Saturday, May 3, 2025

விளைநிலங்களை பறிக்கும் மத்திய அரசு !

-

விளைநிலங்களில் பவர்கிரிட் கம்பி வழித்தடம் அமைக்காதே!
விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்காதே!

பிரச்சார இயக்கம் – தெருமுனைப் பிரச்சாரம்!

ந்தியாவின் முதன்மையான மற்றும் அடிப்படை ஆதாரமான விவசாயத்தை திட்டமிட்டு ஆளும் வர்க்கத்தின் அழித்துக் கொண்டு வருகின்றனர். விவசாயிகளை கடன்காரர்களாக்கி விவசாயத்தை விரட்டியும் தற்கொலைக்கும் தள்ளி வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் சில மாதங்களுக்கு முன்பு “விவசாயத்தை இவ்வளவு பேரை யார் செய்யச் சொன்னது” என்று திமிராக பேசியுள்ளார். பன்னாட்டு பதுக்கல் கம்பெனிகளுக்கு சாதகமாக மன்மோகன் சிங் பேசியுள்ளார். அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருகிறது.

power-polesபென்னாகரம் வட்டத்தில் சின்னம்பள்ளி பகுதி ஓரளவு விவசாயம் நடக்கும் பகுதி. இப்பகுதியில் மத்திய பவர் கிரிடு நிறுவனம் தூத்துக்குடியிலிருந்து தருமபுரிக்கு 745 KV மின்கம்பி வழித்தடத்தை அமைக்க சின்னம்பள்ளி, கோம்பை, சோளி கவுண்டனூர், பூதநாயக்கன்பட்டி, பெத்தானூர், சானரப்பட்டி, பெரும்பாலை ஆகிய 8 கிராமங்களில் விவசாயிகளை மிரட்டி நிலத்தில் மின்கோபுரம் அமைக்க சர்வே செய்துள்ளனர். குழிகளையும் சில இடங்களில் இயந்திரம் வைத்து தோண்டியுள்ளனர்.

இந்த மின் கோபுரம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய மின் வழித்தடமாகும். ஒரு கோபுரம் அமையும் இடத்தில் குறைந்த பட்சம் 0.5 ஏக்கர் நிலம் பறிக்கப்படுகிறது. இதனால் இந்த எட்டு கிராமங்களில் விவசாயத்தையே நம்பி வாழும் விவசாயிகளை நாடோடிகளாக அரசு மாற்றி இருக்கிறது. அக்கிராமங்களில் மின் கோபுரம் அமையும் இடங்களில் நூற்றுக் கணக்கான மரங்களைக் கொண்ட தென்னந் தோப்புகளும், மாந்தோப்புகளும், புளியந்தோப்புகளும் பசுமையான காடுகளும், விளைநிலங்களும் அழிக்கப்பட உள்ளன.

இதற்கு எதிராக பவர் அமைக்க வரும் அதிகாரிகளிடம் முறையிட்டால், வாக்குவாதம் செய்தால் “கூடங்குளத்தில் செய்தது போல கைது செய்து சிறையில் தள்ளுவோம்” என்று மிரட்டுகிறார்கள். பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுபவனிடம் “என்னை விட்டுவிடு” என்று ஒரு பெண் கெஞ்சினால் எப்படி விட மாட்டானோ, அப்படித்தான் இந்த அரசு விவசாயிகளையும் பலாத்காரமாக மிரட்டி நிலத்தைப் பறித்து டவர் அமைக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

அதற்கு எதிராக பென்னாகரம் வட்ட புரட்சிகர அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி, பிரசுரம் அச்சிட்டு மின்கோபுரம் அமையவிருக்கும் 8 கிராமங்களிலும் வீடு வீடாக சென்று டவர் அமைக்க வரும் அதிகாரிகளையும், பணியாளர்களையும் நாம் தடுத்து திருப்பி அனுப்ப ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். 7 கிராமங்களில் தெருமுனை பிரச்சாரத்தையும் செய்தனர். விவசாயிகளின் பாதிப்புக்காக எந்த ஓட்டுக் கட்சியும் முன் வந்து அவர்களுக்கு உதவி செய்யாத நிலையில் உடனடியாக விவசாயிகள் விடுதலை முன்னணி தலையிட்டு கிராம மக்களிடம் போராட்ட உணர்வூட்டியதும், ஆதரவு தெரிவித்தது அவர்களுக்கு போராட உத்வேகமூட்டுவதாக இருக்கிறது.

“இது மத்திய அரசு நிறுவனம், இதனை தடுத்து நிறுத்த முடியாது” என்று நினைத்துக் கொண்டிருந்த மக்களை, 8 கிராம மக்கள் நினைத்தால் அத்திட்டத்தை மாற்றி அருகில் உள்ள மலையோரங்களில் அமைக்க செய்து விட முடியும் என்று விளக்கி அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணி அணி திரட்டி வருகின்றது.

தெருமுனை பிரச்சாரத்திற்கு முன்னதாக தலைப்பில் கண்ட முழக்கத்தின் அடிப்படையில் போஸ்டர் அச்சிட்டு 8 கிராமங்களிலும், மாவட்டத்தின் முக்கிய நகரப் பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளே!
பெரும்பாலை முதல் தோளூர் கோம்பை வரை எட்டு கிராமங்களில் அமைய உள்ள பவர்கிரிட் மின்கம்பி வழித்தடத்தை விளைநிலங்களில் அமைக்காதே!

உழைக்கும் மக்களே!
விளைநிலங்களில் பவர்கிரிட் கோபுரம் அமைவதை போராடி முறியடிப்போம்!
விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்டும் புதிய பொருளாதார கொள்கையை முறியடிக்க, விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதுகாக்க ஒன்றிணைவோம்!

விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம் வட்டம், 99433 12467

தகவல் :
செய்தியாளர், புதிய ஜனநாயகம், பென்னாகரம்,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க