privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!

ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!

-

ஜெயலலிதா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்

தமிழகத்தின் பதினான்காவது சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல்களில், கருணாநிதியின் தி.மு.க.வைத் தோற்கடித்து நிராகரிப்பதற்கு எந்த அளவு தகுதியான காரணங்கள் இருந்தனவோ, அதுபோல ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க.வைத் தேர்ந்தெடுத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்பதற்கும் காரணங்கள் இருந்தன.

அரசராட்சிக் காலத்தில் இப்படி நடந்ததாகக் கதைகளில் படித்திருக்கிறோம். அதாவது, ஆண்ட முடிமன்னருக்குத் தகுதியான பரம்பரை வாரிசு இல்லாமல் போனால் பட்டத்து யானையிடம் மாலையைக் கொடுத்து வீதியில் அனுப்புவார்களாம்; பட்டத்து யானை யாருக்கு மாலை போடுகிறதோ ,அவனையோ, அவளையோ அரசராகவோ, அரசியாகவோ மகுடம் சூட்டி விடுவார்களாம். அதைப்போல, பெரும்பாலான நாட்கள் குளுகுளுமலையின் கொடநாட்டு வெள்ளை மாளிகையில் உல்லாசமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு காரணமே இல்லாத திடீர் வாய்ப்பாக ஆட்சியதிகாரத்தைக் கொடுத்துவிட்டார்கள், தமிழக வாக்காளர்கள்.

கருணாநிதியின் தி.மு.க. போல பரம்பரை அரசியல் வாரிசு இல்லை என்பதற்காக ஜெயலலிதாவின் கழுத்தில் வெற்றிமாலை விழவில்லை. கருணாநிதியின் தயாளு வழி, ராஜாத்தி வழி பரம்பரை அரசியல் வாரிசுகள் மட்டுமில்லை; ஈரோட்டுப் பெரியசாமி, தூத்துக்குடி பெரியசாமி, சேலம் – வீரபாண்டி ஆறுமுகம், விழுப்புரம் பொன்முடி, தஞ்சை டி.ஆர்.பாலு, திருச்சி நேரு முதலானவர்களின் பரம்பரை அரசியல் வாரிசுகள், அவர்களின் அடாவடியான சொத்துக் குவிப்பு, அதிகார ஆதிக்கம் ஆகியவற்றைத் தமிழக மக்கள் கண்கூடாகக் கண்டனர். கருணாநிதியின் குடும்ப அரசியல் வாரிசுகளுக்குப் பதவிகளைப் பெற்றுத் தருவதற்கும், அவர்களின் இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகள் முதலிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் வேண்டி மத்தியில் சோனியா – மன்மோகன் – சிதம்பரம் – பிரணாப் கும்பலுடன் துரோகத்தனமான சமரசங்கள், அடிவருடித்தனங்களைச் செய்தது; சிங்கள பாசிச ராஜபக்சே கும்பலுடன் சேர்ந்து ஈழத் தமிழின அழிப்புப் போரை நடத்தியபோதும், இந்திய அரசு ஈழ இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தொடர்ந்து முயன்று வருவதாக துரோகத்தனமாகப் புளுகியது; இலவசங்களால் தமிழக மக்களை கட்டிப் போட்டுவிட்டு, அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது.  இந்தக் குற்றங்களுக்கெல்லாம் தக்க தண்டனை தரவேண்டும் என்று தமிழக மக்கள் வெறுப்புற்று வெதும்பிக் கிடந்தனர். அந்த நிலையில், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2-ஜி) ஊழல் வெளியானதைப் பயன்படுத்தி உண்மையும் பொய்யும் கலந்து பார்ப்பன ஊடகங்கள் பெருமளவில் நடத்திய அதிரடிப் பிரச்சாரந்தான் கருணாநிதியின் தி.மு.க.வுக்கு எதிராக ஒரு அலையாக உருவாகி, அதுவே ஜெயலலிதாவுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

மேற்கண்ட காரணங்களால் தமிழக மக்களிடையே தமக்கு எதிராக நிலவிய வெறுப்பையும் எதிர்ப்பு அலையையும் உணராத கருணாநிதியின் தி.மு.க.வுக்கு, எதிர்க்கட்சி தகுதியைக் கூட அளிக்க மறுத்து பெரும்பாலான அமைச்சர்களையும் வீழ்த்தி படுதோல்வி அடையச் செய்து விட்டார்கள், தமிழக மக்கள். அதைவிட முக்கியமாக, “ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் காங்கிரசு எழுச்சி” என்ற பார்ப்பன ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்தை நிராகரித்து, ஈழத்தில் இன அழிப்புப் போரை நடத்திய காங்கிரசையும் அதற்கு மறைமுகத் துரோகத்தனமாக நின்ற இராமதாசு-திருமாவளவன் கட்சிகளையும் அடியோடு சாய்த்து விட்டார்கள்.

தி.மு.க.- காங்கிரசு கூட்டணியின் மீதான வெறுப்பும், எதிர்ப்பு அலையும் வாய்தா ராணியாகவும் கொடநாட்டு உல்லாசவாசியாகவும் உழைக்காமலேயே சதாகாலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு லாட்டரியில் விழுந்த கொழுத்த பரிசாக ஆட்சி அதிகாரம் கிடைத்திருக்கிறது. இதற்குத் துணைநின்ற பிழைப்புவாதி விஜயகாந்துக்கு எதிர்கட்சித் தகுதி கிடைத்திருக்கிறது. போலி கம்யூனிஸ்டுகள், சரத்குமார், கிருஷ்ணசாமி போன்ற உதிரிகளுக்கும் ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. ஆனால், இவர்களையெல்லாம் போயஸ் தோட்டத்து பால்கனிப் பாவை விரைவில் எடுத்து விழுங்கி விடுவார் அல்லது எட்டி உதைத்து விடுவார் என்பது வேறு விடயம்.

இவர்கள் அடைந்துள்ள வெற்றி நேர்மறையிலானதோ, இவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்பதாலோ கிடைத்தவை அல்ல. நமது நாட்டின், குறிப்பாக தமிழ்நாட்டின் மக்கள் ஒரு அரசியல் கட்சி அல்லது அணியை நிராகரிப்பதும், அல்லது வேறொரு கட்சியை அல்லது அணியை தெரிந்தெடுத்து ஏற்பதும் எந்த அடிப்படையில் என்பதைப் பார்க்க வேண்டும். தேர்தல்களின்போது தம்மிடம் வாக்குக் கேட்டுவரும் அரசியல் கட்சிகளின் கடந்தகால வரலாறு, அவற்றின் அணிகள் மற்றும் தலைமையின் செயல்பாடுகள், நம்பகத்தன்மை, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் காட்டும் ஜனநாயக, சமூக கண்ணோட்டம், அக்கறை, அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், வாக்குறுதிகள், இவை போன்றவை மீதான மதிப்பீடுகள் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பதில்லை.தேர்தலுக்குச் சில காலம் முன்பு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பரபரப்பாகப் பேசப்படும் செய்திகள், தம்மை நேரடியாகவும் உடனடியாகவும் பாதிக்கும் பிரச்சினைகள் -ஆகியவற்றுக்கு அப்பால் அரசியல் கட்சிகள் அல்லது அணிகள் பற்றிய தொகுப்பான முழுமையான மதிப்பீடுகள் அடிப்படையில் வாக்களிப்பதில்லை.

மறுகாலனியாக்கத்தால் சூறையாடப்படும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை, விவசாயத்தின் அழிவு, நகரமயமாக்கம், தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல 12 மணி நேரம் வேலை வாங்கப்படுவது, தண்ணீர், கல்வி, மருத்துவம் அனைத்தும் வணிகமயமாக்கப்படுவது – எனத் தமிழக மக்களுக்கு ஓராயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல், காற்றில் சிக்கிய சருகு போல உள்ள அவர்களின் வாழ்க்கையில் ஓட்டுக் கட்சிகளின் ஊழலும் கொள்ளையும், அக்கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களும்தான் உடனடியாகத் தெரிகின்றன. தற்போதைய, முந்தைய ஆட்சிகளில் என்ன நடந்தது என்று மக்களால் தொகுத்துப் பார்க்கத் தெரியாமல், 2ஜி அலைக்கற்றை ஊழல், குடும்ப ஆட்சி, மின்வெட்டு, விலையேற்றம் – என உடனடி நிகழ்வுகளை வைத்து மதிப்பிட்டு முடிவு சேகின்றனர். ஓட்டுக்கட்சிகள் அனைவரும் அயோக்கியர்கள் என்ற பொதுவானதொரு கருத்து மக்களிடம் நிலவிய போதிலும், தற்போதைய, முந்தைய ஆட்சிகள், ஓட்டுக்கட்சிகளுடைய அயோக்கியத்தனங்களையும் தன்மைகளையும் ஒப்பிட்டு இனம் காண்பதற்கான அரசியல் அறிவை மக்கள் பெற்று விடவில்லை.

தற்போதைய ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது என்றால், மாற்றாக வரக்கூடியவர்களின் தகுதி என்ன, பின்னணி என்ன, வரலாறு என்ன என்பது பற்றி ஊடகங்களும் பேசுவதில்லை; ஆளும் கட்சிகளின் குறைகளை அம்பலப்படுத்தும் ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் எல்லாம் புதிதாக வந்தவைபோலவும் அவர்களுக்கென்று முந்தைய வரலாறு, செயல்பாடு எதுவும் இல்லை என்பது போலவும் எழுதுகின்றன.

ஆவணக் காப்பகம் போன்ற தகவல் தொகுப்பும் வசதி வாய்ப்புகள் இருந்தும் ஊடகங்கள் தி.மு.க. ஆட்சியையும், முந்தைய ஜெயா ஆட்சியையும் ஒப்பிட்டுக் காட்டி, அதிலிருந்து உண்மையைக் கூறி மாற்று அரசியல் சக்தியை முன்னிறுத்தவில்லை. அதற்கு பதிலாக அவை பரபரப்புத் தகவல்களை வெளியிடுவதில்தான் குறியாக உள்ளன.

கடந்தகால ஜெயா ஆட்சியின் ஊழல், அதிகாரமுறைகேடுகள், பார்ப்பன பாசிச ஆட்சியின் அட்டூழியங்கள் முதலான அனைத்தையும் அறிந்திருந்தும் ஊடகங்கள் அவற்றைத் தொகுத்துச் சொல்லாது மூடிமறைக்கின்றன. மாறாக, ஜெயலலிதா மாறிவிட்டார் என்று கூறி ஆதரிக்கின்றன; தெரிந்தே மோசடி செய்கின்றன. மக்கள் இரு தரப்பையும் நிராகரித்து விட்டால், இன்றைய அரசியலமைப்பு முறையையே நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது.

தி.மு.க.வையும் கருணாநிதியையும் சாடி, எதிர்தரப்புக்கு வாக்களிக்கும்படி நேரடியாகவும் மறைமுகமாவும் பிரச்சாரம் செய்த ஊடகங்கள், நேர்மறையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வரத் தகுதியானவர்தானா என்று சொல்லவில்லை.

ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதும், அவரை ஆதரிக்கும் ஊடகங்களும் பிழைப்புவாதிகளும் முதலாளிகளும் வழக்கம்போலத் துதிபாடக் கிளம்பிவிட்டார்கள். ஆட்சி மாறும்போது இப்படியெல்லாம் நடப்பது வாடிக்கையானதுதான் என்றாலும், இப்போது பழைய பிசாசை புதிய அம்மனாகச் சித்தரிக்கும் கோயபல்சு வேலையை அவர்கள் திட்டமிட்டுச் சேது வருகிறார்கள். “ஜெயலலிதா இப்போது மாறிவிட்டார், அவரது ஆட்சி வித்தியாசமான ஆட்சியாக இருக்கும்” என்ற பிரமை தேர்தலுக்கு முன்பே ஊடகங்களால் திட்டமிட்டு ஊட்டப்பட்டன. தமிழக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குப் போராட்டமோ, மாற்றுத் திட்டமோ முன்வைக்காத போதிலும், ஜெயாவைத் துதிபாடி மக்களின் கவனத்தை அதை நோக்கிக் குவிப்பது என்று பார்ப்பன ஊடகங்கள் செயல்பட்டன.

“தமிழக மக்கள் இலவசங்களுக்கு மயங்கி ஓட்டுப் போட மாட்டார்கள், பணத்துக்கு ஓட்டுப் போடமாட்டார்கள், எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என்று நிரூபித்துவிட்டார்கள்” என்று இந்த ஊடகங்கள் மக்களைப் போற்றுவதாகக் காட்டிக் கொண்டு அ.தி.மு.க.வுக்குச் சாமரம் வீசுகின்றன. பணபலமிக்க ஆளும் கட்சியான தி.மு.க.தான் பணப்பட்டுவாடா செய்தது, மற்ற கட்சிகள் அப்படிச் செய்யவில்லை என்பதைப் போல எழுதுகின்றன. அதற்காகத் தேர்தல் ஆணையத்தைப் மிகவும் பாராட்டின. முன்பு ஜெயா ஆட்சியிலிருந்தபோது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததும், லட்டுக்குள் மூக்குத்தி, கம்மல்களை வைத்து விநியோகித்ததும், இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் போட்டியிட முடியாதபடி அராஜகமும் நடந்தது. இப்போதும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணப் பட்டுவாடாவை ஜெயா ஆரம்பித்து நடத்தியதும், பொருட்களுக்கு ‘டோக்கன்கள்’ கொடுக்கப்பட்டதும் இப்போது அம்பலத்துக்கு வருகின்றன.

தி.மு.க.வின் இலஞ்ச-ஊழலை அம்பலப்படுத்துவதில் மட்டும் அக்கறை காட்டும் ஊடகங்கள், ஜெயா ஆட்சியில் நடந்த இலஞ்ச-ஊழல், கொள்ளைகளைப் பற்றி வாய்திறப்பதில்லை. ஜெயா மீது சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சோத்து சேர்த்த வழக்குகளும் உள்ளன. இந்த வழக்குகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றன. ராசாவும் தயாநிதியும் சி.பி.ஐ. விசாரணை, வழக்கு காரணமாக பதவியில் இருக்கக்கூடாது என்கிற போது, ஜெயலலிதாவுக்கு மட்டும் அது பொருந்தாதா? இருப்பினும், ஜெயலலிதா கும்பலின் முந்தைய மகாத்மியங்கள் அனைத்தும் ஊடகங்களால் மூடிமறைக்கப்படுகின்றன.

“இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான அலையால் நான் வெற்றி பெறவில்லை. 2001 முதல் 2006 வரையிலான எனது பொற்கால ஆட்சியை மக்கள் நினைவு கூர்ந்து அந்த ஆட்சி வேண்டுமென்றுதான் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்கிறார், ஜெயலலிதா. அவர் தனது முந்தைய ஆட்சியைப் பொற்கால ஆட்சியாகச் சித்தரிக்கும் போது, அதன் யோக்கியதையைச் சொல்ல வேண்டியது ஊடகங்களின் கடமையல்லவா? ஆனால், அவர் மாறிவிட்டார் என்று வானளவுக்குத் தூக்கிக் காட்டுவதோடு, தங்களது பல்வேறு விருப்பங்களையும் நோக்கங்களையும் அதில் ஏற்றிக் கூசாமல் புளுகவும் கிளம்பியிருக்கிறார்கள். “இவர் முந்தைய ஜெயலலிதா இல்லை, என்னேவொரு நிர்வாகத் திறமை, தலைக்கு மேலே ஒளிவட்டம் பாருங்கள்” என்று இந்தக் கோயபல்சுகள் இந்தக் கதாபாத்திரத்தை விளக்கி விளக்கி வியாபாரம் செய்யக் கிளம்பியுள்ளார்கள்.

“தமிழனென்று சோல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்கிற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை ‘தினமணி’ பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது” என்று மெய்சிலிர்த்து தலையங்கம் எழுதுகிறது தினமணி. தமிழக மக்கள் பயங்கரமாக ஆர்த்தெழுந்து, தி.மு.க.வின் ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒரு மாபெரும் புரட்சியைச் சாதித்துவிட்டதாக உச்சி முகர்ந்து கொண்டாடுகிறது, தினமணி. அதிலும் பணம் கொடுத்து வாக்களிப்பவர்கள் என்ற அவப்பெயரை துடைத்தெறிந்து இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாறி நாட்டையே காப்பாற்றிவிட்டார்களாம், தமிழக மக்கள். சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் இருக்கும் என்று தெரிந்த போதிலும், இருந்தாலும் பரவாயில்லை என்று தன்மானமிக்க தமிழக மக்கள் தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு எதிராகக் குமுறி ஜெயா கும்பலை வெற்றி பெற வைத்து விட்டார்களாம். தி.மு.க.வின் குற்றங்களைப் பட்டியலிடும் தினமணி, இந்த வெற்றிக்கு அருகதையானவர்தானா என்று ஜெயலலிதாவைப் பற்றி மறந்தும் எழுதுவதில்லை.

“ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்றார் என்ற உடனேயே, போலீசுத் துறை தானாகவே மும்முரத்துடன் செயல்படத் தொடங்கி விட்டது. இனி தங்களுடைய அட்டகாசங்கள் அடக்கப்படும் என்பதை ரவுடிகள் உணர்ந்துவிட்டது போல நகர்ப்புறங்களில் ஒரு புதிய அமைதி காணப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை நிர்வகிப்பதில் முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பைக் காட்டுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சி முதல் தினத்திலிருந்தே முறையான திசையில் செல்லத் தொடங்கி இருக்கிறது” என்று கோயபல்சை விஞ்சுமளவுக்குக் கூசாமல் புளுகுகிறார், பார்ப்பன துக்ளக் சோ. சென்னை நகரில் கொட்டமடித்து வந்த சங்கிலிப் பறிப்பு ரவுடிகள், உயிருக்கு அஞ்சி ஆந்திரா பக்கம் ஓடிஒளிந்து விட்டனர் என்று ஒரு கட்டுக்கதையை ஜெயாவே பரப்புகிறார். ஆனால்,சென்னை உட்பட தமிழகமெங்கும் சங்கிலிப் பறிப்புகளும் கொலை, கொள்ளைகளும்‌ அடுத்தடுத்து இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

“அவரது முகத்தில் எப்போதுமில்லாத புன்னகை – மென்மையான தாய்மையுணர்வுமிக்க தோற்றத்தைக் கொடுக்கிறது. கருணைமிக்க அம்மாவாகக் காட்சியளிக்கிறார். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு அர்த்தமுள்ளது என்பதை முதல்நாள் தொட்டே நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரின் முந்தைய ஆட்சிக் காலங்களில் ஆதிக்கம் செலுத்திய சர்வாதிகாரத்திற்குப் பதில், வெளிப்படைத்தன்மையும் பதில் கூறும் பொறுப்புணர்வும் இந்த முறை பிரதிபலிக்கிறது” என்று ஜால்ரா போடுகிறது, இந்தியா டுடே. “இது மக்கள் புரட்சி. மக்கள் ஒரு மவுனப் புரட்சியை நடத்தியிருக்கிறார்கள்” என்று ஜெயா துதிபாடுகிறது, குமுதம் ரிப்போர்ட்டர்.

சசிகலா கும்பலை மடியில் கட்டிக் கொண்டுள்ள ஜெயலலிதாவின் வெற்றியை, குடும்ப ஆட்சிக்குத் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்று வெட்கமின்றித் துதிபாடுகின்றனர் போலி கம்யூனிஸ்டுகளான தா.பா.வும் ஜி.ராமகிருஷ்ணனும். ஆட்சிக்கு வந்தவுடனேயே, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் முதற் பணி என்றார், ஜெயலலிதா. அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இருதரப்புக்கும் இழுபறி நீடித்தபோது, அ.தி.மு.க. குண்டர்கள் அராஜகம் செய்து கொண்டிருந்தனர். ஜெயலலிதாவின் ஆட்சியில் போலீசுத் துறையில் தலையீடு இருக்காது, அத்துறையானது சுதந்திரமாகச் சேயல்படும் என்று பிரமையூட்டும் கோயபல்சுகளின் பிரச்சாரம் எவ்வளவு பெரிய பொய் என்பதை, ஜெயா ஆட்சியில் அமைச்சராகப் பதவியேற்கவிருந்த மரியம் பிச்சையின் சாவையொட்டி திருச்சியில் நடந்துள்ள அ.தி.மு.க. குண்டர்களின் ரவுடித்தனம் நிரூபித்துக் காட்டுகிறது.

ஜெயலலிதாவின் ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்று முடிவு செய்வதற்கு ஊகமோ, காத்திருப்போ அவசியமில்லை. தி.மு.க. வின் ஊழலால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு குறித்துப் பெருங்கூச்சல் போட்டே ஆட்சியைப் பிடித்து விட்ட ஜெயா செய்த முதற் காரியம், 1200 கோடி ரூபாய் விரயமாக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகத்தை இழுத்து மூடிவிட்டு, தானே தகுதியற்றதென்று நிராகரித்து, புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு பழமை வாய்ந்த கல்லூரியை இடிக்க எத்தணித்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் வேறெரு இடத்தில் பூமி பூசையும் போட்ட ஜெயா, இப்போது ஜார்ஜ் கோட்டைக்குள் புகுந்துவிட்டார். ஏற்கெனவே அச்சிடப்பட்ட 200 கோடி ரூபாய் பாடப் புத்தகங்களை வீணாக்கி, மேலும் 100 கோடி செலவில் பழைய பாடப் புத்தகங்களை அச்சிட்டு ‘சமச்சீர் கல்வி’யை ஒழிக்கும் நோக்கில் உத்தரவு போட்டுள்ளார். இவற்றையெல்லாம் தனது கோயபல்சு பாணியில் நியாயப்படுத்த வாதம் புரிகிறார். இவையெல்லாம் பார்ப்பன-பாசிச ஜெயா மாறிவிட்டதையா காட்டுகின்றன?
___________________________________

– புதிய ஜனநாயகம், ஜூன் – 2011
___________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. நாய் வாலை நிமிர்த்த முடியுமா? ஜெயலலிதாவை திருத்த முடியுமா?

  2. திருந்திவிட்டார் என்பதே அவர் தப்பானவர் என்ரு தானே அர்த்தம்?நடிகைக்கு சிரிக்க சொல்லியா தர வேன்டும்? அவர் என்னதான் செய்கிரார் என பார்ப்போம்.

  3. சமச்சீர் கல்வியின் பாடத்திட்டம் தரம் உயர்த்தப்பட்டபின் அதைச் செயல்படுத்துவது என்பதில் தவறொன்றுமில்லை. பாடத்திட்டத்தின் தரம் தற்போதைய மாநிலக் கல்வியை விட உயர்வாக உள்ளது. ஆனால் மெட்ரிக் ஐ விடக் குறைவாக உள்ளது.

    புத்தகங்கள் வீணாவதைத் தடுக்க இந்த வருடம் அரசுப்பள்ளிகளில் மட்டும் அதை நடைமுறைப்படுத்தி விட்டு பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்பட்டபின் அடுத்த வருடத்திலிருந்து தனியார் மெட்ரிக் பள்ளிகளில் செயல்படுத்தலாம்.

    தலைமைச் செயலக விவகாரத்தில் இவர் செயல்படும் விதம் கண்டனத்திற்குரியது. தலைமைச் செயலகத்தைச் சீக்கிரம் கட்டி முடித்து விட்டு அங்கு குடிபெயர்வதற்கு வழியைப் பார்க்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

    இதோடு மோனோ ரெயில் திட்டம் குறைந்த செலவு மற்றும் விரைந்து முடிக்கக் கூடியது என்ற முறையில் அறிவித்திருக்கிறார். ஆனால் அது மக்கள்தொகை மிகுந்த மற்றும் பெருகும் சென்னை போன்ற மாநகரங்களுக்கு ஏற்றதல்ல. நீண்ட கால நோக்கும் கொண்டதல்லெளத்தக்த்த்

    • நீங்க ரொம்ப நேர்மையா எழுத நினைக்கிறீங்க ! இது எல்லாமே கையூட்டு வசூல் செய்யும் திறமை.

  4. இன்றைய அரசியலமைப்பு முறையையே நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சம் அவர்களைப் பிடித்தாட்டுகிறது.அதனால்தான் உன்மையை மறைத்து துதி பாடுகின்றனர்.

    தோழர் விடுதலை. அம்பிகளை தேடாதீர்கள்.அம்மாவுக்கு பல்லாக்கு துாக்கி முடிந்ததும்
    வருவார்கள்.

  5. அரசியல்வாதிகள் எப்போதும் திருந்துவதும் இல்லை; மாறுவதும் இல்லை. மக்கள்தான் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்; அல்லது திருந்தி விகிறார்கள்.

    இப்படி மக்கள் மாறிவிடுவதால்தான் மோசமானவர்களே மாறி மாறி ஆட்சிக்கு வருகிறார்கள்.வரலாற்றை மறக்கும் சமூகம் நாசமாய்ப் போகும் என்பதற்கு தமிழகம் ஒரு நேரடிச் சான்று.

    மக்கள் மாறாமல் இருக்கத்தான் இனி பிரச்சாரம் செய்ய வேண்டும் போல.

    • மறதிதான் மனிதனை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது என்று கருணா ஒரு விழாவில் சொன்னதாக நினைவு. அவர் சொன்னதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது.

  6. “சென்னை நகரில் கொட்டமடித்து வந்த சங்கிலிப் பறிப்பு ரவுடிகள், உயிருக்கு அஞ்சி ஆந்திரா பக்கம் ஓடிஒளிந்து விட்டனர் என்று ஒரு கட்டுக்கதையை ஜெயாவே பரப்புகிறார்.”

    ஒடி விட்டர்களா அல்லது அனுப்பிவைடத்துவிட்டார்களா என்று தெரியவில்லை. எல்லாம் இவர்கள் ஏற்பாடு பண்ண ஆளுங்கதானா ?
    என்ன கொடுமை சார் இது

  7. சரியாகச் சொன்னீர்கள் இளையராஜா இவர்களே (பிடிபடாமல் இருக்க)பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு தானாக ஓடிவிட்டார்கள் என ஒப்பாறி வைக்கிறார்கள் நல்ல நகைச்சுவையான கதை கட்டிவிட நடிகைக்கு சொல்லிக் கொடுக்கவும் வேண்டுமோ?

  8. இப்படியே நீங்க எல்லார் மேலையும் விழுந்து புரளலாம் ஆனா ஒங்களால ஜென்மத்துக்கு பதவிக்கு வர முடியாது ராசா!!

  9. அடப் பாவி மக்கா!
    தினமலம் ரமேசும்,மண்டு ராமும் மத்தளம் வாசிக்கும்போது……
    சனநாயகத்தின் ஆத்தாவை இப்படியா எழேதுவது!

  10. திராவிடப் போர்வையில் ஓர்
    ஆரியப் பாவை..
    சிரித்துக் கொண்டே கடிக்கத் தெரிந்த
    ஸ்ரீரங்கத்துப் பாம்பு…
    அகங்காரத்தை அலங்காரமாக
    அணிந்துகொண்ட அனங்கு…
    சங்கத் தமிழ் நாட்டினை
    சாகடிக்க ஊதுகின்ற சங்கு…

    செல்லுலாய்டில் சிதைந்து போன
    செந்தமிழனுக்கு அம்மா…
    அண்ணாவின் பெயர் போற்றி
    அனைவருக்கும் அல்வா…

    கொலை கொள்ளை கற்பழிப்பின்
    களமாகிப் போனதடா….
    கலாச்சாரம் மின்சாரம் தமிழகத்தில்
    காலமாகிப் போனதடா….

    கால் கடுக்க காத்திருந்து
    காலடியில் வீழ்வதற்கு
    மல்யுத்தம் நடத்துகின்ற
    மந்திகளின் கூத்தைப் பார் !

    எந்தத்துறை எவன் பொறுப்பு
    மந்திரிக்கே தெரியாது
    மந்தரித்த மாடுகளாய்
    மதிமயங்கித் திரிவதைப் பார்!

    பெரியாரின் பூமியிலே
    கொலைகாரன் மோடியுடன்
    விருந்தோம்பல் நடத்துகின்ற
    விளையாட்டு விதியைப் பார்!

    இலங்கைத் தமிழருக்கு
    இனிமாவைக் கொடுத்து விட்டு
    சட்ட மன்றக் கூட்டத்தில்
    சலங்கைகட்டி ஆடுது பார்!

    வேலியோர ஓணானை
    வேட்டிக்குள் விட்டு விட்டு
    குத்துதென்றும் குடையுதென்றும்
    கத்துகின்ற தமிழனைப் பார்!

Leave a Reply to sundaram பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க