பாட்டாளி வர்க்க ஆசான்கள் காரல் மார்க்ஸ் – லெனின் பிறந்தநாள் விழா!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மே மாதம் 4-ம் தேதி பாட்டாளி வர்க்க ஆசான்கள் காரல் மார்க்ஸ் – லெனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு பிரச்சார வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் ஏப்ரல்-22 லெனின் பிறந்தநாள் கொண்டாட முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து மே -5 காரல் மார்க்ஸ் பிறந்தநாள் இரண்டையும் சேர்த்து மே 4-ம் தேதி உசிலம்பட்டியில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தோழர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார். 60-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
தோழர் ஜெயபாண்டியன் தனது தலைமை உரையில் குடும்பத்தை அரசியல் படுத்த இந்த மாதிரியான நிகழ்வுகளை நடத்துவது மிக அவசியம் என வலியுறுத்தி பேசினார்.
நிகழ்ச்சி நிரல் :
- தோழர் காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
- தோழர் லெனின் பற்றி
- சமூக மாற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பவர்கள்.. அரசியல்வாதிகளே! அதிகாரிகளே! முதலாளிகளே! – விவாதம்..
- லெனின் பார்வையில்… இந்தியாவில் தேசிய இனப் பிரச்சனையும் வர்க்கப் போராட்டமும்
- அறிவியலும் மூடநம்பிக்கையும்
- தாய்மொழிவழிக் கல்வியின் அவசியம் ஏன்?
- முதலாளித்துவ சீரழிவும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டின் அவசியமும்
- மற்றும் நாடகம்… பாடல்கள்… கவிதைகள்.. விளையாட்டு
நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு பற்றி இளம் பெண் தோழர் ஒருவர் பேசியது புதிய தோழர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. உசிலை வட்ட வி.வி.மு செயலாளர் தோழர் குருசாமி “முதலாளித்துவ சீரழிவும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டின் அவசியமும்..” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
“சமூக மாற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பவர்கள்… அரசியல்வாதிகளே! அதிகாரிகளே! முதலாளிகளே” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. தேனி மாவட்ட வி.வி.மு செயலாளர் தோழர் மோகன் கலந்து கொண்டு சமூக மாற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பவர்கள் முதலாளிகளே என்று தீர்ப்பு வழங்கினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
பு.ஜ செய்தியாளர், உசிலம்பட்டி