Friday, May 2, 2025
முகப்புகலைகவிதை...ஆதலினால் காதல் செய்!

…ஆதலினால் காதல் செய்!

-

காதல் கவிதைதோழி!
*திவ்யாவைப் போல்
தெளிவாக காதலி.
காதல்தான் விருப்பமெனில்
தாழ்த்தப்பட்டோரை
தயங்காமல் காதலி!
வர்க்கம் பார்த்துதான்
வருகிறது காதலெனினும்,
வர்ணம் பொடிபட
எப்போதாவது துடிக்கும் இதயத்தை
நழுவாமல் ஆதரி!

சேரிக்கு
வாழ்க்கைப்பட்டால்தான் தெரியும்
உன் சொந்த சாதி அசிங்கம்.
சாதிக்கு
எதிராய் போனால்தான் புரியும்
தாய், தகப்பன் பாசம்
கருப்பையை அடக்கி நாறும்
சாதியை விட்டொழி!
சைவப்பிள்ளையும், புதிர வண்ணாரும்
இணையேற்றால்
ஒன்றும், கீரிப்பிள்ளை பிறப்பதில்லை,
ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!

வன்னியப்பெண்ணும், பறையரும்
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்,
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்.
நாடு ஒன்றும் மூழ்கிடாது,
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!

கக்கத்தில் பையை வைத்து
பக்கத்து ஊரையெல்லாம்
கந்துக்கு தரிசாக்கி…
அந்நிய செலாவணிக்காக
நொய்யலையும், பவானியையும்
சாயப்பட்டைறையில் கருக்கி…
காசுக்காரன் அழித்திட்ட
‘கவுண்டர் வாழ்க்கை’
நீ… அருந்ததியரைக் காதலித்தால்
அழியுமென்றால்!
அழியட்டும் சாதிவெறி!
பெண்ணே! சமூகம் அழகாக
சக்கிலியரைக் காதலி!

அந்நிய மூலதனத்தோடு
அனைத்து சாதியும் கலப்பு,
அதில் சில்லரை பொறுக்கிக் கொண்டே
சிலருக்கு சாதியோட கொழுப்பு.

பன்னாட்டுக் கம்பெனி
பனிரெண்டு மணிநேரம்
கையை பிடித்து இழுக்கையில்…
அமெரிக்க ‘டேட்டிங்’
ஆளைச் சுற்றி வளைக்கையில்..
அரிவாள் தூக்காத சாதி,
நீ சாதி மாறி காதலித்தால்
ஆர்ப்பரிக்குமென்றால்,
தூக்கிய அரிவாள் துருபிடிக்க
துணை கொள் தோழி!
தாழ்த்தப்பட்டோரையே!

– துரை.சண்முகம்.

* (திவ்யா ; தர்மபுரி நத்தம் காலனியில் தாழ்த்தப்பட்ட இளைஞரை காதலித்து மணமுடித்த வன்னியப் பெண்)

______________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
______________________________________________________________________________________________________________