privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்6000 குழந்தைகள் கொலையும் சூர்யாவின் இதயத் துடிப்பும்!

6000 குழந்தைகள் கொலையும் சூர்யாவின் இதயத் துடிப்பும்!

-

டிகர் சூர்யா  அப்போலோ மருத்துவமனையின்  துடிக்கும் 100 கோடி இதயங்கள் (Billion Hearts Beating) என்ற இருதய நோய் சிகிச்சைக்கான விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து இருந்ததை பார்த்து இருப்போம்.

அதில் அவர் உலக இளைஞர்களின் மொத்த எண்ணிக்கையில் 50% இந்தியர்களாக இருப்பதை நினைக்கும் பொழுது, ”ஜிவ்வென்று ஒரு எனர்ஜி ஏறுவதாக” குறிப்பிட்டு இருப்பார். “அட! நாமும் கொஞ்சம் ஜிவ்வை ஏற்றிக்கொள்ளலாமே என இந்திய பிறப்பு-இறப்பு-வயது விவரங்களை தேடிப் படிக்க முயன்றோம். அப்போது நமக்கு கிடைத்த தகவல்கள் திடுக்கிட வைத்தன

“இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 6000 குழந்தைகள் பட்டினியால்  இறக்கிறார்கள்” என்ற  செய்தியை மார்ச் 29, 2008 அன்று, ஐ.பி.என் லைவ் வெளியிட்டிருந்தது. அதற்கு சான்றாக உத்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள வாரணாசி மற்றும் லலித்பூர் மாவட்டங்களில் நிகழ்ந்த குழந்தை பட்டினிச்சாவுகள், ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான காரணங்கள் பற்றிய விபரங்களை சேகரித்து, ஒரு செய்தி வீடியோவையும் வெளியிட்டிருந்தது. மனதை உறைய வைக்கும் அந்த படத்திலிருந்து சில காட்சிகளை இங்கே பாருங்கள்

தன்னுடைய ஒரே மகனை அவனுடைய நாலாவது வயதில் பறி கொடுத்த தாய், தன்னிடம் பணம் இல்லாத ஒரே காரணத்தால், அவனுக்கு தேவையான உணவு, மருந்து கூட வாங்கி தர முடியாது போனதை நினைத்து அழுகிறார். நான்கு வயதில் வெறும் 6.5 கிலோ எடை மட்டும் இருந்த அந்த பிஞ்சு ஊட்டச்சத்துக்குறைவின் கொடுமையால், மாண்டு விட்டான். கணவனை இல்லாமல், புடவைகளுக்கு தையல் வேலைப்பாடு செய்து ஒரு நாளைக்கு ரூ.10 – 15 வரை சம்பாதித்து தன் வாழ்க்கையை நடத்தும் அந்தத் தாய், தன் குழந்தைகளுக்கு ஒரு வேளை சோறு போடுவதற்கு எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாகியிருப்பாள்.

இதே போல், வாரணாசி அருகிலுள்ள கிராமத்தில், ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது நிரம்பிய ஒரு சிறுவன், பானையைப் போல வயிறு வீங்கி, பிற உடல் பாகங்கள் மெலிந்து காணப்படுகிறான். புரதச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட அவனால் சாதாரண குழந்தைகளை போல விளையாடுவதோ, பேசுவதோ இயலாது. மேலும் டி.பி, சிறுநீரகக் கோளாறு, மூச்சுத் திணறல் பிரச்சினைகளாலும் பீடிக்கப்பட்டு தன்னுடைய வாழ்நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறான்.

லலித்பூரில் மட்டும் இப்படி 60% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘9 மாதங்களில் தளபேஹட் என்ற சிறு நகரத்தில் மட்டும் 183 குழந்தைகள் ஊட்டச்சத்து குறை பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றும் ‘அவர்களில் 116 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது’ என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

போதிய மருத்துவ வசதிகள் இல்லாத அந்தப் பகுதியில் அரசு குழந்தை மருத்துவமனை கிட்டத்தட்ட செயல்பாட்டில் இல்லை. மருத்துவர், செவிலியர், உதவியாளர்கள், சுத்திகரிப்பு ஊழியர்கள், இல்லாமல் எப்படி ஒரு மருத்துவமனையை நடத்தமுடியும்? ‘இதன் பாதிப்பால் மக்கள் சிரம்பபடுகிறார்கள்’ என்று அங்கலாய்க்கிறார் ஹிங்கோரா ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர் சஞ்சிவ் குமார்

இப்படி உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைப்பாடு என்ற காரணங்களால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 6 வயதுக்குட்பட்ட 20 லட்சம் குழந்தைகள்  இறக்கிறார்கள்

இது 2008-ன் புள்ளிவிவரம் என்று எண்ணிவிட வேண்டாம்.

இதன் தொடர்ச்சியாக 2009 இல் ‘இந்தியாவில் ஓரு நாளைக்கு 5 வயது கூட நிரம்பாத 5000 குழந்தைகள் இறக்கிறார்கள்’ என்ற யூனிசெப்பின் (UNICEF)  அறிக்கையை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.

2010 இல் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில்,  இந்தியாவில் பணக்கார குழந்தைகளுக்கான இறப்பு வீதத்துடன் ஒப்பிடும் போது பரம ஏழைகளின் குழந்தைகள் 5 வயதிற்கு முன்னே இறப்பதற்கான சாத்தியம் மூன்று மடங்காக  உள்ளது என்றும் ஒவ்வோரு ஆண்டும், இந்தியாவில் பிறக்கும் 2 கோடியே 60 லட்சம் குழந்தைகளில், 18 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்களுடய 5 வயதுக்கு முன்பே இறக்கின்றனர் என்றும் பிறந்து ஒரு மாதத்திற்க்குள் 9 லட்சம் குழந்தைகள் இறக்கும் சூழ்நிலை இந்தியாவில் நிலவுகிறது என்றும் எழுதியிருக்கிறது.

மாநில வாரியாக பதிவாகியுள்ள தகவல்கள்:

 

மாநிலம் ஐந்து வயதுக்கு முன்னரே உயிர் இழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை
கேரளா பிறக்கும் 1000 குழந்தைகளில் 14  பேர் இறக்கின்றனர்
மத்திய பிரதேசம் பிறக்கும் 1000 குழந்தைகளில் 92பேர் இறக்கின்றனர்
உத்திர பிரதேசம் பிறக்கும் 1000 குழந்தைகளில் 89 பேர் இறக்கின்றனர்
ஒரிசா பிறக்கும் 1000 குழந்தைகளில் 89 பேர் இறக்கின்றனர்

 

மாநிலம் பிறந்த உடனே உயிர் இழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 
கேரளா பிறக்கும் 1000 குழந்தைகளில் 7 பேர் இறக்கின்றனர்
மத்திய பிரதேசம் பிறக்கும் 1000 குழந்தைகளில் 48பேர் இறக்கின்றனர்
உத்திர பிரதேசம் பிறக்கும் 1000 குழந்தைகளில் 45 பேர் இறக்கின்றனர்
ஒரிசா பிறக்கும் 1000 குழந்தைகளில் 47 பேர் இறக்கின்றனர்

 

இந்தியாவில் மிகவும் வறிய பிரிவில் இருக்கும் குடும்பங்களில் 5 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாகவும் உயர் பணக்கார குடும்பங்களில் 1 லட்சத்து 78 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யூனிசெப் வருடம் தவறாமல் இது தொடர்பான தகவல் அறிக்கையினை சமர்ப்பித்து, திட்டங்கள் பல தீட்டுகிறது.  2012 இல் யூனிசெப் கொடுத்துள்ள அறிக்கையின் பிரதியை வாசிக்க இங்கே அழுத்தவும்

இதன் கணிப்புப்படி தெற்கு மற்றும்  மத்திய ஆசிய நாடுகளிலும், ஆப்ரிக்க நாடுகளிலும் தான் குழந்தைகள் இறப்பு வீதம் அதிகமாக உள்ளது. அதற்கு 6 காரணங்களை முன் வைக்கிறது யூனிசெப்

  • வயிற்றுப் போக்கு
  • மலேரியா
  • பிறந்தவுடன் ஏற்படும் தொற்றுநோய்கள்
  • நிமோனியா என்கிற கபவாத நோய்
  • குறைப் பிரசவம்
  • பிறக்கும் போது ஏற்படும் ஆக்சிஜன் குறைவு

இவை 50 % குழந்தை இறப்புக்கு காரணமாக இருந்தாலும்

  • சத்துணவு போதாமை
  • சுகாதாரமான தண்ணிர், சூழ்நிலை இல்லாமை

இவற்றால்தான் குழந்தைகள் இறப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது என்ற தகவல்களை முன்வைக்கிறது.

படிக்க

கிரிக்கெட், சினிமா, அண்ணா ஹசாரே போன்ற சவடால் அரசியல், ஆபாசக் கூத்து மற்றும் பொழுதுபோக்கு போராட்டங்களுக்காக  பக்கங்களையும், பிரைம் டைம்களையும் ‘லம்பாக’ ஒதுக்கும் ஊடகங்கள் நாட்டின் பிஞ்சுத் தளிர்கள் பரிதாபமாக உயிர் இழக்கும் அவல நிலையை ஜஸ்ட் லைக் தட்,  ஒரு செய்தியாக கடந்து போகின்றன.

நிமிடத்துக்கு 4 குழந்தைகள் இறக்கும் இந்த நாட்டில்தான் பெருமளவு முதலீடு செய்து மேட்டுக் குடியினருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இருதய பராமரிப்புக்கான கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறது அப்போலோ மருத்துவமனை. அந்த கட்டமைப்பை சந்தைப்படுத்தி அப்போலோவின் பேங்க் பேலன்சை வளப்படுத்துவதற்காக இந்திய இளைஞர்களின் இதயத்தைப் பற்றி நடிகர் சூர்யா கவலைப்படுகிறார்.

இந்தியாவில் தினந்தோறும் இறக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பெற்றோர்கள் அடிப்படை மருத்துவ சேவைக்கு கூட பணமில்லாத ஏழைகள் என்பதால் சூர்யாக்களும், அப்போலோக்களும் அவர்களை கண்டு கொள்வதில்லை. அரசோ, மக்களின் அடிப்படைத் தேவைகளான  உணவு, மருத்துவ, சுகாதார வசதிகளை செய்து தருவதை தவிர்த்து அவர்களை தனியார் லாபத்திற்காக சந்தையில் அடமானம் வைக்கும் பணியை சிரமேற்கொண்டு செய்து வருகிறது

இனி இந்த புள்ளி விவரம் பல ஆயிரங்களில் ஏறலாம், அதனாலென்ன, செலவழிகக்கூடியவர்கள் மட்டும்தானே இந்தியர்கள், அந்த இந்திய இதயங்களை அப்போலோ வசம் ஒப்படைக்க அட்டைகத்தி நாயகர்கள்  தயார், அவர்களை இருக்கும் திசையை நோக்கி கேமராவும் வேனுமாக ஊடகங்களும் தயார்.

வாழ்க இவர்களது இந்திய இதயங்களின் மீதான  அக்கறை.