privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஆட்டோவுக்கு ரேட்டு - மல்டிபிளக்சில் பூட்டு !

ஆட்டோவுக்கு ரேட்டு – மல்டிபிளக்சில் பூட்டு !

-

நான் இந்தப் பதிவில் முதலிலேயே சொல்லிவிடுகிறேன், ஆட்டோவில் கட்டண மீட்டர்கள் வைக்கக் கூடாது என்றோ, அல்லது அதில் வைத்திருக்கும் கட்டணத்தை விட அதிகமாக வாங்குவது நியாயம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இந்த ஆட்டோ கட்டணத்தை ம‌ட்டும் பெரிதாகப் பேசும் அல்லது எழுதும் நண்பர்களிடம் கேட்பது ஒன்றுதான். ஆட்டோக்காரர்களிடம் மட்டும் “ஏன்டா மீட்டர் போட்டு ஓட்டல” என்று சர்வ சாதரணமாக‌ கேட்கும் நாம் கீழே நான் சொல்லியிருக்கும் விசயங்களை எப்படி அணுகிறோம் என்று அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

ஆட்டோ
ஆட்டோக்காரர்களிடம் மட்டும் “ஏன்டா மீட்டர் போட்டு ஓட்டல” என்று சர்வ சாதரணமாக‌ கேட்கும் நாம்…

இன்று பெருநகரங்களில் இருக்கும் திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு சாதரண மினரல் வாட்டர் பாட்டிலின் விலை என்ன? அதே வாட்டர் பாட்டிலை வெளியில் வாங்கினால் அதன் விலை என்ன? என்பது அனைவருக்கும் தெரியும். திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு பாப்கார்ன் விலையில் வெளியில் உள்ள கடைகளில் அதேப்போல் இரண்டு வாங்க முடியும். ஆனால் அங்கெல்லாம் யாரும் ஏன்டா இப்படி விற்கிறீங்கனு பொங்குவதைப் பார்க்க முடியவில்லை. வாயை மூடிவிட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

இதைவிடக் கொடுமை வெளியில் இருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என்று வாசலியே போர்டு மாட்டிவிட்டு, அதற்கும் ஆள் வைத்துப் பரிசோதனை செய்கிறார்கள். டிக்கெட் எடுத்து தான் உள்ளே வருகிறேன், அதேப்போல் என்னுடைய பணத்தை கொடுத்து தான் வெளியில் இருந்து உணவுப் பொருளும் வாங்கி வருகிறேன். ஏன்டா இவைகளை நான் உள்ளேக் கொண்டு போகக்கூடாது என்று எவரும் கேட்பதில்லை. திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்குச் செய்யும் செலவை விட, இங்கு வாங்கும் உணவுப் பொருட்களுக்கு அநியாயமாகக் கொடுக்கும் விலையின் செலவு அதிகம். திரையர‌ங்கில் முப்பது ரூபாய் ஐஸ்கீரிமை ஐம்பது ரூபாய்க்கு கணக்குக் கேட்காமல் வாங்கிச் சாப்பிட்ட‌ நாம் தான் வெளியில் வந்து, நடு வெயிலில் ரோட்டோரத்தில் நின்று “ஆட்டோ வேணுமா சார்?” என்று அழைப்பவரிடம் பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுவோம்.

மல்டிபிளெக்ஸ்
திரையர‌ங்கில் முப்பது ரூபாய் ஐஸ்கீரிமை ஐம்பது ரூபாய்க்கு வாங்கிச் சாப்பிட்ட‌ நாம், நடு வெயிலில் ரோட்டோரத்தில் நின்று “ஆட்டோ வேணுமா சார்?” என்று அழைப்பவரிடம் பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுவோம்.

ஆன்லைனில் பஸ் டிக்கெட் புக் பண்ணும் அனைவருக்கும் தெரிந்திருக்கும், வாரத்தில் சாதரண நாட்களில் இருக்கும் டிக்கெட்டின் விலையை விடச் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை நூறு ரூபாயில் இருந்து முந்நூறு ரூபாய் வரை அதிகமாக இருக்கும். இந்த மோசடி முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் தான் இருந்த‌து, ஆனால் இப்போது வார இறுதி நாட்களிலேயே இப்படி விலையேற்றி கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்தப் பஸ் முதலாளிகள் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் டீசலுக்கு அதிக விலை கொடுப்பதில்லை, அதே போல பஸ் ஓட்டும் ஓட்டுநர்களுக்கும் அதிகச் சம்பளம் கொடுத்தும் விடப் போவதில்லை. “அப்புறம் எதற்கு இந்த விலையேற்றம்?” என்று  கேட்கும் துணிவு எவருக்கும் இல்லை.

ஒரு பஸ் டிக்கெட்டிற்கு நூறு முதல் முந்நூறு ரூபாய் அதிகமாக எந்தக் கேள்வியும் இல்லாமல் கொடுத்து பயணித்து விட்டு விடியற் காலையில் பஸ்சை விட்டு இறங்கி போக வேண்டிய இடத்திற்காக ஆட்டோவை தேடும் போது, நமக்காகவே காத்திருந்தது போல் வந்து “எங்க சார் போகனும், வா சார் உட்கார்” என்று கேட்கும் ஆட்டோகாரரிடம் தான் “மீட்டர் போட்டா வ‌ரேன்” என்று சட்டம் பேசுவோம்.

ரெஸ்டாரண்ட் டிப்ஸ்
பெரிய ஹோட்டல்களில் கவுரத்திற்கான குறியீடாகப் போட்டா போட்டி போட்டு கொடுக்கும் டிப்ஸ் கொஞ்சம் அல்ல.

இப்போது சாதரணமாக ஒரு ஹோட்டலில் சென்று டிபன் ஆர்டர் செய்தாலே அதைக் கொண்டு வந்து பரிமாறும் சர்வர், இறுதியில் பில் கொடுக்கும் போது நமது முகத்தைப் பார்க்கிறார். அவருக்கும் பத்து ரூபாய்க்குக் குறையாமல் டிப்ஸ் வைக்க வேண்டும். சாப்பிட்டது ஐம்பது, அதற்குக் கொடுக்கும் டிப்ஸ் பத்து. இன்னும் கொஞ்சம் பெரிய ஹோட்டல்களில் நடக்கும் டிப்ஸ் பற்றி அனைவருக்கும் தெரியும். தனது கவுரத்திற்கான குறியீடாகப் போட்டா போட்டி போட்டு கொடுக்கும் டிப்ஸ் கொஞ்சம் அல்ல. இவ்வளவு தாரளமாக நடந்து கொள்ளும் நாம் தான் ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் ஆட்டோகாரரிடம் வந்தால் மட்டும் சிக்கனம் பேசுவோம்.

நான் இப்போது இருக்கும் ஹைதராபாத்க்கு வந்தவர்களுக்குத் தெரியும். பிரியாணி என்றால் அது பாவர்ஜி ஹோட்டல் என்று. அந்தக் கடையின் பிரியாணி என்றால் சாப்பிட விருப்பமில்லை என்று சொல்பவனும் சாப்பிடுவான். அந்த அளவிற்குப் பிரியாணி சுவையாக இருக்கும். இந்த ஹோட்டலில் சாப்பிட எப்போதும் நமது ஊரில் நடக்கும் கல்யாணப் பந்தி போல் தள்ளுமுள்ளாகத் தான் இருக்கும். இந்த ஹோட்டலில் பில் போடுவதும், பணம் வங்குவதும் நமக்குப் பரிமாறும் சர்வர் தான். மொத்தமாகப் பில் போட்டு கொடுக்கும் போதே அவருக்குத் தேவையான டிப்ஸை அவரே பில்லில் போட்டு நம்மிடம் வாங்கிக் கொள்வார். ஒரு வேளை பில்லில் போட மறந்து விட்டால் அவரே கேட்டு வாங்கிக் கொள்வார். நாம் சாப்பிடும் தொகைக்கு ஏற்ப அவர்களின் டிப்ஸும் இருக்கும்.

இப்போது பயணத்திற்கு “நாங்க இருக்கோம் வாங்க” என்று நம்மைக் கனிவாக அழைப்பவர்கள் கால் டாக்சி வைத்திருப்போர். இவர்கள் இப்போது ஒரு சிஸ்டம் வைத்திருக்கார்கள், ஒரு மணி நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட‌ கிலோ மீட்டர் நாம் பயணம் செய்யலாம் அதற்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து உள்ளார்கள். இதைப் பிளான் செய்து நாம் புக் பண்ணினால் என்ன ஆகும் என்பதைக் கீழே விளக்குகிறேன்.

நாம் போக வேண்டிய இடத்திற்கு ஆகும் நேரம் கால் மணி நேரம், அப்படியானால் வருவதற்கும் கால் மணி நேரம், சென்ற‌ இடத்தில் நம‌க்கு ஆகும் வேலைக்கான நேரம் அரை மணி நேரம் ஆக மொத்தம் ஒரு மணி நேரம் நமக்குத் தேவைப்படுகிறது. அதனால் நாம் அந்தக் கால் டாக்சியில் உள்ள ஒரு மணி நேர பிளானை புக் செய்கிறேம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் போகும் போது கால் மணி நேரத்தில் சென்று விடுகிறோம், அங்குள்ள வேலையையும் அரை மணி நேரத்தில் முடித்து விடுகிறேம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் வரும் போது டிராபிக் காரணமாக நாம் பத்து நிமிடம் தாமதமாக வருகிறோம் என்றால் அவர்கள் கேட்கும் தொகை எவ்வளவு தெரியுமா? அதேப்போல் மற்றொரு ஒரு மணி நேரத்திற்கான பணம். இரண்டு மணி நேரத்திற்கான பணத்தைக் கொடுத்தால் தான் உண்டு. டிரைவரிடம் எப்படி என்று கேட்டால் அவர் மீட்டரை காட்டுவார். சார் எனக்கு இதில் எதுவும் கிடைக்காது, நீங்கள் குறைத்துக் கொடுத்தால் எனது சம்பள‌த்தில் பிடித்துக் கொள்வார்கள் என்று கையை விரிப்பார். இதையே ஒர் ஆட்டோ டிரைவர் செய்தால் நம்முடைய எதிர்வினை என்னவாக இருக்கும்.

ஆட்டோ டிரைவர்
சாலையில் விபத்து நடந்தால் முதலில் வந்து உதவுபவர்கள் ஏதாவது ஒரு ஆட்டோ டிரைவராகத் தான் இருப்பார்

இன்றைக்கும் சாலையில் விபத்து நடந்தால் முதலில் வந்து உதவுபவர்கள் ஏதாவது ஒரு சில‌ ஆட்டோ டிரைவராகத் தான் இருப்பார். அது மட்டுமல்ல குடித்துவிட்டு நடுச் சாலையில் விழுந்துக் கிடப்பவ‌ர்களைச் சற்று ஒதுக்கி போடுவதற்கோ அல்லது அவருடய ஆடையைச் சரிசெய்வதற்கோ வழியில் செல்லும் எவருக்கும் மனசு வராது. அதையும் மனிதாபிமானம் உள்ள ஓர் ஆட்டோ டிரைவர் செய்வதை நாம் கைக‌ட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்போம்.

ச‌மீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில், முதியோர்களை இன்றைய தலைமுறைகள் எவ்வாறு கவனிக்கின்றன என்ற தலைப்பில் பேசிய ஒரு பிரபல மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறியது : “இன்றைக்கு வீட்டில் தனியாக இருக்கும் பெரும்பாலான முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவது மனிதாபிமானம் உள்ள ஏதாவது ஒரு சில‌ ஆட்டோ டிரைவர்கள் தான். இந்த ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை.”

சமீபத்தில் நான் சென்னை வந்தபோது ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது அவரிடம் மீட்டர் கட்டணம் பற்றிப் பேசினேன். “என்னங்க மீட்டர் போட்டு ஓட்டினா லாபமா? நஷ்டமா?” என்றேன், அவரோ, “எனக்கே தெரியல சார்” என்றார். அப்புறம்,”நஷ்டம் தான் சார். எங்க சார்!! சவாரி கிடைக்க மாட்டேங்குது, எங்களுக்கு உறுதியாக இத்தனை சவாரி கிடைக்கும் என்று இருந்தால் லாபமாக இருக்கும். ஆனால் இப்போது சவாரி கிடைப்பதே குறைவாக இருக்கு” என்று சொன்னார்.

அவர் கூறியதும் எனக்கு உண்மையாகப் பட்டது, காரணம் இவர்களுக்கு இன்று இத்தனை சவாரிகள் கிடைக்கும் என்ற உறுதி இல்லை. ஆனால் அன்றைக்கும் அவர்கள் குடும்பத்தை நடத்த வேண்டும், பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இன்றைய விலைவாசி உயர்வு மேல் மட்டத்தில் இருப்பவர்களையே அசைத்துப் பார்க்கிறது, இவர்கள் எல்லாம் எம்மாத்திரம். நம்மிடம் வாங்கும் பத்து, இருபது ரூபாய்களைக் கொண்டு அவர்கள் ஒன்றும் பங்களா கட்டிவிட முடியாது. அவர்கள் குடியிருப்பது என்பதோ வாடகை வீடுகளிலும், சேரிகளிலும் தான். அவர்களின் வாழ்க்கை தரமும் பெரிதாக உயர்ந்தாகவும் இல்லை.

மல்டிபிளெக்ஸ்
பதினைந்து ரூபாய் தண்ணீர் பட்டிலை இருபத்திஐந்து ரூபாய் சொல்லும் போது வாயை மூடிக் கொண்டு வாங்கும் நாம், ஆட்டோ காரர்களின் சட்டையைப் பிடிப்பது எதனால்

இந்த ஆட்டோ டிரைவர்களுக்குக் கேட்கும் தொகையை எந்தக் கேள்வியும் கேட்காமல் கொடுக்கும் சில பயணிகளால் தான் இந்த பிரச்சனை என்றுப் புகார் வேறு கூறுகிறார்கள் முற்போக்காளர்கள். இவர்களால் தான் இந்த ஆட்டோ டிரைவர்கள் எல்லோரிடமும் அதிகமாக பணம் கேட்பதாகவும் எழுதுகிறார்கள். இப்படிக் கொடுப்பவர்கள் தான் முதலில் திருந்த வேண்டும் என்று அறிவுரை வேறு. என்ன கொடுமை… கண்டிப்பாக நான் கொடுக்கும் பத்து அல்லது இருபது ரூபாய், அவனுடைய குழந்தைக்குப் பிஸ்கட் ஆகத் தான் வீட்டுக்கு போகும். இப்படிக் கொடுப்பதை நிறுத்தி தான் நான் திருந்த வேண்டும் என்றால் நான் திருந்தாமலே இருந்துவிட்டுப் போகிறேன்.

பதினைந்து ரூபாய் தண்ணீர் பட்டிலை இருபத்திஐந்து ரூபாய் சொல்லும் போது வாயை மூடிக் கொண்டு வாங்கும் நாம், ஆட்டோ காரர்களின் சட்டையைப் பிடிப்பது எதனால். மேலே சொல்லியிருக்கும் பிரச்சனைகளை எல்லாம் எந்தப் பத்திரிகையும் எழுதியதாகவோ அல்லது ஊடகங்கள் பொங்கியதாகவோ தெரியவில்லை. காரணம் இந்தப் பெரிய கார்பரேட் முதலாளிகளின் விளம்பரம் பத்திரிக்கைகளுக்கும், ஊடகங்களுக்கும் தேவை. இவர்களில் நியாயம், அநியாயம் எல்லாம் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டும் தான்.

நன்றி நாடோடியின் பார்வையில்