privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தன்னார்வ நிறுவனங்கள்மனித உரிமை வேடதாரி ''மக்கள் கண்காணிப்பகம்'' ஹென்றி டிபேனின் ரவுடித்தனம்!

மனித உரிமை வேடதாரி ”மக்கள் கண்காணிப்பகம்” ஹென்றி டிபேனின் ரவுடித்தனம்!

-

மதுரை சின்ன சொக்கிகுளத்தில் ஹென்றி டிபேன் என்பவரை செயல் இயக்குனராகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மக்கள் கண்காணிப்பகம்.கடந்த 02.10.2011 அன்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.வல்லரசு என்பவர் கொடுத்த  புகாரின் பேரில்  மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் குற்ற எண். 1697/2011-ல் இ.த.ச.பிரிவுகள் 147, 323, 355, 427,294(பி), 506(i) மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் 1989 ன் படி 1.ஹென்றி டிபேன், அவரது மனைவி 2. சிந்தியா டிபேன்,  மருமகன் 3. பிரதீப் சாலமோன்,  மகள் 4. அனிதா மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூங்கா நகரில் தூங்கா நிலைப் போராட்டம் !

கடந்த 01.10.2011 மாலை 6.00 மணி முதல் 02.10.2011 காலை 6.00 மணி வரை மதுரை அரசரடியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாகத்தில்  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி  தூங்கா நகரில் தூங்கா நிலைப் போராட்டம் என்ற தலைப்பில் ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பில் மரணதண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்  நாஞ்சில் சம்பத்,கொளத்தூர் மணி, தியாகு, சந்திரபோஸ்,  நாகை திருவள்ளுவன், வடிவேல் ராவணன் ,சிபிஜ மற்றும் சிபிஜ[எம்] அமைப்பினர் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர்  கலந்து கொண்ட இந்நிகழ்வில் கல்ஒட்டர்  சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக  வேன்களில் திரட்டி வரப்பட்டிருந்தனர்.பல்வேறு தமிழ் தேசிய, திராவிட, தலித், இடதுசாரி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் வல்லரசு மீது தாக்குதல்

 இந்நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் துண்டறிக்கை விநியோகம் செய்து நன்கொடையும் திரட்டியவர் வழக்கறிஞர் வல்லரசு. இவர்தான் தற்போது ஹென்றி டிபேன் மீது புகார் கொடுத்து வழக்குப் பதியப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு நிகழ்ச்சிக்கு சென்ற வழக்கறிஞர் வல்லரசு அங்கு நடந்தது பற்றிக் கூறியது:

”நான் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்  கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கு 8 வயது இருக்கும்போது என் தந்தை கந்தசாமி இறந்து போய்விட்டார். 9 வயதில் என் தாயார் சுகந்தியும் இறந்து போய்விட்டார்.சிறுவயது முதல் அண்ணன், தம்பிகள் இல்லாமல் தாய், தந்தையரை இழந்து பல்வேறு நபர்களின் உறுதுணையுடன் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மதுரை  சொக்கிகுளத்தில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் என்கிற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அங்கு மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநராகப் பணியாற்றி வருகிற திரு.ஹென்றி டிபேன் என்பவரின் மருமகனும் பணியாளருமான திரு.பிரதீப் சாலமோன் என்பவர் என்னிடம் பிரச்சனை செய்து வந்தார். இத்தகைய நிலையைத் தொடர்ந்து  நான் யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் கொடுக்க விரும்பாமல் பணியில் இருந்து என்னை விலக்கிக் கொண்டேன்.

மக்கள் கண்காணிப்பகத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்ற ஜான்வின்சென்ட் என்பவரிடம் ஜூனியராக உள்ளேன். ஜான்வின்சென்ட் நடத்துகிற தனி வழக்குகளுக்கு உதவி செய்து வந்தேன்.

இந்நிலையில் கடந்த  செப்டம்பர்  இறுதி வாரத்தில் மதுரையில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு முன்பு மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவ்வார்ப்பாட்டத்திலிருந்த பிரதீப் சாலமோன் என்னிடம், பேனரைப் பிடி என்று சொன்னார். நான் மக்கள் கண்காணிப்பக ஊழியர் இல்லாததால் மறுத்தேன் .அதற்கு சாலமோன் என்னை ஆபாசமாகத் திட்டினார்.இதனால் எனக்கும் பிரதீப் சாலமோனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதன்பின் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மரண தண்டனை ஒழிப்பு சம்பந்தமான தூங்காநிலை மாநாடு ஒன்றினை அக்டோபா 1ம் தேதி நடத்தினர். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரவு சுமார் 10.00 மணியளவில் இறையியல் கல்லூரி வளாகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு என் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டுத்  திரும்பும்போது என் வாகனம் உடைந்து கீழே கிடந்தது தொடர்பாக  பிரதீப்பிடம் கேட்டதற்கு உன்னை எவன்டா இங்கே வரச் சொன்னது என்று சொல்லி அவமானப்படுத்தினார்.

அதன்பின் நான் அங்கிருந்த மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றியிடம்  சார் உங்கள் மருமகன் எப்போது பார்த்தாலும் என்னை இழிவாகப் பேசுகிறார்,அவமானப்படுத்துகிறார்.தயவுசெய்து அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறினேன். அதற்கு ஹென்றி டிபேன் என் மருமகனை பற்றி எனக்குத் தெரியும்டா, நீ யாருடா புகார் கொடுப்பது, என்று கூறிக்கொண்டே என் கழுத்தை நெறித்து கீழே தள்ளிவிட்டார். பின்னர்  என் சட்டையைப் பிடித்து தூக்கி தரதரவென்று இழுத்துக் கொண்டே வெளியே போடா ராஸ்கல் என்று கத்தினார். நான் அவரது பிடியில் சிக்கிக்கொண்டு, சார் நான் ஒரு வழக்கறிஞர்  என்னை இப்படி பொதுக்கூட்டத்தில் வைத்து அவமானப்படுத்தாதீர்கள் என்று கெஞ்சினேன். அப்போது என் செருப்பு கழண்டு கொண்டது. நான் ஹென்றிடிபேனிடம் சார் என் செருப்பை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியதற்கு அவர் எடுப்பதற்குச் சம்மதிக்கவில்லை. வாடா என்று கூறிக்கொண்டே என்னை வெளிவாயில்வரை  இழுத்து வர அங்கு பிரதீப் சாலமோனும் பலரும் சேர்ந்து கொண்டு என்னைத் தாக்கினார்கள்.

பிரதீப் சாலமோனின் மனைவி அனிதா,ஹென்றியின் மனைவி சிந்தியா ஆகியோர் என்னைச் செருப்பால் தாக்க முயற்சித்தனர்.செருப்பு என் மேல் படாமல் கீழே விழுந்தது.உடம்பு மற்றும் காலில்  கடுமையான வலி ஏற்ப்பட்டது. அவசர போலிஸ் 100க்கு தகவல் சொல்லிப் புகார் கொடுத்தேன். நான் கடந்த 02.10.21011 முதல் 08.10.2011 வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக  சிகிச்சை எடுத்தேன்.ஏற்க்கனவே பிளேட் வைக்கப்பட்டிருந்த எனது காலில் அடிபட்டதால் தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

இதனிடையே கடந்த 04.10.2011 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் என்னிடம் விசாரணை செய்வதற்காக காவல் உதவி ஆணையா திரு.கணேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்தார். அவரது வாகனத்தை பின்தொடர்ந்து மக்கள் கண்காணிப்பகத்தின் வாகனமும் அதில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கக்கூடிய பிரபாகரன் என்பவர் உள்ளிட்ட  சிலரும் இருந்தனர். உதவி ஆணையர்  என்னிடம் என்ன நடந்தது என்று விசாரணை செய்த பின்பு ஹென்றி டிபேன்  செல்வாக்கு உள்ளவர். டிஸ்சார்ஜ் ஆகுங்கள் என்று சொன்னார்.

தற்போது தனக்கு இருக்கக்கூடிய செல்வாக்கு தொண்டு நிறுவன தொடர்புகள் இதெல்லாம் கொண்டு இப்பிரச்சனையை திசை திருப்புகிற முயற்சியிலும் ஹென்றிடிபேன் ஈடுபட்டு வருவதாக அறிகிறேன்.எனக்கு நீதி வேண்டும்”.

உயர்நிதி(!)மன்றக் கூத்து!    

மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து 04.10.2011 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் கோரி வழக்கறிஞர் திரு.ஆறுமுகம் (வழக்கறிஞர் திரு.லஜபதிராயிடம் இளம் வழக்கறிஞராக இருந்தவர்)மூலம் மனுதாக்கல் செய்தனர்  ஹென்றி டிபேன் குடும்பத்தினர். போலிஸ் தரப்பில் ஆஜரானவர்  வழக்கறிஞர்  திரு.பாலசுப்பிரமணியன். மாலை 5.30 மணி வரை ஹென்றிடிபேனின் பிணை மனுவே கிடைக்கப்பெறாத வழக்கறிஞர் பாலசுப்பிரமணியத்திற்கு மக்கள் கண்காணிப்பக  வழக்கறிஞர்கள்தான் மனுவின் நகலையே கொடுத்தனர்.போலிஸ் வழக்கறிஞர்  பின்னாலே தான் மக்கள் கண்காணிப்பக  வழக்கறிஞர்கள் நின்றிருந்தனர். ஹென்றிடிபேன் மனு 10 வது வழக்காக இருந்தது. 8வது வழக்கு டி. லஜபதிராய் என்று அழைக்கப்பட்டவுடன் என்ன வழக்கென்று கேட்காமலேயே USUAL DIRECTION GRANTED என்று சொன்னார் நீதிபதி கர்ணன்.[வழக்கறிஞர் லஜபதிராய் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்வார்கள் என்று நீதிபதிக்குச் சொல்லப்பட்டிருந்தது போலும்.(ஹென்றி அண்ணே! உங்க அளவுக்கு சாமர்த்தியம் கர்ணனுக்கு இல்லண்ணே!கொஞ்சம் டிரெயினிங் குடுங்க!) நீதிமன்ற ஊழியர்கள், அரசு வழக்கறிஞர்கள்  இது வேறு வழக்கு என்று தெரிவிக்க, பின்பே நிதானத்திற்கு வந்த நீதிபதி 8 & 9 வழக்கிற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு 10வது வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போது பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்  வல்லரசு சார்பாக மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் ஆஜராகி புகார்தாரர் சிகிச்சையில் இருப்பதால் இவ்வழக்கில் பிணை உத்தரவு வழங்க கூடாது, மேலும் புகார்தாரர் மனுதாக்கல் செய்ய காலஅவகாசம் கொடுத்து வழக்கை திங்கட்கிழமையன்று ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.

அரசுதரப்பு வழக்கறிஞர் புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து சென்று விட்டார் என்று பொய்யான தகவலைச் சொல்ல  அதை மறுத்து சிகிச்சையில் இருப்பதற்கான ஆவணங்களை வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் தாக்கல் செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி உத்தரவு வழங்குவதிலேயே முனைப்பாக இருந்து உத்தரவு வழங்குவதை எதிர்த்தால் நீதிமன்ற அவமதிப்பு எடுப்பேன் என்று சொல்ல, இந்த மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன், நீதிமன்ற அவமதிப்பை சந்திக்கத் தயாராக உள்ளேன் என்று வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் பதிலடி கொடுக்க அதையும் மீறி நீதிபதி கர்ணன் ஹென்றிடிபேனுக்கு ஆதரவாகப் பிணை உத்தரவு வழங்கினார்.

மேற்படி இச்சம்பவத்தில் ஹென்றிடிபேனால் போலீசு தரப்பு வழக்கறிஞரும், நீதிபதி கர்ணனும் விலைக்கு வாங்கப்பட்டிருந்தார்கள் என்பது அன்று (04.10.2011) நீதிமன்றத்தில் இருந்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தெளிவாகத்  தெரிந்தது.

ஹென்றிடிபேனுக்குப்  பிணை வழங்கிய நீதிபதி கர்ணன் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.கே.ஜி.பாலகிருஷ்ணனின் தம்பி பாஸ்கரனுக்கு சப்ளை அண்ட் சர்வீஸ் செய்து பணம் கொடுத்து பதவிக்கு வந்தவர் என்பது ஊரறிந்த உண்மை. நீதிபதி கர்ணன் அவர்கள் 04.10.2011 அன்று திருச்சி கே.என்.நேரு, கரூர் கே.சி.பழனிச்சாமி, நடிகை குஷ்பு, ஹென்றிடிபேன், பொட்டு சுரேஷ் ஆகியோருக்கு உரிய நீதி வழங்கி தனது தீபாவளி வசூலை சிறப்பாக முடித்துச் சென்றதை வழக்கறிஞர்கள் அறிவார்கள்.

இதற்கிடையில் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீசார் ஹென்றிடிபேன் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வல்லரசை மருத்துவமனையில் இருந்து வெளியேற நிர்ப்பந்தித்து வெளியேற்றி விட்டார்கள்.

இப்படியாக காவல்துறையுடனும், நீதித்துறையுடனும் கள்ளக்கூட்டு வைத்து செயல்பட்டு வரும் மக்கள் கண்காணிப்பக ஹென்றிடிபேன்தான் காவல் துறை சித்திரவதை மற்றும் நீதித்துறை ஊழலை எதிர்த்துப் போராடி வருவதாக நாடகமாடி வருகிறார்.

மக்கள் கண்காணிப்பகத்தில் குடும்ப ஆதிக்கம்!

ஹென்றி டிபேன்
ஹென்றி டிபேன்

ஹென்றி டிபேனின்  மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஜனநாயக விரோத அமைப்பு. அங்கு ஹென்றி டிபேனும் அவரது குடும்பத்தினரும்தான் எல்லாம்.அவர்களை மீறி யாரும் பேச முடியாது.ஊழியர்களை எல்லாம் அடிமைகளாகத்தான் நடத்துவார்கள்.எதிர்க்கும் நபர்களை திட்டமிட்டுப் பழிவாங்கி விடுவார்கள். இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.2005 ஆம் ஆண்டு  ம.க.இ.க.தோழர்களிடம் பேசியதற்க்காக  ஹென்றி டிபேன் வழக்கமாக நடத்தும் தீவிரப் புலன்விசாரணையை(பெரிய துப்பறியும் சாம்பு!) சுயமரியாதையோடு எதிர்த்து நின்ற ஓட்டுநர் மோகன்குமாரிடம் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்துக் கொண்டு ,சம்பளமும் தராமல் வம்பு செய்ய ,பின்பு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலையீட்டின் பேரில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அதன் பிறகே  ஓட்டுநர் உரிமத்தைக் கொடுத்தார் இந்த மனித உரிமைக் காவலர் ஹென்றி டிபேன். பின்பு  தொழிலாளர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தார் மோகன்குமார்.அதன்பின் மக்கள் கண்காணிப்பகத்திற்க்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் உள்ள கள்ள உறவை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் பத்திரிக்கை மக்கள் கண்காணிப்பகத்தால் குன்னூரில் நடத்தப்பட்ட உலகமய ஆதரவுக் கூட்டப் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் அப்புகைப்படத்தை வழங்கினார் என்று குற்றம்சாட்டி அமுதா என்ற ஊழியரின் மெயிலை அவர் அனுமதியின்றி திருட்டுத்தனமாகப் பார்த்து,விசாரணை என்ற பேரில் சித்திரவதை செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு ஒரு நாள் விடுப்பு எடுத்ததற்க்காக ஆறு வருடங்களாய் மக்கள் கண்காணிப்பகத்திற்க்காக கடுமையாக உழைத்த உமா ராணி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.விளக்கம் தரக்கூட மக்கள் கண்காணிப்பக அலுவலகத்திற்க்குள் அனுமதிக்கப்படாமல் விரட்டியடிக்கப்பட்டார்.இப்படி ஹென்றி டிபேனின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் மிக நீளமானது.தற்போது வழக்கறிஞர் வல்லரசுவின் சீனியராக இருந்த ஒரே குற்றத்திற்க்காக 15 வருடங்கள் ஹென்றிக்காக பணியாற்றிய வழக்கறிஞர் ஜான் வின்செண்ட் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார். நெஞ்சில் இரக்கமற்ற கொடிய முதலாளிகள் கூட ஹென்றி டிபேன் போல் நடக்கத் துணிய மாட்டார்கள்.முன்னறிவிப்பின்றி டிஸ்மிஸ் செய்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பம் எவ்வளவு துன்பப்படும் என்பதை இந்த ஏ/சி அறைக் கோமான் அறிய மாட்டார் போலும். இதோடு  மக்கள் கண்காணிப்பகத்தில் பணிபுரியும் ஹென்றியின் மனைவி சிந்தியாவின் ஆணவம்,அதிகாரத் திமிர் ஊரறிந்தது.மக்கள் கண்காணிப்பகத்தில் தங்கிப் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சொந்த வேலைக்குப் பயன்படுத்துவது முதல் தனக்குப் பிடிக்காதவர்களை ஹென்றியிடம் போட்டுக் கொடுத்துப் பழிவாங்குவது வரை அத்தனையும் செய்வார் இந்தச் (ச்சீ……)சீமாட்டி.இதற்க்கடுத்து மகள் அனிதா,மருமகன் பிரதீப் என்று குடும்பக் குத்துவிளக்குகளின் அதிகார எல்லை நீளூம்.நல்ல வேலை ஹென்றிக்கு கருணாநிதியைப் போல் சில மனைவிகள்,பல குழந்தைகள்,பலப்பல பேரக் குழந்தைகள் இல்லை.தப்பித்தார்கள் மக்கள் கண்காணிப்பக ஊழியர்கள்!

மக்கள் கண்காணிப்பகம் பன்னாட்டு முதலாளிகளின் கள்ளக் குழந்தை!

ஹென்றி டிபேன்

ஹென்றிடிபேனின் மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்பு. உலகெங்கிலும் நடந்து வருகிற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுகின்ற மக்களையும்; மனித உரிமைகள் மீது ஆர்வம் கொண்டுள்ள ஜனநாயக சக்திகளையும் தங்களின் வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதற்காகவே அமெரிக்க அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க கண்காணிப்பகம், ஆசியா கண்காணிப்பகம் என ஒவ்வொரு நாட்டிலும்  மனித உரிமை அமைப்புகளைக்  கட்டி இயக்கி வருகின்றன. அத்தகைய ஏகாதிபத்திய திட்டத்தின் ஓர் அங்கம்தான் ஹென்றிடிபேன் நடத்தி வரும் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் சித்ரவதைக்கு எதிரான பிரச்சாரம்.

அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் திணிக்கும் தனியார்மய பொருளாதாரக் கொள்கைகள் தான் உலகெங்கிலும்  மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து மக்களைச் சாவின் விளிம்பில் தள்ளுகின்றன. யாரைச் சமரசமின்றி எதிர்க்க வேண்டுமோ, அவர்களிடமே காசு வாங்கிக் கொண்டு மனித உரிமைகள் பற்றிப் பேசும் ஹென்றிடிபேனின் மக்கள் கண்காணிப்பகம் என்பது நண்பன் வேடத்தில் இருக்கும் துரோகி.மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் இணைந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வடிகால் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க வேண்டும்; அரசியல் உணர்வைக் காயடிக்க வேண்டும் என்ற ஏகாதிபத்திய அரசுகளின் திட்டங்களை அவர்கள் சொல்லுகிறபடியே செயல்படுத்தும் ஒரு பொம்மைதான் மக்கள் கண்காணிப்பகம்.

இந்த பசுத்தோல் போர்த்திய புலிக்கு முற்போக்கு ,சிவப்புச் சாயம் பூசி அரசியல் அரங்கில் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் அயோக்கியத்தனமான வேலையைத்தான் தமிழ் தேசிய, திராவிட, தலித், சி.பி.ஐ, சி.பி.எம். கட்சிகள் செய்கின்றன.

இவ்வாறாக மக்கள் கண்காணிப்பகம் அதன் தன்மையில் ஓர் ஜனநாயக விரோத, குடும்ப ஆதிக்க நிறுவனமாகவும்,ஹென்றி டிபேன் ஓர் கொடிய கார்ப்பரேட் முதலாளியாகவும்  இருந்து ஓர் பன்னாட்டு நிறுவனத்திற்க்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள நிலையில் அதை மனித உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பென்று கூற முடியுமா?

கூடுதலாக,

1] மக்கள் கண்காணிப்பகத்திற்க்கு பல நூறு கோடி ரூபாய் நிதி எங்கிருந்து வருகிறது?

2] என்ன நோக்கத்திற்க்காக நிதி வழங்கப் படுகிறது?

3] மக்கள் கண்காணிப்பகம் தொடங்கியதிலிருந்து இன்று வரை பெறப்பட்ட நிதி எவ்வளவு? கொடுத்தது யார்?உடன்படிக்கை விபரங்கள் என்ன?

4] நிதிகள் நிறுத்தப் பட்டால் தற்போது எடுக்கப்பட்ட போராட்டங்களின் நிலை என்ன?

5]ஆயிரங்களில்,லட்சங்களில் சம்பளம் பெற்று மனித உரிமைக்குப் போராட முடியுமா?

6] மக்கள் கண்காணிப்பகத்தின் கொள்கை,லட்சியம் என்ன? அடையும் வழிமுறைகள்,திட்டங்கள் என்ன?

7]  மக்கள் கண்காணிப்பகத்தோடு எந்த அடிப்படையில் தமிழ் தேசிய,திராவிட,தலித்,இடதுசாரி அமைப்பினர் இணைந்து பணியாற்றுகின்றனர்?

8] வழக்கறிஞர் வல்லரசு தாக்கப்பட்ட சம்பவம்,அதையொட்டி காவல்துறை,நீதித்துறை உடனான ஹென்றியின் உறவு குறித்து   மக்கள் கண்காணிப்பகம் கூறுவதென்ன?  அதன் தோழமை அமைப்பினர் நிலைப்பாடென்ன?

இவற்றிற்க்கு  மக்கள் கண்காணிப்பகம் மட்டுமல்ல ஏகாதிபத்திய நாடுகளிடம் பிச்சையெடுத்து ஹென்றி விட்டெறியும் எலும்புத் துண்டுகளுக்காக எச்சில் ஒழுக ஹென்றி டிபேனிடம் உறவு வைத்துள்ள பலரும் நேர்மையாகப் பதில் சொல்ல வேண்டும்.[ உண்மை அறியும் குழு கூட அமைக்கலாம்!

{அல்லது}

உண்மைகளை உலகத்திற்க்கு உரத்துச் சொல்ல ஹென்றி டிபேனும்,மக்கள் கண்காணிப்பகமும் தன்னை ஒரு பொது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்?  அதன் தோழமை அமைப்பினர் கூட இதற்கு முயற்சிக்கலாம்.செய்வார்களா?

____________________________________________

இணைப்பு: மக்கள் கண்காணிப்பகத்தில் பணியாற்றிய ஒருவரின் கடிதம்:

இரா.முருகப்பன்,

7, பாரதிதாசன் நகர், கல்லூரிசாலை, திண்டிவனம் – 604 001

———————————————————————————————————————

பெறல்:

திரு. ஹென்றி டிபென் அவர்கள்

இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம் – தமிழ்நாடு

சொக்கிக்குளம், மதுரை

பார்வை  : 02.06.06 நாளிட்ட நிர்வாகி அவர்களின் கடிதம்

ஐயா, வணக்கம்

பார்வையில் கண்ட கடித்ததில் நான் பணியை ராஜினாமா கடிதம் எழுதாமலும் ரூபாய் மூவாயிரம் கணக்கு நேர் செய்யாமலும் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். மேலும் மதுரை அலுவலகத்திற்கு நேரில் வந்து கணக்குகளை ஒப்படைப்பு செய்யும் படியும் கேட்டுள்ளீர்கள்.

  1. நான் ரூபாய் மூவாயிரத்திற்கான கணக்கை நேர் செய்யத் தயாராக இருக்கிறேன்.
  2. நான் பணி செய்த காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2005க்கான ஊதியத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. பணி நீக்கம் செய்யப்படாத நிலையில் பிழைப்பூதியமும் வழங்கப்படவில்லை. தங்கள் நிறுவனத்திடமிருந்து எனக்கு வரவேண்டிய தொகையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  3. தங்களிடம் உள்ள என்னுடைய மேல்நிலை பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் செல்பேசியைக் கேட்டு பலமுறைக் கடிதம் எழுதிய பின்பு இவ்வளவு நாட்கள் கழித்து என்னிடம் ராஜினாமா கடிதம் கேட்டிருப்பது உள்நோக்கம் உடையதாகத் தெரிகிறது.
  4. அவசியம் கருதி நான் கேட்டபின்பும் தங்களுக்கு நான் தரவேண்டிய ரூபாய் மூவாயிரத்திற்கு பிணையாக என்னுடைய பள்ளிச் சான்றிதழை தாங்கள் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதும் மனித உரிமை மீறல் என்பதும் தாங்கள் அறிந்ததுதான். எந்த தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் பின்பற்றாத ஒரு நடைமுறையாகும்.
  5. நான் விகடன் குழுமத்தில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டத்தில் சேர நடைபெறும் நேர்காணலுக்கு என்னுடைய சான்றிதழ் தேவை எனக் கேட்டிருந்தேன். தாங்கள் சான்றிதழை அனுப்பாமல் பார்வையில் கண்ட கடிதத்தை அனுப்பியுள்ளீர்கள். மேற்படி விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் நான் பள்ளிச் சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக தேர்வு செய்யப்படவில்லை எனில் அதன்முழுப் பொறுப்பும் தங்களையே சாரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
  6. தங்கள் கடிதத்தில் என்னை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளீர்கள். நான் அலுவலகத்திற்கு வரும் பட்சத்தில் அவமானமும் உளரீதியான சித்திரவதையும் மன அழுத்தமும் சந்திக்க நேரிடும் என்பது என்னுடைய கடந்த கால நேரிடை அனுபவமாகும். நான் பணிபுரிந்த காலங்களில் இதுபோன்று சம்பவங்கள் நடந்ததை அறிவேன். தங்கள் நிறுவனத்தின் உளவியல் ரீதியான சித்திரவதையையும் அவமானத்தையும் தாங்காமல் பலர் ராஜினாமாக் கடிதம் கொடுத்துள்ளதையும் நான் அறிவேன். குறிப்பாக தலித்துகளான வனராசன், மோகன், சோபியா, செம்மலர் போன்றோரும் வரவேற்பரையில் பணியாற்றிய மகராசன், கோபால் உள்ளிட்ட இன்னும் பலருக்கு நேர்ந்தவற்றை நான் குறிப்பாக அறிவேன்.  மனித உரிமை நிறுவனம் என்ற அடையாளத்துடன் செயல்படும் தங்கள் அலுவலகத்திற்கு நான் வந்தால் எனக்கும் அத்தகைய நிலைதான் ஏள்படும் என்பதை நான் அறிந்தும் உணர்ந்தும் அனுபவித்தும் உள்ளேன். ஆகையால் என்னுடைய சான்றிதழ் மற்றும் செல்பேசியை வழங்கவும் கணக்கை நேர் செய்யவும் அலுவலகத்திற்கு நேரில் வர விருப்பம் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
  7. தங்கள் அலுவலகத்தில் ஊழியர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும் ஊழியர்களின் சான்றிதழ்களை பிணையாக வாங்கி வைத்துக்கொள்வதையும் ஊழியர்கள் இடையே சாதியப்பாகுபாடு  கடைபிடிக்கப்படுவதையும் தலித் ஊழியர்கள் அங்கீகரிக்கப்படாததையும் மறைமுகமாக உளவியல் சித்திரவதைக்கு ஊழியர்கள் உள்ளாக்கப் படுவதையும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுவதையும் சக ஊழியர்கள் அச்சமின்றி ஒருவருடன் ஒருவர் பழக இயலாமல் ஒருவரை ஒருவர் நம்ப முடியாமல் எப்பொழுதும் அச்சம் நிறைந்த சூழ்நிலையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டியதையும் நான் என்னுடைய சொந்த பிரச்சினையாக மட்டும் பார்க்கவில்லை. இதை ஒரு சமூகம் மற்றும் பொதுப் பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இவண்
இரா.முருகப்பன், திண்டிவனம்
04.06.2006

நகல் :

10.06.06ல்      1.         –           கோ.சுகுமாறன்

2.         –           வழக்.பொ.இரத்தினம்

3.         –           வழக்.ராஜு

4.         –           திரு.அபிமன்னன்

12.06.06ல் தகவலுக்கான கடிதம்

5.         –           கொளத்தூர்.மணி

6.         –           பழ.நெடுமாறன்

7.         –           வழக்.இராபர்ட்

8.         –           புனிதப்பாண்டியன்

9.         –           தேவநேயன்

10.       –           வழக்.கே.சந்துரு

11.       –           தொல்.திருமாவளவன்

12.       –           பேரா.அ.மார்க்ஸ்

13.       –           பேரா.சே.கோச்சடை

____________________________________________________________________

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ் நாடு –
மதுரை மாவட்டக் கிளை.
_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]