privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சங்கர் குஹா நியோகி: மண்ணையும் மக்களையும் நேசித்த தலைவன்!

சங்கர் குஹா நியோகி: மண்ணையும் மக்களையும் நேசித்த தலைவன்!

-

1. தொழிற்சங்கம் (லேபர் யூனியன்) என்றால் உங்களுக்கு என்ன நினைவு வரும்?

சில பேருக்கு தென்னக ரயில்வேயின் கண்ணையா போன்று தொழிற்சங்கம் என்ற பெயரில் வேலை செய்யாமல் பணக்காரர்களாக வாழும் நபர்கள் நினைவுக்கு வருவார்கள். பலருக்கு, ‘வேலை செய்ய விருப்பம் இல்லாமல் கொடி பிடிப்பவர்கள் கூட்டம்’ என்றும் ‘தொழிற்சங்கம் அமைத்தால் தொழிற்சாலையில் எப்படி ஒழுக்கம் இருக்கும்? வேலை செய்யாதவர்களை எப்படி நிர்வாகம் தட்டிக் கேட்க முடியும்? உடனேயே வேலை நிறுத்தம் என்று அடாவடி செய்ய மாட்டார்களா?’ என்ற எண்ணங்கள் மனதில் எழும்பும்.

‘ஒரு காலத்தில் தொழிற்சங்க இயக்கம் தேவையாக இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் தொழிலாளர் நல சட்ட திட்டங்கள் மூலம் தொழிலாளர் நிலைமை உயர்ந்து விட்டது. குறிப்பாக சந்தையில் நிலவும் போட்டியின் விளைவாக நிர்வாகங்களே அதிக வசதிகளை செய்து கொடுக்கின்றன. இந்த நிலையில் தொழிற்சங்கம் எல்லாம் காலாவதி ஆகிப் போன கோட்பாடு’ என்பது சிலரது கருத்து.

2. சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்றால் என்ன நினைவு வரும்?

பிபிசி, சிஎன்என் இன்டர்நேஷனல் போன்ற மேற்கத்திய தொலைக்காட்சிகளைப் பார்ப்பவர்களுக்கு ஷெல், பிரிட்டிஷ் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் ‘சுற்றுச் சூழலுக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம்’ என்று காட்டுவதற்காக வெளியிடும் காடுகள், மரங்கள், பறவைகள், வெட்டுக் கிளிகள் நடிக்கும் விளம்பரங்கள் நினைவுக்கு வரலாம்.

‘இந்த என்ஜிஓக்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைக் காரணம் சொல்லி எந்த ஒரு வளர்ச்சிப் பணியையும் எதிர்ப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்! அணை கட்டினால், இடம் பெயர்த்தப்படும் மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள், அணு மின் உலை அமைத்தால் கதிர் வீச்சு அபாயம் என்று மக்களை போராட தூண்டுகிறார்கள், அனல் மின்நிலையம் அமைத்தால் நிலக்கரி புகையால் மாசுபடுகிறது என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்,’ ‘இப்படியே எல்லாவற்றுக்கும் முட்டுக் கட்டை போட்டால் நாட்டு முன்னேற்றத்துக்கு மின்சாரம் எங்கிருந்து வரும்?  பொருளாதார வளர்ச்சியை எப்படி சாதிக்க முடியும்?’ இது சிலரது கருத்து.

3. (Sustained Development) நீண்ட கால வளர்ச்சி என்றால் என்ன?

இயற்கை வளங்களை பொறுப்புடன் பயன்படுத்தி, எல்லா மக்களுக்கும் வாய்ப்புகளும் வருமானமும் கிடைக்கும்படி ஏற்படும் வளர்ச்சி. கார்பொரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி (CSR) எனப்படும் வணிகநிறுவன சமூக பொறுப்புணர்வு மூலம் வணிக நிறுவன குழுமங்கள் இதை சாதிக்க முற்படுவதாக சிலர் நினைக்கலாம்.

தொழிலாளர் நலன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நீண்ட கால வளர்ச்சி என்ற மூன்று கேள்விகளுக்கும் அளிக்கப்படும் தீர்வுகள் குறையுடையனவாகவே இருப்பதை நாம் உணர்கிறோம். இவ்வளவுதான் சாத்தியம் என்று சமரசம் செய்து கொண்டு அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நடைமுறையில் இந்த பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுடன் தொழில் வளர்ச்சியை ஆதரித்து யார் செயல்பட முடியும்?

“சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் தொழில் வளர்ச்சிக்கு எதிரான கருத்துக்களும் உருவாகி வருகின்றன. இயற்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான சமநிலையை பராமரிக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் இதைச் செய்ய முடியும்” – இப்படி சொன்னவர் சத்திஸ்கர் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கிய சங்கர் குஹா நியோகி.

சங்கர் குஹா நியோகி
சங்கர் குஹா நியோகி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சங்கர் குஹா நியோகி 1991-ல் பிலாய் நகரில் தனது 48வது வயதில் வாடகை கொலைகாரர்களால் கொல்லப்பட்டார். அவர் அப்படி என்ன குற்றம் செய்து விட்டார்? கண்ணையா போல ஊழல் வாழ்வு வாழ்ந்தாரா? காட்டில் மரங்களை வெட்டி விற்று பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தாரா? அல்லது என்ஜிஓ என்ற பெயரில் ஊழல் செய்து கொண்டிருந்தாரா? எதற்காக அவர் கொல்லப்பட்டார்?

1960களில் நியோகி பிலாய் ஸ்டீல் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து கொண்டே படித்து பிஎஸ்சி பட்டம் பெற்றார். 1964-65-ல் தொழிற்சங்க பணிகளில் ஈடுபட ஆரம்பித்து, பிளாஸ்ட் பர்னஸ் செயல் குழுவின் செயலாளர் ஆக பணியாற்றினார். அடுத்து வந்த ஆண்டுகளில் நியோகி இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மா-லெ) வின் முன்னோடியான கம்யூனிஸ்டு புரட்சியாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவுடன் தொடர்பு வைத்திருந்தார். அவரது அரசியல் நடவடிக்கைகளின் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்டார்.

குறுகிய காலத்துக்கு சிபிஐ(எம்எல்) கட்சியில் சேர்ந்து தலைமறைவாக வேலை செய்த பிறகு கட்சியை விட்டு விலகி தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தார்.

வடக்கு பஸ்தரில் காட்டு வேலை, துர்க் மாவட்டத்தில் மீன் பிடித்து விற்கும் வேலை, கேரி ஜூங்காதாவில் விவசாய வேலை, ராஜ்நந்தகாவில் ஆடு மேய்த்தல் என்று பலவிதமான வேலைகள் செய்து வாழ்ந்து வந்தார். பஸ்தர் பகுதி ஆதிவாசிகளின் போராட்டம், ராஜ்நந்தகாவில் மோங்க்ரா அணைக்கு எதிரான கிளர்ச்சி, தாய்ஹந்த் மக்களின் தண்ணீருக்கான போராட்டம் இவற்றின் மூலம் மக்கள் இயக்கங்களைப் பற்றிய பாடங்களைக் கற்றுக் கொண்டார்.

தானி தோலாவின் க்வார்ட்சைட் சுரங்கங்களில் வேலை செய்யும் போது சுரங்கத் துறை மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுடனான அவரது நீண்டகால தொடர்பு ஆரம்பித்தது. இங்குதான் ஆஷா என்ற சுரங்கத் தொழிலாளியை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். சுரங்கத் தொழிலாளர்களை ஒன்று திரட்டும் அவரது நடவடிக்கைகள் 1975-ல் நெருக்கடி நிலை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் அளவுக்கு வளர்ந்திருந்தன. மிசா சட்டத்தின் கீழ் 13 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு வெளியில் வந்தார். தல்லி ரஜாராவுக்கு குடி பெயர்ந்து சத்திஸ்கர் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தை (CMSS – சத்திஸ்கர் மைன்ஸ் ஷ்ராமிக் சங்) உருவாக்கினார்.

சத்திஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தின் வடக்கில் துர்க் மாவட்டத்தின் தென்பகுதியை உள்ளடக்கிய இந்த பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயணம் செய்யும் ஒருவர் அடர்ந்த காடுகளைக் கடந்துதான் போக வேண்டும். ஒரு நாள், பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் பகுதியாக இந்திய ஜியாலஜிகல் சர்வே அதிகாரிகள் காட்டிற்கு வந்தார்கள். இந்தப் பகுதியில் இரும்புத் தாது செறிவு அதிகம் என்று அவர்கள் கண்டுபிடித்திருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து ரஷ்ய மற்றும் இந்திய பொறியாளர்கள் வந்தார்கள். புல்டோசர்களின் கடூரமான ஓசை அதற்கு முன் இருந்தவை எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்த வந்து சேர்ந்தது.

ஆசியாவின் அதிக இரும்பு தாது உற்பத்தி செய்யும்  சுரங்கங்களில் ஒன்று தோண்ட ஆரம்பிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. அவை இருந்த இடத்தில் பல மர அறுவை ஆலைகள் முளைத்தன. தவழ்ந்து சென்ற தெளிந்த நீரோடைகள், அவற்றுள் வந்து கலந்த இரும்பு தாது துகள்களால் ரத்தச் சிவப்பாக மாறின. ராஜ்நந்த் காவ் முதல் துர்க் வரை ராய்புர் வரை மர ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் மாளிகைகள் முளைத்திருந்தன.

ராஜ்ஹராவின் இரும்புத் தாது சுத்திகரிக்கப்பட்டு பிலாய் ஆலையில் எ்ஃகாக மாற்றப்பட்டது. அதன் புகை போக்கிகளிலிருந்து வரும் புகை ‘வளர்ச்சி’ யை கொண்டாடியது. அழிவின் கறை படிந்த அஸ்திவாரங்களில் ‘புதிய வளர்ச்சி’யின் சிகரங்கள் உருவாயின.

அதைத் தொடர்ந்து சிமென்ட் ஆலை நிறுவப்பட்டது. சிமென்ட் தூசி மழை விளைநிலங்களின் மீது படிந்து லட்சக்கணக்கான விவசாயிகளின் விவசாயத்தை அழித்தது. இதற்கிடையில் புதிதாக திறக்கப்பட்ட டிஸ்டிலரியிலிருந்து அழுகும் மொலாசஸின் வாடை எங்கும் நிறைந்தது. கடைசியில் எல்லா ஆறுகளும் மாசுபடுத்தப்பட்டு விட்டன. ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மத்தியில் கொடூரமான அரிப்பு நோய் பரவியது. கால்நடைகளின் இறப்பு வீதம் கட்டுக்கடங்காமல் உயர்ந்தது. மக்கள் தொழில் நகரங்களையும், மாநகரங்களையும் மொய்க்க ஆரம்பித்தார்கள். எந்திரங்களின் முடிவில்லாத சத்தம், வேதிப் பொருட்களின் நாற்றம், மற்றும் குப்பைகளின் மத்தியில் குடிசை காலனிகள் வளர்ந்தன. அவற்றில் மக்கள் பூச்சிகளைப் போல வாழக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

இந்த பிரச்சனைகளை எதிர் கொள்ள சத்திஸ்கர் விடுதலை முன்னணி (CMM- சத்திஸ்கர் முக்தி மோர்ச்சா) ஆரம்பிக்கப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர்களை விடுவிப்பதற்கான போராட்டத்துக்காக சத்திஸ்கர் கிராம தொழிலாளர்கள் சங்கம் (சத்திஸ்கர் கிராமீன் ஷ்ராமிக் சங் – CGMS) ஆரம்பிக்கப்பட்டது. சிஎம்எம்எஸ், சிஎம்எம், சிஜிஎம்எஸ் மூன்றும் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்தன.

நியோகியின் வழிகாட்டலில் CMMS, CMM, CGMS அமைப்புகள் தொழிலாளர்களின் பணிச் சூழல் தொடர்பான பிரச்சனைகளுக்காக மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டன. அவரது போராட்டங்களின் வரலாற்றில் நியோகி 25 தடவைகளுக்கு மேல் சிறைப்படுத்தப்பட்டார். பல தடவை முறையான குற்றப் பத்திரிகையோ விசாரணையோ இல்லாமலேயே சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றமும் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படவில்லை.

A. தொழிலாளர் பொருளாதார/குடும்ப நலனுக்கான பணிகள்

1. சுரங்கத் தொழிலாளர்களின் நாட்கூலி 3 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரித்து 1990களில் 70 ரூபாய் வரை உயர்ந்தது.

2. தொழிலாளர்கள் மத்தியில் குடிப்பழக்கத்தை ஒழிக்க தீவிரமான மது எதிர்ப்புப் போராட்டத்தை தொழிற்சங்கம் முன்னெடுத்தது. இதில் பெருமளவு பெண்கள் பங்கேற்றார்கள்.

3. ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று திரட்டப்பட்டு, சிஎம்எம்எஸ்சின் பணித் திட்டத்தில் பெண்களுக்கே உரிய தேவைகளும் பிரச்சனைகளும் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதை உறுதி செய்யும் வண்ணம் அதன் தலைமைப் பொறுப்புகளிலும் தீவிரமாக பங்கு பெறுகிறார்கள்.

B. குடியிருப்புகளில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான போராட்டங்கள்

1. சிஎம்எம்எஸ் தொழிலாளர்கள் ‘நல்ல உடல் நலனுக்காக போராடுவோம்’ என்ற இயக்கத்தை மேஜிக் நிகழ்ச்சிகள், தெரு நாடகங்கள், சிறு புத்தகங்கள், உரைகள் போன்ற பல நிகழ்வுகள் மூலம் முறைசாரா தொழிலாளர்கள், ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகளுடன் சேர்ந்து நடத்தினார்கள். இந்த இயக்கத்தின் பகுதியாக தொழிற்சங்க உறுப்பினர்களின் சேமிப்பு மற்றும் உழைப்பில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டது. 50 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் நவீன ஆபரேஷன் தியேட்டரும் மகப்பேறு பிரிவும் இருக்கிறது.

2. தொழிற்சங்கம் குறைந்தது 6 பள்ளிக் கட்டிடங்கள் கட்டி அரசுப் பள்ளிகளுக்கு கொடுத்திருக்கிறது. தொழிற்சங்கமே ஒரு ஆரம்ப பள்ளியை நடத்தி வருகிறது.

3. சுரங்கத் தொழிலாளர்களின் சேரிகளுக்கு குப்பை வாருதல் போன்ற அடிப்படை சேவைகளை வழங்குவதற்கு அரசு அமைப்புகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் பலமுறை நிராகரிக்கப்பட்ட பிறகு, குப்பைகள் லாரிகளில் அள்ளி அதிகாரிகள் குடியிருக்கும் பகுதிகளில் கொட்டும் போராட்டத்தில் இறங்கினார்கள். தொழிலாளர் சேரிகளை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்வது வரை இந்தப் போராட்டம் நீடிக்கும் என்று அறிவித்தார்கள்.

C. வன வளங்களை பராமரித்தல்

1. ஒரு மரம் வெட்டும் ஆலை அந்த பகுதியில் இருக்கும் எல்லா தேக்கு மரங்களையும் வெட்டிக் கொண்டிருந்தது. கிராம மக்கள் காவல்துறையிலும், வனத்துறைக்கும், அரசியல்வாதிகளுக்கும் புகார் அளித்தார்கள். யாரும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு சில தேக்கு மரங்களை தடபுடலாக நடுவதற்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும்படி தொழிற்சங்கம் ஆலோசனை வழங்கியது. அங்கு கூடிய மக்கள் பெருந்திரள் எதிர்ப்பின் பலத்தைக் காட்டுவதாக அமைந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தேக்கு திருடர்கள் திரும்பி வரவேவில்லை.

2. இப்போதைய வனக் கொள்கையின் கீழ், யூகலிப்டஸ், நீல்கிரி மற்றும் பைன் மரங்கள் அவற்றின் தொழில்துறை பயன்பாட்டுக்காக பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய ஒற்றை மரப் பண்ணைகள் ஏற்படுத்தும் விளைவுகளை விரிவாக விவாதித்த தொழிற்சங்கம் அவற்றுக்கு எதிராக போராடியது.

3. நமது காட்டை அறிவோம் என்ற திட்டத்தின் கீழ் தொழிற்சங்கம் தொழிற்சங்க அலுவலகத்துக்கு அருகில் ஒரு சிறு காட்டுப் பகுதியை வளர்த்தது. பல வகையான மரங்கள் அங்கு நடப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலமாக தொழிற்சங்க அலுவலகத்தைச் சுற்றி இருந்த வெற்று இடத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தியது மட்டுமில்லாமல் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே ஆர்வத்தையும் தூண்ட முடிந்தது. சிறிது காலத்திலேயே அவர்கள் தத்தமது வீடுகளைச் சுற்றி மரங்களை நட ஆரம்பித்தார்கள். பசுமையே கண்ணில் படாத தொழிலாளர்கள் வாழும் இடங்கள் எல்லாம் அவர்கள் நட்ட மரங்களின் விளைவாக பசுமை பிரதேசங்களாக மாறின.

4. ‘நமது காட்டை அறிவோம்’ திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்ட மரங்களில் அவற்றின் வட்டார பெயர், இந்தி பெயர் மற்றும் தாவரவியல் பெயர்களை தரும் சிறு அடையாள பலகைகள் பொருத்தப்பட்டடன. பல்வேறு மர இனங்களை ஒன்றொடு ஒன்று தொடர்புபடுத்தும் தாவரவியல் குடும்பங்கள் பற்றிய விபரங்களும் திரட்டப்பட்டன. இது மரங்களைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு உதவியது. குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் தாம் பள்ளியில் கற்றதை விரிவுபடுத்தி அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. ஒவ்வொரு மரத்தின் உபயோகங்களையும் ஒவ்வொன்றும் எவ்வளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது போன்ற விபரங்கள் அடங்கிய சிறு புத்தகங்களை வெளியிட தொழிற்சங்கம் திட்டமிட்டது.

D. நீர்வளம்

1. பெரிய அணைகள் காட்டின் பெரும் பகுதிகளை மூழ்கடித்து குறிப்பிட்ட சூழலில் மட்டும் வளரும் பல அரிய மரங்களை அழித்து விடுகின்றன. இந்தக் காரணத்தினால், சிஎம்எம்எஸ் போத்காட் அணையை எதிர்த்தது. ராஜ்நந்த்காவ்வில் மோங்க்ரா அணை கட்டப்படுவதை தொழிற்சங்கம் எதிர்த்தது.

2. பெரிய அணை திட்டங்களை போல இந்த சிறிய தடுப்பணைகள் கட்டுவது வனத்துறை அலுவலர்களுக்கு எந்த ஆதாயத்தையும் தரப்போவதில்லை. இருப்பினும், துய்கோடி, ஜூகேரா போன்ற இடங்களில் சிறு அணைகள் கட்ட வைப்பதில் தொழிற்சங்கம் வெற்றி பெற்றது.

3. இரும்புத் தாது சுரங்கங்களிலிருந்து வடியும் மழை நீர் தாதுவின் நுண்ணிய படிவுகளை சுற்றியிருக்கும் பகுதிகளில் கொண்டு வருகிறது. மண்ணின் மேல் அடுக்கில் அது பரவி நிலத்தின் உற்பத்தித் திறனை அழித்து விடுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு போராடி தொழிற்சங்கம் வெற்றி பெற்றது.

4. தல்லி-ராஜ்ஹரா பகுதி வாழ்க்கை தல்லி மற்றும் ஜாரன் நீரோடைகளை சார்ந்தே பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தது. இந்த நீரோடைகள் மாசுபடுத்தப்பட்ட போது தொழிற்சங்கம் அந்த பிரச்சனையை முன்னெடுத்து, அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கக் கோரி ஓரளவு பலன்களை ஈட்டியது. இன்று இந்த நீரோடைகளின் நீர் இரத்த நிறத்தில் இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது.

5. தல்லி-ராஜ்ஹரா பகுதியில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் 89 ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கோரி தொழிற்சங்கம் வெற்றி கண்டது. சுற்றியிருக்கும் கிராமப் புறங்களிலும் அதே போன்ற குடிதண்ணீர் வசதிகளை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது.

E. சுற்றுச் சூழல் பாதுகாப்பு

1. சிஎம்எம்எஸ் தொழிலாளர்கள், ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டைகள், வளிமண்டலத்தில் நச்சு வாயுக்கள் அதிகரித்திருப்பது, காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே போவது போன்ற கவலை தரும் செய்திகளைத் திரட்டி விவாதித்து வருவது வழக்கம். தமது கிராமங்களில், சாங்கினி ஆறும் தல்லி சுரங்கங்களில் இருந்து வரும் சிறு நீரோடையும் அதிக இரும்புத் தாது கலப்பால் ரத்தச் சிவப்பாக மாறி விட்டதை அவர்கள் கவனித்து வந்தார்கள். டிஸ்டிலரி, உருக்கு ஆலை, மற்றும் உர தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவு நீர் காரூன் ஆற்று நீரையும் ஷிவ்நாத் ஆற்று நீரையும் நச்சுப்படுத்திக் கொண்டிருந்தன. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நிகழ்ந்த இந்த அழிவுகளால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றிய சூடான விவாதங்கள் தொழிற்சங்கத்துக்குள் அடிக்கடி நடந்தன.

பல விவாதங்களுக்குப் பிறகு சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வன வளங்களை பராமரித்தல், நீள் வளங்களை மாசுபடாமல் பாதுகாத்தல் இவற்றைத் தழுவி ஒரு செயல் திட்டம் வகுக்கப்பட்டது. காடுகளின் உரிமையாளர்களான ஆதிவாசிகளின் நலன்களை கணக்கில் எடுத்துக் கொண்டு வனத்துறை சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தது. வனத்துறை அதிகாரிகளின் திறமையின்மை, பொறுப்பின்மை, ஊழல் இவற்றையும் அம்பலப்படுத்தி அவற்றை சரி செய்வதற்கான வழிமுறைகளையும் வலியுறுத்தியது.

2. தல்லி-ராஜ்ஹரா பகுதி தொழிலாளர்கள் பதினைந்து ஆண்டுகள் முன்பு நாளைக்கு 3 ரூபாய் சம்பாதித்தபோது அதிக ஓசை பற்றிய சமூக சிக்கல் இல்லாமல் இருந்தது. தொழிற்சங்கத்தின் தொடர்ந்த போராட்டங்கள் கூலியை உயர்த்துவதில் வெற்றியடைந்தன. இப்போது தொழிலாளர்களின் குறைந்த கூலி ரூபாய் 70 ஆகியிருக்கிறது. வருமானம் அதிகரித்ததும், மக்கள் ஒலிபெருக்கிகளை அடிக்கடி பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதிக ஓசையின் தீங்குதரும் விளைவுகள் பற்றிய பொது விழிப்புணர்வை உருவாக்குவதற்கு தனது குடியிருப்புப் பகுதி குழுக்கள் மூலம் தொழிற்சங்கம் போராடி வருகிறது. ஷாகீத் மருத்துவமனையின் சுகாதார பணியாளர்கள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை குறைக்கும் இந்த இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்கள்.

3. தெஹரியில் இயற்கையின் எதிரிகள், இயற்கையின் சமநிலையையும் ஒத்திசைவையும் அழிப்பதற்கு முயன்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுந்தர்லால் பகுகுணாவின் பணியை மதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் செய்யும் சிஎம்எம்எஸ் அவருக்கு ஆதரவைத் தெரிவித்தது. சிப்கோ இயக்கம் அவர்களுக்கு பெரும் ஊக்கம் அளித்தது. ‘அணைகள் வேண்டாம்’ இயக்கம் நர்மதா பள்ளத்தாக்கில் ஆரம்பித்தவுடன் சத்திஸ்கர் மக்கள் அங்கு போய் பாபா ஆம்தே தலைமையிலான போராட்டத்தில் முழு மனதுடன் கலந்து கொண்டார்கள்.

F. தொழிற்சாலைகளில் போராடி பெற்ற வெற்றிகள்

1. பிலாய் ஸ்டீல் தொழிற்சாலை நிர்வாகம் கூட தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த சுற்றுச் சூழல் விழிப்புணர்வை புறக்கணிக்க முடியவில்லை. செப்பனிடப்படாத சாலைகளிலிருந்தும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும் நுண்ணிய தூசி காற்றில் பறந்து கொண்டே இருந்தது. பல தொழிலாளர்கள் சிலிகோசிஸ் நோயால் பீடிக்கப்பட்டிருந்தது மருத்துவ சோதனைகளில் தெரிய வந்தது. நிர்வாகம் இந்த பிரச்சனைக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரியது. ராஜ்நந்த்காவ் டெக்ஸ்டைல் ஆலையிலும் தொழிற்சங்கம் இது போன்ற சிறப்பு முயற்சிகளை எடுத்தது. தல்லி-ராஜ்ஹரா பகுதியில் இருக்கும் சுரங்கங்களிலும் சாலைகளிலும் நிர்வாகம் தண்ணீரைத் தெளித்து பறக்கும் தூசியை கட்டுப்படுத்துகிறது.

2. பணியிடத்தில் அதிக ஓசையால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தின் முயற்சியால் ஈஎன்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.

3. பிலாய் ஸ்டீல் ஆலை போன்ற பெரிய தொழில் நிறுவனங்களில் இப்போது ‘சுற்றுச் சூழல் துறைகள்’ தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேறு எந்த துறையிலும் பணி செய்ய விரும்பாத அதிகாரிகள் இந்த சுற்றுச் சூழல் துறைக்கு நியமிக்கப்படுகிறார்கள். மரம் நடுவதற்காக அவர்கள் கான்டிராக்டுகளை கொடுக்கிறார்கள். ஆனால் மரங்கள் தொடர்ந்தது பராமரிக்கப்படுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இத்தகைய திட்டங்களை தொழிற்சங்கம் உறுதியாக எதிர்க்கிறது.

4. சிம்ப்ளக்ஸ் எஞ்சினியரிங், வி கே எஞ்சினியரிங் போன்ற தனியார் நிறுவனங்கள் மரம் நடுவதற்காக அரசாங்கத்திடமிருந்து நிலத்தைப் பெற்றுக் கொண்டு, மெதுவாக நிலங்களை தமது தனிப்பட்ட பயன்பாட்டுக்கு மாற்றிக் கொள்கின்றனர். இது போன்ற ஊழலுக்கு எதிராக தொழிற்சங்கம் தீவிரமாக போராடுகிறது.

5. பிலாய் ஸ்டீல் ஆலையின் நிர்வாகம் தல்லியில் சுரங்கங்களை எந்திரமயமாக்க திட்டமிட்ட போது, அது சுற்றுச் சூழலுக்கு பலனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார்கள். அவர்களது கூற்றுகள் பொய்யானது என்று தொழிற்சங்கம் நிரூபிக்க முடிந்தது.

சத்திஸ்கர் பகுதி சுரங்கத் தொழிலாளர்கள் இப்படிப்பட்ட பல்நோக்கு பார்வையுடன், தம்மை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி அறிவுபூர்வமாக விவாதித்து போராட்டங்களை முன்னெடுத்து, முடிந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்தார்கள். சட்டத்துக்குட்பட்ட வழிமுறைகளில் தொழிலாளர்களுக்காகவும், தொழில் வளர்ச்ச்சிகாகவும், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகவும், ஆதிவாசி, விவசாயிகள் நலன்களுக்காகவும் திட்டம் வகுத்து செயல்பட்டு வந்தார்கள்.

ஆனால், தொழிலதிபர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கண்ணையா, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழிற்சங்கம் கட்டிய குசேலர் போன்ற தொழிற்சங்க சுல்தான்களைத்தான் விரும்பவும் ஆதரிக்கவும் செய்கிறார்கள். தொழிலாளர்களின் பொருளாதார பிரச்சனைகளுக்கு சமரச தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து தனிப்பட்ட அளவில் பெருமளவு பணம் சம்பாதித்து ஊழல் வாழ்வு வாழும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு மாற்றாக நியோகி போன்று நேர்மையாக போராடுபவர்களை முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியாதது ஆச்சரியமில்லைதான்.

நியோகி, 1991-ல் பிலாய்-ராய்பூர் பகுதியில் இருக்கும் தொழிற்சாலை தொழிலாளர்களை திரட்டும் பணியில் இறங்கினார். அதுவரை காட்டுப் பகுதிகளிலும், கிராமங்களிலும் செயல்பட்டு வந்த இயக்கம் இப்போது செல்வாக்கு மிகுந்த, பண பலம் படைத்த தொழிலதிபர்களின் நடவடிக்கைகளில் தலையிட ஆரம்பித்திருந்தது. தொழிலாளர்கள் மீது வன்முறை தாக்குதல்கள் அதிகரித்தன. தானும் கொல்லப்படலாம் என்று உணர்ந்த நியோகி, பிலாய் பகுதியின் தொழிலதிபர்கள் தொழிலாளர் இயக்கத்தை முடக்குவதற்காக தன்னைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்று சொன்னார்.

1991 செப்டம்பர் 28ஆம் தேதி அதிகாலையில் பிலாயில் உள்ள சிஎம்எம்எஸ் அலுவலகத்தின் ஜன்னல் வழியாக நுழைந்த பல்தான் மல்லா என்ற வாடகை கொலையாளி சங்கர் குஹா நியோகியின் மீது 6 குண்டுகளை சுட்டான். அவர் கொல்லப்பட்ட சில மணி நேரத்துக்குள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் கூடினார்கள். சத்திஸ்கர் பகுதியில் 150 தொழிற்சாலைகளை சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். ஒன்றரை லட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது அவருக்கு வயது 48. அவர் நம்பிக்கை வைத்த சட்டங்களும் அரசு அமைப்பும் அவரது உயிரை பாதுகாக்க முடியவில்லை. அவரை கொலை செய்ய சதி செய்தவர்களுக்கு தண்டனை அளிக்கக் கூட நீதி அமைப்பால் முடியவில்லை.

முன்னாள் பஞ்சாப்/ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி எஸ் தெவதியா, மூத்த பத்திரிகையாளரும் முன்னாள் இந்திய தூதருமான குல்தீப் நய்யார், பிரபல நாடக கலைஞர் விஜய் டெண்டுல்கர், கல்வியாளரும் சமூக ஆர்வலருமான அனில் சடகோபல், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் ராகேஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய பொதுமக்கள் குழு நியோகி கொலை செய்யப்பட்ட சூழலை பற்றி விசாரித்து தயாரித்த அறிக்கையில்,  “தமது தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளும், குறைந்தபட்ச கூலியும் வழங்குவதற்கு கூட மறுக்கும் வலிமையான தொழிலதிபர்களின் கூட்டமைப்பு செயல்படும் பகுதியில் யாரும் அதைத் தட்டிக் கேட்க துணியாத நிலையில் தன்னை அந்த பொறுப்பில் ஈடுபடுத்திக் கொண்டதுதான் நியோகி கொல்லப்பட்டதற்கு காரணம்” என்று குறிப்பிட்டார்கள்.

வழக்கு விசாரணை சிபிஐயின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

நியோகி கொலையில் தொடர்பு உடையவர்களாக 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சிம்ப்ளக்ஸ் நிறுவன உரிமையாளர் மூல்சந்த் ஷா, ஆஸ்வால் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரகாந்த் ஷா என்ற இரண்டு தொழிலதிபர்களும் அவர்களில் அடங்குவார்கள். மாவட்ட நீதிமன்றம் வாடகைக் கொலையாளிக்கு (பல்தன் மல்லா) மரண தண்டனையும், தொழிலதிபர்கள் உள்ளிட்ட இன்னும் 5 பேருக்கு (ஞான பிரகாஷ் மிஸ்ரா, அபய் சிங்க், அவதேஷ் ராய்)  ஆயுள் தண்டனையும் வழங்கியது. தொழிலதிபர்கள் இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.

கோரக்பூரைச் சேர்ந்த பல்தான் மல்லா ஒரு வாடகைக் கொலையாளி என்று நிரூபிக்கப்பட்டிருந்தது. எந்த விதமான தனிப்பட்ட விரோதம் இல்லாமல், பணத்திற்காக மட்டுமே எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்த நியோகியை கொன்றதன் மூலம் அவருடைய குடும்பத்துக்கு மட்டுமில்லாமல் நமது சமூகத்தின் அடிப்படையான ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் பெரும் தீங்கு செய்திருந்தான் பல்தான் மல்லா. இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு இந்த வழக்கை, ‘அரிதிலும் அரிதான ஒன்றாக’ கருதி மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பு சொல்லியிருந்தார்.

இந்த தீர்ப்பு பரவலாக வரவேற்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றார்கள். உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் ஆதாரங்களும் முன்பை விட உறுதியானதாக இருந்ததாக வழக்கை கவனித்து வந்த ஆர்வலர்கள் கருதினார்கள். ஆனால், உயர்நீதி மன்றம் போதுமான ஆதாரம் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது.

சிபிஐயும் மத்திய பிரதேச அரசாங்கமும் (பின்னர் சத்திஸ்கர் அரசாங்கம்) உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். சத்தஸ்கர் முக்தி மோர்ச்சாவும், நியோகியின் மனைவி ஆஷாவும் கூட தமது விண்ணப்பங்களை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தார்கள்.

துர்க் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வந்த சந்திரகாந்த் ஷா, அபய் சிங், மூல்சந்த் ஷா ஆகியோர், நியோகியின் தொழிற்சங்க நடவடிக்கைகளால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதற்கும் அவர்களது தொழில்களுக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டிருந்தது என்பதற்கும் சிபிஐ விரிவான ஆதாரங்களை கூடுதலாக சமர்ப்பித்தது.

ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு உயர்நீதி மன்ற தீர்ப்பை பெரிதளவு மாற்றி விடவில்லை. வாடகைக் கொலையாளிக்கு மட்டும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. செல்வாக்கு வாய்ந்த, சதி செய்து கொலைக்கு ஏவிய தொழிலதிபர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

சிம்ப்ளெக்ஸ் மற்றும் கேடியா நிறுவனங்கள் தொழிலாளர் போராட்டங்களால் தொழிற்சங்கத்துடன் முரண்பட்டிருந்தார்கள் என்பதையும், ‘இந்த இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் துர்க் மாவட்டத்தின் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாக’ நியோகி டைரியில் எழுதி வைத்திருந்ததையும், குற்றம் சாட்டப்பட்ட ஞான் பிரகாஷ், அவதேஷ் ராய் ஆகியோரை அவர் டைரியில் குறிப்பிட்டிருந்ததையும், சிம்ப்ளெக்ஸ் நிறுவனத்தின் மூல்சந்த் ஷா மூலம் அவருக்கு ஆபத்து இருப்பதாக பதிவு செய்யப்பட்ட ஒரு பேச்சில் அவர் குறிப்பிட்டிருப்பதையும், தொழிலாளர் போராட்டங்களுக்கு எதிராக தொழிலதிபர்கள் கட்டவிழ்த்து விட்டிருந்த வன்முறை நடவடிக்கைகள் பற்றி அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய மனுவையும் நீதிமன்றம் ஒதுக்கித் தள்ளி விட்டது.

பல்தான் மல்லா தனது உறவினரான சத்யபிரகாஷ் நிஷாதிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொடுத்த பணத்துக்காக தான் நியோகியை கொன்றதாக சொன்னதை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் பல்தான் மல்லாவுக்கு சிறைதண்டனை அளித்தது. ஆனால், அதே வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட ஏவி விட்டவர்களுக்கு எதிரான ஆதாரத்தை புறக்கணித்து அவர்களை விடுவித்தது. பல்தான் மல்லா நியோகியை ஏன் கொன்றான் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமலேயே வழக்கு மூடப்பட்டது.

நியோகியின் போராட்டங்களால் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு ஏற்பட்ட பண இழப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நியோகியின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது, நேபாளத்துக்குப் போய் துப்பாக்கிகள் வாங்கி வந்தது, குற்றம் நடந்த உடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இன்னொருவருக்கு 20,000 ரூபாய் பணம் கொடுத்தது, குற்றம் நிகழ்ந்த உடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலை மறைவானது இவற்றில் அந்த கேள்விக்கு விடை இருக்கிறது.

இந்த உலகமும், அதன் இயற்கை வளங்களும், அனைத்து மக்களின் நலன்களும் உழைக்கும் மக்களின் கையில்தான் பாதுகாப்பாக இருக்க முடியும். பேராசையால் தூண்டப்படும் முதலாளிகளின் பொறுப்பில் அவற்றை விட்டு வைப்பது பூனையிடம் அப்பம் பங்கு வைக்க கொடுத்த கதையாகத்தான் போய் முடிகிறது.

மண்ணையும், மக்களையும், தொழிலாளர்களையும் நேசித்து, சமரசமின்றி போராடிய சங்கர் குஹா நியோகியின் கொலையும், நீர்த்துப் போன வழக்கும் தொழிலாளர்கள் புரட்சிகர அமைப்புகளில் சேரவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.

_______________________________________________________

மேலும் படிக்க

http://en.wikipedia.org/wiki/Shankar_Guha_Niyogi

http://www.tehelka.com/story_main27.asp?filename=Cr100307Justice_mocked.asp

http://www.hindu.com/fline/fl2205/stories/20050311001004400.htmA verdict and some questions

http://otherindia.org/dev/images/stories/niyogihis_work.pdf

____________________________________________________________

அப்துல்

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்