privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசெயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

-

உயிர் என்பதை பொருள்முதல்வாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட  விடை காண முடியாத புதிராகச் சித்தரித்து வாதிட்டவர்களுக்கு இயற்கையின் இயக்கவியல் என்ற தனது நூலில் (1886) எங்கெல்ஸ் பதில் அளித்தார். இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இயற்கை விஞ்ஞானம் அன்று கண்டிருந்த முன்னேற்றங்களின் துணை கொண்டு ‘உயிர்’ என்பதற்கு எங்கெலஸ் அளித்த அற்புதமான பொருள்முதல்வாத விளக்கம் இது.

பிரெட்ரிக் ஏங்கல்ஸ்

“புரதப் பொருட்களின் இருத்தலின் பாங்கே உயிர்…. இரசாயன ரீதியாகப் புரதப் பொருள்களைத் தயாரிப்பது என்பது எப்போதாவது வெற்றி பெறுமெனில் அப்போது அவை உயிரின் இயல் நிகழ்ச்சியை நிச்சயமாகவே வெளிப்படுத்தும்…”
“.. மனது – பொருள் என்பதையும் மனிதன் – இயற்கை என்பதையும் உடல் – ஆத்மா என்பதையும் வேறுபடுத்தி எதிர்நிலைப்படுத்துகின பொருளற்ற இயற்கைக்கு முரணான கருத்து மேலும் மேலும் சாத்தியமில்லாமல் போகும்.”

“புரதப் பண்டங்களின் ஆக்கம் அறியப்பட்டவுடன் உயிருள்ள புரதத்தைத் தயாரிக்கும் வேலையில் இரசாயனவியல் இறங்கும். மிகச் சாதகமான சூழ்நிலைகளில் எதை இயற்கை ஒரு சில வான்கோள்களில் செய்து முடிக்கப் பத்து இலட்சக் கணக்கான ஆண்டுகள் பிடித்தனவோ, அதைப் பொழுது விடிவதற்குள் இரசாயனவியல் சாதிக்க வேண்டும் எனக் கோருவது ஒரு மந்திரவித்தையைக் கோருவதற்கு ஒப்பாகும்.”

1886 இல் எதனை மந்திர வித்தை என்று எங்கலெஸ் குறிப்பிட்டாரோ, அந்த மந்திர வித்தையைச் சாதிக்கும் திசையில் இரசாயனவியல் இன்று வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

000

சிந்தடிகா செல்

சிந்தடிகா – Synthetica  . அமெரிக்காவின் கிரேக் வென்டர் என்ற விஞ்ஞானி தனது சோதனைக் கூடத்தில் மே, 20, 2010 ஆன்று உருவாக்கியிருக்கும் புதியதொரு நுண்ணுயிரின் பெயர். செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிர் என்ற பொருள்படும் வகையில் சூட்டப்பட்ட பெயர். சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா.

ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக்  குறியீடுகளுக்குரிய  (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா.

சிந்தடிகா என்பது இயற்கை தனது இயக்கத்தின் போக்கில் தானே படைத்த புதியதொரு உயிரல்ல;  ஏற்கெனவே இருக்கின்ற ஒரு உயிரின் மரபணுவை பிரதி எடுத்து குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டாலி ஆட்டினைப் போன்ற நகலும் அல்ல. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அல்லது தக்காளியைப் போன்றதும் அல்ல. இயற்கை படைத்த கூட்டுக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் செயற்கை என்று இதைச் சொல்லலாம்.

வேர்க்கடலையின் பருப்பை நீக்கி விட்டு தோலுக்குள்ளே செலுத்தப்பட்ட முந்திரிப் பருப்பைப் போன்றது இந்தப் படைப்பு. இந்த முந்திரிப்பருப்பு முந்திரியின் மரபணுவிலிருந்து நேரிடையாகப் படைக்கப்பட்டதல்ல. அந்த மரபணுவின் வேதியியல் மூலக்கூறுகளை சோதனைச்சாலையில் ஒன்றிணைத்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது.  அந்த அளவில் இது உயிரற்ற சடப்பொருளிலிருந்து உருவாக்கப்பட்ட உயிர்.

மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டிரியாவின் குரோமோசோம் அமைப்பை கணினியின் உதவியுடன் பகுத்தாராய்ந்து, அவற்றின் மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) சுமார் 10 இலட்சம் வேதியியற் குறியீடுகள் கொண்ட மொழிக்கு மொழிபெயர்த்தனர் கிரேக் வென்டர் குழுவினர். பின்னர் அந்த வேதியியற் குறியீடுகளின் அடிப்படையில் வேதிப் பொருட்களை ஒன்றிணைத்து செயற்கையான மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) உருவாக்கினர். பின்னர் மைகோபிளாஸ்மா காப்ரிகோலம் என்ற பாக்டிரியாவிலிருந்து அதன் மரபணுத்தொகுப்பை ‘சுரண்டி’ எடுத்துவிட்டு, எஞ்சியிருந்த கூட்டுக்குள் (செல்) தாங்கள் உருவாக்கிய செயற்கையான மரபணுத் தொகுப்பில் சில மாற்றங்களும் செய்து  உட்செலுத்தினர். இந்தப் புதிய கூட்டிற்குள் குடியேற்றப்பட்ட மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டீரியாவின் வேதியியற் பொருட்கள் கூட்டில் பொருந்தி, ஒரு புதிய உயிராக இயங்கத்தொடங்கின.

செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்குவதற்கு அதன் வேதியியல் சேர்க்கையைக் கண்டறிதல்;  அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத்தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு(கூட்டுக்கு) புரியவைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் – இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்.

உடல் வேறு, உயிர் வேறு என்று கருதுகின்ற புராணங்களில் கூறப்படும் ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ என்ற புனைகதையை, நடைமுறையில் சாதித்துக் காட்டியிருக்கிறது இன்றைய அறிவியல். ராமசாமியின் உடலுக்குள் கோயிந்சாமியை நுழைத்து, இனி கோயிந்சாமியாகவே நடந்து கொள்ளவேண்டும் என்று ராமசாமியின் உடலுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதனை எளிமைப்படுத்திக் கூறலாம். ஆனால் செல் (உடல்) என்பது வெறும் கூடு அல்ல, மரபணு (டி.என்.ஏ) என்பதே உயிரும் அல்ல. இவற்றின் இயங்கியல் ரீதியான சேர்க்கையும், அவ்வாறு சேர்ந்திருத்தலின் பாங்குமே உயிர்.

தனக்கு வேண்டிய ஆற்றலை இயற்கையிலிருந்து தானே கிரகித்துக் கொள்வதையும், தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து கொள்வதையும் உயிரின் இலக்கணமாகக் கூறுகிறது அறிவியல். தன்னைத் தானே மறு உற்பத்தி செய்து கொண்டு பல்கிப் பெருகியதன் மூலம் இந்த இலக்கண வரையறையையும் நிறைவு செய்திருக்கிறது சிந்தடிகா.

குரோமோசோம் என்பது மரபணுக்களால் அனது; மரபணுக்கள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களால் ஆனவை; டி.என்.ஏ, ஆர்.என்.ஏ க்கள் பரதத்தினாலும், புரதங்கள் அமினோ ஆசிட்டுகளாலும் ஆனவை. அமினோ ஆசிட்டுகள் வேதிப் பொருட்களால் ஆனவை என்பது ஏற்கெனவே அறியப்பட்ட அறிவியல் உண்மை. கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், இயற்கை தன் போக்கில் உருவாக்கியவை அல்லது இறைவனால் படைக்கப்பட்டவை என்று நம்பப்படும் பல்லாயிரம் கோடி உயிரினங்களுக்கு அப்பால், மனிதன் தன் சொந்தக் கையால் உருவாக்கி, “இது நான் உருவாக்கியது” என்று அந்த உயிரிலேயே கையெழுத்தும் இட்டு வைத்திருக்கும் ஒரு புதிய உயிரினம் இது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற வகையிலான ‘போலச்செய்தலில்’ தொடங்கிய மனிதன், பறவையைக் கண்டான் பறவையைப் படைத்தான் என்பதை நோக்கியும், இதுவரை இல்லாதொரு புதிய பறவையையும் படைப்பான் என்பதை நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் அடி.

இந்தக் குறிப்பிட்ட ஆய்வுக்கு மட்டும் பத்து ஆண்டுகளும் 40 மில்லியன் டாலர்களும் செலவாகியிருக்கின்றன. கணினித் தொழில்நுட்பமும், அவற்றின் கணக்கிடும் வேகமும் பன்மடங்கு வளர்ந்திருப்பதனால்தான், பல இலட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இயற்கை உருவாக்கியிருக்கும் இந்த நுண்ணுயிரின் கட்டமைப்பை, ஒரு பத்து ஆண்டுகளில் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

உயிரைச் செய்றகையாக உருவாக்கும் ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. ஒரேகானில் உள்ள  ரீட் கல்லூரியின் தத்துவத்துறைப் பேராசிரியரும், முற்றிலும் இரசாயனப் பொருட்களிலிருந்தே செயற்கை உயிரை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் புரோட்டோ லைஃப் என்ற இத்தாலிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் பெடோ, “கடவுளின் ஏரியா என்று கருதப்படும் பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். உயிர் என்பது மிகவும் வலிமையானது. நாம் நினைப்பதைச் செய்யும்படி ஒரு உயிரைப் படைக்கமுடியுமானால், எல்லாவிதமான நல்ல காரியங்களையசும் செய்யலாம். பொறுப்புடன் நடந்துகொள்ளும் பட்சத்தில் ‘கடவுளின் வேலையை’ நாம் மேற்கொள்வதில் தவறில்லை” என்கிறார்.

கிரேக் வென்டரின் ஆய்வுக்கூடம், வேதிப்பொருட்களைக் கொண்டு தாங்கள் செயற்கையாக உருவாக்கிய மரபணுத்தொகுப்பினைக் குடியேற்ற, ஏற்கெனவே உள்ள இன்னொரு பாக்டீரியாவின் கூட்டினைப் பயன்படுத்திக் கொண்டனர். மார்க் பெடோவின் ஆய்வுக் குழுவோ, மரபணுக்களைக் குடியேற்றும் கூடுகளை செயற்கையான முறையில் தயாரிக்க முயன்று கொண்டிருக்கிறது. நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களிலிருந்தே உயிரை உருவாக்குவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

000

விஞ்ஞானி கிரெய்க் வென்டர்

2500 ஆண்டுகளுக்கு முன்னால் கடவுள் கோட்பாட்டை முன்வைத்த பார்ப்பனிய தத்துவஞான மரபினர், உலகாயதவாதிகளை (பொருள்முதல்வாதிகளை) பார்த்து, “ஜடப்பொருளிலிருந்து, அந்த ஜடப்பொருட்களின் குணங்களைப் பெற்றிராத புதிய குணங்ளைக் கொண்ட  உயிர்ப்பொருள் என்பது எவ்வாறு உருவாக முடியும்?” கேள்வி எழுப்பினர். “ஜடப்பொருளான அரிசி புளிக்க வைக்கப்படும்போது போதை எனும் புதிய குணம் கொண்ட மதுவாக மாறுவதைப் போல பஞ்சபூதங்களின் சேர்க்கையில்தான் உயிர் உருவாகிறது” என்று அன்றிருந்த அறிவின் வளர்ச்சிக்கு ஒப்ப கருத்துமுதல்வாதிகளுக்குப் பதிலடி கொடுத்தனர் பொருள்முதல்வாதிகளாகிய சாருவாகர்கள்.

25 நூற்றாண்டுகளில் அறிவியல் வெகுதூரம் வளர்ந்து விட்டது. எனினும் இன்றும் கூட பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டு, நேரம் தவறாமல் மாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கும் பாதிரிகளும், முல்லாக்களும், சங்கராச்சாரிகளும்  படுக்கையை விட்டு எழுந்திருக்காத நிலையிலும் கூட, “என்னதான் இருந்தாலும் மனிதனால் ஒரு எறும்பைப் படைக்க முடியுமா? இறைவன் பெரியவன்” என்று கூறி போலித் தன்னடகத்துடன் ஏளனப் புன்னகை சிந்துகிறார்கள்.

எனினும், செயற்கை உயிரியல் (synthetic biology) என்றொரு ஆய்வுத்துறையே உருவாகிவிட்ட இன்றைய நிலையிலும் சிந்தடிகா உருவாக்கப்பட்ட பிறகும்,  விஞ்ஞானிகள் யாரும் ஆணவம் கொண்டு திரியவில்லை. புதியதைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத்தான் பழையதை ஆய்வு செய்வதும் கற்றுக்கொள்வதும் அவசியமானதாக இருக்கிறது. அந்த வகையில் செயற்கை உயிரைப் படைக்க முனைந்திருக்கும் விஞ்ஞானிகள்தான் இயற்கை படைத்திருக்கும் உயிர்களை ஆய்வு செய்வதிலும் அளப்பரிய ஆர்வம் காட்டுகிறார்கள். 400 கோடி ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பரிணாம வளர்ச்சியின் போக்கில் இயற்கை படைத்திருக்கும் உயிர்களையும், நுண்ணுயிர் செல்களையும் அவை பெற்றிருக்கும் ஆற்றலையும் வியப்புடன் விவரிக்கிறார்கள்.

“நம் விரலை உள்ளே விட்டால் அந்தக் கணமே தசையும், நகமும், எலும்பும் கரைந்து காணாமல் போய்விடும் அளவிற்கான திராவகங்களிலும் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிர்கள், மனிதர்களைக் கொல்வதற்குத் தேவைப்படுகின்ற அணுக்கதிர் வீச்சைக் காட்டிலும் 1500 மடங்கு அதிகமான கதிர்வீச்சினால் தாக்கிச் சிதறடிக்கப்பட்ட பின்னரும், தன்னைத்தானே தைத்துக் கொண்டு உடனே தன்னை மறுஉற்பத்தியும் செய்து கொள்ளும் ஆற்றல் பெற்ற நுண்ணுயிர்கள், மனிதனும் விலங்குகளும் உறைந்தோ, உருகியோ, சிதறியோ, மூச்சுத் திணறியோ அழிந்து விடக்கூடிய  சூழல்களில் சர்வ சாதாரணமாக உயிர்வாழும் நுண்ணுயிர்கள் இயற்கையில் இருக்கின்றன. இயற்கையின் பல்லுயிர்ச் சூழல் குறித்து இதுவரை நாம் அறிந்திருப்பது ஒரு சதவீதம் கூட இல்லை என்பதே உண்மை. நாம் படைக்கவிருக்கும் செயற்கை உயிரிகள் என்னவிதமான பணிகளை செய்யும் ஆற்றல் பெற்றவையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு ஆற்றல் பெற்ற கோடிக்கணக்கான உயிரிகள் இயற்கையில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கின்றன” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

“இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை… இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம், அதன் நடுவில் நிலைவாழ்கிறோம்.. இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைச் சரியாகப் பிரயோகிப்பதில், மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்ற உண்மையில்தான் இயற்கையின் மீதான நமது ஆளுமை என்பதன் பொருள் அடங்கியுள்ளது” என்றார் எங்கெல்ஸ்.

மதவாத அறிவிலிகளின் போலித் தன்னடக்கத்திற்கும் அறிவியலாளர்களின் தன்னடக்கத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். “தன்னுடைய படைப்பைப் புரிந்து கொள்ளுவதற்கும், அதனை சிறப்பாக கையாள்வதற்குமான பரிசாக தேவன் மனிதனுக்கு அறிவை வழங்கியிருக்கிறான் என்பதற்கு இது (சிந்தடிகா) இன்னொரு நிரூபணம்” என்று மிகவும் அற்பத்தனமான முறையில் கடவுளை முட்டுக் கொடுத்து நிறுத்த முயன்றிருக்கிறார் இத்தாலிய கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் அஞ்சலோ பாக்னசோ.

“தன்னைக் கடவுளாகக் கருதிக் கொள்வதும் கடவுளுக்கே உரிய படைப்பாற்றலை ஏந்திச் சுழற்றுவதும் மனிதனை காட்டுமிராண்டித்தனத்தில் தள்ளிவிடும். படைப்பவன் ஒருவன் மட்டுமே – அவன்தான் இறைவன் என்பதை விஞ்ஞானிகள் ஒருக்காலும் மறந்து விடக்கூடாது” என்றார் மோகேவெரோ என்றொரு பாதிரி. காட்டுமிராண்டித் தனத்தைப் பற்றிப் பேசும் யோக்கியதை கத்தோலிக்கத் திருச்சபைக்கு உண்டா என்பது ஒருபுறம் இருக்க, சிந்தடிகா குறித்த செய்தி வெள்வந்தவுடனே, ‘அழித்தல்’ தொழிலில் ஈடுபட்ட சங்கராச்சாரியும் கூட ‘ஆக்கல்’ தொழிலை பிரம்மனிடமிருந்து மனிதன் அபகரித்துக் கொண்டிருப்பது குறித்து தனது கவலையை வெளியிட்டிருக்கிறார்.

செயற்கை உயிரின் ஆக்கத்தின் மூலம், கடவுள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை அறிவியல் மேலும் அடைத்து விட்டது. எனினும், கடவுள் கல்லறைக்குச் செல்ல மறுக்கிறார். காரணம், எந்த முதலாளித்துவம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மூலதனமிடுகிறதோ, அதே முதலாளித்துவம் அறிவியலை தனது இலாப நோக்கத்துக்கான கருவியாகப் பயன்படுத்துவதன் மூலம், கடவுள் இன்னமும் உயிரோடிருக்க துணை செய்கிறது.

தனது கொள்ளை இலாப நோக்கத்துக்காக இயற்கை முதல் மனிதர்கள் வரையில் எதையும், யாரையும் அழிக்கத் தயங்காத முதலாளி வர்க்கம் அறிவியலின் துணை கொண்டு நடத்தியிருக்கும் அழிவு வேலைகளைக் காட்டி, படைப்புப் பணியை கடவுளிடமிருந்து மனிதன் பறித்துக் கொண்டால் நேரக்கூடிய விபரீதங்களைக் காட்டி நம்மை மிரட்டுகிறார்கள் மதவாதிகள். திருச்சபை கூறுவது போல அறிவியல் மனிதனிடம் சிக்கியிருக்கவில்லை. தம்மளவில் மனிதத்தன்மையை அகற்றியவர்களும், மனிதகுலத்திடமிருந்தும் அதனை அகற்ற விரும்புகிறவர்களுமான உலக முதலாளி வர்க்கத்திடம் சிக்கியிருக்கிறது அறிவியல்.

அணு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், மரபணு மாற்ற விதைகள், புவி சூடேறுதல் மற்றும் இயற்கைப் பேரழிவுகளைத் தோற்றுவித்துள்ள உலக முதலாளி வர்க்கம், அறிவியலால் அகற்றப்பட்ட கடவுளை மீண்டும் அரியணையில் அமர்த்துகின்றது. மதவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருகிறது.  இதன் விளைவாக, அறிவியலின் சாதனைகள் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தருவதற்குப் பதிலாக அச்சத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றன. சிந்தடிகா – இதற்கு விலக்கல்ல.

000

புதிய நுண்ணுயிரை வடிவமைத்து உருவாக்குவதைச் சாத்தியமாக்கியிருக்கும் இந்த முன்னேற்றத்தின் பயனாக, தொற்று நோய்கள் மற்றும் ஆட்கொல்லி நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளை உருவாக்கலாம். பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற அழிக்க முடியாத கழிவுகளைக்கூட தின்று செரிக்கும் திறன் கொண்ட நுண்ணுயிர்கள், கரியமிலவாயுவை உறிஞ்சும் நுண்ணுயிர்கள், உயிரி எரிபொருளை (பயோ ஃப்யூவல்) உருவாக்கித்தரும் நுண்ணுயிர்கள் போன்ற பலவற்றையும் உருவாக்கலாம்.

அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம், வெவ்வேறு விதமான பணிகளைச் செய்யக் கூடிய சுமார் 2000 உயிரி உறுப்புகளின் டி.என்.ஏ குறியீடுகளைத் (BioBrick parts)  பட்டியலிட்டுத் தொகுத்து வைத்திருக்கிறது. போல்ட், நட்டுகள், சக்கரங்கள், புல்லிகள், கியர்களை இணைத்து ஒரு எந்திரத்தை உருவாக்குவதைப் போல, இந்த உயிரி உறுப்புகளை வேண்டியவாறு இணைத்து ஒரு உயிரி எந்திரத்தை உருவாக்குவதென்பதே அங்கு நடைபெறும் ஆய்வின் நோக்கம்.  சிலிக்கான் தொழில் நுட்பத்துக்கு மாற்றாக, நுண்ணுயிர்களைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளும் நடைபெறுகின்றன.

உயிரித் தொழில்நுட்பம் வழங்கும் நேர்மறைப் பயன்கள் கற்பனைக்கெட்டாதவை. எனினும், இந்த அறிவியலும் தொழில்நுட்பமும் யாருடைய ஏகபோகத்தின் கீழ் இருக்கின்றன என்பதுதான் அறிவியல் வளர்ச்சி செல்லும் திசையையும் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான சாத்தியத்தையும் தீர்மானிக்கின்றன. பெரும் பொருட்செலவு பிடிக்கும் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அமெரிக்க இராணுவத்தின் ஆராய்ச்சித் துறைகளோதான் கட்டுப்படுத்துகின்றன. உலகச் சந்தையின் மீது வர்த்தக ரீதியான ஏகபோக ஆதிக்கம் அல்லது இராணுவ மேலாதிக்கம் என்பவையே பெரும்பாலான ஆய்வுகளின் நோக்கத்தை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்.

தற்போது சிந்தடிகாவை உருவாக்கியிருக்கும் கிரேக் வென்டரின் தனியார் ஆய்வு நிறுவனம், எக்சான் மொபில் என்ற அமெரிக்கப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சூழலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி அதனை ஹைட்ரோ கார்பன்களாக மாற்றவல்ல கடற்பாசிகளை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின்படி நடைபெறும் ஆய்வு. எண்ணெய் வளங்கள் வற்றி வரும் சூழலில், கரும்பு, சோளம், ஜட்ரோபா போன்றவற்றிலிருந்தெல்லாம் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளைக் காட்டிலும் மலிவானதாக இருக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் ஹைட்ரோ கார்பனிலிருந்து பெட்ரோலும் டீசலும் தயாரித்து எண்ணெய் விற்பனையில் உலக ஏகபோகத்தை அடைவதே எக்சான் மொபில் நிறுவனத்தின் நோக்கம்.

அதே போல, நுண்ணுயிர்களின் மரபணுக்களை செயற்கையாக திருத்தி அமைத்து, அவற்றிலிருந்து ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆய்விலும் நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு மருந்துக் கம்பெனியுடன் இணைந்து கிரேக் வென்டரின் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இரத்தப் புற்றுநோய்க்கான மருந்துகளைத் தயாரித்து வந்த இந்திய நிறுவனங்களை, காப்புரிமையைக் காட்டி தடுத்து நிறுத்தி, அம்மருந்துகளின் விலையை நூறு மடங்கிற்கு மேல் விலை உயர்த்தி விற்று வரும் நிறுவனம்தான் நோவார்ட்டிஸ்.

எக்சான் மொபில் நிறுவனமோ, புஷ் கும்பலுக்கு மிகவும் நெருக்கமானது; இராக் ஆக்கிரமிப்பின் பின்புலத்தில் இருந்தது. இத்தகைய நிறுவனங்கள் மேற்கூறிய கண்டுபிடிப்புகளை எப்படிப் பயன்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.

மருந்து நிறுவனங்கள் மட்டுமின்றி, உணவு தானிய வணிகத்தில் உலக ஏகபோகத்தை நிறுவிக் கொள்ளத் துடிக்கும் மான்சான்டோ முதலான பன்னாட்டு உணவுக் கழகங்களும் (Agri business corporations)  உயிரி தொழில்நுட்ப ஆய்வுகளில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றன. இந்தியா முதலிய நாடுகளில் அரசுகள், ஆய்வுக் கூடங்கள்,  பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ளின் துணையுடன் தமது ஆய்வுகளின் சோதனைக் களமாக ஏழைநாடுகளின் விவசாயத்தை மாற்றுகின்றன. மான்சான்டோவின் பி.டி விதைகள் இந்திய விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் ஏவியிருக்கும் அழிவு நம் கண் முன் தெரிகின்ற சான்று.
ஆனால் இந்த அழிவைக்கூட “சொல்லி அழக்கூடாது, சொல்லாமல்தான் அழவேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக அறிவியல் ஆதாரம் இல்லாமல் பேசுவது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம்” என்று கூறும் சட்டமுன்வரைவை நிறைவேற்றுவதற்காக தயார் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு.

செயற்கை கடற்பாசி இயற்கையான உயிர்ச்சூழலுக்குள் ஏவப்பட்டால் ஏற்படும் விளைவுகள் – பின் விளைவுகள் என்ன, அவை ஏவப்பட்டிருக்கின்றனவா இல்லையா என்பதைக் கூட எப்படித் தெரிந்து கொள்வது போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள் சூழலியலாளர்கள். இந்தக் கேள்விகளுக்கு விடை காண பெரும் ஆராய்ச்சி தேவையில்லை. யூனியன் கார்பைடு நடத்திய போபால் படுகொலையும் தற்போது அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடாவின் கடற்பரப்பு முழுவதும் பரவி கோடிக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைக் கொன்று கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெயும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும் உண்மைகள். செயற்கை உயிரிகளால் ஏற்படும் ஆபத்துகளை இவ்வாறு பளிச்சென்று நிரூபிக்கக் கூட முடியாது என்பதால், இத்தகைய ஆய்வுகளையே தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர் சூழலியலாளர்கள்.

விபத்துகள் மட்டுமல்ல. நுண்ணுயிர்களை எளிதில் கண்டு பிடிக்க முடியாத பேரழிவு ஆயுதங்களாகவும் ஏவ முடியும்.  இராக்கில் குறைந்த கதிர் வீச்சு கொண்ட அணு ஆயுதங்களையும், வியத்நாமிலும் கொரியாவிலம் ரசாயன ஆயுதங்களையும், இராக்கில் விசவாயுக் குண்டுகளையும் பயன்படுத்தியிருக்கும் அமெரிக்கா உயிரி ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடும். அவ்வகையில் இக்கண்டுபிடிப்புகள் அனைத்தையுமே அழிவு வேலையின் ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தும்.

இப்பிரச்சினைக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியையும், உலகமயமாக்கலையும் தொடர்ந்து உலக நாடுகளின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துடைமை (TRIPS), புதிய கண்டுபிடிப்புகளின் மீது மட்டுமின்றி, தாவரங்கள், நுண்ணுயிர்கள் மற்றும் மரபணுக்கள் மீதும் கூட காப்புரிமை கோரும் அதிகாரத்தை உலக முதலாளித்துவத்திற்கு வழங்கியிருக்கிறது. வேம்பு மீது அமெரிக்க நிறுவனம் காப்புரிமை பெற்றதும், அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளும் நாம் அறிந்ததுதான். தாவரங்களை மட்டுமல்ல, மனிதனின் மரபணுக்களுக்கும் கூட காப்புரிமை பெற்று, அவற்றைத் தனிச்சொத்துடைமையாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது உலக முதலாளித்துவம்.

புதிய கடவுளாக காத்திருக்கும் கம்பெனிகள்
புதிய கடவுளாக காத்திருக்கும் கம்பெனிகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிராட் (39) என்ற பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. கருப்பையிலும் தனக்குப் புற்றுநோய் வர அபாயம் உள்ளதா என்பதை மரபணுச் சோதனை மூலம் தெரிந்து கொள்ள எண்ணிய அந்தப் பெண், மிரியாட் என்ற சோதனைக் கூடத்தை அணுகினார். புற்றுநோயை உருவாக்கும் மரபணு அந்தப் பெண்ணின் உடலில் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. வேறோரு சோதனைக்கூடத்தில் மீண்டும் மரபணுச் சோதனை செய்து பார்த்து இதனை உறுதி செய்து கொள்ள கிராட் விரும்பினார். ஆனால் மரபு வழியில் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் இரு மரபணுக்களை முதன்முதலாகக் கண்டுபிடித்த மிரியாட் சோதனைக்கூடம், அவ்விரு மரபணுக்களுக்கு அறிவு சார் சொத்துடைமையை பதிவு செய்து வைத்திருந்தது. மிரியாட்டில் இந்த சோதனைக்கான கட்டணம் 1.5 இலட்சம் ரூபாய். இதைவிட மிக மலிவான கட்டணத்தில் இச்சோதனையைச் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும், அமெரிக்காவின் வேறெந்த சோதனைக்கூடத்திலும் இந்தச் சோதனையைச் செய்வதற்குத் மிரியாட் தடை பெற்றிருந்தது.

கிராட்டின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அமெரிக்க சிவில் உரிமை யூனியன் “உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நிலையிலும் கூட மனிதனின் மரபணுக்கள் எனப்படுபவை இயற்கையின் அங்கங்களே. இவை புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல” என்று வாதிட்டன. மார்ச் 2010 இல் அமெரிக்காவின் ஒரு மாவட்ட நீதிமன்றம் கிராட் நிறுவனத்தின் இந்தக் காப்புரிமையை ரத்து செய்திருக்கிறது.

மிரியாட் போன்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களும், மருந்து நிறுவனங்களும் சுமார் 40,000 மனித மரபணுக்களுக்கு காப்புரிமை பெற்று வைத்திருக்கின்றன. இந்த தீர்ப்பை ரத்து செய்தால் மட்டுமே தங்களது ஆராய்ச்சியின் ‘பயனை’ ‘அறுவடை’ செய்ய இயலும் என்பதால் இத்தொழில் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பை முறியடிக்க முயலும் என்பதில் ஐயமில்லை. சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறும் முயற்சி, மேற்கூறிய வழக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக உதவும் என்றும் சில விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

மனித மரபணுத் தொகுப்பு தொடர்பான ஆய்வில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானியும், மனித மரபணுவின் மீது காப்புரிமை பெறும் முயற்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவருமான மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் சல்ஸ்டன் காழ்க்கண்டவாறு எச்சிரித்திருக்கிறார்: “சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறுவதற்காக கிரேக் வென்டர் கொடுத்துள்ள விண்ணப்பம், சிந்தடிகாவுக்கு மட்டும் காப்புரிமை கோரவில்லை. உயிரி தொழில்நுட்பம் தொடர்பான பல வகையான ஆய்வு முறைகளுக்கும் சேர்த்து காப்புரிமை கோருகிறது. இது நிராகரிக்கப்படவில்லையென்றால், உலகெங்கும் நடைபெறும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி முழுவதுமே கிரேக் வென்டர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியே மொத்தமாக முடக்கப்பட்டுவிடும்”

சிந்தடிகாவை உருவாக்கிய கிரேக் வென்டர் எனும் விஞ்ஞானியே உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் எதிரியாக மாறி நிற்பதை இப்போது காண்கின்றோம்.
இப்போது அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்டு நிறுத்துவது ஆண்டவனல்ல, அறிவு சார் சொத்துடைமை என்ற உலக முதலாளித்துவத்தின் கோட்பாடு. அறிவியலை அடக்கி ஆள்வது திருச்சபை அல்ல, முதலாளித்துவ உடைமை உறவை நிலைநாட்டுகின்ற ஏகாதிபத்தியம் அல்லது உலக வர்த்தகக் கழகம்.

உயிரின் வேதியல் மூலத்தை க் கண்டறிந்து, அதனை மாற்றியமைத்து, இதுவரை இல்லாத புதியதொரு உயிரை உருவாக்கவும் தலைப்பட்டுவிட்டது இயற்கை விஞ்ஞானம். உடைமை உறவின் சமூகப் பொருளாதார மூலத்தை மார்க்சியம் கண்டறிந்து சொல்லிய பின்னரும், அதனைப் புரிந்து கொள்ள இயலாத அறியாமையில் சமூகத்தை அமிழ்த்தியிருக்கும் ஏகாதிபத்தியம், உற்பத்தி சாதனங்களை மட்டுமன்றி உயிரணுவையும் தனிச்சொத்துடைமையாக்கும் திசையில் சமூகத்தை இழுத்துச் செல்கிறது.

இயற்கையின் 400 கோடி ஆண்டுக்கால ‘வரலாறு’, பொருள்முதல்வாத நோக்கில் விளக்கம் பெற்றுவிட்டது. சோதனைக்கூடத்தில் நிரூபிக்கப்பட்டும் விட்டது.
மனிதனின் சில ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு, பொருள்முதல்வாத நோக்கிலான மாற்றத்துக்காகவும் புதிய சமூகத்தின் தோற்றத்துக்காகவும் ஏங்கி நிற்கிறது. அதன் காரணமாகவே, அறிவியலும் தேங்கி நிற்கிறது. இந்தத் தேக்கத்தை உடைப்பதற்குத் தேவைப்படுவது – புரட்சி.  இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முடிபு.

____________________________________________

– மருதையன், புதிய கலாச்சாரம், ஜூலை – 2010

____________________________________________