privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககாஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை

காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை

-

காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை:
பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா?

02-jeyandran-3காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் முதன்மை கிரிமினல் குற்றவாளிகளான காஞ்சி மட சங்கராச்சாரிகளான ஜெயேந்திரன், விஜயேந்திரன், அவர்களின் கூட்டாளிகளான மட நிர்வாகிகள் மற்றும் கூலிக் கொலையாளிகள் உட்படக் குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேரும் புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். அரசியல், சட்ட அறிவற்ற, ஆனால் நியாயத்தை எதிர்பார்க்கும் பாமர மக்களுக்கு வேண்டுமானால் இத்தீர்ப்பு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளிப்பதாக இருக்கலாம். ஆனால் இந்தச் சட்டம், நீதித்துறை, போலீசு, அரசியல் அமைப்பு, மற்றும் சங்கர மடம் போன்ற பார்ப்பன நிறுவனங்களை அறிந்தவர்கள் யாருக்கும் இத்தீர்ப்பு எதிர்பார்த்தவாறுதான் அமைந்துள்ளது. மேலும், இந்த வழக்கின் நடப்புகள் எல்லாம் தீர்ப்பு இப்படித்தான் அமையும் என்பதை ஏற்கெனவே காட்டி விட்டன. தீர்ப்பைக் கேட்ட சங்கர மடக் குற்றவாளிகள் குதூகலித்துக் கொண்டாடினர்.

சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா ”அதிர்ச்சியாக உள்ளது. அப்படியானால், சங்கரராமனைக் கொன்றது யார்? தன்னைத்தானே வெட்டிக்கொண்டு இறந்தாரா என்ன? நீதித்துறை மீதும் கடவுள் மீதும் இன்னமும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். கடவுளின் கோர்ட்டில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது” என்கிறார். இந்தக் கேள்விகளுக்கு சமூகம், சட்டம், நீதி, அரசு நிர்வாகப் பொறுப்பிலுள்ள எவனும்/எவளும் பதில் சொல்லவில்லை. கடவுளின் கோர்ட்டில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று விடுவதானால் சமூகம், சட்டம், நீதி, அரசு நிர்வாகம் எல்லாம் வீணாக, எதற்காக இருக்க வேண்டும்?

தன்முன் வைக்கப்படும் தடயங்கள், சாட்சியங்கள், ஆதாரங்கள், வாதங்களை மட்டுமே வைத்துத் தீர்ப்புச் சொல்வதானால் இயந்திரங்களே போதுமே! பல ஆயிரம் ரூபாய்கள் ஊதியம் பெறும் பகுத்தறிவற்ற கைக்கூலிகள் எதற்கு? சட்டத்தின், நீதியின் பொருத்தப்பாடுகளை வாதிட்டு உண்மைக் குற்றவாளிகளைத் தண்டித்து சமூகத்தில் நியாயத்தை நிலைநாட்டுவதற்குப் பதில், சட்டத்தை வளைத்தும் நீதியைச் சிதைத்தும் பணம் பார்ப்பதற்கான தொழிலாக மட்டுமே இருக்குமானால் சட்டத்துறை எதற்கு? சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி, தண்டித்து, சமூக ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பணியைக் காட்டி ஊதியமும் வரம்பற்ற அதிகாரத்தையும் வன்முறைக் கருவிகளை ஏந்தும் ஏகபோக உரிமைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொண்டு, ஆளும் வர்க்கங்களின், ஆட்சியாளர்களின் ஏவல் நாய்களாக மாறி, செல்வாக்குமிக்க கிரிமினல் குற்றவாளிகளைத் தப்புவிப்பதற்காகவே செயல்படுவதாக இருக்குமானால், எதற்காக இந்தக் காவல் துறை?02-jeyandran-1

ஒரு அநீதியான தீர்ப்பு வழங்கிய அமர்வு நீதிபதி, அதிலேயே தன் தவறை மூடிமறைத்து விட்டு, எதிர்மறையிலும் மறைமுகமாகவும் சில உண்மைகளைச் சொல்லியிருக்கிறார். ”எதிரிகள் மீதான கொலை, அதற்கான சதிக் குற்றச்சாட்டுகளை போலீசும் அரசுத்தரப்பும் வாதாடியும் நிரூபிக்கத் தவறிவிட்டனர்.” சட்டம், நீதி, போலீசு மூன்றையும் நிர்வாகம் செய்யும் ஆட்சியாளர்கள் தமது அரசியல் ஆதாயங் கருதியே குற்றவாளிகளைத் தப்புவிப்பதும் எதிராளிகளைப் பழிவாங்குவதாகவும் அப்பாவிகளைத் தண்டிப்பதாகவும் செயல்படும்போது அரசாங்கமும், அதற்கு ஜனநாயகம் என்ற பெயரும் எதற்கு?

தனது வாழ்நாளில் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சேவை செய்த சங்கரராமனைக் கொடூரமாகக் கொன்றதற்குச் சாட்சியமாக இருந்த காஞ்சி வரதராஜப் பெருமாள் குற்றவாளிகளைத் தண்டிக்கவில்லை. நிதி மற்றும் பாலியல் முறைகேடுகள் மட்டுமல்ல, கூலிப்படையை ஏவிப் படுகொலை செய்தாலும் தமக்கு நாளும் பூசை செய்வதால் காஞ்சி சந்திர மௌலீசுவரனும் திரிபுரசுந்தரியும் காஞ்சி மடாதிபதிகளைத் தண்டனை பெறாமல் காத்தனரோ!

சங்கரராமன் ஏழை, எளிய, நிராதரவான சைவப் பார்ப்பனர். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலை நிர்வகிப்பது இவரது தொழில். ஆனால், காஞ்சி சங்கர மடாதிபதிகளுக்கோ, ‘ஆன்மீக சேவை’ சமூகவிரோதக் குற்றச் செயல்களுக்கான ஒரு போர்வை; உண்மையில் கோடிகோடியாக நிதி மூலதனத்தைக் குவித்து வைத்து , பங்குச் சந்தை முதலீடுகள், கல்வி வியாபாரம், மருத்துவ நிறுவனங்கள் நடத்தும் ஒரு கார்ப்பரேட் தொழிற்கழகத்தை நடத்தும் சைவப் பார்ப்பனர்கள். கள்ளச் சந்தை முதலாளிகள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை, உள்ளூர் ஆட்சியாளர்கள் முதல் பிரதமர் -அரசுத் தலைவர்கள் வரை, கிராம அதிகாரிகள் முதல் மத்திய – மாநிலத் தலைமைச் செயலர்கள் வரை, கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றங்கள் வரை, மாநில போலீசுக்காரர்கள் முதல் முப்படைத் தளபதிகள் வரை தம் காலில் விழும் ”பக்தர்களை”ப் பெற்றுள்ளார்கள்; இவர்களிடையிலான தொழில், பொருளாதார, அரசியல், சமூகத் தரகுவேலை பார்ப்பதுதான் மடாதிபதிகளின் முக்கிய ‘அந்தப்புர ஆன்மீக’த் தொண்டு. இவர்களின் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைப்பது துணைத்தொழில். பணம் பாதாளம் வரைப் பாயும்! புதுச்சேரி நீதி மன்றம் வரை பாயாதா?

சங்கர்ராமன்
வரதராஜபெருமாள் கோவிலில் கொலையுண்டு கிடக்கும் சங்கர்ராமன்

மேலும், இந்த ஆதிக்க சமூகம், சட்டம், நீதி, அரசு நிர்வாக அமைப்பு முழுவதும் மேல்சாதி, மேட்டுக்குடியினர் எவரும் குற்றங்கள் எதையும் செய்ய மாட்டார்கள், செய்தாலும் அவர்கள் சட்டத்துக்கு மேலானவர்கள், தனிச் சலுகைக்குரியவர்கள் என்றே கருதக்கூடியவை. இப்படியே அப்பட்டமாகப் பல வழக்குகளில் நீதியரசர்கள் கருத்துச் சொல்லி, தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். மனிதர்களின் சட்டத்திலிருந்தும் நீதிமன்றத்திலிருந்தும் தப்பிவிடும் குற்றவாளிகள் கடவுளின் நீதிமன்றத்திலிருந்து தப்ப முடியாது என்றுதான் தனது கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொள்ளாத அப்பாவிச் சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறது.

ஆனால், குற்றவாளிகள் தண்டனை பெற்றாலும் எப்போதும் போல சொகுசாகவே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஜெயலலிதாவைப் போல, ஜெயேந்திரனைப் போல வழக்குகளையே பல ஆண்டுகள் இழுத்தடித்துப் பதவிகளையும் பகட்டு வாழ்க்கையையும் தொடர்ந்து அனுபவிக்கிறார்கள். ஏழை, எளிய ”கைதிகளோ” விசாரணையோ, தீர்ப்போயில்லாமல் நீண்டகால, கொடிய சிறைத் தண்டனைக்கு ஆளாகிறார்கள். இவைதான் கடவுளின் நீதிமன்றத்தில் நடை முறையாகவுள்ளது. கம்யூனிஸ்டு புரட்சியாளர்களின் சமுதாயத்திலும் மக்கள் நீதிமன்றங்களிலும்தான் குற்றவாளிகள் கீழ்வெண்மணி கோபாலகிருஷ்ண நாயுடுவைப் போல உரிய தண்டனையை அடைகிறார்கள்.

-தலையங்கம்
______________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________