privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை!

எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை!

-

vote-012“என் கவிதைக்கு எதிர்ப்பு என்று பெயர் வை” என்ற படாடோபமான தலைப்பின கீழ், சீமாட்டி லீனாவையும் அவருடைய கவுஜையையும் காப்பாற்ற, கருத்துரிமைக் காவலர் அ.மார்க்ஸ் தலைமையில் ஏப்ரல் 15 ஆம் தேதி ஒரு கூட்டம் நடந்தது.

போலீசால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட (இந்து மக்கள் கட்சிக்காரன் கொடுத்த்து) ஒரு புகார், சில இணைய தளங்களில் லீனாவின் எழுத்துக்கு எதிராகப் பரவிவரும் கலாச்சார அடிப்படைவாதம் – இதுதான் தமிழகத்தில் படைப்பாளிகளைச் சூழ்ந்து வரும் பேராபத்தாம். இதற்காக ஒரு கண்டனக் கூட்டம்.

சீமாட்டி லீனாவின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள் எழுத்தாளர் உலகில் ஏற்கெனவே பிரசித்தம் போலும்! பலரும் கழட்டிக் கொள்ளவே, விவகாரம் அ.மார்க்சின் மானப்பிரச்சினையாகி விட்டது. ஒண்ணரை கவிதை எழுதினவன், சரக்கடித்து விட்டு மூளையிலிருந்து கவிதை வெளியேறுவதற்காக காத்திருப்பவன், படைப்பாளிகளுடன் சரக்கைப் பகிர்ந்து கொண்டதனாலேயே படைப்பாளி ஆனவன்.. உள்ளிட்ட ஒரு லிஸ்டு தயாராகி விட்டது.

அதில் சில பேரைத் தொடர்பு கொண்டு “ஐயா இது நீங்க எழுதின கவிதைதானா” என்று கேட்டோம். அவர்களோ “எனக்குத் தெரியவே தெரியாது. இது மண்டபத்தில எவனோ செய்த சதி” என்று பதறினார்கள். இப்படி ‘அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும்’ பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், முக தாட்சண்யத்துக்கு அஞ்சி வந்து விட்டு, நாற்காலியில் உட்காரவும் முடியாமல், எழுந்திருக்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தவர்கள்.. என மொத்தம் 50 பேர் இருக்கும்.  மீதி 50 பேர் ம.க.இ.க தோழர்கள், ஆதரவாளர்கள்.

கம்யூனிசத்தையும், அதன் தலைவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இழிவுபடுத்தி லீனா எழுதியிருந்த கவுஜைக்கு விளக்கம் கேட்டு ம.க.இ.க தோழர்களும், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களும் அந்தக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்கள். பதில் கிடைக்கவில்லை. அல்லக்கைகளின் ஊளைச்சத்தமும், வசவுகளுமே பதிலாகக் கிடைத்தன. ஆவேசமாக அடிக்க வந்தார் சீமாட்டி லீனா.

இருந்த போதிலும் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதோ, கலகம் செய்வதோ அங்கு சென்ற தோழர்களின் நோக்கமாக இருக்கவில்லை. எழுப்ப வேண்டிய கேள்விகளை மட்டும் உரையாகவும், இறுதியில் முழக்கமாகவும் எழுப்பி விட்டு அமைதியாக அரங்கை விட்டு வெளியேறினார்கள் தோழர்கள்.

கூட்டத்தலைவர் அ.மார்க்சுக்கோ, அரங்கத்தின் நாற்காலிகள், ஜன்னல்களுக்கோ, மிக முக்கியமாக கவுஜாயினி லீனாவின் மேக்கப்புக்கோ எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. “கலாச்சார போலீசிடமிருந்து” படைப்பாளிகளைப் பாதுகாப்பதற்காக வரவழைக்கப்பட்டிருந்த காக்கிச் சட்டைப் போலீசுக்கு ‘படைப்புச் சுதந்திரத்தை’ காப்பாற்றத் தடியடி நடத்தும் வேலையும் இல்லாமல் போயிற்று. இது கதைச்சுருக்கம்.

தோழர்கள் அரங்கை விட்டு வெளியேறிய பின்பு, ம.க.இ.க காரர்கள் செய்ததிலேயே முட்டாள்தனமான காரியம் இதுதான்” என்று தோழர்களின் நடவடிக்கை பற்றிக் கருத்துரைத்தார் அ.மார்க்ஸ்.

அதென்னவோ உண்மைதான்.தோழர்களை அடிப்பதற்கு ஓங்கின லீனாவின் கையை அங்கேயே முறிக்காமல் வந்தது முட்டாள்தனம்” என்றுதான் அரங்கை விட்டு வெளியே வந்த பெண் தோழர்கள் குமுறினார்கள்.

என்ன செய்வது சீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தில் கூட இப்படித்தான் நடந்தது. கருவறையில் நுழைந்த தோழர்கள் பட்டாச்சாரிகளையும் கைத்தடிகளையும் நாலு தட்டு தட்டி உருட்டி விட்டார்கள். எவனாவது செத்துத் தொலைஞ்சால் அப்புறம் கருவறைப் பிரச்சினை கல்லறைப் பிரச்சினை ஆகி, காரியம் கெட்டு விடும் என்பதால், “அடி வாங்கினாலும் பரவாயில்லை. திருப்பி அடிக்க வேண்டாம்” என்று தோழர்கள் நிறுத்திக் கொண்டார்கள். அப்புறம்தான் பாப்பான்கள் தம் “வீரத்தை” காட்டினார்கள்.

அங்கே பாப்பான்கள் காட்டிய வீரத்துக்கும் இங்கே படைப்பாளிகள் காட்டிய வீரத்துக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ரெண்டும் ஒண்ணுதான்.

இருந்த போதிலும், அரங்கத்தில் ஊளையிட்ட அல்லக்கைகளும் தோழர்கள் வெளியேறிய பின்னர் மேடையில் வீரவசனம் பேசியவர்களும் வேறுவிதமாக நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவசரப் படாதீர்கள். அடுத்த கூட்டத்தில் சந்திக்காமலா போய்விடுவோம்?

இனி அ.மார்க்சிடம் வருவோம். “ம.க.இ.க வினர் முட்டாள்கள்” என்ற சான்றிதழை வழங்கியதற்காக அ.மார்க்சுக்குப் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம்.

மாவோயிஸ்டுகள் தேசத்துரோகிகள் என்கிறார் ப.சிதம்பரம். இதைவிட கவுரவமான சான்றிதழை மாவோயிஸ்டுகளுக்கு யாரேனும் தர இயலுமா? ஒருவேளை சிதம்பரம் மாதிரியான நபர்கள் மாவோயிஸ்டுகளை “தேசபக்தர்கள்” என்று சொல்லியிருந்தால் எவ்வளவு மானக்கேடாக இருந்திருக்கும் – யோசித்துப் பாருங்கள்!

“மார்க்சியமே முட்டாள்தனமான சித்தாந்தம்” என்பதுதான் அறிஞர் அ.மார்க்சின் கருத்து. எனவே முட்டாள்கள்களாகிய நாங்கள் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுவதில் வியப்பில்லைதானே!

இனி, முட்டாள்கள் அறிவாளிகளை எதிர்கொண்ட முறை பற்றியும் அறிவாளிகளின் நடத்தை பற்றியும் பார்ப்போம்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே கூடியிருந்தவர்களிடம் துண்டறிக்கையை விநியோகித்திருந்தார்கள் தோழர்கள். இந்து மக்கள் கட்சியை எதிர்த்து நடத்தப்படுவதாக கூறப்படும் இந்தக் கூட்டம், உண்மையில் ம.க.இ.க வை எதிர்த்து நடத்தப்படுவதுதான் என்பதை அந்த துண்டறிக்கையில் கூறியிருந்தோம். அதன் அடிப்படையில் கூட்டத்தினருக்கும் பேச்சாளர்களுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தோம்.

அ.மா பேசத் தொடங்கினார். “கருத்துரிமை, படைப்பு சுதந்திரம் இந்து மக்கள் கட்சி” என்று சுற்றி வந்தாரே தவிர இந்தக் கூட்டம் ம.க.இ.க வைக் குறி வைத்தே நடத்தப்படுகிறது என்பதை மழுப்பினார், மறைத்தார்.

இ.ம.கட்சி, ம.க.இ.க, வினவு தளம் ஆகியோரை இணைத்து லீனா ஏற்கெனவே எழுதியிருந்ததார். இதையே குமுதம் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார். போலிக் கம்யூனிஸ்டு ச.தமிழ்ச்செல்வனும் தனது அறிக்கையில் பெயர் சொல்லாமல் ம.க.இ.கவை தாக்கியிருந்தார். கூட்டம் பற்றித் தொலைபேசியில் விசாரித்தவர்களிடம் வினவு தளத்தை எதிர்த்தும்தான் கூட்டம் நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்திருக்கிறார் அ.மார்க்ஸ். ஆனால் அந்த உண்மையை அவர் கூட்டத்தில் பேசவில்லை.

மார்க்ஸ் பேசி முடித்தவுடன் ஒரு தோழர் இந்தக் கேள்வியை எழுப்பினார். ஊளைச் சத்தம்தான் பதிலாக வந்த்து. யாரைக் கண்டித்து கூட்டம் நடத்துகிறோம் என்று சொல்லக்கூடத் துணிவில்லாத கோழைகள் எதுக்குடா கூட்டம் நடத்துறீங்க?” என்று உரைப்பது மாதிரி இன்னொருவர் கேட்டார். பிறகு அல்லக்கைகள் தலைவர் நாற்காலியை சூழ்ந்து கொண்டார்கள்.

கூட்டம் தொடர்ந்தது. அடுத்து ராஜன் குறை பேசினார். உலகளவில் வளர்ந்து வரும் முதலீட்டியம்தான் இப்படிப்பட்ட தடை கோரும் போக்குக்கு காரணம் என்று ஒரு தத்துவத்தை உதிர்த்தார். சீமாட்டி லீனா இப்போது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி ஆகிவிட்டார். அவருடைய கவுஜையில் உதிர்ந்த மயிர் உலக முதலீட்டியத்தையே ஒரு ஆட்டு ஆட்டியிருக்கிறதென்றால் சும்மாவா?

அப்புறம் “திராவிட இயக்கம் புராணங்களை எதிர்த்தது. ஆனால் புராணப்படங்களுக்கு தடை கோரவில்லை. சும்மா வுட்டுட்டா அது தானா செத்து போயிடும்” என்றார். இப்போது அவரது கூற்றுப் படி சீமாட்டியின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கவிதை புராணக்குப்பையாகி விட்டது. ஒரே நேரத்தில் ஒரே கவிதையை ஒரே வாசகன் எப்படி பன்முக வாசிப்புக்கு உள்ளாக்க முடியும் என்பதற்கு ராஜன் குறையின் உரை ஒரு எடுத்துக்காட்டு. இந்த தெளிவுரைக்குப் பிறகு மீண்டும் கேள்வி எழுப்பினார்கள் தோழர்கள்.

“இப்ப லீனாவின் கவிதைக்கு நாங்கள் தடை விதிக்க சொன்னோமா?” “நாங்க கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்” என்றார்கள். “25 பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அப்புறம் 26 அவதாக உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன்” என்றார் அ.மார்க்ஸ். நாங்கள் எங்கள் கேள்வியை கேட்டு விடுகிறோம். அப்புறம் 25 பேரும் விளக்கம் சொல்லட்டும் என்றார்கள் தோழர்கள்.

மீண்டும் அல்லக்கைகளின் கூச்சல். குழப்பம். பிறகு வேறு வழியில்லாமல் தோழர் கணேசனைப் பேச அனுமதித்தார்கள். கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது” என்றார்.

உடனே சீறியெழுந்த சீமாட்டி லீனா, தோழர் கணேசனை அடிப்பதற்கு கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்த பெண் தோழர்கள் சீமாட்டிக்கு உரிய மொழியில் பதில் அளிக்க, கையில் செருப்பை எடுத்தனர். படைப்பாளிகள் என்ற பெயரில் அழைத்து வரப்பட்டிருந்த சில லும்பன்கள் வசவு மாரி பொழிந்தனர். லீனாவின் கணவர் ஜெரால்டு ஆத்திரமாக ஏதோ கத்திக் கொண்டிருந்தார். “உங்க மனைவி லீனா எது வேணா எழுதுவாங்க. அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா விளக்கம் சொல்லக்கூட மாட்டாங்களா?” என்று ஜெரால்டைக் கேட்டார் ஒரு தோழர். ஏண்டா, தொழிலாளிய கை நீட்டி அடிப்பீங்க. கேட்டா படைப்பாளி உரிமையா? இங்கயே உரிச்சு தொங்க விட்றுவோம்” என்றார் இன்னொரு தோழர்.

கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது நோக்கமல்ல என்பதால், ஒரு சிலரைத் தவிர மற்ற தோழர்கள் யாரும் இதில் தலையிடக் கூடாது என்று நிறுத்தப்பட்டிருந்தனர். அடிப்பதற்கு வந்த லீனாவின் கை தோழர் கணேசன் மீது பட்டிருந்தால், கணக்கு அங்கேயே முடிக்கப் பட்டிருக்கும். அவ்வாறு நடக்காமல் சில தோழர்களே தடுத்து விட்டதால், சீமாட்டியும் அல்லக்கைகளும் பிறகு வீர வசனம்  பேசும் வாய்ப்பு பெற்றனர்.

அனுபவத்தை சொல் என்று கேட்டவுடனே அம்மையாருக்கு ஏன் ஆத்திரம் வருகிறது? அனுபவம்னா எந்த அனுபவம்னு அம்மா புரிஞ்சிகிட்டாங்க? அனுபவம்கிறது கெட்ட வார்த்தையா? நல்ல வார்த்தை கெட்ட வார்த்தையெல்லாம் கலக எழுத்துல உண்டா? அனுபவத்தை சொல் என்றுதானே கேட்டார். உலகின் அழகிய முதல் பெண்ணின் மூஞ்சியில் ஆசிட்டா ஊற்றினார். ஏன் துடிக்கவேண்டும்?

உண்டுன்னா உண்டுன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. எதுக்கு தமிழ் சினிமா கற்புக்கரசி மாதிரி சாமி ஆடுறே?

பெரியார் தெரியுமா? அவர் நாகப்பட்டினத்துல மாநாடு போட்ட போது, காங்கிரசு காலிகள் ஊர் பூரா “நாகம்மை தேவிடியா” ன்னு சுவத்தில எழுதினானுங்க. தி.க தொண்டர்கள் ஆத்திரத்தில் கொதிச்ச போது பெரியார் அலட்சியமாகச் சொன்னாராம் “நாகம்மை பத்தினி என்று சொன்னால் மகிழ்ச்சி அடைபவனாக நான் இருந்தால் அல்லவா, அவள் தேவடியாள் என்று சொன்னால் கோவப் படுவதற்கு?” என்று.

பெரியாரால் அப்படி சொல்ல முடிந்த்தற்கு ஒரே காரணம் – அவர் ஒரிஜினல். அது உண்மையான உணர்வு. உண்மையான முகம். சீமாட்டி கொதிக்கிறதுக்கு காரணம் – இது பேசியல் பண்ணி, ஐ ப்ரோ வுக்கு கோடு இழுத்த அம்மன். பியூட்டி பார்லர் புர்ரச்சி.

நீ “யோனிமயிரு -உபரி மதிப்பு”ன்னு எழுதினா அது கருத்துரிமை. “அனுபவத்தை சொல்லு”ன்னு கேக்குறவனுக்கு மட்டும் கருத்துரிமை கிடையாதா? அந்த உரிமை படைப்பாளிக்கு மட்டும்தான் உண்டா? எந்த ‘பார்’ல படைப்பாளிக்கு அடையாள அட்டை கொடுக்கிறீங்க?

கம்யூனிஸ்டெல்லாம் பொறுக்கின்னு நீ எழுதினா அது கவித்துவ வெளிப்பாடு. கம்யூனிஸ்டுக்கும் ஜிகாதிக்கும் ஒரே கொள்கை ஆண்குறின்னு எழுதினா அது மார்க்சியம் குறித்த அரசியல் விமரிசனம். உன் அனுபவம் என்ன ன்னு கேட்டா அது தனிநபர் தாக்குதலா?

கம்யூனிசம்தான் சமூக விடுதலைக்குத் தீர்வு என்று ஏற்றுக் கொண்டு அந்தக் கொள்கைக்காகப் போராடுபவர்களுக்கு, சொந்த வாழ்க்கையில் அந்தக் கொள்கையைப் பற்றி ஒழுகுபவர்களுக்கு பொலிடிக்கல் வேறு பெர்சனல் வேறு கிடையாது. பொலிடிக்கல்தான் பெர்சனல்.

பெண் அடிமைத்தனத்துக்கான காரணத்தை ஆய்ந்து விடுதலைக்கு வழியும் சொன்ன தத்துவத்தின் மீதும், அதனை நிரூபித்துக் காட்டிய மனித குலத்தின் மாபெரும் புரட்சிகளின் மீதும், அதற்காகத் தம் உயிரையும் வாழ்க்கையையும் ஈந்த மாமனிதர்களின் மீதும் ஒரு சொறிநாய் ஒன்னுக்கு அடித்து விட்டுப் போனால் அதைப் படைப்புரிமை என்று அங்கீகரிக்க வேண்டுமா?

ஏகாதிபத்திய எச்சில் காசுக்காக என்.ஜி.ஓக்களிடம் கையேந்தி, பெண் விடுதலைப் போராளிகள் பாரதிராஜாவிடமும் சேரனிடமும் பல்லிளித்து, அவர்களுடைய பாராட்டுக்கு புல்லரித்து, கையில் புரோஃபைலை வைத்துக் கொண்டு தன்னைத் தானே மார்க்கெட்டிங் செய்து கொண்டு, இன்னும் பெண்ணினத்தின் சுயமரியாதைக்கு இழிவு சேர்க்கும் எல்லா விதமான காரியங்களையும் செய்து வயிறு வளர்க்கும் ஜந்துவிடம் “உன் அனுபவத்தை சொல்” என்று கேட்டாலே அதற்கு கோபம் பொத்துக் கொண்டு வருமாம். ஏனென்றால் படைப்பாளி ஜந்துக்களின் பெர்சனல் வாழ்க்கை ரொம்ப புனிதமானதாம்.

வியர்வை வழிய உழைத்து சம்பாதித்து, பல்லிளிக்காமல், எவனிடமும் ஃபண்டுக்கு கையேந்தி நிற்காமல், எவனுக்கும் முதுகு சொரியாமல், கணவனின் ஆணாதிக்கம் முதல் சமூகத்தின் ஆணாதிக்கம் வரை அனைத்துக்கும் எதிராகப் போராடி, போலீசு முதல் சிறை வரையில் அனைத்தையும் எதிர்கொண்டு வாழும் பெண்களுக்குக் கோபம் வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை சீமாட்டிக்கு வழங்காமல், அந்தப் பெண்களின் கையிலிருந்து செருப்பை பிடுங்கி விட்டோம். பிறிதொரு முறை கட்டாயம் அந்த வாய்ப்பை வழங்குகிறோம். இப்போது விசயத்துக்கு வருவோம்.

தம் மீது தொடுக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல்களை அன்றாடம் எதிர்கொண்டுதான் கம்யூனிஸ்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம், உறவுகள், நண்பர்கள், அதிகாரிகள் முதல் போலீசுக்காரன் வரை யாரிடம் படும் அடியையும் வசவையும் தனிப்பட்டதாக கம்யூனிஸ்டுகள் எடுத்துக் கொள்வதில்லை. சாமியாடுவதும் இல்லை. தங்களுடைய பொதுவாழ்க்கையின் மீதும், அதனை வழிநடத்தும் கொள்கையின் மீதும், சமூகத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்படும்போதுதான் அவர்கள் கோபம் கொள்கிறார்கள்.

அற்பர்களுக்கோ அவர்களை குண்டூசியால் லேசாக குத்தினால் போதும். உடனே “ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று வீறு கொண்டு கிளம்புகிறார்கள். இதுக்குப் பேரு படைப்பாளியின் உரிமையாம். தெரியாமத்தான் கேக்குறோம். படைப்பாளின்னா என்னா கோயில் மாடா? உழைக்காம ஊர் மேஞ்சிட்டு, தனது படைப்பாக சாணி போட்டுக் கொண்டே போனால், அதை கண்ணுல தொட்டு ஒத்திகிட்டு வாசகர்கள் பின்னாலயே வரணுமா?

“உன்னுடைய கவிதைக்கு நீயே விளக்கம் சொல்” என்றுதான் ம.க.இ.க தோழர்கள் கேட்டார்கள். படைப்பின் உக்கிரமான  மனோநிலையில் வெளிப்பட்ட சாணிக்கு பொருள் விளக்கம் கூறுமாறு கோயில் மாட்டிடம் எப்படி கேட்க முடியாதோ, அதே போல படைப்பாளியிடமும் பிரதிக்கு விளக்கம் கேட்க முடியாது என்பது படைப்பாளிகளின் கொள்கை.

வினவு தளத்தில் சில மாதங்களுக்கு முன் லீனாவின் கவிதை பற்றிய விமரிசனம் வெளியான பின்பு ஒருநாள், நடு ராத்திரி 12 மணிக்கு முழு போதையில் வினவக்கு போன் செய்து “உனக்கு கவிதை தெரியுமா?” என்று கேட்டார் செல்மா பிரியதர்சன். அடுத்தது ஷோபா சக்தி. “சரி படைப்பாளிகளே, அட்ரஸை சொல்லுங்கள். நேரில் வருகிறோம்” என்றோம். உடனே அவர்களுடைய போதை தெளிந்து போனை வைத்து விட்டனர்.

நான் என்ன வேணும்னாலும் எழுதுவேன். எழுதினதுக்கு விளக்கமும் சொல்லமாட்டேன் என்பதுதான் லீனாவின் கொள்கை. அங்கே கண்டனக் கூட்டம் நடத்திய படைப்பாளிகளின் கொள்கையும் அதுதான். இப்படி பேசுபவன் படைப்பாளியா, பாசிஸ்டா? அப்படியானால் ஒரு வாசகன் அவன் புரிந்து கொண்ட முறையில் உன் கவிதைக்கு எதிர்வினை புரிவதை தவிர்க்க இயலாது. அது அவனுடைய உரிமை.

அப்படி எதிர்வினை ஆற்றக் கூடாதாம். எழுத்தை எழுத்தால்தான் சந்திக்க வேண்டுமாம். வினவு தளத்தில் அதைத்தான் செய்தோம். ஆனால் அது வக்கிரமாம், தனிநபர் தாக்குதலாம், கலாச்சார அடிப்படை வாதமாம், கலாச்சார போலீசு வேலையாம். இதை எதிர்த்து கேஸ் போடுவேனென்றும் லீனா மிரட்டினார். கேஸ் போடுறதுக்கு முன்னாடி இந்தக் கண்டனக் கூட்டம்.

சரி, என்ன தனிநபர் தாக்குதல் என்று சொல். பதிலளிக்கிறோம் என்று துண்டறிக்கையில் கேட்டோம். அதற்கும் பதில் கிடையாது. அப்போ என்னதான் செய்ய வேண்டும்? அம்மாவும் படைப்புலக ஆதீனங்களும் சொல்கிறபடியும் அவர்கள் மெச்சும்படியும் விமரிசனம் எழுத வேண்டுமா? பார்ப்பனியம் முழு அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஒரு பார்ப்பான் கூட இப்படிப் பேசியிருப்பானா தெரியவில்லையே!

கருத்தை கருத்தால் சந்திக்கணுமாம். தோழர் கணேசன் மேடையிலிருந்து அரிவாளையா காட்டினார்? “உன் அனுபவத்தை சொல்” என்று கருத்துதானே கூறினார். அம்மா எதுக்கு கையை ஒங்கினாங்க? அவுக கையத் தூக்கினாலும் படைப்பு. காலைத் தூக்கினாலும் படைப்பு. நாங்க வாயைத் தொறந்தால் கூட அது வன்முறையா?

செங்கடல் படப்பிடிப்பிலும் இதுதானே நடந்தது? தொழிலாளி தீபக்கை அடிக்க ஓங்கிய கை தானே இது? புட்டேஜைப் பத்தி எனக்குத் தெரியாது ன்னு தீபக் கருத்து சொன்னா, மறுநாள் உக்காந்து கவிதை எழுது. இல்லைன்னா போலீசுக்கு புகார் எழுது. பாசிஸ்டு இந்து மக்கள் கட்சிக்காரன் கூட புகார் தானே கொடுத்தான்.

சோபாசக்தியும் லீனாவும் செஞ்ச வேலை என்ன? டக்ளஸ் தேவானந்தாவின் காசு முதல் என்.ஜி.ஓ காசு வரை வகைவகையான எச்சில் காசுகளைத் தின்று வளர்ந்த கொழுப்புதானே, அவர்களை தீபக்கிற்கு எதிராக கை நீட்ட வைத்தது? அதே கை தானே ம.க.இ.க தோழருக்கு எதிராகவும் நீண்டது?

கம்யூனிஸ்டுக்கு எதிராக எழுதிய அந்தக் கையால், தலித் பெண்களுடைய யோனிகளைக் குதறும் தேவர் குறி, வன்னியர் குறி, கவுண்டர் குறிகளைப் பற்றி எழுது பார்ப்போம். கடைசி வரியில் “தேவன்மார் வாயில் மயிறைப் பிடுங்கிப் போட்டு” கட்டவிழ்ப்பு செய்து காட்டு பார்ப்போம்.

முன்வரிசையில் வந்து அமர்ந்த எங்கள் பெண் தோழர்களைக் கண்டவுடன் விளிம்புநிலைப் புரட்சித் தளபதிகளுக்கு எப்படி வியர்த்த்து என்பதைத்தான் பார்த்தோமே. படைப்பாளின்னா என்னா பெரிய வெங்காயமா? இவுக எழுதுவாகளாம். கேட்டா விளக்கம் சொல்ல மாட்டாங்களாம். அடேங்கப்பா, என்னா வீரம்டா!

இந்து மக்கள் கட்சிக்காரன் கொடுத்த புகாரையே எடுத்துக்குவோம். ஒருவேளை போலீசு கிரிமினல் வழக்கு போடுவதாக வைத்துக் கொள்வோம். படைப்பாளி அம்மா கோர்ட்டில என்ன சொல்வாக?

படைப்புக்கெல்லாம் படைப்பாளி விளக்கம் சொல்ல முடியாதுன்னு நீதிபதிய அடிக்க கை  ஓங்குவாகளா? பெரிய வக்கீலாக வைச்சு, “அந்த வரிக்கு அப்பிடி அர்த்தமில்ல, இந்த வரிக்கு இப்படி அர்த்தம் இல்ல”ன்னு விளக்கம் சொல்லி வாதாடுவாக. இல்லன்னா உள்ளே போகணுமே. அந்த பயம்.

அதாவது யோக்கியமான முறையில் கேட்டால் திமிர்த்தனம் பண்ணுவது. அடி விழும் என்று தெரிந்தால் பம்முவது. இப்படி ஆளுகளுக்குப் பேரு படைப்பாளி இல்லை -மேட்டுக்குடி லும்பன். அந்த அரங்கத்தில் ஊளையிட்டுக் கொண்டிருந்ததெல்லாம் இத்தகைய லும்பன் கும்பல்தான்.

ஐந்திலக்க சம்பளத்துக்காக பத்திரிகை முதலாளியிடம் எழுத்துரிமை, கருத்துரிமை, சுயமரியாதை உள்ளிட்ட அனைத்தையும் அடமானம் வைத்த ஊடகத்துக் காரர்கள், பதவிக்காக அதிகாரத்திடம் தலை சொரியும் பேராசிரியர்கள், உள்ளிட்ட பலர் மேடையில் பொளந்து கட்டினார்கள்.

சினிமாவில் சிரிப்பாய் சிரித்த சீனுக்கெல்லாம் சிங்காரம் பண்ணுவதற்கு, முக்கி முனகி வார்த்தை முத்தெடுக்கும் கவிஞர்களில் சிலர், “மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா” என்று ஆர்மோனியப் பெட்டிக்கு எதிராகப்  போர்க்கொடி தூக்குவதில்லையா, அந்த மாதிரி காமெடி இது.

பணம், அதிகாரம், உதை இந்த மூன்றைத் தவிர வேறு எதற்கும், எப்பேர்ப்பட்ட உன்னதமான கொள்கைக்கும் இலட்சியத்துக்கும் இவர்களுடைய படைப்பிலக்கியம் பணியாதாம். நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் -தான்.

இப்படிப்பட்ட அடக்கமுடியாத ஜல்லிக்கட்டு காளைகளை ம.க.இ.க வுக்கு எதிராக அணிவகுத்து நிற்க வைக்கும் தனது நோக்கத்துக்காக, லீனா மணிமேகலை அ.மார்க்சை பயன்படுத்திக் கொண்டாரா, அல்லது அ.மார்க்ஸ் லீனா மணிமேகலையைப் பயன்படுத்திக் கொண்டாரா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த 54 நாயன்மார்ளைத் திரட்டுவதற்கே ரொம்பவும் கஷ்டப்பட்டு ராப்பகலாக உழைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

ஹோல்சேலாக படைப்பாளிகள் கிடைக்குமிடம் போலி கம்யூனிஸ்டு கட்சிகள்தான் என்பதால், அங்கே தீவிர கவனம் செலுத்தியிருக்கிறார்கள். தீக்கதிரில் இந்தக் கூட்டத்துக்கு விளம்பரம் வெளிவந்தது. த,மு.எ.க.ச வின் கண்டன அறிக்கையும் வெளிவந்தது. தாமரையில் சீமாட்டியின் கவிதை வெளிவந்தது.  ஆனால் தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, தேவ பேரின்பன் போன்ற முக்கியப் புள்ளிகள் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை. அலப்பறைக்குத் தேவைப்படும் அல்லக்கைகளை மட்டும் சப்ளை செய்திருந்தார்கள்.

அ.மார்க்ஸ் லீனா கூட்டணி வகுத்திருந்த இந்த ம.க.இ.க எதிர்ப்பு போர்த்தந்திரத் திட்டத்தின் முக்கியமான கூறுகள் இரண்டு.

முதலாவதாக, “ம.க.இ.க வை எதிர்ப்பதுதான் உண்மையான நோக்கம் என்பது பச்சையாக வெளியே தெரிந்தால் படைப்பாளிகள் தயங்கக் கூடும் என்பதால், காமோஃபிளேஜ் ஆக இந்து மக்கள் கட்சி என்ற டுபாக்கூர் கட்சியை முன்நிறுத்தி, கூட்டம் சேர்ப்பது.

இரண்டாவதாக ம.க.இ.க வை ஒழித்துக் கட்ட வேண்டிய பகைவர்களாக கருதும் மார்க்சிஸ்டுகளை இந்த “சுதந்திரப் போராட்டத்தின்” காலாட்படையாக வளைத்துப் போடுவது.

மார்க்சிஸ்டு கட்சி அ.மார்க்சுக்கு தாய்க்கழகம். லீனாவோ கம்யூனிஸ்டு பாரம்பரியம் என்பதால் ரெண்டுமே அவருக்கு குடும்பக் கட்சி. அப்புறம் என்ன?

அ.மார்க்ஸ், மார்க்சிஸ்டு கட்சியிலிருந்து கிளம்பி, மக்கள் யுத்தக் குழு, டாக்டர் ஐயா, பின் நவீனத்துவம், தலித் அரசியல், இஸ்லாம், மனித உரிமை… என்று வனமெல்லாம் சுத்தி வந்து கடைசியாக இனத்துல அடைஞ்சு விட்டாரா அல்லது மார்க்சிஸ்டுகள் அ-மார்க்சிஸ்டுகளாகி இவருடன் இணைந்து விட்டனரா என்பதை நம்மால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. எனவே இந்தக் கூட்டணியின் ரசவாதம் இப்போதைக்கு தெரியவில்லை.

எப்படிப் பார்த்தாலும் இது பெரிய ராஜதந்திரம்தான். ம.க.இ.க தோழர்கள் அன்றைக்கு அரங்கை விட்டு வெளியேறும்போது, “ம.க.இ.க பாசிசம் ஒழிக” என்று கூச்சல் போட்டார்கள் சில அல்லக்கைகள். இந்தக் கண்கொள்ளாக் காட்சியின் வீடியோ பதிவை புத்ததேவுக்கு அனுப்பி வைத்தால், ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கு ஆதரவாக கல்கத்தா படைப்பாளிகளைப் படை திரட்டுவதற்கு மார்க்சிஸ்டுகளுக்கு அது பெரிதும் உதவும்.

என்ன இருந்தாலும் சில காரியங்களை சில பேரால்தான் சாதிக்க முடியும் என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். ஜெயலலிதா மட்டும் இல்லையென்றால், அத்வானி, ஜஸ்வந்த் சிங், சு.சாமி, மணி சங்கர் ஐயர், டி.என்.சேஷன், சங்கராச்சாரி, இந்து ராம் முதலான பல கொம்பாதி கொம்பர்களின் உணைமையான முக விலாசத்தை உலகம் அறிந்திருக்க முடியுமா? அந்த வகையில் லீனா ஆற்றியிருக்கும் வரலாற்றுப் பாத்திரத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

கவிதை என்ற சொல்லால் அழைக்கப்படுவதற்கே தகுதியில்லாத ஒரு கழிவுக்கு “சுக்குமி – ளகுதி – ப்பிலி” என்று பதம் பிரித்து, படைப்பாளிகளை பொருள் விளக்கம் சொல்ல வைத்ததன் மூலம், தனது இரண்டாவது கவிதையில் ஒரு கம்யூனிஸ்டை எந்தெந்த இடங்களுக்கெல்லாம் அவர் அழைத்துச் சென்றாரோ, அதே இடங்களுக்கு படைப்பாளிகளையும் அழைத்துச் சென்று, அவர்களுடைய வாயில் தன்னுடைய சொற்களை ஒவ்வொன்றாய் பிடுங்கிப் போட்டு, அவற்றை மென்று கட்டவிழ்ப்பு செய்யும் வேலையையும் அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்.

படைப்பு சுதந்திரத்தின் காவலர்கள் பிரதியை அசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிசத்தையும் கம்யூனிசத் தலைவர்களையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தும் எழுத்து என்பதுதான் லீனாவின் கவுஜை பற்றி நாங்கள் கூறிய விமரிசனம். அவ்வாறு இல்லை என்றால் அதன் பொருளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று கவுஜாயினி விளக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

இதை தந்திரமாக இருட்ட்டிப்பு செய்து விட்டு, “தடை விதிக்கிறார்கள், போலீசு வேலை செய்கிறார்கள்” என்று திசை திருப்பினார்கள். அப்புறம் “இது ஆபாசம் என்பதுதான் இந்து மக்கள் கட்சியின் கருத்து. ம.க.இ.க வின் கருத்தும் அதுதான். ரெண்டு பேரும் பழைய பஞ்சாங்கங்கள், ஒழுக்கவாதிகள், எனவே ரெண்டு பேரும் ஒண்ணுதான்” என்று முத்திரை குத்தினார்கள்.

“யோனி, மயிரு என்று எழுதி விட்டால் பெரிய வீரம் போலவும், அதைக் கேட்டு ம.க.இ.க காரர்கள் பயந்து நடு நடுங்கி துடிப்பதைப் போலவும் அந்த சீமாட்டிக்கும் படைப்பாளிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோருக்கும் ஒரு நெனப்பு.

மேற்படி சொற்களைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்கள் நாங்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம்.

“யோனி, புணர்தல், குறி” என்பன போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த, ரீஜென்டான சொற்களுக்குப் பழக்கமில்லாதவர்களும், ஒரிஜினல் தமிழில் மட்டுமே இந்த சொற்களைப் பயன்படுத்துகின்றவர்களுமான பெண்களுடன், கூட்டத்திற்கு வந்திருந்த படைப்பாளிகளை நேரில் சந்திக்க வருகிறோம்.

ஆமாம், கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.

உங்கள் கவிதைக்கு நாங்கள் தடை விதிப்பதாக அல்லவா குற்றம் சாட்டுகிறீர்கள்? இதற்கு கழுவாய் தேட ஏழுமலையான் நோட்டீசு போல எங்கள் சொந்த செலவில் அந்தக் கவுஜையை அச்சடித்துக் கையோடு கொண்டு வருகிறோம்.

படைப்புரிமைக்கு குரல் கொடுத்த கலகக்காரர்களின் மனைவி, சகோதர சகோதரிகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரிடம் “பிரதி”யைக் கொடுக்கிறோம். “இந்தக் கவுஜைக்காகத்தான், சார் குரல் கொடுத்தார். ஆனால் இந்தக் கவுஜையைப் படித்து கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு கோபம் வந்தது. இது தவறா? இந்தப் பிரதியை நீங்கள் எப்படி வாசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் நியாயம் கேட்கிறோம்.

தன்னுடைய கட்சியின் கொள்கையைப் பக்கத்து வீட்டுக் காரனிடம் பேசுவதற்கு ஒரு திமுக காரன் தயங்குவானா? தன்னுடைய சினிமாவைப் பற்றி பெண்டாட்டியிடம் பேச ஒரு சினிமாக்காரன் கூச்சப்படுவானா? அப்படி இருக்கும்போது வீரமிக்க படைப்பாளிகள் மட்டும் பதுங்கி விடுவார்களா என்ன? பதில் சொல்லட்டும். மேலும் பெண் எழுத்துக்கு ஆபத்து நேர்ந்திருப்பதைப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உங்களுடைய அலுவலகங்களுக்கு வருகிறோம். கல்லூரிகளுக்கு வருகிறோம். மாணவர்களிடம் இந்தக் கவுஜையைக் கொடுத்து, “ஆசிரியன் செத்துவிட்டான். பிரதிதான் மிச்சமிருக்கிறது. மாணவர்களாகிய உங்கள் வாசிப்பு அனுபவத்தை சொல்லுங்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.

சரக்கின் உன்மத்த நிலையில் குடிகாரனின் வாயிலிருந்து தெறிக்கும் எச்சிலுக்கு அந்தக் குடிகாரனும், படைப்பின் உன்மத்த நிலையில் படைப்பாளியின் வாயிலிருந்து தெறிக்கும் சொற்களுக்கு படைப்பாளியும் பொறுப்பேற்க முடியாது என்ற உங்கள் “படைப்புத் தத்துவத்தை” அவர்களுக்கும் விளக்குங்கள்.

தீக்கதிர், தாமரையின் ஆதரவு பெற்ற கவுஜாயினியின் இந்தக் கவிதையை போஸ்டராக அடித்து சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி தொழிலாளர்கள், ஊழியர்கள் நிரம்பிய பகுதிகளில் ஒட்டுகிறோம். செலவுதான். நாங்கள் கலாச்சார போலீசு இல்லை என்று நிரூபித்தாக வேண்டுமே, வேறு என்ன செய்வது?

நீங்களும் பேசுங்கள் நாங்களும் பேசுகிறோம். மற்றவர்களும் பேசட்டும். அடிதடி வன்முறை, தடை, கலாச்சார போலீசு வேலை எதுவும கிடையாது. “உரையாடலைத் தொடர்கிறோம்”. அவ்வளவுதான்.

இந்த வழிமுறையெல்லாம் முறைகேடானது என்று யாரேனும் பதறினால் அவர்களைக் கேட்கிறோம் – படைப்பாளிகளை “முறை”க்குள் அடைக்க முடியுமா? வீடு, அலுவலகம் என்ற “வெளி”க்குள் அடைக்க முடியுமா?

“வேண்டுமானால் நீங்கள் ஒரு கூட்டம் நடத்தி உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். இந்த மாதிரி எதிர்ப்பெல்லாம் ‘மரபு’அல்ல” என்று யாரேனும் முனகலாம்.

அவர்களுக்கு எங்கள் பதில் இதுதான்.

எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை”

vote-012

தொடர்புடைய பதிவுகள்