Wednesday, February 12, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்275 + 256 + வந்தே மாதரம் = 541

275 + 256 + வந்தே மாதரம் = 541

-

‘வரலாற்று முக்கியத்துவம்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தலாமென்றால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு உண்மையிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுதான். இது பணநாயகமே என்ற உண்மை பலருக்கும் தெரிந்ததுதான். இருந்தாலும், ‘புனிதமான’ அந்த நாடாளுமன்றத்திற்குள் புனிதமற்ற ஒரு சாக்குப்பையில் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கொண்டுவந்து அவிழ்த்துக் கொட்டினார்கள் பாரதிய ஜனதாக்காரர்கள். ஜனநாயகம் என்பது பணநாயகமே என்று தொண்டை வலிக்கக் கத்தி மக்களுக்கு நம்மால் புரிய வைக்கமுடியாததை இந்த ஆடை அவிழ்ப்பு நடனத்தின் மூலம் அம்பலமாக்கிக் காட்டிய அத்வானி கம்பெனிக்கு நம் நன்றி. வந்தே மாதரம்!


இதற்கு முன்னர் உறுப்பினர்கள் விலைபேசப்பட்ட குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றம் சந்தித்திருக்கிறது. சூட்கேஸைக் கூட சந்தித்திருக்கிறது. அந்தரங்கமாகத் தனியறைகளில் மட்டுமே பணத்தை அதன் நிர்வாண வடிவில் தரிசித்திருக்கிறார்கள் நம் உறுப்பினர்கள். இன்று தணிக்கை செய்யமுடியாத நேரலை ஒளிபரப்பில் நாடே அதனைத் தரிசித்தது. இந்த கொடுக்கல் வாங்கல் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனை  ஒளிபரப்புவது நாடாளுமன்றத்தின் உரிமையில் தலையிடுவதாகிவிடும் என்பதால் சபாநாயகரிடம் டேப்பை ஒப்படைத்து விட்டதாகவும் சொன்னார் சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய். வாக்கெடுப்புக்கு முன்னரே அந்த புளூ பிலிமைப் போடு என்று கத்தினார்கள் பாரதிய ஜனதாக்காரர்கள்.  ரேப் சீனைப் போட்டபிறகு கல்யாணம் எப்படி நடத்த முடியும்? தலைமைப் புரோகிதர் சோம்நாத் அதற்கு ஒப்பவில்லை. படம் போட முடியாது. கமிஷன் வேண்டுமானால் போடுகிறேன் என்று தீர்ப்பளித்தார். இப்படியாக மயிரிழையில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது. வந்தேமாதரம்!

முன்னர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு நரசிம்ம ராவ் பணம் கொடுத்த விவகாரம், வாக்கெடுப்புக்குப் பின்னால்தான் அம்பலமானது. இப்போது முன்னரே அம்பலமாகிவிட்டதே, இதனால் வாக்கெடுப்பே செல்லாமல் போய்விடுமோ என்று அரசியல் சட்ட வல்லுநர்களிடம் கேள்வி எழுப்பினார்கள் தொலைக்காட்சிக் காரர்கள். பணம் கொடுத்தது உண்மைதான் என்றாலும், சம்மந்தப்பட்ட உறுப்பினர் கட்சி மாறி ஓட்டுப்போட்டதும் உண்மைதான் என்றாலும், இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்று நிரூபிக்கப்படாத வரை அந்த ஓட்டு செல்லாது என்று கூறமுடியாது என்று விளக்கமளித்தார் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி. மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இந்த உரிமை, நமது நாட்டின் பரிதாபத்துக்குரிய விலைமாதர்களுககு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது. எப்படியோ, குற்றவியல் சட்டத்தின்படியும் ஜனநாயகத்தின் ‘கற்பு’ தப்பித்து விட்டது. வந்தேமாதரம்!

கட்சிகளின் அதிகாரப்பூர்வமான முடிவின்படி உறுப்பினர்கள் வாக்களித்திருந்தால் காங்கிரசுக்கு கிடைத்திருக்க வேண்டிய வாக்குகள் 262. அரசுக்கு எதிரான வாக்குகள் 276. கட்சி விசுவாசத்தைக் கைவிட்டு ‘ஒரு இந்தியன் என்ற முறையில்’ உறுப்பினர்கள் வாக்களித்ததன் விளைவாக 262 என்பது 275 ஆகி விட்டது. நம்பிக்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசிய ராகுல் காந்தி, கட்சிக்காரன் என்ற எல்லையைத் தாண்டி ஒரு இந்தியன் என்ற உணர்வுடன் சிந்திக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுத்தபோது, அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. ஆனால் மாலை 4 மணிக்கு சாக்குப்பையிலிருந்து ‘இந்திய உணர்வு’ கட்டுக்கட்டாக எடுத்துக் காட்டப்பட்ட போதுதான் விசயம் புரிந்தது. சாதி, மதம், இனம், மொழி, கட்சி போன்ற எல்லா வகையான பேதங்களுக்கும் அப்பாற்பட்டு இந்தியர்களை ஒன்றிணைக்கும் உணர்வல்லவா அது! வந்தேமாதரம்!

பிளாசிப்போரில் வெல்வதற்கு ராபர்ட் கிளைவ் மீர்ஜாபருக்கு வழங்கிய பொற்காசுகளை நாடு அன்று கண்டிருக்க வாய்ப்பில்லை. அப்பட்டமான இந்த துரோக ஒப்பந்தத்தின் ஷரத்துக்களோ கட்டுக்கட்டாக  அவைச் செயலரின் மேசையின் மீது வைக்கப்பட்டு நாட்டுக்கே ஒளிபரப்பப்பட்டன. துரோகி என்ற பட்டம் கூட மன்மோகன்சிங்கின் தகுதிக்குச் சற்று அதிகமானது என்று திருவாளர் புஷ் கருதியிருப்பார் போலும்! வாக்கெடுப்பபின் இறுதி முடிவை மரியாதைக்குரிய நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர் அறிவிப்பதற்கு 30 நிமிடங்கள் முன்னதாகவே, அதாவது, 50க்கும் மேற்பட்ட வாக்குகள் எண்ணப்படாமல் இருக்கும்போதே, இந்திய நாடாளுமன்றத்தின் அரசியல் களத்தில் வீரம் செறிந்த முறையில் போரிட்டு இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் காட்டிய மன்மோகன்சிங்கைப் பாராட்டி (For Bravely Soldiering the Deal) அறிக்கை வெளியிட்டது அமெரிக்க வெள்ளை மாளிகை. டெல்லியின் வீதிகளில் காங்கிரசுக் காரர்கள் தவுசண்டு வாலாவைக் கொளுத்துவதற்கு முன்னால், முதல் வெடியைக் கொளுத்திவிட்டது  வெள்ளைமாளிகை! வந்தேமாதரம்!

இதைக்கண்டு ஆர்.எஸ்.எஸ் அறிவாளி ஸ்வபன் தாஸ் குப்தாவே, என்.டி.டி.வி யில் கொஞ்சம் நெளிந்தார். ஆனாலும் இந்த அமெரிக்கர்களுக்கு கொஞ்சம் கூட நாசூக்கு தெரியவில்லை. ஹமீத் கர்சாயையும், முஷாரப்பையும் நடத்துவது போலவே இந்தியாவையும் நடத்துகிறார்கள். பாராட்டுவதென்றாலும் கொஞ்சம் மறைவாகப் பாராட்டினால்தான் என்ன என்று செல்லமாகக் கடிந்து கொண்டார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தயாராக இசையமைத்து வைத்திருந்த
சிங் இஸ் தி கிங்
என்ற பாடலைத் தனது செய்தி அறிக்கைகளின் பின்னணி இசையாக ஒலிபரப்பியது. தொலைக்காட்சித் திரையின் ஸ்க்ரோலிங்கில் குறியீட்டு எண்கள் உச்சஸ்தாயிக்குச் சென்று கொண்டிருந்தன. நாடாளுமன்றத்திலும் பங்குச்சந்தையிலும் ஒரே நேரத்தில் வந்தேமாதரம்!

உணர்ச்சிகள் இல்லாத கூச்சல்களாலும் உண்மைகள் இல்லாத வாதங்களாலும் நிரம்பியிருந்த அந்த இரவில் உண்மை எது பொய் எது? நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அடித்துக்கொண்டது பொய். ஆளும் வர்க்கமும் தரகு முதலாளிகளும் ஒரே குரலில் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தது உண்மை. அத்வானி அனல் தெறிக்க மன்மோகன்சிங்கை கிழித்தது பொய்! பா.ஜ.க உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தது உண்மை. சமூகநீதி லாலுவின் பாமர மொழி பொய். அருவெறுக்கத்தக்க அமெரிக்க அடிமைத்தனம் உண்மை! சோம்நாத்தின் நாடாளுமன்றக் கற்புநெறி பொய்! அமர்சிங்கும் அம்பானியும் உண்மை! வாக்கெடுப்பில் திகில் தருணங்கள் பொய்! முடிவை முன் அறிவித்த அமெரிக்காவின் அதிகாரம் உண்மை!

வாக்கெடுப்பு முடிந்தவுடன் அவசரம் அவசரமாக இசைக்கப்பட்ட வந்தேமாதரம் பொய்! விபச்சாரமே உண்மை!

_________________________________

  1. தோழர், மிகச்சரியாகச் சொன்னீர்கள்,எப்படி சொன்னாலும் யாரையோ சொல்ராங்க‍னு சொல்லிட்டு குட்டையில் ஊறும் எறுமைபோல இருக்கும் இவர்களை மக்கள் தான் உடன‌றிய வேண்டும்.

  2. Dear Tamil Reading People,
    Do you think MPs are fouls sometimes ? Same BJP and Cong MPs are caught when they have spoken with reference of outside money in parliament. Why the media and press didn’t remind the MPs and people before this government was taken the poll. They were only intrest of blaming others and the House. I don’t think your comments are independent and taking responsibilty honour of the House. Please don’t say Vandhematharam for what you have understand. Truth never lost by time and money. Please write us your understanding don’t write us about truth.
    With Regards
    Pugazh

  3. Hi Pugazh,
    Nice to read your comments…but can you clarify
    WHAT EXACTLY ARE YOU COMING TO SAY
    If you’ve have missed it
    TEAM VINAVU ‘DOESN’T CARE TWO HOOTS’ FOR THE HONOUR OF THE PARLIAMENT.
    Infact throughout this POEM they’ve tried to
    BREAK THE MYTH OF CHASTITY, HONOUR and all GOOD SWEET SOFT FINE NICE RESPECTED THINGS ABOUT THE PARLIAMENT AND MPS and highlighted the truth.
    YOU ARE WELCOME TO WRITE YOUR VERSION

  4. Pugazh,

    // Please write us your understanding don’t write us about truth.//

    I like to clarify the following points from you:

    1) Do you mean that everyone know the truth written in this article?
    2) This article discuss about what was happening in the parliament? if you think that written facts are wrong then you can point out it. But do you need anything called “your understanding” for this article?

    nandhan

  5. இவ்வலைப்பூவில் இது எனது முதல் பின்னூட்டம்,
    இதுவரை நான் கண்ட கட்டுரைகள் என்னை கவர்ந்துள்ளன.
    தொடர்ந்து எழுதுங்கள்!

  6. ஆதங்கப்படுகிறோம். அப்புறம்…? 60 வருட சுதந்திரத்தில் நீங்களும் நானும் இன்னும் பல நல்லெண்ணவாதிகளும் சாதித்தது வெற்று விமர்சனம் மட்டுமே. அரசியலை களை எடுக்க ஆண்டவன் தான் உதித்துவரவேண்டும் என எதிர்பார்கிறார்களோ நல்லெண்ணவாதிகள்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க