privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்அண்ணா ஹசாரே: பானி பூரி முதல் பரதநாட்டியப் போர் வரை!

அண்ணா ஹசாரே: பானி பூரி முதல் பரதநாட்டியப் போர் வரை!

-

நாடாளுமன்றம் லேட்நைட் ஷெட்யூல் போட்டுக் கொண்டு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, தில்லியின் குளிர் தாங்காத பயத்தில் மும்பைக்கு முகாம் மாற்றிக் கொண்டு 11 லட்ச ரூபாய் வாடகையில் உண்ணாவிரத மைதானம் ஏற்பாடு செய்து போராட்டத்தைத் தொடங்கிய கையோடு முடித்துள்ள அண்ணா ஹசாரே அலையின் தெறிப்புகள் நாடெங்கும் சிதறியிருக்கின்றன. அவை பற்றிய பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்துள்ள சில தகவல்களை தொகுத்து வழங்குகிறோம். இவை எதுவும் எமது கற்பனை அல்ல.

1. முதலில் ஆகஸ்டில் நடந்த உண்ணாவிரதம் – சீசன் 2ல் ‘ஆதரவாளர்களுக்கு விருந்துச் சாப்பாடு’ என்ற செய்தி

ராம்லீலா மைதானத்தில் அண்ணாவின் உண்ணாவிரதம் ஆறாவது நாளை நுழையும் போது , கூடியிருந்த ஆதரவாளர்கள் தயாரித்து வைக்கப்பட்டிருந்த சுவையான உணவுகளை உண்டு மகிழ்ந்தார்கள். டெம்போக்களில் வந்து இறங்கிய பிரெட் பக்கோடா, கச்சோரி, சமோசா, ஆலூ பூரி, பரோட்டா, ரசகுல்லா, தேநீர், பிஸ்கட்டுகள், அரை டசன் வகையான நொறுக்குத் தீனிகள் என்று எது வேண்டுமானாலும் வாங்கித் தின்னும் வாய்ப்பு ஆதரவாளர்களுக்கு அளிக்கப்பட்டது.

ஆரோக்கியத்தைப் பேண விரும்புகிறவர்களுக்கு வாழைப்பழங்களும் மாம்பழ ஜூசும் கூட கிடைத்தன. பாதி உண்டு வீசப்பட்ட பேப்பர் தட்டுகளால் குப்பைக் கூடைகள்  நிரம்பி வழிந்தன.

‘எவ்வளவு சாப்பிட முடியும், என் வயிறு நிரம்பி விட்டது’ என்று மறுத்தார் ஆதரவாளர் விஜய் ஆனந்த். ஆர்வலரோ விடாமல் ஒரு தட்டு நிறைய கச்சோரிகளை நிரப்பிக் கொடுத்து, ‘இது பிரசாதமுங்க, வேணாம் என்று சொன்னால் விடப்போவதில்லை’ என்றார். ‘இதைத் தூக்கித்தான் போட வேண்டும்’ என்றார் ஆனந்த்.

மைதானத்தின் ஒரு மூலையில் பட்டம் விட்டுக் கொண்டு தீனிகளையும் குளிர்பானங்களையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தார்கள். ‘அண்ணாவைப் பற்றிக் கேள்விப்பட்டு என் நண்பர்களுடன் இங்கு விளையாட வந்தோம்’ என்றான் ஒரு சமோசாவை சுவைத்துக் கொண்டிருந்த தரியா கஞ்சிலிருந்துந்து வந்திருக்கும் 12 வயது சுஹைல்.

அண்ணா ஹசாரே - பானி பூரி முதல் பரதநாட்டிய போர் வரை

2. ‘அண்ணா ஹசாரேக்கு ஆதரவாக நடனம் ஆடிய நடிகை சொர்ணமால்யா’

டிசம்பர் 11 அன்று அண்ணா ஹசாரேக்கு ஆதரவாக சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் எம்.பி.நிர்மல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்தில் நடிகை சொர்ணமால்யா குழுவினரின் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மாலையில் உண்ணாவிரத போராட்டம் முடிக்கப்பட்டது. அப்போது ஊழலுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கோஷம் எழுப்பினார்கள்.

3. மும்பையில் மையம் கொண்டிருக்கும் அண்ணா ஹசாரே புயல் சென்னையிலும் மழை பெய்விக்க நட்சத்திர பலமாக ரஜினிகாந்த் ஆதரவு

அண்ணா குழுவின் போராளிகள் சென்னையில் ஏற்பாடு செய்யும் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தனது கல்யாண மண்டபத்தை இலவசமாக விடுவதாக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

“மண்டபத்தை இலவசமாக வழங்கிய ரஜினிகாந்த் அது நாட்டுக்காகத் தான் செய்யும் தொண்டு என்று தெரிவித்தார்” என்றார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன். “அவர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதை எப்போதுமே வரவேற்கிறோம், ஆனால் அதைப்பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை”

4. ரஜினியின் கல்யாண மண்டபம் என்ற கவர்ச்சி கூட போதுமான கூட்டத்தைக் கொண்டு வர முடியவில்லை என்பது நாட்டுப் பற்றுள்ளுவர்களுக்கு கவலை தரும் செய்தி. தென் மாவட்டங்களைச் சேர்ந்த திரைப்படப் புகழ் தமிழ் எழுத்தாளர் தனது குழுவினருடன் கலந்து கொண்டிருந்தால் இன்னும் 20 பேர் தேறியிருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

வேலை நாளாக இருப்பதால் கூட்டம் குறைவு என்று சொல்லப்பட்டாலும் 29 பேர் உண்ணாவிரதம் இருக்கும் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மாணவர்கள் கூட்டம் கூட தென்படவில்லை. “மக்கள் ஏன் உண்ணாவிரத மண்டபத்துக்கு வரவில்லை என்று புரியவில்லை. சிறை நிரப்பும் போராட்டத்தை நினைத்து மாணவர்கள் பயந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். அவர்களுக்கு நல்லபடியாக எடுத்துச் சொல்லி பங்கேற்றுக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும்” என்று ஒரு தன்னார்வலர் சொன்னார்.

ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் இணைய தளத்தில் 1,500 பேர் சென்னையிலிருந்து ஆதரவு தெரிவித்து பதிவு செய்திருந்தாலும் மண்டபத்தில் சுமார் 200 பேர்தான் கூடியிருந்தார்கள்.

‘இயக்கத்தின் சென்னை பிரிவுக்கு பிரபலமான தலைவர் ஒருவர் இல்லாததால்தான் கூட்டம் கூடவில்லை’ என்று தமிழ்மணி என்ற திரைப்பட இயக்குனர் கருத்து சொன்னார். ‘முல்லைப் பெரியாறு, கூடன்குளம் போன்ற பிரச்சனைகளில் ஆழ்ந்திருக்கும் மக்கள் ஊழலைப் பற்றி கவலைப்படவில்லை’ என்றும் அவர் நினைக்கிறார்.

‘சென்னையில் சரிவர பிரபலப்படுத்தாதுதான் கூட்டம் வராததற்கு காரணம்’ என்று சில நடுத்தர வயதினர் கருத்து தெரிவித்தார்கள். பிரகாஷ் குலேச்சா ஜெயின் என்ற சமூகஆர்வலர் ‘மும்பையில் அண்ணா உண்ணாவிரதம் பற்றி தெரியும். ஆனால் சென்னையில் எந்த இடம் என்று இன்று காலை வரை தெரிந்திருக்கவில்லை’ என்று குறைப்பட்டார்.

“சென்னையில் மொழி வெறி பெரிதாக இருக்கிறது. அண்ணா இந்தியில் மட்டும் பேசுகிறார். போன வாரம் அவர் வந்து போன பிறகு நகரத்தில் இயக்கம் சூடுபிடித்து விட்டது” என்று உபேந்திரன் என்ற மென்பொருள் ஊழியர் தெரிவித்தார்.

5.  வெளிநாட்டு இந்தியர்களுக்கான விழா நடைபெற இருப்பதை ஒட்டி ஜெய்பூரின் அண்ணா ஹசாரே ஆதரவாளர்களுக்கு ஊர்வலம் நடத்தவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும், தொடர் உண்ணாவிரதம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. கலெக்டரேட் சர்கிளுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி கிடைத்தது. மாலையில் நூற்றுக்கணக்கான இளம் ஆதரவாளர்கள் ஸ்டேடஸ் சர்கிள் அருகில் கூடி மெழுகுவர்த்தி ஏற்றினார்கள்.

6. அடுத்ததாக போராட்டத்தின் மையமான மும்பையின் MMRDA மைதானத்தில் சைதன்யர் ஒருவரைப் பார்க்கலாம்.

அண்ணாவின் சமையலறை என்ற பெயரில் 50,000 பேருக்கு சாப்பாடு வழங்குவதற்காக ஹரியானாவின் ரோஹ்தக்கிலிருந்து ஜன்சேவா சன்ஸ்தானின் தன்னார்வலர்கள் வந்திருந்தார்கள். 60 சமையல்காரர்கள் நடு இரவு வரை உணவு வழங்கத் தயாராக வேலை செய்கிறார்கள். பூரி, கூட்டு, பருப்பு, சோறு சாப்பாட்டுக்கும், தாளித்த அவல்+தேநீர் சிற்றுண்டிக்கும் வழங்கப்படுகின்றன.

இதே பணியில் சூரத்தைச் சேர்ந்த சிறீ கிரிராஜ் சேவா சமிதியும் ஈடுபட்டிருந்தது. “முதலில் பகவான் கிருஷ்ணனுக்குப் படைத்து விட்டுதான் ஆதரவாளர்களுக்கு வினியோகிக்கிறோம்” என்றார் சுவாமி பரம் சைதன்யா. “பலர் தானம் செயதார்கள். யாரிடமும் பணம் வாங்குவதில்லை. சிலர் எண்ணைய், அரிசி, கோதுமை மாவு கொடுத்தார்கள். கடவுளின் அருளால் பற்றாக்குறையே ஏற்படவில்லை” என்று சுவாமி சைதன்யா தெரிவித்தார். “சமைப்பதற்கு பிராண்டட் சமையல் எண்ணையும் மசாலாக்களும் பயன்படுத்துகிறோம்” என்றும் உறுதியளித்தார்.

சுபாஷ் குப்தா என்ற இன்னொரு தன்னார்வலர் “50,000 பேருக்கு உணவளிக்கத் தேவையான உருளைக்கிழங்குகள், கோதுமை, அரசி கைவசம் இருக்கிறது. தீரத் தீர கொண்டு வருகிறோம்” என்றார்.

‘நான் அண்ணா ஹசாரே’ தொப்பி அணிந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தட்டுகளில் – பூரி, உருளைக்கிழங்கு-பட்டாணி, சோறு, பருப்பு என்று கிடைத்த உணவுப் பொருட்களை நிரப்பிக் கொண்டார்கள். மூன்று வேளை உணவு பரிமாறப்பட்டது.

“எல்லோருக்கும் உணவு வழங்கப்படுகிறது. காலையிலிருந்து எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கில்லை” என்று ஒரு ஊழியர் தெரிவித்தார். தட்டு நிறைய உணவைக் குவித்து வைத்திருந்த ஒருவர் “சாப்பாடு நல்ல ருசியாக இருக்கிறது, நாங்க வெகு தூரத்திலிருந்து அண்ணாவை ஆதரிக்க வந்திருக்கிறோம். வெயிலில் காத்திருக்க வேண்டியிருக்கிறது’ என்றார். தனது நண்பர்களுடன் மைதானத்துக்கு வந்திருந்த சங்கேத் மேத்தா என்ற பிசினஸ் மேன், “உணவு மிகவும் சுவையாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. அருகில் எதுவும் சாப்பாட்டு கடைகள் இல்லாததால் இது நல்ல ஒரு முயற்சி” என்று பாராட்டினார்.

7. மும்பை மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கும் ஒரு இளம் போராளியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு கொஞ்சம் தள்ளியிருக்கும் புனேவை எட்டிப் பார்த்து விட்டு வந்து விடுவோம்.

புனேவின் ஆர்பிஐ சதுக்கத்தில் அண்ணாவைப் போன்று வேடமிட்ட டாக்டர் கோபால் பேலே உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். பேலேவுக்கு அண்ணாவுக்கும் 12 ஆண்டுகள் பழக்கம் இருக்கிறது. ஹோமியோபதி மருத்துவராக பணி புரியும் பேலே, அண்ணாவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் நகரக் கிளையின் தலைவராகவும் இருக்கிறார்.

சென்ற முறை கலந்து கொண்ட 13 பேரிலிருந்து இந்த முறை எண்ணிக்கை 17 பேராக உயர்ந்திருக்கிறது. இளைஞர்களை மையமாகக் கொண்ட இயக்கம் என்று அண்ணா சொல்லியிருந்தாலும் இந்த முறை போராட்டத்தில் ஒரு இளைஞரைக் கூடப் பார்க்க முடியவில்லை.

‘பிற வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் இளைஞர்கள் இதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை’ என்று ஊழலுக்கு எதிரான இந்தியா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அசோக் லாஞ்சேவர் கருதுகிறார். “அதனால்தான் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களில் பெரும்பகுதியினர் ரிட்டையர்ட் ஆனவர்களாக இருக்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்க விரும்பிய பல இளைஞர்களை வேறு வேலைகளுக்கு அனுப்பி விட்டதால் அவர்களால் உண்ணா விரதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

8. ஒரு பள்ளி மாணவனே உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறான் மும்பையில்.

அண்ணா ஹசாரேவின் 3 நாட்கள் உண்ணா விரதத்தில் கலந்து கொள்ள தனது தந்தையுடன் MMRDA மைதானத்துக்கு வந்திருக்கிறான் 8ம் வகுப்பு படிக்கும் பிரதீக்.

தனது பள்ளிப் பையுடனும் மூன்று நாட்களுக்கான மாற்று உடைகளுடனும் உண்ணாவிரத மைதானத்துக்கு வந்திருக்கும் பிரதீக்கின் அப்பா ரமேஷ் லாரி ஓட்டுனராக பணி புரிந்து வேலை இழந்தவர். ‘கல்வியை ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை என்று உறுதி செய்யும் கல்வி பெறும் உரிமை சட்டத்தை அரசு இயற்றியிருக்கிறது ஆனால் என் பையன் படிக்கும் பள்ளிக்  கூடம் பள்ளிக் கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது. பள்ளியை நடத்துவது மேலும் மேலும் கஷ்டமாகி வருவதாக பள்ளி நிர்வாகம் சொல்கிறது. ஆனால் ஆங்கில வழி வகுப்புகளை நன்கு நடத்தி வருகிறது’

பிராதிக் மராத்தி வழி வகுப்பில் படிக்கிறான். அவனது அம்மா அங்கன்வாடி ஊழியராக வேலை பார்த்து மாதம் 2,000 ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் பள்ளிக் கட்டணமாக ஆண்டுக்கு 3,000 ரூபாய் வரை கட்ட வேண்டியிருக்கிறது. “என்னைப் போன்ற மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு வேண்டும்” என்று சொல்லும் பிராதிக் ஒரு எஞ்சினியர் ஆகி ராணுவத்தில் சேர விரும்புகிறான்.

உண்ணா விரதம் இருப்பதன் மூலம், பள்ளிக் கட்டணத்தைக் கட்ட முடியாததால் மற்ற மாணவர்கள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது வெளியில் நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படும் தனது நிலைமைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறான்.

உணவு பாதுகாப்பு சட்டம், உயர்கல்வியில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் சட்டம், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்று வரிசையாக ‘மக்கள் நல்வாழ்வு’ திட்டங்கள் காத்திருப்பதும் அதைப் பற்றி லோக்பாலும் அண்ணா ஹசாரேயும் பேசப் போவதில்லை என்பதும் பிரதீக்குக்கும் அவனது குடும்பத்தினருக்குக்கும் தெரிய வாய்ப்பில்லை!

9. மீண்டும் சென்னையில். ஊழலுக்கு எதிராக பரதநாட்டியம் ஆடிய சுவர்ணமால்யாவின் தங்கை ராதிகா கணேஷ்.

‘மோகன்தாஸ், ஒரு மனிதனின் உண்மை கதை’ என்ற புத்தகத்தைக் கையில் பிடித்த படி நின்றிருந்தார் 24 வயதான ராதிகா கணேஷ். லண்டனின் பிரையன் மூரல் நிறுவனத்தில் வெளித்தொடர்பாளராக வேலையை விட்டு விட்டு இந்தியா திரும்பி அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறார் ராதிகா. ‘இந்த அளவிலான புரட்சியை வாழ்க்கையில் நான் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. அதனால் அதில் பங்கேற்க விரும்புகிறேன்’.

வழக்கறிஞராக வேலை செய்யும் அம்மா மாலினி கணேஷ், அக்கா நடிகை சுவர்ணமால்யா இவர்களின் ஆதரவுடன் வந்திருக்கும் ராதிகா, “இந்தப் போராட்டம் நம் ஒவ்வொருவரது போராட்டம். லண்டனில் நானும் நண்பர்களும் இந்தியாவின் நிகழ்வுகளை கவனித்து வந்தோம். ஊழல் எதிர்ப்பு இயக்கம் எங்கள் விவாதங்களில் தவறாமல் இடம் பிடிக்கும். நண்பர்கள் இயக்கம் வெற்றி பெற விரும்பினார்கள். ஆனால் நான் இன்னொரு படி எடுத்து வைத்து இந்தியாவுக்குத் திரும்பி இயக்கத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்”.

10. கடைசியாக ‘அண்ணா வின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மீது எனக்கு ஏன் அக்கறையில்லை’ என்று சொல்லும் மணீப்பூரைச் சேர்ந்த ரோனித் சிங்கன்பம் என்ற இசையமைப்பாளர்

‘மணிப்பூரில் அரசாங்கத்தின் அட்டகாசங்களுக்கும் போராட்டங்களுக்கும் நடுவில் நான் வளர்ந்தேன். தில்லிக்கு வந்த பிறகுதான் நாட்டின் பிற பகுதிகளில் வாழ்க்கை எவ்வளவு வேறுபட்டு இருக்கிறது என்று புரிந்தது. இம்பாலுக்கு வெளியில் மக்கள் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்று புரிந்தது. வடகிழக்கு மாநில மக்கள் இந்தியர்களாகவே நடத்தப்படுவதில்லை.’

அதே போன்ற நிலையில் வாழும் பழங்குடி மக்கள், தலித்துகள், காஷ்மீரிகளின் போராட்டங்களையும் அவரால் புரிந்து கொள்ள முடிகிறது.

‘எனது இசை நான் அறிந்த மனித வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. பாதுகாப்பான வாழ்க்கையை அடைந்த பிறகுதான் ஊழல் போன்ற பிரச்சனைகளைப் பற்றி யோசிக்க முடியும். இந்த நாட்டினால் பழிவாங்கப்படுபவனாக நான் உணர்கிறேன். மணிப்பூரில் வாழும் மக்கள் எந்த நேரத்திலும் சுட்டுக் கொல்லப்படலாம் என்று பயத்தில் வாழ்கிறார்கள். அந்த மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்த பிறகுதான் பிற பிரச்சனைகளைப் பற்றி நான் கவலைப்பட முடியும். அதனால் ஊழல் எதிர்ப்பு இயக்கம் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை.’

அண்ணா ஹசாரேவின் கீழ் அணி திரளும் பாரத ஞானமரபு சிக்கிமுக்கு சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்து கொடுப்பதோடு நின்று விடுகிறது. மணிப்பூர் மக்கள் நிம்மதியாக வாழ அது உத்தரவாதம் அளிப்பதில்லை.

ஆக மொத்தத்தில் இந்த செய்திகளைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது? பானி பூரி நன்கு விற்பனையாகிறது! பரத நாட்டியம் அரங்கேறுவதற்கு ஒரு மேடை கிடைத்திருக்கிறது!

ஜெய் அண்ணா ஹசாரே! ஜெய் ஜன்லோக்பால்!

செய்தித் தொகுப்பு: அப்துல்

  1. ஏங்க ஒரு சின்னப்பையனைபோயி இப்படி அடிச்சு துவைக்கிறீங்க? வலிக்கப்போகுது, பையன் அழுதுடுவான். விட்டுடுங்க, பொழைச்சுப்போகட்டும்.

  2. நமத்துப் போன பட்டாசு ஒரு போதும் வெடிக்காது. கொளுத்தும் போது பட்டாசின் காம்பு மட்டுமே சற்று புஸ்ஸென்று சீறும். அதன் பிறகு காலால் தள்ளிவிட அது சாக்கடையில் சங்கமிக்கும். எத்தனை தீபாவளிகளில் இத்தகைய பட்டாசுகளைப் பார்த்திருக்கிறோம். ஆனாலும் அடுத்த தீபாவளிக்கு இது போன்ற நமத்துப் போன பட்டாசுகள் வராமல் போகாது.

    நமத்துப் போன பட்டாசு வெடிக்காமல் ஏமாற்றிவிட்டதே என்ற சலிப்போடு காலால் தள்ளிவிட்டாலும் அதிலும் ஒரு ஜாலி இருக்கத்தானே செய்கிறது. காத்திருப்போம்! அடுத்த தீபாவளி வரும் வரை!

  3. காந்தீயக் கொள்கைகள், கோட்பாடுகள் எல்லாம் இனிமேல் எடுபடாது.

    அதனால் காந்தியைப் போலவே உருவ அமைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். காந்திக்கு இடுப்பில் துண்டு என்றால் உங்களுக்கு (டெல்லிக் குளிரானாலும்) இடுப்பில் ஒரு பெர்முடாஸ் மட்டும். கைத்தாங்கலாக சொர்ணமால்யாவும், அவரது தங்கையும். காந்தி ஒட்டகப் பால் என்றால், நீங்கள் கழுதைப் பால். அவர் வேர்க்கடலை என்றால், நீங்கள் பாதம் பருப்பு. அவருக்கு அரிச்சந்திரன் என்றால், உங்களுக்கு தெனாலி ராமன். மன் மோகன் எனும் அமெரிக்கவாசி, உங்களை இரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதாக ஒரு கதை புனையுங்கள்.

    மக்கள் நம்பலாம். நிலைமை சரியாகலாம். முயற்சி திருவினையாக்கும்!

  4. // லண்டனின் பிரையன் மூரல் நிறுவனத்தில் வெளித்தொடர்பாளராக வேலையை விட்டு விட்டு இந்தியா திரும்பி அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறார் ராதிகா//

    காந்தியின் உண்மையான வாரிசு இவர்தான். லண்டனில் படித்து அயல்னாட்டு வேலையை விட்டு விட்டு தாய்நாட்டுக்காக தன் சேவையை செய்ய வந்திருக்கிரார். என்ன ஒற்றுமை.
    ;-))

  5. //2. ‘அண்ணா ஹசாரேக்கு ஆதரவாக நடனம் ஆடிய நடிகை சொர்ணமால்யா’டிசம்பர் 11 அன்று அண்ணா ஹசாரேக்கு ஆதரவாக சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் எம்.பி.நிர்மல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்தில் நடிகை சொர்ணமால்யா குழுவினரின் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மாலையில் உண்ணாவிரத போராட்டம் முடிக்கப்பட்டது. அப்போது ஊழலுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கோஷம் எழுப்பினார்கள்.//

    தப்பு தப்பு சொர்ணமால்யா ஆடாமல் சிலுக்கு(அவர்தான் செத்துட்டாரோ ) வேற யாராவது ஒரு தென்னாட்டு நடன புயல் ஆடி இருக்கனும் இப்பதான் தெரியுது ஏன் ஊழல ஒழிக்க முடியலைன்னு

  6. ஆக மொத்தத்தில் இந்த செய்திகளைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது? பானி பூரி நன்கு விற்பனையாகிறது! பரத நாட்டியம் அரங்கேறுவதற்கு ஒரு மேடை கிடைத்திருக்கிறது!
    -Super

Leave a Reply to கிரிஷ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க