privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கநீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு !

நீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு !

-

டந்த வெள்ளியன்று (மே 31, 2013) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்வதந்திர குமார் என்ற அத்தீர்ப்பாயத் தலைவர் தனது தீர்ப்பில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், சுற்றுப்புறச் சூழலையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மார்ச் 23-ல் கசிந்த வாயு உண்மையிலேயே ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தான் வந்ததா அல்லது அருகிலுள்ள பிற 64 ஆலைகளில் ஏதாவது ஒன்றிலிருந்து வெளியானதா என்பதை கண்டறிந்து உண்மையை நிரூபிக்க தமிழக அரசு தவறி விட்டது என்றும், ஆலையில் வேலை செய்பவர்கள் அல்லது அருகில் வசிப்பவர்கள் யாரும் பாதிக்கப்படாத நிலையில் 8 கிமீ தொலைவில் உள்ள கிராமத்தில் கந்தக டை ஆக்சைடு பரவியதாக சொல்வது அறிவியல்பூர்வமாக ஏற்புடையதாக இல்லை என்றும் கூறியிருக்கிறார் நீதிபதி. ஆலைக்கு அருகில் குடியிருப்புகள் இல்லை, ஆலை ஊழியர்களை நச்சுவாயு பாதிப்பிலிருந்து பாதுகாத்திட தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்பவற்றை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

பசுமைத் தீர்ப்பாயம் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்காக 2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால் அவர்கள் ‘நாட்டின் வளர்ச்சியை’ப் பற்றி மட்டுமே, அதாவது முதலாளிகளின் நலனைப் பற்றியே தான் மக்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். எப்படி கல்வி பெறும் உரிமைச் சட்டம் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளதோ, உணவு பாதுகாப்புச் சட்டம் எப்படி பொது விநியோகத் துறையை இழுத்து மூடுவதற்காக உருவாக்கப்பட்டதோ அதே போல பசுமைத் தீர்ப்பாயம் என்பது கார்ப்பரேட்டுகள் சுற்றுசூழலை பாழாக்குவதற்கு ஏதுவாக செயல்படுகிறது.

மார்ச் 23-ம் தேதி ஆலையிலிருந்து வெளியான அதிகப்படியான நச்சு வாயுக்களால் தூத்துக்குடி மாநகரமே அல்லோகலப்பட்டது. பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே 82 முறை ஸ்டெர்லைட்டிலிருந்து இப்படி வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர். பொது மக்கள் ஊர்வலம் போனார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள். மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதைத் தொடர்ந்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நால்வர் குழுவொன்றை அமைத்து வாயுக் கசிவு பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரியது. அந்த அறிக்கையின் அடிப்படையில் விஷ வாயு கசிவு நடந்து ஏழு நாட்களுக்குப் பிறகு, மார்ச் 30 அன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலை செயல்படுவதற்கு தடைவிதித்தது. அப்போது, மக்கள் போராட்டத்தை மதித்து ஜெயா ஸ்டெர்லைட்டை தடைசெய்து விட்டதாக நல்லக்கண்ணு உள்ளிட்ட பலரும் ஜெயலலிதாவுக்கு மேஜை தட்டினார்கள்.

இப்போது ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்வதாக பம்மாத்து செய்யும் ஜெயலலிதா அரசு செப்டம்பர் 2012-ல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஆலை சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தவில்லை என்று கூறியுள்ளது. அதனை ஆதாரமாகக் காட்டி வாதாடிதான் தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடமிருந்து ஸ்டெர்லைட் பெற்றுள்ளது. ஆலையின் வழக்கறிஞர் தூத்துக்குடி நகர சுற்றுப்புற சூழல் மேம்பாட்டுக்காக தாங்கள் இதுவரை ரூ 500 கோடி செலவிட்டிருப்பதாகவும் இன்னும் ரூ 150 கோடி ரெடியாக வைத்திருப்பதாகவும் தீர்ப்பாயத்தில் கூறினார். தீர்ப்பாயம் இதனை கணக்கில் எடுத்துக் கொண்டு, அதாவது வல்லுறவு செய்தவன் தானே முன் வந்து திருமணம் செய்துகொள்வான் என்கிற பாணியிலான கட்டப்பஞ்சாயத்தை செய்து வைத்திருக்கிறது.

நச்சு வாயு கசிந்து 10 நாட்களுக்குள் ஏப்ரல் 2-ம் தேதி உச்சநீதி மன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்திரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் 2010-ம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்திருந்தது. தேசிய கடல்சார் பூங்காவான மன்னார் வளைகுடா பகுதி என்பது முக்கியமாக பவளப் பாறைகள் மற்றும் அரிய கடல் வாழ் உயிரினங்களின் வசிப்பிடம். இப்படி அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து 25 கிமீ தூரத்திற்குள் எந்த ஆலையும் அமையக் கூடாது என்பது விதி. ஆனால் ஸ்டெர்லைட் இயங்கும் சிப்காட் பகுதி கடலில் இருந்து 14 கிமீ தூரத்தில்தான் இருக்கிறது. 1986-ல் மன்னார் வளைகுடாவை தேசிய கடல்சார் பூங்காவாக அறிவித்த தமிழக அரசின் முடிவை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என்று கூறி மேற்சொன்ன விதிமீறலை உச்சநீதி மன்றம் நியாயப்படுத்தியது. ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்புகள், அனுமதியில்லாமல் ஆலையினை விஸ்தரித்த அதன் நடவடிக்கைகள், அனுமதியே இல்லாமல் பல ஆண்டுகள் ஆலையை நடத்தியது ஆகியவற்றுக்கு தண்டனையாக ரூ.100 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம். ஆலையை மூடுவது பொது நலனுக்கு உகந்ததல்ல என்றும் உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

ஸ்டெர்லைட் நிறுவனம் 2011-12 இல் விற்பனை மூலம் ஈட்டிய தொகையான ரூ 19,051 கோடியில் 5,000 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 15,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு தந்த சம்பளம் வெறும் 92 கோடிதான் (0.48%). இந்நிறுவனம் மூலமாக வேதாந்தா ஆண்டுக்கு ரூ 939 கோடி நிகர லாபமாக எடுக்கிறது. போட்ட முதலோ ரூ 336 கோடி ரூபாய்தான். 4 ஆண்டுகளுக்கு ஸ்டெர்லைட் கட்டாமல் ஏமாற்றிய சுங்கவரி மட்டும் ரூ 738 கோடி. தாமிரத்தை ஏற்றுமதி செய்யாமலே ஏற்றுமதி செய்ததாக கணக்கு காட்டி பெற்ற மானியத் தொகை மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் ரூ 750 கோடி. இப்படி சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை கொள்ளையடித்து விட்ட ஸ்டெர்லைட்டுக்கு ரூ 100 கோடி மட்டும் அபராதம் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் வர்க்க சார்பு.

தனது தீர்ப்பு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்திரவிட்ட முடிவை கட்டுப்படுத்தாது என்று மட்டும் உச்சநீதி மன்றம் பம்மாத்து செய்தது. இதைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்திரவுக்கெதிராக ஸ்டெர்லைட் தாக்கல் செய்திருந்த மனு சென்னையிலுள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் இருந்து டெல்லியிலுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு மர்மமான முறையில் மாற்றப்பட்டது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு தற்போது வெளியாகி, ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க வழிசெய்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் ஒருவர், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஒருவர், இரண்டு ஐஐடி பேராசிரியர்கள் ஆகியோர்களைக் கொண்ட நால்வர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வெளியேறும் வாயுக்கசிவின் அளவு, ஆலையிலுள்ள எந்திரங்களின் தன்மை ஆகியவற்றை மாதமொன்றுக்கு மூன்று முறை ஆய்வு செய்து ஜூலை 7 க்குள் தீர்ப்பாயத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் இறுதித்தீர்ப்பு ஜூலை 10 அன்று வழங்கப்படுமாம்.

மராட்டிய மாநிலம் ரத்தினகிரியிலிருந்து விவசாயிகளின் போராட்டத்தால் விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட்டை அன்றைய ஜெயா அரசு தமிழ்நாட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. இன்று மக்களைப் பாதுகாக்க ஸ்டெர்லைட்டை மூடினார் என்று விதந்தோதப்படும் இதே ஜெயலலிதா தான் 30.10.94 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டி, அப்பகுதி மக்களின் வாழ்வாதரத்தின் மீதான தாக்குதலை ஆரம்பித்து வைத்தார்.

ஸ்டெர்லைட் போராட்டம்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்

தென் மாவட்டங்களில் உள்ள சாதிகளுக்கிடையேயான கூர்மையான வேறுபாடுகளைப் பயன்படுத்தி குறிப்பாக நாடார்-மீனவர்கள் பிளவைப் பயன்படுத்திக் கொண்டு, எதிர்ப்புகளை முடக்கி, காங்கிரசு-கருணாநிதி ஆசியுடன் 1997-ல் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் தனது உற்பத்தியைத் துவங்கியது.

ஆலையைச் சுற்றி 250 மீ அளவுக்கு பசுமை வளையம் அமைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனையை இன்றுவரை ஸ்டெர்லைட் பின்பற்றவில்லை. மீனவர்களின் வாழ்வாதரத்தை பூண்டோடு அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளில் பாதரசம், காட்மியம், அமோனியா, ஆர்சனிக் என பல வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கழிவுகள் இருக்கிறது. ஒரு டன் தாமிரத்தை சுத்திகரித்தால் மூன்று டன் கழிவுகள் வெளியேறும். கழிவுகளைக் கொட்டுவதால் அருகிலுள்ள கிராமங்களில் நிலத்தோடு சேர்ந்து நிலத்தடி நீரும் கடுமையாக மாசடைந்துள்ளது. இங்கு இதுவரை நடந்துள்ள ஆலை விபத்துக்களில் 13 பேர் இறந்துள்ளனர். இவர்களில் வட இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் பலர். சுமார் 139 பேர் படுகாயமடைந்துள்ளனர். அருகிலுள்ள தெற்கு வீரபாண்டியாபுரம், காயலூரணி போன்ற கிராமங்களில் ஏற்கெனவே செய்துவந்த பருத்தி விவசாயம் அடியோடு நிறுத்தப்பட்டதுடன், நிலத்தடி நீர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் புற்றுநோய், சிறுநீரக கோளாறு போன்ற நோய்கள் வருவது கடந்த பத்தாண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.

காலம் நிறைய அனுபவங்களை மக்களுக்கு விட்டுச் செல்கிறது. பல சமயங்களில் கற்றுத் தருகின்ற ஆசிரியனாகவும் விளங்குகிறது. முன்னர் ஸ்டெர்லைட் வரவை ஆதரித்த நாடார்கள் மார்ச் 23 அன்று தங்களது காய்கறி சந்தையில் துணியால் மூக்கைப் பொத்தியபடி வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆலையைத் திறக்க உச்சநீதி மன்றம் ஆணையிட்ட ஏப்ரல் 3-ம் தேதி அன்று அதைக் கொண்டாடும் நோக்கில் பட்டாசு வெடிக்க வந்த நிறுவன ஊழியர்களை பழைய பேருந்து நிலையத்தின் முன் விரட்டியடித்திருக்கிறார்கள் தூத்துக்குடி நகர மக்கள்.

1992-ல் இந்தியாவில் தாமிர உற்பத்தி தனியாருக்கு திறந்துவிடப்பட்ட பிறகு நாட்டின் உற்பத்தி ஆண்டுக்கு 62,000 டன்னில் இருந்து 9 லட்சம் டன்னை தாண்டி உள்ளது. உள்நாட்டுத் தேவையோ 6 லட்சம் டன் மட்டும்தான். ஸ்டெர்லைட் தயாரிக்கும் 4 லட்சம் டன் தாமிரத்தில் பெரும்பாலும் ஏற்றுமதிக்கானதுதான் என்பதால் அது வந்துதான் உள்நாட்டுத் தேவை என்பது நிறைய வேண்டுமென்பதில்லை.

அனில் அகர்வால்
அனில் அகர்வால்

ஆசிய தாமிர சந்தையை வேதாந்தா கைப்பற்றுமா இல்லையா என்பதுதான் முதலாளித்துவ சந்தையில் நடக்கும் விவாதங்களின் சாரம். உலகம் முழுக்க ஏற்றுமதியாகும் சீன மின்சாதனப் பொருட்களின் உற்பத்திக்கு ஆண்டுக்கு 90 லட்சம் டன் தாமிரம் தேவைப்படுகிறது. ஸ்டெர்லைட் சுத்திகரிக்கும் தாமிரத்தில் பாதிக்கும் மேல் சீனாவுக்கு செல்கிறது. பிர்லாவின் ஹிண்டால்கோ தாமிர சுத்திகரிப்பு நிறுவனமும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுத்தல் பிரச்சினை காரணமாக நீண்டகாலமாக மூடப்பட்டிருப்பதால் ஆசிய சந்தையைப் பிடிப்பதில் வேதாந்தாவுக்கும், சாங்காய் முதலாளிகளுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் அனில் அகர்வாலின் லாப வேட்டைக்கு இந்திய உச்சநீதி மன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் ஏவல் வேலை செய்திருக்கின்றன.

அனில் அகர்வால் தூத்துக்குடி ஆலையின் உற்பத்தியை 4 லட்சம் டன்னில் இருந்து 8 லட்சம் டன் ஆக உயர்த்த அரசிடம் மனுப்போட்டு காத்திருக்கிறான். மக்கள் போராட்டங்கள், ஆலைக்கு தடை கோரும் வழக்குகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகள் என எதுவும் அவனைப் பொறுத்தவரை ஒரு பொருட்டாக இருப்பதில்லை. இந்தியாவில் எல்லா ஓட்டுக் கட்சிகளுக்கும் பல்வேறு பெயர்களில் பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கியிருக்கிறான் அனில் அகர்வால். அப்படி கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரசு மற்றும் பிஜேபி க்கு வேதாந்தா கொடுத்த நன்கொடை மட்டும் ரூ. 28 கோடி. இப்போது விடாப்பிடியாக போராடும் வைகோ வின் அன்றைய கட்சிப் பிரமுகர்கள் பலரும் கூட முன்னர் வேதாந்தாவிடம் காசு வாங்கியவர்கள்தான்.

ஆஸ்திரேலியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தாமிர தாதுக்களை இந்த ஆலையில் சுத்திகரிக்கிறார்கள். இது திட்டமிட்ட முறையில் ஏழை மற்றும் வளரும் நாடுகள் மீது மட்டுமே திணிக்கப்படுகிறது. ஏற்றுமதி செய்த ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதி இன்னும் மக்கள் சென்றடையாத பகுதியாக இருந்தபோதும் அங்கெல்லாம் துவங்காமல் அந்த சுத்திகரிப்பு தூத்துக்குடிக்கு கப்பலேறியதற்கு பெயர் தான் உலகமயம். நீதிமன்றங்களும், பசுமைத் தீர்ப்பாயங்களும் வேதாந்தாவின் லாப வேட்டையினால் இயக்கப்படும் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியும், நாட்டின் பொருளாதார ‘வளர்ச்சி’யும் முக்கியம் அல்லவா என்று நம்மைப் பார்த்து கேட்கின்றன. அற்ற குளத்தில் அருநீர் பறவை போல தூத்துக்குடியை சுடுகாடாக மாற்றி விட்டு வேதாந்தா இன்னொரு ஊருக்கு பறந்து விடுவான். நாம் விழித்துக் கொள்ளத் தவறினால் எப்போதும் இனி விழிக்க இயலாது.

– வசந்தன்.

  1. நெஞ்சு பொறுக்குதில்லையே…

    அந்த நீதிபதியின் வீட்டை இந்த ஆலைக்கு அருகில் மாற்றைனால் நல்ல தொரு தீர்ப்பு கிடைக்கும்!

  2. ரொம்ப அரிவார்த்கமான தீர்பை தந்திருகிரார். போபால் கசிவு பக்கத்து வீட்டுக்கெ எந்த வித இழப்பையும் செஇயாதபொழுது ச்டெர்லிடெ கசிவு எப்படி இவலொ தூரம் போகும்?நல்ல பள்ளிக்கூடதில் படிதவருக்கு மட்டும் இப்படி அறிவு இருக்கும்.

Leave a Reply to Mano பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க