அந்த வரலாறு இன்றும் மாறிவிடவில்லை. நவீன கார்ப்பரேட் சாமியார்களோ புரிந்து கொள்ள வேண்டிய சமூக இயக்கத்தின் ஆன்மாவை மறைத்து விட்டு, நல்லது - கெட்டது, ஒழுக்கம் - சீர்கேடு என்று அகநிலையை, கற்பனையில் மேம்படுத்தும் இருமை முரண்களாக முன்வைக்கின்றனர். ஆனால் சமூக உலைக்களத்தில் புடம் போடப்படாமல் எந்த மனிதனும் தனது வாழ்க்கைப் பிரச்சினையையும், அதன் தாக்கத்தால் நோயுற்றிருக்கும் சிந்தனையையும் மாற்றிவிட முடியாது.
ட்ரம்ப், மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி, போன்றோர் குழுமியிருக்கும் போது ஊடக அறிவாளிகள் பவ்யமாக, பணிவுடன், பிரச்சினைகளற்ற முறையில் கேள்விகள் கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். உண்மையான கேள்விகளை தணிக்கை செய்து கேட்பதற்குத்தான் நிருபர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர். மீறி உண்மையையோ, சொல்லையோ, செருப்பையோ வீசினால் தண்டனை நிச்சயம். எடப்பாடி அரசோ தனக்குப் பிடிக்காத செய்தியை கூறினாலே அரசு கேபிள் இணைப்பிலிருந்து தொடர்புடைய தொலைக்காட்சியை துண்டித்து மிரட்டுகிறது.