privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்தமிழகத்தைத் துண்டாட குஷ்பு சதி!

தமிழகத்தைத் துண்டாட குஷ்பு சதி!

-

விசுவ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கு ஒரு அவசரக் கடிதம்

______________________________________________________________________________________________________________________

ஜெயபாரதம்

அயோத்தியில் ராமனுக்கு                                                                                                        ஆலயம் அமைப்போம்

பூஜ்ய ஸ்ரீ அஷோக் ஷிங்கால்ஜி அவர்களின் சமூகத்திற்கு
ராமஸ்வாமியின் பணிவான விக்ஞாபனம்:

ஸ்ரீராம பாதுகா ஊர்வலம் பற்றிய செய்தியைப் பார்த்தேன். ஸ்ரீராமனின் ஜென்மபூமியைக் கண்டு பிடித்ததுடன், பரதன் பாதுகையைப் பெற்ற மரத்தடியையும் நீங்கள் கண்டு பிடித்து விட்டது பற்றி ரொம்ப ஸந்தோஷம். இந்த மரத்தடியை முஸல்மான்கள் எப்படி விட்டு வைத்தார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. போகட்டும். இங்கே தமிழ்நாட்டில் நம்மவா ஆட்சிதான் என்றாலும் அவ்வப்போது மனக்கிலேசத்தை உண்டு பண்ணக்கூடிய கார்யங்கள் நடக்காமலில்லை. நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.

குஷ்பு
இந்து கடவுள் படங்கள் கொண்ட சேலையை அணிந்தார் என்று தமிழகத்து ஸ்ரீராம் சேனாவான இந்து மக்கள் கட்சி குஷ்புவை எதிர்த்தது.

ஸமீபத்தில் மதறாஸ் ‘குமரன் சில்க்ஸ்’ கடையில் என் பெண்ணுக்கு பட்டுப்புடவை வாங்கப் போயிருந்தேன். இந்த வருஷ தீபாவளிக்கு அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் புடவைக்கு ‘குஷ்பு சேலை‘ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதைக் கேட்டவுடன் நான் கடையைவிட்டு வெளியில் வந்துவிட்டேன். கடை முதலாளியும் ஹிந்துதான் என்பதை சொல்லத்தேவையில்லை. இங்கே திரும்பின இடமெல்லாம் குஷ்பு வளையல், குஷ்பு பொட்டு, பொட்டுக்கும் குஷ்புவுக்கும் என்ன ஸம்பந்தம்? கேட்க சகிக்கவில்லை. அதிகம் சொல்வானேன். பள்ளிக்கூடத்தில் படிக்கும் என் கடைசிப் பையன் கூட நோட்டுப் புஸ்தகத்துக்குள் இந்தப் பிசாசின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த குஷ்பு என்பவள் தமிழ் சினிமாவில் இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை. இருந்து விட்டுப் போகட்டுமே என்று அலட்சியம் பண்ணிவிடாதீர்கள். அவள் ஒரு முஸ்லீம். அவளுடைய உண்மைப் பெயர் நக்கத். பம்பாய்க்காரியாம். இந்துவா முஸ்லீமா என்று கண்டு பிடிக்க முடியாதபடி குஷ்பு என்று வேண்டுமென்றே ஈரெட்டாக தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறாள். இந்த விஷயத்தையே நான் தற்செயலாக ஒரு சினிமா பத்திரிகையைப்பார்த்துதான் தெரிந்துகொண்டேன். ‘ஹிந்துவே விழிப்புணர்வுகொள்’ என்று சொல்லிக்கொண்டு நம் பத்திரிகைகள் தூங்குகின்றன.

ஹிந்து சமுதாயத்துக்கு ஏன்தான் இப்படி புத்திகெட்டுப் போனதோ தெரியவில்லை. விநாயகர் சதுர்த்தி பந்தலில் ‘கூந்தலிலே என்ன பூ குஷ்பு’ன்னு மைக்செட்டில் பாட்டு போட்டு போடறான் ஒரு சேரி ஹிந்து. ஹிந்து சமூகத்தில் பிளவு உண்டாகிவிடப் போகிறதே என்று ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பேசாமல் வந்தேன். நம்மவாளே சினிமாவில் இப்படி பாட்டு போடும்போது நாம் அவனை எப்படி கேட்க முடியும்? பாலசந்தர், மணிரத்தனம், விசு, ஜீவி இவாளுக்கெல்லாம் நீங்களாவது சொல்ல வேணும். இல்லையானால் ஆசாரிய சுவாமிகளையாவது இதில் தலையிட்டு அவாளுக்கு புத்தி சொல்லச் சொல்லவும். இப்படியெல்லாம் எழுதுவதால் லெளகிக நிலைமை புரியதாவன் என்று என்னை எடைபோட்டு விட வேண்டாம்.

இன்றைக்கு ஸினிமாதான் எல்லாம் என்று ஆனபிறகு நாமும் இறங்கி ஒருகை பார்த்துவிட வேண்டியதுதான். இந்த அகண்ட ஹிந்து தேசத்தில் ஹிந்து பெண்களுக்கா பஞ்சம்? நமக்கு பாரம்பர்யம்தான் இல்லையா? ரம்பை, ஊர்வசியென்ன, திலோத்தமையென்ன, அப்ஸரஸ் ஸ்திரீகள் என்ன…. ஆனானபட்ட விஸ்வாமித்ரனையே வழிக்குக் கொண்டுவந்த மேனகை பிறந்த பூமியல்லவா இது. அந்த காலத்தில் ஆலயங்கள் இந்தமாதிரி விஷயங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தன. இப்போ எல்லாமே ஸினிமா கொட்டகைதான். சிற்பிகளும் இப்போது சுவாரசியமில்லை.

தமிழ் பார்ப்பனர்போன எலக்ஷனில் சத்ருக்னன் சின்ஹா மாதிரி ஹிந்து நடிகர்களை ஈடுபடுத்தியதிலிருந்து நீங்கள் இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டிருப்பது தெரிகிறது. இருந்தாலும் லக்ஷணமான ஸ்திரீகள் இல்லாத பக்ஷத்தில் ஹிந்து தர்மத்தின்பால் வாலிபர்களை ஈர்ப்பது கஷ்டம். உமாபாரதியெல்லாம் இதற்கு லாயக்கில்லை. ஜீ.வியிடம் இந்த விஷயத்தை நீங்கள் காதில் போட்டுவிட்டால் போதும். ஆக வேண்டியதை பார்த்துக்கொள்வார்.

ஏதோ ஒரு அலையில் நம்மவா ஆட்சி இங்கே வந்துவிட்டது. ஆனால் அடுத்த வேர்தலில் இந்த ராக்ஷஸி (குஷ்பு) போட்டி போட்டால் நிலைமை என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எனக்கு இன்னொரு ஸம்சயமும் உண்டு. தமிழ்நாட்டைத் துண்டாட பாகிஸ்தான் நடத்தும் சதியாகவும் இது இருக்கலாம். வடக்கே காஷ்மீரில் ஏ.கே.47ஐக் கொடுப்பவன், தெற்கே மோகனாஸ்திரத்தை ஏவுகிறான். இதில் கருணாநிதியும் உள்கையாக இருக்கலாம். எதற்கும் நீங்கள் பிரதமர் காதில் இதைப் போட்டுவைக்கவும்.

ராமஜன்ம பூமி விஷயமே இன்னும் முடியாத போது இப்போதைக்கு இதை பெரிய விஷயமாக கிளப்புவது நமது கக்ஷிக்கு உசிதமில்லை. தமிழ்நாட்டுக்கு கோவிந்தாசார்யாவை அனுப்பியிருக்கிறீர்கள். விஷயத்தை அவரிடம் விட்டுவிட்டால் பிரமாதமாக கவனித்துவிடுவார். குறைந்த பக்ஷம் ஹிந்து தயாரிப்பாளர்கள் ஹிந்து நடிகைகளைப் போட்டு படம் எடுக்க வேண்டும் என்று பிரச்சாரத்தைக் கிளப்பினாலே இந்த சனியனை சீக்கிரம் ஒழித்து விடலாம். எப்படியோ இந்த முஸல்மான் மோகினியிடமிருந்து ஹிந்து தர்மத்தைக் காப்பாற்ற பகவான் அருள் பாலிக்கட்டும். ஜெய் சியாராம்.

அனந்தகோடி நமஸ்காரங்களுடன்
ராமஸ்வாமி (ஐயர்)

பின் குறிப்பு: ஸ்ரீராம பாதுகா ஊர்வலம் பற்றிய செய்தியை இண்டியன் எக்ஸ்பிரஸ் 10-ம் பக்கத்தில் போட்டிருக்கிறார்கள். தலைப்பு செய்தியாகப் போடாவிட்டாலும் முதல் பக்கத்திலாவது போடக்கூடாதா? பாதுகையை ‘ஸ்லிப்பர்’னு இங்கிலீஷில் மொழி பெயர்த்து எழுதறாள். இதெல்லாம் ரொம்ப அநியாயம். சம்பந்தப்பட்டவாளிடம் சொல்லி கவனிக்கச் சொல்லவும்.

___________________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 1992

____________________________________________