட் கட்சி தோழர்கள் கடந்த மே 22-ஆம் தேதி படுகொலை செய்யபட்டு தோழர்கள் இந்திய கம்யூனிய இயக்கத்தின் தியாக வரலாற்றில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். இத்தோழர்களின் உயிர்த்தியாகத்திற்கு இந்த மாநில தலைமைக் குழு கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
- பழங்குடி மக்களைக் காடுகளை விட்டு விரட்டியடிக்கவும் காடுகளை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கவும் தண்டகாரண்யா பகுதியில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் ஆபரேஷன் ககர் என்ற பயங்கரவாத நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிப்பதுடன், இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது. மேலும், தோழர் பசவராஜின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் போலீசே எரியூட்டிய நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். போலி மோதல் படுகொலை தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
- பல்கலைக்கழக துணைவேந்தராக முதலமைச்சரே இருக்கக்கூடிய வகையிலான தமிழ்நாட்டின் சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் வழியாக ஒப்புதல் அளித்த போதும், அதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் செயல்பட்டு உத்தரவிட்டிருப்பதற்கு இந்த தலைமைக் குழு கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
- சென்னை – அனகாபுத்தூரில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு இந்த மாநில தலைமை குழு கூட்டத்தில் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, அப்பகுதியில் குடியிருந்த மக்கள் வாழ்ந்த இடத்திற்கு ஈடான அளவுள்ள நிலமும் அவர்கள் குடியிருந்த அளவுக்கு வீட்டை கட்டுவதற்கான தொகையும் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் அப்பகுதியில் குடியிருந்த மக்கள் பலருக்கும் பட்டா இருந்த போதும் திட்டமிட்டு வீடுகளை இடித்த அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக்கழகம் கேட்டுக் கொள்கிறது.
- இராமநாதபுரம் மாவட்டம் இளமனூரில் அகமுடையார் சாதி வெறியர்கள் தலித் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் உரிய குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
- புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு கிராமத்தில் தலித் மக்கள் தங்களது குல தெய்வத்திற்கு பொங்கல்விழா நடத்துவதை எதிர்த்து சாலைமறியலில் ஈடுபட்ட முத்தரையர் சாதிவெறியர்களை அப்பகுதி போலீசு கைது செய்து சிறையில் அடைக்காமல் விட்டதன் விளைவாகவே, அச்சாதிவெறியர்கள் கோவில் திருவிழாவின் போது தலித் மக்கள் குடியிருப்பில் இருக்கும் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தியும் அம்மக்களை பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியும் உள்ளனர். இதனால் 6 பெண்கள் உட்பட 20 தலித் மக்கள் படுகாயமடைந்துள்ளனர். ஆதிக்கச் சாதிவெறியர்கள் மீது உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் போலீஸ் செயல்பட்டதன் காரணமாகவே பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தை அடக்காமல் இரு தரப்பிலும் கைது செய்வது என்ற பெயரில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே கைது செய்வதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
- ஆப்பிரிக்க மக்களின் வலிகளையும் ஏகாதிபத்தியத்தின் கொடூர சுரண்டலையும் தன் எழுத்தில் வடித்த கலைஞன் கூகி வா தியாங் ஙோ மறைவிற்கு மக்கள் அதிகாரக் கழகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
- தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை மெய்ப்பிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வறிக்கையை முடக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை மக்கள் அதிகாரக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.
- இந்தியாவில் குடியுரிமை கோரி விண்ணப்பித்த ஈழத் தமிழரின் விண்ணப்பத்திற்கு பதில் அளித்த உச்சநீதிமன்றம், உலக அளவில் பின்பற்றப்படும் மனித உரிமை விதிகளை புறம் தள்ளி இந்தியா தர்மசத்திரம் அல்ல என்று தெரிவித்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது. மேலும் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவளிப்பதுடன் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.
- இஸ்லாமியர்கள் குறித்து பொய் பிரச்சாரத்தை கிளப்பும் வகையில் பொய் பேசி கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் மதுரை ஆதீனம் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் மதுரையை கலவர பூமி ஆக்கும் முயற்சியாக இந்து முன்னணி முன்னெடுக்கும் முருகன் பக்தர் பாதுகாப்பு மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரக்கழகம் கேட்டுக் கொள்கிறது.
- பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதை மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்பதுடன், அக்குற்ற சம்பவத்தை மூடி மறைத்த அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
- காசா மீது இஸ்ரேல் நடத்தும் தொடர் தாக்குதலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட பொருட்களை தடுத்து நிறுத்தும் இஸ்ரேல் அரசை உழைக்கும் மக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
- தங்க நகைக் கடன் வழங்குவதற்கு மத்திய ரிசவ் வங்கி கொண்டு வந்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் எளிய மக்கள் வங்கிகளில் கடன் வாங்குவதை தடுத்து நிறுத்தி தனியார் கடன் நிறுவனங்களையும் அடகுக்கடைகளையும் நோக்கி தள்ளிவிடும் இச்செயலானது கார்ப்பரேட் நிதி நிறுவனங்களும் மார்வாடிகளும் கொழுக்கவே வழிவகை செய்யும் என்று மக்கள் அதிகாரக் கழகம் எச்சரிக்கிறது.
- டெல்லியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தமிழ் மக்கள் குடியிருக்கும் மதராசி என்ற குடியிருப்பு பகுதியை அடாவடியாக இடித்து தரைமட்டமாக்கிய டெல்லி பாஜக அரசை வன்மையாக மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது. அதோடு இந்தியா முழுவதும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை அகற்றி நகரத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
- ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாசிச மோடி அரசாங்கம் மேற்கொள்ளும் போர் பதட்ட நடவடிக்கைகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. அதோடு இந்த தாக்குதலை வைத்து மதவெறி அரசியல் செய்யும் பாசிச மோடி அரசின் நடவடிக்கையை எதிர்க்காமல் அவர்களின் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாத நடவடிக்கையை இந்திய மக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram