privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி !

ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி !

-

ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி

ஈழத்தின் நினைவுகள் பாகம் – 3

போர் என்றால் மனிதசிதைவு (Dehumanization) மிகமோசமாக நடக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞான ஆராய்ச்சி செய்பவர்கள் எழுதியதை படித்திருக்கிறேன். இலங்கையில் நாங்கள், சிறுபான்மைத்தமிழர்கள், மனிதர்களாக மதிக்கப்படாமல் வெறும் ஜடங்களாகவும்,மிருகங்கள் போலவும், கேலிப்பொருளாகவும்தான் பார்க்கப்படுகிறோம், நடத்தப்படுகிறோம். இன்று, மனிதர்களின் தேவைகள் என்னென்ன என்பதை விதம்விதமாக கண்டுபிடித்து ரகம்ரகமாக பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். அந்த பொருளுலகில் “மனிதம்” மறைமுகமாக சிதைக்கப்படுகிறது. இதைப்பற்றி தான் வினவு தன் பெரும்பானமையான கட்டுரைகளில் சொல்கிறது.

ஈழம் போன்ற போர்பூமியில் படுகொலைகள், பாலியல் வன்முறை, ஆட்கடத்தல், காணாமல்போதல், தாங்கொணா சித்திரவதை என்ற கொடுமைகள் மூலம் மனிதம் கேள்வி முறையின்றி சிதைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஏன் மனிதம் பற்றி யாரும் பாடம் எடுக்கவேண்டும்? அது இயல்பான மனிதப்பண்பு அல்லவா என எனக்கு நினைக்கத் தோன்றினாலும், ஈழத்தமிழர்கள் விடயத்தில் மனிதம், மனிதசிதைவு பற்றி உலகத்தோருக்கு செவிகளிலும் மனங்களிலும் அறைந்தாற்போல் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். எங்களுக்கு இலங்கையில் இழைக்கப்படும் குரூரமான கொடுமைகளை, அநீதிகளை வெளியில் நாங்களாவது சொன்னால்தான், எங்களுக்கு நியாயம் கிடைக்க ஏதாவது வழி பிறக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

மனிதசிதைவு இலங்கையில் போர்க்காலங்களில் மட்டும் நிகழ்வதாக தெரியவில்லை. ஈழப்போர் தொடங்கியதே 1983 களுக்கு பிறகுதான் என்று சொல்கிறார்கள். ஆனால், இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதலே எங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு, எங்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையும் வன்முறையும் 1958 இலிருந்தே தொடங்கிவிட்டது. அன்றுமுதல், எங்கள் மண்ணில் மனிதம் சிதைக்கப்பட்டு, நாங்கள் சிங்கள ராணுவம் தன் அடக்குமுறையை பிரயோகித்துப் பார்க்கும் ஜடப்பொருட்களாக ஆக்கப்பட்டோம். இந்த பதிவை நான் எழுத ஆரம்பிக்கும் போது முதலில் பொருளாதார தடை அதன் விளைவாக எழுந்த எங்கள் அன்றாட வாழ்க்கையின் அவலங்கள் அவற்றின் தாக்கங்கள் எப்படி என்னை/எங்களை போர்ச்சூழலில் பாத்தித்தது என்றுதான் சொல்லலாம் என்று நினைத்தேன்.

இந்த யூலை மாதம் ஈழத்தமிழர்கள் சரித்திரத்தில் ஒரு மறக்கமுடியாத வலி தரும் வடுவாக பதிவாகியிருப்பதால், அதனோடு இணைந்த மனிதசிதைவுகள் அதன் வடுக்கள் பற்றி எழுதலாம் என்று முடிவெடுத்தேன். இதை எழுதலாம் என்று முடிவெடுத்த பின்னும் எங்கிருந்து தொடங்குவது என யோசித்தால் மனம் வலிக்கிறது. காரணம், எங்கிருந்து தொடங்கினாலும் அங்கெலாம் நிறைந்திருப்பது ஈழத்தமிழர்களின் மனித‌ அவலம், அவலம்…… எங்களின் அவலங்கள் மட்டுமே.
பொதுவாகவே மனிதர்கள் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சில கசப்பான அனுபவங்களை மறக்க நினைப்பார்கள். அது மனித இயல்பு என்று நினைக்கிறேன். அது போல் தான் நானும். வினவு என்னை எனது ஈழம் பற்றிய நினைவுகளை எழுதுகிறீர்களா என்று கேட்டபோது, என் வலிகள் நிறைந்த வாழ்நாட்களை எவ்வளவுதூரம் மீட்டமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை. காரணம், அவற்றை நான் வலுக்கட்டாயமாக மறக்க நினைப்பவள். என்னதான் மறக்க நினைத்தாலும் அவற்றை மீட்டிப்பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. ஒருவேளை என் வலிகளை இப்படி எழுதினால் குறைத்துக்கொள்ளலாம் என்றும் தோன்றியது. நான் மட்டுமல்ல போர்ச்சூழலில் வாழ்ந்த, வாழுகின்ற ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் போர் தந்த வலியும் வடுவும் அவன்/அவள் மரணிக்கும் தருணம்வரை ஆறப்போவதில்லை.

1983 கறுப்பு யூலைக்கு முன்பே எங்கள் மீது சிங்கள் ஆட்சியாளர்களால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டாலும், ஒரு அதிபயங்கரமான உயிரை நடுங்க வைக்கும் சம்பவம் கறுப்பு யூலை. கொழும்பில் “இனக்கலவரம்” என்ற பெயரில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட வன்முறை. ஏறக்குறைய மூவாயிரம் உயிர்களை பலி கொண்டதாக வரலாறு சொல்கிறது. இன்று, கால்நூற்றாண்டு கடந்தபின்னும் வன்னியில் முள்ளிவாய்க்காலில் அது முப்பதாயிரமாக……. நாங்கள் என்ன வெறும் எண்களா? இறந்து போன உடல்கள் மட்டுமா? இப்படி எங்கள் உயிர்கள் மதிப்பின்றி ஏன் அழிக்கப்படுகிறது, சிதைக்கப்படுகிறது? என் மிக நெருங்கிய உறவினர்களும் கொழும்பிலிருந்து 1983 யூலை தமிழின அழிப்பிலிருந்து தப்பிவந்தவர்கள்தான். அவர்கள் அங்கு நடந்த இரக்கமற்ற கொலைகள்,கற்பழிப்புகள், கொள்ளைகள் பற்றி நிறையவே சொன்னார்கள். தமிழர்கள் ஈவிரக்கமின்றி வெட்டியும், குத்தியும், சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிருடன் நெருப்பில் எரிக்கப்பட்டும், கை,கால்கள் வெட்டப்பட்டு அங்கவீனர்களாக ஆக்கப்பட்டும், கொழும்பில் தமிழர்களின் வாழ்விடங்கள், வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டும் சொல்லமுடியாத, சொல்லில் அடங்காத வேதனைகள் அன்றுமுதல் இன்றுவரை தொடர்கிறது.

இது எல்லாவற்றின் உச்சம்தான் வன்னியில் நடந்த மனிதப்பேரவலம். வன்னியில் எங்கள் உறவுகளுக்கு நடந்த கொடுமைகள் அரசியல் தாண்டி, மனித அவலமாக மட்டுமே நான் இங்கே பேசிக்கொண்டிருக்கிறேன். இலங்கை அரசு எப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான‌ போர் என்று தமிழின அழிப்பில் இறங்கியதோ அன்றிலிருந்து செய்திகளை தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளம் என்று ஒரு இடம் விடாமல் தேடித்தேடி பார்த்தேன், கேட்டேன், படித்தேன். என் உறவுகளை தாங்கொணா கொடுமைகளிலிருந்தும் இன அழிப்பிலிருந்தும் யாராவது காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்யமாட்டார்களா என்ற ஓர் தவிப்பாகவே இருந்தது.

காலம் காலமாக எங்கள் மீது திணிக்கப்பட்ட உளவியல் மற்றும் உடல்ரீதியான வன்முறைகள் சொல்லில் அடங்கா. தமிழினப்படுகொலைகள் என்பது நித்தம் நித்தம் ஈழத்தில் அரங்கேறினாலும், அதிகளவில் அப்பாவித்தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவதுதான் என்னை அதிகம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. செம்மணி படுகொலைகள் முதல் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரை. செம்மணி படுகொலைகள், யாழ்ப்பாணம் ராணுவக்கட்டுப்பாட்டில் வீழ்ந்தபின் கொல்லப்பட்ட அறுநூறு பேருக்கு மேல் செம்மணி வெளியில் குழிதோண்டி புதைக்கப்பட்டவர்கள். செம்மணி படுகொலைகளுக்கே இன்னும் எந்த நியாயமும் கிடைக்கவில்லை. அதற்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதைவிட அந்த வழக்கை எடுத்து, அந்த கொலைகளுக்கு நியாயம் கேட்ட வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டது தான் அதைவிட கொடுமை என்று தோன்றுகிறது.

தசாப்தங்களாக படுகொலைகளும் காணாமற்போவதும் ஈழத்தில் ஓர் அன்றாட நிகழ்வாகவே நடந்து வந்து கொண்டிருக்கிறது. எங்கள் ஊரிலிருந்தே நிறைய இளைஞர்கள் ராணுவத்தால் அழைத்துச் செல்லப்படுவதும் பிறகு அவர்கள் ஒன்றில் பிணங்களாக வீதியில் விழுந்து கிடப்பதும் அல்லது காணாமல் போனவர்களாக‌வும் ஆனதுதான் மிச்சம். சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட மீனவர்களின் உடல்களும் சிலசமயங்களில் கரை ஒதுங்கியதும் உண்டு. அவற்றை நான் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்ததும் உண்டு. மனித உடல்கள் கடல் தண்ணீரில் உப்பி, பார்க்கவே மிகக்கோரமாக இருந்தது. ராணுவத்திடம‌ போய் ஏன் கொன்றார்கள் என்று கேள்வியெல்லாம் கேட்க முடியாது. கேள்வி கேட்டால், கேள்வி கேட்பவரும் அடுத்த கணமே கொலைசெய்யப்படுவார்.

வடக்கில் நான் அறிந்த காலம் தொட்டு காவல்துறையும் கிடையாது. ஒருவேளை காவல்துறை இருந்தாலும் தமிழனுக்கு நியாயம் கிடைத்திருக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. வடக்கில் மிக நீண்டகாலமாகவே ராணுவ அடக்குமுறைதான். தமிழர்கள் நாம் ஊமைகளாய், செவிடர்களாய், நாதியற்றவர்களாய் இவர்கள் நடத்தும் ஊழிக்கூத்தை பார்த்து……இதற்கு மேல் என்ன எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் தமிழர்கள், எங்களை  கொன்று குவித்துப்போட்டாலும் ஏனென்று கேட்க நாதியற்றவர்கள். அதனால் எங்களை கொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு போலிருக்கிறது. இப்படித்தான் என் மனதில் பதிந்து போனது. பெற்ற பிள்ளைகளை, கணவனை, தந்தையை, சகோதரனை ராணுவம் பலிகொண்டபின் பெற்றோர்கள்,மனைவி, பிள்ளைகள் பித்துப்பிடித்தவர்கள் போல் ஆகிவிட்டவர்கள் நிறையப்பேர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.

ஈழத்தில் என் அயலில் வாழ்ந்த இரு தமிழ் சகோதரர்கள் இப்படி காணாமல் போனவர்கள் தான். முதலில் காணாமல் போனவர் என் பாடசாலை தோழியின் அண்ணனும் கூட. அந்த சகோதரர் நிறையவே கல்வித்தகமைகள் கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடியவர். கொழும்பில் வேலை பார்த்துகொண்டிருந்தார். விடுமுறை நாட்களில் எப்போதாவது ஊருக்கு வருவார், ஊரில் ராணுவ கெடுபிடிகள் காரணமாக தாயார் அவரை வரவேண்டாம் என்று தடுத்தாலும் கூட. அவருக்கு நான்கு சகோதரிகள். ராணுவம் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு சோதனை போடுகிறோம் பேர்வழி என்று அவர்களுக்கு கஸ்டங்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். ஒரு நாள் அந்த சகோதரர் வீட்டில் இருந்த நேரத்தில் ராணுவம் அவர்கள் வீட்டிற்கு சோதனை போட  சென்றிருக்கிறார்கள். அந்த சகோதரர் ராணுவத்தோடு சிங்கள மொழியில் அவர்களின் அக்கிரமங்களை சொல்லி வாதாடியிருக்கிறார். ராணுவம் அவரை அழைத்துக்கொண்டு போனது. போனவர் போனதுதான். அதன் பின் எத்தனையோ வருடங்களாகியும் இன்றுவரை அவர் திரும்பி வரவில்லை. அவரின் குடும்பத்திற்கு இது ஒரு பெரும் இடியாகவே தலையில் இறங்கியது. அவரின் தாயார் சித்தப்பிரமை பிடித்தவர் போலாகிவிட்டார். இன்னுமொருவர், ஒருநாள் ராணுவம் ரோந்து வரும் போது கூட்டிச்செல்லப்பட்டவர். இன்றுவரை வீடு திரும்பவில்லை.

இதில் வேதனையான விடயம் என்னவென்றால், இந்த இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து தங்கள் பிள்ளைகளை தேடியதுதான். கொழும்பு சென்று யார் யாரிடமோ முறையிட்டார்கள். தமிழ்நாடு சென்று ஏதோ மை போட்டுப்பார்த்தார்கள், காண்டம் வாசித்து (அப்படியென்றால் என்னவென்று எனக்கு சரியாக தெரியாது) தேடினார்கள் என்று கேள்விப்பட்டேன். என்ன பயன்? அந்த இரு சகோதரர்களும் காணாமல் போனவர்கள் தான். இதெல்லாம் சின்ன உதாரணங்கள் மட்டுமே.

இப்படி எங்கள் ஊரிலும், ஒவ்வொரு ஊரிலும் பாடசாலை மாணவமாணவிகள், குடும்பத்தலைவன், அன்றாடம் பிழைப்பதற்கு ஏதாவது கூலி வேலை கிடைக்காதா என்று தேடிய எழைகள், குழந்தைக்கு பால் வாங்கப்போனவர்கள், கோயில் பூசாரி என்று ஏதுமறியாத அப்பாவிகள் காணாமல் போனவர்கள் அல்லது ராணுவத்தால் கடத்திச்செல்லப்பட்டவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பாடசாலை மாணவிகளின் பிணங்கள் ராணுவமுகாம்களுக்கு அருகிலுள்ள கிணறுகளிலிருந்தும் புதர்களுக்குள்ளும் கண்டெடுக்கப்படுகிற கொடுமைகளும் இன்றுவரை நடந்துகொண்டுதானிருக்கின்றன. இப்போதெல்லாம் இதுவே தமிழனின் அன்றாட வாழ்க்கையின் ஓர் தவிர்க்க முடியாத தலைவிதி என்று, செத்து செத்து பிழைப்பதை தவிர வேறெதுவும் செய்யமுடியாத சூழ்நிலைதான் ஈழத்தில் வடக்கிலும் கிழக்கிலும் நிலவுகிறது என்று கேள்விப்படுகிறேன்.

ராணுவம் தமிழர்களை கொண்டுசெல்கிறார்கள். யாரிடம் முறையிட? காணாமல் போனவர்கள் ஏதாவது ஒரு புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டால், இறந்துவிட்டார்கள் என்றாவது உறுதிசெய்து கொள்ளலாம். ஆனால், உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனவர்களாக கருதப்படுகிறார்கள். கொழும்பில் வெள்ளை வான் (White Van) கடத்தல்கள் சர்வதேச பிரசித்தம். இதில் கடத்தப்படுபவர்கள் மிகப்பெரும்பான்மையினர் தமிழர்களே. தமிழன் இலங்கையின் எந்த பகுதியில் இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. இது தான் நான் சொல்ல வருவது. ஆட்கள் காணாமல் போவதில் கடத்தப்படுவதில் ஈராக் நாட்டிற்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பதாக மனித உரிமைகள் காப்பகம் இன்றுவரை அறிக்கை விட்டுக்கொண்டுதானிருக்கிறது.

ஆனால், சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை மனித உரிமைகள் காப்பகம் விடும் அறிக்கைகள் எல்லாம் ஜோக் தான் அவர்க்ளுக்கு. இப்படி சிங்கள ஆட்சியாளர்களை நினைக்க வைப்பது எது என்று எனக்கு தெரிந்த அரசியல் அறிவின் அளவைக்கொண்டு விளக்க முடியும். ஆனால், அரசியல் தவிர்த்தே எங்கள் அவலங்களை சொல்ல விரும்புவதால் அதை தவிர்க்கிறேன். ஆனாலும், இப்போதெல்லாம் தமிழில் அடிக்கடி சொல்வார்களே “ஆப்பு” என்றொரு வார்த்தை, அது இலங்கை அரசுக்கு இந்த மனித உரிமைகள் காப்பக அறிக்கைகள் மூலம் தான் வரவேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் நடக்குமா என்று எனக்குள் நானே கேட்டுகொள்வதுண்டு. ஆனால், ஈழத்தில் தமிழனுக்கு நடக்கிறதே என்ற யதார்த்தம் என்னைப்போன்ற ஈழத்தமிழர்களை நிறைவே பாதிக்கிறது. இதை தடுக்க என்னவழி, எங்கள் உறவுகளை காப்பது எப்படி?

கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு போன்ற ஒரு பெரிய ஒரு நகரிலும் மிக அதிகளவில் தமிழர்கள் மட்டும் எப்படி அடையாளம் வைத்து கடத்தப்படுகிறார்கள்,

காணாமற்போகிறார்கள், சித்திரவதைப்படுத்தப்படுகிறார்கள் அல்லது வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்று யோசித்தபோது ஒரு விடயம் என் சிந்தனையில் இடறியது. அதுதான் “தேசிய அடையாள அட்டை” (National Identity Card). சரி, அதை சிங்கள அரசு எங்கிருந்து கண்டுபிடித்தது என்று தேடியபொழுது ஓர் விடயம் என் கண்ணில் பட்டது. ருவாண்டா (Rwanda) பெல்ஜியத்தின் ஓர் காலனி நாடாக இருந்த காலத்தில் அந்த நாட்டு மக்களை (Hutu or Tutsi) யார் யார் என்று அடையாளம் காண இந்த அடையாள அட்டைகள் உபயோகிக்கப்பட்டன என்று தெரிந்துகொண்டேன். பின்நாடகளில், இனப்படுகொலைகள் நடந்த காலங்களில் அப்படிப்பட்ட அடையாள அட்டைகளே சிறுபான்மையான துட்சிகளை அடையாளம் கண்டு, அவர்களை கொல்வதற்கான அனுமதிப்பத்திரம் போலானது. பொதுமக்களே பொதுமக்களை கொன்றுகுவித்த கொடுமை நடந்தது. இது வரலாறு.

இலங்கையிலும் இந்த தேசிய அடையாள அட்டை தான் ஈழத்தமிழன் காணாமல் போவதற்கும், கொல்லப்படுவதற்கும், மனிதசிதைவுக்கும் அனுமதிப்பத்திரம். இலங்கையில் ஓர் தமிழன் அடையாள அட்டையை தொலைத்தால், அது அவன் இறப்பதற்கு சமம். அதாவது அடையாள அட்டை இல்லாதவர் பயங்கரவாதி. அது இருந்தாலும், அவன் தமிழன் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவன் காணாமற்போவான். இன்று வரை காணாமற் போய்க்கொண்டிருக்கிறான். ஈழத்தில் யாராவது வெளியில் வேலையாக போகும் போது வீட்டிலுள்ளவர்கள் மறக்காமல் கேட்பது “ஐடென்டி காட்டை மறக்காமல் எடுத்துக்கொண்டு போறியோ”? ஈழத்தில் தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த ஓரிரு ஆங்கிலவார்த்தைகளில் இதுவும் ஒன்று. பாடசாலை மாணவர்கள் முதல் கடலில் மீன்பிடிக்கச் செல்லுபவர்கள் (மிகக்குறுகிய கடற்பரப்பில்) வரை அடையாள அட்          டையை தங்களோடு எந்த நேரமும் வைத்திருக்க வேண்டும். நானும் ஈழத்தில் இருந்த காலத்தில் இந்த தேசிய அடையாள அட்டையை என் “உயிரின் உயில்” ஆக பாதுகாத்து என்னோடு கொண்டு திரிந்திருக்கிறேன். நான் எனது அடையாள அட்டையை பத்தாம் வகுப்பு படிக்கும் போது பெற்றுக்கொண்டேன். அது இல்லாவிட்டால் பத்தாம் வகுப்பு பரீட்சையே எழுத முடியாது என்றார்கள் ஆசிரியர்கள் அதனால் அடித்து பிடித்து எடுத்து வைத்திருந்தேன். இந்த அடையாள அட்டை சொல்லும் எங்களின் சோகக்கதைகள் ஏராளம். அதை என்னால் வெறுக்கவும் முடிவதில்லை. விரும்பவும் முடிவதில்லை. இப்படி தேசிய அடையாள அட்டை என்ற முறையின் அடிப்படையில் எங்கள் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படாததோடு, நாங்கள் இனம் என்ற ரீதியில் பாகுபடுத்தப்பட்டு வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறோம்.

ஒவ்வொரு இனமும் தேசமும் அதன் நிலம் மற்றும் மொழியை ஒர் பெண்ணின் அடைமொழியை கொடுத்தே பெருமைப்படுத்துகின்றன, “தாய் மண்”, “தாய் மொழி” என்று. அவ்வாறான சிறப்புகள் கொண்ட பெண்ணினம் என் மண்ணில் மனிதஜென்மங்களாக கூட மதிக்கப்படுவதில்லை. ஈழத்தில் பெண்களின் நிலைமைகள் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவுக்கு மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இது தான் இலங்கையில் நடைபெறும் மனிதசிதைவுகளின் உச்சக்கட்டம். தன் கூந்தலின் நுனி கூட பிறிதோர் ஆண்மகனின் விரல் நுனி கூட தீண்டக்கூடாது என்று நினைப்பவள் தான் ஈழத்தமிழச்சியும். ஆனால், என் சகோதரிகளின் மானமும், கற்பும் சிங்கள ராணுவத்தால் அனுதினமும் சித்திரவதை செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதைப்பற்றி எல்லாம் அதிகம் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. காரணம் நீங்களே ஓரளவுக்கு இதைப்பற்றி அறிந்திருப்பீர்கள். ஈழத்தில் நான் இருந்த காலத்திலும் “ஆமிக்காரன் அந்த பிள்ளையிட்ட சேட்டை விட்டிட்டானாம்” இப்படித்தான் பெரும்பாலும் பேசிக்கொண்டார்களே தவிர, உண்மையில் இதைப்பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. பேசுவதில்லை என்பதற்காக அதில் அக்கறை இல்லை, அது நடக்கவில்லை என்பதல்ல. எங்கள் சகோதரிகளின் வலிகளை புரிந்து கொண்டாலும், அதை பேசி யாரும் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டாம் என்ற நோக்கம் தான்.

தவிரவும், பாலியல் வன்முறைகள் பற்றி வெளியே பேசமுடியாத அளவுக்கு ஓர் சமூகநிர்ப்பந்தத்தையும், ஓர் இறுக்கமான மனநிலையையும் எங்கள் பண்பாடும் கலாச்சாரமும் தமிழ்ப்பெண்களுக்கு கற்றுத்தந்துவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன். அதனாலேயே பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ்ப்பெண்கள் யாரும் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்வதில்லை என்று நினைக்கத்தோன்றுகிறது. தங்களுக்கு நடந்த கொடுமைகளை ஈழத்தமிழ்ப்பெண்கள் எவ்வளவு தூரம் வெளியில் சொல்ல துணிவார்களோ எனக்கு தெரியாது. ஆனால், அவர்களுக்கு இழைக்கப்படுகிற‌ கொடுமைகளுக்கு நியாயம் கிடைக்குமளவுக்கு ஓர் பாதுகாப்பான சூழ்நிலையும் சமூக அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்பது ஓர் பெண்ணாக என் அவா.

அண்மையில் கூட வன்னி களமுனையில் இறந்துவிட்ட ஈழப்பெண்போராளிகளின் பிணங்களை சிங்கள ராணுவம் புணர்ந்த மானிடப்பண்பிற்கு புறம்பான செயலை சில தனியார் தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன. பிறகு அதை வேறு தளங்களுக்கு சென்று அதற்கு இணைப்பு வேறு….. பார்க்க நேரிட்டது. எனக்கு வேதனையாகவும் எரிச்சலாகவும் இருந்தது. அந்த‌ படங்களை வெளியிட்டவர்களிடம் நான் கேட்பது, பாதிக்கப்பட்ட பெண்கள் உங்கள் வீட்டுப்பெண்களாக இருந்தால் அந்த படங்களை தளங்களில் இணைத்திருப்பீர்களா?  இதையெல்லாம் பார்க்கும் ஓர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எப்படி தனக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்ல தோன்றும்? தனது சமூக அங்கீகாரம் பற்றிய பயம் பாதிக்கப்படுகிற பெண்ணுக்கு வராதா? இப்படி புகைப்படங்களை போட்டு எங்களின் நெஞ்சங்களில் நெருப்பை அள்ளி கொட்டாதீர்கள். அறிவார்ந்த தமிழ் இணையத்தளங்களின் உரிமையாளர்களிடம் நான் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்வது இதுதான். என் சகோதரிகளுக்கு நியாயம் கிடைக்க அறிவை பயன்படுத்துங்கள். எத்தனையோ சகோதரிகள் தங்கள் தாய், தந்தை, சகோதரர்கள் என்ற உறவுகளின் கண்களின் முன்னாலேயே சிங்கள ராணுவத்தால் நாசமாக்கப்பட்டுள்ளார்கள். அந்த கொடுமையே அவர்களை ஆயுள் உள்ளவரை கொல்லுமே. ஐக்கிய நாடுகள் சபையின் ராதிகா குமாரசுவாமி ஈழத்தமிழ்ப்பெண்களின் அவலங்களை எத்தனையோ அறிக்கைகளாக அனுப்பிக்கொண்டிருந்தாலும், ஈழத்தில் தமிழ்ப்பெண்களின் அவலங்கள் ஏனோ இன்னும் தீரவில்லை.

ராணுவம், சோதனை போடுகிறோம் என்று தமிழ் பெண்களின் அவயங்களை ……வதும், நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் சுற்றிவர இருந்து கொண்டு என் சகோதரிகளை ஆடைகளை களையச்சொல்லி அம்மணமாய் நிற்கவைப்பது, பாலியல் வல்லுறவு கொள்வது, அவர்களை கேலிப்பொருளாக்கி மிருகங்களாய் இளிப்பதும், பதின்மூன்று வயது தமிழ் சிறுமியுடன் கூட‌ பாலியல் வல்லுறவு கொள்வதும்….. ஏன் என் சகோதரிகளுக்கு நடக்கும் கொடுமைகளை யாருமே தட்டிக்கேட்க மாட்டவே மாட்டார்களா? உண்மையில் இந்த ஒரு காரணத்திற்காகவே எத்தனையோ சகோதர, சகோதரிகள் தங்களை போராளிகளாக மாற்றிக்கொண்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், அவர்களின் வாழ்வும் இன்று வேதனையின் விளிம்பில்.

எனக்கு பொதுப்புத்தி மட்டுமே உண்டு. அதனால் ஈழத்தில் மானிடம் பிழைக்க என்ன வழி என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், மனிதம் காப்பாற்றப்பட்டால் மட்டுமே மனிதசிதைவு தடுக்கப்படும். மனிதசிதைவு தடுக்கப்பட வேண்டுமானால் ஈழத்தில் தமிழனுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினத்தவரின் மனித உரிமைகளுக்கும் அரசியல் அபிலாஷைகளுக்கும் உரிய சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று என் அறிவுக்கு தோன்றுகிறது.

தொடரும்

ரதி

  1. வாழ்த்துக்கள் ரதி, உங்கள் மொழி ஆளுமை வியக்கத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் இப்படிப்பட்டவளர்ச்சியை ஈட்டியிருப்பது உங்களுக்குள் புதைந்திருந்த திறமையையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டதையே உணர்த்துகிறது. உயிரோட்டமான வரிகளில் நீங்கள் சொல்ல விரும்பும் கருத்தை அருமையாக பதிவு செய்துவிட்டீர்கள். நன்றி

    • மா.சே.

      உங்கள் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி. இது ஒவ்வொரு ஈழத்தமிழனின் வலி. அதை என்னால் முடிந்தவரை என் சொந்த அனுபவங்கள் மற்றும் என் புரிதலின் அடிப்படையில் சொல்ல முனைகிறேன். அது மட்டுமல்ல, வினவு எனக்கு வழங்கிய எழுத்து சுதந்திரமும் இதற்கு காரணம்.

  2. கடைசி வரியில் நீங்க சொல்லியிருப்பது ரொம்ப சரியான விசயம், ஈழத்து பிரச்சனை ஈழத்து மக்களுக்கே சொந்தமானது இல்ல அது உலகத்துல எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான பிரச்சனை. ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா போராடினாதான் இனிமே இதுக்கு விடிவு.

  3. ///மனிதசிதைவு தடுக்கப்பட வேண்டுமானால் ஈழத்தில் தமிழனுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினத்தவரின் மனித உரிமைகளுக்கும் அரசியல் அபிலாஷைகளுக்கும் உரிய சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று என் அறிவுக்கு தோன்றுகிறது.///// True. Thanks for the post.

  4. மா.சே வின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், ரதி, ஜான் நீங்கள் ஈழத்து கவிஞர் சிவசேகரத்தின் ‘ஒன்றைப்பற்றி பேசும்போது…. ‘ என துவங்கும் கவிதையை வாசித்து பாருங்களேன்…

  5. நண்பர் ரதி , உங்கள் கருத்துக்களை நல்ல மொழி நடையில் நன்றாக எழுதி உள்ளீர்கள்…

    உங்கள் கட்டுரையின் ஒரு விடயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை… வன்னியில் இறந்த ஈழப் போராளிப் பெண்ணிடம் சிங்கள ராணுவம் செய்த மிருகத் தனமான செய்கை மிகவும் கண்டிக்க தக்கது என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் கிடையாது.. ஆனால் அதை வெளியிட்ட இணைய தளங்களின் மீதான உங்களின் விமர்சனத்தில் நான் மாறுபடுகிறேன்…
    இப்படிப்பட்ட மனித நேயமற்ற , விலங்குகளை விட மோசமான போர் குற்றங்களை வெளியிட்ட பிறகும் கூட சர்வதேச சமூகத்திடம் இருந்து ஒரு சிறு எதிர்ப்பு கூட எழவில்லை.. இதனை வெளியிடாமல் மறைத்து இருந்தால் அது ராஜ பக்சே எனும் பேரினவாதியின் குற்றங்களை மறைத்து அவனை தேசிய கதாநாயகனாகவே ஆக்கப் பயன்படும்…
    உதாரணமாக குவாண்டனமோ சிறையில் கைதிகளை, சில ராணுவத்தினர் நிர்வாணமாக சித்திரவதை செய்ததின் படங்கள் வெளியான பின்பே அந்த கொடும் செயலில் ஈடுபட்ட ராணுவ வீரர்களின் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது.
    எனவே இறந்த அந்த போராளியின் உடலின் மீது நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறை, ராஜ பக்சே, சிங்கள ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், ஆணாதிக்கம், சிங்கள பேரினவாதம், ஆகிய அனைத்தையும் குற்றவாளியாக்கும் ஒரு சாட்சி என்பதாகவே நான் கருதுகிறேன்..

    • //வன்னியில் இறந்த ஈழப் போராளிப் பெண்ணிடம் சிங்கள ராணுவம் செய்த மிருகத் தனமான செய்கை மிகவும் கண்டிக்க தக்கது என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் கிடையாது.. ஆனால் அதை வெளியிட்ட இணைய தளங்களின் மீதான உங்களின் விமர்சனத்தில் நான் மாறுபடுகிறேன்…// இவற்றை புலிசார்பு இணையத்தளங்கள் எவையும் வெளியிடவில்லை. அதையெல்லாம் பார்த்த பிறகு எந்தத் தமிழ் குடும்பமும் தமது பெண் பிள்ளைகளை புலிகளில் சேர அனுமதிக்கமாட்டார்கள் என்ற பயம். புலி ஆதரவாளர்கள் நீதி விசாரணையை விட பரப்புரை செய்வதையே நோக்கமாக கொண்டவர்கள். ஈழத்தமிழனுக்கு நீதி யார் கேட்டார்கள்? பிணங்களை காட்டி பரப்புரை செய்து பணம் சேர்ப்பதே முக்கியம்.

      படையினர் நெருங்க நெருங்க அதைத் தமது பரப்புரைக்கு வாய்ப்பான ஆயுதமாக்கி ‘எதிரி வருகிறான்; நீங்கள் அவனிடம் மண்டியிடப் போகிறீர்களா?’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, ‘சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்’, ‘எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா?’ என்று சனங்களின் மனதில் கலவரத்தையும் அச்சத்தையும் ஊட்டினார்கள். படைத் தரப்பின் தாக்குதல்களும் சனங்களை அச்சமடையவே வைத்தன. இதனால் கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களால் மிகவும் கசப்பான அனுபவத்தைப் பெற்றிருந்த சனங்கள் இன்னும் இன்னும் அச்சமடையத் தொடங்கினார்கள். இது ஒருவகையில் புலிகளுக்குச் சாதக நிலையைத் தோற்றுவித்தது.
      http://www.kalachuvadu.com/issue-116/page47.asp

      //இன்று, கால்நூற்றாண்டு கடந்தபின்னும் வன்னியில் முள்ளிவாய்க்காலில் அது முப்பதாயிரமாக……. நாங்கள் என்ன வெறும் எண்களா? இறந்து போன உடல்கள் மட்டுமா? இப்படி எங்கள்

    • பகத்,

      மென்மையான வார்த்தைகளில் உங்கள் விமர்சனங்களை வைத்ததிற்கு நன்றி. நான் சொல்ல வந்தது சிங்கள ராணுவத்தின் குற்றங்கள் மறைக்கப்பட வேண்டும் என்பதல்ல. நான் சொல்வது அந்தப்படங்களை இணையத்தளத்தில் பிரசுரித்ததை விட, மனித உரிமைகள் அமைப்புகளுக்கோ, பெண்ணுரிமை அமைப்புகள் அல்லது சர்வதேச மன்னிப்பு சபை போன்ற அமைப்புக்களுகக்கோ அனுப்பியிருக்கலாம் என்பதுதான். அந்த படங்களை வெளியிட்ட இணையத்தளங்களில், குறைந்தபட்சம் அதை ஏதாவது ஒரு மனிதஉரிமைகள் அமைப்புக்கு அனுப்புகிறோம் முடிந்தால் நீங்களும் பெயரைப்பதிவு செய்யுங்கள் என்றாவது போட்டிருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தேன், காணக்கிடைக்கவில்லை. அப்படி இவர்கள் செய்திருந்தால் அது ஆக்கபூர்வமான முயற்சி. குறைந்த பட்சம் சோனியா காந்திக்கோ அல்லது மன்மோகன் சிங்க் இற்கோ அனுப்பி வைத்து, இதைப்பார்த்து “சந்தோசப்படுங்கள்” என்றாவது சொல்லியிருக்கலாம் இவர்கள். அவ்வளவு வேதனையாயிருந்தது எனக்கு.

      சர்வதேச சமூகம் எங்கள் விடயத்தில் பாராமுகமாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால் நாங்கள் சும்மா இருந்தால் அவர்கள் இன்னும் மெத்தனமாகத்தான் இருப்பார்கள்.

      எனக்கு இன்னும் சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) போன்ற அமைப்புகளிடம் ஒரு துளி நம்பிக்கையேனும் இருப்பதற்கு காரணம், கிரிஷாந்தி வழக்கு முதல் செம்மணி புதைகுழி வரை எத்தனையோ வழக்குகள் இவர்களின் அழுத்தங்களால் தான் விசாரனைக்கேனும் வந்தது. ஆனால் எந்தவொரு சிங்கள சிப்பாயும் இன்றுவரை எந்தவொரு போர்க்குற்றங்களுக்காகவும் தண்டிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, 2007 இல் ஐக்கிய நாடுகள் சபை 108 இலங்கை ராணுவ சிப்பாய்களை ஹெயிட்டிக்கான அமைதிப்படையிலிருந்து பாலியல் குற்றங்களுக்காக விலக்கியது. ஆக, இவர்களின் மிருகத்தனமான பாலியல் வன்முறைகள் சர்வதேசமும் அறிந்ததுதான்.

      இவர்களின் அட்டுழியங்களை தமிழ் தளங்களில் போடுவதால் என்ன பயன்? அது என் போன்றவர்களின் வேதனையைத்தான் அதிகரிக்கும். அனுப்பவேண்டிய இடங்களுக்கு அனுப்புங்கள். தமழ் சகோதரிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு கேட்கவேண்டிய இடத்தில் நியாயம் கேட்கதெரிந்தால் அது இவர்களின் புத்திசாலித்தனம்.

      அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் என் தமிழ் சகோதரிகள் தான். அவர்களின் அவலமான முடிவுகளை தமிழ் தளங்களில் போட்டு காட்சிப்பொருள் ஆக்குவதில் ஒரு பெண்ணாக எனக்கு உடன்பாடில்லை.

    • சித்திரவதை செய்த படங்கள் வெளியானால் தான் குற்றவாளியை தண்டிக்கக் கூடிய ஆதாரமாக இருக்கும். ஆனால் அதே சமயம், பாதிக்கப்படுகிற பெண்ணின் முக அடையாளங்களை மறைத்து வெளியிடலாம்.

      >>தனது சமூக அங்கீகாரம் பற்றிய பயம் பாதிக்கப்படுகிற பெண்ணுக்கு வராதா?

  6. //இன்று, கால்நூற்றாண்டு கடந்தபின்னும் வன்னியில் முள்ளிவாய்க்காலில் அது முப்பதாயிரமாக……. நாங்கள் என்ன வெறும் எண்களா? இறந்து போன உடல்கள் மட்டுமா?//

    ஒரு தொகுதிச் சனங்களைப் புலிகள் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தை நோக்கிக் கட்டாயப்படுத்தி அடித்து விரட்டினர். அதுவும் பல வந்தமாகவே விரட்டினர். ஏற்கனவே உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே வசதியற்றிருந்த மக்கள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிடப் படையினரிடம் போய்ச்சாவது மேல் என்று மறுத்தார்கள். எனினும் புலிகள் அவர்களைவிடவில்லை. கட்டாயப்படுத்தி முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த முள்ளிவாய்க்கால் பகுதிதான் புலிகளின் களமாகியது. இறுதிநாட்கள் என்று சொல்லப்படும் ஏப்ரல் 18க்குப் பிந்திய மே 18 வரையிலான நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகியது. சனங்கள் ஏற்கனவே இரகசிய வழிகளைத் தேடித் தேடி மிகவும் ஆபத்தான வழிகளில் படைத் தரப்பிடம் தப்பிச்செல்ல முற்பட்டனர். சிலர் கடல் வழியாகப் படகுகளிலும் புறப்பட்டனர். ஆனால் புலிகள் உருவாக்கிய ஒரு படையணியினர் ‘பச்சை மட்டை’யுடன் நின்று சனங்களுக்கு அடிபோட்டுக் கலைத்தார்கள். சனங்கள் எதிர்ப்பைக் காட்டியபோது துப்பாக்கியால் சுட்டார்கள்.

    இவ்வாறு சுடப்படும்போது இறந்தவர்கள் போக ஏனையோர் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனார்கள். சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சிலர் செத்து மடிந்தார்கள். சிலர் காயப்பட்டு மருத்துவமனையில் கிடந்தார்கள். இவ்வாறு தம்மால் சுடப்பட்டு மருத்துவமனையில் காயமடைந்து சேர்க்கப்பட்டவர்களை மேலதிகச் சிகிச்சைக்காகக் கப்பலில் எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. காயப்பட்டவர்கள் புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

    இதுபோலப் பல நிகழ்ச்சிகள் ஏற்கனவே நிகழ்ந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு முழுப்பொறுப்பாக முதலில் தங்கனும் அவருடன் இணைந்து புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த வரும் பின்னர் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவருமான மாதவன் மாஸ்டர், திருமலை, சூட்டி உள்ளிட்ட பலரும் இருந்தனர். சனங்கள் தமது முழுமையான எதிர்ப்பையும் இந்தச் சந்தர்ப்பங்களில் காட்டத் தொடங்கினர். குறிப்பாக மாத்தளன் பகுதியிலுள்ள கப்பல் துறையில் மக்களுக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்கள் முக்கியமானவை. http://www.kalachuvadu.com/issue-116/page47.asp

  7. கூற்று (Keerthana) 1.

    போர் மாணவர்களைப் பாதித்த இன்னொரு விடயம், மின்சாரம் இல்லாமை. 90 களின் பின் யாழ் மாவட்டத்தில் மின்சாரம் முற்றாக இல்லாமல் போனது. மண்ணெண்ணெய், தேங்காயெண்ணை விளக்குகள்தாம், இரவுகளில் எம்மை ஒளியை நோக்கி நடக்க உதவின. எண்ணெய்கள், கடைகளில் உயா;விலைக்கு விற்கப்பட்டதுடன் அரிதாகவே கிடைத்தும் வந்தது.
    ஜாம் போத்தல்களில் தண்ணீரையும்; எண்ணெயையும் கலந்து மேலிருந்து திரியை பொருத்திய விளக்குகள் நீண்ட நேரம் படிக்க உதவின.
    பல்கலைக்கழக மாணவா;களும் இதனையே பாவித்தனா;. இந்த நிலமையிலும் மருத்துவாகளும் பொறியியலாளாகளும் பட்டதாரிகளும் உருவாகிக் கொண்டுதான் இருந்தனா;
    எந்தப் போர் நிலைமையிலும் யாழ் மாவட்ட மாணவா;களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் குறைக்கப்படவில்லை என்பதோடு, இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விட உயா; வெட்டுப்புள்ளிகள் இந்த மாவட்டத்திற்கே அறிவிக்கப்படுவதும் முக்கிய விடயங்கள்.
    ஷெல் வீச்சுக்குள்ளும் விமான குண்டுகளுக்குள்ளும் தமிழ் மாணவாகள் படித்துக் கொண்டிருக்க, ஏனைய மாவட்ட மாணவாகள் சகல வசதிகளுடனும் எந்தவித உயிர்பயமுமற்ற சுகமான வாழ்வுக்குரியவாகளாகவும், போர் பற்றிய எந்தவித தகவல்களோ தாக்கமோ இல்லாதவர்களாக இருந்ததும் மிகவும் குறிப்பிடத்தக்க விடயம்.

    மறுப்பு

    90 களின் பின் மின்சாரம் இன்மையால் பாதிக்கப்பட்ட பின்னாலேயே மண்ணெண்ணெய் தேங்காயெண்ணை விளக்குகளுக்கு அறிமுகமான நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்பது புரிகின்றது.

    மண்ணெண்ணெய் தேங்காயெண்ணையே தான் எனக்கு அரிவரி வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம்(1985) வரை பாடப்புத்தகங்களுக்கு நீண்ட நீண்ட- மிக நீண்ட இரவுகளுக்கு ஒளி தந்த கலங்கரை விளக்கங்கள்.
    மீன்பிடிப் படகுகளை கரைசேர்ப்பதற்கு கூட இவையே தான் கலங்கரை விளக்கங்கள்.

    வன்னியின் காட்டுக்குள் இருண்ட குடிசைகளுக்குள் மின்சார வெளிச்சம் இருந்ததல்லவா , சிங்கள குக்கிராமங்களுக்குள் யானைக்காடுகளுக்குள் மின்சாரம் மட்டுமென்ன சொர்க்க வாழ்வே அவர்களுக்கிருந்ததல்லவா ?

    யாழ்ப்பாணத்தில் கூட பட்டி தொட்டிகளெல்லாம் மின்சாரம் 90 களுக்கு முன்னர் இருந்தது. குடிசைகளுக்கு கூட மின்விளக்குகள் இருந்தன. கடலோரக்கிராமங்கள் விவசாயமக்கள் குடிசைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லோரும் சகல சௌகரியங்களுடனும் வாழ்ந்தார்கள் அல்லவா?

    யாழ் குடாவிலே மின்சாரம் எந்தெந்த கிராமங்களுக்கு வழங்கப்பட வேண்டும் வழங்கப்படக் கூடாது என்ற தீர்மானங்கள் கூட யாழ் அதிகாரத்தின் கைகளிலிருந்த போது தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமங்கள் இருளிலேயே மூழ்கியிருந்த வேளை “தழிழுணர்வு” தூக்கத்திலிருந்தது.

    திருகோணமலை கந்தளாயிலே , பாலையூற்றிலே , முல்லைத்தீவு பாண்டியன்குளத்திலே அம்பாறை அக்கரைப்பற்று பொத்துவில் விவசாயக் கிராமங்களிலே வரண்ட மன்னார் மாவட்டத்திலே எல்லாம் மின்சாரம் தந்த ஒளியில் வைத்தியர்களும் மருத்துவர்களும் புற்றீசலாய் உருவாகிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல வருகின்றீர்கள். யாழ்ப்பாணத்தில் மேல்தட்டு மக்களுக்கு வாய்க்கப்பட்ட வசதிகளின் நிமித்தம் கிடைத்த உயர் கல்வி வாய்ப்பு தரப்படுத்தலால் தாழ்ந்த போது மட்டும் அசைந்து போனீர்கள். ஆடிப்போனீர்கள். தமிழுணர்வு அப்போது தான் உங்களைக் பற்றிக் கொண்டது. தமிழா விழித்தெழு கொதித்தெழு என்றவாறாய் “ ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை என்று உணர்ச்சி கவிதைகள் உங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டன.

    மலையக மக்கள் மத்தியில் வாழ்க்கையோ பூத்துக் குலுங்கியது. அவர்களின் கூடாரங்களிலே மின்விளக்கு ஒளியில் வாழ்க்கையோ இனிமையிலும் இனிமை. கல்வியிலும் சகல வித வசதிகளுடன் அவர்கள் திழைத்திருந்தார்கள். அப்படித்தானே?

    முழு இலங்கையிலுமே ஒட்டச் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு உரிமைகள் இன்றி வாழ்ந்த மக்களான மலையக மக்களின் நிலைமையோ பேரினவாதத்தின் கொடுமை. ஆனால் அவையெல்லாம் யாழ்ப்பாண தழிழர்களுக்கு சிறுபான்மை மேலான பேரினவாத ஒடுக்குமுறையாக கண்ணில் விழுந்த தூசியாக கூடப் படவில்லை. அப்போது அவர்கள் “வடக்கத்தையார்” யாரோ வந்தேறு குடிகள் “தோட்டக்காட்டார்”.
    ஆனால் யாழ் அதிகாரவர்க்கம் தரப்படுத்தலுக்கு ஆளானபோது இந்த “வடக்கத்தையாரும்” “தோட்டக்காட்டாரும்” மிகவும் வசதியாக யாழ்ப்பாணத்தாரின் கோரிக்கைகளுக்கு இசைவாக தமிழினம் ஆக்கப்பட்டார்கள் போராட்டத்துக்கு ஆள்பிடிக்க.

    பிரஜாவுரிமையின்றி மிகக் கேவலமாக உழைத்து ஓடாய் போன அவர்கள் சந்ததியின் கல்வியைக் கூட சிதைத்தலிலே யாழ்ப்பாண ஆசிரியர்களின் கைவண்ணம் உண்டு.

    கூற்று (Keerthana) 2

    ஷெல் வீச்சுக்குள்ளும் விமான குண்டுகளுக்குள்ளும் தமிழ் மாணவாகள் படித்துக் கொண்டிருக்க, ஏனைய மாவட்ட மாணவாகள் சகல வசதிகளுடனும் எந்தவித உயிர்பயமுமற்ற சுகமான வாழ்வுக்குரியவாகளாகவும், போர் பற்றிய எந்தவித தகவல்களோ தாக்கமோ இல்லாதவர்களாக இருந்ததும் மிகவும் குறிப்பிடத்தக்க விடயம்.

    மறுப்பு

    யாழ்ப்பாணத்தில் ஷெல் வீச்சு நடந்தது. ஆனால் தமிழ் மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மற்றைய மாவட்ட மாணவர்கள் ” சகல வசதிகளுடனும் எவ்வித உயிர்ப்பயமுமின்றி சுகமான வாழ்வுக்குரியவர்களாக… ” இருந்தார்கள் என்பது யாழ் மாவட்டத்திற்குள் மட்டும் தனது கண்களைப் புதைத்து வைத்திருந்த ஒரு கிணற்றுத் தவளையின் பார்வையாகத்தான் இருக்க முடியும்.

    தரப்படுத்தலின் ஆரம்ப கால வீச்சுக்குள் அகப்பட்ட மாணவர் சமூகத்தின் அங்கத்தவன் என்ற முறையில் தமிழ் மக்கள் பிரச்சனைகள் யாவும் உயர்கல்வி பிரச்சனை மின்சாரப் பிரச்சனை என்ற சொகுசுக் குஞ்சுகளின் கூற்றை மறுதலிக்கின்றேன்.

    ஒரு கல்லூரியில் எனக்கு கல்வி மறுக்கப்பட்டது. இது இனரீதியான தரப்படுத்தல் அறிமுகமாவதற்கு முன்பாகவே இருந்த சாதி என்னும் தரப்படுத்தலாகும் என்பதையும் குறித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

    வகுப்பிலேயே அவமானப்படுத்தப்பட்டு கல்லூரிக்கு செல்வதை நிறுத்தி பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து குடும்பத்தையே பிடுங்கிக் கொண்டு வேறிடம் செல்லும் மன உளைச்சலை எனது பெற்றோருக்கு இது கொடுத்தது.

    யாழ்ப்பாணத்தில் காரைநகர் தோப்புக்காடு எனது கிராமம். ஆரம்பப்பள்ளியில் முதலாம் வகுப்பிலிருந்து 7 ம் வகுப்பு வரை கிராமத்து பள்ளியில் சொந்த சாதியைச் சேர்ந்த ஆசிரியர்களால் எந்த புறக்கணிப்புமின்றி எனக்கு கல்வி தித்தித்தது.

    8 ம் வகுப்பு காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆரம்பித்த வேளை சாதீயப் பாகுபாடுகள் இழிவான விழித்தல்கள் சக மாணவர்களிடமிருந்து வந்ததில் ஆச்சரியமில்லைத் தான். எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்பதை நாசூக்காகவோ மமதையுடனுமோ கேட்டறிவதன் மூலம் ஒருவருடைய சாதியை அறிந்துகொள்ளும் “நாகரீகம்” யாழ்ப்பாணத்திற்கு சிறப்பானதொன்று. 8 ம் வகுப்பு இறுதியில் வடமாகாண ஆசிரியர் சங்கம் நடாத்தும் மாகாண ரீதியான போட்டிப்பரீட்சையில் கணிதபாடத்தில் 100 க்கு 98 புள்ளிகள் கிடைத்ததனால் எனது பெயரும் ஊரும் பேசப்படும் பொருளான போது உண்மையாகவே ஊக்கம் தந்தவர்களிடையே உதாசீனம் செய்தவர்களும் இருந்தார்கள்.

    9 ம் வகுப்பில் தாவரவியல் பாடம் நடத்திய முத்துக்குமாரசாமி(வேளாளர்) ஆசிரியர் அன்றைய பாடத்துக்கான ஒற்றுத்தாள் பரிசோதனைக்கு ஒற்றுத்தாளுடன் நான் வராததால் ( காரணம் உண்டு) தன்னுடைய சாதிவெறியை என்னிடம் தீர்த்துக் கொண்டார்.

    “ நீ தோப்புக்காடு துறைமுகத்திலே மூட்டை தூக்குகிற சாதி உன்னுடைய சாதித் தொழிலுக்கு போவதை விட்டுவிட்டு ஏன் பள்ளிக்கூடத்துக்கு வருகின்றாய் “ என விளிக்கப்பட்டு பின்வாங்கு(பெஞ்சு)க்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.

    அன்றிலிருந்து அப் பாடசாலை எனக்கு வெறுத்தது. பாடங்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் எல்லோருமே அந்நியமானார்கள். என்னுடைய சின்னச்சிறிய ஆரம்பப் பாடசாலை எனக்கு கோபுரமானது. ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் கோபுரக்கலசம் ஆனார்கள்.

    கல்வி மீதிருந்த பற்றால் எனது பெற்றோரின் இடம் மாறிச் செல்லும் முடிவால் நான் காப்பாற்றப்பட்டேன்.

    இந்தக் கிராமத்தில் குடிநீர் கிணறுகள் கிடையாது. கடற்கரையை அண்டிய கிராமம் ஆதலால் உவர்நீர் மட்டுமல்லாது கிணறு தோண்டுவதற்குதந்ததல்லாத மணற்பாங்கான நிலமானதாலும் வெறுமனே குளிப்பதற்கும் அழுக்கான உடுபுடவைகள் தோய்ப்பதற்குமென ஊருக்கு ஒதுக்குப்புறமாய் வயற்காணிகளுக்கிடையில் சாதிகளுக்கு ஒவ்வொன்றாய் உவர்நீர் கிணறுகள் தொலைவில் இருந்தன. வெட்ட வெளியில் பெண்களுக்கு ஒரு கிணறும் (பூதன் கிணறு- காரைநகர் கடற்கோட்டையை தனது சிறைத்தண்டனை காலத்தில் கூலியாய் இருந்து கட்டிய பூதத்தம்பியின் பெயர்) ஆண்களுக்கு ஒரு கிணறுமாய் இருந்தன.

    நன்னீர்(குடிநீர்) கிணறுகள் உயர்சாதிகளுக்கு சொந்தமான காணிகளில் தான் அதிகமாகவிருந்தன. தாகத்திற்கு அல்லது உவர்சுவையின்றிய தண்ணீருக்கு தேவையேற்பட்டால் அவற்றை கிணறுகளில் அள்ளுவதற்கு தாழ்ந்த சாதியினர் அநுமதிக்கப்படுவதில்லை.

    தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் கைமுண்டில் ஏந்தித்தான் அருந்த வேண்டும். இப்படி இறுக்கமாக வெறுப்பான சூழல்கள் நிறைந்திருந்ததே தமிழர் யாழ் பிரதேசம்.

    வரண்ட காலம் வந்தால் பல மைல்களுக்கு அப்பாலுள்ள இச்சிறுதீவை தாண்டி வெளியேயுள்ள சுன்னாகம் என்னுமிடத்திலிருந்து இக்கிராமத்துக்கும் வேறும் சில கிராமங்களுக்கும் நீர்வழங்கலை இன்றும் நன்றியுடன் நினைவு கூரும் வண்ணம் தாங்களாக முன்வந்து யார் தந்தார்கள்?

    காரைநகரிலிலுள்ள சிங்கள கடற்படை முகாம் தனது தண்ணீர் பவுசர்கள் மூலம் தான் இக்கிராம மக்களின் அடிப்படைத் தேவையான (நீரின்றியமையா யாக்கைகெல்லாம்) தண்ணீர் வழங்கலை பொறுப்பேற்றிருந்தார்கள்.

    தென்னங்கள்ளு அருந்த வந்த கடற்படையினர் ஊரிலுள்ள பெண்களுடன் சேஷ்டை செய்ய முற்பட்ட போது கிராமத்தவர்களால் பல மைல் தூரம் முகாம் வாசல் வரை மூச்சிரைக்க துரத்திசெல்லப்பட்டார்கள். அடுத்த நாள் கிராமத்தவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்கள்.

    ஆனால் அதே கடற்படை அந்த முகாம் மீதான தாக்குதலுக்கு பின்னால் அதே கிராமத்துக்குள் புகுந்து அவ்விடத்தை விட்டு செல்லாமலிருந்த என்னைத் தாலாட்டிய எனது மாமனார்கள் மூவர்களை சுட்டு வீழ்த்தியது. வெறி கொண்ட இனவெறி இராணுவமாக மாறிப் போயிருந்தது.

    காரைநகர் ஜெற்றி கடைகளையும் அதை அண்டியிருந்த வீடுகளையும் எரித்துச் சாம்பலாக்கியது. குமுதினிப்(நெடுந்தீவு) படகில் பயணம் செய்தவர்களை குரூரமாக வெட்டியும் கொத்தியும் (நயினாதீவு கடற்படை) படுகொலை செய்தது. அதனை வீடியோ பதிவு செய்தவர் “மலைநாடன் “.

    1977 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு தகுந்த பாதுகாப்பின்றி தவித்த மலையக மக்கள் யாழ் பிரதேசம் நோக்கி வரவுமில்லை. அழைக்கப்படவுமில்லை. வீடுகளில் வேலைக்காரர்களாக “ தோட்டக்காட்டாரை” வைத்திருந்த யாழ் சமூகம் அவர்களை தரக்குறைவானவர்களாவே கணித்திருந்தது. இனக்கலவரத்தினால் ஏதிலிகளாக அகதிகளாக இருந்த அவர்களை “காந்தீயம்“ நிறுவனத்தில் இருந்த இளைஞர்கள் வன்னிக் காடுகளை வெட்டி குடிசைகள் அமைத்து எல்லைக் கிராமங்களில் குடியேற்றும் ஒரு பாரிய திட்டத்தை செய்தார்கள். இந்தக் கிராமங்களுக்கு காடுகள் வெட்டி வசதிகள் செய்து கொடுக்கும் வேலைகளுக்கு சிரமதான முறை கைக்கொள்ளப்பட்டது. டேவிட் , வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி இராஜசுந்தரம் போன்றவர்களுடன் சில ஆயுத அமைப்புகளைச் சார்ந்த இளைஞர்களும் நடைமுறை வேலைகளில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். இந்த வேலைகளுக்காய் 79 ம் ஆண்டு காலப்பகுதியில் அரசியல் விழிப்புணர்வும் சமூக நோக்கும் கொண்ட யாழ் மாவட்ட இளைஞர்கள் சிரமதான அடிப்படையில் தங்கள் பங்களிப்பை வழங்க வன்னிக்காடுகளை தரிசித்தார்கள்.

    இவற்றுக்கெல்லாம் உந்துசக்தியாய் திகழ்ந்தவர்களில் டேவிட் ஜயா, கொல்லப்பட்ட வைத்திய கலாநிதி இராஜசுந்தரம், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் அரசியல் செயலராய் இருந்து உமாமகேஸ்வரன் குழுவால் பின்னாட்களில் இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட தோழர் சந்ததியார் என்போரே தமது உழைப்பை தந்தவர்களாவர்கள்.

    தழிழரசுக் கட்சியின் இளைஞர் பேரவையில் இடதுசாரிகள் கொண்ட அரசியல் பிளவை உருவாக்கியவர் என்று கூட்டணியினரால் வெறுக்கப்பட்ட இவரை புலிகளும் குறிவைத்திருந்தனர்.

    கடமையில் மிகவும் கண்டிப்பான, அர்ப்பணிப்பான மிகவும் வறிய குடும்பத்திலிருந்து ஒரு திண்ணையும் ஒரு ஓலைக் குசினியும் கொண்ட இல்லத்திலிருந்து இவர் படித்ததும் வாழ்ந்ததும் மண்ணெண்ணெய் விளக்குகளில் தான். இவரோடு நான் ஒரு முறை அவரது வீட்டில் விருந்துண்டபோது (1978 இல்) தனக்கு கிடைத்த ஒருவேளைக் கஞ்சியையே அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

    திருவாளர் கிட்டுவைப் போல் விதம் விதமான ஆடைகளோ வெளிநாட்டு வாசனைத் திரவியங்களோ வார்த்தைக்கு வார்த்தை தூசண மொழிகளோ வேளாவேளைக்கு தரமான உணவுவிடுதி சாப்பாடுகளோ தகாத பாலியல் உறவுகளோ இன்றி மக்களுடன் மக்களைப் போலவே வாழ்ந்த இவர்கள் எல்லாம் இன்று ஈழவரலாறு என்று இருட்டடிப்பு செய்யப்படுகின்றார்கள். இங்கு குடியேற்றப்பட்ட மலையக மக்களுக்கு நெருக்கடிகள் ஆரம்பங்களில் அவர்களது குடிசைகளுக்கு தீவைத்த சம்பவங்கள் அவர்களது காணி உரிமைகளை தட்டிப்பறித்தது அவர்களை தங்களது கூலித்தொழிலாளர்களாய் மாற்றி சுரண்டியது எல்லாம் பதிவுசெய்யப்பட வேண்டிய நிகழ்வகளாய் இருக்கின்றன.. இந்தக் குடியேற்றங்களுக்கு இடைஞசல் தந்த பல்வேறு ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் அம்பலமானது ஒன்று தான். நிச்சயமாய் பேரினவாதம் இதில் சம்பந்தப்படவில்லை.

    இந்த பேரினவாதத்திற்கு எதிரான மக்களின் எழுச்சியை யாழ் மேலாதிக்க வாதமானது தனக்குரிய கோரிக்கைகளுக்குள் தாழிட்டுக்கொள்ள முயன்றபோது
    இயக்கங்கள் பல மக்கள் மேல் பாசிச நடைமுறைகளை ஏவத் தொடங்கிய காலம் 1984 க்கு பிற்பட்ட காலப்பகுதியாகும். அதற்கு முன்னரான காலப்பகுதிலேயே தமது கல்வியைத்துறந்தவர்கள் பலர். ஷெல் வீச்சுக்கு முன்னமேயே தமது கல்விக்கு இடைஞ்சல் பாதிப்பேற்பட்டதற்கு பின்னாலன்றி உண்மையாகவே மக்களுக்காகவே தமது கல்வியைத்துறந்தவர்கள் போராளிக்குழுக்களில் பலர் இருந்தனர்.
    கல்வி வராததால் அவர்கள் கல்வியைத் துறக்கவில்லை. ஷெல் வீச்சின் தொந்தரவால் அவர்கள் கல்வியைத் துறக்கவில்லை. அடக்குமுறையையும் சமூக அநீதிகளையும் துடைத்தெறிய வேண்டுமென்று தோழமை பூண்டார்கள். சிலர் கல்வியைத் தொடர்ந்தவாறே போராளிகளானார்கள்.

    அதனால் தான் தாங்கள் சார்ந்திருந்த இயக்கங்களுக்கு எதிராகவும் இம்மாணவர்கள் போராட வேண்டியவர்களானார்கள். 1985 காலகட்டத்தில் யாழ் குடாவில் இராணுவ அடக்குமுறைகளுக்கு மட்டும் மாணவர்கள் முகம் கொடுக்கவில்லை. இயக்கங்களினது அடக்குமுறைகள் அவர்களது தோலைப் பதம் பார்த்தது. அவர்களது உயிர்களை பலி கேட்டது.

    பலர் மாயமாய் மறைந்து போனார்கள். வீதிகளில் அவர்கள் இறங்கினார்கள். போராட்டம் மக்களிடம் பரவியது. முன்னணியில் நின்ற தோழர்கள் வீதிகளில் உயிரற்ற உடலமாய் வீழ்த்தப்பட்டார்கள். மரணம் தெருக்களில் துப்பாக்கிகளுடன் உலாவியது. அவர்களது தோளுக்கருகே செவிகளுக்கருகே துப்பாக்கி நிழலாய்த் துரத்தியது. பேரினவாத இராணுவமோ முகாம்களுக்குள் முடங்கி வெளிவரமுடியாத காலகட்டம் அது.

    கூற்று (Rathi) 1.

    அண்மையில் கூட வன்னி களமுனையில் இறந்துவிட்ட ஈழப்பெண்போராளிகளின் பிணங்களை சிங்கள ராணுவம் புணர்ந்த மானிடப்பண்பிற்கு புறம்பான செயலை சில தனியார் தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன. பிறகு அதை வேறு தளங்களுக்கு சென்று அதற்கு இணைப்பு வேறு….. பார்க்க நேரிட்டது. எனக்கு வேதனையாகவும் எரிச்சலாகவும் இருந்தது. அந்த படங்களை வெளியிட்டவர்களிடம் நான் கேட்பது, பாதிக்கப்பட்ட பெண்கள் உங்கள் வீட்டுப்பெண்களாக இருந்தால் அந்த படங்களை தளங்களில் இணைத்திருப்பீர்களா? இதையெல்லாம் பார்க்கும் ஓர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எப்படி தனக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்ல தோன்றும்? தனது சமூக அங்கீகாரம் பற்றிய பயம் பாதிக்கப்படுகிற பெண்ணுக்கு வராதா? இப்படி புகைப்படங்களை போட்டு எங்களின் நெஞ்சங்களில் நெருப்பை அள்ளி கொட்டாதீர்கள். அறிவார்ந்த தமிழ் இணையத்தளங்களின் உரிமையாளர்களிடம் நான் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்வது இதுதான்.

    மறுப்பு

    நீலப்படங்களுடனும் தூஷண வார்த்தைகளுடனும் வலம் வரும் கட்டளைத்தளபதிகளை தட்டிக் கேட்க வக்கற்றிருந்தவர்கள் அதே வக்கிரத்தை இராணுவம் செய்த வேளை பெண்களை நிர்வாணப்படுத்திய அக்கிரமத்தை அத்தாட்சிகளாக வெளியிட்ட இணையத்தை தூய்மை புனிதம் என்ற சமூகக் கண்ணாடியிட்டு இவ்வக்கிரமத்தை அதன் குரூரத்தை அதன் பின்னாலுள்ள ஆணாதிக்க கருத்தைச் சாடாது, வெளியிட்ட இணையத்தை அதன் நோக்கத்தைச் சாடுவது இன்னொரு வகையில் இக் கொடுமைகளை வெளிவராமல் செய்வதற்கு சமமானது. அல்லது அவர்களது நோக்கம் இவ்விணையத்தை சாடுவதற்காக கூட இருக்கலாம்.

    • //ஆணாதிக்க கருத்தைச் சாடாது, வெளியிட்ட இணையத்தை அதன் நோக்கத்தைச் சாடுவது இன்னொரு வகையில் இக் கொடுமைகளை வெளிவராமல் செய்வதற்கு சமமானது. //

      தமிழ் சகோதரிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எப்படி உங்களால் ஆணாதிக்கம் என்ற சிறிய வட்டத்திற்குள் அடைக்கமுடிகிறது? எங்கள் சகோதரிகள் பெண்கள் என்பதால் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படவில்லை. அவர்கள் “தமிழர்கள்” என்பதால், யாரும் தங்களை தட்டிக்கேட்க முடியாது என்ற ஆணவத்தால், சிங்கள ஆட்சியாளர்களே தங்கள் பாலியல் குற்றங்களை நியாப்படுத்துவார்கள் என்ற துணிவில் தான் சிங்கள சிப்பாய்கள் ஆடுகிறார்கள். ருவண்டாவின் இனப்படுகொலைகளை விசாரித்த குழு சொன்னதை உங்களுக்கு இங்கே கோடிட்டு காட்ட விரும்புகிறேன், “Victim is the group itself and not only the individual” .

      எங்கள் சகோதரிகளுக்கு நடந்த கொடுமைகளை தாரளமாக வெளியில் கொண்டுவாருங்கள். ஆனால், இதுவல்ல அதற்குரிய வழிமுறை என்பதுதான் என் வாதம். இந்த காணொளிகள், புகைப்படங்கள் என்பவற்றை அனுப்பவேண்டிய இடங்களுக்கு அனுப்புங்கள்.

      என்னைப்பொறுத்தவரை, இது ஆணாதிக்கம் என்பதைவிட இது மனிதசிதைவு மற்றும் இனப்படுகொலையாகத்தான் தோன்றுகிறது. கொலை, சித்திரவதை, கற்பழிப்பு எல்லாம் ஒரு இனத்தை அழிக்கும் ஓர் செயலாகவே இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

      அது சரி, நான் அதை வெளியிட்ட தளங்களின் உரிமையாளர்களிடம் தானே வேண்டுகோள் விடுத்தேன். நீங்களும் உங்கள் தளத்தில் அதை வெளியிட்டீர்களா, சிறி? இவ்வவளவு கோபப்படுகிறீர்கள்?

      //அல்லது அவர்களது நோக்கம் இவ்விணையத்தை சாடுவதற்காக கூட இருக்கலாம்.//
      இது உங்கள் கற்பனை. அது என் நோக்கமல்ல.

    • அன்பு நண்பர்களே வணக்கம். நண்பர் சிறீயின் கருத்துக்களுக்கு என் மனதில் தோன்றியதைக் கூறலாம் என்று நினைக்கிறேன். நண்பர் கூறினார் அவர் அதிகமான (நல்ல, வியக்கத்தக்க) மதிப்பெண்கள் பெற்ற போது ஒரு ஆசிரியர் அவருடைய ஜாதியைக் குறித்து மட்டமான முறையில் பேசினார் என்று. அவ்வாறு பேசிய ஒருவர் நிச்சயமாக ஆசிரியராக இருக்க முடியாது. அவர் ஒரு சிறியர்.
      இந்த விசயத்தைக் குறித்து இன்னும் சில கருத்துக்கள். அதற்கு முன்னதாக நடந்தததைத் தெளிவாக கூறியதற்கு நண்பர் சிறீக்கு என் நன்றி.
      நண்பர் சிறீக்கு நடந்தது ஒரே கிராமத்தில் ஒரே ஜாதியில் பிறந்த ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே இன்றும் நடக்கிறது (தமிழகத்தில்). எந்த வித்தியாசத்தில். பொருளாதார, வசதி அடிப்படையிலான வித்தியாசத்தில்.
      Sorry I jump to English so that I can convey more messages.
      What happenend to Sree, happens amid the teachers of the same school of the same church. A teacher whose father might have been rich one talks ill about the teacher who is the son of a poor father (but of same religion and caste). Why it happens? Only because of the character of the individual. How can we state a particular whole community is doing this? This the black mark for the concerned teacher only. Not for the community he belongs to. Don’t thing that I am Vellaalar (Pillai). I am a Non-Vellaalar. I never give preference to religion or caste. I give preference to individuals on the basis of their attitude only. I love my lovable mother tongue ‘TAMIL’.
      A word ‘pulipasism’ is used in this blog. I don’t understand the meaning of it. It would be better if the background is explained.
      My next question is “if LTTE had not been there, Ezham would be arrives today?” Did the non-LTTE make it possible to arrive at Ezham? What happened before the advent of LTTE(1976)? Only Genocide. No body can ask Singala army anything? After the establishment of LTTE (after the black July 1983), ethnic riots can not be repeated killing masses, only because of the LTTE’s retaliation. Any one can deny this?
      My next concern is on the fighting between brothers. Suppose me and my own brother has a problem between us. If someone, who does not want my brother, approaches me and tries to develop me against my brother, should I accept that? May be I am not in good terms with my brother now. But will it continue as it is now? Will it not change? Definitely it will change. Because he is my brother (own). Hence, what should I have done, if someone has approached me to develop me against my brother? I should not have said simply no. I should have spitted at him. Did my Tamil brothers do this? They became the victims of the Sinhalese.
      Veluppillai Prabaharan could have accepted 50 lakhs per month from Rajiv Gandhi? Or else he could have been the chief minister for the north and east. Did he do that? He decided to go, till the permanent solution is reached. His decision was selfish? What is his present situation? His family’s situation? His father and mother, who are affluent for generations, are in the cruel fourth floor. And no hints on his wife’s, daughter’s and son’s whereabouts. Is Veluppillai Prabaharan selfish? Think my dear Tamil brothers. Veluppillai Prabaharan is not like our usual political leaders. He is a real leader. He is parallel to many selfless leaders.
      My request to Rathi is this only. Please write what happened in Ezham. We TN Tamilians think Rajiv Gandhi is innocent. Dinamani gives only the tip of the iceberg. No body knows what IPKF did in Ezham. If the cruelties (rape, murders and so on), is revealed only, every one can know the real face of the Indian army.
      Friends do not be victim to the tactics of the Srilankan Govt. Strengthen the freedom fighters.
      I can not read any news in the dailies like this. “Singale fishermen crossed the border for fishing and shot dead by Indian navy”. But what happens to our fishermen? Is it so serious to cross the border for fishing that one can be killed?
      And no Srilankan Tamil students, among the 10 students, I met in TN, tell anything bad about LTTE or Veluppillai Prabaharan. They praised them. They used only the word ‘Thalaivar”. If they tell something against LTTE in TN, who can kill them? Those words came from their heart.
      And some friends in this blog says about makkal poraattam. What happened in srinlnka for the makkal porattam. What is happening in India and TN? How the people, without any arms, can fight against their own govt. which bombs and shells them. Silankan govt. will simply shell and kill totally.
      And every one knows what Communist China is doing on Arunacchal Pradesh. And what the communist Kerala govt. is doing?
      I wanted to write many things. But I don’t think I have said everything I wanted to say.
      Finally my humble request to our Tamil brothers is please do not be victim of the srilankan govt. or its spies. TAMIL, our mother should be the only thing on which we should be united. Dispense all other minor differences like religion, caste etc.
      “TAMIL THTHAAI VAAZHKA”

  8. வினவின் தளத்தின் தோழமை கொண்ட புதிய கலாச்சாரம், அபு கிரைப் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள் அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவத்தால் நடாத்தப்பட்டதற்கு சாட்சியங்களை புகைப்படங்களுடன் வெளியிட்டது.

    இது தொடர்பாக அவர்களது கட்டுரையை நான் ரதிக்கு வாசிப்புக்கு பரிந்துரைக்கின்றேன்.

    ஆடைகள் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள்

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5856:2009-06-09-21-57-49&catid=207:1995-&Itemid=59

  9. சிங்கள ராணுவம் செய்துள்ள பாலியல் சித்திரவதைகளும், வன்கொடுமைகளும், மரணத்தை விட கொடூரமானது. அபு கிரைப்-பிலும் அமெரிக்க ராணுவம் இதைத் தான் செய்தது. நம் இந்தியாவிலும் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களிலும் இந்திய ராணுவம் இதைத் தான் செய்கிறது.

    ரதி சொல்வது போல் அனைத்து விதமான ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக போராடி உரிமையை பெறவேண்டும்.

    >>ஈழத்தில் தமிழனுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினத்தவரின் மனித உரிமைகளுக்கும் அரசியல் அபிலாஷைகளுக்கும் உரிய சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்

  10. ரதி அவர்களுக்கு
    இந்தக் கொடுமைகளையெல்லாம் அம்பலப்படுத்துவது யாருக்கு என்பதில் நாம் மிகவும் தெளிவாகவே உள்ளோம். எமது சொந்த மக்களுக்கு மட்டுமே நாம் எவற்றையும் அம்பலப்படுத்துவோம். ஏகாதிபத்தியங்களின் வாலாய் அவர்களின் நிதி மூலதனங்களில் இயக்கப்படும் மனிதவுரிமை அமைப்புக்கள் எவற்றையும் நாங்கள் நம்புவதுமில்லை. அவர்களது நியாயங்கள் மக்களுக்கு சார்பானதுமில்லை. ஏகாதிபத்தியங்களின் தீர்ப்புக்கு நமது மக்களின் தலைவிதியை அடகு வைத்தது புலிகள். இன்றும் கூட உங்களுக்கு சர்வதேச மன்னிப்புச் சபையிடம் சிறு துளி நம்பிக்கையுள்ளதாக கூறுகிறீர்கள். அவர்களிடம் முறையிடலாம் எனவும் கூறுகிறீர்கள். நாங்கள் அவ்வறான நம்பிக்கையை மக்களுக்கு ஊட்ட விரும்பவில்லை. மூன்றாம் தரப்பு இடையில் தேவையேயில்லை. சொந்த மக்களை நம்பியே நாங்கள் அவர்கள் முன்னால் எல்லாவிதமான விடயங்களையும் முன் வைக்கின்றோம். அவர்களே தங்களுக்காக போராடுவார்கள். போராட்டத்தை ஏகாதிபத்திய சக்திகளின் தயவில் கருணையில் தங்கியிருக்குமாறு அவர்களை ஊக்குவிக்க புலிகளைப் போன்றவர்களாலேயே முடியும்.

    //குறைந்த பட்சம் சோனியா காந்திக்கோ அல்லது மன்மோகன் சிங்க் இற்கோ அனுப்பி வைத்துஇ இதைப்பார்த்து “சந்தோசப்படுங்கள்” என்றாவது சொல்லியிருக்கலாம் இவர்கள். //

    //கேட்ட வேண்டிய இடத்தில் நியாயம் கேட்கத் தெரிந்தால் அது இவர்களின் புத்திசாலித்தனம். //

    நீங்கள் கேட்க வேண்டிய இடம் என்று குறிப்பிடும் இடங்களை நம்பி இருங்கள் – புலிகள் போலவே.

    நாங்கள் மக்களிடமே எவற்றையும் எடுத்துச் செல்வோம். அவர்களே போராடும் சக்தி.

    // அது சரிஇ நான் அதை வெளியிட்ட தளங்களின் உரிமையாளர்களிடம் தானே வேண்டுகோள் விடுத்தேன். நீங்களும் உங்கள் தளத்தில் அதை வெளியிட்டீர்களாஇ சிறி? இவ்வவளவு கோபப்படுகிறீர்கள்?//

    எனது கோபம் ஒடுக்கப்படும் மக்கள் சார்பானது. தமிழ் அரங்கம் எங்கள் தளம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாகவே நாங்கள் அதனைப் பார்க்கின்றோம். மேலும் சட்டப்படி தமிழ் அரங்கம் எனது பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இத்தளத்தை தனியார் தமிழ் இணையத்தளம் என்று குறிப்பிட்டதே தவறானது.

    நீங்கள் வேண்டுமென்றால் பெண்களின் உடல்களை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்தும் இராணுவ நடவடிக்கையை ஆணாதிக்கம் இல்லை என்று மறுக்கலாம்.

    ஆனால் கொல்வதற்கு அப்பாலும் நிர்வாணப்படுத்தும் வக்கிரம் ஆணாதிக்க மன வக்கிரமே தான்.

    இதே சிங்கள இராணுவம் சிங்களப் பெண்களை ஜே.வி.பி கிளர்ச்சியின் போது நிர்வாணப்படுத்தியதை என்னவென்று சொல்லப் போகின்றீர்கள். ஒடுக்கும் இராணுவம் இனம் மொழி தேசம் கடந்து இவற்றையெல்லாம் செய்யும். தமிழ் பெண்கள் என்பது இன்றைய ஒடுக்குமுறை வடிவத்தில் ஒரு அதீதமான காரணம்.

    பெண்ணை நிர்வாணமாக்கும் பேரினவாதக் கொடுமையை, தமிழ்மக்களுக்கு மூடிமறைக்க கோருகின்றனர்?

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4737:2009-01-04-14-01-54&catid=277:2009&Itemid=76
    பேரினவாத பாலியல் இழிசெயலுக்கு எதிராக எழுந்துள்ள குரல்கள்
    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4719:2008-12-30-20-12-06&catid=277:2009
    மண்ணுக்குள் தலையைப் புதைக்கும் பெண்ணியல்வாதிகள்
    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4722:2008-12-31-11-58-29&catid=277:2009&Itemid=76
    சிங்கள இராணுவம் பெண்களை நிர்வாணப்படுத்தி குதறுவதை, மூடிமறைக்கும் புலித் தேசியம்
    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4713:2008-12-28-09-09-53&catid=277:2009&Itemid=76
    கோணேஸ்வரிகள்
    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4733:2009-01-03-21-24-41&catid=108:sri&Itemid=50

    • சிறி,

      //சொந்த மக்களை நம்பியே நாங்கள் அவர்கள் முன்னால் எல்லாவிதமான விடயங்களையும் முன் வைக்கின்றோம். அவர்களே தங்களுக்காக போராடுவார்கள். //

      நீங்களும் நானும் எங்கோ உலகத்தின் ஓர் பாதுகாப்பான மூலையிலிருந்து கொண்டு பதிவெழுதி எல்லா விடயங்களையும் மக்கள் முன்னால் வைக்கலாம். ஆனால், ஈழத்தில் எம் மக்கள் இப்பொழுது போராடும் சக்தியோடா இருக்கிறார்கள்? நாங்கள் என்னதான் சொன்னாலும் அவர்களுக்கு சர்வதேச அமைப்புகள் (ICRC, Human Rights Watch, Amnesty International, etc) தானே இப்போ கதி. இந்த அமைப்புகள் தானே ஓரளவுக்கேனும் சிங்கள ஆட்சியாளர்களிடம் மக்களின் அவலங்கள் பற்றி பேசமுடிகிறது. நான் யதார்த்தம் பற்றிப்பேசுகிறேன்.

      //நீங்கள் வேண்டுமென்றால் பெண்களின் உடல்களை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்தும் இராணுவ நடவடிக்கையை ஆணாதிக்கம் இல்லை என்று மறுக்கலாம்//

      ஐயா, நான் அது ஆணாதிக்கத்தை விட மோசமான, மிருகத்தனமான செயல் என்று தான் சொல்கிறேன் . ஆணாதிக்கம் என்ற கருத்தியல் பல இடங்களில் பொருந்தும். எங்கள் சகோதரிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஆணாதிக்கம் என்ற வரையறைக்குள் மட்டும் ஏன் அடங்காது என்று ஏற்கனவே விளக்கியிருக்கிறேன்.

      //தமிழ் அரங்கம் எங்கள் தளம். நீங்கள் இத்தளத்தை தனியார் தமிழ் இணையத்தளம் என்று குறிப்பிட்டதே தவறானது//

      ஐயா, நான் எனது பதிவில் அல்லது பதிலில் எங்கேயாவது சொன்னேனா “தமிழரங்கம்” என்று. நீங்கள் தான் எல்லாவற்றையும் சொல்லி விட்டு, என்னை தாக்குகிறீர்கள். நான் பொதுவாக சொன்னதிற்கு, நீங்கள், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று நீங்களாகவே தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு என்னை குற்றம் சொல்லலாமா? 🙂

      இறுதியாக, எனக்கு புலிகள் மீது எப்பொழுதுமே எங்கள் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் என்ற மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், இது அவர்களைப்பற்றி விவாதிக்கும் களமாக தற்போது இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

      Oh, finally, in my opinion it is obnoxious to post and view those pictures you posted in your site.

      • மக்கட் பிணங்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய படங்களை வெளியிட்டது தவறல்ல. மக்களுக்காக மக்களிடம் போராடும் போது அதை மக்களிடம் நிரூபிக்காமல் பின் யாரிடம் நீரூபிப்பது/ என்னது மண்மோகனிடமும் சோனியா காந்திக்கும் அனுப்பினால் அவர்கள் நாளை போராட்டத்திற்கு தலைமை ஏற்று விடுவார்களா என்ன? மக்களை தின்னும் மேலாதிக்க பாசிஅ வெறி நாயிடமே சென்று மடிப்பிச்சை கேட்பது போலல்லவா இருக்கிறது.

        பொதுவான தளம் என குறிப்பிடாது தளத்தின் பெயரை கூட சொல்லலாம். அது கூட தவறல்ல. மக்கட் பிணங்களை பாலியல் ரீதியிலான சித்திரவதைக்கு ஆளாக்கியதை தமிழரங்கத்தில் பார்த்ததாக நினைவு. வேறெதிலாவது வந்திருக்கிறதா என்ன?

        தன் சகோதரிகளுக்கு ஏற்பட்டிருந்தால் என்ற கேள்வியே தவறானது. அவை மறைக்கப்பட்டிருந்தால், அல்லது ஒழிக்கப்பட்டிருந்தால் நீங்களோ நானோ அதைப்பற்றி சிங்கள இனவெறி ராணுவத்தினைப்பற்றி பேசியிருக்கமாட்டோமே? இதை வெளியிடுவது தவறு எனில் அதை மறைப்பதற்கு ஒப்பாகாதா?

      • மணீப்பூரிலே காசுமீரிலே பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் ரீதியில் கொன்றுபோட்டார்கள். அவர்கள் இன ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம் அப்ப்டி பதில் சொல்கிறது. சிறீ சொன்னது போல ஜேவிபிகிளர்ச்சியின் போது சிங்களப்பெண்கள் மீது பாய்ந்த ஆணாதிக்கத்தின் எல்லையை சுருக்கிவிட முடியுமா என்ன?

  11. சொல்ல வந்ததை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். என்ன! கட்டுரையின் நீளத்தில்
    வினவு குழுமத்தில் ஒருவராகவும் மாறிவிட்டீர்கள்.

    இந்த ஐடென்டி கார்ட் பிரச்சனை இந்தியாவில் சில மாநிலங்களில் இப்பொழுது பிரச்சனையாக இருக்கிறது.. இப்பொழுது, பயங்கரவாதத்தை தடுக்கும் பொருட்டு, அனைத்து இந்தியர்களும் கார்டு தர ஏற்பாடு நடந்து கொண்டேயிருக்கிறது. சமீபத்தில் இந்தியா வந்த பில்கேட்ஸ் இதற்காக பிசினஸ் பேசிவிட்டு போயிருக்கிறார். எதிர்காலத்தில் இந்தியா முழுவதும்… ஐடெண்டி கார்ட் பிரச்சனை எழத்தான் போகிறது. ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டையை அச்சர சுத்தமாக அடிப்பவர்களுக்கு, ஐடெண்டி கார்டா தயாரிக்க முடியாது. வறியவர்களையும், எளியவர்களையும் தான் இவர்கள் வதைக்கப்போகிறார்கள்.

    குஜராத்தில் இந்து மத வெறியர்கள் வாக்களர் பட்டியலை வைத்துக்கொண்டு தான், முசுலீம்களை வீடு தேடி வெட்டினார்கள். பாலியல் பலாத்காரம் செய்தார்கள். தெருவில் இழுத்துப்போட்டு, கொளுத்தினார்கள்.

    • நொந்தகுமாரன்,

      //இப்பொழுது, பயங்கரவாதத்தை தடுக்கும் பொருட்டு, அனைத்து இந்தியர்களும் கார்டு தர ஏற்பாடு நடந்து கொண்டேயிருக்கிறது. //

      இலங்கையிலும் இப்படித்தான் ஆரம்பித்தது. இலங்கையில் தமிழன் என்று இனரீதியாக அடையாளம் பிரிக்கவும் அவனை தரக்குறைவாக நடத்தவும் கொலையே செய்யவும் இது ஒரு பாஸ்போர்ட் போல் ஆகிவிட்டது. இப்போது அதை விரல் ரேகை (Finger Print) பதித்து கணணி மயமாக்கப்பட்டு கொடுக்கப்போகிறார்களாம். தமிழனை கொல்ல விதம் விதமாக ஐடியா பண்ணுகிறார்கள்.

      இந்தியாவில் இந்த அடையாள அட்டையில் என்னென்ன விடயங்கள் பதியப்படும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், இன,மொழி, ஜாதி, மத அடிப்படையில் பல பிரிவாக மக்கள் தங்களை அடையாளப்படுத்தும் இந்தியா போன்ற பெரிய நாட்டில் எற்கனவே இருக்கிற பிரச்சனைகளையும் இது இன்னும் ஊதிப் பெருக்க வைக்காதா என்று பயத்தைத்தான் வரவழைக்கிறது.

      ஆனால் ஒன்று நொந்தகுமாரன் அரசியல்வியாதிகளுக்கும், கொள்கைவகுப்பாளர்களுக்கும் அடையாள அட்டையையை கொடுத்து அவர்களை தனியே பிரித்தெடுத்தால், பிறகு பொதுமக்களை எல்லா ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றி விடலாம். சரியா நான் சொல்வது?

  12. பாலியல் வக்கிரங்களுக்காக்கப்படும் பெண்களின் படங்களை வெளியிடலாமா?

    பூலான்தேவியின் வாழ்வை சித்தரிக்கும் பண்டிட் குயின் படத்தில் அந்த தலித் பெண் பல மிருகங்களால் குதறப்படும் காட்சிகள் உள்ளன. சிலர் இதை தவறு என்று எதிர்த்தனர். ஆனால் அந்தக் காட்சிகளை பார்ப்பவர்கள் எவரையும் உலுக்குவதோடு அதன் கொடுரத்தை சொந்த முறையில் ஆணாக இருந்தாலும் உணர்த்தும் வலிமையுடன் படமாக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி புதிய கலாச்சாரத்தில் எழுதியிருந்தார்கள்.

    மணிப்பூரில் சில பெண்கள் நிர்வாணமாக இந்திய இராணுவ முகாமின் வாயிலில் எங்களை ‘ கற்பழியுங்கள்’ என போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும் மணிப்பூரில் இந்திய இராணுவம் நடத்தும் அட்டூழியங்களைப் பற்றிய விழிப்புணர்வை நாட்டு மக்களிடம் கொண்டு வந்த்து. இல்லையென்றால் இந்த அளவுக்கு கவனம் பெற்றிருக்காது.

    அபுகிரைப்பில் நடந்த வக்கிரங்கள் உலகமெங்கும் வெளியானதால்தானே உலகம் முழுவதும் அமெரிக்க எதிரப்பு போராட்டங்கள் சூடு பிடித்தன. இந்த படங்களை புதிய கலாச்சாரத்திலும், வெளியிட்டிருந்தார்கள். மேலும் மாஞ்சோலையில் போலீசால் கொல்லப்பட்ட மக்கள் விலங்குகளைப் போல பிணவறையில் நிர்வாணமாக கிடந்த படங்களையும் வெளியிட்டிருந்தார்கள். இவையும் அந்த அவலத்தை மக்களிடம் கொண்டு சென்றன.

    கும்பகோணம் தீ விபத்தில் எரிந்து போன குழந்தைகளின் படங்கள் ஊடகங்களில் வெளியான பிறகே தமிழகத்தில் பெரிய விழிப்புணர்வும் அந்த கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்ற கோபமும் ஏற்பட்டது.

    போலீசு கயவர்களால் சின்னாபின்னாமாக்கப்பட்ட சிதம்ரம் பத்மினி, ரீட்டாமேரி, வாச்சாத்தி பெண்கள் தங்கள் முகங்களை தைரியமாக வெளியே தெரியவைத்த பின்னரே மக்கள் மத்தியில் இந்த கயவர்கள் அம்பலமாயினர். குற்றவாளிகளும் தண்டிக்கப்ட்டனர்.

    இத்தகைய பாலியல் வக்கிரங்களும், பொர்க்குற்றங்களும் சர்வதேச அமைப்புக்களிடம் ஒரு சலனம் எற்படுத்த வேண்டுமென்றால் அதற்கு மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அந்த கோபத்தை எழ வைப்பதற்கே இந்தப் படங்களை நாம் வெளியிடுவதே சரி என்கிறோம்.

    அதே நேரம் ஒரு தனிப்பட்ட பாலியல் வன்முறையில் பாதிக்கப்படும் பெண்ணின் பெயரை, படத்தை வெளியிடக்கூடாது என இங்கு சட்டம் உள்ளது. இது அந்த பெண்ணின் மனநிலையை இன்னும் பாதிப்புக்குள்ளாகும் என்பதாதலும் அவருக்கு ஒப்புதல் இல்லையென்பதாலும் இந்த நடைமுறை சரியானதே.

    ஆனால் தனி ஒரு ஆணின் வக்கிரத்திற்கும் ஒரு இனத்தின் இராணுவத்தின் வக்கிரத்தையும் ஒன்றாக பாரக்க முடியாது. ஈழத்தில் தமிழ் பெண்கள் என்பதால் அவர்கள் வல்லுறவுக்குள்ளாக்கப்ட்டார்கள். இந்த அநீதியை மக்களிடம் விரிந்த அளவில் கொண்டு செல்வதாலேயே நாம் நம் நோக்கத்தில் வெற்றி பெற முடியும். இதை வெறும் மானம், அவமானம், தனிப்பட்ட பிரச்சினை என சுருக்கத் தேவையில்லை எனக் கருதுகிறோம்.

  13. மிகச் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் சல்வா ஜூடும் கூலிப்படையினரால், பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களது புகாரை தேசிய மனித உரிமை கமிஷன் ஏற்கவில்லை. இந்நிலையில் தெஹல்கா ஏடு இது குறித்து கட்டுரை வெளியிட்ட பின்புதான், இவ்விசயம் பரவலாக வெளிவந்தது. பாதிக்கப்பட்டோரின் முகங்கள் மறைக்கப்பட்டிருந்தும், தோழர் ரதி முன்வைக்கும் இதே போன்ற வாதங்கள் இவ்விசயத்திலும் எழுப்பப்பட்டன. அக்கட்டுரையையும், கட்டுரையாளர் அஜித் சாஹியின் எதிர்வினையையும் படித்துப் பாருங்கள்.

  14. ரதி அவர்களே ஈழம் பற்றிய உங்கள் நினைவுகள் நீளட்டும். வசதி, வாய்ப்புகள், சன் டி.வி, மானாட மயிலாட என்று லயித்துக் கிடக்கிறது தமிழர் மனம். இங்கு ஒரு உண்மையை உணர்த்த உரத்து சொல்ல வேண்டியுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியை தகர்த்த அமேரிக்கா முதலில் செய்த வேலை அது பற்றிய உண்மையை செய்தது. ஜப்பானிய அரசும் செயலிழந்திருந்த வேளையில் அங்கிருந்து தப்பியோடிய கைதிகளின் மூலமாக உலகம் உண்மையை அறிந்தது. உங்களுடையது போன்ற எழுத்துக்கள் மிக மிக அவசியம். அமெரிக்கர்களிடம் அடிமைப்பட்ட ஆப்பிரிக்கர்கள் தங்கள் மண்ணைக் குறித்தும், வரலாறைக் குறித்தும் தமது பிஞ்சுகளுக்கு இரவின் நிலா வெளிச்சத்தில் ஊட்டுவார்கள் என்று ‘ஏழு தலைமுறைகள்’ நாவலில் படித்திருக்கிறேன். இது போன்ற பதிவுகள் எப்போதுமே விடுதலை வேருக்கு நீர். போர்க் குற்றவாளிகளையும், கைக்கூலிகளையும் ஒரு நாள் அவை கூண்டிலேற்றும்.

    • என் பதிவுக்கு பின்னூட்டம் இட்டு விவாதங்களில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

      சுக்தேவ்,

      //வசதி, வாய்ப்புகள், சன் டி.வி, மானாட மயிலாட என்று லயித்துக் கிடக்கிறது தமிழர் மனம்//

      இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டு உறவுகளே மானாட மயிலாட பார்த்தது போக மீதி நேரமிருந்தால் ஈழத்தமிழர்களின் அவலங்கள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். மானாகவும், மயிலாகவும் சுதந்திரமாக துள்ளித் திரிய வேண்டிய எங்கள் குழந்தைகளும், சகோதர சகோதரிகளும் ராணுவ காடையர்களால் மிருகங்கள் போல் வேட்டையாடப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மனது வைத்தால் ஈழத்தமிழர்கள் வாழ்வில் நிச்சயமாக ஓர் மாற்றத்தை கொண்டுவர முடியும். உங்களால் கண்டிப்பாக முடியும். செய்வீர்களா?

    • Hi friends in my above reply, the line which tells about the immediate action of America after bombarding Hiroshima and Nagasaki is slightly misleading. Actually I wanted to say America suppressed the truth. But it is not conveyed properly. I took this from Marcel Junod’s ‘The First Atom Bomb’.

  15. ரதி. தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களின் நலனுக்கு இன்றும் என்றும் தங்களால் இயன்ற உதவிகளைக் கண்டிப்பாகச் செய்வார்கள். இதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். அவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கும் இந்திய நாட்டில் பெருவாரியாக நிலவும் அமைதியும், பிரச்சினை இல்லா நிலையும் காரணமே தவிர அண்டை நாட்டின் உள்ள உறவின் மீதுள்ள அக்கறையின்மை அல்ல. ஈழத்தமிழர்கள் மீண்டும் எழும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்குத் தோள் கொடுப்பது நாங்களாகத்தான் இருப்போம்.

    • aavan rajhkumar-jaffna,

      உங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்தா எழுதுகிறீர்கள்? தெரிந்து கொள்ள மிக ஆவலாயுள்ளேன், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்.

  16. பெண்கள் மீதான வன்முறையின் தீராத வலி, எழுத்துக்களால் அறியப்படுவதல்ல. அது மனத்தினால் மட்டுமே உணரப்படுவது. போருக்குள் அகப்பட்ட பெண்களின் ரணங்கள் அவா;களுக்குள் மட்டும் என்றுமே ஆறாத வலியைத் தந்து கொண்டே இருக்கும்.
    எந்த வன்முறையையும் தாண்டிய கொடிய வன்முறை, பெண்களின் உடல் மீது மீறப்படும் வன்முறை.
    போh; நடைபெறும் எல்லா நாடுகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பெண்களின் குரல்களை, என்று, எப்போது இந்த உலகம் காது கொடுத்து கேட்கின்றதோ, அன்றுதான் இந்த வன்முறையின் தீh;வுக்கான சிறுபொறியாவது எழும்.
    ரதி, உங்கள் பதிவுகளில், உலகஅறிவோடு இசைந்த எழுத்துவன்மை நன்கு பளிச்சிடுகிறது. முன்னைய எழுத்துக்களை விட , இப்போது நன்கு வீhpயமிக்க எழுத்துக்களை பதிந்து கொண்டிருப்பது தொpகிறது.
    உங்களுடைய எழுத்துக்கள், இன்னும் இன்னும், எம்மை, எம் போh;வாழ்க்கையை நன்கு பதியட்டும்.

  17. தமிழ்ப்பாசிசம் தன்னை மூடிமறைத்து எப்படி எந்த வேஷத்தில் தமிழ்மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்ததோ, அதே உள்ளடக்கதில் இந்திய பொதுவுடமைவாதிகளை ஏமாற்றுகின்றது. இதற்காக தன்னை மூடிமறைத்துக்கொண்டு; களமிறங்குகின்றது. பாசிசம் எப்போதும் வெளிப்படையாக தன்னை பிரச்சாரம் செய்வது கிடையாது. அது தன்னை மூடிமறைக்கின்றது.

    மக்களின் பொதுவான அவலத்தை, தன் சொந்த அவலமாக காட்டியே பிரச்சாரம் செய்கின்றது. தமிழ் பாசிசமாகட்டும், இந்துத்துவ அடிப்படைவாத பாசிசமாகட்டும், முஸ்லீம் அடிப்படைவாத பாசிசமாகட்டும்…, சமூகத்தின் பொதுவான பாதிப்புக்களையும், துயரங்களையும், மனித அவலங்களையும் முன்வைத்துத்தான் பாசிசம் பாசாங்காக செயற்படுகின்றது.

    இந்து அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம், தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக் கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், இதுபோல் முஸ்லீம் அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்து, தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக்கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், பொதுவுடமை தளத்தில் பிரச்சாரம் செய்யலாம் என்பது வினவின் பொதுவுடமை அரசியல் நிலைப்பாடாக மாறி நிற்கின்றது. இந்த அடிப்படையில்தான் (புலிப்) தமிழ் பாசிசம் தன்னை மூடிமறைத்துக்கொண்டு, வினவில் புகுந்து நிற்கின்றது.

    நாங்கள் இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாத பாசிசத்தை, பொதுவான அவர்களின் துயரத்தின் ஊடாக, எம்தளத்தில் இந்திய பொதுவுடமைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கலாம் என்பதே வினவின் நிலைப்பாடு. இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாதத்துக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யாவிட்டால் சரி. மறைமுகமாகச் செய்யலாம் என்பதற்கு இது ஒத்தது.

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6158:-1&catid=277:2009

  18. ஈழத்தின் பொதுவுடமைக்காக வினவு பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (புலி) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய வினவு தளம் உதவிவருகின்றது.
    தோழர். இரயாகரனின் இந்த கூற்றுக்கு வினவு என்ன பதில் தரப்போகின்றது.

  19. //ஈழத்தின் பொதுவுடமைக்காக வினவு பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (புலி) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய வினவு தளம் உதவிவருகின்றது.
    தோழர். இரயாகரனின் இந்த கூற்றுக்கு வினவு என்ன பதில் தரப்போகின்றது.//

    தோழர் ஆஸ்கர், டெக்கான், வினவின் கொள்கைகளோடு ஒத்துப் போகின்ற பதிவுகளை மட்டும் வெளியிட்டால், மாற்றுக் கருத்துக்களை எல்லாம் புரிந்து கொள்ள முடியாது.

    ஏன், ரதியின் இந்த கட்டுரை மூலமாகத்தானே, சிறிரங்கனின் பதில் மொழியின் மூலம் ரதி ஈழத்தின் எந்த வர்க்கத்தைச் சார்ந்தவர் என்பது புரிகிறது ?

    புலிபாசிசத்தின் கருத்துக்களை அவர்களின் மொழியாக பதிவாக வெளியிடுவதன் மூலமாகத்தானே, தமிழகத்தில் உள்ள எம்மைப் போன்ற மற்றவர்கள், புலிப்பினாமி பாசிச கருத்துக்களை அறியவும், அதனுள்ளே உள்ள விஷமங்களையும், விடயங்களையும் (சிறிரங்கன் மூலமாக ரதியின் வர்க்கம், ராணுவ அடக்குமுறை காரணங்களுள் ஒன்று இந்திய தூண்டுதலான சிங்கள முகாம் மீதான புலி தாக்குதல் – சிங்கள தமிழ் பாட்டாளிச் சீர்குலைவுகள் – இவற்றை அறிய முடிந்த்து ?).

    வினவு ஒன்றும் ரதியின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லவில்லையே ?

    இது என் தனிப்பட்ட கருத்து, வினவின் கருத்தல்ல. உங்களை போன்று நானும் வினவின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

  20. மன்னிக்கவும் தோழர் இராயாகரன்.. உங்கள் கருத்துக்கள் ஏற்றக்கொள்த்தக்கதாக இல்லை.

  21. ஈழத்தின் போராட்ட வரலாற்றை மேலோட்டமாக மட்டும் அறிந்த நான் உட்பட பலருக்கும் , ஈழத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வரலாறு ஒரு தனி நபரின் பார்வையால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியதாய் ஆவது, தவிர்க்கப் பட வேண்டியதாய் கருதுகிறேன்.
    ஈழ மக்களை வதைத்தது வெறும் சிங்கள இனவெறி மட்டும்தான் என்ற கருத்து, நணபர் ரதிக்கு அவரின் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளை மட்டும் கொண்டு பார்க்கையில் சரியாய் தெரியலாம். ஆனால் உதாரணமாக, தோழர் ராயகரன் போன்றோர் புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு உள்ளனர். இப்படி அனுபவம் கொண்டோரின் பார்வையில் ஈழ மக்களின் விடுதலைக்கு தடை வெறும் சிங்கள பாசிசம் மட்டும் அல்ல.
    நணபர் வித்தகனும், வினவில் கட்டுரை எழுதுகிறார் அவர் பொது உடைமைவாதி அல்ல, இருந்தும் அவர் நாத்திகவாதத்தில் நம்மோடு ஒன்றினைவதால் அவரின் கருத்துக்களை வினவு வெளியிடுகிறது. நண்பர் ரதியின் கருத்துக்களில் எந்தப் புள்ளியில் வினவு ஒத்துப்போகிறது என்பதை, விளக்க வேண்டும். இதற்கு என்னுடைய யோசனை, நண்பர் ரதியின் தொடர் முடிந்த அந்த கட்டுரை மீதான வினவின் அல்லது மாற்றுக் கருத்து உடையோரின் கருத்துக்களை இறுதிக் கட்டுரையாக வெளியிட வேண்டும்.

    வினவு தளம், மாற்றுக்கருத்து உள்ளோரும் உரையாடும் தளம். அதுவே அதன் தனிச்சிறப்பு. அதேவேளையில் வினவின், கருத்தும் கட்டுரையாளரின் கருத்தும் அடிப்படையிலேயே மாறுபடும் வேளையில் வினவின் நிலைப்பாடு முக்கியமானதாகிறது என கருதுகிறேன். இல்லையென்றால் குழந்தையையும் கிள்ளிவிட்டு , தொட்டிலையும் ஆட்டுவது போல் ஆகிவிடும்.

  22. ரதி,

    மீண்டும் வாழ்த்துகள். உங்கள் பதிவுகள் மிக முக்கியாமனவை.

    இணைய தளத்தில் இது போன்ற அதிர்ச்சி தரும் படங்களை போடலாமா என்ற விஷயத்தில் நான் பகத், வினவு குழுவினரை போலத்தான் நினைக்கிறேன். இதில் கூட சென்சேஷன், காசு வருமா என்று பார்க்கும் கயமைத்தனம் இருப்பது உண்மைதான், ஆனாலும் கூட நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்லத்தான் வேண்டும்.

    பகத் // ஈழத்தின் போராட்ட வரலாற்றை மேலோட்டமாக மட்டும் அறிந்த நான் உட்பட பலருக்கும் , ஈழத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வரலாறு ஒரு தனி நபரின் பார்வையால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியதாய் ஆவது, தவிர்க்கப் பட வேண்டியதாய் கருதுகிறேன். //
    இங்கே “ஒரு தனி நபரின் பார்வையால் மட்டுமே புரிந்து கொள்ள” வேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள்? தனி நபரின் பார்வையும் மிக முக்கியமான ஆவணம். ரதி போன்றவர்களின் முக்கியத்துவம் அவர்கள் நேரடி அனுபவங்களை ஆவணப்படுவத்தில்தான் இருக்கிறது. அந்த ஆவணங்கள் மட்டுமே போதாது என்று சொன்னால் அது ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அந்த தனி நபர் பார்வையால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியதாக ஏன் ஆக வேண்டும்?

    • நண்பர் ஆர்.வி , நீங்கள் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். நண்பர் ரதியின் கட்டுரை ஒரு ஆவணம் மட்டுமே. அதன் நடுநிலைத்தன்மையை உண்மை வரலாற்றோடு ஒப்பிட்டு பார்த்து நாம் மதிப்பிட வேண்டும். ஆனால் என்னை போன்ற எதோ கொஞ்சம் தெரிந்தவர்கள் இந்த ஆவணத்தையே , வரலாறு என கருதி விடக்கூடாது என்ற பயத்தில்தான் அவ்வாறு கூறினேன்.

  23. தற்கோதைய நிலையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளையும் பரஸ்பர நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் சிங்கள தேசம் முழு மூச்சாக இறங்கியுள்ளது. சிங்களத்தின் தமிழ்த் தேசியச் சிதைவுக்கான சதிகளுக்காக புலம்பெயர் தேசங்களில் ஒட்டுக் குழுக்களை ஒத்த சில தமிழர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

    அண்மைக் காலத்தில் இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர், விடுதலைப் புலிகள் புலிகளுடன் இருந்து நிறம் மாறிய சில கருணாக்கள், சில வரலாற்றுப் பிழையானவர்கள் எனத் தெரிவு செய்யப்பட்ட சிலர் புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
    What about you “Tecan”?

Leave a Reply to வித்தகன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க