27.06.2025
கர்நாடகா விவசாயிகள் போராட்டம் வெல்க!
பத்திரிகை செய்தி
கர்நாடகாவில் சென்னராயப்பட்னாவில் 13 கிராமங்களின் விளை நிலங்களான 1,777 ஏக்கர் விவசாய நிலத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக கையகப்படுத்த முடிவெடுத்து, அதற்கான இறுதி அறிவிப்பை கர்நாடகாவின் ஆளும் சித்தராமையா, காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 2022-இல் கர்நாடகா பா.ஜ.க அரசு இதே நிலங்களைக் கையகப்படுத்த முடிவெடுத்த போது 13 கிராம விவசாயிகளும் அதற்கு எதிரான போராட்டத்தை தொடங்கினர். அப்போது எதிர்கட்சியாக இருந்து எதிர்த்த காங்கிரஸ் கட்சி, தான் ஆட்சிக்கு வந்த பிறகு அதே வேலையைத் தற்பொழுது செய்கிறது.
கடந்த காலங்களில் தங்கள் கிராமங்களை சுற்றியுள்ள 6,000 ஏக்கர் நிலங்களை விமான நிலையத்திற்காகவும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காகவும் கர்நாடகா அரசு கையகப்படுத்தியது. அந்த விவசாயிகள் ஏதுமற்ற பராரிகளாக நடுத்தெருவில் நிறுத்தப்பட்டார்கள் என்பதை தாங்கள் கண்ணெதிரே பார்த்துள்ளதாக விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் தங்கள் உயிர் இருக்கும் வரை நிலங்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதியாக போராடி வருகின்றனர்.
தற்போது கர்நாடகாவின் சம்யுத்த ஹொராட்டா என்ற விவசாயிகளின் அமைப்பு போராட்டக் களத்தில் இறங்கிய சூழலில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போராடக் கூடிய விவசாயத் தலைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகளைக் கைது செய்துள்ளது.
கர்நாடகா அரசின் இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்தும் கர்நாடகா அரசின் முயற்சிக்கு எதிரான கர்நாடகா சம்யுக்தா ஹொராட்டா போராட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழகம் தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறது.
ஆளும் காங்கிரசு அரசு நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram