privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்-ரதி-இரயா-வினவு: வறட்டுவாதம் மார்க்சியமல்ல !!

ஈழம்-ரதி-இரயா-வினவு: வறட்டுவாதம் மார்க்சியமல்ல !!

-

தி பற்றியும், ரதியின் தொடரை வினவு வெளியிட்டது பற்றியும் விமர்சித்து தோழர் இரயாகரன் தனது தளத்தில் ஆறு பகுதிகளாக தொடர் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக வினவு தளத்தில் இது குறித்த விவாதம் நடந்து வந்தது.

இந்தப் பிரச்சினையில் இரு வேறு அம்சங்கள் உள்ளதாக கருதுகிறோம்.

ரதி அகதியின் நினைவுகளை எழுதுகின்றாரா அல்லது அத்தகையதொரு போர்வையில் புலிகள் கூறும் வரலாற்றை பிரச்சாரம் செய்கின்றாரா என்பதை வினவு தளத்திலேயோ, அல்லது தனது தளத்திலேயோ தோழர் இரயாகரன் விமரிசனம் செய்வது ஒரு அம்சம். ஒரு புலி அனுதாபி ஈழத்தின் நினைவுகளை எழுத வினவு தளம் இடம் கொடுக்கலாமா என்ற கேள்வி இரண்டாவது அம்சம்.

தோழர் இரயாகரன் இவ்விரண்டையும் ஒன்றாக்கி தன்னுடைய தொடரில் விமரிசித்திருக்கிறார். வினவின் நிலைப்பாடு, புலிகள் குறித்து புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்கு எதிரானதாக இருப்பதாகவும் அவர் சித்தரித்ததை எமது சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

ரதியின் பதிவு வெளியிடப்பட்டதை ஒட்டித்தான் தோழர் இரயாகரனுக்கும் எமக்கும் இடையிலான கருத்து வேறுபாடு துவங்கி இருப்பதாக இந்த விவாதத்தில் பங்கேற்றவர்கள் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இந்த வேறுபாடு இப்போது துவங்கியதல்ல என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

முத்துக்குமாரின் தீக்குளிப்பை ஒட்டியும் அதன் பின்னர் இனப்படுகொலையின் இறுதி நாட்களில் ம.க.இ.க தமிழகத்தில் மேற்கொண்ட போராட்டங்கள் பற்றியும் தனது விமரிசனத்தை  தோழர் இரயா பதிவு செய்துள்ளார். அவசியம் கருதி அவற்றில் இருந்து சில வரிகளை மட்டும் இங்கே மேற்கோள் காட்டுகிறோம்.

“புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ, அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுதான் வழிகாட்டியுள்ளது”

“இந்த தற்கொலையை மற்றவர்கள் பார்பதில் இருந்து எப்படி நீங்கள் வேறுபாடாக பார்க்கின்றீர்கள்.”

“புலிப்பாசிசம் மீதான, அதன் மக்கள் விரோத கூறுகள் மீது உங்கள் போராட்டம் நடக்கவில்லை”

“வை.கோ முதல் சர்வதேசியம் வரை, ஒரே பாதையில் நடப்பது போல் பாசாங்கு செய்வது அதிரவைக்கின்றது.”

“உணர்ச்சின் பின்னால் ஒடுவதல்ல. எழுச்சிக்கு பின்னால் வால்பிடிப்பதல்ல. தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஒடுவதல்ல.”

1.2.2009 (வினவின் பின்னூட்டத்தில் தோழர் இரயாகரன்)

“ஈழத்து விவகாரம் மீண்டும் தமிழக அரசியலான போது, புரட்சிகரப் பிரிவுகள் புலிப்பாசிசம் மற்றும் அரசு பாசிசத்துக்கு எதிராக எம்முடன் ஒரே நிலைப்பாட்டில் நிற்க கூடிய வகையில் ஒரு தொடர் பிரச்சாரத்தை அவர்கள் செய்திருக்கவில்லை. அவர்கள் புலிப்பாசிசம் மீது மென்மையான போக்கை அல்லது கண்டும் காணாமல் அணுகும் போக்கினை கையாண்டனர்.”

“புரட்சிகர பிரிவுகள் புலிப் பாசிசத்தை, பாசிசமாக வரையறுத்த போதும், அதை சமகால அரசியல் பிரச்சாரத்தில் தெளிவாக முன்னிலைப்படுத்தவில்லை. இதுவே எமக்கும் அவர்களுக்கும்; இடையிலான முரண்பாட்டின் மையமான தோற்றுவாயாக மாறிவருகின்றது.”

“ஈழத்து புரட்சிகர பிரிவுகள் சிறிய ஒரு பிரிவாக இருந்த போதும், இது வேறுபட்ட சரியான கோசத்தை முன் வைத்தது. இதை தமிழக புரட்சிகரப் பிரிவு தன் கோசமாக முன்னெடுக்கத் தவறியது.”

“தமிழக புரட்சிகரப்பிரிவுகள் புலியை பாசிசமாக வரையறுத்து அதன் அடிப்படையில் இயங்கிய போதும், சமகாலத்தில் வெளிப்படுத்திய கோசங்களில் கருத்துகளில் அது தெளிவாகப் பிரதிபலிக்கவில்லை.

“தமிழினவாதிகளுடன் இணங்கிச் சென்று, அவர்களை புரட்சிகர பக்கத்திற்கு வென்று எடுக்க முனைந்தனர். இந்திய அரசுக்கு எதிரான கோசத்தை மையப்படுத்தி அதை முன்வைத்தனர். புலிப் பாசிசத்தை அம்பலப்படுத்தி, ஒரு மாற்றுப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை.”

“இந்த போக்கு பாசிசத்துக்கு எதிரான எமது போராட்டத்துக்கு மறைமுகமாக நிர்ப்பந்தம் தருகின்றது.”

“இன்று திரும்பிப் பார்க்கும் போது புலிப்பாசிசம் மறுதலித்த மனிதவுரிமை மீறல்களை தங்கள் கோசத்தின் உள்ளடக்கியிருந்தால், அரசியல் ரீதியாக தமிழினவாதிகளில் இருந்த புரட்சிகரப் பிரிவை இலகுவாக வென்று எடுத்திருக்க முடியும். அது போல் இலங்கை அரசுக்கு சார்பான பிரிவில் இருந்த, புலிப்பாசிசத்துடன் முரண்பாடுகளைக் கொண்டிருந்த பெரும்பான்மையான சமூகப் பிரிவை, புரட்சிகர கோசத்தின் கீழ் அவர்களின் கருத்தை கொண்டுவந்திருக்க முடியும்.”

“மாறாக தமிழினவாதிகளை மையப்படுத்தி, அவர்களை புரட்சிகரமான பகுதிக்கு வென்றெடுத்தல் குறிப்பாக மையப்பட்டது.”

22.7.2009 (தமிழரங்கத்தின் பதிவொன்றில் தோழர் இரயாகரன்)

.க.இ.க வின் மீது தோழர் இரயாகரன் வைத்துள்ள மேற்கூறிய விமரிசனங்களும், தற்போது ரதிக்கு வினவு தளம் இடம் கொடுத்திருப்பது தொடர்பான விமரிசனங்களும் தொடர்பற்றவை அல்ல.

மேற்கூறிய கட்டுரைகள் தமிழரங்கத்தில் வெளிவந்த போது ‘நெடுமாறன், வைகோ ஆகியோரின் பட்டியலில் வினவையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்’ என்ற Tsri இன் பின்னூட்டமும் தமிழரங்கத்தில் வெளிவந்தது. இரயாவின் அணுகுமுறை ‘ஒரு வறண்ட பார்வை’ என லவ்வர் பாய் என்ற தோழர் தமிழரங்கத்தில் விமரிசித்திருந்தார். தோழர் சூப்பர்லிங்சும் வினவில் இது குறித்து விளக்கியிருந்தார்.

இரயாவின் நிலைப்பாட்டை விமரிசித்தும் ம.க.இ.க வின் நிலைப்பாட்டை விளக்கியும் ‘மூடக்கிழவன்’ என்ற தோழர் ஒரு நீண்ட கட்டுரையை எமக்கும் இரயாவுக்கும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். வினவில் பிரசுரிப்பதற்காக அவர் அனுப்பியிருந்த அக்கட்டுரையை நாம் பிரசுரிக்கவில்லை. காரணம், ம.க.இ.க வின் மீதான விமரிசனத்தை இரயாகரன் பொதுத்தளத்தில் எழுதியிருந்த போதிலும் இந்தக் கருத்துவேறுபாட்டை பொதுத்தளத்தில் விவாதிப்பது பொருத்தமானதாகவோ பொறுப்பானதாகவோ இராது என்று நாங்கள் கருதியதுதான்.

தற்போது ரதியின் கட்டுரை தொடர்பான பிரச்சினையிலும் தமது தளத்தில் ரதியின் கட்டுரையை கடுமையாக விமரிசித்து எழுதப் போவதாகத்தான் இரயா எமக்கு தெரிவித்தார்.. ஆனால் அவரது விமரிசனம் வினவு தளத்தின் மீதானதாகவும் இருந்தது. எனவே தவிர்க்கவியலாமல் நாங்கள் எமது தரப்பை விளக்க நேர்ந்தது. அவரது கடிதமும் எமது பதிலும் (முந்தைய) பதிவில் காண்க.

இரயா அடுத்தடுத்து மூன்று பதிவுகளை வெளியிட்டு அது தொடர்பாக வினவில் விவாதமும் எழத் துவங்கியவுடன் ரதி, ‘தான் எழுதுவதை நிறுத்திக் கொள்வதாக’ அறிவித்தார். இந்த அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு, ‘தோழமை உறவை பேணும் பொருட்டு’ எமது நிலையை விளக்காமல் இருந்திருக்க முடியுமா? அவ்வாறு சில தோழர்கள் கருதுகிறார்கள் போலும்.

ஆனால் அது யோக்கியமான, அறிவு நாணயமுள்ள செயலாக இருக்காது என்பதனால்தான் நாங்கள் மீண்டும் பேச நேர்ந்தது.

இது தொடர்பாக பின்னூட்டமிட்ட தோழர்களில் சிலர் ‘உருவாகியுள்ள இந்த நிலைமைக்கு வினவு தளமும் காரணம்’ என்று விமரிசித்துள்ளனர். சிலர் ஆளுமைகளுக்கிடையிலான மோதல் என்ற தோரணையில் எம்மை சிறுமைப்படுத்துகின்றனர். நடந்தவற்றை விளக்கி விட்டோம். இனி சம்பந்தப்பட்டவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

ரதி கட்டுரை தொடர்பாக இரயா விமரிசனம் வைத்தவுடன் ‘உங்களுக்கு ம.க.இ.க வின் மீதே விமரிசனம் இருப்பதால் அமைப்புடன் பேசிக் கொள்ளுங்கள்’ என்று கூறி விவாதத்தை மடையடைக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் ரதியின் கட்டுரையை மறுத்தோ, விமரிசித்தோ அவர் எழுதுவதில் எங்களுக்கு ஆட்சேபம் எதுவும் இருக்கவில்லை. அந்த விவாதத்தில் பங்கேற்பதன் ஊடாகவே எமது கண்ணோட்டத்தை ரயாவுக்கும் பிறருக்கும் தெளிவுபடுத்தலாம் என்றே கருதியிருந்தோம். இந்த அணுகுமுறை தவறா என்பதையும் வினவை விமரிசனம் செய்பவர்கள் குறிப்பாகப் பேச வேண்டும்.

ஆனால் ‘வினவு தளம் பாசிசத்துக்கு மேடை அமைத்துக் கொடுப்பதாக’ பொதுத்தளத்தில் தோழர் இரயாகரன் விமரிசிக்கும் போது அதற்கு பதிலளிக்காமல் இருக்க வேண்டும் என்று தோழர்கள் கருதுகின்றார்களா? ‘நட்பு முரண்பாடு பகை முரண்பாடாகிறது; தோழமை உறவு கெட்டுப் போகின்றது’ என்றெல்லாம் பல தோழர்கள் மனம் வருந்துகின்றனர். ‘தோழர் ரயாவைத் தாக்குவதற்கு வினவு மேடை அமைத்துக் கொடுப்பதாக’ கூட சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இத்தோழர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விவாதத்தை பொதுத்தளத்திற்கு கொண்டு வந்தவர் தோழர் இரயாகரன். இது அவர் அறியாமல் விட்ட பிழையோ, உணர்ச்சி வயப்பட்டு எடுத்த முடிவோ அல்ல. இந்த விவாதத்தை பொதுத்தளத்தில் நடத்த வேண்டும் என்பது அவரது உணர்வுப்பூர்வமான முடிவு. இதனை ஒரு விமரிசனமாக நாங்கள் கூறவில்லை. நடந்த உண்மை இதுதான் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவே கூறுகிறோம்.

ஏற்கெனவே தமிழரங்கத்தில் ம.க.இ.க பற்றி அவர் எழுதியுள்ள விமரிசனங்களும் இந்தக் கண்ணோட்டத்தில் அமைந்தவை என்றே வினவு புரிந்து கொள்கிறது. இதை வேறுவிதமாக பார்க்க வேண்டும் எனத் தோழர்கள் யாராவது எங்களுக்கு விளங்கச் செய்ய விரும்பினால் விளங்கிக் கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

தமிழரங்கத்தில் ம.க.இ.க வின் மீதான விமரிசனங்களை தோழர் இரயா ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறார் என்பதை இதற்கு முன்னர் வாசகர்கள் அறிந்திராவிட்டாலும், இந்த விவாதம் தொடங்கிய பிறகாவது அங்கே சென்று படித்திருக்க வேண்டும். அவ்விமரிசனங்கள் சரிதானா என்பதை சொந்த முறையில் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் இருதரப்பிலும் வாதிடும் பல தோழர்களது விவாதத்தில் அப்படி படித்ததற்கான சுவடே தெரியவில்லை என்பதுதான் துயரம். இதை சென்ற பதிவின் விவாதத்தில் தோழர் மா.சேவும் குறிப்பிட்டிருந்தார்.

தோழர் இரயா அமைப்பின் மீது வைத்துள்ள விமரிசனங்கள் குறித்து பதிலளிப்பதற்கு வினவு, அமைப்பின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி அல்ல. எனவே அவை குறித்து நாங்கள் இரயாவுடன் விவாதிப்பதற்கில்லை.

ஆனால் ”தமிழினவாதிகளுடன் இணங்கிச் செல்வது, வைகோவுடன் இணைந்து செல்வது, எழுச்சிக்கு பின்னால் வால் பிடிப்பது, பாசிசத்துக்கு தளம் அமைத்துக் கொடுப்பது, பாசிஸ்டு ரதியும் வினவும் இணையும் புள்ளி .. இன்ன பிற இன்ன பிற. ” என்றெல்லாம் விமரிசிக்கப்பட்ட பிறகும், அவரது பார்வையின் தன்மையை அதன் அரசியலை சுட்டிக்காட்டி விமரிசிக்கவில்லை என்றால் அது அரசியல் நேர்மையின்மை ஆகும் என்று கருதுகிறோம்.

இரயா ஒரு வறட்டுவாதி என்று நாங்கள் தீர்ப்பளிக்கவில்லை. அவரை மதிப்பீடு செய்வது எங்களது வேலையும் அல்ல. இப்பிரச்சினையில் அவரிடம் வெளிப்படும் கண்ணோட்டம் வறட்டுவாதம் என்றே விமரிசிக்கிறோம்.

அண்டை நாட்டு கம்யூனிஸ்டுகளை இவ்வாறு விமரிசிப்பது சர்வதேசியத்தின் அரசியல் வழிமுறைகளையும்,கடந்த 30 வருடமாக தாங்கள் நடத்தி வரும் போராட்டத்தையும் நிராகரிப்பதாகும் என்றும் தோழர் இரயா குறிப்பிடுகிறார். இலங்கைப் புரட்சிக்கு வழிகாட்டும் பொறுப்பில் எங்களை நாங்களே நியமித்துக் கொள்ளும் தலைக்கனம் எமக்கு இல்லை.

அதே நேரத்தில் பாசிசத்திற்கு ஆதரவாகவும் சர்வதேசியத்திற்கு எதிராகவும் செல்கிறீர்கள் என்று கூறப்படும் விமரிசனத்தை மவுனமாக ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மையும் எமக்கு இல்லை.

இது கவுரவப் பிரச்சினையோ தோழர்களுக்கிடையிலான உறவு / முறிவு குறித்த சென்டிமெண்ட் விவகாரமோ அல்ல.

எத்தகைய தியாகம், பங்களிப்பு செய்த தோழர்களாக இருந்தாலும் அவர்கள் முன்வைக்கும் கருத்தை அது தோற்றுவிக்கின்ற சமூக விளைவில் இருந்துதான் பரிசீலிக்க முடியுமேயன்றி அவர்கள் மீதான நமது மரியாதை, அபிமானத்தில் இருந்து அல்ல. இதனைப் புரிந்து கொள்ள அதிகம் விளக்கம் தேவையில்லை எனக் கருதுகிறோம்.

தற்போது இந்தப் பதிவையும் கூட ‘இரயாவுடனான விவாதம்’ என்ற கோணத்தில் நாங்கள் இடவில்லை. எனவே இரயாவின் தொடருக்கு வரிக்கு வரி எமது பதிலை எதிர்பார்க்க வேண்டாம். அவரது வரிகளை ஆளுகின்ற கண்ணோட்டத்தின் மீது நாங்கள் முன்வைத்த விமரிசனத்துக்கான விளக்கமே இப்பதிவு.

ரலாற்று பொருள்முதல் ஆய்வுக்கான மார்க்சிய ஆய்வு முறையியலை கற்றுத்தரும் நூல்களில் முக்கியமானது காரல் மார்க்சின் லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர். புரட்சிப் பாரம்பரியம் கொண்ட முதலாளி வர்க்கத்தையும், பாட்டாளி வர்க்கத்தையும் பெற்றிருந்த பிரான்சின் அரசை, போனபார்ட் தலைமையிலான ஒரு போக்கிரிகளின் கும்பல் எப்படி கைப்பற்ற முடிந்தது என்பதை விளக்குகிறார் மார்க்சு.

அதே காலத்தைச் சேர்ந்த விக்டர் ஹியூகோ எழுதிய ‘சின்ன நெப்போலியன்’ என்ற நூலில் போனபார்ட்டின் வன்முறையை விமர்சித்து அவர் ‘வசைமாரி பொழிந்த போதிலும்’ பிரெஞ்சு அரசை போனபார்ட் கைப்பற்றிய சம்பவத்தை ‘திடீரென்று வானத்திலிருந்து இறங்கிய இடியேறு போல’ சித்தரித்ததனால்,  போனபார்ட் வில்லனாவதற்கு பதில் திறமை வாய்ந்த நாயகனாக்கப்படுகிறான்.  இதே விசயம் பற்றி புரூதோன் எழுதிய ‘திடீர் புரட்சி’ எனும் நூலில் அவர் போனபார்ட்டின் வெற்றியை ‘வரலாற்றுரீதியான வளர்ச்சியின் விளைவு’ என்று சித்தரிக்கிறார். இதுவும் இன்னொரு வகையில் போனபார்ட்டுக்கு ஆதரவான எழுத்தாக மாறி விடுகின்றது.

”இதற்கு மாறான வகையில் நான் பிரான்சில் வர்க்கப்போராட்டம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்களும் உறவுகளும் ஒரு கோமாளித்தனமான சாதாரண நபர் ஒரு மாவீரனின் பாத்திரத்தை வகிப்பதை எப்படி சாத்தியமாக்கின என்பதை விளக்கி இருக்கிறேன்’ என்கிறார் மார்க்சு. இதுதான் அந்த ஆய்வின் முக்கியத்துவம். பிரான்சின் முதலாளி வர்க்கம், தனது நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்காக போனபார்ட்டை ஆதரித்ததையும் மற்ற பிற வர்க்கங்கள் தமது நலன் என்று கருதியவற்றுக்காக போனபார்ட்டுக்கு ஆதரவு கொடுத்ததையும் மார்க்சு விளக்குகிறார்.

புலிப்பாசிசமாக இருக்கட்டும்; வேறு வகைப் பாசிசங்களாக இருக்கட்டும், அவை எந்த சூழ்நிலையில் பிறப்பெடுத்தன என்பதையும், எந்த வர்க்கங்களின் ஆதரவை என்ன காரணங்களினால் பெற முடிந்தது என்பதையும் விளங்கிக் கொள்ளாத வரை அவற்றை வீழ்த்துவது சாத்தியமற்றது.

இலங்கையைப் பொறுத்தவரை பிரான்சோடு ஒப்பிடத்தக்க புரட்சிகர மரபு அதற்கு கிடையாது. இந்தியாவோடு ஒப்பிடத்தக்க அளவிற்கு கூட காலனியாதிக்க எதிர்ப்பு போராட்ட மரபு இலங்கைக்கு இல்லை என்பது ஒருபுறமிருக்க, ஈழத்து தமிழ் தேசியமும் தன் பிறப்பிலேயே தரகுத் தன்மையையும் நிலப்பிரபுத்துவப் பின்புலத்தையும் தான் கொண்டிருந்தது. தமிழகத்தின் திராவிட இயக்கத்துடன் ஒப்பிடும் வகையிலான பார்ப்பன எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு போன்ற முற்போக்கான கூறுகள் எதுவும் அங்கே ஒரு சமூக இயக்கம் என்ற அளவில் இருந்ததாகத் தெரியவில்லை.

இத்தகையதொரு பின்தங்கிய, பிற்போக்கு ஆளுமை செலுத்திய சமூகத்தின் தலையில் காலனியாதிக்கவாதிகளால் செருகப்பட்ட கோமாளிக் குல்லாயாகவே ஜனநாயகம் இருந்தது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் காலனி நாடுகளின் ‘பின்னாள் ஜனநாயகத்தின் யோக்கியதை’ இவ்வாறுதான் இருந்தது. இத்தகைய சமூக அடித்தளத்தின் மீதுதான் பல்வேறு நாடுகளிலும் பாசிசமோ, ராணுவ சர்வாதிகாரமோ எளிதில் தலைதூக்க முடிந்தது.

தேசிய இனம் அவற்றின் உரிமைகள் என்று நாம் பேசினாலும், இலங்கையிலாகட்டும் இந்தியாவிலாகட்டும் தேசிய இன உருவாக்கம் என்பது இன்னமும் நிறைவுபெறாத ஒரு நிகழ்ச்சிப் போக்காகத்தான் இருக்கிறது. சாதி, வட்டார உணர்வுகளை தகர்த்தெறிகின்ற ஜனநாயகப் புரட்சி ஒன்றின் ஊடாக நேர்மறையில் தேசியம் உருவாகாத நிலையில் ‘பேரினவாத எதிர்ப்பு தேசிய இன உணர்வு’ அல்லது ‘அண்டை இனத்தின் மீதான பகை உணர்ச்சியின் அடிப்படையிலான இன உணர்வு’ என்ற வகையில்தான் இன உணர்வு என்பதே கட்டமைக்கப்படுவதை நாம் காண்கிறோம்.

இத்தகைய இடங்களில் ஒரு பாசிச இயக்கம் தோன்றாவிட்டாலும் கூட இந்த இன உணர்வின் உள்ளடக்கம் தன் இயல்பிலேயே ஜனநாயக விரோத கூறுகளைக் கொண்டிருக்கிறது.

இத்தகைய சமூக அடித்தளத்தின் மீது சிங்கள – பவுத்த பேரினவாதம் தனது ஒடுக்குமுறையை ஏவும்போது, அதனை எதிர்கொள்ள இயலாமல் ஓட்டாண்டியாகிப் போன தமிழ் தேசிய கனவான்களின் இடத்தை கல்வியறிவும் அரசியல் அறிவும் ஜனநாயகப் பண்பும் கைவரப் பெறாத வல்வெட்டித்துறை பொடியன்கள் கைப்பற்றிக் கொள்ளும்போது, தவறிக் கூட இந்த இயக்கங்களின் மீது ஜனநாயகத்தின் வாசனை பட்டுவிடக் கூடாது என்று இந்திய மேலாதிக்கம் அவர்களை பயிற்றுவித்து வளர்க்கும்போது, இந்திய மேலாதிக்கத்தின் பாதுகாப்புக் குடையை எதிர்பார்ப்பதாக ஈழத்தமிழ் சமூகத்திலேயே பொதுக்கருத்து நிலவும்போது- இத்தகையதொரு சமூகப் பின்புலம் பாசிச இயக்கங்களைப் பெற்றெடுப்பது வியப்புக்குரியதல்ல.

இது பாசிசம் தோன்றியதன் தவிர்க்கவியலாமைக்குத் தரப்படும் விளக்கமல்ல. மாறாக புலிகளின் பாசிசத்தை அம்பலப்படுத்தும் முறையில் அதனை அதன் சமூக அடித்தளத்திலிருந்து மென்மேலும் விலக்கிச் சித்தரிப்பதன் மூலம் ஹியூகோ செய்த தவறையே தமிழரங்கம் செய்வதாக எமக்குப் படுகிறது.

‘மாபெரும் ஜனநாயப் பாரம்பரியம்’ கொண்ட ஈழத்தமிழ் சமூகத்தை பாசிசப் படுகுழியில் இழுத்து வீழ்த்திய ‘வில்லன்களாக’  புலிகளை சித்தரிக்கும்போது அவர்கள் சாதனையாளர்களாக்கப்பட்டு விடுகிறார்கள்.

னது கட்டுரையில் ரதியின் நினைவுகளில் இடம்பெறாத புலிகளின் பாசிச நடவடிக்கைகளை பட்டியலிட்டுக் காட்டுகிறார் இரயாகரன். இந்த உண்மைகள் தெரியாத காரணத்தினால்தான் ஈழத் தமிழ் மக்கள் பலர் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று இதைப் புரிந்து கொள்ளலாமா?

‘அவ்வாறு இல்லை’ என்பதை தோழர் இரயா தன்னுடைய முந்தைய கட்டுரைகளில் உறுதி செய்கிறார்.

“இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், அரசு மற்றும் புலி ஊடாக, இரண்டு பாசிசத்தையும் நன்று புரிந்து அனுபவித்தவர்கள். இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவனாக நடிப்பவன் பாசிட் தான். அனைவருக்கும் அனைத்தும் இன்று தெரியும். சொந்தங்கள், பந்தங்கள், உறவுகள் இதை அனுபவிக்காத, அதை இன்று அறிந்திராத “அப்பாவி” மனிதம் இன்று எம் சூழலில் கிடையாது.”

19.7.2009 (தமிழரங்கம் பதிவொன்றில் தோழர் இரயா)

புலிகள் இயக்கத்திற்கும் ஈழத்தமிழ் மக்களுக்குமான உறவு எப்படி இருந்தது என்பதை மே 18 அன்று புலித்தலைமை கொல்லப்பட்டதை ஒட்டி இரயா கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“ஆனால் தமிழ் சமூகம் இந்த மரணத்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலை தான் எமது நிலையும் கூட. ஏன்?

“தமிழ் மக்கள் மேலான இனவொடுக்குமுறையும், அதைத் தொடர்ந்து வந்த போராட்டத்தில் புலிகள் என்ற இயக்கம் உருவானது. இந்த இயக்கம் வலதுசாரிய அரசியல் அடிப்படையில், தனிமனித சர்வாதிகார அமைப்பை நிறுவியதுடன், அதை முழு சமூகம் மீதும் திணித்தது…”.

“இந்த அடிப்படையில் தான், தமிழ் சமூகத்தை புலியின் பின் நிற்கவைத்தது. இயக்க அழிப்பின் பின், இதற்கு மாற்றாக மக்களை அணிதிரட்டக் கூடிய எந்த மாற்று சக்தியும், மக்களை அரசியலை முன்வைத்து மக்களுடன் நிற்கவில்லை. மாறாக அவை இலங்கை இந்தியக் கூலிக் குழுக்களாக மாறி, தமிழ் மக்களை ஒடுக்கத் தொடங்கியது.”

“தமிழ் மக்களோ தம் மீதான புலிகளின் ஒடுக்குமுறையை விடவும், அரசுடன் சேர்ந்து நின்று ஒடுக்கியவர்களை வெறுத்தனர். எதிரியுடன் நின்றவர்களை, ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இப்படி எதிரி பற்றி மக்கள் மதிப்பீடும், புலிகள் மேலான நம்பிக்கையீனங்கள் புலிகளை தனிமைப்படுத்திவிடவில்லை.”

“இதற்கு வெளியில் மாற்று என்று கூறிக்கொண்டவர்கள், எந்த மக்கள் அரசியலையும் முன் வைக்கவில்லை. மாறாக அரசியலற்ற இலக்கியம், மாற்று அரசியல் இன்மை என்று, தனிநபர்களின் சீரழிவுடன் கூடிய கொசிப்பு கோஸ்டியாக மாரடித்தது. உதிரியான தனிநபர்களின் எல்லைக்குள், மக்கள் அரசியல் எஞ்சிக் கிடந்தது.”

“இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் புலிக்கூடாகவே தேசியத்தைப் பார்த்தனர். பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக, போராடும் புலியைப் பார்த்தனர்…”

“ஒருபுறம் போராடும் புலி, மறுபக்கம் ஒடுக்கும் புலி. இதற்கு ஊடாகவே மக்கள் மத்தியில் புலி பற்றிய நம்பிக்கைகள், பிரமைகள், விரக்திகள், வெறுப்புகள், கோபங்கள் என்று எல்லா மனித உணர்வுகளும் உணர்ச்சிகளும் காணப்பட்டது.”

“புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி தாங்களே என்று சொன்னார்கள். இதைவிட வேறு எதுவுமில்லாததால், தமிழ் மக்கள் இவர்கள் ஊடாகவே கடந்த 25 வருடமாக நன்மை தீமை என்று, அனைத்தையும் பார்த்தார்கள்.”

“நாம் இந்த எதார்த்தத்தை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் நாங்கள் இந்த எதார்த்தத்தின் பின்னால், வால்பிடித்து அங்கீகரித்து செல்ல முடியாதுள்ளது. ஏன்?

18.5.2009 (தமிழரங்கம் பதிவொன்றில் தோழர் இரயா)

வால் பிடித்துச் செல்வது இருக்கட்டும். எது எதார்த்தம் ? 19.07.2009-ஆம் தேதியன்று அவர் எழுதியுள்ள பதிவின்படியும் தற்போது அவர் எழுதி வரும் கட்டுரைகளின் படியும் புலி அபிமானிகள் அனைவரும், புலி பாசிஸ்டுகள்தான் என்பதே அவர் வரையறை.

ஆனால் முல்லைத் தீவு படுகொலை நடைபெற்ற மே 18ஆம் தேதி அன்று “நன்மை, தீமை அனைத்தையும் மக்கள் புலியினூடாகத்தான் பார்த்தார்கள், இதுதான் எதார்த்தம்” என்று எழுதுகிறார் இரயா. மே-18ஆம் தேதி அவர் எழுதியது உண்மை என்றால் இன்று அவர் எழுதி வருவது வறட்டுவாதம். அல்லது இன்று பேசுவதுதான் உண்மை என்றால் மே – 18 அன்று வெளிப்படுத்திய கருத்து கேள்விக்குரியதாகி விடுகிறது.

நன்மை, தீமை அனைத்தையும் புலியின் ஊடாகவே மக்கள் பார்த்தார்கள் என்பதற்கு இரயா கூறும் காரணங்களுடன் வேறு பல காரணங்களும் உண்டு. புலிகள் இந்திய மேலாதிக்கத்துடன் இணங்கிப் போனார்கள், ஒரு எல்லை கடந்த போது அமைதிப்படையை எதிர்க்கவும் செய்தார்கள். இரயா பட்டியலிட்டுக்காட்டும் வகையில் நியாயப்படுத்த முடியாத படுகொலைகளைச் செய்தார்கள். நியாயம் என்று மக்கள் அங்கீகரிக்கும் வகையில் துரோகிகளையும் தண்டித்தார்கள். தங்களது ஒற்றை அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக சிங்கள அரசுடன் சமரசம் செய்து கொண்டார்கள். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புகளை சமரசமின்றி எதிர்க்கவும் செய்தார்கள்.

இது ஒரு முரண்நிலை. படுகொலைகளைப் பட்டியலிட்டுக்காட்டி பாசிசம் என்று நிரூபணம் செய்வதனால் மட்டுமே மக்களை ஏற்கச் செய்ய முடியாத முரண்நிலை.

ஒரு ஈழத்து தோழர் சொன்னார் ”நாங்கள் புலிகளோட பாசிசத்த பத்தி கதைக்கிறோம். சமீபத்தில் வன்னியிலிருந்து அகதியாக வந்த ஒருத்தர் என்ன இருந்தாலும் புலிகள் இருந்த போது இரவு இரண்டு மணிக்கு கூட ஒரு பெண் நடமாட முடியும் என்று சிலாகித்துக் கொள்கிறார். இந்த மக்களுக்கு பாசிசத்தை எப்படி புரிய வைப்பது” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

“ரயில்கள் நேரத்துக்கு வந்தன, அரசு ஊழியர்கள் பயந்து கொண்டு பத்து மணிக்கு வேலைக்கு வந்தார்கள்” என்பன போன்ற காரணங்களைச் சொல்லியே இந்திராவின் அவசர நிலை பாசிசத்தை இங்கே ஆதரித்தவர்கள் எத்தனை கோடி பேர் தெரியுமா?

ஜனநாயகத்தின் வாசனையைக் கூட அனுபவித்திராத பெரும்பான்மையான மக்கள் பாசிசத்தை பற்றி கவலைப்படுவதில்லை. கொலைப்பட்டியல்களால் அவர்களது கருத்தை அசைக்கவும் முடிவதில்லை.

பாபர்மசூதி இடிப்பையொட்டி ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் நடத்திய படுகொலைகளுக்கு பின்னர்தான் டெல்லி அதிகாரத்தை பாரதிய ஜனதாவுக்கு வழங்கினார்கள் பெரும்பான்மை இந்துக்கள். குஜராத் இனப்படுகொலையின் இரத்தம் காயும் முன்னரே கூடுதல் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார் மோடி. சிங்களப் பாசிசத்தின் படுகொலை குறித்தும் சிங்கள மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். இங்கெல்லாம் பாசிசத்துக்கு வாக்களித்த மக்கள் தெரிந்துதான் வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் தெரியாமல் செய்த அப்பாவிகள் அல்ல. இரயாவின் வரையறைப்படி இந்த மக்கள் அனைவரும் பாசிஸ்டுகளே.

வரையறுப்பதும், பெயர் சூட்டுவதும் பிரச்சினையை தீர்த்து விடுவதில்லை. அவர்கள் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்ற கேள்விக்கு விடை காணாதவரை அவர்களை பாசிசத்தின் பிடியிலிருந்து விடுவிக்கவும் முடியாது.

மனித குலம் காணாத இனப்படுகொலையை நடத்திய ஹிட்லரின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த ஜெர்மானிய மக்கள் நேரடியாக அக்குற்றங்களில் பங்கேற்கவில்லை என்றாலும் அக்குற்றங்களை அனுமதித்ததற்கான மூலம் தார்மீக பொறுப்பு ஜெர்மானிய மக்களுக்கு உண்டு என இடித்துரைக்கிறது சிக்மன்ட் பிரீஸ்ட் எழுதிய “நிரபராதிகளின் காலம்” எனும் நாடகம்.

நிரபராதிகள் என்று தம்மை கருதிக் கொண்டிருக்கும் தொழிலாளி, விவசாயி, பேராசிரியர் போன்ற பல்வேறு வர்க்கத் தட்டினரும் தமது தனிப்பட்ட நலன் அல்லது வர்க்க நலனுக்காக சர்வாதிகார ஆட்சிக்கும் அநீதிக்கும் எங்ஙனம் இணங்கிப் போனார்கள் என்பதை இந்த நாடகத்தின் மூலம் விளக்குகிறார் பிரீஸ்ட். ஒருவேளை ‘பாசிச சர்வாதிகாரத்தை தெரிந்தே ஆதரித்தனால் அவர்கள் அனைவரும் பாசிஸ்டுகளே’ என்பது அவரது முடிவாக இருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நாடகத்தை பிரீஸ்ட் எழுதியிருக்கவே முடியாது.

போனபார்ட் ஒரு போக்கிரி என்று தெரிந்திருந்தும் பிரெஞ்சு முதலாளி வர்க்கம் அதிகாரத்தை ஏன் அவன் கையில் ஒப்படைத்தது? பாரம்பரியம் மிக்க பிரெஞ்சு மக்கள் ஒரு போக்கிரியால் ஆளப்படுவதற்கு தெரிந்தே தம்மை ஏன் ஒப்படைத்துக் கொண்டார்கள் என்ற கேள்விக்குத்தான் மார்க்ஸ் விடை தேடுகிறார்.

“நான் கவனமில்லாத நேரத்தில் அந்த சாகசக்காரன் என்னை கற்பழித்து விட்டான் என்று சொல்கிற பெண்ணையோ, தேசத்தையோ யாரும் மன்னிக்க மாட்டார்கள். இத்தகைய பேச்சுக்களைக் கொண்டு இந்த புதிரைத் தீர்க்க முடியாது” என்கிறார் மார்க்ஸ். ஒருவேளை “போனபார்ட்டை ஆதரித்தவர்கள் அனைவரும் போனபார்ட்டிஸ்டுகளே” என்று அவர் முடிவு செய்திருந்தால் இந்த புதிருக்கு விடை கிடைத்திருக்குமோ? தெரியவில்லை. ஆனால் வரலாற்று பொருள்முதவாத ஆய்வு முறையை கற்பிக்கும் மார்க்சின் இந்த நூல் நிச்சயம் நமக்கு கிடைத்திருக்காது.

புலி அனுதாபி என்று தன்னை அறிவித்துக் கொண்ட ரதியை பேசவிட்டிருந்தால் அத்தகைய அனுதாபிகளின் அனுதாபங்கள் எந்த அடித்தளத்திலிருந்து பிறந்து வருகின்றன என்பதை ஒருவேளை நாம் புரிந்து கொண்டிருக்க இயலும். ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு ஜனநாயகத்தின் இன்றியமையாமையை இத்தகைய அனுதாபிகளுக்கு எப்படி புரியவைப்பது என்பதையும் ஒரு விவாதத்தினூடாக நாம் கற்றுக் கொண்டிருக்கவும் கூடும். புலிகளின் மீது இத்தகையோர் அனுதாபம் கொள்ள காரணமாக இருப்பது எது, அவர்களது வீரமா, இராணுவத் திறனா, அர்ப்பணிப்பா, அவர்களைத் தவிர யாருமில்லை என்ற ‘எதார்த்தமா’ அல்லது அவர்களது ஒழுக்கம் கட்டுப்பாடு குறித்த பிரமிப்பா, இவற்றுக்கு அப்பாற்பட்ட வேறு காரணங்களா என்பதை அறிந்து கொண்டிருக்க முடியும்.

இதைத்தான் “நீங்கள் புலிகளுடன் போய் அவர்களைத் திருத்த முனைகிறீர்கள், நான் அதை எதிர்த்து முறியடிக்க முயல்கிறேன்” என்று கூறி விமரிசிக்கிறார் இரயாகரன்.

எந்த ஒரு பிரச்சினையிலும் நிலைப்பாடு மாறாமல் இருக்கும் போதே அந்த நிலைப்பாட்டை கொண்டு செல்கிற அணுகுமுறை மாறக்கூடும்; காலம், இடம், சூழல், போன்ற பல காரணிகள் இந்த அணுகுமுறை மாற்றத்தை அவசியமாக்குகின்றன. பார்ப்பன பாசிசத்திற்கெதிராக நாம் தமிழகத்தில் பேசுகின்ற மொழியை, தொனியை குஜராத்தில் பயன்படுத்த முடியாது. பெரும்பான்மையான மக்கள் இந்து பாசிசத்திற்கு ஆட்பட்டிருக்கும் அந்த சூழலை கணக்கில் கொண்டு அதற்கு தகவமையத்தான் பேசவேண்டியிருக்கும்.

தீண்டாமையை நாம் கடுமையாக சாடுகிறோம், எனினும் ஒரு சாதிக்கலவரச் சூழலில் ஆதிக்கசாதி பெரும்பான்மையினர் தலித் மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் கிராமத்தில் ஆதிக்கச் சாதியினரின் சாதிவெறியை கண்டிக்கும் போது கொஞ்சம் கவனமாகத்தான் பேச வேண்டியிருக்கும். இரயாவின் மொழியில் கூறுவதானால் இதனை ‘உடன் சென்று திருத்துவது’ என்று கூட மொழிபெயர்க்கலாம்.

தலித் விடுதலை பற்றி சவடாலாக எழுதும் தலித் அறிவுஜீவிகள் சிறு பத்திரிகைகளில் பொறி பறக்கத்தான் ஆதிக்க சாதிகளை எதிர்த்து எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு போதும் களத்திற்கு செல்வதில்லை. அணுகுமுறையில் தேவைப்படும் இந்த நெளிவுசுளிவுகளை மக்களைத் திரட்டும் நடைமுறையிலுள்ள தோழர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

கொள்கையை கைவிட்டு விட்டதாக இதைத்தான் சொல்கிறார் தோழர் இரயாகரன்.

முத்துக்குமார் தீக்குளிப்பு சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். தீக்குளிப்பு என்பது தமிழக அரசியலில் நெடுங்காலமாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு. ஆனால் புலி ஆதரவாளராக இருப்பதால்தான் புலியிசத்தின் மக்களைச் சாராத சுய அழிவுப் பாதையை முத்துக் குமார் தேர்ந்தெடுத்தார் என இதனை வியாக்கியானம் செய்கிறார் இரயாகரன் எல்லாவற்றையும் புலிக்கூடாகத்தான் அவரால் பார்க்க முடிகிறது.

தற்கொலை ஒரு போராட்ட முறை அல்ல எனினும் கேட்பாரற்று இன அழிப்பு போரை சிங்கள அரசு நட்தி வந்த சூழலில், அதற்கு இந்திய அரசு வெளிப்படையாக துணை நின்ற போதிலும் தமிழகத்தில் போராட்டங்கள் அடங்கி மௌனம் கவிந்திருந்த சூழலில் நடக்கிறது முத்துக்குமாரின் தீக்குளிப்பு. இந்த மௌனத்தை கலைக்கவும், மக்கள் எழுச்சியை உருவாக்கவும் தனது மரணத்தை பயன்படுத்துமாறு கூறுகிறார் முத்துக்குமார். எனவேதான் இந்திய மேலாதிக்க எதிர்ப்பு என்பதை மையப்படுத்தி இதில் நாம் பங்குபெற்றோம். இதனை “தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஓடுவது, வைகோவுடன் சேர்ந்து நடப்பது போல பாசாங்கு செய்வது” என விமரிசிக்கிறார் இராயகரன்.

வேடிக்கைதான்!

“நீங்கள்தான் புலி எதிர்ப்பாளர்களாயிற்றே உங்களுக்கு முத்துக்குமார் ஊர்வலத்தில் என்ன வேலை தமிழின வேடம் போட்டு ஆள்பிடிக்க வருகிறீர்களா” என்று குமுறினார்கள் தமிழகத்தின் இனவாதிகள். வலப்புறத்தில் நின்று அவர்கள் எழுப்பிய அதே கேள்வியைத்தான் இடப்புறத்தில் நின்று எழுப்புகிறார் இரயா.

ஏன் வந்தாய் என்று கேட்கிறார்கள் இனவாதிகள். என் போனாய் என்று கேட்கிறார் இரயா.

போனதுதான் போனீர்கள், முத்துக்குமார் கடிதத்தை பற்றிய உங்கள் விமரிசனம் என்ன, ஏன் புலிப்பாசிசத்திற்கெதிராக அங்கே குரல் கொடுக்கவில்லை என்று கேள்விகளை அடுக்குகிறார்.

முத்துக்குமாரின் மரணம் தெரிவித்த செய்திகள் மூன்று. இன அழிப்பு போரை நிறுத்துவது, இந்திய மேலாதிக்க தலையீட்டை தடுப்பது, இதன் பொருட்டு மக்கள் எழுச்சியை உருவாக்குவது. இந்த செய்திகள்தான் தன்னெழுச்சியான பல போராட்டங்களை தமிழகமெங்கும் உருவாக்கின. உயிரோடு இருந்த போது முத்துக்குமார் எழுதித் தயாரித்த கடித்த்தில் காணப்பட்ட குழப்பங்களும் அரசியல் பிரமைகளும் அவரது தீக்குளிப்பில் எரிந்து விட்டன. வழங்க வேண்டிய செய்தியை அவரது மரணம் வழங்கியது. இதுதான் அந்த கிளர்ச்சிகரமான சூழலின் அரசியல் எதார்த்தம்.

ணாதிக்க கொடுங்கோன்மையின் விளைவாக தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண் “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று வாழ்ந்தேனே, உன் அடி உதைகளை சகித்துக் கொண்டேனே, சொன்னபடி சீர் செனத்திகளை கொண்டு வந்தேனே, அதற்குப் பிறகுமா இந்த கொடுமை” என்று கடிதம் எழுதி வைத்து சாகக்கூடும். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை ஆராய்வதா அல்லது அந்த மரணத்தின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்வதா, எது முதன்மையானது? ஒரு வேளை அக்கடித்த்தின் பிற்போக்குத்தனங்களை கண்டிக்கத் தவறினால் அதுவும் கொள்கை பிறழ்வுதானோ?

மறுகாலனியக் கொள்கைகளால் தற்கொலைக்குத் தள்ளப்படும் ஒரு விவசாயி தன் துன்பத்தை சனிப்பெயர்ச்சியின் விளைவு என்று கூட புரிந்து கொண்டிருக்கலாம். குஜராத் படுகொலையில் தன் பிள்ளையை இழந்த முஸ்லீம் தாய் ‘பக்கத்து வீட்டு இந்து அடைக்கலம் தந்திருந்தால் இந்த வெறியிலிருந்து தப்பியிருக்கலாம்’ என்றும் கருதிக் கொள்ளலாம். சமூக நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள இயலாத மக்களுக்கு அவற்றை விளங்கச் செய்வதுதான் நம் பணியே அன்றி, அவர்களுடைய புரிதலை சோதனைக்கு உட்படுத்தி ‘சான்றிதழ்’ வழங்குவதல்ல

இன அழிப்பு போரின் இறுதிக் காலங்களில் நடத்திய போராட்டங்களின் போது ‘புலிப் பாசிசத்தையும் அம்பலப்படுத்தி ஒரு மாற்றுப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் ம.க.இ.க, தமிழினவாதிகளுடன் இணங்கிச் சென்று அவர்களை வென்றெடுக்க முயன்றது.” என்பது ரயாவின் விமரிசனம். தமிழினவாதிகளுடன் நாம் இணங்கிச் சென்றோமாம். இப்படி ஒரு கௌரவம் நமக்கு வழங்கப்படுவதை கேள்விப்பட்டால் தமிழகத்தின் இனவாதிகள் அனலில் இட்ட புழுவாய் துடித்து விடுவார்கள். அது ஒரு புறமிருக்கட்டும்.

இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிப்பாசிசத்தையும் விமரிசித்து போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என்பது சரியா?

மிழினவாதிகளை வென்றெடுக்கும் நோக்கத்தை மனதிற் கொண்டிருந்ததனால்தான் நாம் புலிப்பாசிசத்தை அம்பலப்படுத்தவில்லை என்று இதற்கொரு காரணத்தை அவரே கற்பித்துக் கொள்கிறார்.

சிங்களப் பாசிச அரசு நடத்திய இன அழிப்புப் போர், அதனுடன் கைகோர்த்து களத்தில் நின்ற இந்திய மேலாதிக்கம், ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை ஆகியவற்றை மையப்படுத்தியதாகவே நமது போராட்டங்கள் அமைந்திருந்தன. ‘புலிகளை அம்பலப்படுத்தியும் நாம் போராடவில்லை’ என்பது உண்மைதான். தமிழினவாதிகளை வென்றெடுக்கும் நோக்கத்தில்தான் நாம் அவ்வாறு நடந்து கொண்டோம் என்று இதனை விளங்கிக் கொள்வது எம்மைக் கொச்சைப்படுத்துவதாகும்.

அந்த இன அழிப்புப் போரை திட்டமிட்டுக் கொடுத்து உடன் நின்று நடத்திக் கொண்டிருந்தது இந்திய மேலாதிக்க அரசு. ஆக்கிரமிப்பு நாட்டைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் என்ற முறையில் அதனை எதிர்த்துப் போராடுவதுதான் எம்முதற் கடமையாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் புலிகளும், புலி ஆதரவாளர்களும் இந்திய மேலாதிக்கத்தை தாஜா செய்ய முனைந்த போதெல்லாம் (அன்னை சோனியாவின் கருணைக்கும், கலைஞரின் கருணைக்கும் நெடுமாறன் வேண்டுகோள் விடுத்த கிளிநொச்சி தாக்குதலின் காலம் முதல் ஜெயலலிதாவுக்கு ஓட்டு கேட்ட முல்லைத்தீவு இறுதிப்போர் காலம் வரை) அதனை கடுமையாக அம்பலப்படுத்தி இந்திய மேலாதிக்கப் போர்வெறியை ஈழப் போராட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்தவர்கள் நாங்கள்தான்.

“எப்படியாவது போரை மட்டும் நிறுத்தினால் போதும்” என்ற உடனடிக் கோரிக்கையை மனதிற்கொண்டு நெடுமாறன் போன்றோர் ” மனிதாபிமானம், அப்பாவி மக்கள் ” என்ற அரசியலற்ற முழக்கங்களை முன்நிறுத்திய போது சுய நிர்ணய உரிமை முழக்கத்தை முன்னிறுத்தி அவற்றை அம்பலப்படுத்தினோம்.

எனினும் இவையெதுவும் புலிகளை அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளாக தோழர் இரயாகரனுக்கு தோன்றவில்லை. மாறாக சிங்களப் பாசிசத்தை எதிர்த்ததைப் போலவே புலிப்பாசிசத்தையும் அதன் மனித உரிமை மீறல்களையும் ஏன் எதிர்க்கவில்லை என்பதே இரயாவின் கேள்வி. அவ்வாறு செய்ய முடியாது, செய்யக்கூடாது என்பதால்தான் செய்யவில்லை என்பதே இதற்கு நாம் அளிக்கும் பதில்.

டந்து கொண்டிருந்த போரை எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்பதில்தான் இந்த கருத்து முரண்பாட்டின் சாரம் அடங்கியிருக்கிறது. புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையிலான போரின் துணை விளைவாக தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்களா? அல்லது ஒரு இனப்படுகொலையின் அங்கமாக புலிகளின் மீதான இந்த இறுதிப் போர் நடத்தப்பட்டதா? இரண்டில் எது இந்த இறுதிப்போரின் சாரம்?

இந்த ‘துணை விளைவு’ கொள்கையைத்தான் சிங்கள அரசு, இந்திய அரசு, ஜெயலலிதா முதல் இந்துராம் முதலான இந்திய பத்திரிகையாளர்கள் வரை பிரச்சாரம் செய்தனர். இதனை ஏற்கும் பட்சத்தில் சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான போரில் சிக்கிக் கொண்ட மூன்றாம் தரப்பாக ஈழத்தமிழ் மக்கள் மாறிவிடுகின்றனர். புலிகள் மக்களை அணிதிரட்டவில்லை, அவர்கள் கருத்துக்கு செவிமடுக்கவில்லை, அவர்களைக் கட்டாயப்படுத்தி கவசமாகப் பயன்படுத்தினார்கள் என்ற விமரிசனங்களை எல்லாம் அட்டியின்றி அப்படியே ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் இந்தப் போரின் சாரம் என்பது சிங்கப் பாசிச அரசின் இன அழிப்புப் போர்தான் என்ற உண்மை மாறிவிடுகிறதா? ஆம் என்றால் இன்று புலிகளின் தோல்விக்குப்பின் 3 இலட்சம் மக்கள வதை முகாமில் துன்புறுத்தப்படுவது ஏன்?

அந்த நாட்களில் புலிப்பாசிசத்தையும் விமரிசித்துப் போராடியிருந்தால் தமிழகத்தின் தமிழினவாதிகளில் முற்போக்கான பிரிவினரை மட்டுமின்றி, புலிப்பாசிசத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ள சிங்கள் பெரும்பான்மையினரையும் வென்றெடுத்திருக்க முடியும் என்று கூறுகிறார் இரயாகரன்.

சிங்களப் பெரும்பான்மையின் மனோபாவம் பற்றிய இரயாவின் கருத்தும் தவறாகவே இருக்கிறது. குஜராத் இனப்படுகொலைகளுக்கும், இந்துபாசிசத்துக்கும் எதிராக இந்தியாவின் பெரும்பான்மை சமூகத்திலிருந்து எழுந்திருக்கும் எதிர்ப்புகளை ஒப்பிடும் அளவிற்காவது அங்கே ஏதாவது நடந்திருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறோம். அல்லது இன்று புலிகளின் தோல்விக்குப் பின்னர் தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்களப்பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியிலிருந்து போராட்டம் எழுந்துள்ளனவா?

இரயா முன்வைத்த வழியில் நாங்கள் எமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் சிங்கள மக்களை வென்றெடுக்கிறோமா இல்லையோ, உத்திரவாதமாக தமிழக மக்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்போம்.

புலிப்பாசிசத்தை குறித்து நாம் கண்டும் காணாது போக்கை கடைபிடிக்கிறோம் என்ற அவரது விமரிசனம் எந்திர வகைப்பட்ட வறட்டுவாதமான பார்வையிலிருந்து வருவதாகவே கருதுகிறோம்.

புலிகளின் பாசிசத்தை தமிழகத்தில் முதன் முதலில் நாம்தான் விமரிசித்திருந்தோம். அவர்கள் மட்டுமின்றி பிற இயங்கங்களும் இந்திய மேலாதிக்கத்தின் தயவில் ‘விடுதலை’க்கு முயற்சிப்பதை விமரிசித்தோம். பிறகு அமைதிப்படையை புலிகள் எதிர்த்து நின்ற போது அவர்களை ஆதரித்தோம். ராஜீவ் கொலையின்போது தமிழகத்தின் புலி ஆதரவாளர்கள் பதுங்கிக் கொண்டார்கள். தனிநபர் கொலை என்பது ஒரு அரசியல் போராட்டம் அல்ல என்ற போதிலும், அந்த விமரிசனத்தை நாங்கள் முதன்மைப்படுத்தவில்லை. மாறாக ராஜிவ் கொலையின் நியாயத்தை தமிழகத்தில் பிரச்சாரம் செய்தோம். வழக்குகளையும், சிறைகளையும் எதிர்கொண்டோம்.

“பு.க, பு.ஜ நிருபர்கள்தான் இந்தக் கொலையை செய்திருப்பர்” என்று கிட்டு அறிக்கை விட்டார். அதனை சாக்கிட்டு அரசு எம்மீது மேலும் அடக்குமுறையை ஏவியது. எனினும் அதனைக் கண்டித்தோமேயன்றி கிட்டுவின் அறிக்கை தோற்றுவித்த ‘கோபம்’ எங்கள் கொள்கைகளை வழிநடத்தவில்லை.

சட்டவிரோதமாக இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டு கிட்டு சயனைடு விழுங்கினார். பிறர் கைது செய்யப்பட்டனர். அப்போது இந்திய மேலாதிக்கத்தை கண்டித்தோமேயன்றி புலிகளின் பாசிச போக்குகளை இணையாக விமரிசிக்கவில்லை. புலிகள் ஜனநாயக சக்திகளை கொன்றபோது அதனைக் கண்டித்தும், இ.பி.ஆர்.எல்.எஃப் போன்ற சதிகாரர்களையும், துரோகிகளையும் கொன்றபோது அதன் நியாயத்துக்குப் பரிந்து பேசினோம்.

யாழ் கோட்டை முற்றுகையை புலிகள் விலக்கிக்கொள்ளக்  கோரி இந்திய மேலாதிக்கத்தின் சார்பில் இங்குள்ள புலி ஆதரவாளர்கள் புரோக்கர் வேலை செய்தபோது இவர்களைத்தான் கண்டித்தோம். சமாதான ஒப்பந்தம் என்ற பெயரில் மறுகாலனியாக்கத்துக்கு புலிகள் உடன்பட்டபோது அவர்களை விமரிசித்தோம். நீண்டகாலம் நீடித்த ஈழப்போரின் இழுபறி நிலைமை அரசியல் சூழல்களால் தோற்றுவிக்கப்பட்டது என்பதை விளக்கி புலிகளின் இராணுவாதப் பார்வையை விமரிசித்தோம். இலங்கை அரசின் வெறிகொண்ட பவுத்த சிங்கள வெறியை கண்டித்தோம்.

சிங்கள அரசையோ, இந்தியாவையோ எதிர்க்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலிகளையும் விமரிசிக்க வேண்டும் என்ற பார்வை எந்திரத்தனமானது.

ம்.ஆர்.ராதா எங்கேயோ சொன்ன சம்பவமொன்று இங்கே நினைவுக்கு வருகிறது. மேடை நாடகம் ஒன்றில் கணவனாக நடித்தவர், மனைவியாக நடித்தவரின் முகத்தை மட்டுமே பார்த்துப் பேசிக்கொண்டிருந்ததும் “ரசிகர்கள் பக்கம் முகத்தையே திருப்பாமல் இப்படிப் பேசிக்கொண்டிருப்பது தவறு. மனைவியைப் பார்த்து ஒரு வரி பேசினால் ரசிகர்கள் பக்கம் திரும்பி இன்னொரு வரியைப் பேசு” என்று சொல்லிக் கொடுத்தாராம் ராதா. உபதேசத்தைக் கொச்சையாக பற்றிக் கொண்டார் அந்த நடிகர். அடுத்த நாடகத்தில் ராமனாக நடிக்கும் போது ஒரு அம்பை இராவணனை நோக்கியும், அடுத்த அம்பை ஆடியன்சை நோக்கியும் எய்தாராம்.வசனத்தின் எந்த இடத்தில் சக நடிகரைப் பார்க்க வேண்டும், எப்போது ரசிகர்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்பதைப் புரிந்திருப்பது ஒரு கலை. அனுபவம்தான் அதனை கிரகித்துக் கொள்வதற்கு ஒரு நடிகனைப் பயிற்றுவிக்கிறது.

‘நிலைப்பாடுகள்’ மார்க்சிய அறிவியலின் துணை கொண்டு எடுக்கப்படுகின்றன. அந்த நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் அணுகுமுறையிலோ அறிவியலும் கலையும் கலந்து இருக்கின்றன. இதை நடைமுறைதான் கற்றுத்தருகிறது. எந்திரவியல் பார்வை மக்களிடமிருந்து நம்மை தனிமைப் படுத்துவது மட்டுமின்றி தவறான கோட்பாட்டு முடிவுகளை மேற்கொள்வதை நோக்கியும் நம்மை பிடித்துத் தள்ளுகிறது.

தி தொடர்பான விவாதத்தில் “இந்துக்களின் அவலத்தைச் சொல்லி பாசிசத்தை கடை விரிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் ஐயும் அனுமதிப்பீர்களா” என்று வினவு தளத்திற்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் இராயகரன். ஆர்.எஸ்.எஸூம் பாசிசம், புலியும் பாசிசம், தாலிபானும் பாசிசம், ஹிட்லரும் பாசிசம், எனவே ‘புலிகள் = தாலிபான் = நாஜி’ என்பதுதான் அவரது புரிதல் என்றால் வருந்துவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை. வரலாறும் சமூக இயக்கமும் அதனை விளங்கிக் கொள்ளும் கருவியான பொருள்முதல்வாதமும் இத்தனை எளிய சூத்திரங்களால் ஆளப்படுபவையாக இருந்தால், மார்க்சியமும் ஒரு வாய்ப்பாடாகவே நமக்கு அறிமுகமாயிருக்கும். அவ்வாறு இல்லையே!

நாசிசமும், ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவமும் ஒப்பிட்டுக் கூறத்தக்க வகைமாதிரிகள். தாலிபான்களோ அமெரிக்காவினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு இந்நாளில் அதற்கெதிராக திரும்பிய ஒரு புதிய வகை. சிங்கள பாசிசம் என்பது பேரினவாத்த்தின் பாசிசம். புலிகளின் பாசிசம் என்பது பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்ப்பதனூடாக வளர்ந்த பாசிசம். இவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை புறந்தள்ளி ‘பாசிசம் என்றால் எல்லாமே பாசிசம்தான்’ என்ற அணுகுமுறைதான் இரயாவின் வாதங்களில் மேலோங்கியிருக்கிறது.

மராட்டியத்தின் பேஷ்வா ஆட்சியால் ஒடுக்கப்பட்ட மகர் சாதி மக்கள் (தலித்) பிரிட்டிஷ் படையில் சிப்பாய்களாயினர். பின்னாளில் பேஷ்வாக்கள் மீது பிரிட்டிஷார் போர் தொடுத்தபோது அதனை தம் சொந்தப் போராகவே கருதி வரலாற்று பழியை தீர்த்துக்கொண்டார்கள் மகர் சிப்பாய்கள். எட்டப்பனும் துரோகி , மகர்களும் துரோகிகள் என யாரேனும் வரையறுத்துவிட முடியுமா?

புலிகளின் பாசிசம் என்பது பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்த்து போராட்டத்தினூடாக வளர்ந்திருக்கும் பாசிசம். “ஒரு புறம் போராடும் புலி, இன்னொரு புறம் ஒடுக்கும் புலி” என்று இரயா கூறுகிறாரே அதுவேதான். மக்கள் மீது ஆதிக்கம் செய்யும் இந்தவகைப்பாசிச போக்குகள் மிகவும் சிக்கலானவை. தன் உயிரை மாய்த்துக் கொள்ள தயாராக இருப்பதன் காரணமாகவே, அடுத்தவன் உயிரைப் பறிக்கும் தார்மீக தைரியத்தைப் பெற்று விடுகிறது இந்த பாசிசத்தின் உளவியல். இதே காரணத்தினால் பெரும் மக்கள் பகுதியினரின் அங்கீகாரத்தையும் அனுதாபத்தையும் இது பெறமுடிகிறது. களத்தில் நிற்காதவர்களின் ‘குற்ற உணர்வு’ களத்தில் நிற்போரின் பாசிச மனோபாவத்திற்கு ஊட்டம் தருகிறது. ஏற்கனவே ஜனநாயக கலாச்சாரம் நிலவாத ஒரு சமூகத்தில் இது கூடுதல் வலிமை பெறுவதொன்றும் வியப்பிற்குரியதல்ல.

இன்றோ புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். அது புலிகளின் தோல்வியாக மட்டுமில்லை. ஈழத்தமிழினத்தின் தோல்வியாகவே மாறி மக்களை கூனிக்குறுகச் செய்திருக்கிறது. இதையே இரயாவின் மே 18 பதிவும் கூறுகிறது.

ஒரு காமவெறியனால் ஊரறிய வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, அந்த காமவெறியன் கம்பீரமாக உலா வருவதை காணமுடியாமல், கண்ணை மூடவும் முடியாமல் தவிக்கும் பெண் உள்ளத்துடன் சிங்கள பாசிசத்தால் நசுக்கப்படும் ஈழத்தமிழ் சமூகத்தின் இன்றைய மனநிலையை ஒப்பிடலாம் என எமக்குத் தோன்றுகிறது. சுய நிர்ணய உரிமை என்ற பேச்செல்லாம் பின்னுக்குச் சென்று, குறைந்தபட்ச மனித கௌரவத்தை பெறுவதற்கே உலகநாடுகளிடம் யாசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக் கிறார்கள் வன்னி மக்கள்.

“விடுதலைப் போராட்டத்தை இத்தகைய படுபாதாளத்தில் தள்ளிய புலி பாசிசத்தை சித்தாந்த ரீதியாக கணக்கு தீர்த்தாலன்றி பேரினவாதத்திற்கெதிரான போராட்டம் ஒரு அடி கூட முன்னேற முடியாது” என்கிறார் இரயாகரன். ரதியின் பதிவுகளைப்படித்த உடனே கடந்த காலத்தை இரயாவின் கண்முன் விரித்துக்காட்டுகிறது அவரது இந்தக் கண்ணோட்டம். நிகழ்காலத்தை பார்வையிலிருந்து மறைக்கின்ற அளவுக்கான கோபாவேசத்தை அவருக்கு இது ஏற்படுத்துகிறது. இதன் விளைவுதான் வினவைப் பற்றிய அவரது தொடர்  கட்டுரைகள்.

“ஆயின், அடுத்த கட்டம் நோக்கி நகருவதற்கு இரயா முன்வைக்கும் பாதையும் தவறா?” என்று வாசகர்கள் கேட்கக்கூடும். ஈழத்தில் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவதற்கான பொறுப்பில் எங்களை நாங்கள் நியமித்துக் கொள்ளவில்லை. அது அந்த நாட்டு மக்களும் தோழர்களும் தீர்மானிக்க வேண்டிய விசயம் என்று கூறி விலகி நிற்பதே பொறுப்புணர்ச்சி என்று நாங்கள் கருதுகிறோம்.

ழப்போராட்டத்திற்கும் தமிழக அரசியலுக்குமான உறவு, இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கம் ஆகியவற்றின் காரணமாகத்தான் நாங்கள் இதுவரை பேசியதை பேச நேர்ந்தது. ரதியின் நினைவுகளை வெளியிடுவது என்ற முடிவை மேற்கொண்டதற்கான காரணமும் இதுதான். ரதியைக் கோரியது போலவே   தெக்கானிடமும் (Tecan) நாங்கள் எழுதக் கோரினோம். வினவு புலிகளை விமரிசிக்கும் தளம் என்று தெரிந்திருந்த போதிலும், புலிகள் பிரச்சினை தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவின் வாசகர்களுக்கும் ரதிக்கும் இடையில் விவாதங்கள் நடைபெற்றிருந்த போதிலும் ரதி எழுத முன்வந்தார். தெக்கான் எழுத முன்வரவில்லை. இன்று வினவை பாசிசத்தின் தளமென்று அவர்தான் தூற்றுகிறார்.

இணையம் என்பது புதிய ஊடகம். ஒரு அமைப்பின் பத்திரிகை, பொதுக்கூட்ட மேடை, அவ்வமைப்பின் ஆதரவாளர்கள் நடத்தும் இணையதளம் ஆகியவை தத்தம் வரம்பிலும் வீச்சிலும் விளைவிலும் சாத்தியங்களிலும் வேறுபட்டவை என்றே கருதுகிறோம். விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கின்ற இந்த மேடையில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஈழத்தமிழ் மக்கள் தமது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அதன்வழியே எதிர்காலத்தையும் புரிந்து கொள்வதற்கான புதிய வெளிச்சங்கள் கிடைக்குமென நம்பினோம். குறிப்பாக ரதியின் தொடர் சிங்கள பாசிசத்தைப் பற்றியும் ஈழ அகதிகளின் அவல வாழ்க்கை பற்றியும் உயிருள்ளதொரு சித்திரத்தை தமிழக வாசகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்த்தோம். புலி எதிர்ப்பாளர்களான வித்தகன், ஆர்.வி மற்றும் தோழர்களுடைய பின்னூட்டங்கள் எமது எதிர்பார்ப்பை மெய்ப்பித்தன.

ரதி ஒரு அகதிப்பெண். அவர் இர்ஃபான் ஹபீபோ, ரோமில்லா தாப்பரோ அல்ல. எனினும் அவர் வரலாற்றாசிரியர் ஆக்கப்பட்டுவிட்டார். “அகதிப்பெண்ணின் நினைவுகள் என்ற போர்வையில் வரலாற்றை திரிக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பலாம். எதன் மூலமும் எதையும் செய்யலாம். ஆனால் அது அவ்வாறுதான் நடக்கிறதா, எழுத்தாளரின் நோக்கம் அதுதானா என்பதை எழுத்தின் முழுமையிலிருந்து பரிசீலீக்க வேண்டும். ஒருவேளை எழுத்துக்கு ‘வெளியே’ சம்பந்தப்பட்ட எழுத்தாளரே பல பேரின் தலையை தன் சொந்தக்கையால் அறுத்துக் கொன்ற பாசிஸ்ட் என்று நிறுவும் வகையிலான ஆதாரங்கள் தரப்பட்டிருந்தால் அதை நாங்கள் பரிசீலித்திருப்போம்.

மாறாக ஒரு பாசிஸ்ட்டுக்கு வினவு தளம் மேடை அமைத்துக் கொடுக்கிறது. உடனுக்குடன் மறுத்து எதிர்வினையாற்றாமல் பாசிசத்துக்கு துணை நிற்கிறது. இதன்மூலம் பாசிசத்துக்கு எதிராக நாங்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஒருபொதுவுடைமைத்தளமே ஊறு விளைவிக்கிறது – என்ற வகையிலான விமரிசனங்களையே இரயாவும் வேறு சில தோழர்களும் முன்வைத்தனர்.

ரதியின் தொடரில் எமக்கு அவசியம் என்றுபட்ட இடத்தில் தலையிட்டு கருத்துக் கூறினோம். வாசகர்களும் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஒரு கண்காணிப்பாளனின் (ombudsman) பாத்திரத்தை வினவு ஆற்றவேண்டுமென்றோ நீதிபதியின் பாத்திரத்தை ஆற்றவேண்டுமென்றோ யாரேனும் எதிர்பார்த்தால் தயவு செய்து உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் புரிந்து கொண்ட அளவில் மார்க்சிய பார்வையைப் பிரயோகித்து நாங்கள் எழுதுகிறோம், விமரிசிக்கிறோம். மார்க்சியப் பார்வையின் அறுதித் தீர்ப்பாயமாக எம்மை நாங்கள் அறிவித்துக் கொள்ளவில்லை. வாசகர்கள் உருவாக்கிக் கொள்ளும் அபிப்ராயங்களை நிறைவு செய்யும் வகையிலான பதவிகளையும் நாங்கள் வகிக்க இயலாது.

நாங்கள் வாசகர்களை, அதாவது மக்களை நம்புகிறோம். பல்வேறு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்க ளினூடாக உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த ஊடகம் வழங்குவதால் அதன் சாத்தியத்தை பயன்படுத்த விழைகிறோம். இந்தக் கண்ணோட்டத்தில்தான் எமது கட்டுரைகள் சிலவற்றை சாதிவெறியர்கள், மதவெறியர்கள், அமெரிக்க அடிவருடிகள் உள்ளிட்ட பலரும் எழுதிய பின்னூட்டங்களுடன் சேர்த்து அப்படியே அச்சிட்டு நூலாகவும் கொண்டு வந்திருக்கிறோம். அந்த விவாதங்களைப் படித்து சொந்த மூளையைப் பயன்படுத்தி சிந்திக்கும் சமூக அக்கறையுள்ள வாசகர்கள் சரியான முடிவை வந்தடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தவறான முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றாலும் “வாழ்க்கை என்பதை நாற்புறமும் வேலியிடப்பட்ட பாதுகாப்பிடமாக பராமரிக்க இயலாது” என்று நாங்கள்புரிந்து கொண்டிருக்கிறோம்.

புரட்சிக்கு முந்தைய ரசியாவின் சோவியத்துக்களைப்பற்றி உங்களில் பலர் அறிந்திருக்கக்கூடும். அப்போது சோவியத்துக்களில் சிறுபான்மையினராகத்தான் இருந்தனர் போல்ஷ்விக்குகள். தொழிலாளிகள் நிரம்பிய சோவியத் கூட்ட அரங்குகளில் மென்ஷ்விக்குகள், நரோத்னிக்குகள், சோசலிஸ்டு புரட்சியாளர்கள் போன்ற பல தரப்பு பிரதிநிதிகளுடன் மேடையில் நடந்த வாத பிரதிவாதங்களில் தமது தரப்பை நிலைநாட்டி தொழிலாளி வர்க்க்தை தம் பக்கம் வென்றெடுத்தார்கள் போல்ஷ்விக்குகள். எனினும் புரட்சி என்பது கருத்தை கருத்தால் வெல்லும் பட்டிமன்றம் அல்ல. ரசிய தொழிலாளர்களையும், விவசாயிகளையும் புரட்சி எனும் நடைமுறையில் ஈடுபடுத்தியதன்மூலம் போல்ஷ்விக் கருத்துக்களின் நியாயத்தை மக்கள் தம் சொந்த அனுபவத்தில் புரிந்து கொள்ளச் செய்தார் தோழர் லெனின். மக்களை அரசியல் படுத்தும் இந்த இயங்கியலை சரியாக புரிந்து கொண்டிருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

ந்த விவாதம் பாசிசத்திற்கு எதிரான தமது போராட்டத்தை குதறுகிறது” என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார் சிறீ என்ற ஈழத்தமிழ் தோழர். இவ்விவாதம் பொது அரங்கில் நிகழ்த்தப்படுவது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை என்ற போதிலும் சில விளைவுகளை உத்தேசித்து தயக்கம் இருந்தது. எங்கள் விருப்பத்தை மீறித்தான் நாங்கள் பொது அரங்கிற்கு இழுத்து வரப்பட்டோம். வினவு தளத்தின் தகைமையே கேள்விக்குள்ளாக்கப்பட்டு நாங்களே கூண்டிலேற்றப்பட்டுள்ள நிலையில் பின்னூட்டங்களையோ விவாதங்களையோ மட்டறுப்பது எங்களது பாரபட்சமின்மையையும் கேள்விக்குள்ளாக்கி விடும் என நாங்கள் அஞ்சியதால் விலகி நின்றோம்.

வேதனையின் பிற பரிமாணங்களையும் தோழர் சிறீ புரிந்து கொள்ள வேண்டுமென கோருகிறோம். புலிகளின் பாசிசத்தை விமரிசிப்பது என்பது ஈழத்தமிழர்களுக்குதான் கடுமையான பணியென்றும் தமிழகத்தில் அது எளிது என்றும் அவர் எண்ணுவாராகில் அது தவறு. இவ்விசயத்தில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாகத்தான் தமிழகத்தில் நாங்கள் எதிர்நீச்சல் போடுகிறோம். இங்கே எந்த மார்க்சிய லெனினிய இயக்கமும்  கூட புலிகளை விமரிசிப்பதில்லை. இனவாதிகள் நிரம்பிய அரங்குகளின் மேடைகளில் எமது தோழர்கள் தூற்றப்பட்டிருக்கிறார்கள், பிரச்சாரத்தின் போது தாக்கப்பட்டிருக்கிறார்கள், பத்திரிகைகள் கிழித்தெறியப்பட்டிருக்கின்றன.

” களத்தில் நின்று உயிர் விடும் புலிகளையா விமரிசிக்கிறாய்?” என்பதுதான் இங்கிருக்கும் ஒரு சராசரி புலி அனுதாபியின் கோபம். அவரது மன உணர்வை நாங்கள் புரிந்து கொண்ட காரணத்தினால், அவரை ஒரு பாசிஸ்ட் என்று புரிந்து கொள்ளாத காரணத்தினால் பொறுமையாக போராடினோம், போராடுகிறோம், வெற்றியும் பெற்றிருக்கிறோம்.

மறுபுறம் இந்திய அரசுக்கெதிராக புலிகளுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் ஆதரவாக நாங்கள் போராடிய சந்தர்ப்பங்களில் எல்லாம் தடா, தேசிய பாதுகாப்புச் சட்டம், ராஜத்துரோகம் முதலான கொடும் குற்ற வழக்குகளில் நூற்றுக்கணக்கான தோழர்கள் சிறை சென்றிருக்கின்றார்கள். இது துன்பங்கள் குறித்த ஒப்பீடல்ல. ஆனால் எமது போராட்டத்துக்கும் ஒரு வலி உண்டு; அது தோற்றுவிக்கும் உணர்ச்சியும் உண்டு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

பல்வேறு விசயங்களில் ஒத்த நிலைப்பாடு கொண்டிருக்கும் தோழர்களிடையே (தோழர் ரயாகரன் – ம.க.இ.க ஆதரவாளர்களின் வினவு தளம்) இப்படி ஒரு கருத்து முரண்பாடு வரலாமா என்று சிலர் அங்கலாய்க்கின்றார்கள், வருந்துகிறார்கள் அல்லது ஆச்சர்யப்படுகிறார்கள். நடப்பது இரு ஆளுமைகளுக்கு (நபர்களுக்கு) இடையிலான முரண்பாடு என்று கூட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிலைப்பாடுகளில் ஒற்றுமை என்பது ஒரு மேம்போக்கான ஒற்றுமை மட்டுமே. அந்த நிலைப்பாடுகளை வந்தடைவதற்கான ஆய்வுமுறைகளிலும் அது தோற்றுவிக்கும் புரிதலிலும் வேறுபாடு இருக்கிறது என்ற விசயம், குறிப்பிட்ட கோட்பாடுகளை நடைமுறைக்குப் பொருத்தும்போதுதான் தெரிய வருகிறது. ஆம் இது வேறுபாடுதான்; இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. எனவேதான் இந்தப் போராட்டம் தவிர்க்கவியலாததாகி இருக்கிறது.

“இரயாவிடம் வறட்டுவாதமென்றால் இந்த விமரிசனத்தை முன்னரே வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கலாமே” என்று சில தோழர்கள் கருத்துரைத்துள்ளனர். அது சாத்தியமற்றது மட்டுமல்ல வினவு தளத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டதும் கூட.

வினவு தளம் பற்றி தோழர் இரயா விமரிசித்தார். அவரது விமரிசனத்தை ஆளும் கண்ணோட்டம், ஏற்கனவே அவர் ம.க.இ.க மீது வைத்திருந்த விமரிசினத்திலும் வெளிப்படுவதைக் கண்டோம். வினவு தளம் என்ற முறையிலும் ம.க.இ.கவின் ஆதரவாளர்கள் என்ற முறையிலும் இங்கே விளக்கமளித்திருக் கிறோம். அவ்வளவே.

மது முந்தைய பதிவில் ” தனியொருவனாக நின்று மார்க்சியத்தை காப்பாற்றும் நிலையில் நாங்கள் இல்லை” என்றும் ” உடனுக்குடன் ஒரு கட்டுரையை இறக்கும் நிலையில் இல்லை” என்றும் நாங்கள் குறிப்பிட்டிருந்தது நக்கலும் நையாண்டியுமென்றும், விவாத முறை இதுவல்ல என்றும் தோழர் இரயா விமரிசித்திருந்தார்.

நடந்த்து என்ன? இரயாவின் தொடர்கள் நாளுக்கொன்றாக வெளிவந்ததனால் வினவில் பின்னூட்டம் விவாதமென்று இது விரிந்து சென்றது. நாங்கள் உடனுக்குடன் பதில் எழுதாமைக்கு காரணம் நேரமின்மை மட்டுமல்ல, இவ்வாறு பொதுத்தளத்தில் விமரிசிக்கும் ஒரு தோழமை சக்தியை எப்படிக் கையாள்வது என்பதில் எமக்கு ஏற்பட்ட நெருக்கடி. தனியே முடிவு செய்து அமல்படுத்துவதில் எமக்கு இருந்த தயக்கம். இதையே அவ்வாறு குறிப்பிட்டோம்.

‘தனியொருவனாக நின்று’ என்ற தலைப்பில் தோழர் இரயா எழுதிய கட்டுரையின் உள்ளடக்கமும் அதில் அவர் வெளிப்படுத்தியிருந்த உணர்ச்சியும் தவறானவை என்று கருதினோம். அதனை மனதிற் கொண்டுதான் ஒரு மறைமுகமான விமரிசனமாக அந்த சொற்றொடரை பயன்படுத்தினோம். நக்கலோ, நையாண்டியோ எமது நோக்கமல்ல. எனினும் இது அவரை புண்படுத்தியிருப்பதினால் எமது வருத்தத்தை பதிவு செய்கிறோம்.

ந்த விவாதத்தில் எம்மைப் பற்றி ஏளனமாகவும், அவதூறாகவும், நோக்கம் கற்பித்தும் எழுதப்பட்ட பின்னூட்டங்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை. கடுமையான வார்த்தைகளால் முறிக்கப்படும் அளவிற்கு எங்கள் முதுகெலும்பு பலவீனமாக இல்லை. ஆனால் விமரிசனங்கள் என்ற எல்லையைத் தாண்டி ரதிக்கு எதிராக எழுதப்பட்ட பல பின்னூட்டங்கள் பண்பாடற்றவை. அவற்றை இகழ்ச்சியுடன் ஒதுக்கித் தள்ளுகிறோம்.

ஆரோக்கியமான ஒரு விவாதம் அளித்திருக்கக்கூடிய புத்துணர்ச்சிக்குப் பதிலாக ஒரு வகையான கசப்புணர்ச்சியையே இவ்விவாதம் எம்மிடம் தோற்றுவித்திருக்கிறது என்பதை மறைக்க விரும்பவில்லை. எனினும் சோர்ந்து விட்டோம் என்பதல்ல இதன் பொருள்

“உலகை வியாக்கியானம் செய்வதல்ல, அதனை மாற்றியமைப்பதுதான் நமதுபணி” என்ற பேராசான் மார்க்சின் சொற்களை நினைவில் வைத்திருக்கிறோம். “மாற்றப்பட வேண்டியவை பொருட்களாயினும், மனிதர்களாயினும் அவற்றின்/ அவர்களின் , சாத்தியமான எல்லா பரிமாணங்களையும் ஒரு மார்க்சியவாதி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்ற தோழர் லெனினுடைய கூற்றை பற்றி நடக்கிறோம். மாற்று கருத்துக்களுடனான அர்த்தமுள்ள விவாதங்கள் உலகை மாற்றும் நடைமுறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உதவும் என்றே கருதுகிறோம்.

ரதி மீண்டும் எழுத முன்வந்திருக்கிறார். அவரது தொடர், தொடரும். இந்த விவாதம் எமது தரப்பிலிருந்து இனி தொடராது.

விடை பெறுகிறோம்.

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

*********************************

தொடர்புடைய பதிவுகள்

அறிவிப்பு: “ஈழத்தின் நினைவுகள்” இனி தொடராது! தொடரும்….. வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!

புலி அபிமானிகள் அனைவரும் பாசிஸ்டுகளா? தோழர் இரயாகரனுக்கு ஒரு பதில்!

ஈழத்தின் நினைவுகள் – பாகம் 1

பாகம் – 2 : ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் !

பாகம் -3 : ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி !

  1. பல கட்டுரைகளுக்குகான சாத்தியத்தை சூல் கொண்டிருக்கும் இந்த விமர்சனம் மிக சிறப்பான ஒரு மார்க்சிய பார்வை.

    சில தோழர்கள் ஒன்றை எதற்கு எதிர்கிறோம் என்று புரியாமலே எதிர்கின்றனர், சிலர் ஒரு கோணத்திலேயே எதிர்க்கின்றனர், சிலரோ எதிர்பதை ஆதரிக்கமுடியாது – ஆதரிப்பதை எதிர்க்க முடியாது என்கின்றனர், சிலர் இப்படித்தான் எதிர்ப்பதா என்றும் சிலர் இப்படி எதிர்க்கக்கூடாது என்றும் பல எண்ணங்களை நாம் கண்டோம், அவைகளை மதிப்பீடு செய்யாமல், அவரவர்களே மதிப்பீடு செய்யுமளவுக்கு அனைவருக்குமான விடையை ஆர்பாட்டமில்லாத, எளிமையான மொழியுடன், உதாரணங்களுடன் விளக்கியுள்ள இந்த படைப்பு எந்த ஒரு சூழ்நிலையை, முரண்பாட்டை, கருத்தை, வரலாறை, தருணத்தை மார்க்சிய வழியில் ஆய்வு செய்ய அருமையான கையேடு.

    என்னுடைய விமர்சனங்கள் (நான் கவனமாக இருந்த போதிலும்) தோழர் இரயாவின் மனதில் பகைபோக்கை வெளிப்படுத்துவதாக பதிந்துவிட்டது. அதற்கான சாத்தியத்தை வழங்கிதற்காக சுய விமர்சனம் ஏற்கிறேன்.

    இந்த விவாதம் வழங்கிய அனுபவத்தை தோழர்கள் அனைவரும் தொகுக்கவேண்டும் என்ற மற்ற தோழர்களின் கோரிக்கையை வழிமொழிகிறேன்

    வினவு தோழர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

    தோழமையுடன்

    • //என்னுடைய விமர்சனங்கள் (நான் கவனமாக இருந்த போதிலும்) தோழர் இரயாவின் மனதில் பகைபோக்கை வெளிப்படுத்துவதாக பதிந்துவிட்டது. அதற்கான சாத்தியத்தை வழங்கிதற்காக சுய விமர்சனம் ஏற்கிறேன்.//
      தோழர் மசே உங்களின் இந்த வரிகள்
      மற்ற தோழர்களும் கடைபிடிக்க வேண்டிய முன்மாதிரி.

  2. பதிவின் கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன்.

    சென்ற பதிவில் நடந்ததைப் போன்ற ‘பஞ்சாயத்து’ இதில் நடக்காது என்று நம்புகிறேன். தோழமையை காப்பாற்றவென்று முரண்பாடுகளை மூடிமறைத்து வைப்பது எரியும் நெருப்பின் மேல் வைக்கோலைப் போட்டு அதை மறைக்க முயல்வதைப் போலவே முடியும்..

    போன பதிவின் விவாதங்களைக் கவனித்த போது ‘காயப்பட்ட’ உள்ளங்களுக்காக சிறிது வருத்தப்பட்டேன்.. ஆனால் அந்த உணர்ச்சியின் முடிவு மேலே சொல்லப்பட்ட உவமை போலத்தான் முடிந்திருக்கும்..

    இந்த தருணத்தில் முரண்பாடுகள் வெளித்தெரிய ( பொதுத்தளத்தில்) ஆரம்பித்திருப்பது சரியானது தான். இதில் சங்கடப்பட ஏதுமில்லை. முழுவதுமாக அதன் எல்லா அம்சங்களையும் சாத்தியப்பட்ட எல்லா கோணத்திலும் அதன் நீள அகலங்களையெல்லாம் விவாதித்து தீர்ப்பதே சரியானது.

    பதிவின் மேலான தோழர் இரயாகரனின் கருத்தையும் மற்ற தோழர்களின் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்…

    வினவு தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

    தோழமையுடன்

    ஆர்.கே

  3. விவாதத்தில் டெக்கான் போன்றோர் சீர்குலைவு உண்டாக்கினால் ‘சிறப்பாக’ கவனித்து அனுப்பவும் வேண்டும்.

  4. புலிகளும் RSS ம் ஒன்று என்ற கருத்து பலரையும் குழப்பியிருக்கிற ஒன்று. இரண்டும் அவற்றின் தோற்றுவாய், நோக்கம், செயல் என பல வகைகளில் வேறுபட்டது என்பதை நிறுவிய விதம் அருமை. புலிகளை ஆதரிக்கும் பலரும் இதை படிக்கும் போது இந்த அணுகுமுறையின் நேர்மையை ஏற்றுக்கொள்வர். ஜனநாயகம் முதிர்ச்சி அடையாத சூழலில் உருவாகும் இயக்கம் ஜனநாயத்தின் முழு குணங்களையும் கொண்டிருக்காது என்ற வினவின் கருத்து சிறந்த insight. காசுமீர் இசுலாமிய அடிப்படைவாத இயக்கங்களிலிருந்து சற்றே வேறுபட்டது என்று கருதப்படும் இயக்கம் ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ [JKLF] . அதன் தலைவர் யாசின் மாலிக். கடந்த வருடம் நடந்த அமர்நாத் கோயில் தகராறு அனைவருக்கும் நினைவிருக்கும். இந்துக்களுக்கு கழிப்பிட வசதியை இசுலாமியர் நிலத்தில் செய்து கொடுப்பது, முசுலிம்களை சிறுபான்மையினராக்கும் சதி என்று ஒரு முசுலிம் அடிப்படைவாதி போல வாதிட்டார். RSS ன் முயற்சிகளை முறியடிப்பது என்பது வேறு. இது போன்ற மக்களின் எண்ணிக்கையை வைத்து செய்யப்படும் அரசியல் வேறு. யாசின் மாலிக் இயக்கத்தையும் இந்த சம்பவத்தின் அடிப்படையில் நிராகரிப்பது எளிது. அனால் அவ்வாறு செய்தோமானால் இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரான காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் அனைத்தையும் கொச்சைப்பதுத்தும் காங்கிரஸ், பி.ஜே.பி கூடாரத்திலேயே நம்மை கொண்டு சேர்க்கும்.

  5. //“உலகை வியாக்கியானம் செய்வதல்ல, அதனை மாற்றியமைப்பதுதான் நமதுபணி” என்ற பேராசான் மார்க்சின் சொற்களை நினைவில் வைத்திருக்கிறோம். “மாற்றப்பட வேண்டியவை பொருட்களாயினும், மனிதர்களாயினும் அவற்றின்/ அவர்களின் , சாத்தியமான எல்லா பரிமாணங்களையும் ஒரு மார்க்சியவாதி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்ற தோழர் லெனினுடைய கூற்றை பற்றி நடக்கிறோம். மாற்று கருத்துக்களுடனான அர்த்தமுள்ள விவாதங்கள் உலகை மாற்றும் நடைமுறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உதவும் என்றே கருதுகிறோம்.//

    பாடம் கற்க வேண்டிய வரிகள்

  6. ஆர்.எஸ்.எஸ். அத்வானியும் ரதி போல ஒரு அகதி தான். அவரும் யாரையும் தன் கையால் கொலை செய்ததாக நாம் அறியவில்லை. வினவின் சூத்திரப்படி அத்வானி ஒரு பாசிஸ்ட் அல்ல. வினவு மையமான கேள்வியான ரதி ஒரு பாசிஸ்டா என்பதை வேண்டுமென்றே தவிர்க்கிறார். ரதி தன் கையால் யாரையாவது கொலை செய்ததாக நிரூபித்தால் மட்டும் பாசிஸ்ட் என்று ஒத்துக்கொள்வாராம். அதே வினவு இந்திராகாந்தியை பாசிஸ்ட் என்கிறார். இந்திரா தன் கையால் யாரையாவது கொலை செய்தாரா? வினவு தனக்கும் ரயாவுக்கும் இடையில் என்ன பிரச்சினை என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகிறார். ஆனால் எங்காவது ஓரிடத்திலாவது ரதி மீது எந்த விமர்சனமும் இல்லை. ரதி உண்மைகளை மறைத்து திரிப்பது பற்றியும் அவருக்கு எந்த விமர்சனம் இல்லை. உண்மைகளை மறைப்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு ரதி கூட மறுக்கவில்லை. ரதி மீண்டும் எழுத முன்வந்திருக்கிறார். நன்று நன்று. அப்போது தானே தான் யார் என்பதை இனங்காட்டுவார். விவாதங்களால் ரதி எச்சரிக்கை அடைந்து விடுவாரோ தனது பாசிச குணத்தை மறைப்பாரோ என்று யாரும் கவலைப்படத்தேவையில்லை. ரதிக்கு பாசிசம் என்றால் என்னவென்று தெரியாது. அவருக்கு அந்த சொல்லின் அர்த்தம் புரியாது.

    வினவும் புலிப் பாஷையில் பேசக்கற்றுக்கொண்டுவிட்டார். EPRLF துரோகிகள் அதனால் அவர்களை அழித்தது நியாயம் என்கிறார். வினவு இதே கட்டுரையில் இன்னொரு இடத்தில் EPRLF துரோகிகளாக மாற்றப்பட்ட காரணங்களை மகர் உதாரணம் மூலம் விளக்குகிறார். //மராட்டியத்தின் பேஷ்வா ஆட்சியால் ஒடுக்கப்பட்ட மகர் சாதி மக்கள் (தலித்) பிரிட்டிஷ் படையில் சிப்பாய்களாயினர். பின்னாளில் பேஷ்வாக்கள் மீது பிரிட்டிஷார் போர் தொடுத்தபோது அதனை தம் சொந்தப் போராகவே கருதி வரலாற்று பழியை தீர்த்துக்கொண்டார்கள் மகர் சிப்பாய்கள். எட்டப்பனும் துரோகி , மகர்களும் துரோகிகள் என யாரேனும் வரையறுத்துவிட முடியுமா?//

    • கடவுளே! இந்த கருமாந்தரம் புடிச்சவனுக்கு பதில் சொல்லுற ஒரே வெட்டிப்பய நானாகவே இருக்கட்டும், மத்தவங்க தயவு செஞ்சு வழக்கம் போல உருப்படியான காரியத்த பாருங்க.

      யோவ் தமிழனுக்காக ஒன்னுமே புடுங்காத பாசிச வறட்டுவாத உளவாளி tecan நான் ரெடி

      • //கடவுளே! இந்த கருமாந்தரம் புடிச்சவனுக்கு பதில் சொல்லுற //

        கேள்விக்குறி தம்பி சொந்த ஊரு கோயமுத்தூருங்ளா
        நம்மூரு வாடை அடிக்குதே

  7. Now only i visited this site and gone thru, the essay. You all people jobless,mindless,heartless, and true facists like hitler, sonia gandhi, karunanidhi, and Rajapakses. Where is marx a failed theory, what russia , china, cuba, libya and muslim countries to our tamils, betrayal, do not write this kind of articles no more, please close down all these nonsense. Do not cheat people in the name of communism, marx, lenin and engles, failed theory, traitors you all traitors of tamils,. I stronlyg condem this essay, who ar u idiots, do you suffered the camps, concentration camps, war, gun fire, artillery shells, you stay ina rooom, take cigars, meals and write all these utter non sense, betray of your mother

  8. Well said Thangarasu… These people fit only for talking… i am challenging them… can they show anything they did for society? A capitalist feeding food for needy man always better than a marxist who always use to talk and never take action.

  9. Good article . it is having a very clear message. i think this is high time that vinavu should keep back foot and concentrate on our Indian Politics and our main stream areas. i am saying this because i am fed up with the above eccentric comments from real nutty people who are just pouring nonsense words. (not all,some are really genuine) Greetings . by Krishna.

  10. பிற இயக்கத்தினரால் கொன்றொழிக்கப்பட்ட புலிகள் குறித்தும் நீங்கள் பேசுவீர்களா?

    கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் ‘என் அருமை ஈழமே’ தொகுப்பை முன்வைத்து…

    http://suthumaathukal.blogspot.com/2009/09/blog-post_04.html

  11. சகோதர இயக்கங்களிடையே மோதல்!

    “”ஓர் உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது இயக்கங்கள் மாற்று இயக்கத்துக்குப் பலியாகிப் போன சம்பவத்தில், இந்திய உளவுப் படையினரின் (“ரா’ அமைப்பு) பங்கு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இதைப் பல இயக்கத்தவர்கள் புரிந்து கொண்டிருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் அதற்குப் பலியாகிப் போனார்கள்”

    http://eelavarkural.blogspot.com/2009/09/blog-post_02.html

  12. கொஞ்சம் காலம் தாழ்த்தி வினவு பதில் தந்திருந்தாலும், அனைத்து விமர்சனங்களுக்கும், அவதூறுகளுக்கும் பதிலளிக்கிற
    விளக்கமான பதிவு. பல சந்தேகங்களூக்கு பதில் கிடைத்தது எனக்கு. நன்றி வினவு.

  13. விமர்சனம் மிகவும் சிறப்பான முறையில் முன் வைக்கப்பட்டுள்ளது.
    விமர்சனத்தின் அனைத்து அம்சங்களுடனும் நான் முழுமையாக‌
    உடன்படுகிறேன்.பின்னூட்டங்களில் வரம்பு மீறிய தோழர்களின்
    அணுகுமுறை வினவுக்கு ஏறுடையது அல்ல என்பதையும் விமர்சனத்தில்
    உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதை கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

    தோழர் இரயா இதை நேர்மறையில் பரிசீலிக்க வேண்டும்.
    பரிசீலனைக்கு மாறாக பதில் கட்டுரை தீட்டும் வேலையில் இறங்குவது எவ்வகையிலும் பயனுள்ள செயல் அல்ல.

  14. ரதி மீண்டும் எழுத வந்திருப்பதும் அந்த பதிவுகள் வினவு தளத்தில் பதிக்கப்படும் என்பதும் மகிழ்ச்சியை தருகின்றன. வாழ்த்துக்கள்!

  15. புலிகளின் பாசிசத்தை அம்பலப்படுத்த மாட்டோம். அதை செய்யவும் கூடாது. – வினவு.

    இலங்கை அரசின் பாசிசத்தை அம்பலப்படுத்த மாட்டோம். அதை செய்யவும் கூடாது. – ஜே.வி.பி.

    • Vinavu said: ரதியைக் கோரியது போலவே தெக்கானிடமும் (Tecan) நாங்கள் எழுதக் கோரினோம். வினவு புலிகளை விமரிசிக்கும் தளம் என்று தெரிந்திருந்த போதிலும், புலிகள் பிரச்சினை தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவின் வாசகர்களுக்கும் ரதிக்கும் இடையில் விவாதங்கள் நடைபெற்றிருந்த போதிலும் ரதி எழுத முன்வந்தார். தெக்கான் எழுத முன்வரவில்லை.

  16. வினவோட இந்த விஸ்தாரமான விளக்கத்துக்கு அப்புறமும் யாரும் சண்டைக்கு வந்தா அவங்க வெறும் சண்டயத்தான் எதிர்பார்க்கறாங்க வேற எந்த உருப்படியான விவாத்ததுக்கும் தயாரில்லைன்னுதான் அர்த்தம்.

  17. டெக்கான் எது சொன்னாலும் யாரும் அவரை விமர்சிக்காமல் மையமான கட்டுரையை பற்றி கருத்துகள் சொன்னால் இந்த விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கு உதவும். ஏனெனில் வினவு சொல்லித்தான் டெக்கானை எழுத சொன்ன விசயமே நமக்கு தெரிய வந்தது. ரதியை, புலிப்பாசிசத்தை, வினவை அம்பலப்படுத்துகிறேன் பேர்வழி என்று பக்கம் பக்கமாக பின்னூட்டமிட்டவர், ஒரு வரி கூட என்னையும் வினவில் எழுத சொன்னார்கள், இன்ன காரணத்திற்க்காக மறுத்தேன் என்று ஏன் அவர் நமக்கு போகிறபோக்கில் கூட சொல்லவில்லை? வினவு அவரை உளவாளியாக இருக்கலாமோ என சந்தேகிக்கிறார்கள், அப்படி ஒரு முடிவுக்கு வர நமக்கு உடனடியாக கைவசம் டெக்னாலஜி இல்லாததால் தற்காலிகமாக அவரைத் தவிர்ப்போம். வினவோ (அ) யாரோ அவரை முழுவதுமாக கண்டுபிடித்து அம்பலப்படுத்தட்டும்.பிறகு அவரை விமர்சிப்போம். அதுவரை தோழர் ரயாகரனுக்கு சொல்லப்பட்ட வினவின் பதிலை சரியான முறையில் புரிந்து கொண்டு விமர்சிப்போம்.

  18. //இ.பி.ஆர்.எல்.எஃப் போன்ற சதிகாரர்களையும், துரோகிகளையும் கொன்றபோது அதன் நியாயத்துக்குப் பரிந்து பேசினோம்.//
    இப்படி வேறு சாதனை படைத்தீர்களா தோழர் வினவு…? என்னே தங்கள் மகா மகத்துவம்?! த்தூ!

    • //இப்படி வேறு சாதனை படைத்தீர்களா தோழர் வினவு…? என்னே தங்கள் மகா மகத்துவம்?! த்தூ!// தமயந்தி, வினவு, போகிற போக்கில் ஆதரித்ததாக சொல்லவில்லை. சதிகாரர்களையும், துரோகிகளையும் கொன்ற பொழுது என விளக்கத்தோடு விளக்கியுள்ளார். உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால், ஏன் என விளக்கமளிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு துப்புவது சரியல்ல! விளக்க கொடுக்க முடியவில்லையென்றால்… நீங்களும் அந்த சதிகாரர் அல்லது துரோகிகளில் ஒருவரா!
      டிஸ்கி : ஈழ விசயத்தில் சிலர் மனநிலை சரியில்லாமல் போயிருக்கிறார்கள். என உணர முடிகிறது.

      • நொந்தகுமாரன், சகோதரர்களை படுகொலை செய்து விட்டு தான் மட்டுமே விடுதலைக்காக போராடினேன் என்று சொல்பவன் தான் பாசிஸ்ட். அதனை நியாயப்படுத்துபவன் தெரிந்தே பாசிசத்தை ஆதரிக்கிறார்கள். புலிகளை அழித்து விட்டு பயங்கரவாதிகளை அழித்தோம் என்றது இலங்கை அரசு. இ.பி.அர்.எல்பை அழித்து விட்டு சதிகாரர்கள் துரோகிகளை அழித்தோம் என்றது புலிகள். புலிகளின் பரப்புரையை தனது கருத்தாக கூறுகிறார் வினவு. ஈழப்பிரச்சினை பற்றி எதுவுமே தெரியாத வினவு,நொந்தகுமாரன் எல்லாம் பேசுவது ஈழத்தமிழனின் சாபக்கேடு. எல்லாம் தலைவிதி.

        இதையும் வாசியுங்கள். //வினவும் புலிப் பாஷையில் பேசக்கற்றுக்கொண்டுவிட்டார். EPRLF துரோகிகள் அதனால் அவர்களை அழித்தது நியாயம் என்கிறார். வினவு இதே கட்டுரையில் இன்னொரு இடத்தில் EPRLF துரோகிகளாக மாற்றப்பட்ட காரணங்களை மகர் உதாரணம் மூலம் விளக்குகிறார். //மராட்டியத்தின் பேஷ்வா ஆட்சியால் ஒடுக்கப்பட்ட மகர் சாதி மக்கள் (தலித்) பிரிட்டிஷ் படையில் சிப்பாய்களாயினர். பின்னாளில் பேஷ்வாக்கள் மீது பிரிட்டிஷார் போர் தொடுத்தபோது அதனை தம் சொந்தப் போராகவே கருதி வரலாற்று பழியை தீர்த்துக்கொண்டார்கள் மகர் சிப்பாய்கள். எட்டப்பனும் துரோகி , மகர்களும் துரோகிகள் என யாரேனும் வரையறுத்துவிட முடியுமா?//

      • தெக்கான்,
        உங்களுடைய புலி எதிர்ப்பு புல்லரிக்க வைக்கிறது.புலிகளை எதிர்ப்பதற்க்காக, சகோதர்கள் என்ற வார்த்தைகளை துரோகிகளுக்கும், சதிகாரர்களுக்கும் பயன்படுத்தாதீர்கள்.

        புலிகளின் மீது விமர்சனம் என்பது – இலங்கை பேரினவாதத்தையும், இந்திய அரசின் தலையீட்டை எதிர்த்தவர்களையும், இ.பி.ஆர்.எல்.எப். தலைமை துரோகமிழைக்கும் பொழுது அதன் தலைமையை எதிர்த்தவர்களையும் போட்டு தள்ளியது தான்.

        ஈழத்தமிழர்களுக்காக (!) நீங்கள் ஒருவர் மட்டும் தன்னந்தனியனாய் நின்று போராடுவதை பார்க்க பரிதாபமாக தான் இருக்கிறது!

      • நொந்தகுமாரன் உங்களது அறியாமையை புலி எதிர்ப்பு/ புலி ஆதரவு என்று சொல்லி மறைக்கப்பார்க்காதீர்கள். ஈழப்பிரச்சினை பற்றி எதுவுமே தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத உங்களுடன் விவாதிப்பதில் அர்த்தமில்லை. யார் என்ன சொன்னாலும் உங்கள் மண்டையில் ஏறாது. நொந்தகுமாரன் சொல்வதைக் கேட்கவேண்டுமென்பது ஈழத்தமிழரின் தலைஎழுத்து.

        //ஈழத்தமிழர்களுக்காக (!) நீங்கள் ஒருவர் மட்டும் தன்னந்தனியனாய் நின்று போராடுவதை பார்க்க பரிதாபமாக தான் இருக்கிறது.//

        இருக்கும் இருக்கும். ஈழத்தமிழர் என்ற பெயரில் ஐரோப்பாவில் கனடாவில் பணத்தில் புரளும் சொகுசுக்குஞ்சுகளை மட்டுமே உங்களுக்கு தெரியும். ஈழத்தின் ஏழை எளிய மக்களை பற்றி உங்களுக்கு தெரியாது. வினவில் வந்து அரட்டையடிக்கும் அளவு அவர்களிடம் வசதி இல்லை. நீங்கள் என்றோ ஒருநாள் ஈழத்தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறும் காலம் வரும். மக்கள் விரோத மாபியாக்களை ஆதரித்ததற்காக நீங்கள் பதில் கூறத்தான் வேண்டும். தற்போதைய மக்கள்விரோத கருத்துகளுக்காக வருந்தும் காலம் வரும்.

      • தெக்கான்,

        ஈழப்பிரச்சனையைப் பற்றி யார் எது சொன்னாலும், தவறு. தெக்கான் சொல்வது தான் சரி என்கிறீர்களா? இந்த அளவுக்கு
        நீங்கள் சொல்வது என்றால், பக்கத்தில் இருந்து பார்த்து, கேட்டு, புலிகளிடம் அடிவாங்கியவராக, வரலாறு தெரிந்தவராக
        இருக்கும் பொழுது நீங்கள் ஏன் வினவு சொன்ன பொழுது, அறியாமையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு
        நீங்கள் உண்மையை எழுதி விளங்க வைத்திருக்க கூடாது?

        எத்தனை கேள்விக்கு எனக்கு பதில் சொல்லிவிட்டீர்கள். இந்த அலுப்பு உங்களுக்கு?

        //ஈழத்தமிழர் என்ற பெயரில் ஐரோப்பாவில் கனடாவில் பணத்தில் புரளும்
        சொகுசுக்குஞ்சுகளை மட்டுமே உங்களுக்கு தெரியும்.//

        எனக்கு அப்படியெல்லாம் யாரையும் நேரடியாக தெரியாது தெக்கான்.

        //வினவில் வந்து அரட்டையடிக்கும் அளவு//

        வினவு தளம் சமூக விசயங்களை அக்கறையோடு விவாதிக்கும் தளம். இது அரட்டையடிக்கும் தளம் இல்லை.
        அதனால் கொச்சைப்படுத்தாதீர்கள். எனக்கு சந்தேகம்! நீங்கள் அரட்டையடிக்கிறார்களா?

  19. வினவு ,,
    பல விளக்கங்களுடன் கூடிய நல்ல பதில் உங்கள் கட்டுரையினூடாக இராயகரன் பல்வேறு சமயங்களில் எழுதியவற்றின் சாராம்சத்தை புரிந்துகொள்ள முடிகிறது ..பாசிசத்தின் வரையறுப்புகளுக்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் சரி போராட்டத்தின் ஊடாக வளர்ந்துள்ள பாசிசம் ஒரு பக்கம் போராடும் புலி மற்றொரு பக்கம் ஒடுக்கும் புலி என்ற முரண்நிலைதான் பல்வேறு விவாதங்களுக்கு காரணம் . மீண்டும் ஒரு போராட்டம் நடந்தால் அது ஈழத்தில் புலிகளை போன்ற பாசிச அதே நேரத்தில் போராடுடம் இயக்கம் உருவாகாது என்று எந்த நிச்சயமும் இல்லை . போராளிகள் மார்க்சிய லெனினிய வெளீச்சத்தில் ஜனநாயக பூர்வமான அதேநேரத்தில் போராடும் அமைப்பை கட்டியமைத்தால்தான் இதெல்லாம் சாத்தியம்

  20. வினவு சொன்ன விதத்திலும், விவாதத்தின் மையப்புள்ளியை விவாதிக்காமலும், விவாவதத்தின் பெயரில் எழுந்த குறுகிய போக்குகளுடன் சமரசம் செய்தபடி வைத்த கருத்து மற்றும் நடைமுறையில் எமக்கு மறுப்பட்ட அபிராயங்கள் விமர்சனங்கள் உண்டு. இதை உள்ளடக்கிய சிறு குறிப்புடன் இந்த கட்டுரையை வெளியிட எழுதியிருந்தோம்.

    நாம் தோழர்களுடன் நடத்தி உரையாடலின் பின், நாம் எழுதி பகுதியின்றி இதை மட்டும் வெளியிடுகின்றோம். அதை அமைப்புக்கு அனுப்பி வைக்க உள்ளோம். அமைப்புடன் நாம் தொடர்ந்த விவாதத்தில் இருப்பதால், தொடர்ந்து அமைப்புடன் பேசுவதே சரியானது என்றும் கருதுகின்றோம்.

    அமைப்புடன் கொள்கை ரீதியான முரண்பாடாக இல்லாமல், அனுகுமுறை தொடர்பான முரண்பாடாக பெரும்பாலும் இருக்கின்றது. ஈழம் – தமிழகம் என்ற சூழல் வேறுபாடும், ஈழத்தவர்கள் ஊடாக அவர்கள் அனுகும் போக்கே, இதில் முக்கிய முரண்பாடாக பங்களிக்கின்றது. அவர்கள் இதைக் கவணத்தில் எடுக்கத் தவறிய போதும், நாம் அதைக் கவணத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

    அதே நேரம் அனைத்தையும் விமர்சனம் சுயவிமர்சனமுறைக்கு ஊடாக மீள் பரீசிலனைக்கு உள்ளாக்குவதில் எந்தத் தவறுமில்லை. அதை நாமும் செய்ததாக வேண்டும். ஒரு புரட்சிக்கு எது உகந்ததோ, அது முதன்மையானது.

    அவர்களுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் உள்ளாத என்பதை, அவர்களின் அமைப்பு வெளியிடாக வெளிவந்த நான்கு நூல்கள் ஊடாக அனுகுவது சிறப்பானதும், சரியானதுமாகும். நூல் கிடைக்காமையாலும், அதை இணையத்தில் உங்கள் பார்வைக்கு தர சம்பந்தப்பட்டவர்கள் அதை அனுப்பி வைக்காமையாலும், அதை உங்கள் முன் முன்வைக்க முடியவில்லை. அதை விரைவில் உங்கள் பார்வைக்கு தர முனைகின்றோம்.

    பி.இரயா
    05.09.2009

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6195:2009-09-05-10-24-20&catid=148:2008-07-29-15-48-04

  21. ரயாகரன் என்ற ஒரு தனிமனிதனும் அவர்குக்கு முன்னால் ஒரு கொம்யூட்டரையும் வைத்துக் கொண்டு பாடினோம் ஆடினோம் எனப் படம் காட்டுவதைக் கூட வினவு புரிந்து கொள்ளவில்லை. ரயா தனது ஓய்வு நேரங்களில் செய்வது எல்லாம் ஒரு பக்கக் குறிப்பை யாரையாவது திட்டி எழுதுவது தான். இவர் எழுதிய ஆரோக்கியமான் விவாதக் கட்டுரை ஒன்றைக் காட்ட முடியுமா. அல்லது இவரை மார்க்சிஸ்ட் என்று கூற எதாவது ஆதாரம் காட்ட முடியுமா? சரி எல்லாவற்றையும் விட்டுத் தள்ளுங்க.. ஒரு சவால் – ரயா பாசிசம் என்றால் என்ன என்று இங்கே நீங்கள் தத்துவார்த்த ரீதியாக எனக்குப் புரிதலை ஏற்படுத்த முடியுமா?

    • கண்ணாயிரம் கந்தசாமி பாராட்டப்பட வேண்டியவர். அவரை பாராட்டுகிறோம். உண்மையில் 1000 சதவீத உண்மையை போட்டுடைத்துள்ளார். பாசிசம் என்றால் என்ன என்று அவர் மட்ட்மல்ல ஈழத்தை பற்றி விமர்சிக்கும் அனைவருமே கம்யூனிச தத்துவத்தின் அடிப்படையில் விளக்கம் கூறட்டும். இவருடைய புத்தகம் தேசிய இனப் பிரச்சனை என்பது முதலாளித்துவ வர்க்க கோரிக்கையே பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல என்று எழுதியதிலிந்து புரிந்துக்கொள்ளலாம். இவரைப் பொறுத்தவரையில் இவர் ஒரு கம்யூனிஸ்ட். இதுவே ஒரு அபத்தம். இவர் கம்யூனிஸ் என்பதால் இவர் இனப்பிரச்சனைக்கு போராட மாட்டார். இது ஒரு அயோக்கியத்தனம். போராடுபவர்களை யாரையும் ஆதரிக்கவுமாட்டார். இதுதான் துரோகத்தின் உச்சம். நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டியது இவர் மட்டுமல்ல இவரை ஏதோ ஒரு வகையில் ஜனநாயகவாதியாக ஏற்றுக்கொள்பவர்கள் கூட உண்மையில் ராஜபக்சேயின் பாசிசத்துக்கு துணைபோய் கொண்டிருப்பவர்கள் தான். மார்க்சியத்தை குழி தோண்டி புதைப்பதற்கு துணைபோய் கொண்டிருப்பவர்தான். 
      வாழ்க ஜனநாயகம் வாழ்க மார்க்சிய போலிகள்.

  22. பாசிசம் என்ற பதத்தின் தத்துவர்த்த அர்த்தத்தை புலிகளைத் தவிர்த்து எனக்குச் சொல்லவும் ரயா.

  23. தோழர் வினவுனுடைய இந்த அணுகு முறை மிக மிக பாராட்டுக்குரியது. உலகை மாற்றியமைக்கும் பணியையும் நம்பிக்கையையும் மாக்சியத்தை வழிகாட்டியாகவும் கொண்ட தோழர்களின் அனுகு முறை இப்படித்தான் இருக்க முடியும்.

    தோழாகள் என்பதன் அர்த்தமே சுயவிமர்சனமும் விமர்சனமும் கொண்டு
    தம்மையும் உலகையும் பார்க்க முயல்பவர்கள் என்பதுதான். இதை தோழர் இராயாகரனிடம் எதிர்பார்க்க முடியாது என்பதுதான் கசப்பான உண்மையாகும். ஒரு இடதுசாரி நம்பிக்கையாளனுக்குரிய எந்த ஒரு குணாம்சமும் தோழர் இராயகரனிடம் இருப்பதாக அவர் எப்பொழுதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. தோழனுக்குரியவாகளாக கருதவேண்டியவர்கள் மீது தொடர்ச்சியான சேர் அடிப்பு கொசுப்பான மூன்றாம்தர எழுத்து அநாகரீக வசைபாடல் பொறாமையும் வஞ்சகமும் பின்புலமாகக் கொண்டு பொய்யாக உருவாக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் இவைதான் தோழர் இராயாகன் “கட்டுரைகளாக எண்ணி “இதுவரை எழுதியவை. இவற்றின் உள்ளடக்கம் மாக்சியத்தின் எந்தப் புள்ளிகளையும் தொட்டதில்லை.

    தோழர் இராயாகரன் புகலிடத்திற்கு வந்து பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதுவரை தோழர் இராயாகரனினால் புகலிடத்தில் வென்றெடுக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்? எண்ணிப்பார்த்தால் தோழர் இராயாகரன் மாத்திரமே தனிமைப்பட்டு சோகமாய் தங்கியுள்ளார். ஏன் இவ்வாறு நடந்தேறுகிறது? சாதாரண மனிதர்களில் உருவாக்கப்படும் நட்புக்களைக்கூட தோழர் இராயாகரனினால் பேண முடியாமல் போனமைக்கான காரணங்கள் என்ன? சாதாரண மனிதர்களும் நட்புக்களிலிருந்தே சரியான மனிதர்களை தேர்தெடுப்பதும் அவர்களை எம் கொள்கை வழிப்பட்ட சிந்தனைக்கு வென்றெடுப்பதுமான வழிமுறை தோழர் இராயாகரனிடம் தோற்றுப்போனதன் காரணம் என்ன? எடுத்ததிற்கெல்லாம் சுயவிமர்சனம் என்ற ஆயுதத்தின் கோட்பாட்டு வல்லமை புரியாது “சுயவிமர்சனம் செய்” “சுயவிமர்சனம் செய்” என்று சதிராட்டம் ஆடுகின்ற தோழர் இராயாகரன் தன்னை தனக்குள்ளே ஒருதரம் சுயவிமாசனம் செய்து கொள்வதற்கூடாக எதிர்காலத்தில் “தோழர்” என்ற உண்மையான அர்த்தத்தை பெறமாட்டார என்ற நட்பாசை என்னிடம் எதிர்பார்ப்பாய் உள்ளது.

  24. அகதியின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. அகதிகள் இல்லாத தேசத்திற்காக
    அகதிகளை உருவாக்கும் அரசுக்கு எதிராக, அரசை ஆதரிக்கும் பயங்கரவாத நாடுகளுக்கு எதிராக, எந்த நாட்டையும் நிம்மதியாக இருக்கவிடாமல் செய்யும் முதளித்துவ, ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக எல்லோரும் அணி திரள வேண்டும்.
    – அகதி –

  25. வினவின் நீண்ட பதில்களை படித்து அசை போடுவதற்கே இரண்டு நாளகளாகிவிட்டன. 300 பின்னூட்டங்கள், ரயாகரனின் தொடர் பதிவுகள் என பலவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமையில் இவ்வளவு நீளம் என புரிந்து கொள்கிறேன். சிறப்பான பதில். இந்த நீண்ட விவாத்தில் பங்கு கொண்ட பல தோழர்கள் இந்த ப்திவுக்கு ஏன் ஒரு பின்னூட்டமும் இடவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.

  26. சொந்த தமிழ் சகோதரர்களை சதிகாரர்கள் என்று தூற்றும் நொந்தகுமாரன் ஒரு தமிழினத்துரோகி என்பதில் சந்தேகமேயில்லை. ரதியின் பாஷையில் சொன்னால் ஒரு இழிபிறப்பாளன். உடன்பிறப்புகளை சொந்த சகோதரர்களை கொன்று குவிப்பவர்கள் தான் புனிதமான விடுதலைப் போராளிகளாம். நொந்தகுமாரன் சொல்கிறார். நொந்தகுமாரனின் கூடப்பிறந்த சகோதரர்கள் அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    • தெக்கான்,

      //சொந்த தமிழ் சகோதரர்களை சதிகாரர்கள் என்று தூற்றும் நொந்தகுமாரன் ஒரு தமிழினத்துரோகி
      என்பதில் சந்தேகமேயில்லை.//

      நாட்டாமை தீர்ப்பு கொடுத்தாச்சு! அதில் ஒரு சந்தேகம்! நான் ஈழத்தமிழின துரோகியா? தமிழ்நாட்டு தமிழின துரோகியா?

      //சொந்த சகோதரர்களை கொன்று குவிப்பவர்கள் தான் புனிதமான விடுதலைப் போராளிகளாம். //

      விடுதலைப்புலிகள் மீது எனக்கு நிறைய விமர்சனம் உண்டு. ஆகையால், புலிகளை புனிதமான விடுதலைப் போராளிகள் என்று
      எங்குமே, எப்பொழுதுமே சொன்னது கிடையாது. இருந்தால், அதை உடனடியாக ஆதாரம் காட்ட வேண்டும் தெக்கான்.

      ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களுக்காக (!) கவலைப்பட்டு நொந்து கொள்கிற தெக்கான், இப்பொழுது என் சொந்த
      சகோதர்களையும் அன்போடு எச்சரிக்கிறார். தெக்கான் நீங்க ரெம்ப நல்லவரு!

      டிஸ்கி : உண்மையான அன்போடு, உங்க மன நலத்திற்கு சொல்றேன். கொஞ்ச காலத்துக்கு வினவு பக்கம்
      எட்டிப் பாக்காதீங்க!

  27. மா.சே கூறியுள்ளது போல, “அவரவர்களே மதிப்பீடு செய்யுமளவுக்கு அனைவருக்குமான விடையை ஆர்பாட்டமில்லாத, எளிமையான மொழியுடன், உதாரணங்களுடன் விளக்கியுள்ள இந்த படைப்பு எந்த ஒரு சூழ்நிலையை, முரண்பாட்டை, கருத்தை, வரலாறை, தருணத்தை மார்க்சிய வழியில் ஆய்வு செய்ய அருமையான” கையேடாக வினவின் இப்பதில் விளங்குகிறது. ஆம், ஒரு படைப்பிற்கான அழகோடும், மார்க்சிய விவாதத்திற்கே உரிய ஆழமும், செறிவும் உடையதாக விளங்குகிறது.

    தோழர் இராயகரனின் கண்ணோட்டம், அணுகுமுறை மீது நீங்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள், விமர்சனங்கள் மீது முழுமையாக உடன்படுகிறேன். ஆளும் வர்க்கப் பாசிசம், ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து உருவாகிற அமைப்புகளில் வெளிப்படும் பாசிசப் போக்குகள் குறித்தும், இவற்றிற்கிடையிலான வேறுபாடு குறித்தும், இவற்றை அணுகுவதில் நாம் கொண்டிருந்த, கொண்டிருக்கும் அணுகுமுறை குறித்தும் கூறியுள்ள கருத்துக்களில் எனக்கு முதலிலும் சரி, இப்பொழுதும் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், ஒரு விசயத்தை எல்லாத் தரப்பினருக்கும் நீங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள்.

    வினவு பலரும் கருதிக் கொண்டிருப்பதைப் போல ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தை மட்டுமே எடுத்தியம்பும் பதிவுத்தளம்(blog) மட்டுமே அல்ல, மாறாக அக்கண்ணோட்டத்தை விவாதிக்கவும், வரையறுக்குட்பட்ட அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் பல்வேறு கண்ணோட்டங்களை பகிரவும் உதவும் மன்றமும்(forum) ஆகும் என்பது. அதன் அடிப்படையில், ஒரு கண்காணிப்பாளனின் (ombudsman) பாத்திரத்தில் அல்லாமல், மற்ற வாசகர்களுக்கு இணையாகவே விவாதங்களில் பங்கெடுக்கும் தங்கள் நோக்கம், எல்லையை விளக்கியுள்ளீர்கள். இவ்வாறுதான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இது தவறு எனும் பட்சத்தில் விளக்க வேண்டுகிறேன்.

    குறிப்பிட்ட இந்த விவாதத்திலும் இதனையே தாங்கள் வழிமுறையாக கொண்டு செயல்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். “அந்த விவாதத்தில் பங்கேற்பதன் ஊடாகவே எமது கண்ணோட்டத்தை ரயாவுக்கும் பிறருக்கும் தெளிவுபடுத்தலாம் என்றே கருதியிருந்தோம். இந்த அணுகுமுறை தவறா என்பதையும் வினவை விமரிசனம் செய்பவர்கள் குறிப்பாகப் பேச வேண்டும்.”

    ம.க.இ.கவின் ஆதரவாளர்கள் என்ற முறையில் நமது அமைப்பின் அரசியலைப் பிரச்சாரம் செய்வது, அக்கண்ணோட்டத்தை பரவலாக கொண்டு செல்வது, அதன் சரியான தன்மையை நிறுவுவது என்ற அடிப்படையில் இந்த அணுகுமுறை குறித்தும், ரதியின் கட்டுரைகள் குறித்ததுமான மையமான கருத்தை சொல்ல வேண்டியிருக்கிறது.

    முதலாவதாக, ரதியின் கட்டுரைகளுக்கான அறிமுக உரையில், “இந்த நினைவுகள் நாம் எவ்வளவுதான் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஈழப் போராட்டத்தின் கடமைகளை செய்வதற்கு ஒரு சிறிய தூண்டுகோலாகாவாவது இருக்குமென்று நம்புகிறோம்.” எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். மேற்காணும் பதிலிலும், “விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கின்ற இந்த மேடையில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஈழத்தமிழ் மக்கள் தமது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அதன்வழியே எதிர்காலத்தையும் புரிந்து கொள்வதற்கான புதிய வெளிச்சங்கள் கிடைக்குமென நம்பினோம். குறிப்பாக ரதியின் தொடர் சிங்கள பாசிசத்தைப் பற்றியும் ஈழ அகதிகளின் அவல வாழ்க்கை பற்றியும் உயிருள்ளதொரு சித்திரத்தை தமிழக வாசகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்த்தோம்.” எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

    இன்று முகாம்களில் வதைபடும் மக்களின் துயரங்கள் குறித்தோ, இன்றைய சிங்கள அட்டூழியங்கள் குறித்தோ, இருண்டு கிடக்கும் ஈழ மக்கள் எதிர்காலம் குறித்தோ ரதி எழுதவில்லை. மாறாக, நிகழ்வுகளின் முக்கிய சக்தியாக புலிகள் இயங்கிய காலகட்டத்தின் நிகழ்வுகளைப் பற்றி எழுதவே முன்வந்துள்ளார். அவர் ரொமிலா தாப்பர் அல்ல என்பது சரிதான். ஆனால், அக் காலகட்டத்தின் துயரார்ந்த வரலாற்றில் புலிகளின் எதிர்மறைப் பங்கை பேசாமல் எழுதுவதன் இறுதிப் பயன் என்ன? அது எந்த வகையில் ஈழப் போராட்டத்தின் கடமைகளை செய்வதற்கு தூண்டுகோலாகாவும், ஈழத்தமிழ் மக்கள் தமது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அதன்வழியே எதிர்காலத்தையும் புரிந்து கொள்வதற்கான புதிய வெளிச்சங்களை உருவாக்கும்?

    //ஈழத்தில் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவதற்கான பொறுப்பில் எங்களை நாங்கள் நியமித்துக் கொள்ளவில்லை. அது அந்த நாட்டு மக்களும் தோழர்களும் தீர்மானிக்க வேண்டிய விசயம் என்று கூறி விலகி நிற்பதே பொறுப்புணர்ச்சி என்று நாங்கள் கருதுகிறோம்.//

    ஈழ மக்களுக்கு வழிகாட்டுவதற்கான பொறுப்பில் நாம் நம்மை நியமித்துக் கொள்ளவில்லை என்பது சரிதான். ஆனால், தமிழக மக்களுக்கு ஈழப் பிரச்சினையில் சரியான நிலையை எடுத்துரைப்பது நமது வேலைதான்.

    ஈழப் பிரச்சினையில் சிங்களப் பேரினவாதத்தின் கொடூர முகத்தை மட்டுமே பார்ப்பதும், புலிகளின் எதிர்மறைச் செயல்பாடுகளை காண மறுத்ததும், எடுத்துரைத்தாலும் அதற்கு செவிமடுக்க மறுப்பதும், அதன் மறுபுறமாக இந்திய அரசின் மேலாதிக்கத்தை ‘தந்திரமாக’ பயன்படுத்த விழைந்த ‘நடைமுறை சாத்தியமான புத்திசாலித்தனத்தனமும்’, தொப்புள் கொடி உறவு என்ற தவறான உணர்வின் குறுகிய எல்லையும், இன்னமும் தமிழகத்தின் அரசியல் பிரிவினரிடம் நிலவிக் கொண்டுதானிருக்கின்றன. புலி ஆதரவாளரான ரதியின் கட்டுரை மேற்கூறிய போக்குகளை விவாதிக்கவோ, மறுபரிசீலனைக்குட்படுத்தவோ பயன்படுமா? அப்படி இல்லை, அதனை விவாதத்தின் மூலமாக கட்டியமைக்கலாம் என்றால், அவ்வாறு காதைச் சுற்றி மூக்கைத் தொடுவதன் அவசியம் என்ன என்பதுதான் புரியவில்லை. மேலும், நாம் உடன்படுகிற, சிங்களப் பாசிசம் தோற்றுவித்த இன்னல்களை அக்காலகட்டத்தின் ரதி முன்வைக்கையில், அதன் மற்றொரு தவிர்க்கவியலாத அம்சத்தை விவாதிப்பதற்கான புள்ளிகள் எப்படி உருவாகும்?ரதி தாமாக வினவில் எழுத வந்திருந்தால் நிலைமை வேறு, நாமாக அவரை எழுதக் கோரும் பொழுதுதான் இந்தக் கேள்வி பிறக்கிறது.

    இவ்விவாதத்தில் பங்கேற்றதன் அடிப்படையிலும், பொதுத்தளத்தில் இவ்விவாதம் தொடர்வதன் அடிப்படையிலும் மையமான இக்கருத்தில் நான் உடன்படவில்லை என்பதை தெரிவிப்பது அவசியம் எனக் கருதுகிறேன். எனினும், கடந்த விவாத அனுபவத்தின் அடிப்படையில் இக்கேள்விக்கு, அவசியம் எனக் கருதும் பட்சத்தில், வினவு மட்டும் பதிலளித்தால் போதும் என ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

  28. தோழர்களுக்கு,

    வேலை நெருக்கடியின் காரணமாக கடந்த மூன்று நாட்களாக நான் இணையத்தின் பக்கம் வரமுடியவில்லை. இடைப்பட்ட காலத்தில் வெளிவந்திருக்கும் வினவு தோழர்களின் அருமையான இந்த நெடிய விளக்கத்தை, உடனடியாக, சுடச்சுட படிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

    தோழர் இரயாகரன், தான் ஏதோ ரதியின் பதிவுகளினூடாகத்தான் மாற்றுக்கருத்து கொண்டிருப்பதாக, மிக மிக மேலோட்டமாக மதிப்பிட்டதன் விளைவாகத்தான் வினவு தோழர்களின் அனுகுமுறை குறித்து நான் சில கருத்துக்களை இங்கு (முந்தைய பதிவில்) பதிந்திருந்தேன். இரயாகரனின் வரைமுறையற்ற விமர்சனப் போக்கு குறித்து வினவின் இப்பதிவினூடாகவே நான் அறிய முடிந்திருக்கிறது. இரயாகரன் குறித்த அரைகுறை புரிதலுடன் இங்கு ‘நடுநிலை’யான விவாதத்தைக் கோரியதற்கு வருந்துகிறேன். வினவின் கண்ணோட்டமும் இரயாகரனின் கண்ணோட்டமும் ஒரே தன்மையுடைய, ‘வறட்டுவாதம்’தான் என்ற என்னுடைய மதிப்பீட்டை நான் திரும்பப் பெறுகிறேன்.

    தோழர் இரயாகரனின் முழுமையான பரிசீலனையைக் கோரவேண்டிய அவசியத்தையும் கருதுகிறேன். இன்னும் அவர் நேர்மையானதொரு பரிசீலனைக்கு வந்ததாகத் தெரியவில்லை. ரதியை ஒரு பாசிஸ்ட் என்று வெளிப்படையாக சொல்லிவிட்டு, கடைசிவரை அதனை உண்மையாக்க அவர் சுற்றி வளைத்து பல்வேறு பதிவுகளைப் பதிந்து, தெளிவாக அவற்றை முன்வைக்க முடியாமல் தோற்ற அனுபவத்தைக் கொண்டு தனது தவறான மதிப்பீடுகளைப் பரிசீலிக்க வேண்டும். வினவின் மீதான மதிப்பீடுகளையும், ம.க.இ.க.வின் மீதான தனது மதிப்பீடுகளையும் நடைமுறையினூடாக பரிசீலிக்க வேண்டும், கற்பனையால் அல்ல.

    தோழர் இரயாகரனின் செயல்பாடுகளின் மீதான வினவின் அனுகுமுறை மிகவும் சரியானதே என்று கருதுகிறேன். முந்தைய பதிவினூடாக விவாதிக்க வந்திருந்த நபர்களில் பலர் பதிந்த வரம்புமீறிய கருத்துக்கள், இகழ்ந்து ஒதுக்கப்பட வேண்டியவையே. குறிப்பாக தெக்கான் போன்றவர்களின் நேர்மையற்ற விமர்சனங்கள், அவரது உள்நோக்கத்தையும், அவரது முகவரியையும் விரைவில் நமக்கு அறிவிக்க இருக்கின்றன.

    தொடர்ந்து விவாதிப்போம்.

    இத்தனை தெளிவான, செறிவான விமர்சன-விளக்கக் கட்டுரையைத் தந்தமைக்கு வினவு தோழர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தோழமையுடன்,
    ஏகலைவன்.

  29. மிகவும் ஆழ்ந்த தெளிவான விளக்கங்களுடன் கூடிய பதிவு. வினவின் இக்கருத்துகளை புரிதலோடு ஏற்றுக்கொள்கிறேன். என்னின் தவறான பின்னூட்டங்களுக்கு சுயவிமர்சனம் ஏற்று தவறிற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இக்கட்டுரை எனக்கு பலவற்றை கற்றுக்கொடுத்திருக்கிறது.
    தோழர்களுக்கு நன்றி.
    இருந்தபோதிலும்,
    ஈழத்தின் நினைவுகள் இனி தொடராது……….என்ற கட்டுரையில்,
    ‘புலிப்பாசிசத்தை பிரச்சாரம் செய்ய தளம் அமைத்துக் கொடுத்தோம்’ என்ற ‘வரலாற்றுப் பழி’யில் வீழ்வதிலிருந்து ரதி எங்களைக் காப்பாற்றிவிட்டார் என்றும் சொல்லலாம். இந்த அனுபவத்தை இரண்டு விதமாக தொகுத்துக் கூறலாம். “பாசிஸ்ட்டால் காப்பாற்றப்பட்ட கம்யூனிஸ்டுகள்” அல்லது “வறட்டுவாதத்தால் பாதுகாக்கப்பட்ட மார்க்சியம்!” என ஏன் வினவு கூறியது.

  30. மிகத் தெளிவான விளக்கம்! நன்றி.

    //இணையம் என்பது புதிய ஊடகம். ஒரு அமைப்பின் பத்திரிகை, பொதுக்கூட்ட மேடை, அவ்வமைப்பின் ஆதரவாளர்கள் நடத்தும் இணையதளம் ஆகியவை தத்தம் வரம்பிலும் வீச்சிலும் விளைவிலும் சாத்தியங்களிலும் வேறுபட்டவை என்றே கருதுகிறோம். விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கின்ற இந்த மேடையில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் …..
    :
    :
    நாங்கள் வாசகர்களை, அதாவது மக்களை நம்புகிறோம். பல்வேறு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்க ளினூடாக உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த ஊடகம் வழங்குவதால் அதன் சாத்தியத்தை பயன்படுத்த விழைகிறோம்.//

    உண்மையைப் பற்றிய தேடலுக்கும், வாசிப்பிற்கும் கால அவகாசமில்லாத நடுத்தர வர்க்க வாழ்க்கையில், மாற்றுக் கருத்துக்களைப் பேசவைக்கும் ஊடகங்களின் செல்வாக்கு நிலைத்து நிற்கும். எனவே நிச்சயம் பெருவாரியான மக்களைச் சென்றடைய வினவின் இப்புரிதல் உதவும். தோழர் இரயாகரனின் பதிவில் நல்ல முறையில் முன்வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்களைக்கூட அனுமதிப்பதில்லை என்பதே அவர் பல சமயங்களில் முன்வைக்கும் நேர்மையான கருத்துக்களுக்குக் கூடப் பாதகமாக அமைந்துள்ளது.

    நன்றி – சொ.சங்கரபாண்டி

  31. தன்னுடைய கருத்துடன் உடன்படாத எவரையும் பாஸிஸ்ட் என்றும் ஈழத்தவரானால் புலிப்பாஸிஸ்ட் என்றும் முத்திரை குத்துவது இரயாகரனின் வழமை.

    எனவே அவருடைய கருத்துடன் உடன்படாத ரதியையும் அவர் அவ்வாறு கூறியது ஆச்சரியப்படக் கூடியதல்ல.

    புலிகள் தாம் சொல்ல விரும்புபவற்றையே ஊடகங்களும் மக்களும் சொல்ல வேண்டும் என்று நினைத்ததற்கும் இரயா நினைப்பதற்கும் வேறுபாடேதுமில்லை.

    புலிகள் தேசியத்தின் பேரால் செய்தனர். இரயா மார்க்சியத்தின் பேரால் செய்கிறார் அவ்வளவு தான்.

    இதனை மார்க்சியம் என்று யாராவது நம்பினால் அது அவர்கள் தவறு.

    எவரையாவது படுகொலை செய்வதற்கு முன்னர் அவர்கள் பற்றிய சில அபிப்பிராயங்களைப் பரப்பி விடுவார்கள் புலிகள். உளவாளி… காட்டிக் கொடுப்பவர்…

    அதேபோல் இரயாவும் ஒருவரைத் தாக்குவது என்றால் பாஸிஸ்ட் என்று தொடங்கித் தாக்கிவிடுவார்.

    இரயாவின் தாக்குதலுக்குள்ளான பலரை எனக்குத் தெரியும். அவர்களுடைய கருத்துக்களுடன் விவாதிப்பதற்குப் பதில் முத்திரை குத்துவதிலேயே இரயா அதிக கவனம் செலுத்துவார். இது அவர்களுடைய கருத்துக்களுடன் விவாதிக்கும் சிரமத்தை அவருக்கு இல்லாமலாக்கி விடுகிறது.

    இரயாகரனின் மார்க்சியம் பற்றிய புரிதல் மிகுந்த வரட்டுத் தனமானது. அது ஒரு இயங்கியல் தத்துவம். அதனை யாரும் காப்பாற்றத் தேவையில்லை. ஆனால் ஆரம்பத்திலிருந்தே இரயா இவ்வாறு வரட்டுத்தனமாக எழுதும் போது ம.க.இ.க. அந்த வரட்டுவாதம் குறித்து விவாதம் நடாத்தாதது அதனைச் சுட்டிக்காட்டாதது தவறு என்றே நினைக்கிறேன். வினவு இவ்விடத்தில் அவரைக் கைவிட்டது அவரைக் கொதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

    ரதியின் எழுத்து தொடர்பாக வினவு முன்கூட்டியே ஒரு குறிப்பை எழுதியிருக்கிறது. இனி ரதி எழுதி முடிந்தபின்னர் அதனை விவாதிப்பது தான் சரியாக இருக்கும். அதற்கிடையில் ரதியை தாம் விரும்பியவாறு எழுத நிர்ப்பந்திப்பது எந்த மார்க்சிய அணுகுமுறை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறைந்த பட்ச ஜனநாயக அணுகுமுறை கூட அதுவல்ல.

    நாங்கள் எந்த இஸ்ட்டுக்களாக இருப்பினும் எமக்கு எதிரான ஒரு கருத்தை ஒருவர் சொல்வாராயின் முதலில் அதனைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். அது இல்லாதவிடத்து விவாதம் என்பது சாத்தியமற்றுப் போய்விடும்.

    உனது கருத்துக்கள் எவற்றுடனும் உடன்படவில்லையாயினும் அதை சொல்ல உனக்கிருக்கும் உரிமைக்காக எனது உயிரையும் கொடுப்பேன் என்றார் வோல்டர்.

    இங்கு துப்பாக்கி இல்லாமலே உயிரெடுக்கும் வித்தை இரயாவிற்குத் தெரிந்திருக்கிறது. புலிகளிடம் படித்திருப்பார் போலும்.

    ரதி எழுதிமுடித்த பிறகு அவருடைய எழுத்தில் உள்ள பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அவர் நிற்கும் தளத்தைப் புரிய வைப்பது தான் ஒருவரை வென்றெடுப்பதற்கான வழி.

    அதைவிடுத்து பாஸிஸ்ட் என்று முத்திரை குத்துவதல்ல.

    கருத்தை யார் சொல்கிறார்கள் என்பதல்ல? என்ன சொல்கிறார் என்பது தான் முக்கியம். ஆனால் இரயாவிடம் என்ன சொல்கிறார் என்பதை விட யார் சொல்கிறார் என்று பார்க்கும் ஒரு கோணல் பார்வையே இருக்கிறது. இது பல இடங்களில் அவர் தவறான முடிவெடுக்கக் காரணமாகி விடுகிறது.

    அண்மையில் காலச்சுவடுவில் வெளியான வன்னி நிலவரம் பற்றிய கட்டுரையை எழுதியவர் வன்னியில் இருப்பவர் அல்ல. காலச்சுவடு தான் என இரயா தன் மார்க்சிய அணுகுமுறையைப் பாவித்து (இரயாவின் மார்க்சிய அணுகுமுறை என்பது எனது அழுத்தம்) எழுதியிருந்தார்.

    இரயா அவ்வப்போது புலிகள் குறித்து எழுதி வந்ததை விட தெளிவாக அங்கு வாழ்ந்த ஒருவரால் அவர் பட்ட அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்டிருந்தது.

    இரயா பாஸிஸ்ட் பாஸிஸ்ட் என்று எழுதி புரிய வைக்க முயன்றதை விட இலகுவான மொழிநடையில் அவர் தன் அனுபவங்களைத ;தொகுத்து வாசகர்களுடன் பகிர்ந்திருந்தார்.

    ஆனால் இரயாவோ அதில் பட்டினங்கள் குடிசைகள் வீதிகள் காலனிகள் என்று வருகின்றது. இவை ஈழப்பாவனைச் சொற்கள் அல்ல என்றும், ஈழம் என்ற சொல்லை இலங்கையர்கள் பாவிப்பதில்லை என்றும் ஆகவே இது காலச்சுவடு தானாகவே புனைந்தது என்றும் தனது மார்க்சிய அணுகுமுறைய+டாக ஆய்ந்து எழுதியிருக்கிறார்.

    ஈழத்துக் கவிஞரான நிலாந்தனின் கவிதைத் தொகுப்பொன்றுக்குப் பெயரே மண்பட்டினங்கள்.

    சாதாரணமாக வீரகேசரி தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளில் ஈழப்போர் எனத் தான் பாவிக்கிறார்கள்.

    இரயாவுக்கு காலச்சுவடைத் திட்டுவதில் இருந்த அவசரம் அக்கறை ஈழத்தில் புலிகளால் தடை செய்யப்பட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப்புரட்சி அமைப்பு என்ற ஈழம் என்ற சொற்களைக் கொண்டு ஆரம்பிக்கும் இரண்டு இயக்கங்கள் இருந்ததையே மறக்கடித்து விட்டது.

    அது மட்டுமன்றி இரயா இருந்த 80களில் இருந்து இன்று 2000களில் மொழி எவ்வளவோ மாறி விட்டுள்ளது. இந்த மாற்றங்கள் எதனையும் இரயா கணக்கில் கொள்ளவில்லை.

    இந்த விமர்சனத்தின்(?) ஊடாக இரயா இலங்கையிலிருந்து வெளியேறிய எண்பதுகளுக்குப் பிறகு இலங்கையுடன் சேதனாப+ர்வமான உறவு எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதையும் விட அங்கிருந்து வரும் பத்திரிகைகள் குறித்துக் கூடப் பரிச்சயமற்றவராக இருந்து வருகிறார் என்பது தெளிவாகிறது.

    ஆக, இரயா இறுதி யுத்தத்தில் புலிகள் குறித்து செவி வழி அறிந்து முன்வைத்த முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அங்கு வாழ்ந்த ஒரு வர் தனது அனுபவங்களுடாக எழுதியதை மறுக்க முனைந்தது ஏன்?
    (அங்கு வாழ்ந்த ஒருவர் என நான் அழுத்திச் சொல்வதற்குக் காரணம் அக்கட்டுரையை எழுதிய நபரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர் அங்கு தான் வாழ்ந்தார். இன்னமும் வாழ்கிறார்.)

    இந்தக் கேள்விக்கு என்னால் கண்டடையக் கூடிய பதில் இரயாவின் தன்முனைப்புக் கொண்ட ‘தான் மட்டும் தான்” என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

    இதனை ஏன் நான் வலியுறுத்திக் கூறுகிறேன் என்றால் காலச்சுவடு குறித்த இரயாவின் விமர்சனக் கட்டுரையில் ‘இது சார்ந்த உண்மைகள் இந்த வருட ஆரம்பத்தில் நாம் மட்டும் தனித்துப் பேசியவை. இதைக்கடந்த எதையும் இந்தப் புனைவு புதிதாகக் கூறிவிடவில்லை.” ‘நாம் பேசியதைத் தாண்டி புதிதாக எதையும் இது புனையவில்லை” என்று அடிக்கடி வலியுறுத்திக் குறிப்பிடுகிறார்.
    மார்க்ஸிஸ்ட்டான இரயாகரனின் பிரச்சினை எல்லாம் தான் சொன்னதைத் தாண்டி யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பது தான். இவர் செவிவழி கேட்டு எழுதியதைவிட காலச்சுவடு கட்டுரை ரத்தமும் சதையுமாக அதைச் சொல்லிவிட்டது என்பது சொல்லி விட்டது என்பது அவரது ஆதங்கம்.
    ஆகவே காலச்சுவடையும் அவரது நீண்ட நாள் எதிரிகளான சேரனையும் சிவத்தம்பியையும் தாக்க வேண்டும் என்பது அவரது முன்முடிவு. (ஏற்கெனவே விமர்சிக்கப்பட வேண்டிய பல விடயங்கள் காலச்சுவடில் வெளிவந்த போதும் அவை பற்றி இரயா கண்டு கொள்ளவேயில்லை.)
    அந்த முன்முடிவிலிருந்து அவர்களைத் தாக்குதவற்கு அவர் எடுத்துக் கொண்ட ஆயுதம் தான் போலிக்கட்டுரை என்பது.
    இதை மார்க்சிய ஆய்வென்று நம்புவதற்கு ஈழத்தில் இன்னும் மடையர்கள் உருவாகவில்லை.
    இதைவிட சுவாரசியம் என்னவென்றால் ஒரு மார்க்ஸிஸ்ட்டினுடைய விருப்பு எதுவாக இருக்கும?; தான் விரும்புகின்ற அரசியல் இன்னும் பலராலும் பேசப்படவும் பேணப்படவும் எடுத்துச் செல்லப்படவும் வேண்டும் என்பது தானே. இங்கே பாருங்கள் இரயாகரன் சொல்கிறார் ‘இதில் புலி மற்றும் அரசுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு எம்முடையது. இதை இங்கு காலச்சுவடு புதிதாகச் சொல்வது வன்னி புனைவாளர் ஊடகாகச் சொல்ல முனைகின்றது.” என்கிறார்.
    இரயாகரன் கொண்டிருக்கிற அரசியல் நிலைப்பாட்டை காலச்சுவடு எடுத்துக் கொண்டு விட்டதாம். இதற்கு சந்தோசப்படத் தானே முடியும். நாம் சரியென்று நம்பும் அரசியல் நிலைப்பாட்டை நோக்கி தற்காலிகமாகவேனும் ஒருவர் வருவதை வரவேற்கத் தானே வேண்டும்.
    மறுபுற்த்தில் ஒரு அரசியல் நிலைப்பாடு என்பது எப்போது எப்படி தனியொருவருக்குச் சொந்தமானது. இது எத்தகைய மார்க்சியப் புரிதல்?
    உண்மையில் காலச்சுவடு கட்டுரைக்கு இரயா எழுதிய விமர்சனத்தின் ஊடாக தானே நிர்வாணமாகி நிற்பது தான் நடந்திருக்கிறது.
    ரதி தொடர்பான இரயாவின் விமர்சனத்தையும் வன்னியில் என்ன நடந்தது என்ற கட்டுரை தொடர்பான இரயாவின் விமர்சனத்தையும் எடுத்து நோக்கினால் இரயாவின் பலவீனம் என்ன என்பது தெளிவாகப் புரியும்?
    மன்னர்களுக்கு நல்ல செய்தி கொண்டு வரும் தூதர்களைத் தான் பிடிக்கும். துர்துவன் ஏதாவது கெட்ட செய்தி கொண்டு வந்து விட்டால் அவன் தலை போய்விடும். அது போல் இரயா இருப்பது அவருடைய பிரச்சினை. ஆனால் தூதர்களாக ரதியோ எவரோ இருக் கமுடியாதல்லவா?

    ரதியின் கட்டுரையில் எனக்கும் உடன்பாடில்லாத விடயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை எழுதும் உரிமை ரதிக்கு உண்டு. எழுதுங்கள் ரதி.

    இப்போதைக்கு அவ்வளவு தான்.

    யாதவன்.

  32. ரயாகரன் பலரால் அறியப்படட்டதற்கு புதியசனநாயகக்குழுவினரே காரணம்.
    பொல்லைக் கொடுக்கும்போதே தெரிந்திருக்கவேண்டும். விரிவாக எழுதத்தேவையில்லாத விவாதப்பொருள்!

  33. யாதவன் குறிப்பிட்ட பின்னர் காலச்சுவடில் வந்த அக்கட்டுரையை தேடி எடுத்துப் படித்தேன். அக்கட்டுரை தொடர்பாக எனக்கு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதேநேராம் ரயாகரன் அது தொடர்பாக எழுதிய கட்டுரையையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் அதற்கும் ரயாகரன் எழுதிய பதிலையும் படித்தேன்.

    யாதவன் சொல்வது போல அதில் எந்த மார்க்சிய அணுகுமுறையையும் என்னால் காண முடியவில்லை. வினவு போன்றவர்களும் ரயாகரனின் அந்த எழுத்தில் எவ்வகையான மார்க்சிய அணுகுமுறையையும் கண்டிருக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

    வினவுவிலிருந்து யாராவது இதனைத் தெளிவு படுத்த முடியுமா?

  34. //கடந்த விவாத அனுபவத்தின் அடிப்படையில் இக்கேள்விக்கு, அவசியம் எனக் கருதும் பட்சத்தில், வினவு மட்டும் பதிலளித்தால் போதும் என ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.
    //

    விவாத அனுபவம் என்ற விமர்சனத்தை நேரடியாக வைப்பது ஆரோக்கியமான ஒன்று.

    -வெரோனிக்கா

  35. தோழர் இரயாவும் ‘மற்ற’ தோழர்களும் தம்மை பரிசீலனைக்கு உட்படுதிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் பொருளின் அணுகுமுறை பற்றிய நெளிவு சுழிவுகளையும் மார்க்சிய ஒளியில் விளக்கிச் செல்லும் மிக சிறந்த கட்டுரை. கட்டுரையை இரு முறை வாசிப்பது தமக்குள்ளிருக்கும் தவறுகளை அனைவரும் உருவி வெளியிலெடுத்து போட பயன்படும்.

    • தோழர்களிடையே இன்னும் பரிசீலனை முழுமையாக‌‌ முடியவில்லை அல்லது விமர்சனங்களை முழுமையாக வெளியில் வைக்கவில்லை என்பது எனது கருத்து.

  36. தோழர் ரயாகரனுக்கு, வணக்கம். வினவின் பொருப்புணர்ச்சியைப் புரிந்து கொண்டு பதில் தருமாரு கேட்டுக்கொள்கிறேன். குருசாமிமயில்வாகனண்.

  37. அணைத்து தமிழக உறவுகளும் தயவு செய்து சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த உண்மை அனுபவத்தை வாசியுங்கள்.

    மே-17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர்.
    இதோ சிவரூபன் பேசுகிறார்:

    “”ஐ.நா.சபையேஇ வல்லரசுகளேஇ உலகின் தலைவர்களேஇ ஊடகத்துறையினரேஇ எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே!

    நான் எழுத்தாளனோஇ சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

    பசியின் வலியும்இ பிழிந்த தாகமும்இ பிரிவின் தவிப்பும்இ வெடிகுண்டுகளின் வெக்கையும்இ படு கொலைகளின் கொடூரமும்இ சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிடமாட்டார்கள்,அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

    இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டுஇ கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டுஇ பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல்இ தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாதஇ உடல் சோர்ந்துஇ உளம் நலிந்துஇ உணர்வு செத்துஇ நா வறண்டுஇ இதய நாடிகள் ஒடுங்கிஇ வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவுஇ குடிநீர்இ அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசைஇ மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

    இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

    அன்று வைகாசி 16. நள் ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

    வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில்இ தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்தஇ “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்கஇ மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

    “”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள்இ இந்திரா ரடார்இ செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும்இ ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்துஇ தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

    இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவாஇ கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

    பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண்இ பெண்இ பெரியோர்இ குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறுஇ கால் வேறுஇ உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

    பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில்இ வயிற்றில்இ காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

    வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

    எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவிஇ பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

    அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான்இ என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

    “”என் மனைவிஇ பிள்ளைஇ தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாகஇ உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

    “”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும்இ ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

    தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலைஇ கால்இ கைஇ உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

    கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகிஇ உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

    அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

    மல்ட்டிபேரல் (ஙமகபஒ இஆததஊக) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவ ளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதாஇ அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

    தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும்இ கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.

    கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு. குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய்இ தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின்இ நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும்இ விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம்இ “”தாய்இ தகப்பன்…” என்று ஆரம்பிக்கவேஇ “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

    பெற்றோரை இழந்துஇ இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும்இ சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

    மனதில் வெறுப்பும்இ நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.

    வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

    பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம்இ முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்கஇ போவோம் ஆமி வறான்இ எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.

    நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோஇ ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

    தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது. முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்றுஇ ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயாஇ ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய்இ நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

    எங்கும்பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால் கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத் தோடும்இ மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப் பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத் தது.

    வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத் தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங் கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடை யின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவு கள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும்இ கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

    ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும்இ அடித்தும்இ வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்க வில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச் சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந் தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகி லிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். “”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌர வமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவிஇ பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

    இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லைஇ தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன்இ “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன் னேன்இ “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன். “பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணு வக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

    இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட் டத்தினர் மீது கேவலச் சிரிப் புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலா மை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோதுஇ சில வயது போன வர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக் காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும்இ “பசிக்குதுஇ ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும்இ தண் ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந் தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

    வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக் குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காதஇ பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

    எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்றுஇ “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

    அந்த இடத்தில்இ அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

    உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால்இ அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில்இ வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

    எங்கு கொண்டுபோகிறார் களோஇ என்னவெல் லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (ஐஅஅபைசயவழைn) மற்றும் சுங்கம் (ஊரளவழஅள)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

    இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”இ “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”இ “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”இ “”எங்களுக்கு எல்லாம் தெரியும்இ பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்க��
    �்.

    பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதா��
    �் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1இ2இ3 (ழுpநசயவழைn ஊhநஉமஅயவந) என பெயரிட்டு நின்றபோது மண லாற்றுக் காட்டில் நிலை தடுமாறாதுஇ அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயி ரற்ற என் உடலோஇ சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக் கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய்இ புயல்காற்றாய் தான் இருப்பார்.

    சர்வதேசமேஇ ஐ.நா.சபையேஇ தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)
    நன்றி யாழ்.

  38. நீங்கள் விவாதம் என்று எதைக் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை
    சம்பவங்களை சரிபார்ப்பதா. யாரொருவரும் கூறவேண்டியதாக நான் கருதுவது
    ஈழச் சிக்கல் தேசிய இனப்பிரச்சனையாக பார்க்கிறீகளா?
    தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்களா? இல்லை ஒன்றுபட்ட இலங்கையில் சேர்ந்து வாழவேண்டும் என்கிறீர்களா?
    சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து போகக் கூடிய உரிமை பெற்றிருக்கிறார்களா, அதாவது அந்த மக்கள் மத்தியில் அது குறித்து வாக்கெடுப்பு நடத்த கோருகிறீகளா?
    இதில் ஏதோ ஒரு நிலையை எடுத்தப் பிறகு நீங்கள் மார்க்சிய அடிப்படையை ஏற்றுக்கொள்பவராக இருந்தால் எப்படி உங்கள் கருத்து மார்க்சியத்து உட்பட்டது என்பதை விளக்குங்கள்? 
    நீங்கள் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவோ அல்லது அறியாதவர்களாகவோ இருந்தால் உங்கள் ஞாயம் எப்படி பொதுவான ஞாயமாக இருக்கிறது என்று விளக்குங்கள்?
    இறுதியாக நீங்கள் விமர்சிக்கும் இயக்கமாகட்டும், நபராகட்டும் எப்படி இந்த கருத்துக்கு உட்படாதவராக எந்த வகையான கருத்துக்கு உட்பட்டவராக இருக்கிறார் என்பதை விளக்குங்கள் அல்லது அம்பலப்படுத்துங்கள்?
    விவாதிக்கிற இந்த தளம் ஆகட்டும் அதில் பங்கெடுக்கிற நபர்களாகட்டும் எந்த வரையரையும் இல்லாமல் இல்லை எந்த வரையரைக்கு உட்பட்டவர் உங்கள் கருத்து என்ன என்று முழுமையாக வெளிப்படுத்தாமல் விவாதத்தை துவக்கும் முறை நீங்கள் எப்பொழுதுமே ஆசிரியராக மேதையாக இருப்பதற்கே காட்டிக்கொள்வதற்கே விருப்பப்படுகிறீர்கள் என்று தான் பொருள்? அது குறித்து ஒரு வரையரையை தத்துவத்தை கற்பதிலோ அப்படிக் நெறிப்படுத்திக் கொள்வதிலோ விருப்பமில்லாதவராக இருக்கிறீகள் என்றுதான் தெரிகிறது. இது ஒரு அரஜாக வழிமுறைக்கு மட்டுமே வித்திடும். மற்றவர்கள் பாசிஸ்டுகளா இல்லையா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும் நீங்கள் பாசிஸ்டுகளாக மாறதிருக்க முயற்சி செய்யுங்கள். 

Leave a Reply to sakthivel பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க