privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமீட்டர் பொருத்திய மனங்களுக்கு...

மீட்டர் பொருத்திய மனங்களுக்கு…

-

சாதாரண மனிதர்களின் தவறுகள் ரோட்டில் நடக்கும் தவறுகளாக இருக்கின்றன. பளிச்சென தெரிந்து விடுகின்றன. தள்ளு வண்டி வியாபாரிகள், சிறுகடை வியாபாரிகள், எரிவாயு உருளை கொண்டு வந்து போடும் தொழிலாளர்கள் இவர்களின் தவறுகளும், ஒழுங்கீனங்களும் உடனே மக்களின் விவாதத்துக்கு வந்து இந்த வகையான வர்க்கங்கள் ஒட்டு மொத்தமாக ரொம்ப திமிர் பிடித்தவர்கள் என்ற புனைவுகளும் பரவி விடுகின்றன. அந்த வகையில் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தின் மதிப்பீட்டில் ‘பெயரெடுத்தவர்கள்’ ஆட்டோ தொழிலாளர்கள். ஆட்டோ தொழிலாளர்களில் ஒரு சிறிய பகுதியினரின் அடாவடி, அதிக கட்டண வசூல் போன்ற செய்கைகளால் எரிச்சலடைந்த நடுத்தர வர்க்கத்தின் புழுக்கத்தை சேர்த்துக் கொண்டு அரசு ஆட்டோ தொழிலாளிகள் மீது கட்டுப்பாடு என்ற பெயரில் ஒரு திடீர் தாக்குதலையும், அதை விட அங்கங்கே செக்கிங், வண்டி பறிமுதல், சிக்னல்களில் அறிவிப்பு என ஏறக் குறைய ஆட்டோக்காரர்களை ஒரு சமூக விரோதிகள் போல சித்தரிக்கிறது அதிகார வர்க்கம்.

ஆட்டோநடக்கிற நிகழ்வுகளின் ஆதாயம் காரணமாக நடுத்தர வர்க்கத்திடமும் ஒரு குரூர மகிழ்ச்சி! அரசு வழக்கம்போல நடுத்தர வர்க்கத்தை தாக்கும் போது அடித்தள மக்கள் பக்கம் நின்று கொண்டு வயிற்றெரிச்சலை தூண்டுவது, அடித்தர மக்களைத் தாக்கும் போது நடுத்தர வர்க்கத்தின் பக்கம் நின்று கொண்டு ”வச்சான் பாரு ஆப்பு!” என தூண்டுவது என்பதை திறம்படச் செய்கிறது.

ஆட்டோக்காரர்கள் தவறே செய்யாதவர்கள் அல்ல, என்பது நமது வாதமல்ல. முறைபடுத்தப்படாத தொழிலாளர்களிடம் விளையும் தவறுகளுக்கு அவர்கள் தரப்பை தண்டிப்பதும், கண்டிப்பதும் இருக்க வேண்டும், ‘இல்லாவிட்டால் எப்படி சார்!’ என்று நியாயம் பேசுபவர்கள், இந்தத் தவறுகளுக்கான சமூகக் காரணங்களையும் நிதானமாகக் கண் கொண்டு பார்ப்பதுதான் சமூகப் பொறுப்பின் லட்சணமாகும். வாழ்வதற்கான எந்த சமூகப் பொருளாதார வரையறைகளையும், அடிப்படைகளையும் ஏற்படுத்தித் தருவது நமது வேலையல்ல, எனக்கு மட்டும் இஞ்ச் குறையாமல் முறையான சேவைகளை வழங்க வேண்டும் என்பதில் நியாயமுள்ளதா?

அதாவது முறைப்படுத்தப்படாத, உதிரித் தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச சம்பளம், வாடகை, வீடு, மருத்துவம், பிள்ளைகள் கல்வி… போன்ற சமூகப் பாதுகாப்பு விசயங்களில் எனக்கு அக்கறையில்லை, இவைகளைப் பற்றியெல்லாம் பேசமாட்டேன், ஆனால் அந்தத் தொழிலாளிகள் மட்டும் எனது பொருளாதார நலனைப் பற்றி சிந்திப்பவர்களாக பணியாற்ற வேண்டும் என்பது எந்த வகை பொது நியாயம்? சுருங்கச் சொன்னால் வாழ்வதற்கு அடிப்படை இல்லாமல் சிலருக்கு சமூகத்தை விரோதியாக்கிவிட்டு, சமூக விரோதிகள் என்று கூச்சலிடுவது பிரச்சனையை தீர்க்குமா?

ஆட்டோ தொழிலாளர்கள் அரசிடம் கேட்பது என்ன? குறைந்தபட்ச மீட்டர் கட்டணம் 30 ரூபாய், கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் எனக் கேட்டனர். இன்றுள்ள விலைவாசி உயர்வு, நாள் தோறும் ஏறும் எரிவாயு, எரிபொருள் அடாவடி என்றச் சூழலில் இதை வழங்குவது நியாயமானதே. ஜெயலலிதாவிடம் சீட் நுனியில் வழுக்கி விழும் அதிகாரிகள் மத்தியில் ஆட்டோ தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு, எதார்த்த நிலைமைகளை விவரித்து / விவாதிக்கும் அளவுக்கு நடந்திருக்கும் என்பது நம்மால் யூகிக்கமுடியாத ஒன்றல்ல, குறைந்தபட்சம் ரூ 25, கிலோமீட்டருக்கு ரூ 12 என ஜெயா அரசு ‘சூடு’ வைத்து அனுப்பி விட்டது. ‘காசு பணம், துட்டு மணி’ என்று ஆயுத பூஜைக்கு செட்டு போட்டு கலக்கும் சி.ஐ.டி.யூ. போலி கம்யூனிஸ்டுகளின் சங்கத்திற்கு அம்மாவுக்கு ஓட்டு கேட்க தெம்பிருந்ததே ஒழிய, அம்மாவிடம் தொழிலாளிகளுக்காக உரிமை கேட்க, எதிர்த்து வாதாட வாயில்லை! ஆட்டோ தொழிலை முறைப்படுத்த அம்மாவிடம் போய், கடைசியில் ஆட்டோ தொழிலையே விட்டு ஓடும்படி ஆகி விட்டது தொழிலாளர்களின் நிலைமை.

உடனே, தொழிலாளர்கள் என்பதால், அவர்களின் அடாவடி, அதிக கட்டண வசூல் ஆகியவற்றை நியாயபடுத்த நாம் வரவில்லை. உண்மையாகவே இன்றைய சமூக, பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப முறைப்படுத்தப்படாத தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம், அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றவாறு வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும். அரசு ஊழியர் தொடங்கி ஆட்டோ தொழிலாளர்கள் வரை தங்களது நியாயமான கோரிக்கைகளுக்குப் போராடுவதைப் பல்வேறு வர்க்கங்களாக பிரிந்து நின்று வேடிக்கைப் பார்க்காமல் உழைக்கும் வர்க்கமாக முதலில் அங்கீகரிக்க வேண்டும். ஒருவர் தேவையை ஒருவர் உணர மறுக்கும் வேலியிட்ட பார்வைகளால் இன்று புலம்புவது ஆட்டோ தொழிலாளர்கள் மட்டுமல்ல, போதிய ஆட்டோ கிடைக்காமல் பயணிகளும்தான். ”நாள் வாடகை, வண்டி தேய்மானம், சாப்பாடு செலவு இத்தனைக்கும போக வீட்டுக்கு காசு தேறாமல் நான் எதுக்கு உனக்கு ஓட்டணும்” என்று ஆட்டோக்காரர்கள் பயணிகளை பகையாகப் பார்ப்பதும், ”எவ்வளோ காசு வாங்குன, இப்ப மீட்டர் போடுன்னா, வரமாட்டேன் வேற பக்கம் போறேன்னு போற, இன்னுமா திருந்தல” என்று பயணி நடுரோட்டில் புலம்புவதும்தான் நடக்கும்.

ஆட்டோ ஓட்டுநர்பொதுப் போக்குவரத்தின் தேவைகளுக்கு ஏற்ப பேருந்தை இயக்கச்சொல்லியும், நிறத்தையும், போர்வையும் மாத்திப் போட்டுக்கொண்டு அரசே அநியாய பஸ் கட்டணக் கொள்ளையடிப்பதை எதிர்த்துப் போர்க்குணமாகப் போராடி சாதிக்காமல், ஆட்டோக்காரனை அடக்கி விட்டதாக நடு ரோட்டில் நின்று மார்தட்ட முடியுமா?

வெறும், ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்து! என்ற நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கை, ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் முறைபடுத்தும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தை கொள்ளையடிக்கும் அரசு, அதிகாரவர்க்கம், ஆளும்வர்க்கம் ஆகிய இருவருக்குமான பொது எதிரி கண்ணுக்குத் தெரியும்.

சட்ட விதிகளுக்கு மாறாக ஓடும் ஆட்டோக்கள் பறிமுதல், தண்டனை என்பதை யாரும் மறுக்கவில்லை, ஆனால் அரசே F.C. க்கு லாயக்கில்லாத பேருந்தை பொதுப் பயன்பாட்டுக்கு விட்டு விபத்துக்குள்ளாக்குவதும், விபத்துக்குள்ளான பேருந்துகளின் ஆவணங்களையே எரித்து காணவில்லை என புளுகுவதும் எவ்வளவு பெரிய சமூக விரோதம். சமூகத்திற்கு விரோதமாக ஒரு அரசையும், அமைப்பையும் வைத்துக் கொண்டு அவ்வப்போது அதிலிருந்து உருவாகும் சமூக விரோதிகளை மட்டும் சட்டம் தண்டிக்கட்டும் என்பது முட்டாள்தனம். ஒரு வகையில் இங்கு குற்றங்களின் வர்க்க கொள்முதல்கள் தான் சட்டங்களே!

ஆட்டோ என்பதை ஏதோ ஒருவர் அவர் தேவைக்கு தொழில் செய்கிறார் என்று மட்டும் பார்க்க முடியுமா? எத்தனையோ மக்களின் அவசரத் தேவைகளுக்கு, ஒரு மழைக்கால மருத்துவமனைத் தவிப்புக்கு திடீர் அவசரத்திற்கு, நள்ளிரவில், நடு ரோட்டில் இப்படி தவித்திடும் பல தருணங்களில் நமது சமுதாய வாழ்வின் தேவைகளுக்கு தவிர்க்க இயலாமல் பயன்படும் ஒரு அவசியமான நம் தேவைக்குமான தொழில்தான் அது. போலீஸ்காரர்களும், அரசு உயர்ரக ஊழியர்களும், கட்சிக்காரர்களும் பினாமியாக ஆட்டோவை வைத்து இஷ்டத்துக்கு சம்பாதிக்க அனுமதித்து விட்டு, திடீரென எல்லா பழியையும் ஆட்டோ தொழிலாளி மேல் போட்டு, பிற பகுதி உண்மைகளை காணவும் நாம் மறுத்துவிடக்கூடாது. அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணப்படி ஒரு ஆட்டோக்காரர் அதிகப்படியாக ஒரு நாளைக்கு சராசரி ரூ 500-லிருந்து 600-வரைதான் வருமானமீட்ட முடியும். இது முப்பது நாளைக்கும் பொருந்தாது. ஒரு ஆட்டோக்காரர் ஒரு நாளைக்கு ரூ 500 சம்பாதித்தால் போதும் என்று வரம்பிடும் அரசுக்கு, இதே வரம்பை ஒரு முதலாளிக்கு பொருத்த முன்வருமா? தண்ணீர் கம்பெனி தொடங்கி, முதலாளிகளின் செல்போன் ரீ சார்ஜ் வரை ஒரு நாளைக்கு அவன் சந்தை தேவைக்கு ஏற்ற மாதிரி எவ்வளவு ரேட் வைத்து வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம், ஆட்டோக்காரன் மட்டும் 500 ஐ தாண்டக்கூடாது என்பது வர்க்க நியாயமின்றி வேறென்ன? எனவே அவர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து, விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

அரசு கணக்குப்படி சவாரியை விட்ட அந்த இடத்திலேயே வேறு ஒரு சவாரி கிடைத்தால்தான் இந்த ஒரு நாள் பொழப்பும் கிடைக்கும். வெறும் ஆட்டோவாக குறைந்தது மூன்று கிலோமீட்டர், சவாரிக்காக சுற்றினால் ஆட்டோக்காரரின் நிலைமை கவலைக்கிடமாகும். வாரத்திற்கு வாரம், மாசத்துக்கு மாசம் தன் இஷ்டத்திற்கு உலகச் சந்தையைக் காரணம் காட்டி பொய் சொல்லி தாறுமாறாக விலையேற்றும் அம்பானியை மடக்கிப் பிடித்து ‘ரேட்’ பிக்ஸ் பண்ண துப்பின்றி, அரசு ஆட்டோக்காரனை மடக்கி, அடக்கி அவர்களின் நியாயமான கோரிக்கையை காலில் போட்டு மிதிப்பதை பயணிகளாகிய நாமும் கண்டிக்க கடமைப்பட்டுள்ளோம். உதிரித் தொழிலாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்க எல்லா உரிமையும் நடுத்தர வர்க்கத்திற்கு உண்டு, அதே நேரத்தில் உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணையாமல் உதிரிகளாகத் தன்னலம் மட்டும் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தை அரசியல்படுத்தி திருத்தும் உரிமை தொழிலாளர்களுக்கும் உண்டு!

– துரை. சண்முகம்