privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்கள்ளக்காதலில் பாமக பிரமுகர் ஆணுறுப்பு நசுக்கி கொலை !

கள்ளக்காதலில் பாமக பிரமுகர் ஆணுறுப்பு நசுக்கி கொலை !

-

ன்னியர்களை மணமுடிக்கும் தலித்துக்களின் காதலை நாடகக்காதல் என்று வெறி கொண்டு எதிர்க்கும் பாமக, இதற்காக தமிழகமெங்கும் ஆதிக்க சாதி வெறியர்களை அணிதிரட்டி வருவது நமக்கு தெரியும். இதற்காகவே தருமபுரி தலித் இளைஞரான இளவரசனிடம் இருந்து வன்னியப் பெண்ணான திவ்யாவை மிரட்டி பிரித்து வைத்து அழகு பார்த்தவர்கள் இந்த வன்னிய குல ஷத்திரியர்கள் ! நிர்ப்பந்தத்தில் பேசும் திவ்யாவின் அவலத்தை வைத்தே வன்னிய மானம் மீட்கப்பட்டதாக துள்ளிக் குதிப்பவர்கள் இந்த சாதி வெறியர்கள்.

ஆனாலும் வரலாறு அவர்களின் துள்ளலை எத்தனை நாட்களுக்குத்தான் அனுமதிக்கும்? சொந்த சாதியில் பெற்றோர், உற்றோர் உறவினர் பார்த்து திருமணம் செய்து கொண்டு நாடகக் காதலை எதிர்க்கும் பாமகவினர் தமது சொந்த வாழ்க்கையில் எத்தகைய ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர்? இதோ கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் கதையை படியுங்கள்!

அரசியல் ரவுடி
திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளின் பாட்டாளி மக்கள் கட்சி.

ஆத்தூர் அருகே கல்பகனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயதான ஆறுமுகம். அந்தப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கிய இவர் பா.ம.க. நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு கைதானவர்.

மே மாதம் காதலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு வெயிலுக்கு அஞ்சி திருச்சி சிறையில் இருந்த போது மேற்படி ஆறுமுகமும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருக்கிறார். மே 22-ம் தேதி நடந்த அவரது மகள் திருமணத்துக்குக் கூட சிறையில் இருந்து வெளியில் வர முடியாமல் அவர் இல்லாமல் திருமணம் நடந்திருக்கிறது. பின்னர் மே 27-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு வந்திருக்கிறார். இப்படி பாமக கொள்கையிலும், போராட்டங்களிலும் புடம் போடப்பட்ட மாபெரும் வன்னிய குல ஷத்திரிய வீரர்தான் இந்த ஆறுமுகம்.

கள்ளக் காதலுக்கும் நாடகக் காதலுக்கும் எதிரான பா.ம.க.வின் உண்மையான களப் போராளியான ஆறுமுகம் மே மாதம் 30-ம் தேதி கொத்தாம்பாடி வழியாகச் செல்லும் வசிஷ்ட நதிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே வளையல்கள் உடைந்து கிடந்ததால் ஆறுமுகத்தின் மனைவி காசியம்மாள் மர்ம நபர்கள் கொலை செய்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். ஒரு பாமக பிரமுகரும் களப் போராளியுமான ஆறுமுகம் உடைந்த வளையல்கள் சூழ ஏன் மர்ம நபர்களால் கொல்லப்பட்டிருக்க வேண்டும்? கொள்கைக்காக கொல்லப்பட்டிருந்தால் வெளிப்படையாக இன்னார்தான் எதிரிகள் என்று தெரிந்திருக்கும். கொள்கை இடத்தில் மர்மமும் வளையலும் இருந்தால் என்ன பொருள்?

பா.ம.க.வின் சமூக நீதி கோட்பாட்டின்படி முறையாக திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு 25, 21 வயதான இரண்டு மகன்களும் 22 வயதான மகளும் உள்ளனர். அதாவது பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயதில் அய்யா ஆறுமுகம் இருந்திருக்கிறார் என்பது முக்கியமானது. வன்னிய மக்களின் மானத்திற்கும், பொறுப்பிற்கும் சொந்தக்காரர்களான பாமக கட்சியின் பிரமுகரே அதுவும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதால் ‘அம்மாவின்’ ஆத்தூர் போலீசு கொலையை விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். தமிழகத்திலேயே புகழ் பெற்ற மோப்ப நாய் அர்ஜூன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. பாமகவின் மானத்தையும், மர்மத்தையும் கண்டு பிடிக்க வேண்டிய கடமையை நாய் அர்ஜூன் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை.

விசாரணையின் போது கல்பகனூரைச் சேர்ந்த செல்வி என்பவருடன் ஆறுமுகத்துக்கு கள்ளத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. உடனே ஒரு பாமக பிரமுகர் கள்ள உறவு வைத்திருப்பதா என்று பாமக சொந்தங்கள் பொங்கி எழுமென்று யாரும் எதிர்பார்க்கவேண்டாம். கள்ள உறவு இல்லையென்றால் ஷத்திரிய குலத்தின் ஆண்மைக்கு பெருமையில்லை.

எனினும் போலீசார் மனதை இரும்பாக்கிக் கொண்டு அந்த செல்வியிடம் விசாரித்தார்கள். ஆரம்பத்தில் அவர்களிடம் செல்வியும் அழுது அரற்றியவாறு கூறியது என்னவென்றால் வசிஷ்ட நதிக்கரையில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த செல்வியின், “மாஜி’ கள்ளக் காதலன் வனராஜா எட்டி உதைத்தபோது, ஆறுமுகத்தின் ஆண் குறியில் அடிபட்டு அவர் இறந்துவிட்டார் என்று வாக்குமூலம் கொடுத்தார். ஷத்திரிய குலத்தின் மானமும், மர்மமும், கொலையும் பாரத நாட்டின் புகழ்பெற்ற வசிஷ்ட நதிக்கரையில்தான் நடந்திருக்கிறது என்பது முக்கியம்.

இப்படி புராணச் சிறப்புள்ள இந்த மர்மக் கொலையின் மூலத்தை ஆத்தூர் போலீசு தொடர்ந்து தேடியபோது முதலில் வனராஜாவை குறிவைத்தார்கள். சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பாகவே வனராஜா காஷ்மீர் போகும் லாரியில் ஓட்டுனராக சென்று விட்டதும், அவர் இப்போது குஜராத்தில் இருப்பதும் தெரிய வந்தது. வனராஜா, வசிஷ்ட நதி, காஷ்மீர், குஜராத் எல்லாம் சேர்ந்து பார்த்தால் இதில் மகாபாரதமே இருக்குமோ என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

வனராஜாவுக்கு இந்தக் கொலையில் தொடர்பில்லை என்பதை போலீசார் பல சுற்று விசாரணையில் கண்டுபிடித்தனர். அதற்கு முன்னரே போலீசிடம் கதை சொன்ன செல்வி பின்னர் தலைமறைவாக இருந்து விட்டு வேறு வழியின்றி ஜூன் 6-ம் தேதி கல்பகனூர் வி.ஏ.ஓ. அத்தியப்பன் முன்பு ஆறுமுகத்தை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

பிறகு போலீசில் செல்வி அம்மையார் கொடுத்த வாக்குமூலத்தை படியுங்கள்:

“என் சொந்த ஊர் சேலம் அருகே உள்ள அனுப்பூர். தாய்மாமன் ரத்தினவேலை நான் திருமணம் செய்தேன். அதன்பின், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரத்தினவேலின் சகோதரர் கணேசனை திருமணம் செய்தேன். கணவர் கணேசன், வேறு பெண்ணை திருமணம் செய்ததால், நான் கல்பகனூரில் உள்ள எனது தாய் பழனியம்மாளுடன் வந்து வசித்து வந்தேன்.

அப்போது, பா.ம.க., கட்சியில் உள்ள பிரமுகர் ஆறுமுகம் உள்ளிட்ட பலருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் ஆறுமுகம் எனக்கு 20 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்தார். கடந்த, 29-ம் தேதி, கொடுத்த பணத்தை அவர் கேட்டதால், பணத்தை திருப்பி கொடுக்ககூடாது என்று முடிவு செய்த நான் இரவு 9.30 மணியளவில் அவரை “வா நாம் உல்லாசமாக இருக்கலாம்” என்று வசிஷ்ட நதிக்கு அழைத்துச் சென்று, ஆறுமுகத்தின் ஆண் உறுப்பை நசுக்கிப் பிடித்து கசக்கி கொலை செய்தேன், பின்னர் நான் வீட்டுக்கு போய்விட்டேன்.”

இதுதான் செல்வி அளித்திருக்கும் வாக்குமூலம்! செல்வி கைது செய்யப்பட்டு சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலே எழுதிய அனைத்தும் எமது சொந்தச் சரக்கு அல்ல. அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த செய்திகளைத்தான் தொகுத்து எழுதியிருக்கிறோம். பொதுவில் கள்ளக்காதல் கொலை என்றால் ஊடகங்கள் அதை மலிவான ரசனையை தூண்டும் விதத்தில் எழுதும். அதை தவிர்த்து விட்டு பார்த்தால் இங்கே ஒரு முக்கியமான பாமக பிரமுகர் கள்ளக் காதலியால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

காதல், நாடகக் காதல், வன்னிய குல ஷத்திரிய வீரம், அக்னிக்கு பிறந்தவர்கள், ஒழுக்கம், என்று ஏகப்பட்ட விசயங்களைப் பேசும் அய்யாவின் பாமக நபர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இந்த ஆறுமுகம் ஒரு சான்று இல்லையா? பெண்டாளுவதையே ஆண்மையின் வீரம் என்று கொண்டாடுவது எல்லா ஆதிக்க சாதியிடத்திலும் உண்டு. அதிலும் இந்த ‘ஷத்திரிய’ வகை சாதிகளில் இது இன்னும் அதிகம். இந்த ஆணாதிக்க திமிர்தான் சாதிப் பெருமை என்று தலித்துக்களின் காதலை வெறுப்புணர்வுடன் ஒழிக்க நினைக்கிறது.

ஊருக்கே நல்லொழுக்க போதனை செய்து, இளைஞர்களின் காதலை அடித்தும், மிரட்டியும், பிரித்து வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் யோக்கியதைக்கு ஆறுமுகம் ஒரு உதாரணம்.

எனினும் அனைத்து சாதிவெறியர்களையும் அவர்களது சாதித்திமிர் எனும் ஆண்குறியையும் தமிழக மக்கள் நசுக்கி ஒழிக்கும் காலம் வராமல் போகாது.

பின் குறிப்பு: செல்வியின் வாக்குமூலத்தில் ஆறுமுகத்தின் பாமக இமேஜை காப்பாற்ற வேண்டி சில பல மிகைப்படுத்தல்கள் போலிசால் சேர்க்கப்பட்டிருக்கலாம். செல்வியை ஒரு விலை மாது போல சித்தரிப்பது கூட அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனாலும் ஆணுறுப்பை நசுக்கி கொலை செய்யும் வண்ணம் செல்விக்கு என்ன கோபம், இது வெறும் பணத்திற்காக மட்டுமா என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். ஆறுமுகம்  எனும் பாமக நபர் செல்வி எனும் பெண்ணால் ஆணுறுப்பு நசுக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் இதில் தெரிய வரும் உண்மை. ஆகவே நமது பாமக அடிமை அருள் அவர்கள் சேலம் சிறையில் இருக்கும் செல்வியை சந்தித்து ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது ஏன் என்று வீடியோ நேர்காணல் எடுத்து உண்மையை அறியத்தருவார் என்று நம்புவோம்.

மேலும் படிக்க