privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்அப்சல் குரு தூக்கு - HRPC கண்டன பிரச்சாரம்!

அப்சல் குரு தூக்கு – HRPC கண்டன பிரச்சாரம்!

-

அப்சல் குருவை தூக்கிலிட்ட இந்திய அரசின் பயங்கரவாதச் செயலை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை உயர்நீதிமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் – மதுரை மாவட்டக் கிளை சார்பாக 12.02.2013 காலை 10.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2001 டிசம்பர் 13 அன்று இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குருவின் சட்டபூர்வமான உரிமைகளை மறுத்து ரகசியமாக தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் பேசும் போது, “அப்சல்குரு தூக்கிலிடப்பட்டது அநீதியானது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்படவில்லை. இருந்த போதும் `பாராளுமன்றம் தாக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். இந்தக் குற்றத்தை செய்தவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவில்லையென்றால் தேசிய மனசாட்சி சாந்தமடையாது’ என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் இவ்வாறு நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எழுத்தாளர் அருந்ததிராய் அவர்கள் இதனைக் கண்டித்து இந்து நாளிதழில் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ்-பி.ஜே.பி.,-உச்சநீதிமன்றம் சேர்ந்து செய்துள்ள இந்த சட்டவிரோத செயலை எதிர்த்து நாம் போரட வேண்டும். ஜனநாயகத்துக்காக நாம் தொடர்ந்து குரல்கொடுப்போம்” என்று பேசினார்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு பேசும் போது “அப்சல்குருவுக்கு சட்டப்பூர்வமாக இன்னும் எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அந்த வாய்ப்புகள் எல்லாம் மறுக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமல்லாமல் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர் அவரது குடும்பத்தாருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தார் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவசரம் அவசரமாக அவர் தூக்கில் போடப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளியே ஆனாலும் அவருக்கு உள்ள உரிமைகள் மறுக்கப்படக் கூடாது” என்ற அடிப்படையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

மாவட்ட செயலாளர் லயனல் அந்தோணிராஜ் பேசும்போது, “காஷ்மீர் மக்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டுள்ளார். அப்சல்குரு பாராளுமன்றத் தாக்குதலில் நேரடியாக ஈடுபடவில்லை. மூளையாகவும் செயல்படவுமில்லை. அதற்கு எந்த ஆதாரமோ, நேரடி சாட்சியங்களோ இல்லை. காவல்துறை, உளவுத்துறை அவரை மிரட்டி வாங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படை யிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சட்ட நடைமுறைகளுக்கு முரணானது. ஆனால் இதைத் தெரிந்தே உச்சநீதிமன்றம் செய்துள்ளது. அதற்கு காரணம் புனிதமான பாராளுமன்றம் தாக்கப்பட்டது இந்திய மக்களின் மனசாட்சியை வேதனைப்படுத்திவிட்டது. அதை சாந்தப்படுத்த இப்படியொரு தண்டனை தரப்படுவதே சரியானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அந்த மனசாட்சி என்பது காஷ்மீர் மக்களுக்கு எதிரானது. இந்து, இந்திய தேசிய வெறி மனசாட்சி அல்லாமல் வேறு எதுவும் இல்லை. ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் தேசிய குழு கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி., சங்க பரிவாரங்கள், இந்து பயங்கரவாதிகள் என்ற கருத்தை வெளியிட்டார்.”

இதை கடுமையாக எதிர்த்த இந்து பாசிஸ்டுகள் எதிர்வரும் நாடாளு மன்றக் கூட்டத்தை முடக்குவோம். ஷிண்டே பதவி விலக வேண்டும். அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூச்சல் போட்டு வருகின்றனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு இந்து ஓட்டுக்களை மனதில் வைத்து அப்சல்குருவை அவசரமாகத் தூக்கில் போட்டுள்ளது மதசார்பின்மை மூகமூடி அணிந்த காங்கிரஸ்.

இசுலாமிய பயங்கரவாதம் என்ற பெயரால் இசுலாமிய மக்கள் அனைவருமே பயங்கரவாதிகள், தேச விரோதிகள் என்பது போன்ற கருத்து இந்து தேசியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இசுலாமியர்கள் இந்த அநீதியை எதிர்த்துக்கூட பேச முடியாமல் இருக்கின்றனர். அவர்கள் பேச வேண்டும். மத அடிப்படை வாதம். பயங்கரவாதம் இவற்றைப் புறக்கணித்து ஜனநாயகத்துக்காகப் போராட வேண்டும்.

ராஜீவ் கொலையில் தொடர்பு இல்லாத மூன்று பேர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவர்களது கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின்பும் அவர்கள் மீண்டும் நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்றுள்ளனர். ஆனால் காங்கிரசுக்கு ராஜீவ் கொலையை விட காஷ்மீரும் ஆட்சி அதிகாரமும் முக்கியமாக உள்ளது.

ராஜீவ் கொலைக்கான பின்னணி மர்மமாக உள்ளதைப் போலவே நாடாளுமன்றத் தாக்குதல் பின்னணியும் தெளிவுபடுத்தப்படாத நிலையிலேயே உள்ளது. அந்த வழக்கும் முற்றுப் பெறாத நிலையில் (குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை) இன்றும் பலரின் தூக்கு நிறைவேற்றப்படாமல் இருக்கிற நிலையில் அப்சல்குரு அவசர, ரகசியத் தூக்கு இசுலாமிய தீவிரவாதத்தை மேலும் தூண்டுகிற வகையிலே தான் உள்ளது.

இதையே காஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா வேறு மொழிகளில் தெரிவித்து அப்சல்குரு தூக்கை கண்டித்துள்ளார்.

இப்படிப்பட்ட அநீதிகளை எதிர்த்து, மனித உரிமை மீறல்களை எதிர்த்து மனித உரிமை பாதுகாப்பு மையம் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.” என்று பேசினார்.

“சாட்சியமே இல்லாத வழக்கில்
தேசத்தின் மனசாட்சியை
இந்து வெறியின் மனசாட்சியை
திருப்திபடுத்தவே தூக்கு
நிரபராதி அப்சல் குருவுக்கு
அவசரமாகத் தூக்கு”

“குஜராத் மாநிலத்தில்
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள்
ஊனமுற்றோர் முதியோர் என
ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த
அத்வானிக்கும் மோடிக்கும்
தூக்கு எப்போ? தூக்கு எப்போ?”

“காஷ்மீர் மக்களின் உரிமைக்காக
தன்னுரிமை கோரிக்கைக்காக
குரல் கொடுப்போரும், கூட இருப்போம்!”

போன்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாகவே வந்திருந்து ஆதரவளித்த வழக்கறிஞர்கள் உள்பட சுமார் 80 பேர் வரை உற்சாகமாய் கலந்து கொண்டனர்.

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு மதுரை மாவட்டக்கிளை

2. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சுவரொட்டிகள்
01-hrpc-banner-1

02-hrpc-banner-2

2. மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு – கடலூர் கிளையின் துண்டு பிரசுரம்
05-kadalur-notice-2
04-kadalur-notice-1