privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅரசு கல்லூரிகளா ஆட்டு மந்தை கூடாரங்களா ? புமாஇமு போராட்டம்

அரசு கல்லூரிகளா ஆட்டு மந்தை கூடாரங்களா ? புமாஇமு போராட்டம்

-

“அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் வரை போராடுவோம்!”

என்ற முழக்கத்தின் அடிப்படையில் 25-2-2014 அன்று காலை 11 மணியளவில், வள்ளுவர் கோட்டம் அருகில் அனைத்து கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் ஏழுமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தலைமையுரையாற்றிய தோழர் ஏழுமலை பேசியதாவது, “தமிழக அரசானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கிறது. மாணவர்களின் அடிப்படை தேவையான குடி நீர், கழிவறை, கேண்டின் செய்து தரவும், விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார விழாக்கள் நடத்திடவும் வழிவகை செய்யாமல் இந்த அரசு இருந்து வருகிறது. இப்பிரச்சனைகளுக்கு போராடாமல் தீர்வு கிடைக்காது” என்பதை வலியுறுத்தி பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய பு.மா.இ.மு வின் மா நில அமைப்புக் குழு உறுப்பினர் தோழர்.சரவணன் பேசியதாவது, “தமிழகத்தில் அம்மாவின் பொற்கால ஆட்சி நடக்கின்றது, தேனாறும், பாலாறும் ஓடுகிறது என்று சொல்கின்றனர். அம்மா வாட்டர், அம்மா உணவகம், அம்மா காய்கறி அங்காடி போதாக் குறைக்கு அம்மா திரையரங்கம் என்று தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார் என்றெல்லாம் துதிபாடிகளும் ஊடக அடிமைகளும் பேசி வருகின்றனர். கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றும், இதுவும் போதாது என்று கல்வியில் 100% சதவீத வளர்ச்சிக்கு கொண்டு செல்வோம் என்றெல்லாம் ஜெயாவும் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார். இது வெறும் அறிக்கை தானே அதை நிறைவேற்ற முடியாது, நிறைவேற்றாவிட்டாலும் யார் கேட்க போகிறார்கள் என்ற எண்ணத்தில் இத்தகைய ஏமாற்று மோசடிகள் மக்களிடையே அன்றாடம் கொட்டப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிலைமையென்ன, குடிப்பதற்கு குடி நீர் இல்லை, கழிவறை இல்லை. கேண்டீன் இல்லை. இப்படி எந்த ஒரு அடிப்படை வசதியுமின்றி படிக்கும் சூழலும் இன்றி, தான் அனைத்து கல்லூரிகளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவைகள் மட்டுமா, போதுமான வகுப்பறைகள் இல்லை பேராசிரியர்கள் இல்லை என்பது தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் கவலைக்குரிய நிலையாக உள்ளது.

மாணவர்களின் தனித்தன்மைகளை வளர்க்கும் விதமாக விளையாட்டுப் போட்டிகளோ, கலாச்சார விழாக்களோ நடத்துவதும் கிடையாது. 20 மாணவர்களுக்கு ஒரு தண்ணீர் குழாய் அமைத்திட வேண்டும் எனவும், 50 மாணவர்களுக்கு ஒரு கழிவறை அமைக்க வேண்டும் என்றும் அரசின் சட்டம் கூறுகிறது. ஆனால் இச்சட்டத்தை அரசே மதிக்காமல் செயல்படுகிறது என்பது தான் கேலிக்கு உரிய ஒன்றாக உள்ளது.

ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் கல்லூரியின் கதி எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அங்கே படிக்கும் சூழல் எப்படி உருவாகும். இன்னும் பெண்கள் படிக்கும் கல்லூரியே இதைவிட கேவலமான நிலைமையில் தான் இருந்து வருகிறது. கழிவறைகள் எல்லாம் பாழடைந்து இடிந்து விழும் நிலைமையில் தான் உள்ளது. காயிதே மில்லத் கல்லூரியில் போன வருடம் ஒரு மாணவி மீது சுவர் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்னே அவர் உயிர் பிழைத்தார்.  இதைப் பற்றி அங்குள்ள பேராசிரியர்களிடம் கேட்ட போது அப்படி ஒன்றும் நடக்கவில்லை, இங்கு எல்லாம் நன்றாக தான் இருக்கிறது என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாகவும் உங்களுக்கு இங்க எந்த வசதியும் இல்லை எனில் ஃபாரின்ல போய் படிக்க வேண்டியது தானே என்று அலட்சியமாகவும் பதில் கூறினார்கள்.

இது இப்படியிருக்க இன்னொரு புறம் பாரதி மகளிர் கல்லூரியின் வாசலிலேயே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் மாணவிகள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் கோயில்கள் போன்ற இடங்களிலெல்லாம் டாஸ்மாக் இருக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்றம். ஆனால் இதையும் மீறி சாராய வியாபாரம் நடந்து வருகிறது. இதனைக் கண்டித்து நடவடிக்கை எடுக்காத போலீசு, கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படாததால் மாணவர்களுக்கு ஒரே மகிழ்ச்சியான பஸ் டே வை கொண்டாடுகின்றனர். இது மாணவர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும் உள்ளதால், பஸ் டே விற்கு தடை ஆணை வாங்கி இருக்கிறது. திட்ட மிட்டே மாணவர்கள் மீது பொய் வழக்கையும் போட்டு வருகிறது அரசு. மாணவர்களிடையே ஏற்படும் சிறுசிறு மோதல்களைப் பெரிதாக்கி மாணவர்களை ரவுடிகளாகவும், பொறுக்கிகளாகவும் போலீசும் ஊடகங்களும் சித்தரித்து வருகிறது.

அனைத்து கல்லூரிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத இந்த அரசு தான் இந்தியா வல்லரசாகப் போகிறது என்று வெற்று தம்பட்டம் அடிக்கிறது. கல்லூரிகளில் கழிவறை வசதி செய்து கொடுக்க துப்பில்லாத இந்த அரசு தான் சந்திராயனை விண் வெளிக்கு அனுப்பி விட்டோம் என்று வீண்பெருமை பாடுகிறது. அனைத்து கல்லூரிகளிலும் கழிவறை, குடிநீர், கேண்டின் வசதிகள் உள்ளதா, வகுப்பறைகள், நூலகங்கள் போதுமான பேராசிரியர்கள் உள்ளார்களா என்று ஆய்வு செய்ய அரசாங்கத்தால் ”நாக்” என்ற கமிட்டி (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார ஆணையம்) 1994-ல் உருவாக்கப்பட்டிருக்கிறது. சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து உறுப்புக் கல்லூரிகளிலும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அங்கீகாரம் பெற வேண்டும் அப்படி இல்லையென்றால், அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான நிதியை அரசிடமிருந்து பெற முடியாது. “ நாக்” கமிட்டியிடம் இருந்து அங்கீகாரம் பெற்று அனைத்துக் கல்லூரிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மாணவர்களுக்கு படிக்கும் சூழலை உருவாக்காத சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் தான் மாணவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்கிறார்.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற கொலைகார கொள்கைகளை அமல்படுத்தி வரும் அரசு அனைத்து கல்லூரிகளையும் இழுத்து மூடும் திட்டத்தோடு தான்  செயல்பட்டு வருகிறது. நூறாண்டு பேசும் ஈராண்டு சாதனை படைத்து விட்டோம்  என்று கூறிக் கொண்டு ஏற்கனவே நாடு முழுவதும் பற்றி படர்ந்திருக்கும் தனியார் பள்ளி கல்லூரிகளை மேலும் அதிகப்படுத்தி அரசு பள்ளி கல்லூரிகளையும், அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் ஒழித்து கட்டி தனியார்மய கொள்கையை முன்னிறுத்த நினைக்கிறது பாசிச ஜெயா அரசு.

இதன் விளைவாகத் தான் சென்னை இராணி மேரி கல்லூரிகளை இடித்து தலைமைச் செயலகம் கட்டத் துடித்தது அன்றைய ஜெ. அரசு. ஆனால் மாணவிகளின் தொடர்ச்சியான உறுதிமிக்க போராட்டத்தால் தோற்றுப் போனது. இதில் வேடிக்கை என்னவென்றால் திமுக அரசால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தில் இயங்காமல் பழைய கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தையும் வீணடித்தது.

இதே போல் பச்சையப்பன் கல்லூரியை இடித்து, மெட்ரோ ரயில் பணியை தொடங்கியது மத்திய மாநில அரசுகள். இப்படி முதலாளிகளுக்கு ஆதரவான நகரமயமாக்கல் என்ற பொருளாதார கொள்கையின் படி நகரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் நகரத்தின் வெளியே மாற்றியமைக்கும் திட்டம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் வீரம் மிக்க போராட்டத்தால் தகர்த்தெறியப்பட்டது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் வரை போராடுவோம். இப்பிரச்சனைக்கு தடையாய் நிற்கும் தனியார்மய தாராளமய கொள்கைகளை வேரறுப்போம்”

என்று விளக்கி பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை