privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு ?

கொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு ?

-

சமூக விடுதலையை முன்னெடுப்போம் ! பெண் விடுதலையை சாதிப்போம்!

கொசுவை ஒழித்து நோயைத் தடுக்க துப்பு இல்லாதவர்களுக்கு மங்கள்யான் ஒரு கேடா ? –

பெண்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார இயக்கம்

மக்களிடையே விநியோகிக்கப்பட்ட துண்டறிக்கை:

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதைப் போல, 500 கோடி ரூபாய்க்கு மங்கள்யான் என்ற ஒரு விலை உயர்ந்த பட்டாசை விண்ணில் ஏவி, மக்களின் வரிப் பணத்தைப் பொசுக்கி விட்டது, இந்த அரசு.

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம். இங்குள்ள நீரையெல்லாம் பன்னாட்டு கம்பெனிகளுக்கும், உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் விற்பனை செய்துவிட்டதோடு  இல்லாமல், இருக்கும் கொஞ்சநஞ்ச நீரையும் பாட்டிலில் அடைத்து ‘அம்மா’ என்ற பெயரில் காசாக்கி வருகிறது ‘ஜெ’ அரசு.

இயற்கை தந்த நீரை பாதுகாத்து மக்களுக்கு இலவசமாக வழங்காமல், தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு, செவ்வாய் கிரகத்திலிருந்து தண்ணீரைக் கொண்டு வருவதற்குத்தான் மங்கள்யானை விண்ணுக்கு அனுப்பியுள்ளார்களாம். ‘கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பை யிலும் நெய் வடியும்’ என்பதைத்தான் நினைவு படுத்துகிறது.

குடிநீருக்காக அன்றாடம் மக்கள் அல்லல்படும்போது, ஒரு குடம் குடிநீருக்காக 8 ரூபாய் வரை கொட்டி அழும்போது, இயற்கை தந்த கொடையை, லாபவெறி கொண்டு அலையும் முதலாளிகளுக்கு அற்ப விலைக்கு அள்ளிக் கொடுத்ததை மறக்க முடியுமா? அல்லது மறைக்கத்தான் முடியுமா?

விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் கூட மக்களின் தண்ணீர் தேவைக்காக அல்ல;

எல் – டி போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் செழிக்கவே இத்திட்டத்தை திணித்துள்ளனர். மங்கள்யானுக்கான அதிகபட்ச உதிரிபாகங் கள் தயாரித்துக் கொடுத்ததே இந்த நிறுவனம்தான். இதன்மூலம் இந்நிறுவனம் கோடிக் கணக்கான ரூபாயை லாபமாக சுருட்டிக் கொண்டது. மக்கள் வரிப் பணமோ பொசுங்கி விட்டது. இப்படி பொசுங்கிப் போன மக்களின் வரிப் பணம் 500 கோடி ரூபாய். இப்போது சொல்லுங்கள், இது ஊதாரி அரசா? இல்லையா?

ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், மறுகண்ணில் வெண்ணையையும் வைப்பதுபோல, நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் உழைக்காத இந்த ஊதாரிக் கூட்டங்கள் உறிஞ்சி எடுப்பதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்வதும், மறுபக்கம் உழைத்து ஓடாகத்தேயும் மக்களின் வேலையை பறித்து வறுமையிலும், பட்டினியிலும் தள்ளுவதும் கொடுமை இல்லையா? நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் இதை எப்படி எல்லோருக்குமான அரசு என்று சொல்ல முடியும்?

மேலும் கொசுவை ஒழித்து நோயைத் தடுக்க இவர்களுக்கு துப்பு இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ ஏழைகள் தான். பணக்காரர்களோ பாதுகாப்பாக ஏசி அறைகளில் பதுங்கிவிடுகின்றனர். ஏழைகளோ நாள் பூராவும் உழைத்துக் களைத்து வந்தவுடன் அயர்ந்து தூங்க முடியவில்லை. கொசுக்களின் ரீங்காரமும், அதன் கடியும் தாள முடியவில்லை. போர்த்திக் கொண்டால் புழுங்குகிறது, விலக்கினால் கடிக்கிறது. இப்படி அன்றாடம் தூங்காமல் அவதிப்படுவதோடு கொசுக்கடி யால் உருவாகும் நோய்களால் அவதிப் படுவதையும் சொல்லி மாளவில்லை.

மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால், மூளைக்காய்ச்சல் இதுபோல் பெயர் தெரியாத நோய்களால் அவதிப்படுவதோடு, சில நோய்களின் வீரியம் உயிரையே பறித்து விடுகிறது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றால் சரியான மருத்துவம் கிடைப்பது இல்லை. வேறுவழியின்றி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓடுகிறோம். அங்கு நோயை சரி செய்கிறார்களோ, இல்லையோ காசை மட்டும் ஈவு இரக்கமில்லாமல் கறந்து விடுகின்றனர்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உழைத்த பணம் முழுவதையும் தனியாருக்கு கொட்டிக் கொடுக்கிறோம். போதாக் குறைக்கு கடன் வாங்கியும் செலவழிக்கிறோம், இப்படி ஆண்டுதோறும் கடன் பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடி. இப்பணம் முழுவதும் மீண்டும் முதலாளிகளின் கஜானாவுக்கே செல்கிறது.

இது போதாதென்று இவர்கள் தயாரிக்கும் கொசுவத்தி சுருள், மேட், ஓடோமாஸ் கிரீம், லிக்கூட், கொசு பேட் போன்ற கொசு விரட்டிகளை வாங்குவதற்கும் நம் உழைப்புப் பணத்தில் கணிசமான தொகையை இழக்கிறோம். இந்த இழப்பு, இதை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், ‘இதன் அருமை பெருமை’களைச் சொல்லி நம்மை ஏமாற்றி இவைகளை வாங்க வைக்கும் விளம்பர நிறுவனங்களுக்கும் லாபமாக போய் சேருகிறது.

கொசுவை ஒழிக்க ஒரு உருப்படியான நியாயமான வழிமுறையை தேடாமல், கொசுவலையையும், நொச்சிச் செடிகளையும் தரப்போகிறேன் என்கிறது ‘அம்மா’ அரசு. குடியிருக்கவே வழியில்லாத போது, எங்கு நொச்சிச் செடியை நட்டு வைப்பது?

அப்படி என்றால் இதற்கு வேறு வழியில்லையா? ஏன் இல்லை? இதோ, தென் அமெரிக்க சிறுவன் “நீர்த்தொட்டியில் ஒரு வித ரசாயன மருந்தை கலந்து விட்டால், அம்மருந்து பெண் கொசுக்களை ஈர்த்து கொன்றுவிடும். இதன் மூலம், கொசுவின் இனப்பெருக்கத்தையே ஒட்டுமொத்தமாக ஒழித்து விட முடியும்” என்று கூறியுள்ளான்.

இச்சிறுவனுக்குள்ள சொற்ப அறிவு கூடவா, ஆற்றல் மிகுந்த நமது விஞ்ஞானிகளுக்கு தெரியாமல் போகும் ? இதைவிட இன்னும் அதிகமாகவே தெரியும். இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விடுவது என்பது யாரை ஏய்ப்பதற்கு?

போகாத ஊருக்கு வழி சொல்லும் இந்த அரசுகள் அறிவிக்கும் கொள்கைகளும், திட்டங்களும் உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு அல்ல. உழைக்காத கூட்டங்கள் மேலும், மேலும் செழிப்பதற்குத்தான்.

அதனால்தான், இலவச மருத்துவத்தை படிப்படியாக ஒழித்து தனியார் மருத்துவ மனைகளை கொழுக்க வைக்கத்தான் இந்த அரசுகள் தனியார்மயத்தைப் புகுத்தி வருகின்றன. இதைத்தான் நாங்கள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற பெயரில் அரங்கேறும் மறுகாலனியாக்க கொள்(ளை)கை என்கிறோம்.

மங்கள்யான் தயாரிப்பு தனியாருக்கு, தண்ணீர் தனியாருக்கு, கல்வி தனியாருக்கு, மருத்துவம் தனியாருக்கு என்று அனைத்தை யும் தனியாருக்கே தாரைவார்த்துக் கொடுத்துவிட்டபிறகு, இவர்களுக்கு என்னதான் வேலை?

மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக, இவர்களின் செயல்களுக்கு எதிராக, இவர்களின் கொடுமைக்கு எதிராக, போராடும் மக்களை அடக்கி ஒடுக்குவதே இவர்கள் வேலை. நம் விரலை எடுத்து நம் கண்ணையே குத்தும் இந்த மக்கள் விரோத அரசுகளை இனியும் நம்மை ஆள அனுமதிப்பது அவமானம். இனியும் இந்த அவமானத்தை அனுமதியோம்! இதற்கு எதிராக உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

______________________________

பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 25-ம் தேதி மாலை 6  மணியளவில் குரோம்பேட்டையில்  தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தெருமுனைக் கூட்டத்திற்கு தோழர் மீனா தலைமை ஏற்று நடத்தினார்.

தோழர் பேசும் போது, “கொசுக்களினால் ஏற்படக் கூடிய வியாதிகளில் குழந்தைகளுக்கு வரும்  டெங்கு காய்ச்சலால் இறப்பு ஏற்படுகிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு கொசுக்கடியால் வியாதிகள் வரும் போது பெண்கள்தான் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. பெண்களது பொறுப்புகள், வேலைச் சுமை அதிகமாகிறது. அருகில் உள்ள பகுதியான செல்லியம்மன் நகரில் பெண்கள் விடுதலை முன்னணி மக்களோடு இணைந்து நடத்திய போராட்டங்களால் பெண்களுக்கான கழிப்பறை, மற்றும் சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்க போராடி வெற்றி பெற்றோம், இந்த அரசுகள் கொசுவைக் கூட ஒழிக்க வக்கில்லாதவர்கள், அக்கறை அற்றவர்கள். பெண்கள் போராடினல்தான் எதிலும் வெற்றி பெற முடியும்” எனப் பேசினர்.

அடுத்ததாக மாவட்ட செயற்குழு தோழர் அஜிதா பேசும் போது “அம்மா பெயரில் உணவு கடை நடத்தி பெருமைபட்டுக் கொள்கிறார்கள். ஆனால், இந்த அரசுகள் கொசுவை ஒழிக்க வழிகளை கண்டறியவில்லை. மக்களுக்கு கொசுவலை, நொச்சிசெடி கொடுப்பதாக சொல்லி ஏமாற்றுகிறது. கொசுவைத்தடுக்க, கிரீம், மேட், பேட், கொசுவர்த்திச்சுருள், லிக்விட் போன்ற பொருட்களை தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கத்தான் உதவி செய்கின்றது. இங்கே இருக்கும் நீர் நிலைகளை சரிசெய்ய துப்பில்லாத இந்த அரசுகள் மங்கள்யான் அனுப்பி செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கிறார்கள். மக்கள் பணம் கோடிகோடியாக  செலவழிகிறது” என்று பேசினார்.

சிறப்புரையாக பு.மா.இ.மு. தோழர் கார்த்திகேயன் பேசினர். “மக்களைப் பற்றி சட்டமன்றமோ, பாராளுமன்றமோ, எந்தப் பிரச்சனைகளைப் பற்றியும் பேசுவதில்லை, மக்கள் வர்க்கமாக இணைந்து நக்சல்பாரி அமைப்போடு இணைந்து போராடினால் தான் தீர்வு கிடைக்கும்” எனப் பேசினார்.

கூட்டத்திற்கு பகுதியிலிருந்து பெண்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், கொசுவை ஒழிக்கவும் பிற சமூக பிரச்சனைகளுக்கும் பெண்கள் அமைப்போடு இணைந்து போராடுவோம் என்கிற கருத்தை பதிவு செய்ய முடிந்துள்ளது.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி

பெண்கள் விடுதலை முன்னணி
41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95.
தொடர்பு எண்: 9841658457

  1. மங்கள்யாண் போன்ற திட்டங்கள், எல் அன்டு டி போன்ற தனியார் நிறுமங்கள் இல்லாமல் முழுமையான இந்திய அரசின் தயாரிப்பாக நடைபெறவேண்டும் என்ற கேட்பது தான் நியாயமாக இருக்குமே தவிர, வேண்டாம் என்பது சரியல்ல.

    கொசு ஒழிப்பு போன்ற திட்டங்கள் அவசியமே, வேலை வாய்ப்பு வறுமை ஒழிப்பு திட்டங்கள் போல ஆய்வு திட்டங்களும் அவசியமே.

    ஏழ்மையில் இருக்கிறேம் , நாளைக்கு உணவு தேடவேண்டும் என்ப்தற்காக குழந்தைகளுக்கு படிப்புக்கு வழி செய்யவில்லை என்றால், பின்னர் இது குறித்தும் வருத்தபட வேண்டி இருக்கும்.

    நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து விமானம், ஆயுதங்கள், போர் தடவாளங்கள், போர்விமானம்,கப்பல், ஹெலிக்காப்டர் போன்றவற்றில் முழு ஈடுபட்டுடன் ஆய்வுகள் செய்திருந்தால், இன்றைக்கு அவற்றை வெளி நாடுகளிடம் வாங்க வேண்டி இருந்திருக்காது.

    இவற்றை விற்கும் மேலை நாடுகள், எந்த நாடும் இந்த துறையில் தன்னிறைவு பெற தடை செய்யவே செய்யும். ஏனெனில் ஒரு ஒப்பன் சோர்ஸ் டிசைன் என்ற முறையில் டிசைகள் முழுமையாக வெளியில் கிடைக்கும் ஏகே 47 போன்ற துப்பாகிகளே பல ஆயிரங்களில் விற்பனை ஆகின்றது, கள்ளச்சந்தயில் லட்சங்கள் கூட வரலாம்.

    அனுமதி பெற்ற புராதான 1 முறை சுடும் துப்பாக்கி அரசு பேக்டரியில் சுமார் 40 ஆயிரம் விலை சொல்லப்படுகின்றது.

    ஆனால் துப்பாக்கியின் எடை 5 கிலோ என்றால், இரும்பின் விலை 500 இருக்கலாம், கூலி, இதர பொருட்கள் என்று கணக்கிட்டாலும் 2000 தாண்டாத துப்பாக்கிக்கு 40 ஆயிரம் முதல் லட்சங்களில் விலை என்றால் , பல ஆயிரம் சதம் அல்லவா லாபம். பயன்படுத்த தேவயான குண்டுகளின் கதை பெருங்கதை.

    அப்படியானல் எந்த தகவலும் வெளியில் கிடைக்காத போர்விமானம், கப்பல் போன்றவற்றீன் லாப சதவிகிதம் நினைத்துபார்க்க முடியாதது. மேலும் இவற்றை பயன்படுத்த உதிரி பாங்களுக்கும் சர்விஸ் போன்றவற்றிகும் அதே மேல் நாடுகளையே நம்பி இருக்கவேண்டும்.

    இப்படி தண்ணீர் சுத்தப்படுத்தும் ஆர்.ஓ பில்டர் முதல், விமானம் வரை அனைத்தின் தொழில் நுட்பமும் மேலை நாடுகளிடம் இருப்பதால், எல்லாவற்றிக்கும் அவர்களின் டாலரையே நம்பியும் இருக்கவேண்டி இருப்பதால் டாலர் – ரூபாய் வீழ்ச்சி , விலையு உயர்வு என்று சங்கித்தொடர் பிரச்சனைகளால், கொசு கடியில் வதை படும் அதே ஏழை மக்கள் அடுத்த கொசுவத்தி வாங்கும்போது விலை உயர்வர் அனுபவிப்பர்.

    மேலும் இப்படி வாங்கப்ப்படும் ஆயுதங்களால நாடு பாதுகாக்கப்படுகின்றது என்பதை நினைத்து பார்த்தால் , வரும் சிரிப்பில் விலா எலும்பு உடைந்துவிடும்போல. யோசியுங்கள் இந்த அயுதங்களின் பலம் பலவீனம் எல்லாம் வாங்கி பயன்படுத்தும் நம்மை விட தயரித்து விற்கும் நாடுகளுக்கு தெரியும் இல்லையா, மேலும் அவற்றை இந்த நாடுகள் துனை இல்லாமல் பயன்படுத்தவும் முடியாது, அப்படியேனில் அவர்களுக்கு எதிராக எந்த ஜென்மத்திலாவது இந்த ஆயுதங்களை கொண்டு வெற்றிபெற இயலுமா?

    சரி நாம்ம ரேஞ்சுக்கு ஏதோ பக்கத்தில் இருக்கும் பாக்கிஸ்தான், லங்கையை விடவாவது வலிமையாக இருக்கிறோம் என்றும் சொல்ல முடியாது, ஏனேனில் , இதே குப்பைகளை தான் அவர்களும் வாங்கி வைத்து வாண வேடிக்கை காட்டிகொண்டு இருக்கிறார்கள். அப்புரம் எதற்கு தான் இந்த ஆயுதங்கள் ?

    முழுமையான உள்நாட்டு தயரிப்பான கைத்துப்பாக்கி முதல் நீர்மூழ்கி கப்பல் போர் விமானம், விமானந்தாங்கி கப்பல் வரை தயாரிக்கும் அளவுக்கு தொழில் நுட்ப ஆராயிச்சி தேவை, ஆனால் இதில் ஒன்றில் பயன்படும் தொழில் நுட்பம் இன்னொன்றிலும் பயன்படும், எனவே எல்லா ஆராயிச்சிகளும் ஒரே நேரத்தில் நடத்துவதே நடைமுறை சாத்தியமும் சிக்கணமும் ஆகும்.

    எனவே மங்கள் யாண் போன்றா ஆய்வுகள் நிச்சயம் நாட்டுக்கு தேவையே. ஆனால் அவை முழு உள் நாட்டு தயாரிப்பாக, இன்னம் சொல்ல்போனால் தனியார் பங்களுப்பு கூட இல்லாமல் அனைத்தும் முழுமையான அரசு தயரிப்பாக இருக்க வேண்டும்.

    ஆனால் நமது நாட்டில் இந்த வகையில் பார்க்காமல், ஆரம்பிக்கும் ஆய்வுகளூம் உள் நாட்டு போர் விமானம் போல ஒன்றூம் இல்லாமல் போவதே வருத்ததிற்குறியது.

    வினவு இந்த திசையில் போரட வேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்.

    • தோழர் வினொத் கூருவது போல ஆராய்ச்சிக்கு செலவு செய்ய வேன்டிய அவசியம் இருந்தாலும், எவ்வாரான ஆராய்ச்சி என்பதும் முக்கியம். மஙல்யான் மட்ரும் சந்திராயன் போன்ர டெக்னாலகஜி டெமான்ச்ட்ரடெர் -ராகட்டுகலை விடுவதை காட்டிலும் ஜிச்ல்வி இல் கன்சிச்டன்ட் ஆன வெட்ரி பெருவதெ முக்கியம்.

  2. சுதந்திரமடைந்து அறுபத்தேழு ஆண்டுகளாகியும், வறுமை, சாதி, அறியாமை, பெண்ணடிமைத்தனம், வன் கொடுமை குற்றங்கள் ஒழியவில்லை; முன்னுரிமை கொடுத்து ஒழிக்கவும் எந்த அரசும் முன்வரவில்லை! ஆனால் மேல்னாட்டு கலாச்சார சீரழிவுகள்,நாகரிகம் என்ற பெயரில் பரவி விட்டது! உழைத்து பிழைப்பவனுக்கு மதிப்புமில்லை, மரியாதையும் இல்லை! கொள்ளையடித்து கோடீஸ்வரனாகவே பலர், வருமான வரி கணக்கு கூட சமர்ப்பிக்க நேரமில்லாமல் பலர் உலா வருகின்றனர்! 350 கோடி கணக்கில் வராத பணத்துடன் மாட்டிய, முன்னால் மருத்துவத்துறை செயலாளர், மோடி அரசால் மத்திய மருத்துவ கவுன்சிலுக்குநியமனம் பெற்று, மன்மோகன் சிங் அரசால் , மருத்துவத்துறைக்கே தலைவராக நியமனம் பெறுகிரார்! அதை தடுக்கநினைத்தநேர்மையான அதிகாரி காரணமின்றி மாற்றப்படுகிரார்! என்னே ஆளும் கட்சி-எதிர்கட்சி ஒற்றுமை! ராசா வழக்கில் காட்டிய தீவிரத்தை தேசை வழக்கில் சி பி அய்யும்,நீதிதுறையும் காட்டவில்லையே! காரணம் பின்னணியில் உள்ள மாஃபியா கும்பலே!

    இதைப்போலவே, கூடங குளம் ஆகட்டும், சந்திராயண், மங்கள்யாண் ஆகட்டும் எல்லாம் நமது செலவில் வாணவேடிக்கை நடத்தி, முடிவுகள் வெளினாட்டுக்கு கடத்தப்படும்! கூமர்நாராயணர்களுக்குத்தான் இங்கு பஞ்சமில்லையே!

    பாதுகாப்புத்துறையில்நவீன ஆயுதங்களுக்கும், அதிகாரிகளுக்கும் பஞ்சம்; விமானப்படையில் புதிய போர்விமானங்கள் போதிய அளவு இல்லை, கப்பல் படையிலோ சங்கதி இன்று சந்தி சிரிக்கிறது!

    ஆக மொத்தத்தில், கும்பகோணத்தில் கோதானம் கொடுத்த கதைதானே!

    • உண்மைதான். ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவமுள்ள எத்தனையோ விடயங்கள் கவனிக்கப்படாது இருக்கும்போது, “நானும் ரவுடிதான்” என்று மங்கள்யான் செலுத்தியதால் நாங்களும் வல்லரசுகளுக்கு இணையாகிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்வது நகைப்பிற்குரியது.

  3. மனிதன் முதன்முதலில் விண்வெளிக்கு பயணம் செய்ய முயலும் போது: இப்போ விண்வெளிக்கு போய் என்ன ஆகப்போகுது என்று கேட்டிருந்தால் இன்றைய பல முன்னேற்றங்களை இழந்திருப்போம்.
    ஒரு மங்கள்யான் project மேற்கொள்ளும் போது ஆயிரக்கணக்கான small inventions நமக்கு உபரியாக கிடைக்கும். Space researchன் இந்த கண்டுபிடிப்புகள் இன்று பல துறையில் உபயோகத்தில் உள்ளன.
    இன்று உலகத்திலேயே cost efficient space technology உள்ள ஒரே நாடு இந்தியா தான். பல சிறு நாடுகள் தங்கள் நாட்டு satellites விண்வெளிக்கு அனுப்ப மிகுந்த பொருள் செலவில் மேற்கு நாடுகளை நம்பியிருந்த காலம் போய் இன்று இந்தியாவையே நாடுகின்றன. Space serviceல் இந்தியா ஒரு IT போல வரும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு இந்த மங்கள்யான் ஒரு ‘showcase’ ஆக இருக்கும்.
    யாரோ ஒரு சிறுவன் எதேச்சையாகவோ அல்லது local knowledge வைத்தோ மருந்து கண்டுபிடிச்சா ஒடனே நம்ம scientists மக்குனு சொல்லப்படாது. நமது அறிவியலாளர்களும் இதற்காக பல விஷயங்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனா மருந்து வெச்சு கொசுவ அழிக்கெல்லாம் முடியாது. வேணும்னா controlல வெச்சுக்கலாம். பல உலக ஆராய்ச்சி முடிவில் ஒரு விஷயம் confirm ஆச்சு. கொசுவ ஒழிக்க முடியாது. கொசுவிடமிருந்து தப்பிக்கணும்னா ஒரே வழி கொசு வலை ஒன்னு தான். Government கொசு வலைய தான் use பண்ண சொல்லுது. நீங்க ஏன் அயிர கணக்கில் கொசு மருந்துக்கு செலவு பண்றீங்க? அது சரி, கொசு மருந்து தான் work ஆகலனு தெரியுதில்ல. அப்பறம் ஏன் sir திரும்பத்திரும்ப அதையே வாங்கறீங்க?

  4. ஒரு திருமணத்தில் ,சமையல்காரர் சொதப்பி விட்டார் . ஆனால் நாயனக்காரர் நன்றாக இசைத்து அசத்திவிட்டார் . திருமணத்திற்கு வந்து இருந்தவர்கள் , சாப்பாடு சரியா போட தெரில , நாயனம் ஒரு கேடாக்கும் என்றார்கள் .

    திருமணம் நடத்தியவர் இரண்டுக்கும் செலவு செய்திருந்தார் . சாப்பாடு செலவு அதிகம் . நாயனக்காரர் வேண்டாம் என்று அவர் சொல்லி இருந்தாலும் , சொதப்பும் சமையல்காரர் சொதப்பி தான் இருந்தார் .
    நன்றாக இசைக்கும் நாயனக்காரரோ சமைக்க மாட்டார் .

    ஆனாலும் சிந்திக்க தெரியாத மக்கள் நாயனம் ஒரு கேடாக்கும் என்றார்கள் .

  5. உங்கள் உவமை தவறானது! திருமண வீட்டில் உற்றாரும் உறவினரும் எதிர்பார்ப்பது அன்பான உபசரிப்பையே! அடுத்து நெஞ்சில் நிற்பது அறுசுவை உண்வு, இன்னிசை கச்சேரிகள் மற்றும் வாண வேடிக்கைகள்!

    மக்களின் வரி பணத்தில், உழப்பின் பலனில், முதலிடம் மக்கள் நலவாழ்வுக்கே தரப்படல் வேண்டும்; வாண வேடிக்கைகள் கடைசி இடத்தில்தான்! இராக் சண்டையும், அமெரிக்க ஊதாரித்தனமும், உலக பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துவிட்டது! இதில் அதிகம் பாதிப்படைந்தது மூன்றாம் உலக ஏழை மக்களே! இந்தியா அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கு ஒன்றுமில்லாவிட்டாலும், கட்டாய வியாபாரம் செய்ய வற்புறுத்தப்படுகிறது!

    அன்னிய செலாவணி பற்றாகுறையால் ரூபாயின் மதிப்பு(உழைப்பாளியின் உழைப்பின் மதிப்பு) குறைந்து, விலைவாசி கட்டுக்கு அடங்காமல் எகிறும்போது, தங்கம் இறக்குமதியும், இதுபோன்ற வாணவெடிகளும் முன்னுரிமை அற்றவையே!

    அது சரி, அத்தியாஅவசியமான பாதுகாப்புத்துறை தேவைகள் கூட புறக்கணிக்கப்பட்டு, இந்த வாணவெடி தேவையா?

    • // மக்களின் வரி பணத்தில், உழப்பின் பலனில், முதலிடம் மக்கள் நலவாழ்வுக்கே தரப்படல் வேண்டும//

      Looser !

      Please google , how much money Govt spends on subsidy and people development,
      Howmuch money it has spent on Mangalyaan. What is the ration between these two.

      And Of these two type of spending,In which domain, money is fully utilized without wastage.
      Rather then blaming Mangalyaan, you should ask for better Govt process.

  6. கொசு பெருகியதே பல வருடங்களுக்கு முன்னால் முதலாளித்துவ நாடுகளின் திட்டமிடல்தானே,அந்த வரலாற்றை எழுதினாலேயே பல உண்மைகள் வெளிவருமே?அதன் விளைவாக ஒரு அருமையான உயிரினமும் அழிக்கப்பட்டுள்ளதே?

    • ஆரம்பிச்சுடாங்கையா ‘conspiracy theories’. Sir தொண்டை வரைக்கும் வந்தாச்சு. அப்பறம் ஏன் தயக்கம்? அடிச்சு விடுங்க.

      • அறி….னே “தட்டான்” என்ற உயிரினம் இப்போது எங்கே என்று சொல்ல முடியுமா?மீன் குஞசுக்கு நீந்த கற்றுத் தரவேண்டாம்.நான் அதுவும் அல்ல திமிங்கலம்.

        • தட்டான் என்னும் உயிரினம் நார்த் கொரியா , சீனா ,ரஷ்யா மற்றும் கியூபா ஆகிக நாடுகளில் மட்டும் உயிர் வாழ்கிறது என்றும் அதனால் அங்கே கொசுக்களே கிடையாது என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்

    • உங்கள் கருத்தே எனது கருத்தும். கொசுவிற்கு மருந்து தெளிக்கிறோம் என்ற போர்வையில் இயற்கையில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முக்கிய காரணியான தட்டான்கள் அழிக்கப்பட்டது கொசுக்கள் பெருக முக்கிய காரணமாகும். தட்டான்களின் வாழ்க்கை சக்கரத்தின் ஒவ்வொரு நிலையிலும் அவை கொசுக்களை உண்பதைப் போல வெறெந்த உயிரினமும் செய்வதில்லை.

      நாங்கள் சிறு வயதினாராயிருக்கும் போது கண்ட எண்ணிக்கையிலான தட்டான்கள் இப்போது எங்கும் காணக்கிடைப்பதில்லை. மறுபுறத்தில் கொசுத்தொல்லை அதிகரித்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

  7. வினோத் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அறிவியல் தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சிகளிலும் செலவு செய்வது வீணாவதில்லை. இப்பொழுது இல்லையென்றாலும் வருங்காலத்தில் நிலவிலும் செவ்வாயிலும் மனிதன் காலனி அமைத்து குடிபுகுவது காலத்தின் கட்டாயம். தற்போது அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் வெள்ளையர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு அவர்கள் சில நூற்றண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுக்க திரைகடலோடி தேடியதன் விளைவு தான். இன்னும் எத்தனை நாளைக்கு நாம் குண்டு சட்டிக்குள்ளே குதிரை வண்டியோட்டுவது? வறுமையும் பஞ்சமும் மனித வரலாற்றில் எல்லா காலங்களிலும் இருந்துள்ளன. அதற்கு காரணம் செல்வம் ஓரிடத்தில் குவிந்து மற்றவருக்கு இல்லாத நிலைதானே ஒழிய அறிவியலுக்கு செலவு செய்வதால் வறுமை வருவதில்லை. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உண்டான இடைவெளி அதிகமாகும் இடங்களில் புரட்சி வெடிக்கிறது. இந்த Imbalance க்கு அறிவியலும் ஆராய்ச்சிகளும் காரணம் அல்ல.

  8. //அறிவியல் தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சிகளிலும் செலவு செய்வது வீணாவதில்லை…//
    மக்களை அறிவியல் சார்ந்த சிந்தனைக்கு திருப்புவதே, அறிவியல் ஆராய்ச்சிக்கு வழி கோளும்! இரவல் தொழில்நுட்பமும், அய் எச் ஆர் வோ அலைக்கற்றை ஊழலும், அன்னிய கம்பெனிகளுக்கே ஆதாயமாக உள்ளது! வெறும் பெயர் மட்டுமே நமக்கு! மலையை கெல்லி எலியை பிடித்த கதையாக, ராசாவை பலிகடா ஆக்கிய சக்திகள், அதைவிட மகத்தான விண்வெளி ஆராய்ச்சி கழக ஊழல்கள்,நிலக்கரி ஊழல்கள், கோதாவரி படுகை ஊழல்கள் ஆகியவற்றில் அடக்கி வாசிக்கின்றன!

    மேலோட்டமாக பார்த்தால்நல்ல திட்டங்களாக தெரியும் விண்வெளி திட்டங்கள், அணு ஆராய்ச்சி திட்டங்கள் நமக்கு வீண் பண விரயத்தையே கொடுக்கும். இந்த ஆராய்ச்சிகளால்,நமது விஞ்ஞான அறிவு வளர்ந்து விடாது! அறுபத்தைந்து ஆண்டுகளாக பொதுதுறை நிறுவணங்கள், அன்னிய தொழில்நுட்பத்தையே சார்ந்துநிற்கின்றன, இன்னும் சொந்தக்காலில்நிற்க இங்கு விஞ்ஞானிகள் உருவாகவில்லை! அரிதான அன்னிய செலாவணியை, வாரிகொட்டி இறக்குமதி செய்யும் தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் தான்நம்பியிருக்கிறோம்! நாமே நமது உற்பத்தி பொருளைக்கொண்டு,நமது விஞ்ஞானிகளால் வளரும் தொழில்நுட்பமே நமக்கு நிரந்தர பலனளிக்கும்!

    மண்ணில் சர்வ தேச தரத்தில் ரோடு போடவும், போக்குவரத்து வசதிகள் செய்து தராமல் எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி கொள்ளையடிக்கும் அரசு, வரிபணத்தை இப்படி வாண வேடிக்கைக்கு செலவிடலாமா!

    பணக்கார வீட்டு பிள்ளைகள் கொண்டாடும் வாணவேடிக்கை தீபாவளிக்கு, வசதியற்றவன், (உலக வங்கியின் கடஙகாரன் ) வக்கற்றவன் ஆசைபடலாமா!

    • //நமக்கு வீண் பண விரயத்தையே கொடுக்கும். இந்த ஆராய்ச்சிகளால்,நமது விஞ்ஞான அறிவு வளர்ந்து விடாது! அறுபத்தைந்து ஆண்டுகளாக பொதுதுறை நிறுவணங்கள், அன்னிய தொழில்நுட்பத்தையே சார்ந்துநிற்கின்றன, இன்னும் சொந்தக்காலில்நிற்க இங்கு விஞ்ஞானிகள் உருவாகவில்லை! //

      Well said. When everybody learned to kill Mosquito and cook Idli, technological innovation will develop by itself.

      // நாமே நமது உற்பத்தி பொருளைக்கொண்டு,நமது விஞ்ஞானிகளால் வளரும் தொழில்நுட்பமே நமக்கு நிரந்தர பலனளிக்கும்!//

      Absolutely. And we will achieve this by cooking idli.

      • ராமன் நான் கணிதம் சார்ந்து புதுமைகளை கண்டறிந்து அதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்தமுடியும் என்று பல முறை[2006 லிருந்து]அரசு சார்ந்து,பல்கலைக்கழகம் சார்ந்து….முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறேன்.இதுதான் நம் அரசின் நிலை. நான் சந்தித்த ஒரு அரசுநிலை உயர் பதவியில் உள்ள ஒருவர் என்னிடம் கூறியது என்ன தெரியுமா?’நீங்கள் லட்சியவாதியென்றால் வெளிநாடு சென்றால் என்ன?’என்று கேட்டார் இறுதியாக மாணவர்களீடம் உதவி என்று சென்றால்…சொல்ல எனக்கு அவமானமாக இருக்கிறது.வலிக்கிறது மனது …இதுதான் நான் வாழும் இன்றைய தேசம்.நீங்கள் கண்டுபிடிப்பு சம்பந்தமாக எழுதியதால்தான் இதை இங்கு பதிவு செய்துள்ளேன்.என்னை விளம்பரப்படுத்திக்கொள்ள அல்ல.

        • I can understand it. I too went to Govt Agri university with my project proposal.
          One gentleman who faces farmers understood about my project but the decision maker cant/dont want to understand and dint treat me well.

          Keep trying, good hearted people are everywhere

          • நன்றி.நான் கண்டுபிடித்துள்ள விசயத்திற்கு தனி மனிதர்களால் உதவி செய்யமுடியாது ஒர் அரசு என் மீது நம்பிக்கை வைத்தால் நம் புகழ் உலகமெங்கும் பரவும்.கணிதத்திற்கு என்று வழங்கப்படும் உயர்ந்த பரிசாகிய ஏபல் பரிசினை நம் நாட்டிற்கு என்னால் பெற்றுத்தர முடியும்.

            • உங்களீன் கண்டுபிடிப்புக்கு நேரடியாக உதவ முடியவில்லை என்றாலும் சில வழி காட்டுதல்களை செய்ய இயலும்.

              நானும் சூரிய ஒளியில் மின்சாரம் தயரிக்கும் முறையை ஏட்டளவில் அமைத்து அதை சோதித்து உறுதி செய்ய நிதி உதவி கேட்டு பன்னாட்டு அமைப்புகள் முதல், பலரையும் நாடினேன். யாரும் பதில் கூட தர தயாராக இல்லை.

              என்னை விட பல நூறு மடங்கு நொந்து போவர் என் நண்பர். சூரிய ஒளியை கொண்டு இயற்கை சீற்றங்களையும் பூகம்பம் முதலாம பேரிடர்களையும் முன்னறியும் வழியை கண்டறிந்த என் நண்பர் திரு ஆனந்தன் அவர்கள் இந்திய அரசாலும் பல் களை கழங்களாலும் அவமானப்படுத்தப்பட்டர். பல லட்சம் ரூபாய்களை சொந்த பணத்தில் செலவளைத்தும் ஒன்றும் பயனில்லாமல் இருக்கின்றார்.

              ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் தலைமை விஞ்ஞானி ஆவரின் சோதனை கூடத்தை பார்வையிட்டு, அவரின் திட்டத்தை ஏற்று அடுத்த கட்டத்துக்கு நகர்த்த தேவையான ஏற்பாடுகளை ஆரம்பிக்கும் போது சோவியத் யூனிஅன் உடைந்ததால் அது நின்று போனதூ. இன்றைக்கு தூக்கி வைக்க்ப்படும் அப்துல் கலாமிடமும் இதை விளக்கினார். அவரும் பின்னர் பார்ப்பதாக சொன்னதோடு சரி.

              என்றாலும் அவரின் அனுபவமும் பன்முக தொடர்பும் உங்களுக்கும் உதவலாம்.

              • நன்றி நண்பா!நான் கல்லூரி மாணவர்கள் முன்பு மீண்டும் செல்லவிருக்கிறேன்,உங்களது நண்பரின் நிலை தற்போது என்னவாக உள்ளது?.வினவு நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்த தேசம் என்ன நிலையில் உள்ளது என்பதை கட்டாயம் மாணவர்கள் புரிந்ந்து கொள்ளவேண்டும் அல்லது புரியவைக்கப்பட வேண்டும்.உதவிகளுக்காக காத்து கொண்டிருப்பவர்களிடம் உதவி வேண்டுமா என்பதே தவறு நண்பா.தங்களது நண்பரின் வழிகாட்டுதல், தங்களின் மூலமாக கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி நண்பரே.

              • அமெரிக்காவில் தற்சமயம் பேராசிரியராக பணிபுரியும் எனது நண்பனோடு பேசியபோது , ஒரு மாணவனிடத்தில் ஒரு புதிய சிந்தனை அல்லது கண்டுபிடிப்பு செய்தால் , கல்லூரியே தனது செலவில் காப்புரிமை வாங்கி தரும். மற்றும் அதை வைத்து தோழில் தொடங்க முதலீட்டாளர்களோடு இணைப்பை ஏற்படுத்தி தரும்

                தாய் நாடு, பாசம் என்பது ஒரு நிலை வரை தான் . அறிவியலாளர்கள் மனிதம் என்னும் அளவில் தான் சிந்திக்க வேண்டும். ஐன்ஸ்டீன் அமெரிக்கா வந்து கண்டிப்பிடிக்கவில்லையா ?

                ஆகவே பகத் மனிதனுக்கு உதவும் என்று நீங்கள் நினத்தால் , வெளியில் வந்து கண்டுபிடிக்கலாம் . இந்தியாவிற்கு காப்புரிமை இலவசமாக வழங்கலாம் …..

                • நீங்கள் கூறுவது புரிகிறது,ஆனால் எனது கண்டுபிடிப்பு ரகசிய தகவல்கள் பரிமாறுவது தொடர்பானது,ஒருவருக்கு வழங்கி விட்டால் காப்புரிமை என்பது நினைத்து கூட பார்க்க முடியாது.இதுவும் எனது கண்டு பிடிப்புகளில் ஒன்று.

  9. மனிதன் பூமிவாழ் உயிரினமாக இருப்பதிலிருந்து அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை. விண்வெளி ஆராய்ச்சியை வாணவேடிக்கை, வீண் விரயம் என்று எளிதாக வகைப்படுத்துவது சரியல்ல. ஆராய்ச்சிகளை வாணவேடிக்கை என கூறாமல் கல்வி என்று கூறலாம். என்னை கூட என் தந்தை கடன் வாங்கி தான் படிக்க வைத்தார். எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி நான். கடன் வாங்கி உங்கள் பிள்ளையை படிக்க வைக்க வேண்டுமா, வேலைக்கு அனுப்பி சம்பாதிக்க வைக்கலாமே என்று என் உறவினர் என் தந்தையிடம் கேட்டனர். அதையும் மீறி கஷ்டப்பட்டு தான் படிக்க வைத்தார். கடன் வாங்கினாலும், அதனை சரியான முறையில் முன்னேற்றத்திற்காக செலவு செய்வது தவறல்ல.

Leave a Reply to கற்றது கையளவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க