Tuesday, May 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 3

இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள் | மோடிக்கு தெரிந்து நடந்த தாக்குதல்? | தோழர் மருது

இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்..
மோடிக்கு தெரிந்து நடந்த தாக்குதல்?
| தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 4

7. பொதுக் கூட்டச் சொற்பொழிவில் லெனின்

இரவுபகல் இடைவிடாத இந்தக் கடும் சோதனையின் கஷ்ட நஷ்டங்கள் இருப்பினும் லெனின் ஓயாமல் பொதுக் கூட்ட மேடைகளில் தோன்றிப் பேசி வந்தார். அவரது பேச்சுக்கள் இரத்தினச் சுருக்கமானவை. அறிவு விழிப்பு சுடர்பவை, நிலைமைகளைக் காரணங்காட்டி விளக்குபவை, பரிகாரங்களைக் குறிப்பவை, அவற்றைக் கையாளும் பொருட்டுக் கேட்போரைச் செயலுக்குத் தூண்டி அனுப்புபவை. கல்வியறிவற்ற வர்க்கத்தினரிடையே லெனினது சொற்பொழிவுகள் ஏற்படுத்திய உற்சாகத்தைக் கண்டு பார்வையாளர்கள் வியப்படைந்தார்கள். லெனினது உரைகள் விரைவாக,தடையின்றிப் பெருகும். புள்ளிவிவரங்கள் அவற்றில் ஏராளமாக நிறைந்திருக்கும். ஆனால் அவரது மேடைத் தோற்றம் போலவே அவரது உரைகள் பொதுவாக வண்ணக் கவர்ச்சியோ, காவிய வனப்போ அற்றவையாக இருந்தன. அவற்றை மனத்தில் வாங்கிக் கொள்வதற்கு இடையறாத சிந்தனை தேவைப்பட்டது. அவை கேரென்ஸ்கியின் உரைகளுக்கு நேர்மாறாக இருந்தன. கேரென்ஸ்கி தோற்றக் கவர்ச்சி உள்ளவர். சொல்வன்மை மிக்கப் பேச்சாளர், மேடைப் பிரசங்கிக்கு உரிய கலை நுட்பங்களும் ஆவேசங்களும் அவருக்குக் கைவந்தவை “அஞ்ஞானிகளும் எழுத்தறியாதவர்களுமான ருஷ்யர்களை” இந்தப் பண்புகள் யாவும் ஒரேயடியாக ஆட்கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றும். உண்மையிலோ, ருஷ்ய மக்கள் கேரென்ஸ்கியால் வசீகரிக்கப்படவில்லை. ருஷ்ய இயல்பில் உள்ள இன்னொரு முரண்பாடு இது. இந்தத் தேர்ந்த மேடைப் பிரசங்கியின் பகட்டான வாக்கியங்களையும் இரத்தினக் கச்சிதமான இடைநிறுத்தங்களையும் பொதுமக்கள் கேட்டார்கள். அப்புறம் எதிர்த்திசையில் திரும்பி லெனினுக்கு, நூலறிவும், தர்க்க முறையும் அளவார்ந்த சிந்தனையும் கோட்பாட்டுக்கு இயைந்த பேச்சும் வாய்ந்த லெனினுக்குத் தங்கள் விசுவாசத்தை அளித்தார்கள்.

தர்க்க இயலிலும் வாக்குவாதத்திலும் லெனின் தேர்ந்த நிபுணர். விவாதத்தில் அவரது பதற்றமின்மை எதிர்க்கட்சியினருக்கு எரிச்சலூட்டுவது விவாதத்தில் அவரது திறமை உச்ச கட்டத்தை எட்டிவிடும் என்று ஒல்கின்¹⁴ சொல்லுகிறார்: “லெனின் எதிரிக்குப் பதில் அளிப்பதில்லை. எதிரியின் வாதங்களைக் கூறுபோடுகிறார். அவர் மழிப்புக் கத்தி முனை போலக் கூர்மையானவர். அவருடைய அறிவு வியப்பூட்டும் நுண்மையுடன் செயல்படுகிறது. வாதப் போக்கில் உள்ள எல்லாப் பிழைகளும் அவருக்குப் புலனாகிவிடுகின்றன. தமக்கு ஏற்பில்லாத முதனிலைகளை அவர் நிராகரிக்கிறார், அவற்றிலிருந்து மிக மிக அபத்தமான முடிவுகளைப் பெறுகிறார். அதே சமயம் அவர் கிண்டலும் செய்கிறார். தமது எதிரியை அவர் எள்ளி நகையாடுகிறார்.விளாசுகிறார். தமது தாக்குதலுக்கு உள்ளானவன் அறிவிலி, மடையன், அகந்தைமிக்க அநாமதேயம் என்று கேட்பவர்களுக்குப் படும்படி செய்துவிடுகிறார். அவருடைய தர்க்கத்தின் ஆற்றல் கேட்பவர்களை ஆட்கொண்டுவிடுகிறது. அவருடைய அறிவு ஆவேசம் கேட்பவர்களை வசப்படுத்தி விடுகிறது”.

வாதத்தின் விரைந்த போக்கில் ஓரளவு இடையீடு அளிப்பதற்காக அவர் சிற்சில சமயங்களில் சிறிது நகைச்சுவையைக் கையாள்கிறார், அல்லது பின்வருவது போன்ற சுருக்கென்று தைக்கும் பதிற் சொற்களைப் பாய்ச்சுகிறார்: தோழர் காம்கோவின் கேள்விகள், ‘பத்து அறிவாளிகள் விடை அளிக்க முடிவதைவிட அதிகமான கேள்விகளை ஒரு மடையனால் கேட்க முடியும்’ என்ற மூதுரையை எனக்கு நினைவு படுத்துகின்றன.” போல்ஷெவிக் பத்திரிகை எழுத்தாளர் ராதேக் என்பவர் ஒருமுறை லெனினைப் பார்த்து, “பெத்ரோகிராதில் ஐந்நூறு தைரியசாலிகள் இருப்பார்களேயானால் நாங்கள் உங்களைச் சிறைக்கு அனுப்பிவிடுவோம்” என்று கூறியபோது லெனின் அமைதியாகப் பின்வருமாறு விடையளித்தார்: “சில தோழர்கள் சிறை செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வாய்ப்புக் கூறுகளை நீங்கள் கணக்கிட்டால் நீங்கள் என்னைச் சிறையில் இடுவதைவிட நான் உங்களைச் சிறையில் இடுவதே அதிகச் சாத்தியமானது என்பதைக் காண்பீர்கள்.” சில வேளைகளில் அவர் புதிய அமைப்புக்கு விளக்கம் தரும் சாதாரண நிகழ்ச்சி ஒன்றை விவரிப்பார்: குடியானவக் கிழவி நிலச்சுவான்தாரின் காட்டில் விறகு சேகரித்துக் கொண்டிருக்கிறாள். புதிய காலட் படைவீரனோ அவளைக் கொடுமைப்படுத்துபவனாக இன்றி அவளது காவலனாகப் பணியாற்றுகிறான்.

துன்ப அனுபவம், நிகழ்ச்சிகளின் அழுத்தம் ஆகியவை காரணமாக இந்த மனிதருக்குள் மறைந்திருக்கும் ஆவேசக்கனலும் உணர்ச்சிப் பெருக்கும் வழக்கமான கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டுவிட்டன போலத் தோன்றியது. ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் லெனின் ஓரளவு தயக்கமும், சிக்கலும் நிறைந்த வாக்கியங்களுடன் உரையைத் தொடங்கியதாகவும், உரை ஓரளவு தொடர்ந்த பிறகு அதிகத் தெளிவாக விளங்கும் வகையில் பேசினார் என்றும் அண்மையில் அவரது பேச்சைக் கேட்ட ஒருவர் கூறினார். லெனின் மேலும் மேலும் ஆற்றொழுக்காகவும், துடிதுடிப்புடனும் பேசத் தொடங்கினாராம். வெளிப்படையான பிரயாசை மிகுதியாக இன்றி மேலும் மேலும் அதிகரிக்கும் உள்கிளர்ச்சியுடன் அவர் உரையாற்றினாராம். அது வரவர அதிகப் பாதிப்பு விளைவித்ததாம். “கட்டுக்கு அடங்கிய ஒரு வகை உணர்ச்சிக் கனிவு அவரது ஆன்மாவில் ஊடுருவிப் பரவிற்று. அவர் பல சைகைகள் செய்தார், சில அடிகள் பின்னும் முன்னுமாக நடந்த வண்ணமாக இருந்தார். மிகுந்த ஆழமான, ஒழுங்கற்ற சுருக்கங்கள் அவரது நெற்றியில் ஏற்பட்டன. மிகத் தீவிரமான ஆழ்ந்த சிந்தனையை, அனேகமாகத் துன்புறுத்தும் மூளை உழைப்பைக் காட்டின இவை” என்று விவரித்தார் மேற்குறித்த அன்பர் லெனின் முதன்மையாக அறிவையே தமது இலக்காகக் கொண்டார். உணர்ச்சிகளை அல்ல. எனினும் கேட்டவர்கள் மீது அவரது சொற்கள் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து வெறும் அறிவுத் தன்மையின் உணர்ச்சி ஆற்றலை நாம் காண முடிந்தது.

ஒரே ஒரு தடவைதான் அவரது சொற்பொழிவு கேட்போருக்கு உற்சாகமூட்டாததை நான் கண்டேன். இது நடந்தது டிசம்பரில், மிஹாய்லவ்ஸ்க்கிய் குதிரையேற்றப் பயிற்சி மண்டபத்தில், புதிய செஞ்சேனையின் முதல் பிரிவு போர் முனைக்குப் புறப்பட்ட தறுவாயில் கொழுந்து விட்டெரியும் தீவத்திகள் மண்டபத்தின் அகன்று பரந்த உள்புறத்தில் ஒளிபரப்பின. நீண்ட வரிசைகளாக நின்ற சுவச மோட்டார்கள் அவற்றின் பிரகாசத்தில் ஏதோ விந்தை யான தொடக்கக் கால விகிருதிகள் போன்று தோற்றம் அளித்தன. புதிய படைவீரர்கள் விசாலமான அரங்கில் நெடுகிலும் மொய்த்திருந்தார்கள். மோட்டார்கள் மேல் தொற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஆயுத சாதனங்கள் குறைவாகவே இருந்தன. ஆனால் புரட்சி ஆவேசத்தில் அவர்கள் வலிமை மிக்கவர்களாயிருந்தார்கள். உடம்பில் சூடேற்றிக்கொள்வதற்காக அவர்கள் நடனமாடினார்கள், தரையில் கால்களை அடித்துக்கொண்டார்கள். உற்சாகம் பெறுவதற்காகப் புரட்சிக் கீதங்களையும் நாடோடிப் பாடல்களையும் பாடினார்கள்.

பெருத்த ஆரவாரம் லெனினது வருகையை அறிவித்தது. பெரிய கார்களில் ஒன்றில் ஏறி நின்றுகொண்டு அவர் பேசத் தொடங்கினார். அரை இருளில் கூட்டத்தினர் ஏறிட்டு நோக்கிக் கவனமாகக் கேட்கலாயினர். ஆனால் அவருடைய சொற்கள் அவர்களைத் தூண்டி ஊக்குவிக்கவில்லை. கரகோஷத்துக்கிடையே அவர் பேச்சை முடித்தார். எனினும் வழக்கமான உற்சாக ஆரவாரத்துக்கும் இந்தக் கரகோஷத்துக்கும் வெகுதூரம். அன்று அவரது பேச்சு உப்புசப்பற்றதாக இருந்தது. உயிர் வழங்குவதற்காகச் செல்லவிருந்த மனிதர்களின் மன நிலைக்கு அது ஏற்றதாக இல்லை. கருத்துகள் சாதாரணமாக இருந்தன. சொற்கள் வீரியமற்றிருந்தன. அவருடைய உணர்ச்சியின்மைக்குக் காரணங்கள் இருந்தன. மட்டுமீறிய உழைப்பும், வேறு விஷயங்களில் அவர் மனம் ஈடுபட்டிருந்ததுமே தான். எனினும் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் லெனின் பொருளாழம் அற்ற உரை ஆற்றினார் என்ற உண்மை இந்தக் காரணங்களால் மாறிவிடவில்லை. இந்த உழைப்பாளிகள் இதை உணர்ந்தார்கள். ருஷ்யப் பாட்டாளிகள் கண்மூடித்தனமான வீரவழிபாட்டினர் அல்ல. புரட்சியின் பாட்டனாரும் பாட்டியாரும் கண்டறிந்தது போல, பழைய அருஞ்செயல்களையும் மதிப்பையும் கொண்டே ஒருவர் காலந்தள்ள முடியாது. ஒருவர் இப்போது தாம் வீரர் என்று செயலில் நிரூபிக்காவிட்டால் வீரருக்கு உரிய புகழ்ச்சியை அவர் பெற முடியாது.

லெனின் காரிலிருந்து இறங்கியதும், “ஒரு அமெரிக்கத் தோழர் உங்கள் முன் பேசுவார்” என்று பொத்வோய்ஸ்க்கிய் அறிவித்தார். கூட்டம் உன்னிப்பாகக் கவனிக்கலாயிற்று நான் அந்தப் பெரிய காரில் ஏறிக்கொண்டேன்.

“அப்படியா, நல்லது. நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள். என்னை மொழிபெயர்க்கவிடுங்கள்” என்றார் லெனின்.

“வேண்டாம். நான் ருஷ்ய மொழியில் பேசுகிறேன்” என்று ஏதோ யோசனையற்ற உந்தலால் தூண்டப்பட்டு நான் பதில் அளித்தேன்.

ஏதோ வேடிக்கையை எதிர்பார்ப்பவர் போலப் பளிச்சிடும் கண்களுடன் லெனின் என்னை நோக்கினார். விரைவிலேயே வேடிக்கை தொடங்கி விட்டது. முன்கூட்டித் தயாரித்துக்கொண்ட தொடக்க வாக்கியங்களைப் பேசித் தீர்த்தபின் நான் தயங்கினேன், பேச்சை நிறுத்தினேன். மறுபடி ருஷ்ய மொழியில் பேச்சைத் தொடர்வதில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது. வெளிநாட்டினர் தங்கள் மொழியை என்னதான் சித்திரவதை செய்தாலும் ருஷ்யர்கள் மரியாதையைக் கடைப்பிடித்தவாறு சகித்துக்கொள்வது வழக்கம். கற்றுக்குட்டியின் முறையைப் பாராட்டாவிடினும் அவனது முயற்சியை அவர்கள் மதிப்பார்கள். எனவே எனது பேச்சுக்கு நடு நடுவே கைதட்டல்கள் நீண்ட அவகாசங்களை ஏற்படுத்தின. இன்னும் சிறிது தூரம் முன்னேறுவதற்குத் தேவையான சொற்களைக் கோவைப் படுத்திக் கொள்வதற்கு ஒவ்வொரு கைதட்டலின்போதும் எனக்கு நேரம் கிடைத்தது. பெருத்த நெருக்கடி எதிர்ப்பட்டால் நானே செஞ்சேனையில் படைவீரனாகச் சேர உவப்புடன் முன்வருவேன் என்று சொல்ல நான் விரும்பினேன். நான் ஒரு சொல்லுக்காகத் தட்டித் தடவியவாறு தயங்கினேன். லெனின் என்னைப் பார்த்து, “என்ன வார்த்தை உங்களுக்கு வேண்டும்” என்று கேட்டார். “படை வீரனாகச் சேர என்றேன்.”வ்ஸ்துப்பீத்” என்று அவர் சொல்லிக் கொடுத்தார்.

அதன்பிறகு எனக்குத் தடங்கல் ஏற்பட்டபோதெல்லாம் லெனின் தேவையான சொல்லை என்னிடம் வீசுவார். நான் அதைப் பிடித்து, எனது அமெரிக்க ஒலியழுத்தத்தினால் சிதைத்துத்தான் என்றாலும், கூட்டத்தினர் மீது எறிவேன். இந்த விஷயமும், தாங்கள் வெகுவாகக் கேள்விப்பட்டிருந்த சர்வதேசியத்தின் பெருமை பெற்ற சின்னமாக நான் அங்கே நின்றதும் சிரிப்புப் புயல்களையும் கைதட்டல், இடி முழக்கங்களையும் கூட்டத்தினரிடையே ஏற்படுத்தியது. இவற்றில் லெனினும் மனப்பூர்வமாகக் கலந்துகொண்டார்.

“நல்லது, ருஷ்ய மொழியில் இது தொடக்கம் வேறொன்றும் இல்லாவிட்டாலும், ஆனால் நீங்கள் இதில் முனைந்து பாடுபட வேண்டும் என்றார் அவர். பின்பு பெஸ்ஸி பீட்டியை¹⁵ நோக்கி, நீங்களும் ருஷ்ய மொழி கற்க வேண்டும். பரிமாற்றுப் பாடங்கள் கோரிச் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யுங்கள். அப்புறம் ருஷ்ய மொழியில் மட்டுமே படியுங்கள், எழுதுங்கள், பேசுங்கள், அமெரிக்கர்களுடன் பேசாதீர்கள். அதனால் எவ்வகையிலும் எந்த நன்மையும் உங்களுக்கு உண்டாகாது” என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டு, “அடுத்த தடவை உங்களைப் பார்க்கும்போது பரீட்சை நடத்துவேன்” என்றார்.


14. ஒல்கின் என்பது I.G. நொவொமேய்ஸ்க்கியின் புனைபெயர். அவர் கட்டுரையாளர். 1914இல் அவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்று சோவியத் யூனியனைப் பற்றி பல கட்டுரைகளும் நூல்களும் எழுதினார்.

15. பெஸ்ஸி பீட்டி – அமெரிக்கப் பத்திரிகை பெண் எழுத்தாளர். 1917ஆம் ஆண்டுப் புரட்சியின்போது அவர் ருஷ்யாவில் இருந்தார். ருஷ்யாவின் செவ்விதயம் என்ற நூலையும் அக்டோபர் புரட்சி பற்றிய பல கட்டுரைகளையும் எழுதினார்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 செப்டம்பர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 21 | 1990 செப்டம்பர் 16-30, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பதவிப்போனாலும் பாசிசத்தன்மை மாறவில்லை!
  • கல்லூரி முதல்வரின் ரௌடித்தனம்! தொடரும் மாணவர் போராட்டம்!
  • வளைகுடா நெருக்கடி: அமெரிக்கக் கழுகு அடைகாத்ததன் விளைவு!
  • சென்னை மதக் கலவரம்: படர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பார்த்தீனியம்
  • போபார்ஸ்: மீண்டும் புதிய ஆதாரங்கள்! திட்டமிட்ட குழப்பங்கள்!
  • வேலைவாய்ப்பு: அடிப்படை உரிமையாக்க அடிப்படியே இல்லை!
  • காவிரியில் நீரில்லை! விவசாயிகளுக்கும் வாழ்வில்லை
  • சத்துணவு ஊழியர்: ஏளனமான தாக்குதலின் இலக்கு! ஏப்பம் விடுவது ஊழியர்களா?
  • இடஒதுக்கீடும் ஓட்டுக்கட்சிகளும்
  • ‘தாழ்த்தப்பட்டோர்’ மீது சாதிவெறித் தாக்குதல்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 செப்டம்பர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 20 | 1990 செப்டம்பர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பஞ்சாப்: பிரதமரின் பாதயாத்திரை
    காந்திய நாடகங்கள் – மோசடிகள் பலிக்காது
  • ராணிப்பேட்டையில் ஒரு வெள்ளைக்காடு!
  • “ஆட்டோ” சங்கர் சர்வகட்சி கிரிமினல்
  • இடஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும்: பதவிவேட்டைக்கான மேல்சாதிசண்டை!
  • ஈழத்தில் இந்தியத் தலையீடு! அம்பலமாகும் ரகசியங்கள்!
  • சமூக பாசிஸ்டுகளாக போலிகள்!
  • உயிர்க் கொல்லிகளா? பூச்சிக் கொல்லிகளா?
  • போதைப் பொருட்கள் பெருக்கம்! அதிகாரிகள் பச்சைக்கொடி!
  • போலிச் சுதந்திரத்தை அம்பலப்படுத்தி…
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 3

5. கம்யூனிஸ நடைமுறை மக்களை சோவியத்துக்கள் தரப்பில் ஒன்றுதிரட்டுகிறது

பூர்ஷ்வா வெளியீடுகளில் லெனின் இதற்கு நேர் எதிராகவே சித்திரிக்கப்பட்டார். கொடும் பேயின் அவதாரம், தன்னலம் படைத்த, எல்லாவற்றையும் பறித்துக்கொள்ளும் அரக்கர் என்றே அவர் வருணிக்கப்பட்டார். எனினும் பொய்களின் இந்தப் போர்வைக்கு உள்ளிருந்து உண்மை லெனின் கொஞ்சங்கொஞ்சமாக வெளிப் பட்டார். லெனினும் அவரது கூட்டாளிகளும் மக்களுடன் அற்ப உணவைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்ற செய்தி ருஷ்யாவில் பரவியதும், வெகுஜனங்கள் அவர்கள் தரப்பில் ஒன்று திரண்டு விட்டார்கள்.

தனது அற்ப ரேஷனைப் பற்றி முணுமுணுக்க விரும்பும் உரால் பிரதேசச் சுரங்கத் தொழிலாளி, உணவு, துணிமணி, இருப்பிடம் ஆகியவற்றின் பொதுச் சேமிப்பிலிருந்து ஒவ்வொருவரும் சமபங்கே பெறுகிறார் என்பதை நினைவுபடுத்திக்கொள்கிறான். அப்படியிருக்கையில் தனது கறுப்பு ரொட்டித் துண்டைக் குறித்து அவன் முணுமுணுப்பானேன்? என்ன ஆனாலும் இந்த ரொட்டித் துண்டு, அளவில் லெனினுக்குக் கிடைப்பது போன்றதேதான். பட்டினி வேதனையுடன் அநீதியால் உண்டாகும் எரிச்சலூட்டும் வேதனையும் சேர்ந்துகொள்வதில்லை.

வோல்கா ஆற்றிலிருந்து வீசும் கடுங்குளிர் காற்றில் விறைத்து நடுங்கும் குடியானவப் பெண்ணுக்கு ஜாரின் இடத்திற்கு வந்துள்ள மனிதர் பற்றி அனேகமாக ஒன்றும் தெரியாது. ஆனால் அடிக்கடி அவர் வெப்பமூட்டப் பெறாத அறையிலேயே வேலை செய்கிறார் என்று அவள் கேள்விப்படுகிறாள். இப்போது அவள் குளிரால் வருந்தினாலும் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளால் துன்புறுவதில்லை.

நீஷ்னிய் நகரத்து எஞ்சினியர் அறுநூறு ரூபிள் மாதச் சம்பளம் தன் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அறவே போதாது என்பதைக் கண்டு மனக்கசப்பு அடையத் தொடங்குகிறான். கிரெம்ளினில் உள்ள மனிதர் இதைவிட அதிகச் சம்பளம் பெறுவதில்லை என்பது அப்புறம் அவன் நினைவுக்கு வருகிறது. இந்த எண்ணத்தால் அவனது குரோதம் அகன்றுவிடுகிறது.

நேச நாட்டினரின் பீரங்கிக் குண்டுகளுக்கு எதிர் நிற்கும் சோவியத் படைவீரன், பின்னணியில் இருந்தபோதிலும் லெனினும் குண்டுத் தாக்குதலுக்கு எதிர் நிற்கிறார் என்பதை அறிவான். ஏனெனில் ருஷ்யாவில் மற்ற எல்லாவற்றையும் போலவே அபாயமும் சமூக உடைமை ஆக்கப்பட்டுவிட்டது. அதனால் பாதிக்கப்படாதவர் ஒருவரும் இல்லை. பின்னணியில் கொல்லவும் காயப்படுத்தவும் பட்ட சோவியத் தலைவர்களின் சதவிகிதம் முனைமுகத்தில் கொல்லவும் காயப்படுத்தவும் பட்ட சோவியத் படைவீரர்களின் சதவிகிதத்தை விஞ்சிவிட்டது. லெனினது உடலில் கொலைகாரர்களின் குண்டுகள் இரு முறை பாய்ந்திருக்கின்றன. உரீத்ஸ்கியும்11 வொலதார்ஸ்க்கியும் டஜன் கணக்கான மற்றவர்களும் கொலை செய்யப்பட்டார்கள். எனவே செம்படை வீரனின் கண்களுக்கு லெனின் போரிலிருந்து ஒதுங்கித் தனிமையில் வாழ்பவர் அல்ல, போராட்ட நடவடிக்கையின் ஆபத்துக்களையும், கஷ்டங்களையும் பகிர்ந்துகொள்ளும் முனைமுகத் தோழர், எனவே படுகிறார்.

புல்லிட் என்பவரால் தயாரிக்கப்பட்ட, ருஷ்யாவுக்குச் சென்ற அமெரிக்க தூதுகோஷ்டியின் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:

“இன்று லெனின் அநேகமாகத் தீர்க்கதரிசியாகவே மதிக்கப்படுகிறார். வழக்கமாகக் கார்ல் மார்க்ஸின் படத்தோடுகூட அவருடைய படம் எங்கும் தொங்குகிறது. நான் லெனினைக் காணச் சென்றபோது, குடியானவர்களின் பிரதிநிதிக் குழு ஒன்று அவருடைய அறையிலிருந்து வெளியேறும் வரை நான் சில நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்தது. தோழர் லெனின் பட்டினி கிடப்பதாக அவர்கள் தங்கள் கிராமத்தில் கேள்விப்பட்டார்களாம். லெனினுக்கு கிராமத்தின் பரிசாக எண்ணூறு “பூட்”12 தானியத்தை எடுத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்து அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்குச் சற்று முன்னர் குடியானவர்களின் இன்னொரு பிரதிநிதிக் குழு லெனினிடம் வந்திருந்ததாம். தோழர் லெனின் வெப்பமூட்டப் பெறாத அறையில் வேலை செய்வதாக அவர்கள் கேள்விப்பட்டார்களாம். ஒரு கணப்பையும் அதை மூன்று மாதங்கள் சூடுபடுத்தப் போதுமான விறகையும் எடுத்துக்கொண்டு வந்தார்களாம். இம்மாதிரிப் பரிசுகள் பெறும் ஒரே தலைவர் லெனின் மட்டுமே. அவர் அவற்றைப் பொதுச் சேமிப்பில் சேர்த்து விடுகிறார்”.

பொதுச் செல்வத்தையும் பொது வறுமையையும் ஒரே மாதிரிப் பகிர்ந்துகொண்டது முதலமைச்சரிலிருந்து பரம ஏழைக் குடியானவன் வரையில் அனுதாபம் என்ற பொது உறவை ஏற்படுத்திவிட்டது. இதனால் சோவியத் தலைவர்களுக்கு மக்களின் ஆதரவு மேலும் மேலும் அதிகமாகக் கிடைத்தது.

6. கம்யூனிஸ நடைமுறை மக்களின் நாடித்துடிப்பை அறிய லெனினுக்கு உதவுகிறது

மக்களுக்கு அவ்வளவு அருகில் வாழ்ந்தமையால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பொதுஜன உணர்ச்சியின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் அறிந்திருந்தார்கள்.

மக்களின் உணர்ச்சிகளையும், மனப்பாங்கையும் அறிவதற்காக ஒரு விசாரணைக் குழுவை அனுப்புவது லெனினுக்குத் தேவைப்படவில்லை. உணவில்லாமல் சமாளிக்கும் மனிதன் பசித்த மனிதனின் மனநிலையை வெறுமே ஊகிக்க வேண்டியது இல்லையே. அவன் இதை அறிவான். மக்களுடன் சேர்ந்து பட்டினி கிடந்து, மக்களுடன் சேர்ந்து குளிரால் விறைத்த லெனின் அவர்களுடைய உணர்ச்சிகளை உணர்ந்தார், அவர்களுடைய எண்ணங்களை எண்ணினார், அவர்களுடைய விருப்பங்களை வெளியிட்டார்.

இந்த முறையிலேயே, அதாவது, பொது மக்களின் எண்ணங்களை நேரடியாகப் பிரதிபலிக்கும் சாதனமாகவும் அவற்றை வெளியிடும் ஒலிக்கருவியாகவுமே, தான் செயல்படுவதாகக் கம்யூனிஸ்ட் கட்சி உரிமை கொண்டாடுகிறது.

கம்யூனிஸ்டுகள் சொல்கிறார்கள்: “சோவியத்துக்களை நாங்கள் உண்டாக்கவில்லை. மக்களின் வாழ்க்கையிலிருந்து அவை தாமே உதித்தன. நாங்கள் ஒரு செயல்திட்டத்தை எங்கள் மூளையில் உருவாக்கி, பிறகு அதை வெளியில் எடுத்து மக்கள் மேல் ஒட்டி வைக்கவில்லை. மாறாக நேரே மக்களிடமிருந்தே நாங்கள் எங்கள் செயல்திட்டத்தை எடுத்துக்கொண்டோம். ‘நிலம் குடியானவர்களுக்கு’, ‘தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு’, ‘சமாதானம் உலகம்முழுவதற்கும்’ என்று மக்கள் கோரி வந்தார்கள். இந்தக் கோஷங்களை எங்கள் பதாகைகள் மீது பொறித்துக்கொண்டு மக்களுடன் சேர்ந்து அணிநடை நடந்து அதிகாரப் பீடத்தில் அமர்ந்தோம். மக்களைப் புரிந்துகொள்வதில்தான் எங்கள் வலிமை அடங்கியுள்ளது. உண்மையில் நாங்கள் மக்களைப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. நாங்களேதாம் மக்கள்”. இது சாதாரணத் தலைவர்களின் விஷயத்தில் நிச்சயமாக உண்மை. பெத்ரோகிராதில் நாங்கள் முதன்முதல் சந்தித்த ஐந்து கம்யூனிஸ்டுகள் போலவே இவர்கள் மக்களின் உடலும் உயிருமாகத் திகழ்ந்தார்கள்.

ஆனால் லெனின் போன்ற அறிவாளிகளோ? அவர்கள் எப்படி மக்களின் பெயரால் பேச முடியும்? வெகுஜனங்களின் உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் அவர்கள் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அவர்களால் முடியவே முடியாது என்பதுதான் இதன் பதில். இதில் சந்தேகமே இல்லை. ஆனால் இன்னொரு விஷயமும் இவ்வளவே நிச்சயமானது. தல்ஸ்த்தோய்13 காட்டியதுபோல, மக்களின் வாழ்க்கையை வாழ்பவன் மக்களுடைய போராட்டங்களிலிருந்து தனித்து ஒதுங்கியிருப்பவனைவிட அவர்களை நெருங்கி அறிகிறான் என்பதே அது.

தமது எதிரிகளுக்கு இல்லாத ஒரு பெரிய நல்வாய்ப்பு லெனினுக்குக் கிடைத்திருந்தது. உரால் பிரதேசச் சுரங்கத் தொழிலாளி, வோல்கா பிரதேசக் குடியானவன், அல்லது சோவியத் படைவீரனுடைய உணர்ச்சிகளை அவர் வெறுமே அனுமானிக்க வேண்டியிருக்கவில்லை. அவர் அவற்றை அறிந்திருந்தார், ஓரளவு ஏறத்தாழ, நிச்சயமாக அவருடைய அனுபவங்களும் ஆகும். எனவே, எதிரிகள் இருட்டில் தட்டித்தடவிக் கொண்டிருந்த போது, லெனின் விஷயத்தை நன்கு அறிந்தவருக்கு உரிய நிச்சயத்துடன் விரைவாக முன்னேறினார்.

சோவியத் தலைவர்களால் கம்யூனிஸம் நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டது. சோவியத் அரசாங்கத்துக்கு ஆதரவாக வலிமையைத் திரட்டுவதற்கான ஆற்றல்மிக்க காரணிகளில் ஒன்றாகும். ருஷ்யாவுக்கு வெளியே இந்த உண்மை ஒன்று கவனிக்காமல் விடப்பட்டது, அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டது. ஆனால் லெனின் இதைக் குறைத்து மதிப்பிடவில்லை. கம்யூனிஸத்தை நடைமுறையில் மேற்கொள்வதே பாட்டாளி வர்க்க ராஜதந்திரிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரே உண்மையான வழி என்பதை அவர் அரசும் புரட்சியும் என்ற நூலில் விளக்கியிருக்கிறார். இது கடினமான வழி இதைப் பின்பற்றுவோர் அரிதாகச் சிலரே.


11. உரீத்ஸ்கிய், மி. ஸெ. (1873-1918) அக்டோபர் புரட்சியில் ஊக்கத்துடன் பங்காற்றியவர். பெத்ரோகிராத் ச்செக்காவின் (புரட்சி எதிர்ப்பு, மறைமுக நாசவேலை, கள்ள வியாபாரம் ஆகியவற்றை ஒடுக்குவதற்கான அகில ருஷ்யக் கமிஷன்) தலைவர் என்ற முறையில் பிற்போக்கை எதிர்த்துத் தீர்மானமான போராட்டம் நடத்தினார். 1918, ஆகஸ்ட் 30ந் தேதி புரட்சி எதிர்ப்பாளர்களால் கொல்லப்பட்டார்.

12. பூட் என்பது 16.38 கிலோகிராம் கொண்ட ருஷ்ய எடை (மொ-ர்).

13. தல்ஸ்தோய், லே. நி (1828-1910) மாபெரும் ருஷ்ய எழுத்தாளர்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மாணவர்களைப் பண்டமாகப் பார்க்கும் தனியார் கல்வி நிலையங்கள் | தோழர் வெற்றிவேல் செழியன்

மாணவர்களைப் பண்டமாகப் பார்க்கும் தனியார் கல்வி நிலையங்கள்
| தோழர் வெற்றிவேல் செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஆகஸ்டு, 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 19 | 1990  ஆகஸ்டு 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இடஒதுக்கீடு: மீண்டும் மேல்சாதி, மேட்டுக்குடிச் சண்டை
  • தேவிலால் நீக்கம் – தீருமா நெருக்கடி?
  • இலங்கையில் ‘ரா’வின் சூழ்ச்சிகள் புதிய தகவல்கள்
  • பம்பாய் பயஙகரவாத சட்டம்
    தொழிலாளர்களை ஒடுக்க புதிய சதி
  • பெனாசிர் ஆட்சிக் கவிழ்ப்பு
    மீண்டும் ஜியா சகாப்தம்
  • ‘மார்க்சிஸ்டு’கள் – மதவெறியர்கள் கூட்டணி
  • வீரமணி கும்பலின் பிழைப்புவாதம்
    சுயமரியாதை சொல்லுக்கு அவமரியாதை
  • வளைகுடா விவகாரம்: ஈராக்கின் அடாவடித்தனம்! அமெரிக்கவின் ஆதிக்கவெறி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 2

  1. அரசு வாழ்க்கையில் கண்டிப்பான ஒழுங்குமுறையை லெனின் புகுத்துகிறார்

கஸாக்கியர்களையும் புரட்சி விரோதிகளையும் எதிர்த்துப் போரிடுவதற்காக அப்போது எல்லாச் சாலைகள் வழியாகவும் வெள்ளமாகப் பெருகிக்கொண்டிருந்த செங்காவற்படையினருடன்4 செல்வதற்கு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்று நவம்பர் 9ந் தேதி நான் விரும்பினேன். எனது சான்றிதழ்களைக் காட்டினேன். அவற்றில் ஹில்க்விட்5 ஹூய்ஸ்மன்ஸ்6 இருவரது கையெழுத்துக்கள் இருந்தன. இவை பிரமாதமான சான்றிதழ்கள் என நான் நினைத்தேன். லெனினோ, அப்படி எண்ணவில்லை. அவை யூனியன் லீக் கிளப் போன்ற ஏதோ பூர்ஷ்வாச் சமூக நலக் கழகத்திலிருந்து வந்தவை போன்று, சுருக்கமாக “இல்லை” என்ற ஒரே சொல்லுடன் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இது அற்ப நிகழ்ச்சியே எனினும் பாட்டாளிகளின் நிறுவனங்களில் இப்போது தோன்றியிருந்த புதிய கண்டிப்பான போக்கை இது புலப்படுத்தியது. இதற்கு முன்பு வரை பொதுமக்கள் தங்களுடைய மட்டுமீறிய இனிய பண்பையும், நல்லியல்பையும் வாரி வழங்கித் தங்களுக்கே தீங்கு செய்துகொண்டார்கள். லெனின் ஒழுங்குமுறையை நிலைநாட்ட முற்பட்டார். பட்டினி, படையெடுப்பு, பிற்போக்கு என்ற அபாயங்கள் சூழ்ந்த புரட்சியைப் பலமான, கண்டிப்புள்ள நட வடிக்கையே காப்பாற்ற முடியும் என்று அவர் அறிந்திருந்தார். எனவே போல்ஷெவிக்குகள் தாட்சண்ணியமோ தயக்கமோ இன்றித் தங்கள் நடவடிக்கைகளை அமல்படுத்தினார்கள். அவர்களுடைய பகைவர் களோ, அவர்களைத் தாக்குவதற்கு உரிய அடைமொழிகளைத் தங்கள் வசை ஆயுத சாலைகளில் துருவித் தேடினார்கள். பூர்ஷ்வாக்களின் கண்களுக்கு லெனின் எதேச்சாதிகாரியாகவும் கொடிய வன்முறைகளைக் கையாள்பவராகவும் தோற்றம் அளித்தார். அந்தக் காலத்தில் அவர்கள் அவரை முதல் அமைச்சர் லெனின் என்று குறிப்பிடுவதில்லை, “கொடுங்கோலர் லெனின்,” “சர்வாதிகாரி லெனின்” என்றே குறிப்பிட்டு வந்தார்கள். வலதுசாரி சோஷலிஸ்டுகளோ, பழைய ரொமானவ் வம்ச ஜார் இரண்டாம் நிக்கொலாயின் இடத்துக்குப் புதிய ஜார் நிக்கொலாய் லெனின் வந்திருப்பதாகக் கூறினார்கள்.

“நமது புதிய ஜார் மூன்றாம் நிக்கொலாய் நீடூழீ வாழ்க!” என்று ஏளனத்துடன் முழக்கம் இட்டார்கள்.

ஒரு குடியானவன் சம்பந்தப்பட்ட வேடிக்கை நிகழ்ச்சியை அவர்கள் களிப்புடன் பயன்படுத்திக்கொண்டார்கள். குடியானவர்கள் பிரதிநிதிகளின் சோவியத் தனது ஆதரவைப் புதிய சோவியத் அரசாங்கத்துக்கு அளித்து ஸ்மோல்னிய மாளிகையின் ஹால்களில் பிரமாதமான கொண்டாட்டம் நிகழ்த்தி அன்பு மழை பொழிந்த இரவில் நடந்தது இது. அறிவுஜீவிகள் நாட்டுப்புறத்தின் சார்பில் பேசினார்கள். பின்பு நாட்டுப்புறத்தினர் தம் சார்பில் தாமே பேச வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. குடியானவனுக்குரிய மேலங்கி அணிந்த ஒரு கிழவன் மேடைக்கு வந்தான். நரைத்த தாடியினூடாகச் சிவுசிவென்று ரோஜா நிறத்தில் காட்சி தந்தது அவன் முகம். கண்கள் பளிச்சிட்டன. நாட்டுப்புற வழக்கு மொழியில் அவன் பேசினான்.

“தவாரிஷ்ஷி”7 பதாகைகள் பறக்க, இசை முழங்க நாம் இன்று இரவு இங்கு வந்தபோது நான் பெருத்த மகிழ்ச்சி அடைந்தேன். என் கால்கள் தரையில் பரவவில்லை. நான் காற்றிலே பறந்து வந்தேன். அறியாமை இருட்டு சூழ்ந்த கிராமத்தில் வசிக்கும் இருண்ட அறிவு கொண்ட மக்களில் நானும் ஒருவன். நீங்கள் எங்களுக்கு ஒளி தந்தீர்கள். ஆனால் எங்களுக்கு அது புரியவே இல்லை. விஷயத்தைத் தெரிந்து கொண்டு வரும்படி அதனால்தான் கிராமத்தார் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்கள். முன்பெல்லாம் ‘சினோவ்னிக்கி’8 ரொம்பக் கடுமையாக இருப்பார்கள். எங்களை அடிப்பார்கள். இப்போதோ அவர்கள் மிகவும் மரியாதையாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் நாங்கள் அரண்மனைகளின் வெளிப்புறத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. இப்போதோ நாங்கள் நேரே அவற்றுக்குள் போகலாம். முன்பெல்லாம் நாங்கள் ஜாரைப் பற்றிப் பேச மட்டுமே செய்தோம். இப்போதோ, ‘தவாரிஷ்ஷி’, நான் ஜார் லெனினுடன் நாளைக்கே கைகுலுக்கலாம் என்று எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுள் அளிப்பாராக!”

கூட்டத்தில் வெடிச் சிரிப்பு பீறிட்டது. கரகோஷம் அதிர்ந்தது. சிரிப்பு, கைதட்டல் முழக்கங்களால் ஆச்சரியம் அடைந்து கிழக் குடியானவன் உட்கார்ந்துவிட்டான். மறுநாள் அவன் லெனினிடம் அழைத்துச் செல்லப்பட்டான். பின்பு பிரேஸ்த்லித்தோவ்ஸ்க்கில் அவன் குடியானவர்களின் பிரதிநிதியாக இருந்தான்.

குழப்பம் நிறைந்த அந்த வாரங்களில் எஃகு போன்ற சித்தவுறுதியும் எஃகு நரம்புகளுமே நிலைமையைச் சமாளித்திருக்க முடியும். கண்டிப்பான ஒழுங்கும், கட்டுப்பாடும் எல்லா இலாக்காக்களிலும் தென்பட்டன. தொழிலாளர்களின் மனப்பாங்கு கடுமையாகி விட்டதையும், சோவியத் இயந்திரத்தின் தளர்வான பகுதிகள் இறுக்கப்பட்டு விட்டதையும் காண முடிந்தது. இப்போது சோவியத் செயலில் இறங்கியபோது, உதாரணமாக பாங்கு அமைப்பைக் கைப்பற்றியபோது அது கடுமையாகவும், திறம்படவும் தாக்கியது. எங்கே சட்டெனச் செயலாற்ற வேண்டும் என்பதை லெனின் அறிந்திருந்தார். அதே சமயம் எங்கே மெதுவாகச் செல்ல வேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. தொழிலாளர்களின் பிரதிநிதிக் குழு ஒன்று லெனினிடம் வந்து தங்கள் தொழிற்சாலையைத் தேசிய உடமையாக்கும் ஆணையை அவர் பிறப்பிக்க முடியுமா என்று கேட்டது.

“முடியுமே” என்று ஒரு வெற்று நமூனாவை எடுத்தார் லெனின். “இதில் என் பங்கு மிக எளியது. நான் செய்ய வேண்டியதெல்லாம் இந்த நமூனாக்களை எடுத்து இதோ இந்த இடத்தில் உங்கள் தொழிற்சாலையின் பெயரை எழுதி, இதோ இங்கே என் பெயரை ஒப்பமிட்டு, கமிஸாரின் பெயரை இந்த இடத்தில் எழுதுவதுதான்” என்று கூறினார். தொழிலாளர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து அது “மிக நல்லது” என்றார்கள்.

“ஆனால் இந்த நமூனாவில் நான் கையெழுத்திடுவதற்கு முன் உங்களைச் சில கேள்விகள் கேட்க வேண்டும். முதலாவதாக, உங்கள் தொழிற்சாலைக்கு வேண்டிய கச்சாப் பொருள்களை எங்கிருந்து பெறுவது என்பதை அறிவீர்களா?” என வினவினார் லெனின். அவர்கள் தங்களுக்கு அது தெரியாது என்று வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்கள்.

“கணக்கு வைத்துக் கொள்வது உங்களுக்குப் புரியுமா? உற்பத்தியைத் தொடர்ந்து நடத்துவதற்கான முறையைத் தயாரித்து வைத்திருக்கிறீர்களா?” என்று தொடர்ந்து கேட்டார் லெனின். இந்த அற்ப விஷயங்கள் பற்றித் தங்களுக்கு அதிகமாகத் தெரியாது என்று தொழிலாளிகள் கூறினார்கள்.

“கடைசியாக, தோழர்களே, உங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பதற்கான சந்தையைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?” என்று விடாது வினவினார் லெனின்.

“இல்லை” என்று அவர்கள் மீண்டும் பதில் அளித்தார்கள்.

முதலமைச்சர் சொன்னார்: “நல்லது தோழர்களே, உங்கள் தொழிற்சாலையை எடுத்துக்கொள்வதற்கு நீங்கள் இன்னும் ஆயத்தமாகவில்லை என்று உங்களுக்குப் படவில்லையா? வீடு சென்று இந்த விஷயங்களைப் பற்றி திட்டம் வகுங்கள். அது கடினமாயிருக்கும் நீங்கள் பல தவறுகள் செய்வீர்கள். ஆனால் கற்றுக் கொள்வீர்கள். பிறகு சில மாதங்கள் சென்றதும் வாருங்கள். உங்கள் தொழிற்சாலையைத் தேசிய உடைமை ஆக்குவோம்”

  1. லெனினது சொந்த வாழ்வில் கட்டுப்பாடான ஒழுங்குமுறை

சமூக வாழ்வில் எத்தகைய கண்டிப்பையும் கறாரையும் லெனின் புகுத்தினாரோ அதையே சொந்த வாழ்விலும் அவர் காட்டினார். ஷ்சியும் (முட்டைக் கோசு சூப்), போர்ஷ்சும் (காரட் சூப்), ரொட்டித் துண்டுகளும் தேநீரும் பொங்கலுமே ஸ்மோல்னிய கூட்டத்தினரின் தினப்படிச் சாப்பாட்டின் அம்சங்களாக விளங்கின. லெனினும் அவருடைய மனைவியும் சகோதரியும் இவற்றையே உணவாகக் கொண்டார்கள். புரட்சி வீரர்கள் தங்கள் இடங்களில் நாள்தோறும் பனிரண்டு முதல் பதினைந்து மணி நேரம் வரை உழைத்தார்கள். லெனினோ, தினந்தோறும் பதினெட்டு முதல் இருபது மணி வரை வேலை செய்தார். நூற்றுக்கணக்கான கடிதங்களைத் தன் கைப்பட எழுதினார். வேலையில் ஒரேயடியாக ஆழ்ந்து, மற்ற எல்லாவற்றையும் சொந்த ஆகாரத்தைக் கூட அவர் மறந்துவிடுவார். லெனின் உரையாடலில் ஈடுபட்டிருக்கையில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவருடைய மனைவி ஒரு கிளாஸ் தேநீருடன் வந்து “இந்தாருங்கள், ‘தவாரிஷ்’ இதைப் பருக மறந்துவிடாதீர்கள்” என்பாள். பெரும்பாலும் தேநீர் சர்க்கரை அற்றதாகவே இருக்கும். ஏனெனில் மற்ற மக்களுக்குக் கிடைத்த அளவே ரேஷன் லெனினும் பெற்று வந்தார். படை வீரர்களும் அஞ்சல்காரர்களும் பெரிய, வெற்றான, பாரக்குகள் போன்ற அறைகளில் இரும்புக் கட்டில்களில் படுத்து உறங்கினார்கள். லெனினும் அவருடைய மனைவியும் அவ்வாறே செய்தார்கள். களைத்துச் சோர்ந்து போய், கரடுமுரடான கட்டில்களில் விழுந்து உடைகளைக்கூட மாற்றாமல் அவர்கள் உறங்கிப் போவார்கள். எந்த அவசர நிலைமையிலும் எழுந்திருப்பதற்கு ஆயத்தமாக இந்தத் தியாகங்களை லெனின் மேற்கொண்டது துறவு மனப்பான்மை காரணமாக அல்ல. கம்யூனிஸத்தின் முதல் கோட்பாட்டை அவர் நடப்பில் அனுசரித்தார், அவ்வளவுதான்.

எந்தக் கம்யூனிஸ்ட் அதிகாரியின் சம்பளமும் சராசரித் தொழிலாளியின் சம்பளத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது என்பது இந்தக் கோட்பாடுகளில் ஒன்று. அதிகபட்சம் மாதத்துக்கு 600 ரூபிள்கள் என அது நிச்சயிக்கப்பட்டது. பிற்பாடு இது உயர்த்தப்பட்டது. தற்போது ருஷ்யாவின் முதலமைச்சர் 200 டாலர்களுக்கும் குறைவான தொகையே மாதச் சம்பளமாகப் பெறுகிறார்.

“நேஷனல்” ஹோட்டலில் இரண்டாவது மாடியில் லெனின் ஓர் அறை எடுத்துக்கொண்டபோது நான் அந்த ஹோட்டலில் இருந்தேன். சோவியத் அரசாங்கம் செய்த முதல் வேலை ஆடம்பரமான, மிகுந்த விலையுள்ள வெஞ்சன வகைகளை ரத்து செய்ததுதான். ஒரு வேளைச் சாப்பாட்டில் அடங்கியிருந்த பற்பல வெஞ்சனங்கள் இரண்டாகக் குறுக்கப்பட்டன. சூப்பும் இறைச்சியும் அல்லது சூப்பும் பொங்கலும் ஒருவர் சாப்பிடலாம். முதன்மைக் கமிஸாரிலிருந்து சமையலறை வேலைக்காரப் பையன் வரை எந்த நபருக்கும் ஒரு வேளையில் கிடைக்கக்கூடியவை இவைதாம். ஏனென்றால், “எல்லோருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை ஒருவருக்கும் கேக் கிடையாது” என்று கம்யூனிஸ்டின் கொள்கையில் எழுதப்பட்டிருக்கிறது. சில நாட்களில் ரொட்டிகூட மக்களுக்கு மிகக் கொஞ்சமே கிடைத்தது. எனினும் ஒவ்வொரு மனிதனும் லெனின் பெற்ற அளவு ரொட்டி பெற்றான். சிற்சில நாட்களில் ரொட்டியே இருக்காது. அந்த நாட்களில் லெனினும் ரொட்டி இல்லாமல் இருந்து விடுவார். லெனினைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டதை அடுத்த நாட்களில் அவர் சாவுக்கு அருகே இருந்தபோது முறையான ரேஷன் கார்டு மூலம் பெற முடியாததும் மார்க்கெட்டில் யாரேனும் கள்ள வியாபாரியிடமிருந்து மட்டுமே வாங்கக்கூடியதுமான ஒரு உணவுப் பண்டத்தை அவர் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். நண்பர்கள் எவ்வளவோ மன்றாடியும் முறையான ரேஷனின் பகுதி அல்லாத எதையும் தொடுவதற்கு லெனின் மறுத்துவிட்டார்.

பிற்பாடு லெனின் உடல் தேறிக்கொண்டிருந்த காலத்தில் அவரது ஊட்டத்தை அதிகரிப்பதற்கு அவருடைய மனைவியும் சகோதரியும் ஒரு யுக்தி கண்டுபிடித்தார்கள். லெனின் தமது ரொட்டியை மேஜையின் செருகறையில் வைப்பதைக் கண்ட அவர்கள் அவர் இல்லாத வேளைகளில் அவருடைய அறைக்குள் ஓசைப்படாமல் வந்து அவருடைய சேமிப்பில் ஒரு துண்டு ரொட்டியைச் சேர்த்து விடுவார்கள். வேலையில் ஆழ்ந்திருக்கும் லெனின் செருகறைக்குள் கையை விட்டு ஒரு துண்டு ரொட்டியை கண்டு அது அதிகப்படியானது என்ற உணர்வே இன்றித் தின்பார்.

ஐரோப்பிய, அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு ஒரு கடிதத்தில் லெனின் பின்வருமாறு எழுதினார்: “ஆந்தாந்த்9 இராணுவத் தலையீடு காரணமாகத் தற்போது ருஷ்ய மக்களுக்கு விதிக்கப்பட்டிருப்பது போன்ற இவ்வளவு ஆழ்ந்த துன்பம், பட்டினியின் இத்தகைய வேதனை அவர்கள் முன் ஒருபோதும் அனுபவித்ததில்லை!” ஆனால் எந்த மக்களைப் பற்றி அவர் எழுதுகிறாரோ அவர்களுடன் சேர்ந்து அதே துன்ப துயரங்களை லெனினும் அனுபவித்து வந்தார்.

லெனின் ஒரு மாபெரும் நாட்டின் வாழ்க்கையைச் சூதாட்டத்தில் பணயம் வைப்பதாகவும் ருஷ்யாவின் நோயுற்ற உடல் மீது தமது கம்யூனிஸச் சூத்திரங்களைச் சோதனை செய்து பார்க்கும் சோதனையாளர் அவர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இந்தச் சூத்திரங்கள்பால் நம்பிக்கை குறைந்தவர் என்று அவரை யாரும் குறை கூற முடியாது. இவற்றை அவர் ருஷ்யாவின் மீது மட்டுமே அல்ல, தம் மீதும் சோதனை செய்து பார்க்கிறார். மற்றவர்களுக்குக் கொடுக்கும் தமது மருந்தைத் தாமும் சாப்பிட அவர் தயாராயிருக்கிறார். கம்யூனிஸக் கோட்பாடுகளுக்குத் தொலைவிலிருந்து அஞ்சலி செலுத்துவது ஒரு விஷயம். கம்யூனிஸம் புகுத்தப்படுவதனால் இன்றியமையாது ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை நிகழ்ச்சிக் களத்தில் லெனின் போன்று பொறுமையுடன் அனுபவிப்பது பெரிதும் வேறு விஷயம்.

ஆனால் கம்யூனிஸ அரசைத் தொடங்கி வைப்பது முற்ற முழுக்கத் துயர் நிறைந்ததாகச் சித்திரிக்கப்படக் கூடாது. மிக மிகக் கஷ்டம் நிரம்பிய காலத்தில்கூட ருஷ்யாவில் கலையும் இசை நாடகமும் செழித்து வளர்ந்தன. காதலும் தன் பங்கை ஆற்றத்தான் செய்தது. புரட்சி மன்றத்தின் பிரதானப் பாத்திரங்களைக்கூட அது பற்றிவிட்டது. பல துறைகளில் திறமை சான்ற கொலன்தாய்10 கடற்படை வீரர் தீபேன்கோவை மணந்துகொண்டார் என்று திடீரென ஒருநாள் செய்தி கிடைத்ததும் நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம். பின்னர் நார்வா என்னும் இடத்தில் ஜெர்மானியருக்கு எதிரே பின்வாங்கத் தன் படைப்பிரிவுக்கு உத்தரவிட்டதன் பொருட்டு தீபேன்கோ கண்டனத்துக்கு ஆளானார். பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அவர் அவமதிப்புடன் அகற்றப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு லெனின் ஏற்பு அளித்தார். கொலன்தாய் இயல்பாகவே மனத்தாங்கல் அடைந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கொலன்தாயுடன் பேசுகையில் அதிகார நஞ்சு லெனினுடைய இரத்த நாளங்களில் புகுந்து அவருடைய ஆணவத்தை ஒரேயடியாக உப்பச் செய்துவிட்டது போலும். எல்லா மனிதர்களையும் போன்றே அவரும் அதிகார வெறிக்கு ஆளாகிவிட்டார் போலும் என்று நான் குறிப்பிட்டேன். “இப்போது எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது எனினும் எந்தக் காரியத்தையும் லெனின் சொந்த நோக்கங்களால் தூண்டப்பட்டுச் செய்திருப்பார் என்று பல ஆண்டுகள் வேலை செய்துள்ள தோழர்களில் எவரும் அவரிடம் சுயநலம் துளிக்கூட இருப்பதாக நம்ப முடியாது” என்று பதிலளித்தார் கொலன்தாய்.


4. தொழிலாளர்களால் ஆன செங்காவற்படைப் பிரிவுகள் 1905-07இல் நடந்த முதல் ருஷ்யப் புரட்சியின்போது முதன்முதலாக உருவாயின. 1917இன் முடிவிலும் 1918இன் தொடக்கத்திலும் போல்ஷெவிக்குகளால் தலைமை தாங்கி நடத்தப் பெற்ற இந்தப் பிரிவுகள் புரட்சி எதிர்ப்பை முறியடிக்கும் போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு ஆற்றின. 1918, ஆகஸ்ட் இறுதியில் செங்காவற்படைப் பிரிவுகள் செஞ்சேனையாக ஒன்றாக்கப்பட்டன.

5. ஹில்க்விட் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர். இரண்டாவது இன்டர்நேஷனலில் ஊக்கத்துடன் செயலாற்றிய சீர்திருத்தவாதி.

6. ஹூய்ஸ்மன்ஸ் பெல்ஜிய சோஷலிஸ்ட், இரண்டாவது இன்டர்நேஷனலில் துடியாகச் செயலாற்றியவர்.

7. தோழர்களே என்று பொருள்படும் ருஷ்யச் சொல். (மொ-ர்). 1918, மார்ச் 3ஆம் தேதி பிரேஸ்த்லித்தோவ்ஸ்க்கில் சமாதான உடன்பாடு கையெழுத்தாகியது. ஒருபுறம் சோவியத் ருஷ்யாவுக்கும், மறுபுறம் ஜெர்மனி ஆஸ்திரியஹங்கேரி பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கும் இடையே இந்த உடன்பாடு செய்யப்பட்டது. இதன் நிபந்தனைகள் கடுமையாக இருந்தபோதிலும், சோவியத் ஆட்சியை வலுப்படுத்தவும் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சமாதானம் இன்றியமையாதிருந்ததால் சோவியத் அரசு இந்த உடன்பாட்டைச் செய்து கொண்டது.

8. அதிகாரிகள் என்று பொருள்படும் ருஷ்யச் சொல் (மொ-ர்).

9. “ஆந்தாந்த்” என்பது ஒரு ஏகாதிபத்தியக் கூட்டணி அக்டோபர் புரட்சிக்கு முன் ருஷ்யா இதில் ஒரு உறுப்பினராக இருந்தது. அக்டோபர் புரட்சிக்குப் பின் இந்தக் கூட்டணியின் பிரதான உறுப்பினர்களாகிய பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான் ஆகியவை சோவியத் ருஷ்யாவை எதிர்த்து இராணுவத் தலையீட்டை ஒழுங்கமைத்தன. பிற நாடுகளில் புரட்சி இயக்கத்தைத் தோற்கடிப்பதையும் ஊக்குவித்தன.

10. கொலன்தாய் அமி (1872-1952) – அக்டோபர் புரட்சியில் தீவிரப் பங்கு ஆற்றியவர். புரட்சிக்குப் பின் சில ஆண்டுகள் கமிஸாராக இருந்தார். சர்வதேச மாதர் இயக்கத்தில் ஊக்கத்துடன் பங்காற்றினார். நார்வே, மெக்ஸிக்கோ, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் சோவியத் அரசாங்கத் தூதராகப் பணியாற்றினார்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஜூலை, ஆகஸ்டு 1-15, 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 17-18 | 1990 ஜூலை 16-31 ஆகஸ்டு 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: 
  • ஜனதாதள அரசியல் நெருக்கடி: பேரங்கள் – முறிவுகள் – பேரங்கள்!
  • “ரோமம்” உதிர்க்கிறார் ஜெயலலிதா!
  • கருணாநிதி வீரமணி சோ குமரிஅனந்தன் மூப்பனார் ஜெயலலிதா ???…
    கொலைப்பட்டியல் விண்ணப்பதாரர்கள்
  • டாட்டா பிர்லா கூட்டாளி! பாட்டாளிக்குப் பகையாளி!
  • ஆப்பிரிக்க நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகள் – ஏன்?
  • சீரழிவுக்கு சிவப்புக் கம்பளம்
  • ஈழத்தில் இனப்படுகொலை! துரோகிகளின் பாசாங்கு!
  • மதவெறிக்கட்சி: ஆட்சியின் லட்சணம்!
  • இரத்த வாடையை மறைக்கும் முயற்சி
  • 1989-ம் ஆண்டின் மனித உரிமை மீறல்கள்
  • ஆக்ரா சாதிக் கலவரம் ஓட்டுக்கட்சிகள் கைவரிசை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மக்கள் மீது நம்பிக்கை கொள்வோம்: அதுவே தோழர் லெனின் கற்பித்தது!

ன்று பேராசான் தோழர் லெனினின் 155வது பிறந்தநாள். இந்நாளில் தோழர் லெனினின் பிறந்தநாளைக் கொண்டாடுவது என்பது அவர் வழியில் நடப்பதற்கு உறுதியேற்பதே!

அன்பார்ந்த தோழர்களே!

புரட்சியாளர் லெனினின் அண்ணன் அலெக்சாண்டர் கொடுங்கோன்மை ஜார் அரசால் கொல்லப்பட்டதிலிருந்தே மார்க்சியம் குறித்தான லெனினின் தேடல் தொடங்கியது. அண்ணனின் இறப்பு ஏன், எதற்காக நடந்தது என்று தெரிந்துகொள்ள முயன்றதன் விளைவாகவே அவர் மார்க்சியத்தையும் கம்யூனிசத்தையும் அறிந்து கொள்கிறார்.

இதன் விளைவு, கஸானில் பெடோஸியெவ் என்ற ஒருவரால் நிறுவப்பட்ட மார்க்சியக் குழுவில் உறுப்பினராகச் சேர்கிறார். அதன் பிறகு சமராவிற்கு லெனின் அப்புறப்படுத்தப்பட்டார். அங்கு வெகு சீக்கிரத்தில் லெனினை முக்கிய உறுப்பினராகக் கொண்ட ஒரு மார்க்சியக் குழு நிறுவப்படுகிறது.

1893-ஆம் ஆண்டின் முடிவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு லெனின் போய் சேர்ந்தார். 1895-ஆம் ஆண்டு செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் இருந்த மார்க்சிய குழுக்கள் யாவற்றையும் (கிட்டத்தட்ட 20 குழுக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது) லெனின் ஒன்றிணைக்கிறார். அதற்கு “தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்ட சங்கம்” என்று பெயரிடப்படுகிறது.

1905-ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள மிகப்பெரிய தொழிற்சாலையான ஒர்க்ஸில் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தம் தொடங்கியது. தொழிலாளி வர்க்கத்தின் புரட்சியை ஒழித்துக்கட்டும் நோக்கில் ஜனவரி 9 அன்று தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தருவதாகக் கூறி கோபன் என்ற பாதிரியார் குளிர்கால அரண்மனைக்கு மக்களுடன் பேரணியாகச் சென்று ஜார் மன்னனிடம் கையேந்த வைத்தான். அமைதி வழியில் பதாகைகளை ஏந்திச் சென்ற தொழிலாளர்கள் மீது படையை ஏவிவிட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொடுன்கோலன் ஜார் சுட்டுக்கொன்றான்.

இச்சம்பவத்திற்குப் பிறகு ரஷ்யாவில் புரட்சி பற்றிப் பரவத் தொடங்கியது. இப்புரட்சியின்போது லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள்தான் தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் உறுதியாக நின்று வழிகாட்டினர். ஆனால், மென்ஷ்விக்குகளோ தொழிலாளர்களை குறை கூறிக் கொண்டிருந்தனர். மக்கள் மீது அவநம்பிக்கை கொண்டனர். பாட்டாளி வர்க்கம் முதிர்ச்சியடையவில்லை, அவ்வர்க்கத்தால் புரட்சிக்குத் தலைமை தாங்க முடியாது என ஒப்பாரி வைத்தனர். ஆனால், 1917-இல் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ரஷ்யாவில் நடந்த புரட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் மீதும் பரந்துபட்ட மக்களின் மீதும் போல்ஷ்விக்குகள் கொண்டிருந்த நம்பிக்கைக்கான காரணத்தை இவ்வுலகிற்குப் பறைசாற்றியது.


படிக்க: “மாற்று” பற்றிய திட்டம்: லெனினியத்தின் சிறப்புகளில் ஒன்று!


இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச கும்பலானது இந்தியாவில் பாசிசத்தை நிறுவி வருகிறது. இத்தகையச் சூழலில், மக்களுக்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டாமல், “மக்கள் சரியில்லை” என்று அங்கலாய்க்கும் பேர்வழிகள் இங்கும் இருக்கின்றனர். வறட்டுத்தனமாக மக்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையை அமல்படுத்திவரும் அரசானது மாணவர்-இளைஞர்களை போதை பழக்கத்திற்கும் நுகர்வு கலாச்சாரத்திற்கும் ஆட்படச் செய்து கொண்டிருக்கிறது. இதனால், சமூகச் சூழலிலிருந்து மாணவர்-இளைஞர்களின் கவனம் திட்டமிட்டே திசைதிருப்பப்படுகிறது.

இதனை மட்டும் எடுத்துக்காட்டி, “மாணவர்கள் அரசியலற்று போய்விட்டனர்” என சில ‘இடதுசாரி’ இயக்கங்கள் சலித்துக் கொள்கின்றன. இவ்வியக்கங்கள் இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை எனினும் தங்களது கட்டுரைகளிலும் தனிப்பட்ட விவாதங்களிலும் இக்கருத்தை வெளிப்படுத்துகின்றன. இதன் மூலமாக, தங்களது செயலின்மையை மறைத்துக் கொண்டு, அணிகளின் கண்களுக்குக் கட்டுப்போட்டுவிடுகின்றன. தமது அணிகள் தங்களை மட்டுமே சுற்றிவரும் உத்தியைக் கையாள்கின்றன.

ஆனால், இவ்வியக்கங்களில் இருக்கும் இளைஞர்கள், மாணவர்கள் சிந்திக்க வேண்டும். மாணவர்களைக் குறை சொல்லவதற்கு புரட்சிகர அமைப்புகள் எதற்கு? மாணவர்கள் மீது திணிக்கப்படும் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்து, அதன் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் சூழ்ச்சிகளைப் புரியவைத்து, அவர்களை அரசியல்படுத்தி சமூக அநீதிக்கு எதிராக நிறுத்த வேண்டியதுதான் புரட்சிகர இயக்கங்களின் வேலையே ஒழிய அவர்களை குறைகூறிக் கொண்டிருப்பது அல்ல.

இப்பிரிவினர் தங்களுக்குத் தெரிந்த ஓரிரு வழிமுறைகளை மட்டும் கொண்டு மாணவர்களை அணுகிவிட்டு, அதில் மாணவர்கள் ஈடுபாடு காட்டவில்லை என்பதால் மாணவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மாறாக, தங்களையும் மாணவர்களை அமைப்பாக்க தாங்கள் மேற்கொண்ட வடிவங்களையும் பரிசீலிப்பதோ மாற்று வழிமுறைகளைக் கையாள்வதோ இல்லை. இது மாணவர்கள்-மக்கள் மீதும் புரட்சியின் மீதும் இவர்கள் கொண்டிருக்கும் அவநம்பிக்கையின் வெளிப்பாடன்றி வேறில்லை.


படிக்க: லெனின் 155: பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் முறியடிப்போம்! 


ஆனால், மாணவர்களுக்கு உகந்த வடிவத்தை முன்வைத்துச் செயல்பட்டால் நிச்சயம் மாணவர்களை அரசியல்படுத்தி அமைப்பாக்க முடியும். ஏனென்றால், இன்றைக்கு இருக்கக்கூடிய மாணவர்கள் ஆற்றல் மிக்கவர்கள், சமூகப் பொறுப்புணர்வு கொண்டவர்கள்!

அப்படியாகத்தான் எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர் சமுதாயத்தைப் பார்க்கிறது. மாணவர்களை அரசியல்படுத்துவதற்கும் அமைப்பாக்குவதற்கும் இடதுசாரி இயக்கங்களின் மாணவர் அமைப்புகள் பொருத்தமான வடிவத்தை மேற்கொள்ளவில்லை என்பதே எமது பரிசீலனையாக இருக்கிறது.

மாணவர்கள் மத்தியில் சாதி ஒழிப்புச் சிந்தனையையும் பாலின சமத்துவ சிந்தனையையும் சோசலிச சிந்தனையையும் விதைக்கும் வகையில், “லவ் ஆல், நோ கேஸ்ட்” என்ற இயக்கத்தை மேற்கொண்டோம். இந்த இயக்கமே மாணவர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

ஆகையால், தோழர்களே!

நாம் மக்கள் மீதும் மாணவர் சமுதாயத்தின் மீதும் பழி சுமத்திவிட்டு நின்று கொள்ளாமல், நம்மைப் பரிசீலனை செய்துகொண்டு மாணவர்களை எப்படி புரட்சிகர இயக்கத்தில் இணைப்பது என்பது பற்றியான விவாதங்களை நடத்தி சரியான வடிவங்களை முன்வைத்துச் செயல்படுவோம்.

அன்றைக்கு ரஷ்யாவில் எப்படி தொழிலாளி வர்க்கத்துக்கு போல்ஷ்விக்குகள் வழிகாட்டினார்களோ, அப்படி நாம் இந்திய உழைக்கும் மக்களுக்கும் மாணவர் சமுதாயத்திற்கும் வழிகாட்டுவோம்!

தன்னலம் கருதாமல் மார்க்சிய-லெனினிய வழியில் மக்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காகப் பாடுபடுவோம்!

அதற்கு ஏப்ரல் 22 பேராசான் லெனினின் 155-வது பிறந்தநாளில் உறுதியேற்போம்!

தோழர்களுக்குப் புரட்சிகர வாழ்த்துகள்!


தீரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 1

  1. லெனினின் இளம் சீடர்கள்

முதன்முறை நான் லெனினை நேரிடையாக அல்ல, ஐந்து இளம் ருஷ்யத் தொழிலாளர்களின் உள்ளங்களிலும், உணர்ச்சிகளிலுமே கண்டேன். 1917ஆம் ஆண்டுக் கோடைக்காலத்தில் பெத்ரோகிராதுக்குத் திரும்பிய நாடுகடந்த ருஷ்யர்களின் பெருவெள்ளத்தின் ஒரு பகுதியாக இருந்தார்கள் இந்த ஐவரும்.

இவர்களுடைய ஊக்கம், அறிவுக்கூர்மை, ஆங்கில ஞானம் ஆகியவற்றால் அமெரிக்கர்கள் இவர்கள்பால் ஈர்க்கப்பட்டார்கள். தாங்கள் போல்ஷெவிக்குகள் என்று அவர்கள் எங்களுக்கு விரைவிலேயே அறிவித்தார்கள். “பார்வைக்கு இவர்கள் அப்படித் தோன்றவே இல்லை” என்றான் ஒரு அமெரிக்கன். சிறிது காலம் வரை அவன் அவர்களது கூற்றை நம்பவே இல்லை. நீண்ட தாடிகளும் அறியாமையும் சோம்பலும் கொண்ட முரட்டுப் போக்கிரிகளின் வடிவில் போல்ஷெவிக்குகளின் படங்களை அவன் செய்தித்தாள்களில் பார்த்திருந்தான். இந்த இளைஞர்களோ, மழித்த முகங்களும், மரியாதையும் நகைச்சுவையும் இனிய சுபாவமும் அறிவு விழிப்பும் வாய்த்திருந்தார்கள். இவர்கள் பொறுப்பை ஏற்க அஞ்சவில்லை. உயிர் கொடுக்க அஞ்சவில்லை, எல்லாவற்றையும் விட ருஷ்யாவில் வியப்பூட்டிய விஷயம் என்னவென்றால், வேலை செய்வதற்கும் இவர்கள் அஞ்சவில்லை என்பதுதான். எனினும் இவர்கள் போல்ஷெவிக்குகள்.

வோஸ்கோவ் நியூயார்க்கிலிருந்து வந்திருந்தான். அங்கே அவன் தச்சர்கள், சிறு தச்சு வேலைக்காரர்கள் சங்கம் நம்பர் 1008இன் ஒழுங்கமைப்பாளனாக இருந்தான். யானிஷேவ் மெக்கானிக்; கிராமப் பாதிரியின் மகனான இவன் உலகின் பல பகுதிகளில் சுரங்கங்களிலும் ஆலைகளிலும் வேலை செய்ததற்குரிய அடையாளங்கள் அவன் உடலில் தென்பட்டன. நேய்பூத் கம்மியன்; இவன் எப்போதும் ஒரு கட்டுப் புத்தகங்களை வைத்திருப்பான். புதிதாகக் கிடைத்த புத்தகத்தைப் பற்றி எப்போதும் ஒரே உற்சாகமாகப் பேசுவான். வொலதார்ஸ்க்கிய இரவும் பகலும் இடைவிடாது அடிமை போல உழைப்பான். பகைவரால் அவன் கொல்லப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன் என்னிடம் சொன்னான்: “அட என்ன வந்துவிடும்! பகைவர்கள் என்னைக் கொன்றுவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோமே! ஐந்து மனிதர்கள் வாழ்நாள் முழுவதிலும் அடைய வேண்டியதைக் காட்டிலும் அதிக இன்பத்தை இந்த ஆறு மாதங்களில் வேலை செய்ததனால் நான் அடைந்துவிட்டேனே.” பீட்டர்ஸ் ஒரு மேஸ்திரி. விரல்கள் பேனாவைப் பிடிக்க வலுவற்றுப் போகும்வரை கொலைத் தண்டனை உத்தரவுகளில் கையெழுத்திடும் இரத்தவெறி கொண்ட கொடுங்கோலன் என்று பத்திரிகைச் செய்திகளில் பிற்காலத்தில் வருணிக்கப்பட்ட இவன், தனது ஆங்கில ரோஜாத் தோட்டத்தையும் நெக்ராஸவின்1 கவிதைகளையும் நினைத்து அடிக்கடி பெருமூச்செறிவான்.

அறிவிலும் உளவுறுதியிலும் லெனின் எல்லா போல்ஷெவிக்குகளுக்கும் மட்டுமே அல்ல, ருஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் உலகம் அனைத்திலும் உள்ள மற்ற எல்லாருக்கும் முன்னணியில் நிற்கிறார் என்று இந்த மனிதர்கள் நிதானமாக எங்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

ஜெர்மன் உளவாளி என்று வருணிக்கப்பட்ட லெனினைப் பற்றி நாள்தோறும் பத்திரிகைகளில் படித்துவந்த எங்களுக்கு, போக்கிரி, துரோகி, அறிவு மழுங்கியவர் என்று பூர்ஷ்வாக்கள் லெனினைப் பகிஷ்கரிப்பதைத் தினந்தோறும் கேட்டு வந்த எங்களுக்கு இந்த இளைஞர்களின் கூற்று விந்தையான போதனையாகப் பட்டது. இது நம்ப முடியாததாகவும் வெறிபிடித்ததாகவும் தொனித்தது. ஆனால் அந்த இளைஞர்கள் முட்டாள்களோ உணர்ச்சி வசப்படுபவர்களோ அல்ல. உலகில் அடிபட்டுத் தேறி இத்தகைய பலவீனங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்தார்கள் அவர்கள். இந்த இளைஞர்கள் வீரவழிபாட்டினரும் அல்ல. போல்ஷெவிக் இயக்கம் மூலதத்துவ ஆற்றலும் ஆவேசமும் கொண்டது எனினும் விஞ்ஞான ரீதியானது. எதார்த்தவாதப் போக்கு உள்ளது, வீரவழிபாட்டுக்கு ஏற்காதது. இவ்வாறிருக்க இந்த ஐந்து போல்ஷெவிக்குகளுமோ, நேர்மையிலும், அறிவுக் கூர்மையிலும் மாண்புமிக்க ஒரு ருஷ்யர் இருக்கிறார், அவர் பெயர் நிக்கொலாய் லெனின்2 என்று பிரகடனம் செய்தார்கள். அந்தக் காலத்தில் அவர் தற்காலிக அரசாங்கத்தால் வேட்டையாடப்பட்ட சட்டத்துக்கு புறம்பானவர்.

இந்த உற்சாகம் கொண்ட இளைஞர்களை பார்க்கப் பார்க்க அவர்கள் தங்கள் ஆசான் என ஏற்றுக்கொண்ட மனிதரைக் காண எங்கள் விருப்பம் மிகுந்துகொண்டு போயிற்று. அவருடைய மறைவிடத்துக்கு அவர்கள் எங்களை அழைத்துப் போவார்களா?

“சற்றுப் பொறுங்கள், அப்புறம் அவரைக் காண்பீர்கள்” என்று சிரித்துக்கொண்டே பதில் அளிப்பார்கள் இளைஞர்கள்.

1917ஆம் ஆண்டு கோடைக் காலம் முழுவதும் இலையுதிர் காலத்திலும் நாங்கள் பொறுமையின்றிக் காத்துக்கொண்டிருந்தோம். கேரென்ஸ்கிய்3 அரசாங்கம் மேலும் மேலும் வலுவிழந்துகொண்டு போவதைக் கண்டோம். நவம்பர் மாதம் 7ந் தேதி அது இறந்து விட்டது என்று போல்ஷெவிக்குகள் தீர்ப்பளித்தார்கள். அதே சமயம் ருஷ்யா சோவியத்துக்களின் குடியரசு என்றும் லெனின் அதன் முதலமைச்சர் என்றும் அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.

  1. லெனினைப் பற்றிய முதல் உளப்பதிவு

தங்கள் புரட்சியின் வெற்றியால் பூரிப்படைந்த தொழிலாளர்களும் படைவீரர்களும் ஸ்மோல்னியின் பிரமாண்டமான ஹாலில் பாடிக் கொண்டு நிறைந்தார்கள். போர்க் கப்பல் “அரோராவின்” பீரங்கிகள் பழைய அமைப்பின் இறப்பையும் புதிய அமைப்பின் பிறப்பையும் கட்டியங்கூறி முழங்கிக் கொண்டிருந்தன. அந்த வேளையில் லெனின் அமைதியாகப் பேச்சாளர் மன்றப் படிகளின் மீது அடி வைத்தார். “தோழர் லெனின் இப்போது காங்கிரஸ் முன் பேசுவார்” என்று அறிவித்தார் தலைவர்.

எங்கள் மனத்தில் இருந்த உருவத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பாரா என்று காண்பதற்காக நாங்கள் எம்பிப் பார்த்தோம். ஆனால் நிருபர்கள் மேஜைக்கு அருகிலிருந்த எங்கள் இருக்கைகளிலிருந்து அவரை முதலில் காண முடியவில்லை. உரத்த ஆரவாரத்திற்கும் வெற்றி முழக்கங்களுக்கும் சீழ்க்கைகளுக்கும் கால்களைத் தரையில் அடிக்கும் சத்தங்களுக்கும் இடையே அவர் மன்றத்தைக் கடந்து, எங்களுக்கு முப்பது அடி தூரத்துக்குள் இருந்த பிரசங்க மேடை மேல் ஏறினார். இப்போது நாங்கள் அவரைத் தெளிவாகக் கண்டோம். எங்கள் நெஞ்சு விழுந்து போயிற்று.

நாங்கள் உருவகப்படுத்தி வைத்திருந்ததற்கு அநேகமாக எதிரிடையாக இருந்தார் அவர். வாட்டசாட்டமாகவும் மிடுக்குடனும் தோற்றம் அளிப்பதற்குப் பதில் அவர் குட்டையாக, கட்டுக் குட்டென்று இருந்தார். அவருடைய தாடியும் தலைமயிரும் முரடாக கலைந்து கிடந்தன.

கைதட்டல் புயலை அடக்கிய பின், அவர், “தோழர்களே இப்போது நாம் சோஷலிஸ அரசை நிறுவும் வேலையை மேற்கொள்வோம்” என்று கூறினார். பிறகு அவர் கிளர்ச்சி அற்ற, விவகார ரீதியான விவாதத்தில் இறங்கினார். அவருடைய குரலில் சொல்வன்மை அல்ல, ஒரு வகைக் கடுமையும் வறட்சியும் கொண்ட தொனி இருந்தது. தமது அரைக் கோட்டின் தோள் துளைகளுக்குள் கட்டை விரல்களை நுழைத்துக் கொண்டு, குதிகால்களில் முன்னும் பின்னும் சாய்ந்தாடினார். கட்டற்ற இளமையும் வலிமையும் வாய்ந்த இந்த மனிதர்களின் உள்ளங்கள் மீது அவருடைய ஆதிக்கத்துக்குக் காரணமான மறைந்த காந்தக் கவர்ச்சிப் பண்புகளைக் கண்டறியும் நம்பிக்கையுடன் நாங்கள் சுமார் ஒரு மணி நேரம் அவரது பேச்சைக் கேட்டோம். ஆனால் பயனில்லை.

எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. போல்ஷெவிக்குகள் தங்கள் வீச்சினாலும், துணிவினாலும் எங்களைக் கவர்ந்துவிட்டார்கள். அவர்களுடைய தலைவரும் அவ்வாறே செய்ய வேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இந்தக் கட்சியின் தலைவர் இந்தக் குணங்களின் பருவடிவாகவும் இயக்கம் அனைத்தின் பொழிப்பாகவும் ஒருவகை அதி போல்ஷெவிக்காக எங்கள் முன் வரவேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். மாறாக, அவரோ மென்ஷெவிக் போல, அதிலும் மிகச் சிறு மென்ஷெவிக் போலத் தோற்றம் அளித்தார்.

“இவருக்குக் கொஞ்சம் நல்லுடை அணிவித்துவிட்டால் சிறு பிரெஞ்சு நகர் ஒன்றின் பூர்ஷ்வா மேயராகவோ பாங்கராகவோ இவரைக் கருத முடியும்” என்று கிசுகிசுத்தான் ஆங்கிலேய நிருபன் ஜூலியஸ் வெஸ்ட்.

“ஆம், மிகவும் பெரிய வேலைக்கு மிகவும் சிறிய மனிதர்” என்று நீட்டி முழக்கினான் அவனுடைய கூட்டாளி.

போல்ஷெவிக்குகள் மேற்கொண்டுள்ள சுமை எவ்வளவு கனமானது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். இதைச் சுமக்க அவர்களால் முடியுமா? அவர்களுடைய தலைவர் வலியவராக எங்களுக்கு முதல் பார்வைக்குத் தோன்றவில்லை.

இவ்வளவு தூரம் முதல் உளப்பதிவை விவரித்தேன். ஆனால், சாதகமற்ற முதல் மதிப்பீட்டிலிருந்து தொடங்கிய நான் ஆறு மாதங்களுக்கெல்லாம் வோஸ்கோவ், நேப்பூத் பீட்டர்ஸ், வொலதார்ஸ்க்கிய், யானிஷேவ் ஆகியோரின் முகாமில் சேர்ந்துவிட்டேன். அவர்கள் கருத்துப்படி ஐரோப்பாவின் முதல் மனிதரும் ராஜதந்திரியும் நிக்கொலாய் லெனினே ஆவார்.


1. நெக்ராஸவ், நி. அ (1821-1877) ருஷ்ய மகாகவி புரட்சிகர ஜனநாயகவாதி.

2. நிக்கொலாய் லெனின் ஆசிரியர் குறிப்பிடுவது வி.இ. லெனினின் பல புனைபெயர்களில் ஒன்று.

3. அபி. கேரென்ஸ்கிய், 1917இல் ருஷ்யாவில் பல்வேறு கூட்டுக்களால் அமைந்த தற்காலிக அரசாங்கத்தின் தலைமை அமைச்சர்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின் 155: பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் முறியடிப்போம்! 

கம்யூனிசப் பேராசான் தோழர் லெனின் 155 ஆவது பிறந்தநாள்!

பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் முறியடிப்போம்! 

ப்ரல் 22 – உலகின் ஆறில் ஒரு பங்கு நிலப்பரப்பில் புரட்சியின் மூலம் முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோசலிசத்தை நிறுவிக் காட்டிய தோழர் லெனினின் 155வது பிறந்தநாள்.

ரசியாவில் 1905 இல் நடைபெற்ற புரட்சியானது ரசிய மக்களுக்கு தங்களின் விடுதலைக்குத் தலைமையேற்கப் போவது போல்ஷ்விக்குகள் தான் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது. 1917 நவம்பர் புரட்சியில் அதுதான் நடந்தது.

1905 ஆம் ஆண்டு, ஜனவரி 3 அன்று, செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள மிகப்பெரிய தொழிற்சாலையான புடிலோவ் ஒர்க்ஸில் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, போலீசின் கைக்கூலியான கோபன் என்ற பாதிரியாரின் தலைமையில் ஜனவரி 9 அன்று ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, குளிர்கால அரண்மனைக்குப் பேரணியாகச் சென்று, ஜார் மன்னனிடம் கையேந்துவது என்ற துரோகத் திட்டம்தான் அது. இதன் மூலம் தொழிலாளி வர்க்கப் புரட்சியை ஒழித்துக் கட்டுவதுதான் நோக்கம்.

அவ்வாறு சென்ற தொழிலாளர்கள், ஜாரின் படைகளால் ஆயிரக்கணக்கான பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்துயரச் சம்பவம் ‘இரத்த ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. இச்சம்பவத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை போராட்டத்தின் மூலம் மட்டுமே, புரட்சியின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதை நடைமுறையிலிருந்து உணர்ந்தார்கள். “ஜார் நமக்கு துப்பாக்கிக் குண்டுகளைக் கொடுத்தான், இப்போது நாம் அவனுக்கு அதைத் திருப்பிக் கொடுப்போம்” என்று முழங்கினார்கள்.

இச்சம்பவத்திற்குப் பின் ரசியாவில் புரட்சி பற்றிப் பரவத் தொடங்கியது. போல்ஷ்விக்குகள்தான் தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் உறுதியாக நின்று வழிகாட்டினார்கள். ஆனால் மென்ஷ்விக்குகளோ, தொழிலாளிகளைக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள்.

1905 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கிய புரட்சிப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு, ஜாரின் மந்திரி ஸ்டாலோபின் நாடெங்கும் தூக்குமேடைகளைத் தீர்மானித்தான். பல்லாயிரக்கணக்கான புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர். ஸ்டாலோபின் பிற்போக்குக் காலத்திலும் தோழர் லெனினின் தலைமையில் போல்ஷ்விக்குகள் மட்டுமே உறுதியாகப் புரட்சியைப் பற்றி நின்றனர்.

மென்ஷ்விக்குகளோ சந்தர்ப்பவாத நிலையெடுத்து தொழிலாளி வர்க்கத்துக்கும், புரட்சிக்கும் துரோகமிழைத்தனர். மார்க்சியத் தத்துவ அடிப்படைகளின் மீதே போர் தொடுத்தனர். அத்துடன் கட்சி கலைப்புவாதத்தையும் முன்வைத்தனர்.


படிக்க: இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொலை


மென்ஷ்விக் கும்பலின் சந்தர்ப்பவாதத்தை சித்தாந்த ரீதியாக முறியடிக்கும் வரலாற்றுக் கடமை லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகளையே சார்ந்திருந்தது. 1909 இல் “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூலை எழுதி, சித்தாந்த ரீதியாக சந்தர்ப்பவாதத்தை முறியடித்தார்.

தொழிலாளி வர்க்கம் புரட்சியில் போல்ஷ்விக்குகளின் தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு, 1905 புரட்சி மற்றும் ஸ்டோலோபின் அடக்குமுறை ஆகிய காலகட்டங்களில், தோழர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறையிலும் தொழிலாளி வர்க்கத்தின் பக்கமும், புரட்சியின் பக்கமும் உறுதியாக நின்றதே அடிப்படைக் காரணமாகும்.

இதனை இன்றைய சூழலோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். இந்தியாவில் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, பாசிச எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதற்கு நாம் ஆசான் லெனினிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

பாசிஸ்டுகளை நாடாளுமன்றத்தில் வீழ்த்தி விட முடியும் என்றோ, பாசிச எதிர்ப்பு என்றால் நிபந்தனையின்றி தி.மு.க-வை ஆதரிக்க வேண்டும் என்றோ, இந்தியாவில் பாசிசத்தை மென்மைப் போக்கு கொண்டதாக வரையறுக்கும் சி.பி.எம்-இன் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளைக் கொண்டோ ஒருபோதும் பாசிசத்தை வீழ்த்த முடியாது. இவையனைத்தும் முதலாளித்துவ சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளே.

பாசிசத்தை நேருக்கு நேர் களத்தில் மட்டுமே, மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலமே வீழ்த்த முடியும் என்பதை இந்தியா முழுவதும் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்துகின்றன.

ஸ்டாலோபின் பிற்போக்கு அடக்குமுறைக் காலத்தில் கட்சியை விட்டு ஓடிய கலைப்புவாதிகளிடம் இருந்தும், திரிபுவாதிகளிடம் இருந்தும் மார்க்சியத் தத்துவத்தைப் பாதுகாத்தார் தோழர் லெனின்.

தோழர் லெனின் காட்டிய பாதையில், கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் தோலுரிப்போம். உழைக்கும் மக்களின் நலனைச் சார்ந்து உறுதியான நிலைப்பாட்டில் ஊன்றி நிற்போம். மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்! ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவோம்!


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 ஜூலை, 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 16 | 1990 ஜூலை 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கட்டுப்பாடற்ற கொள்ளைக்கு கதவு திறந்தது!
  • ஹெக்டே: கலைந்தது பரிசுத்த பிரமை!
  • இ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் கொலை: துரோகிகள் சாவில் பசப்புகளுக்கு இடமில்லை
  • ரௌடித்தனத்தில் போலிகள் வெற்றி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • நீதிமன்ற ஊழல்கள்
  • போலீசு பயங்கரத்துக்குப் பணிய மறுத்த உழைப்பாளிச் சிறுவன்
  • கேள்வி – பதில்
  • சுயநிதிக் கல்வி நிறுவனங்கள்: ஓட்டுப் பொறுக்கிகளின் கொழுத்த வியாபாரம்
  • தி.க. வீரமணியின் தமிழினத் தொண்டு!
  • ஈழம்: மீண்டும் போர்
    ஈழத் தமிழருக்குத் தீர்வு எப்போது?
  • ரஷிய மாற்றங்கள் பற்றி ‘மார்க்சிஸ்டு’களின் நிலைப்பாடு
    மீனுக்குத் தலை! பாம்புக்கு வால்!
  • ஈசன் குரூப் நிறுவனம்
    14 வருட அடக்குமுறை! தொடரும் போராட்டம்!
  • தேவாரம் மீனாட்சிபுரம் – மக்கள் மீது போலீசின் வெறித்தாக்குதல்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜூன் 22: கலவரம் நடத்தத் திட்டமிடும் இந்து முன்னணியின் மாநாட்டைத் தடை செய்!

ஜூன் 22: கலவரம் நடத்தத் திட்டமிடும்
இந்து முன்னணியின் மாநாட்டைத் தடை செய்!

மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் ஜனநாயக சக்திகள் ஆட்சியரிடம் மனு

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 ஜூன், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 15 | 1990 ஜூன் 16-30, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கருணாநிதியின் தமிழினத் துரோகம்
  • திவாரி விவகாரம்: புனிதப் போர்வை
  • கருணாநிதி பிறந்தநாள் விழா: அருவெறுப்பான சுயவிளம்பரம்
  • வி.பி.சிங் அரசு அனத்துப் பிரச்சினைகளிலும் தோல்வி
    ஒப்பனை கலைந்தது!
  • எச்சரிக்கை! போலீஸ் வெறியர்கள்!!
  • பார்ப்பன முதலாளியும் ‘சூத்திர’ அரசும் கூட்டு!
  • ஒரு லட்சம் பேரை விபச்சாரிகளாக்கி ஓராயிரம் பேரை மீட்டார்கள்…
    சமுதாயத் திருப்பமா?
  • மார்க்சிய – லெனினிய ஆசான்கள் மீது: தி.க.வின் வக்கிரம்!
  • கறம்பக்குடி ‘லாக்அப்’ கொலை
    மக்கள் ஆவேசம்! போலீசு ஓட்டம்!
  • பொன்மலை: தொழிலாளர்கள் உறுதி! நிர்வாகம் பணிந்தது!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram