privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு - ஒரு அறிமுகம்

டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்

-

பிரபஞ்சத்தில் நாம் அறிந்த கோள்களிலேயே நமது பூமி மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலைப் பெற்றுள்ளது. இங்கு வியத்தகு எண்ணிக்கையிலான உயிரினங்கள் வாழ்கின்றன. நமது பூமியில் எங்கு நோக்கினும் நுண்ணுயிரிலிருந்து மிகப்பெரும் விலங்கினங்கள் வரை ஏதாவது ஓர் உயிரினத்தை காணமுடியும்.

உயிரினங்களின் தோற்றம்
உயிரினங்களின் தோற்றம்

பூமியில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ள சுமார் அறுபது இலட்சத்திலிருந்து பத்து கோடி வகையான உயிரினங்கள் ஒவ்வொன்றும் தனக்கே உரிய தனிச்சிறப்பான உடல்கூறு வடிவமைப்பை பெற்றுள்ளன.

இப்படி தனிச்சிறப்பான உருவ வடிவமைப்பை கொண்ட வெவ்வேறு வகையான உயிரினங்கள் எப்படி, எப்போது தோன்றின? திகைப்பூட்டும் எண்ணிக்கையிலான இத்தனை வகைகளும், தொகுப்புகளும் இருக்க காரணமென்ன?

உயிரினங்களின் தோற்றம் பற்றிய இக்கேள்விகளுக்கு மதங்கள், ‘ஒவ்வொரு உயிரும் தனித்தனியாக, தனிச்சிறப்பான வடிவமைப்புடன் கடவுளால் படைக்கப்பட்டது’ என்று தத்துவ உலகில் கருத்து முதல்வாதம் என அழைக்கப்படும் பிரிவைச் சேர்ந்தபடைப்புக் கொள்கையை முன் வைக்கின்றன.

கத்தோலிக்க திருச்சபை ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பாவில் பைபிளின் படைப்புக் கொள்கையே ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக நிலவி வந்தது. பைபிளின் படி சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடவுள் இவ்வுலகை படைத்த மூன்றாம் நாளில் தாவரங்களை படைத்தார். ஐந்தாம் நாளில் மீனினங்களையும், பறவையினங்களையும் ஆறாம் நாளில் விலங்கினங்களையும், பாலூட்டிகளையும் படைத்து கடைசியாக ஏழாவது நாளில் மனிதர்களை படைத்தார்; களிமண்ணிலிருந்து ஆதாமையும், அவனது விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்தார்.

பைபிளுக்கு 557 ஆண்டுகளுக்கு பின் உருவான, ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லா’வின் திருப்பெயருடன் ஆரம்பிக்கும் திருக்குர்-ஆனில் அல்லா உலகை ஆறு கட்டங்களாகப் படைத்தார். சுட்ட களிமண்ணிலிருந்து ஆதாமை உருவாக்கினார்.

பார்ப்பன புராணங்களின்படி ஈரேழுலோகங்களையும், அவற்றிலுள்ள உயிரினங்களையும், நால்வருண மனிதர்களையும் பிரம்மா படைத்தார். அப்பிரம்மனை படைத்ததே தங்களுடைய விஷ்ணுதானென்றும், இல்லை விஷ்ணுவையும் படைத்தது சிவன் தானென்றும் கோஷ்டிப்பூசல்கள் நிலவினாலும், ‘அனைத்தும் ஏதோ ஒரு கடவுளால் படைக்கப்பட்டது’ என்ற படைப்பு தத்துவத்தையே முன்வைக்கின்றனர்.

தத்துவத் துறையை பொறுத்த வரை, 19-ம் நூற்றாண்டு வரையில் ஐரோப்பிய அறிவியலாளர்கள் மத்தியிலும் அரிஸ்டாட்டிலின் ஆதியும் அந்தமும் அற்ற நிலையான உலகம் என்ற இயக்க மறுப்பியல் கோட்பாடு ஆதிக்கம் செலுத்தியது.

சார்லஸ் டார்வின்
சார்லஸ் டார்வின்

இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு சரியென்று நம்பப்பட்ட, நிலவி வந்த கருத்துகளிலிருந்து வேறுபட்டு விளக்கமளிக்க முற்பட்டார் சார்லஸ் டார்வின். ஆனால், முதன் முதலாக படைப்பு கொள்கையை மறுத்து பரிணாம வளர்ச்சியை முன்வைத்தவர் டார்வின் அல்ல.

அறிவியலும் அனைத்து அறிவுத் துறைகளும் திருச்சபையில் கட்டுண்டு கிடந்த காலத்தில் பெரும்பாலான அறிவியலாளர்களும், கல்வியாளர்களும் பாதிரிமார்களாக இருந்த போதிலும், இறைவனின் படைப்புகளை முழுவதுமாக அறிந்து கொள்ள இயற்கையை ஆய்ந்து இறை இயற்கையியல் (theological naturalism) என்று பெயரிட்டு விவரங்களை திரட்டி வந்தனர்.

18-ம் நூற்றாண்டில் சுவீடனை சேர்ந்த உயிரியலாளர் கரோலஸ் லின்னயேஸ் (Carolus Linnaeus) உயிரினங்களை வகைப்படுத்தி, ஒவ்வொரு உயிரையும் இனம், பேரினம், குடும்பம், குடும்பங்களை உள்ளடக்கிய வரிசை அதற்கும் மேல் பைலா (Phyla), அதற்கும் மேல் ராஜ்ஜியம் என ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி வகைப்படுத்தி வைத்தார்.

பிரான்சை சேர்ந்த பஃபோன் (Georges-Louis Leclerc Comte de Buffon) என்ற அறிவியலாளர் உயிரினங்கள் தோன்றியதிலிருந்து மாற்றமின்றி நிலைத்திருக்கவில்லை என்றும் உயிரினங்கள் தோன்றும் போதே வெவ்வேறு சூழ்நிலைகளைப் பொறுத்து தோற்றம் – வடிவம் அமைகிறது என்றும் ஒரு விதமான பரிணாம கோட்பாட்டை முன் வைத்திருந்தார்.

முன்னதாக 17-ம் நூற்றாண்டில் பாறை அடுக்குகளில் எலும்புகள், உயிரின படிவங்கள் கண்டறியப்பட்டன. அக்காலத்திய டேனிஷ் அறிவியலாளரும், பாதிரியாருமான நிக்கோலஸ் ஸ்டெனோ (Nicolus steno) திரவ நிலையிலிருந்த குழம்புகள் குளிர்ந்து கெட்டிப்பட்டு பாறைகளாவதையும், புதிதாக குளிர்ந்து உருவாகும் புதிய பாறை பழைய பாறையின் மீது படிந்து பாறை அடுக்குகள் உருவாவதையும் விளக்கிக் கூறி கண்டறியப்பட்டவை தொல்லுயிர் எச்சங்கள் என்றார். அவரது கருத்துகள் தொல்லுயிரியல் துறைக்கு அடிப்படையாக அமைந்தன.

18-ம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் தங்கள் பகுதியில் இல்லாத உயிரினங்களின் தொல்லுயிர் புதைபடிவங்களை கண்டறிந்தனர். அவை உலகின் வேறு பகுதிகளில் வாழ்வதாக நம்பினர். பிரான்சை சேர்ந்த ஜார்ஜ் குவியர் (George Cuvier) புதைபடிவங்களில் கண்டறியப்பட்ட சில உயிரினங்கள் உலகின் எப்பகுதியிலும் வாழ்வதற்கான சான்றாதாரங்கள் இல்லை என்று கண்டறிந்து அவை அருகி அழிந்து போன உயிரினங்கள் என்பதை முன்வைத்தார்.

இதன் மூலம் கடவுளால் படைக்கப்பட்டு மாற்றமின்றி நிலைத்திருப்பதாக மதவாதிகள் சொல்லும் உலகத்தில் பல உயிரினங்கள் வாழ்ந்து அருகி அழிந்திருக்கின்றன என்றும் புதிய உயிரினங்கள் தோன்றியிருக்கின்றன என்றும் கருதுவதற்கான அடிப்படை உருவாக்கப்பட்டது.

லாமார்க்
லாமார்க்

இப்பின்னணியில், டார்வினுக்கு முன்னரே 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ழான் லாமார்க் (Jean-Baptiste Lamarck) என்ற பிரான்சை சேர்ந்த விஞ்ஞானி படைப்பு தத்துவத்தை நிராகரித்து பரிணாமக் கோட்பாட்டை முன்வைத்திருந்தார். உயிரினங்கள் தமது வாழ்நாளிலேயே சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதன் மூலம் உடல்கூறில் மாற்றமடைந்து அத்தனிக்கூறினை தமது சந்ததிகளுக்கு கடத்துகின்றன (Transfer) என்றும் எளியதிலிருந்து சிக்கலானவையாக வளர்ச்சியடையும் இயற்கை விதி பரிணாம வளர்ச்சியை இயக்குவதாகவும் கூறினார். வளர்ச்சி ஏணிப்படி வடிவில் நடப்பதாக நம்பினார்.

இந்த கோட்பாடு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய மாபெரும் பாய்ச்சலை விளக்க முயன்ற போதிலும், அழிந்துபோன உயிரினங்களை பற்றியும், உயிரினங்களுக்கிடையிலான விடுபட்ட இணைப்புக் கண்ணிகளை பற்றியும் முரணின்றி விளக்குவதில் வெற்றியடையவில்லை. இன்று நம் கண்களுக்கு முன் பரிணாம வளர்ச்சி ஏன் நடக்கவில்லை என்பதற்கு இக்கோட்பாடு விடையளிக்க முடியவில்லை. எனவே இந்த கோட்பாடு மதவாதிகளின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது மட்டுமின்றி, சக அறிவியலாளர்கள் மத்தியிலும் அங்கீகாரத்தை பெறவில்லை.

எளியதிலிருந்து சிக்கலானதாக வளர்ச்சியடையும் ஏணிப்படி வடிவிலான பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமாக வெவ்வேறு உயிரினங்களின் உயிர்கருக்களுக்கிடையே உள்ள ஒற்றுமையைக் காட்டினர். 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கார்ல் வான் பேயர் (Karl von baer) என்ற எஸ்டோனிய அறிவியலாளர் வெவ்வேறு உயிரினங்களின் உயிர்கருக்களிடையே இருந்த குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, கரு வளர்ச்சி படிநிலைகளை பரிணாம வளர்ச்சி நிலைகளில் அர்த்தமுள்ள தொடராக காண முடியாது என விளக்கினர்.

19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, முறையான கல்வியறிவு இல்லாத வில்லியம் ஸ்மித் (William smith) என்ற சர்வேயர் வெவ்வேறு இடங்களில் இருக்கும் பாறை அடுக்குகளை ஒப்பிட்டு, ஒவ்வொரு அடுக்கிற்கும் குறிப்பான வரலாற்று காலத்தை கணக்கிட்டு அதன் மூலம் நிலவியல் வரைபடத்தை உருவாக்கினர். பாறை அடுக்குகளின் வரலாறு, தொல்படிமங்களின் வரலாறாகவும், உயிரினங்களின் வரலாறாகவும் ஆனது.

உலக நிலவியல் அமைப்பு பல திடீர் மாற்றங்களையும், சீற்றங்களையும் சந்தித்ததால் தான் இப்போதைய நிலையை அடைந்தது என்று நம்பப்பட்டது. இது அழிவமைவு கோட்பாடு எனப்பட்டது. டார்வினின் சமகாலத்தவரான சார்லஸ் லயல் (Charles Lyell) அது வரை நிலவியல் அமைப்பை விளக்கிய அழிவமைவு கோட்பாட்டை நிராகரித்து சீர்மாற்ற கோட்பாட்டை முன்வைத்தார். கண்களுக்கு புலப்படாத சிறுக சிறுக நடந்த சீரான படிப்படியான மாற்றங்களாலேயே பூமி இப்போதைய நிலையை அடைந்தது என்றார்.

படைப்பு தத்துவமும் பரிணாம கோட்பாடும்

உயிரினங்களின் தோற்றம் பற்றி இத்தகைய கோட்பாடுகள் நிலவிய சூழலில் அவற்றுக்கு ஒரு தீர்மானகரமான அறிவியல் உள்ளடக்கத்தை கொடுத்த டார்வின் 1809-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் நாள் இங்கிலாந்தின் சுரூஸ்பெரியில் (Shrewsbury) ராபர்ட் டார்வின் என்ற மருத்துவரின் மகனாக பிறந்தார். சார்லஸ் டார்வினின் தாத்தா எராமஸ் டார்வின் மருத்துவத் தொழில் செய்து வந்த அதே வேளை இயற்கையியல் அறிஞராகவும் இருந்தார். தன்னைப் போலவே தனது மகனும் சிறந்த மருத்துவராக வேண்டுமென்ற தந்தையின் விருப்பத்திற்கேற்ப தனது 16-ம் வயதில் மருத்துவம் படிக்கச் சென்றார் டார்வின். தனது தாத்தாவின் தாக்கத்தால் சிறுவயது முதலே இயற்கை விஞ்ஞானத்தில் ஆர்வமுள்ளவராக இருந்த டார்வினுக்கு மருத்துவச் சொற்பொழிவுகளை கேட்பதிலும், அறுவைச்சிகிச்சை முறைகளைக் கற்பதிலும் ஆர்வம் ஏற்படவில்லை.

டார்வினை பாதிரியார் ஆக்க விரும்பிய அவரது தந்தை, அன்று இறையியல் கற்று பாதிரியார் ஆக வேண்டுமானால், கேம்பிரிட்ஜில் பட்டம் பெற வேண்டும் என்ற தேவையை முன்னிட்டு அவரை 1828-ம் ஆண்டு கேம்பிரிட்ஜில் பட்டப்படிப்பில் சேர்த்தார்.

டார்வின் கால கல்வியாளர்களை பொறுத்தமட்டில் இயற்கை விஞ்ஞானத்தின் – விலங்கியல், உயிரியல், நிலவியல், இயற்பியல் போன்ற – ஒவ்வொரு துறை மட்டுமல்ல, அவற்றின் சிறப்புப் பிரிவுகளும் கூட, ஒன்றை ஒன்று சாராமல் தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவை, கற்க வேண்டியவையாக இருந்தது. புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அறிவியலாளர்கள், கல்வியாளர்களால் நிரம்பியிருந்த போதிலும், மதத்தில் கட்டுண்டு ஆதி முதல் இன்று வரை அனைத்தும் மாறாமல் இருந்து வருகின்றன என்ற இயக்கமறுப்பியல் சிந்தனையில் சிக்கியிருந்தது.

கேம்பிரிட்ஜில் சார்லஸ் டார்வினும், கிருத்துவம் முன்வைத்த உலகமும் உயிர்களும் தோன்றிய கோட்பாட்டை ஐயம் திரிபுற கற்றார். அப்போது  அவருக்கு அக்கருத்துக்கள் தவறாக தோன்றவில்லை. அங்கு நிலவியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை கற்றுத் தேர்ந்த டார்வின் அப்பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோவின் (John Henslow) நெருங்கிய நண்பரானார்.

ஹென்ஸ்லோ
ஹென்ஸ்லோ

முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வளர்ச்சியை தொடர்ந்து  உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்காக இயற்கை வளங்களை சுரண்டுவதற்கும், வணிகத்தை பெருக்குவதற்கும், சந்தைகளைக் கைப்பற்ற புதிய காலனிகளை உருவாக்குவதற்கும் கடல்வழிகள், கடல்நீரோட்டங்கள், நிலப்பகுதிகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து விவரங்களை திரட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்நோக்கங்களுக்காக தென்னமெரிக்க கண்டத்தின் கடல்பகுதிகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ள ’எச்.எம்.எஸ்.பீகிள்’ என்ற கப்பலை பிரிட்டிஷ் அரசு அனுப்பியது.

அக்கப்பலின் இரண்டாவது பயணத்தின் கேப்டனாக ராபர்ட் ஃபிட்ஸ்ராய் (Robert FitzRoy) நியமிக்கப்பட்டார். இப்பயணத்தில் தன்னுடன் ஒரு ’இயற்கை விஞ்ஞானியை’, அழைத்துச் செல்ல அவர் விரும்பினார். ஜான் ஹென்ஸ்லோவின் மூலம் அப்போது 22 வயதான டார்வினுக்கு கேப்டன் பிட்ஸ்ராயின் நட்பும், அவருடன் பயணிக்கும் வாய்ப்பும் கிட்டியது.

பாதிரியாராகப் போயிருக்க வேண்டிய சார்லஸ் டார்வின் இயற்கை, உயிரியல் ஆராய்ச்சியாளராக பீகிள் கப்பலில் பயணமானது, அவருக்கு மட்டுமல்ல, உயிரியல் துறைக்கே ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

பீகிள் கப்பலில் பயணம் செய்த டார்வின், ஐந்தாண்டுகளில் பல ஆயிரம் கிலோமீட்டர் கடல்வழியாகவும், 3,200 கிலோமீட்டர் நிலவழியாகவும் பயணித்து நிலஅமைப்பு, தாவர, விலங்குகள் பற்றிய சுமார் 1,700 பக்கங்களுக்கும் மேற்பட்ட குறிப்புகளுடன், 800 பக்கங்கள் கொண்ட நாட்குறிப்புகள், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட எலும்புகள், உயிரின மாதிரிகள், புதைபடிவங்களை சேகரித்திருந்தார்.

டார்வினுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சியை முன்வைத்த அறிஞர்கள் அனைவரும் ஊகத்தை அடிப்படையாக கொண்டும், பரிணாமம் நீண்ட-காலப்போக்குடைய விதிகளால் தீர்மானிக்கப்படுவதாகவும் விளக்கினர். ஆனால் டார்வின் இயற்கையில் கிடைத்த சான்றாதாரங்களை கொண்டு உயிரினங்களின் தோற்றத்தை முரணின்றி விளக்குவதன் மூலம் பரிணாமக் கொள்கையை வந்தடைந்தார்.

The origin of speciesடார்வின், 18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் வெவ்வேறு அறிவியல் துறை கண்டுபிடிப்புகள், கோட்பாடுகளில் சரியானவற்றை ஒருங்கிணைத்து புரிந்து கொள்ள முயன்றதோடு, பீகிள் பயணத்தில் தனது சொந்த அனுபவத்தில் தான் கண்ட தனிச்சிறப்பான வடிவமைப்பை கொண்ட வெவ்வேறு வகையான உயிரினங்களின் ஒற்றுமை- வேறுபாடுகளை ஒருங்கிணைத்து புரிந்துகொள்ள முயன்றார்.

தனது பயணத்தின் போது கோடானுகோடி உயிரினங்களில் பெரும்பாலானவை ஒத்தவடிவமைப்புடன் சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட தொகையினங்களாக இருப்பதையும் அறிந்து கொண்ட டார்வின் உயிரினங்கள் ஒவ்வொன்றும் பிரத்யேகமான முறையில் கடவுளால் படைக்கப்பட்டன என்ற படைப்புக் கொள்கையை சந்தேகிக்க ஆரம்பித்தார்.

சான்றாக நமது பூமியில் வியப்பூட்டும் வகையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான குரங்கினங்களும், சுமார் 315-க்கும் மேற்பட்ட ஓசனிச்சிட்டு குருவிகளும் (Hummingbird), ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால் இனங்களும், 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்டு-பூச்சியினங்களும், 2.5லட்சத்துக்கு மேற்பட்ட பூக்கும் தாவர இனங்களும் உயிர் வாழ்வதாக இன்று வரை தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது, இன்னும் கண்டறிய வேண்டியவையோ ஏராளம்.

தென்அமெரிக்க காடுகளில் தீக்கோழி போன்ற, பறக்கமுடியாத ரியா (Rhea) பறவைகளின் இருவெவ்வேறு வகைகளை டார்வின் கண்டார். மிகச்சிறு வேறுபாடுகளை கொண்ட இரு ஒத்த பறவைகளை கடவுள் ஏன் படைக்கவேண்டும்? அவரது பயணம் தொடர தொடர மர்மம் இன்னும் தீவிரமடைந்தது.

தென்அமெரிக்காவிற்கு மேற்கே, பசிபிக்பெருங்கடலில் உள்ள காலபகாஸ் (Galapagos) தீவுகளில் அவர் பார்த்த ஆமைகளிடையே புலப்பட்ட வேறுபாடுகளும் அவருடைய சிந்தனையை தூண்டின. காடுகளில், சதுப்புநிலத்தில், ஆற்றில், கடலில் இப்படி ஒவ்வொரு இடத்திலும் வாழும் ஆமை இனங்கள், தாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப பிரத்யேகமான வெவ்வேறு வடிவமைப்பை பெற்றிருந்தன.

ஒரே குடும்பத்தை சேர்ந்த உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பிலா தனிச்சிறப்பானவை அல்ல என்றும் அவற்றுக்கிடையே காணும் சிறுசிறு வேறுபாடுகள் உயிரினங்கள் தத்தமது சூழ்நிலைகளுக்கு தகவமைத்து கொண்டதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

தென்னமெரிக்காவின் அர்ஜெண்டினாவில் சில தொல்லுயிர் புதைபடிவங்களை (Fossil) காணுற்றார் டார்வின். அதில் ஒன்று நிலத்தில் வாழும் தேவாங்குகளை ஒத்த உடலமைப்பை கொண்டிருந்தது. அவை நாம் காணும் தேவாங்குகளைவிட பலமடங்கு பெரியவையாக இருந்தன.

டார்வின் காலத்தில் பிரபலமான உயிரியலாளர் ரிச்சர்ட் ஓவன். தொல்லியல் புதை படிவங்களை ஆய்வதிலும் உடற்கூறியலிலும் வல்லுனரான இவர் டைனோசர்களின் புதைபடிவங்களை முதன்முதலில் வகைப்படுத்தினார். லண்டன் இயற்கை அருங்காட்சியகத்தை தோற்றுவித்து அதில் பல உயிரின மாதிரிகளை சேகரித்தார். ஆயினும், 19-ம் நூற்றாண்டு உயிரியலாளர்களைப் போல ஓவனும் கூட ஒவ்வொரு தனிச்சிறப்பான உயிரினமும் பிரத்யோகமான முறையில் கடவுளால் படைக்கப்பட்டது என்ற படைப்பு கொள்கையையே நம்பினார்.

தான் கண்டெடுத்த தேவாங்கை ஒத்த புதைபடிவத்தை ரிச்சர்ட் ஓவனுக்கு அனுப்பி வைத்தார் டார்வின். அதை ஆய்ந்தறிந்த ஓவன், அது அழிந்து போன தேவாங்கு இனம் என்று வகைப்படுத்தி அதற்கு டார்வினின் பெயரை சூட்டினார். இவ்வளவு பெரிய உயிரினம் இப்போது ஏன் அழிந்து போனது?. ஆபிரகாமிய மதவாதிகளோ, “நோவாவின் படகில் இடம் கிடைக்காததால் அவை அழிந்து போனதாக” கருதினர். “கல்லுக்குள் தேரைக்கும் படியளந்தான் பரமன்” என்று கதை விடும் இந்து மதவாதிகளிடமோ அழிந்து இல்லாது போன உயிரினங்கள் குறித்து விளக்கம் இல்லை.

படைப்பு தத்துவம்

டார்வின் ஐந்தாண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய உடனேயே தனது பரிணாம கொள்கையை முன் வைத்து விடவில்லை. அவர் சேகரித்திருந்த சான்றுகளும் குறிப்புகளும் பரிணாம கொள்கையை முரணின்றி விளக்குவதற்கு அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. ஆயினும், டார்வினுக்கு, அவர் சேகரித்த குறிப்புகள், உயிரின மாதிரிகள், புதைபடிவங்கள் பெரும் புகழை பெற்றுத்தந்தன. இவற்றால் டார்வின் கர்வமுற்று சும்மா இருந்து விடவில்லை. அன்றாடம் காணும் உயிரினங்கள், நிகழ்வுகளை மிகக்கூர்மையாக கவனிக்க ஆரம்பித்த டார்வின் தனது குறிப்புகள், சான்றுகளை ஆராய்ந்து மறு பரிசீலனை செய்தார்.

பல்வேறு பாலூட்டிகளின் எலும்புக்கூடுகள் குறிப்பிடத்தக்க வகையில் ஒத்திருப்பதை விரிவாக ஆராய்ந்தார். அவற்றின் மூட்டெலும்புகள் ஒரே வரிசையில் இருப்பதையும், அவை வெவ்வேறு உயிரினங்களுக்கு ஏற்ற வகையில் மறுவடிவம் பெற்றதென்றும் கண்டறிந்தார்.

மேலும், விலங்குகள், பறவைகள் மீனினங்கள் ஆகியவற்றின் உயிர்க்கருக்களுக்கிடையே, கரு வளர்ச்சியிலிருந்த ஒற்றுமை, வேற்றுமைகள் டார்வினின் கவனத்தை ஈர்த்தன. ஒவ்வொரு உயிரினம், பேரினம், குடும்பம் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது உறுதியானது. மனிதனின் உடலமைப்பை ஒத்ததாக குரங்கின் உடலமைப்பு இருப்பதும் அவர் கவனத்தை ஈர்த்தது.

டார்வின் தமது காலத்தின் குதிரை, முயல், புறா, நாய் – பிராணி வளர்ப்பு ஆர்வலர்களிடம் கவனமாக தகவல்களை திரட்டினார். ஆதி ஓநாயிலிருந்து தோன்றிய நாய்களை தமது விருப்பத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப விதவிதமான நாய்களாக மனிதர்கள் உருவாக்கியுள்ளதை கண்டறிந்தார். அதாவது செயற்கை தேர்வின் (artificial selection) மூலம் மனிதர்கள் உயிரினங்களில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றனர்.

இதேபோல் ஏன் இயற்கையும் ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப ஒரு குடும்பத்திற்குள் வெவ்வேறு வகைகளை – தனித்தனி இனத்தை- உருவாக்கியிருக்கக் கூடாது? எனில் இயற்கைத் தேர்வை நிகழ்த்துவது யார்?

சமூக அறிவியல் துறையில் தவறான நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்ட ஒரு கருத்திலிருந்து உயிரினங்களின் தோற்றம் குறித்த டார்வினின் கோட்பாட்டுக்கு அடுத்த உந்துதல் கிடைத்தது.

காரலஸ் லின்னேயஸ்
காரலஸ் லின்னேயஸ்

தாமஸ் மால்துஸ் எழுதிய முதலாளித்துவ பிரிட்டனில் மக்கள் தொகை பெருக்கத்தின் அபாயங்களை பற்றிய கட்டுரையில், ‘மக்கள் தொகை பெருக்கம் தான் மக்களிடையே இடையறாது நடக்கும் போராட்டங்களுக்கான காரணம்’ என்றும் ‘உணவுப் பற்றாக்குறையும், நோய்களும் தவிர்க்கவியலாமல் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றன’ என்றும் கூறியிருந்தார். அதாவது ஏழைகள் பட்டினியில் வாடுவதும், நோய் வந்து சாவதும் இயற்கையின் (அல்லது இறைவனின்) திருவிளையாடல் என்று ஆளும் வர்க்கங்களின் சுரண்டலை நியாயப்படுத்துவதற்காக மத போதகராக இருந்த மால்துஸ் மக்கள் தொகை பற்றிய தனது கோட்பாட்டை முன் வைத்திருந்தார். முதலாளித்துவமும் அதற்கு முந்தைய வர்க்க சமூகங்களும் நிலவிய காலகட்டங்களில் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான மோதல்களும், உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலும் இயல்பான வளர்ச்சிக்கான காரணிகள் என்று கூறுவதுதான் மால்துசின் நோக்கம்.

ஆனால், மால்தூசின் கட்டுரைகளை படித்த டார்வின், அந்த மோசடியான கோட்பாட்டை, பல லட்சம் ஆண்டுகள் கால ஓட்டத்தில் உயிரினங்களிக்கிடையே இடையறாது நடக்கும் உயிர் பிழைத்திருப்பதற்கான உக்கிரமான போராட்டத்துக்கு வரித்துக் கொண்டார். உயிரினங்கள் பிழைத்திருப்பதற்கு தேவையான வளங்களும் சூழ்நிலையும் எல்லா உயிர்களுக்கும் சமமாகவும் வரம்பின்றியும் அமைவதில்லை. இயற்கை சூழ்நிலைகளில் உயிர்த்திருப்பதற்கான நிகழ்தகவு (probability) அனைத்து உயிர்களுக்கும் சமமானதாக இருப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் (Adaptation) போராட்டங்கள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்றன. இந்தப் போராட்டங்களில் தகுதியானவை  வாழ்கின்றன, தகுதியற்றவை சாகின்றன என்ற கருதுகோளை முன்வைத்தார்.

உயிரினங்கள் சூழ்நிலைக்கு தகவமைத்துக் கொள்வதன் மூலம் தமது உடல்கூறில் சிறு சிறு மாற்றத்தை பெறுகின்றன. இயற்கை உயிரினங்களை தகவமைத்துக் கொள்ள நிர்பந்திக்கிறது. அச்சூழ்நிலையில் உயிர்த்திருந்து, இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்றதான உடற் கூறுகளை பெற்றவை உயிர்த்திருந்தன, மற்றவை அருகி அழிந்தன. உயிர்த்திருந்தவை தாம் பிழைத்து வாழ்வதற்கு உதவிய தனிக்கூறை தமது சந்ததிகளுக்கு பாரம்பரிய பண்புகளாக கடத்தியதன் (Transfer) மூலம், படிப்படியாக வளர்ச்சியடைந்தன. இம்மாற்றங்கள் நிலைபெறுவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன என்ற கோட்பாட்டை வந்தடைந்தார். இவ்வறாக, “பரிணாமத்தை எளியதிலிருந்து சிக்கலானதாக வளரும் வளர்ச்சி விதி தீர்மானிக்கவில்லை. மாறாக தகவமைத்து (Adaptation) உயிர்த்திருக்கும் போராட்டங்களே தீர்மானிக்கின்றன” என்ற ”இயற்கை தேர்வு” கொள்கை உருவம் பெற்றது.

ஜார்ஜஸ் குவியர்
ஜார்ஜஸ் குவியர்

ஆதியில் தோன்றிய ஒரு உயிரே பிரிந்து சூழ்நிலைகளில் தம்மை தகவமைத்துக் கொண்டதன் மூலம் படிப்படியாக கோடானு கோடி உயிரினங்களாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் என சிந்தித்த டார்வின் தனக்கு முந்தைய அறிஞர்கள் முன்வைத்த ஏணிப்படி முறையிலான பரிணாம வளர்ச்சியை மறுத்து ஒரு புள்ளியில் தோன்றி கிளை கிளையாக பிரியும், மரத்தை போன்ற பரிணாம வளர்ச்சி பைலோஜெனிக் மர (phylogenic Tree) வரைபடத்தை வரைந்தார். இயற்கை தெரிவு கோட்பாட்டு முடிவுகளுக்கு வந்த பிறகும் கூட தனது கண்டுபிடிப்பை டார்வின் உடனடியாக வெளியிட்டு விடவில்லை.

அதே காலத்தில் ஆசிய கண்டத்தில் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வந்த மற்றொரு இயற்கை அறிவியலாளர் ஆல்பிரட் ரஸ்ஸல் வாலசும் (Alfred Russel Wallace) உயிரினங்களின் தோற்றம் பற்றிய அறிவியல் கொள்கையை உருவாக்க முயன்று வந்தார். அவருக்கும் டார்வினுக்கும் தொடர்பு ஏற்பட்டது, இருவரும் ஒருவருக்கொருவர் அறிவியல் தகவல்களை பரிமாறி உதவிக் கொண்டனர்.

1858-ம் ஆண்டு வாலஸ், டார்வினுக்கு ஒரு கடித்ததை எழுதினார். அக்கடித்தம் டார்வினை வியப்பில் ஆழ்த்தியது. அக்கடித்த்தில் வாலஸ் தனது பரிணாம கொள்கையை விளக்கியிருந்தார். அதில் வாலசும் தனது சொந்த முயற்சியில் ”இயற்கைத் தேர்வு” கொள்கையை முன்வைத்திருந்தார்.

டார்வின் மற்றும் வாலஸ் இருவரின் கோட்பாடுகளையும் லண்டன் லின்னியன் சங்கத்தில் சமர்ப்பிக்கும் ஏற்பாட்டை சார்லஸ் லயல் செய்தார். 1858-ம் ஆண்டு இருவரின் கோட்பாடுகளும் லின்னீயன் சமூகத்தில் வாசிக்கப்பட்ட போது ஆசிரியர்கள் இருவருமே அங்கு இல்லை; அவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கவுமில்லை.

ஓராண்டுக்கு பின் 1859-ல் டார்வின் பீகிள் பயணத்திலிருந்து பெற்ற சான்றாதாரங்களை கொண்டு எழுதப்பட்ட தனது புகழ் பெற்ற, “உயிரின்ங்களின் தோற்றம்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் மனிதனும் குரங்கும் ஒரே மூதாதை உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற கருத்தை வெளியிட்டார்.

மதவாதிகள் மூர்க்கத்தனமாக டார்வினை எதிர்த்தனர். டார்வினை, குரங்காகவும் சாத்தானாகவும், பைத்தியமாகவும் சித்தரித்தனர்.

டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு எதிராக கடவுள் படைப்புவாதத்தை தூக்கிப் பிடித்தவர்களுக்கு முன்னோடியாக பிரிட்டனைச் சார்ந்த வில்லியம் பேலீ இருந்தார். அவர் ஒரு கடிகாரத்தில் உள்ளடங்கிய சிக்கலான உள்பாகங்களுக்கு ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் (Intelligent Designer) தேவைப்படுவது போன்றே சிக்கல் நிறைந்த முழுமையான உயிரமைப்புகளுக்கு ஒரு வடிவமைப்பாளர் நிச்சயம் இருக்க வேண்டும் என்று வாதிட்டார். இன்றும் இசுலாமிய, கிருத்தவ மதவாதிகள் இவ்வாறே வாதிடுகின்றனர்.

மனிதன் அறிவார்ந்த வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டிருந்தால், மனிதக் குழந்தை பிறக்கும் போதே ஏன் வளர்ச்சியடைந்த மனிதனைப் போல் நடப்பது, பேசுவது, சிந்திப்பது போன்ற செயல்களை செய்வதில்லை?

ரிச்சர்ட் ஓவன்
ரிச்சர்ட் ஓவன்

மதவாதிகள் மட்டுமின்றி ஓவன் போன்ற அறிவியலாளர்களும் டார்வினின் கோட்பாட்டை ஏற்கவில்லை. அவர் எல்லா உயிரினங்களும் ஒரே ஆதி உயிரிலிருந்து தோன்றியதெனில், ஒவ்வொரு உயிரினத்திற்கும் இடைப்பட்ட இணைப்பு சங்கிலி அறுந்திருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். பிற்காலத்தில் ஓவன் பறவையும் மீனும் சேர்ந்த கலவையாக இருந்த ஆர்ச்சியோபெட்ரிக்ஸ் (Archaeopteryx) புதைபடிவத்தை கண்டுபிடித்தார். பெரும்பாலான இணைப்பு கண்ணி உயிரினங்கள் – மூதாதை உயிரினங்கள் அருகி அழிந்திருக்கின்றன என்பது தெரிய வந்தது. தொல்லுயிர் ஆய்வாளர்கள் அவற்றை புதைபடிவ சான்றுகளாக கண்டறிந்து வருகிறார்கள்.

மேலும், தென்னமெரிக்க அமேசான் காடுகளில் வாழும் ஹோட்ஜின் (hoatzin) பறவை ஆர்ச்சியோபெட்ரிக்சைப் போலவே தனது காலில் உள்ளதைப் போன்ற கூர் நகங்களை இறக்கைகளின் நுனியிலும் கொண்டிருக்கின்றன. கிழக்கு ஆஸ்திரேலிய காடுகளில் வாழும் பிளாட்டிபஸ் (platypus) என்னும் பாலூட்டி வியத்தகு வகையில் பல விலங்குகளின் கலவையாகவும், பாலூட்டி மற்றும் ஊர்வனவற்றின் கலவையாகவும் இருக்கிறது. இவை தான் அழியாமல் இன்று உயிருடன் இருக்கும் இணைப்பு சங்கிலிகள்.

டார்வினுக்கு பிறகு 20-ம் நூற்றாண்டில் கதிரியக்க தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தனிமங்கள் இயற்கையாகவே கதிரியக்கத்தின் மூலம் ஆற்றலை தொடர்ந்து வெளியிட்டு நிறையை இழக்கின்றன. இத்தனிமங்கள் தமது அணுநிறையில் பாதியளவை இழப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம் ‘அரை ஆயுட்காலம்’ எனப்படுகிறது.

புவியின் பாறை அடுக்குகளில் உள்ள கரிம பொருட்களின் அரை ஆயுட்காலத்தை கணக்கிடுவதன் மூலம் பாறைகளின் வயதை கண்டறிய கரிமக் காலக்கணிப்பு நுட்பம் உருவாக்கப்பட்டது. இக்கணக்கீட்டு முறையின் மூலம் தொல்லுயிர் எச்சங்களின் வயதை அறிவியலாளர்கள் கணக்கிடுகின்றனர். இவற்றின் மூலம் பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என்றும், நுண்ணுயிர்கள் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின என்றும் கண்டறிந்துள்ளனர். சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையிலும் நுண்ணுயிர்களே பூமியில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் அதன் பின்னரே படிப்படியாக உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியடைந்ததாகவும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். டார்வின் முன்வைத்த படிப்படியான மாற்றம் ஏற்பட தேவையான நீண்ட காலக்கெடு இயற்கை வரலாற்றில் இருந்தது கண்டறியப்பட்டு விட்டது.

சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்து பெற்ற மாற்றங்கள் பாரம்பரிய பண்புகளாக எவ்வாறு தலைமுறை தலைமுறையாக சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன என்பதை விளக்குவதற்கு டார்வின் காலத்தில் அறிவியல் போதுமான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.

ஆனால், டார்வினுக்கு பின்னர் உயிரியல் துறை பல முன்னேற்றங்களை அடைந்து குரோமோசோம்களினுள் உள்ள மரபணுக்களின் மூலம் பாரம்பரிய பண்புகள் சந்ததிகளுக்கு கடத்தப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

history_bar2நாம் அறிந்தவற்றில் மிகச்சிறிய பாக்டீரியாவான மைக்ரோ பிளாஸ்மா ஜெனிட்டலியம் சுமார் 400-க்கும் மேற்பட்ட மரபணுக்களை கொண்டுள்ளது. எளிமையான உடலமைப்பை கொண்டிருக்கும் நாடாப்புழுவில் சுமார் 16,000 மரபணுக்கள் இருக்கின்றன. மனித உடலிலோ சுமார் 30,000 மரபணுக்கள் மட்டுமே இருக்கின்றன.

டார்வின் தனது இயற்கை தெரிவுக்கு உயிரினங்களுக்கிடையிலான ஒற்றுமையை மட்டும் கணக்கில் கொள்ளவில்லை. வேற்றுமையையும் கணக்கிலெடுத்துக் கொண்டே பரிணாம மர வரைபடத்தை உருவாக்கினார்.

1990-களில் பல்வேறு உயிரினங்களின் மரபணுக்களை குறிநீக்கம் செய்து படியெடுத்து வைக்கும் திட்டங்கள் துவக்கப்பட்டன. 2000-ம் ஆண்டு கிரேக் வெண்டர் என்ற ஆய்வாளரும் அவரது குழுவினரும் மனித மரபணுக்களை குறிநீக்கம் செய்தனர். இவ்வாய்வுகள் டார்வினின் பரிணாம மரத்தை (வரைபடத்தை) சரியென்று நிருபிக்கின்றன. உதாரணமாக மனிதனுக்கும் சிம்பன்சி குரங்குகளுக்கும் இருக்கும் மரபணு வேறுபாடு 0.2% மட்டுமே (ஆயிரத்தில் 2 பங்கு).

இன்றும் பரிணாம வளர்ச்சியை மறுக்கும் மதவாதிகள் டார்வினுக்கு முந்தைய பரிணாம கோட்பாடுகளில் இருந்த குறைபாடுகளை முன்வைத்தே கேள்வியெழுப்புகின்றனர். உதாரணமாக எல்லா குரங்கும் ஏன் மனிதனாகவில்லை? இப்போது ஏன் குரங்கு மனிதனாக மாறுவதை நாம் காண முடியவில்லை. பரிணாமம் தற்போது ஏன் நிகழவில்லை? போன்ற கேள்விகள் ஏணிப்படி வடிவிலான பரிணாம வளர்ச்சியை மனதிற்கொண்டு 19-ம் நூற்றாண்டிலேயே கேட்கப்பட்டு டார்வினின் கோட்பாட்டால் விளக்கம் அளிக்கப்பட்டு விட்டவைதான்.

மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடையவில்லை. மாறாக ஒரு பொது மூதாதை உயிரினத்திலிருந்து மனிதனும் குரங்கும் இயற்கை தெரிவின் மூலம் மாற்றமடைந்து வெவ்வேறு உயிரினங்களாக மாறின. மேலும் மாற்றங்கள் சிறுக சிறுக படிப்படியாக நடக்கின்றன. அவை பரிணாமத்தில் பிரதிபலிக்க ஆயிரத்தில் தொடங்கி இலட்சம் கோடிக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகலாம். அதனால் தான் நம்மால் அவற்றை கண்டுணர இயலவில்லை.

மேலும் பூச்சிக் கொல்லிகளில் இருந்து தம்மை தகவமைத்து பாதுகாத்துக் கொள்ளும் பூச்சிகள், கொசு மருந்துகளால் பாதிப்படையாத கொசுக்கள் என இன்றும் தகவமைத்தல் நடந்து கொண்டுதானிருக்கிறது.

இயற்கை தெரிவு அதுவரை நிலவிவந்த மதவாத முகாம்களைச் சேர்ந்த கருத்துமுதல்வாத மற்றும் இயக்கமறுப்பியல் தத்துவ, சிந்தனை முறைகளுக்கு சம்மட்டி அடி கொடுத்து குப்பைக்கு வீசியெறிந்ததுடன் அறிவியல் பூர்வமான இயக்கவியல் பொருள்முதல்வாததிற்கு நிருபணமாகவும் இருக்கிறது.

ஆனால் இன்றும் மதவாதிகள் பரிணாமம் என்பது டார்வின் முன்வைத்தது ஒரு கோட்பாடே அன்றி உண்மை அல்ல என்கின்றனர். பரிணாமம் என்பது இயற்கையில் நடக்கும் எதார்த்த உண்மையாகும். இயற்கை தெரிவு என்பதே டார்வின் முன்வைத்த கோட்பாடாகும்.

முன்னர் டார்வினை மூர்க்கமாக எதிர்த்த கத்தோலிக்க பாதிரிகள், இன்று அனைத்து உயிர்களுக்கும் மூதாதையான ஆதி உயிரிலிருந்தே தோன்றின என்ற பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாகவும், அந்த ஆதி உயிரை படைத்தது தங்களது கடவுள் தானென்று வெட்கமின்றி கூறிக்கொள்கின்றனர்.

வேத காலந்தொட்டு தனது ஒடுக்குமுறை கோட்பாடுகளை கைவிடாமலேயே எதிர் மரபுகளை உள்வாங்கியும், அழித்தும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வரும் சனாதான மதமோ இவை அத்தனையும் பத்து அவதாரங்களின் மூலம் அன்றைக்கே சொல்லப்பட்டு விட்டதாகவும் இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளனைத்தும் தங்களது இந்து தத்துவ மரபை நிருபணம் செய்யும் சான்றாதாரங்களே என்றும் வழமைபோலவே பித்தலாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இசுலாமியர்களும் குரானின் வசனங்களுக்கும் அறிவியியல் கண்டுபிடிப்புகளுக்கும் முடிச்சு போட்டு எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டதாக தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அதாவது எல்லா மதவாதிகளும் இயற்கையில் இல்லாத தங்களது இருத்தலுக்கான வாய்ப்புகளை அறிவியலிடம் திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு சமாளிக்க முயல்கின்றனர்.

மற்றொரு புறம் டார்வினின் பரிணாமக் கொள்கையை குறுக்கித் திரித்து வறட்டுத்தனமாக சமூகத்திற்கு பொருத்துகின்றனர் சிலர். 18-ம் நூற்றாண்டில் மால்துஸ் தமது கட்டுரைகளில் அன்றைய முதலாளித்துவ சமூகத்தில் நிலவிய பட்டினிச்சாவுகள், வேலையின்மை போன்ற கொடூரமான ஏற்றத்தாழ்வுகளை இயற்கை நியதியாக முன்வைத்து மனித சமூக வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலச்சூழலில் உருவான முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீழ் நிலவிய சமூக அவலங்களை எக்காலத்திற்கும் பொருந்தும் இயற்கை விதியாக்கி சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் முட்டுக்கொடுத்தை, சமூக வரலாற்றின் இயக்க விதிகளை கண்டறிந்த மார்க்ஸ் அம்பலப்படுத்தினார்.

நவீன மால்தூசியர்கள் இன்றும் கூட தகுதியானவை பிழைத்திருக்கும், வலியவை உயிர்வாழும் போன்ற டார்வினுடைய கோட்பாட்டை கொண்டு முதலாளித்துவ சுரண்டலையும் ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்துகின்றனர்.

தகுதியான பண்புகளை சந்ததிக்கு கடத்தும் மரபு விதிகளை செயல்முறைபடுத்தி தகுதியற்றவை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதை தடுப்பதாக கூறி இனப்படுகொலைகளும் கூட நியாயப்படுத்தப்படுகின்றன. டார்வினின் கோட்பாட்டை பின்பற்றியே நாஜிக்கள் ஆரிய இனத்தின் புனிதப்பண்புகளை உயர்த்துவதற்காகவும் பரவலாக்குவதற்காகவும் இரண்டாம் உலகப்போரின் இனப்படுகொலைகளை நடத்தியதாகவும் அவதூறு பரப்பப்படுகிறது.

இயற்கையை கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை மனிதன் தனது செயல்பாடுகளால் தீர்மானித்து மாற்றியமைக்கும் சமூக நிகழ்வுகளுக்கு பொருத்துவதும், டார்வினின் இயற்கை தெரிவு கோட்பாட்டிற்கும் நாஜிக்களின் இனப்படுகொலைக்கும் முடிச்சு போடுவதும், டார்வினின் கோட்பாடுகளை பற்றிய அறிவீனம் மட்டுமின்றி திட்டமிட்ட அவதூறுமாகும்.

டார்வின் முன்வைத்த இயற்கை தேர்வு கோட்பாட்டில் எவ்வித புனித பண்புகளையும் குறிப்பிடவில்லை. உயிர்கள் சூழ்நிலையில் உயிர்த்திருப்பதற்கு தம்மை தகவமைத்துக் கொள்ளும் பண்புகளை, உயிர்கள் அப்பண்புகளை பெறுவதற்கு இயற்கை நிர்பந்திப்பதாகவும் தான் கூறினார். இனப்படுகொலையாளர்கள் இயற்கை தெரிவு கோட்பாட்டை பின்பற்றவில்லை, மாறாக செயற்கை தெரிவு நடைமுறையையே பின்பற்றுகின்றனர், அத்தகைய நடைமுறைகள் இயற்கையானவை அல்ல, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இயற்கை தெரிவை மறுக்கும் கடவுள் படைப்பு கோட்பாடும் கூட ஒருவகையில் இத்தகைய செயற்கை தெரிவு நடைமுறையே என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதனுடைய சமூக ரீதியான போராட்டத்தில் இயற்கைத் தேர்வின் பங்கான கூட்டுழைப்புதான் முக்கிய பங்காற்றியிருக்கிறது. இந்தக் கூட்டுழைப்புதான் பல்வேறு அனுபவங்களை பெற்று, தொகுத்து, ஆய்வு செய்து, புதியவற்றை கண்டுபிடித்து சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இறுதியில் இந்த இயற்கைத் தேர்வு தன்னுணர்வு  பெற்று உணர்வுபூர்வமாக அதை முன்னெடுக்கும் போராட்டத்தினை நடத்துகிறது.

இன்றைக்கு இயற்கைத் தேர்வும் அது சார்ந்த பரிணாமும் மனிதனின் புரிதலுக்குள் வந்து விட்டபடியால் அதில் மனித அறிவும் இனி வினையாற்றும். அதாவது உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் குறித்த செயல்பாடுகளில் மனிதனின் அறிவு பாரிய மாற்றத்தை கொண்டு வரும், வந்திருக்கிறது. ஒட்டு ரக விதைகள், குளோனிங், பிராயலர் கோழி, லெக்கான் கோழி, சீமைப் பசு என்று அதற்கு ஏராளம் சான்றுகளைக் கூறலாம். எதிர்மறையில் இவை உயிரியில் ஆயுதங்களாகவும் ஏகாதிபத்தியங்களின் கைகளில் இருக்கின்றது. அதே நேரம் இப்போதும் போராட்டத்திற்கான களம் நின்றுவிடவில்லை. மனித சமூகத்தில் இருப்பவனும், இல்லாதவனும் பிரிந்து கொண்டு சண்டை போடுகிறார்கள். இந்த சண்டையில் ஏழைகள் அல்லது உழைக்கும் மக்கள் வெற்றிபெறுவார்கள் என்பதை அறிவியல் உண்மையாக மார்க்சியம் நிறுவியிருக்கிறது. அப்போது இயற்கைத் தேர்வும் அது உருவாக்கிய மனிதனின் செயற்கைத் தேர்வும் இணைந்து பொது நலனின்பாற்பட்டு ஒரு உன்னத இயற்கை அமைப்பை காப்பதற்கு வேலை செய்யும். அப்போது டார்வின் விதித்திருந்தபடி இயற்கைத் தேர்வில் தோற்க இருக்கும் உயிரினங்கள் கூட காக்கப்படும்.

இது டார்வினின் கோட்பாட்டிற்கு மாறானதல்லவா என்று சிலர் கேட்கலாம். இல்லை. இயற்கை தன்னைத் தானே அறியாமல் காப்பாற்ற முயற்சி செய்ததற்கும், தன்னை அறிந்து கொண்டு காப்பாற்ற முயற்சி செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. அதாவது ஒட்டு மொத்த இயற்கையும் கூட எளிமை எனும் இயக்கத்திலிருந்து சிக்கல் எனும் வளர்ச்சியை நோக்கி மாறுகிறது. அனிச்சை முயற்சிகள் திட்டமிட்ட முயற்சிகளாக மாறுகின்றன. இறுதியில் கடவுளை படைத்த மனிதனே இயற்கையின் பாதுகாவலனாக மாறுகிறான். இதற்கு டார்வின் போன்ற அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ள இயற்கை அறிவியல் மட்டும் போதுமானதல்ல. சமூக அறிவியலான மார்க்சியத்தின் புரட்சிகள் தேவைப்படுகிறது.

– மார்ட்டின்

மேலும் படிக்க

  1. பின்னூட்டப் பெட்டி தவறுதலாக மூடப்பட்டிருந்தது, சரி செய்யப்பட்டுவிட்டது.சிரமத்திற்கு வருந்துகிறோம்.

  2. சிறப்பான கட்டுரை எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும். தமிழில் இதுபோன்று அறிவியல் கட்டுரைகள் அதிகம் வெளி வர வேண்டும். எம்பெருமான் லினேயஸ் தொடங்கி பரிணாம வளர்சிக் கோட்பாட்டு வரலாறு அழகாக சொல்லப் பட்டுள்ளது. இக்கோட்பாடு பற்றி இன்னும் சற்று விவரமாக சொல்லி இருக்கலாம் என தோன்றுகிறது.

    // பறவையும் மீனும் சேர்ந்த கலவையாக இருந்த ஆர்ச்சியோபெட்ரிக்ஸ் (Archeopteryx)

    பறவையும், பல்லியும் (அல்லது டைனசார்) சேர்ந்த கலந்த கலவை என்று இருக்க வேண்டுமே.

    நானும் அறிவியல் பற்றி எழுத வேண்டுமென்ற நப்பாசையில் சில வார்த்தைகள். மீனுக்கும், பறவைக்கும் மிகுந்த வித்தியாசமுண்டு. இவற்றின் கலவை என்று ஒன்று இருக்க வாய்ப்பில்லை. மீன்கள் external fertilization மூலம் இனவிருத்தி செய்பவை. அவற்றின் embryo பாதுகாப்புக் கவசம் ஏதும் அற்றவை. மறுபுறம், பல்லிகளும், பறவைகளும் amniotes என்ற பிரிவின் கீழ் வரும். இவற்றின் embryo, முட்டைக்குள் பாதுகாப்பாக பாதுகாப்பாக இருக்கும்!

    எந்தை கிரிகோர் ஜோஹன் மெண்டல் பெயரைக் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்களே! பரிணாம வளர்சிக் கோட்பாட்டுக்கு மிக முக்கிய விஷயமான discrete hereditary packets என்ற கோட்பாட்டுக்கு வித்திட்டவராயிற்றே!

  3. அறிவியல் பற்றி தமிழில் எழுத வேண்டும் என திடீரென தோன்றியுள்ள வெறியினால், எம்பெருமான் கிரிகோர் ஜோஹன் மெண்டலை முன்வைத்து சில விஷயங்கள்.

    டார்வின் கோட்பாட்டுக்கு அவரது காலத்தில் எழுந்த ஒரு முக்கிய எதிர்க் கேள்வி ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு ஒரு பண்பு கடத்தப் படும்போது அது நீர்த்துப் போய்விடும் என்பது. ஒரு எளிமைப் படுத்தப்பட்ட உதராணம். ஒரு சமூகத்தில் உள்ள அனைவரும் குட்டை என வைத்துக்கொள்வோம். எப்படியோ ஒருவர் அதிசயமாக நெட்டையாக பிறக்கிறார் என வைத்துக் கொள்வோம். இந்த நெட்டைத்தனம் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட வேண்டும். அப்போதுதான், மேலும் பல நெட்டை மனிதர்கள் உருவாகி, “நெட்டை மனிதர்கள்”, “குட்டை மனிதர்கள்” என இரண்டு இனங்களாக பிரிய முடியும். ஆனால், பெரும்பாலோர் குட்டை என்பதால், ஒரு நெட்டை மனிதரின் இணை (mating partner) குட்டையாக இருக்க அதிக சாத்தியம் இருக்கும். இப்படி நெட்டை மனிதர் ஒரு குட்டை மனிதரோடு இணைந்தால், பிறக்கும் பிள்ளை இரண்டும் கலந்து மத்திம உயரத்தில் பிறக்கும். எனில், நெட்டைத்தனம் என்ற நவீன குணம் (novelty) அடுத்த சந்ததிக்கு கடத்தப் படாமல் நீர்த்து விடுகிறது. எனில், புதிய இனங்கள் எவ்வாறு உருவாகும்?

    இங்கே தான் வருகிறார் மெண்டல். எளிமையாய் பேசுவோம். அவர் பட்டாணி செடிகளை வைத்து ஒரு ஆய்வு செய்தார். நூறு நெட்டை செடிகளை, நூறு குட்டை செடிகளோடு இணைத்து ஒரு ஆய்வு செய்தார். மேலே சொன்ன எதிர்கேள்விப் படி நூறு மத்திம உயரம் கொண்ட செடிகள் பிறந்திருக்க வேண்டும். அனால், பிறந்ததோ 75 நெட்டை செடிகளும், 25 குட்டை செடிகளும். எனில், நெட்டையும், குட்டையும் சேர்ந்தால் பிறக்கும் செடி ஒன்று நெட்டையாக இருக்கும், அல்லது குட்டையாக இருக்கும் எனத் தெரிகிறது. மத்திமமாக இருக்காது. கருப்பும், வெளுப்பும் சேர்ந்தால் பழுப்புதானே கிடைக்கும். ஆனால், இன விருத்தி என வரும்போது, ஒன்று வெள்ளை அல்லது கருப்பு என்பதே நிலை. வைச்சா குடுமி, சரைச்சா மொட்ட. ஏன் ஒரு ஜோடி நெட்டை-குட்டை சேரும்போது நெட்டையும், மற்றொரு ஜோடி நெட்டை-குட்டை சேரும்போது குட்டையும் பிறக்கிறது? அது என்ன 75-25 பங்கீடு? இதற்கான விடைகள் பின்னாளில் genetics துறை வளர்ந்த பின்பு கண்டறியப்பட்டன. இவ்வாறு இரு எதிர் பண்புகள் இணையும் போது, இரண்டும் கலந்து நீர்த்துப் போகாமல், ஏதாவது ஒன்று மட்டுமே நிலைக்கும், என்ற discreteness டார்வின் கோட்பாட்டுக்கு முக்கிய விஷயம்.

    அடுத்த பதிவில் மெண்டலை முன்வைத்து ஒரு சொந்தக் கருத்து.

    • Venkatesan,

      Thanks for your simple explanation about Mendelian inheritance.
      உங்களை போலுள்ளவர்கள் காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட எங்களை போன்றவர்களுக்கு எளிமையாக புரிய வைப்பதற்காக எழுதினால்/விளக்கினால் நாங்கள் இன்னும் பயனடைவோம்.

      ஒரு கேள்வி, அறிவியியலை எளிமையாக புரிந்துகொள்ளும், விளக்கும் உங்களுடைய இந்த பண்பு தனிசிறப்பானதா? அது எப்படி உங்களுக்கு கைவரப்பெற்றது? மரபுவழியாகவா?
      இதற்கும் சாதி படிநிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?

      • ஆஹா, ஒரு பக்கம் பாத்தா என்னைய வெச்சு காமெடி, கீமடி பண்ண பிளான் பண்றாப்ல இருக்கு. இன்னொரு பக்கம் பாத்தா, ஒரு சின்னப் பையன், வடிவேலுவை ஊரெல்லாம் ஓடவிட்டு வேனுக்குள்ள வரச்சொல்ற சினிமா காட்சி ஞாபகத்துக்கு வருது. ஒன்னும் சரியாப் படலையே! ம்ம்ம்ம்.

        அழகான கட்டுரைக்கு, ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா இருக்கட்டுமேன்னு, சும்மா ஒரு ஆர்வத்துல எழுதினது அது. அதுல இருக்குற விஷயம் கிட்டத்தட்ட எல்லா வினவு வாசகர்களுக்கும் தெரியும்னு தான் நெனைக்கிறேன்.

        அந்தப் பத்தி எளிமையா இருக்க வேறொரு காரணம் இருக்கு சார். நெறையப் படிச்சு, ஆழமா சிந்திச்சா மூளை கொழம்பிடும். விக்கிபீடியா படிச்சிட்டு, அவ்வளவுதான் மேட்டர்னு மூடி வெச்சுட்டு, தைரியமா பேச ஆரம்பிச்சோம்னா, எல்லாம் எளிமையா போயிடும். அதுதான் தொழில் ரகசியம்!

  4. குரானை படிச்சிருக்கியா, இஸ்லாத்தை பற்றி உனக்கு என்ன தெரியும் – என்று மயிர் பிளக்கும் விவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமிய மதவாதிகளும் கூட டார்வின், இயற்கை தெரிவு, உயிரினங்களின் தோற்றம் – இவற்றை பற்றி தெரிந்து கொள்ளாமல், எந்த அறிவும் இல்லாமல் குருட்டுத் தனமாக எதிர்க்கின்றனர்.
    கூகிளில் தேடினால் டார்வினை எதிர்த்து அவதூறு செய்து பல கட்டுரைகள் கிடைக்கின்றன. இவர்களில் யாரும் இயற்கை தெரிவு, உயிரினங்களின் தோற்றம் – இவற்றை பற்றி தாங்களே சொந்தமாக படித்ததாக தெரியவில்லை. எல்லாம் Copy-Paste வகையை சேர்ந்தவை தான்.

    ஆப்பிரகாமிய மதவாதிகள் வைக்கும் – Intelligent Design உட்பட அனைத்து படைப்பு கொள்கையின் வரலாற்றை, பரிணாமத்தை இந்த Link ஓரளவுக்கு விளக்குகிறது :
    http://ncse.com/creationism/general/creationism-past-present

  5. இவ்வாறு டார்வின் கோட்பாட்டு குப்புற விழுந்து குழிக்கு போகாமல் இருக்க ஒரு முக்கிய பங்காற்றிய எம்பெருமான் கிரிகோர் ஜோஹன் மெண்டல் ஒரு கத்தோலிக்கப் பாதிரியார்.

    என்ன சொல்லவருகிறேன் என்றால், அறிவியல் ஈடுபாடும், மத நம்பிக்கையும் பிரிந்துதான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இரண்டையும் வைத்துக் கொள்ளலாம். ஒன்றை, ஒன்று குறிக்கிடாமல் பார்த்துக் கொண்டால் போதும்.

    காலையில் குறுந்தாடி, சோடா பாட்டில் கண்ணாடி அணிந்து அறிவியல் பேசலாம். “இரண்டு மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, தகுந்த சூழ்நிலைகள் அமைந்ததால் உருவான நியூக்ளிக் அமிலங்களே உயிர்கள் உருவானதின் ஆதி ஆரம்பம்”.

    ஆஹா அற்புதம், அற்புதம்!

    மாலையில், தாடியை மழித்து விட்டு, கண்ணாடியை கழட்டி விட்டு, நெற்றியில் நெடுக்காக பட்டை அடித்துக் கொண்டு, உயிர்கள் எவ்வாறு தோன்றின என்பதற்கு எம்பெருமான் நம்மாழ்வார் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.

    “ஒன்றும் தேவும் உலகும் உயிர்களும் யாதுமிலா
    அன்று, தேவருலகோடு உயிர் படைத்தான்
    குன்றம் போல் மணிமாட நீடு திருக்குருகூர் அதனுள்
    நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே!’

    ஆஹா, அற்புதம், அற்புதம்!

    நம்மாழ்வார் சொல்லி விட்டாரே என்பதற்காக “மற்றைத் தெய்வம் நாடுதிரே” என்பதை சீரியசாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. திருநெல்வேலியில் இருந்து அரை மணி நேரப் பயணத்தில், திருக்குருகூர் பார்த்து விட்டு, திரும்பி வந்து, நெடுக்குப் பட்டையை அழித்து விட்டு, குறுக்குப் பட்டை போட்டுக் கொண்டு, நெல்லையப்பரை பார்க்க கிளம்ப வேண்டியதுதான். எம்பெருமான் திருஞானசம்பந்தர் பாடுகிறார் பாருங்கள்.

    “முந்திமா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவே
    உந்திமா மலரடி ஒரு விரல் உகிர்நுதியால் அடர்த்தார்
    கந்தமார் தருபொழின் மந்திகள் பாய்தர மதுத்திவலை
    சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே”

    ஆஹா, அற்புதம், அற்புதம்!

    டொமேடோ சாஸ் தொட்டுக் கொண்டு ஆனியன் ரிங்கஸ், கெட்டி சட்னி தொட்டுக் கொண்டு மொளகாய் பஜ்ஜி, எலுமிச்சை பிழிந்து பேல் பொரி! எதற்கு ஏதாவது ஒன்று என்று என நிறுத்துக் கொள்ள வேண்டும். எல்லாத்தையும் சாப்பிட வேண்டியதுதான். நீர்க்குமுழி போன்ற வாழ்வில், தீ சுடும் முன், எல்லாவற்றையும் அனுபவிப்போம். எல்லாரும் இப்படி செய்ய வேண்டும் என சொல்லவில்லை. விருப்பமுள்ளோர் செய்யலாம்!

    மற்ற கட்டுரைகள் நூறு, இருநூறு மறுமொழிகள் பெற்று இருக்கும் போது, இந்தக் கட்டுரை மட்டும் அனாதையாய் கிடைக்கிறது. எனவே, நிறைய மறுமொழிகள் நாமே எழுதுவோம் என திட்டம். அவ்வகையில், அடுத்து வருவது, டார்வின் கோட்பாடு மீது கணிதவியல் நோக்கில் ஒரு அதிபயங்கர விமர்சனம். Don’t miss it!

    • அறிவியல் ஈடுபாடும் மதநம்பிக்கையும் பிரிந்து தான் இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை- வெங்கடேசன்.

      மதநம்பிக்கையும் அரசியலும் வேறானவை-முரண்னானவை.அரசியலில் பாதி மதம்தான் உருவகப் படுத்துகிறது
      இப்படிப் பார்க்கும் போது அரசியல் அறிவியல் கோட்பாடுகளில் இருந்து வெளிவருகிறது.

      அப்படியா? திரு வெங்கட் அவர்களே!.மாக்ஸியம் எல்லாம் அறிவியலில் சேர்கமுடியாதா? பதில் தருவீர்களா?

    • இடைமறிப்பதற்கு மன்னிக்கவும் தோழர்களே. திரு. வெங்கடேசன் அவர்களின் விளக்கம் அருமை. ஆனால் எல்லாம் கறுப்பும் வெள்ளையுமாகவே இயற்கையில் இருப்பதில்லை. பழுப்பும் உண்டு. மேம்பட்ட மற்றும் பின்னடைந்த ஆகிய இரு மரபுக்கூறுகளை தவிர்த்து இணைமேம்பட்ட( தமிழாக்கத்திற்கு மன்னிக்கவும்.) என்னும் கூறும் உண்டு. உதா… ஏ , மற்றும் பி குருதி வகைகள்.

      75+25 என்பதல்ல கணக்கு, 25+50+25 என்பதுதான் இயற்கையின் கணக்கு. அதிலும் PENETRATION, VARIANCE ஆகியன உண்டு. அதனால் 25+50+25 என்பதும் பகுக்கக் கூடியதே.

      மனிதனும் காணக்கூடிய அளவில் பரிண்மித்து உள்ளான். ஆப்பிரிக்காவில் மலேரியா ஒரு உயிர்கொல்லி நோய். சிக்கிள் செல் நோய் ஒருமரபுசார் மனிதநோய். அமெரிக்க கறுப்பரிடையே அந்நோய் குறைவாகவும் ஆப்பிரிக்காவில் அதிகமாகவும் காணப்படுகிறது. சிக்கிள் செல் இருப்பின் உயிர்வாயுவை ரத்த அணுக்கள் கடத்தும் திறன் மிகவும் மட்டுப்பட்டு குழந்தை பருவதிலேயே உயிரிழக்க நேரிடுகிறது. ஆனால் மலேரியா அதிகம் உள்ள பகுதிகளில் சிக்கிள் செல் ட்ரைட் உள்ளோர் இயற்கையால் தெரிவு செய்யப்படுகின்றனர். ஏனெனில் நோயற்ற குழந்தைகள் மலேரியாவால் பாதிக்கப்படுவர். இறப்பர். சிக்கிள்செல் நோயுள்ளோர் அதன் காரணமாய் மரிப்பர். ட்ரைட் உள்ளோரின் ரத்தத்தில் சிறியாளவாய் சிக்கிள் செல் இருக்கும், அவற்றையே மலேரியா தாக்கும். உடலுக்கு அந்த அணுக்களால் பலனில்லையென்பதால் கணையத்தில் அவை அழிக்கப்படும். மலேரியா அதனால் உடலில் பாரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாமல் அழியும். இம்மனிதர்கள் இனப்பெருக்க வயதை எட்டுகின்றனர், குழந்தை பெறுகின்றனர். அவை நோயுள்ளவையாக இருந்தால் நோய் கொல்லும், அற்றவையாக இருந்தால் மலேரியா கொல்லும். ட்ரைட் உள்ள குழந்தைகளே தப்பிப்பிழைக்கும்.

      மலேரியா என்பது ஒரு சமூக நோய். ஒழிக்கப்பட செலவற்ற சில மருந்துகளே போதுமானது. ஆனால் அது ஆப்பிரிக்காவில் இன்னும் ஒழிக்கப்படவில்லை.

      H – normal hemoglobin gene.
      S – sickle cell gene.
      HH – normal
      SS – sickle cell
      SH – sickle cell trait.

  6. வெங்கேடசன் அவர்களுக்கு,

    அறிவியலையும் பக்தியையும் காக்டெயிலாக கலந்து தருவதில் பின்னி எடுக்கிறீர்கள். ஒழுங்காய் வாசித்தால் கலக்கக் கூட சொல்லவில்லை. அது ஒரு புறம்; இது ஒரு புறம் என்று பக்தியையும் அறிவியலையும் அனுபவிக்க வார்த்தைகளையும் பாசுரங்களையும் செதுக்கித்தருகீறிர்கள். நம்பெருமான் ஜோகன் மெண்டலையும் விட்டால் மெண்டலாக்கி விடுவீர்கள் போல்தெரிகிறது.

    ஆனால் பாருங்கள் அயின் ராண்டிலின் அகநிலைவாதத்திற்கும் இந்து மதத்தின் அகம்பிரம்மாஸ்மிக்கும் ஒரு க்ளோஸ் கனெக்சன் உண்டு. அது சுரண்டலுக்கு முட்டுக் கொடுப்பதாகும். ஆன்மீக இச்சைகளை பரலோகத்துடன் இணைப்பது என்பது ஒருவகை; தனித்துப் பிரித்து பிராக்டிஸ் செய்வது என்பது ஒருவகை. தாத்பாரியமோ தத்துவமோ இவையெல்லாம் கொச்சைப் பொருள்முதல் வாதங்கள். ஆங்கிலத்தில் சொன்னால் Vulgar Materialism. சும்மா சொன்னா பத்தாது; அது எப்படி என்றும் சொல்லவேண்டும் இல்லையா?

    பக்தியை பலநேரங்களில் ஜாலியான விசயங்களாக பார்க்கிறீர்கள். ஆனால் ஒன்றை நீங்கள் பரிசிலீக்க வேண்டும். உங்களைவிட (அதாவது அறிவுஜூவிகளை) விட மக்கள் பக்தியை பக்தியாகவெல்லாம் பார்க்கவில்லை.

    நூற்றியெட்டு திவ்விய தேசங்களை தரிசிப்பது உங்களுக்கு விழுமியமாக இருக்கிற பொழுது எள் தீபம் ஏற்றினால் என் கவலை தீராதா என்று ஏங்குகிற பக்தர்களுக்கு அறிவியலோ ஆன்மிகமோ என்ன பதில் சொல்கிறது என்பதை தாங்கள் கணக்கில் எடுக்க வேண்டும். ஏனெனில் கணக்கு உங்களுக்கு அப்பாற்பட்ட விசயமல்ல.

    தனிமனுஷா பகவான ஜீவிக்கிறதுக்கு என்ன காரணம் என்று நோக்கினால் பல கோரிக்கைகள் இருக்கின்றன. கேவலம் கம்யுனிஸ்டு சில சமயங்களில் அபிஸ்டுவாக இருந்தாலும் பலதரப்பட்ட உற்பத்தி சக்திகளை பக்தனுக்கு கொண்டுபோய் சேர்ப்பதில் மதங்கள் ஒரு பெரியமுட்டுக்கட்டையாக இருக்கின்றன.

    வடமாலை சாத்துவதில் இருந்து மொட்டை அடிப்பதுவரை அதற்கு பிண்ணனியில் ஆபரேசன் சக்சஸ் ஆக வேண்டும்; எம் பிள்ளைக்கு வேலை கிடைக்க வேண்டும்; தட்சிணா மூர்த்தியை வணங்கினால் வியாழ நோக்கம் கைகூடும் என்று தெளிவாக பிரார்த்திக்கிற பொழுது நீர் என்னடாவென்றால் சாமி கும்பிடுவதை குஜாலான விசயமாக பார்க்கிறீர்!

    எல்லா பக்தனோட கஷ்டத்தை தீர்க்க Cauchy’s integralஓ கயிலாய விசிட்டோ தீர்வல்ல என்பது உமக்கு தெரியும். ஆனால் பாசுரம் பாடினாலும் பாடுவேன் இதை பரிசிலீப்பேனா என்கீறீர். என்ன காரணம்? சர்ப்ப சிநேகிதம் பிராண சங்கரம் என்பார்கள் (சரியா தவறா யாருக்கு தெரியும்?) நீர் சேர்ந்திருக்கிற கூட்டணி டரியலாக்கப்பட வேண்டும் என்பது எமது அவா! வெண்ணை திருடித் தின்ற கண்ணன் திடீரென்று கீதையை சமஸ்கிருதத்திலே பாடறச்சே ஏதோ நம்மால் முடிஞ்சது.

    சரி கேள்விக்கு வருவோம்.

    1. டார்வின் கோட்பாடு வந்தபொழுது மதக் கோட்பாடுகள் ஆட்டம் கண்டன என்பதற்கு மாற்றாக ஏதோ ஆடிக்காட்டலாம் என்று முயற்சி செய்கின்றீர். ஆனால் என் கேள்வி, இதே டார்வின் கோட்பாடுகள் மதநிறுவனங்களை ஆட்டம் காணவைத்தது உண்மையா? பொய்யா?
    2. மத நிறுவனங்கள் மக்களை ஒடுக்கும் கருவி என்று சொல்வது ஒரு கரோலரியாக (கிளைத்தேற்றமாக) கன்சிடர் பண்ணகூடாதா? அந்த அளவிற்கு கணிதத்தில் கல்நெஞ்சமா உமக்கு?
    3. மெண்டல், டார்வின் கோட்பாட்டிற்கு பல உத்திகளை வழங்கினார். அவர் ஒரு ஆன்மிகவாதி என்கிறீர். ஆனால் டார்வின் மரபியலின் ஒருபகுதியான Mutation அதாவது திடிர்மாற்றத்தை விளக்கவில்லை. மெண்டலும் அதற்கு முழு விளக்கம் தரவில்லை. ஏனென்றால் அது பின்னால் மார்கனில் இருந்து வளர்தெடுக்கப்பட்டது. Mutation துறையை பல இறை நம்பிக்கையாளர்கள் வளர்த்தெடுத்தாலும் தலைக்கு மேல் வெள்ளம் போறது. ரோமனில் இருக்கவா எல்லாம் சில ஆராய்ச்சிகளை செய்வது பரலோக இராஜ்ஜியத்திற்கு அதாவது இந்திரலோகத்திற்கு உகந்தது இல்லை என்று பைபிளை வைத்து சத்தியம் வாங்குறா. இது போங்கட்டாந்தானே! சட்டம் எல்லாம் போடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
    4. என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கோ, நான் முட்டாளா இருந்தாலும் சொல்றவன் அப்பாடக்கர் இல்லை என்கீறீர் கையில் தர்ப்பையும் காதுல பூவையும் வைச்சுண்டு தர்க்கம் பேசுறது நேக்கென்னவோ சரியாப்படலை. பேசப்படாதான்னு திருப்பிக்கேட்டால் மழங்க மழங்க முளிக்கவேண்டியதுதான். பத்மவியுகம் தான். வேற என்ன பண்ண?

    சமதே ஸ்ரீபகவதே நமஹ!

  7. மனித சமூகத்தில் இருப்பவனும், இல்லாதவனும் பிரிந்து கொண்டு சண்டை போடுகிறார்கள். இந்த சண்டையில் ஏழைகள் அல்லது உழைக்கும் மக்கள் வெற்றிபெறுவார்கள் என்பதை அறிவியல் உண்மையாக மார்க்சியம் நிறுவியிருக்கிறது. அப்போது இயற்கைத் தேர்வும் அது உருவாக்கிய மனிதனின் செயற்கைத் தேர்வும் இணைந்து பொது நலனின்பாற்பட்டு ஒரு உன்னத இயற்கை அமைப்பை காப்பதற்கு வேலை செய்யும். அப்போது டார்வின் விதித்திருந்தபடி இயற்கைத் தேர்வில் தோற்க இருக்கும் உயிரினங்கள் கூட காக்கப்படும்

  8. அன்புள்ள தென்றல்,
    அலுவகத்தில் திடீர் அவசர வேலை. Cauchy, நம்மாழ்வார் எல்லாம் சோறு போடமாட்டார்கள் அல்லவா. சோத்துப் பிரச்சனையை முடித்துவிட்டு சாவகாசமாக பிறகு பேசுகிறேன். That that thing, that that place (அது அது அதன் அதன் இடத்தில் என்பதன் மொழிபெயர்ப்பு – உபயம், என் பள்ளிக்கால ஆசிரியர் ஒருவர்!). உடனடியாக, நீங்கள் கேட்ட நான்கு கேள்விகளுக்கு சுருக்கமான பதில்கள்.

    1. ஆமாம், அதுக்கு இப்போ இன்னாங்குற.

    2. இல்லை என சிலர் வாதிடக்கூடும். நான் அப்படி நினைக்கவைல்லை. நான் உங்களோடு உடன்படுகிறேன்.

    3. ஆமாம். போங்காட்டந்தான். இது குற்றம். “அது ஒரு புறம், இது ஒரு புறம்” என்று இருக்க வேண்டும். ரெண்டையும் மிக்ஸ் பண்ணப்படாது.

    4. ஆமாம். அதுக்கு இப்போ இன்னாங்குற. என் கையில், தர்ப்பையோ, ஒரு தொன்னை புளியோதரையோ, சிலுவையோ, குரானோ இருந்தால் உமெக்கென்ன சுவாமி. எம்பெருமான் லியனார்ட் ஆய்லர், ஐசக் நியூட்டன் போன்ற ஜாம்பவான்கள் கூட இப்படித்தான் இருந்தனர்! என் கையில் என்ன உள்ளது என்பதற்கும், எனது தர்கத்துக்கும் என்ன தொடர்பு. நீர் கூடத்தான் காலில் செருப்பு, தலையில் தொப்பி, சட்டைப் பையில் பேனா வைத்திருக்கிறீர். நான் ஏதாவது கேள்வி கேட்கிறேனா?

  9. வெங்கடேசன் அவர்களுக்கு,

    வேலைப்பளுவிற்கு இடையில் சுருக்கமான பதில் அளித்தமைக்கு நன்றி. அதன் மீதான பார்வையையும் வைத்துவிட விரும்புகிறேன்.

    1. டார்வின் கோட்பாடுகள் மதநிறுவனங்களை ஆட்டம் போட வைத்தது உண்மை என்றால் உடனடியாக நாம் செய்ய வேண்டியது பக்தர்கள் யார்? மதம் யார்? ஆளும் வர்க்கம் எது என்பதை பிரித்துபார்த்து பக்தர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதவாது பக்தர்களை பாட்டாளிகளாக பார்க்கிற பொழுது பெருமாள் கோயில் பெருச்சாளிகளாக பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும். இப்படிச் செய்வதால் உடனடி உபகாரங்கள் உண்டு. மதவாதிகள், தேசியவாதிகள், பிழைப்புவாதிகள், ஆதினங்கள், வக்புவாரியங்கள், மடங்கள் இவையனைத்தும் பக்தனை ஒட்டச் சுரண்டுகின்றன என்பதை நிறுவலாம். ஒரு அறிவியல் அறிஞனின் நோக்கங்களும் எதிர்ப்பார்ப்புகளும் தொழிலாளி மற்றும் விவசாயிகள் வைக்கிற கோரிக்கைகளுக்கு அப்பாற்பட்டதல்ல.

    2. மதநிறுவனங்கள் மக்களை ஒடுக்கும் கருவி என்பதுடன் தாங்கள் உடன்படுகிற பொழுது நான் ஒரு விசயத்தை சுட்டிக்காட்டி உடன்பட வேண்டும். கம்யுனிஸ்டுகள் வழிபாட்டு உரிமைக்கு எதிரானவர்கள் கிடையாது. வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது என்கிற பொழுது அனைவருக்கும் ஞானஸ்நானம் எடுக்கவைத்து போராட்டத்திற்கு தயார்படுத்த முடியுமா என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் வர்க்க முரண்பாடுகளை சுட்டிக்காட்டி கூர்மைப்படுத்தி உற்பத்தி சக்திகளை உழைப்பாளிகளுக்கு உரியதாக்கினால் வழிபாடு வேண்டாமா கூடாதா என்பதை பக்தர்களே முடிவு செய்வார்கள். இது ஒரு அப்பாடக்கர் விசயமல்ல. ஒரு இசுலாமியன், இந்து, கிறித்துவன் இதை எப்படி அணுகுவான் என்பதை அறிந்துகொள்ள ஆவல். இதை தாங்கள் கறாராக பரிசிலீத்து தங்கள் முடிவையும் என் பார்வையையும் பரிசிலீக்க வேண்டும்.

    3. அது ஒரு புறம்; இது ஒரு புறம் மிக்ஸ் பண்ணப்படாது என்பது குறிப்பிட்ட சமூக குழுக்களுக்கு மட்டும்தான் சாத்தியம். அனைவருக்கும் சாத்தியமல்ல. நமக்கு ஒரு கடமை உண்டு. ஆறுமாதம் அரியர்ஸ் போடவில்லை என்று தொழிலாளி பெருமாளுக்கு துளசி மாலை சாத்துகிற பொழுது அது தீர்வல்ல; இந்த அரசமைப்பை தான் முதலில் சாத்த வேண்டும் என்று சொல்ல வேண்டும். வாசுகி பாம்பை வைத்து அமிர்தம் எடுக்கிற பொழுது வெங்கடேசன் போன்றவர்களை இந்த சமூகம் இப்படித்தான் பயன்படுத்திக்கொள்கிறது. இப்பொழுது உள்ள அபாயம் என்னவென்றால் தான் செய்வது சரி என்பதற்கு உங்களால் ஒரு தியரியும் தரமுடிகிறது. இது ஆபத்தானது.

    4. தர்ப்பையோ பூவோ பிற பக்தர்கள் தாங்கள் எதற்கு வைக்கிறோம் என்று தெரியாது. நீங்கள் தெரிந்தே செய்கிறீர்கள். இதுதான் வித்தியாசம். ஆடிட்டர் சங்கர்ராமன் கம்யுனிஸ்டு கிடையாது. ஆனால் காஞ்சி ஒரு துஷ்டன் என்பதை நிறுவிவிட்டுதான் சென்றார். ஒரு சில கூட்டம் “அல்லந்த தூரலா ஆதாராகா” என்கிற தெலுங்கு கீர்த்தனையை அடானா ராகம் ஆதி தாளம் ஜம்பை மேளத்தில் ஆலாபனை செய்கிற பொழ்து சங்கர்ராமன் போன்ற ஆட்கள் மேளகர்த்தா வாசிக்கவில்லை. இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையும் பரிசீலித்தால் வர்க்கமுரண்பாடுகள் பிடிபடும். பிறகு உருப்படிகளை ஆகிருதிகளை விரிவாக ஆலபனம் செய்யலாம். இது ஒரு புறம் அது ஒரு புறம் என்று தர்க்கம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை.

    கொசுறு. தர்க்கம் கருத்து முதல்வாதமாகும். ஒன்று அல்லது சுழி என்று இரண்டு நிலைகள் மட்டும் கிடையாது; மூன்றாவதாகவும் உண்டு என்கிற பொழுது அதவாது எதுவும் கருப்போ அல்லது வெள்ளையோ இல்லை என்கிற பொழுது நீங்கள் எங்களுக்கு அணுக்கமாக இருக்கீறிர்கள். ஆகையால் உரிமையுடன் சொல்வேன். வெங்கடேசன் பூவையும் பூணுலையும் கழற்றி எறியத்தான் வேண்டும். தர்க்கமே தகரம் என்கிற பொழுது தர்ப்பை என்ன செய்ய முடியும்?

    • // பூவையும் பூணுலையும் கழற்றி எறியத்தான் வேண்டும்

      இப்படியே போச்சுன்னா, “உங்கள் வேட்டியை உருவத்தான் வேணும்னு” சொல்லிடுவீங்க போலிருக்கே! அண்ட்ராயர் வேற போடல. Just kidding 🙂

      மற்றவை பிறகு.

  10. ஒரு சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் மிக நல்ல கட்டுரை. தமிழில் இது போன்ற அறிவியல் கட்டுரைகள் நிறைய வரவேண்டும். கட்டுரையில் பல கடினமான, வழக்கத்தில் இல்லாத அறிவியல் சொற்களுக்கு பதிலாக சரளமாகப் பழக்கத்தில் உள்ள வார்த்தைகளை பயன் படுத்தினால் எதிர் பார்ப்பவரை விட அதிகம் பேரைப் போய்ச் சேரும்.

    பொதுவாக வினவின் வரும் கட்டுரைகளில் இருக்கும் சொல்லாட்சியும்,powerfull ஆன நடையும் இந்த்க் கட்டுரையிலும் இருக்கிறது.

    இனி comments.

    “பார்ப்பன புராணங்களின்படி…”

    பாசிச பார்ப்பன புராணங்களின் படி என்று இருந்திருக்க வேண்டும்.

    “உணவுப் பற்றாக்குறையும், நோய்களும் தவிர்க்கவியலாமல் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றன’ என்றும் கூறியிருந்தார். அதாவது ஏழைகள் பட்டினியில் வாடுவதும், நோய் வந்து சாவதும் இயற்கையின் (அல்லது இறைவனின்) திருவிளையாடல் என்று ஆளும் வர்க்கங்களின் சுரண்டலை நியாயப்படுத்துவதற்காக மத போதகராக இருந்த மால்துஸ் மக்கள் தொகை பற்றிய தனது கோட்பாட்டை முன் வைத்திருந்தார்.”

    உலகில் புதிய புதிய நோய்கள் உண்டாவதற்கும்/அவற்றைப் பற்றிய அறிவு உண்டானதால் அவற்றை இனம் கண்டு கொள்வதற்கும், அவை பல்கிப் பரவுவதற்கும் ஆளும் வர்கங்களின் சுரண்டலுக்கும் என்ன சம்பந்தம்? அதே போல் மக்கள் தொகை பெருகுவதால் உணவுப் பற்றாக்குறை உண்டாகும் என்பதும் ஒரு வகையான சமூக அறிவியல் கோட்பாடு. இதில் இறைவனுக்கோ, ஆளும் வர்க்கதுக்கோ எந்த சம்பந்தமும் கிடையாது. உலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் எப்படி மதவாதிகள் இறைவனை கை காட்டுகிறார்களோ அது போல வினவின் கட்டுரையாளர்கள் அதற்கு சிவப்புச் சாயம் பூசிவிடுகிறார்கள்.

    “ஆனால், மால்தூசின் கட்டுரைகளை படித்த டார்வின், அந்த மோசடியான கோட்பாட்டை, பல லட்சம் ஆண்டுகள் கால ஓட்டத்தில் உயிரினங்களிக்கிடையே இடையறாது நடக்கும் உயிர் பிழைத்திருப்பதற்கான உக்கிரமான போராட்டத்துக்கு வரித்துக் கொண்டார்.”
    நவீன மால்தூசியர்கள் இன்றும் கூட தகுதியானவை பிழைத்திருக்கும், வலியவை உயிர்வாழும் போன்ற டார்வினுடைய கோட்பாட்டை கொண்டு முதலாளித்துவ சுரண்டலையும் ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்துகின்றனர்.”

    மனிதர்களையும், உங்களுடைய பிரியப்பட்ட தலைப்புகளான முதலாளித்துவ சுரண்டலையும் விடுங்கள். மற்ற உயிரனங்களை நோக்குங்கள். தகுதியானவை பிழைத்திருக்கும் வலியவை உயிர் வாழும் என்பது இன்று வரை அறியப்பட்ட அறிவியல் உண்மைகளின் படி சத்தியம்.மனிதனின் சுரண்டலும் ஏற்றத் தாழ்வுகளும் இந்த உயிர் வாழும் அவசியத்தால் வந்தவையே. அது சரியா தவறா என்பது வேறு விஷயம். அதை நாகரிக உலகில் எப்படி எதிர் கொள்வது என்பதும் வேறு விஷயம்.

    “வேத காலந்தொட்டு தனது ஒடுக்குமுறை கோட்பாடுகளை கைவிடாமலேயே எதிர் மரபுகளை உள்வாங்கியும், அழித்தும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வரும் சனாதான மதமோ இவை அத்தனையும் பத்து அவதாரங்களின் மூலம் அன்றைக்கே சொல்லப்பட்டு விட்டதாகவும் இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளனைத்தும் தங்களது இந்து தத்துவ மரபை நிருபணம் செய்யும் சான்றாதாரங்களே என்றும் வழமைபோலவே பித்தலாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.”

    எதிர் மரபுகளை உள் வாங்கியும் அழித்தும் தன்னைப் புதிப்பித்துக் கொள்ளுதலும்தான் எந்த ஒரு கோட்பாடும் நிலைத்து நிற்கத் தேவையான குணாதிசயங்கள். அவை சனாதன வழிமுறைக்கு உள்ளதென்பதைக் குறிப்பிட்டதற்கு நன்றி.

    • சிவா அவர்களுக்கு,

      உங்களது இருகேள்விகளுக்கான என் தரப்பு பார்வைகள்.

      \\உலகில் புதிய புதிய நோய்கள் உண்டாவதற்கும்/அவற்றைப் பற்றிய அறிவு உண்டானதால் அவற்றை இனம் கண்டு கொள்வதற்கும், அவை பல்கிப் பரவுவதற்கும் ஆளும் வர்கங்களின் சுரண்டலுக்கும் என்ன சம்பந்தம்?\\

      நோவார்டிஸ்ஸின் கேன்சர் மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியே ஆங்கில இந்துவில் கட்டுரை எழுதியிருக்கிறார். இங்குள்ள சட்டமும் அரசும் திட்டமிட்டு நோவார்டிஸ்ஸை காப்பாற்றுகின்றன என்று. சுரண்டலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

      நோய் உருவாவதற்கும் ஆளும் வர்க்கம்தான் காரணம். எடுத்துக்காட்டாக காசநோயை ஒழிக்கவேண்டுமானால் வறுமையை ஒழிக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமே கூறுகிறது. வறுமைஉள்ள நாடுகளில் நோய் ஒழிக்கிறேன் பேர்வழி என்று அம்மக்களை சுரண்டுவதற்கும் இதே உலக சுகாதார நிறுவனம் தான் வழி அமைத்துக் கொடுக்கிறது.

      இந்தியா போன்ற போலிஜனநாயக நாடுகளில் கூட போலியோவை கட்டுப்படுத்தமுடிகிறது. ஆனால் பெஷாவரில் போலியோ தலைவிரித்தாடுகிறது.

      ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) கான நோய் தடுப்பு ஊசியைப் போட வேண்டும். மஞ்சள் காய்ச்சல் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே உண்டு.
      இது போக மருத்துவ படிப்பில் Commnunity Medicine பேப்பரை பாஸ் செய்யாத மாணவர் மருத்துவ டிகிரி வாங்கமுடியாது என்கிற பொழுது மேற்கண்ட உதாரணங்களை பரிசீலிக்கிற பொழுது புதுப்புதுநோய்கள் பல்கி பரவுவதற்கும் அதை காசாக்கி கள்ளாபெட்டியை நிரப்புவதற்கும் சமூக நிலைமைகளும் ஆளும்வர்க்கமும்தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும். உங்கள் கருத்து என்ன?

      \\மக்கள் தொகை பெருகுவதால் உணவுப் பற்றாக்குறை உண்டாகும் என்பதும் ஒரு வகையான சமூக அறிவியல் கோட்பாடு.\\

      மக்கள் தொகை என்று வருகிற பொழுது மக்கள் தொகை அடர்த்தியை பரிசீலிக்க வேண்டும். ஒரு சதுரகிலோமீட்டரில் வசிக்கும் சராசரி மக்கள் தொகையை கணக்கில் கொண்டால் இந்தியாவை விட சீனாவிலும் ஜப்பானிலும் தான் அடர்த்தி அதிகம். உணவுப்பற்றாக்குறை வந்ததா? இது கோட்பாடு அல்ல. அவதூறு ஆகும்.
      இதற்கு நேர்மாறாக, ஹைதி மக்கள் தொகையை மிகவும் குறைவாக கொண்ட நாடு. உணவுப்பற்றாக்குறை இல்லையா?

  11. மிக அருமையான கட்டுரை. தமிழில் இது போல இன்னும் பல வர வேன்டும். வழ்துக்கள்

  12. மர்க்சிசம் அறிவியல்!

    சிக்கலான சமாச்சாரம். இதை கூல்டை தவிர அருமயாக எவராலும் விளக்கி இருக்க இயலாது.

    அவரது The Darwinian Gentleman at Marx’s Funeral: Resolving Evolution’s Oddest Coupling
    என்ற கட்டுரை கன்டிப்பக படிக்க வேன்டியவை

  13. சிக்கலான சமாச்சாரம் என்பதும் “பெரியமனிதன்” என்பனுக்குள்ள சமாச்சாரம் தான். ஆனபடியால்தான் இந்த பெரியமனிதர்கள் போலியானவர்கள் என்பதை தனது பொருளாதார ஆய்வு மூலம் போட்டு உடைத்து அம்பலப்படுத்தினார்.

    மாக்ஸ்சும் எங்கல்சும் டார்வின்னின் பரிணமாதத்துவத்தை முழுமனத்தோடு ஏற்றுக்கொண்டதோடு அதற்கு முகவுரையும் எழுதினார்கள்-இந்த பரிணமாவளர்ச்சிதத்துவம் இனி மனிதசமூகத்திற்கு பணியாற்றப் போகிறதுஎனப் பெருமைப் பட்டார்கள்

    இறுதிக் காலத்தில் நாடுபிடித்தல் மக்களை அடிமைபடுத்தலை கணவான் நிலையில் இருந்து டார்வின் விமர்சித்த போது தீரா வெறுப்பு கொண்டார்கள்..ஆத்திரப்பட்டார்.

    நீங்கள் சொல்லுகிற அறிவியல்-அறிவிலாளர் குப்பனுக்கும் சுப்பனுக்குமாக வாழவில்லை.இந்த ஜென்டில்மேன்களுக்காகவே வாழ்ந்தார்கள்.

    இன்றுள்ள விஞ்-அறிவியல்நுட்பம் இந்த பூமியில் மட்டுமல்ல இன்னும் ஏழுபூமியில் உள்ளவர்களுக்கு உணவுதேவையை மருத்துவசேவையை பூர்த்திசெய்கிற பலத்தை அடைந்திருக்கிறது.

    நடப்பது என்னவோ வறுமை பற்றாக்குறை யுத்தபயம் போன்றவைகளே.இதை எப்ப எங்களால் தடுத்துநிறுத்த முடியுமென்றால்..மனிதன் ஒரு அரசியல்பிராணி என்பதை உணர்வதாலும் இந்த “ஜென்டில்மென்” பிரச்சனை தீர்க்கப்படும் போது மட்டும் தான்.

    • இதில் வினோதமான விஷயம் என்ன வென்றால் மர்க்சால் டார்வினுக்கு பரிசளிக்கபட்ட அவரின் புத்தகம் டார்வினால் சில பக்கங்களக்கு மேல் படிக்கப்படாமலே இருந்தது

      • மார்க்ஸ் தன்னுடைய நூல் ஒன்றை டார்வினுக்கு காணிக்கை ஆக்க விரும்பியதாகவும், அதற்கு டார்வின் இசையவில்லை என்றும் ஒரு விவாதத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு அவர்கள் கூறினார்.

  14. அறிவாளிகள் படிக்க விரும்பமில்லாத புத்தகத்தை நானும் படிக்கமாட்டேன் என்றால் அது உங்கள் வர்க்கஉணர்வு சம்பந்த பட்ட பிரச்சனை.

    நாடுபிடிப்பதையும் மக்களை அடிமையாக்குவதற்கு பச்சைக்கொடி காட்டுவதாகவும் இருந்தால் அது மனுநீதி பற்றிய பிரச்சனை.

    ஆகவே- மாக்கிஸத்தை தலையான மனுநீதி தத்துவமாக ஏற்று கொள்பவர்களுக்கு அறிவாளிகளை அறிமுகபடுத்துவதும் விளப்பரப் படுத்துவதும் எமக்கு அதிகமாகவே படுகிறது.

  15. டார்வின் கோட்பாடு மீது கணிதவியல் நோக்கில் ஒரு அதிபயங்கர விமர்சனம்!

    முதலில் ஒன்றைத் தெளிவு படுத்தி விடுவோம். பரிணாம வளர்சிக் கோட்பாட்டை மனிதகுல வரலாற்றில் ஆகச் சிறந்த சிந்தனைகளில் ஒன்றெனவும்,. உலகில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கு பதில் சொல்ல முயலும் சித்தாந்தங்களுள் மிகச் சிறந்ததாகவும், உண்மையாய் இருக்க மிக அதிக சாத்தியக்கூறு கொண்ட ஒன்றெனவும் கருதுகிறேன். திருமால் “நான்முகன் தன்னோடு தேருலகோடு உயிர் படைத்தான்” என்ற ரீதியில் அமைந்த வாமன அளவு கருத்துக்களுக்கு மத்தியில், ஓங்கி உலகளந்த உத்தமன் போலே தெரிந்தெங்கும் வானோங்கி நிற்கும் தத்துவம் இது. எனக்கு மிகவும் பிடித்த கோட்பாடுகளுள் ஒன்று. இதை எல்லாம் சும்மனாச்சிக்கோ, முற்போக்கு ஆசாமி என பெயரெடுக்கவோ சொல்லவில்லை. உள்ளூர, உற்சாகத்தோடுதான் சொல்கிறேன்.

    இவ்வாறு இருக்கும் போது, எதற்கு விமர்சனம் என்ற கேள்வி வரும். இக்கோட்பாட்டை முன்வைத்து எழுதினாலும், மனதளவில் விமர்சனம் வினவு, விடுதலை வகையறாக்கள் மீதானதே. உண்மையாய் இருக்க மிக அதிக சாத்தியம் உண்டெனினும், இக்கோட்பாடு ஐயந்திரிபற, சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்ட உண்மை (undisputed fact) என்ற ரீதியில் இவர்கள் பேசுவதனால்தான் விமர்சனம் எழுத வேண்டி உள்ளது.

    முதலில் கட்டுரை தலைப்பில் உள்ள வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்லி விடுவோம். “கணிதவியல் நோக்கு” என்பதன் பொருள் “விதண்டாவாதம்” என்பது. “அதிபயங்கரம்” என்பதாவது வினவு தள கட்டுரைகளில் அங்கொன்று, இங்கொன்றுமாயும், மறுமொழிகளில் பரவலாகவும் காணப்படும் சாதாரண வகை போலன்றி, அதீத விதண்டாவாதம் என்றறிக. முன்னது முதுகில் லேசாக தட்டுவது என்றால், பின்னது யூரின் டாங்க் உடையும் வண்ணம் ஒன்றரை டன் வெயிட்டோடு நடுவயிற்றில் ஓங்கி குத்துவது போலாம். முதல் வகை கொஞ்சமாவது சிந்தனையோடு இருக்குமென்றும், இரண்டாம் வகை ஏர்வாடி, கீழ்ப்பாக்கம் ரீதியில் அமையும் என்றும் உணர்க.

    இந்த அளவு பீடிகை போதும். இதற்கு மேல் இழுத்தால், இந்த மொக்கை விமர்சனத்துக்கு, இவ்வளவு பீடிகை தேவையா என கேள்வி எழலாம்! காலம் தாழ்த்தாமல் கதா காலக்ஷேபத்தை தொடங்குவோம்! ஹரி: ஓம்!

    (தொடரும்)

  16. முதலில் அறிவியல் துறையில், ஒரு கூற்றை ஐயந்திரிபற நிரூபிக்க தேவையான தெளிவான வரையறைகள் கூட கிடையாது. கிடைக்கும் ஆதாரங்களை அலசி ஆராய்ந்து, ஒரு சிந்தனைப் பூர்வமான யூகம் (highly educated guess) மட்டுமே செய்ய முடியும். அதன்றி, ஐயந்திரிபற்ற நிரூபணம் (indisputable proof) என்ற கோட்பாடே அறிவியல் துறையில் சாத்தியம் இல்லை. “மனிதன் குரங்கு குல உயிரினம் ஒன்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து உருவானான்” என்ற கூற்றை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இதை நிரூபிக்க எவ்வளவு, எத்தன்மையதான ஆதாரங்கள் தேவை? இக்கூற்றிற்கு இவர்கள் காட்டும் முக்கிய ஆதாரங்களுள் ஒன்று, பழங்கால குரங்கு இன எலும்புத்துண்டுகள். இவ்வகையில், இக்கூற்றை நிரூபிக்க எத்தனை எலும்புத் துண்டுகள் தேவை? ஒரு லாரி போதுமா, அல்லது பத்து லாரி வேண்டுமா? முழு எலும்புத் துண்டுகள் வேண்டுமா, அல்லது உடைந்திருந்தால் பரவாயில்லையா? பதில் கிடையாது! அடுத்து, ஒரு புதிய கூற்றை சொன்னபின், அதன் அடிப்படையில் ஒரு கணிப்பு செய்து, அது சரியாக இருக்கும் பட்சத்தில், அக்கூற்றுக்கு வலு கூடுவதாக கூறுகிறார்கள் (hypothesis testing). கணிப்பு எத்தன்மையதாய் இருக்க வேண்டும்? “நாளை உனக்குப் பசிக்கும்” என்ற ரீதியில் இருந்தால் போதுமா, அல்லது “அடுத்த வாரம் உன் தலையில் தேங்காய் விழும்” என்ற ரீதியில் குறிப்பாக இருக்க வேண்டுமா? எத்தகைய கணிப்பு நிரூபணமாகும்? தெளிவான வரையறை எதுவும் கிடையாது! ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கை அடிப்படையில் ஒரு கணிப்பு செய்து, அதை 1919 ஆம் ஆண்டு, எம்பெருமான் ஆர்தர் எட்டிங்டன் (Arthur Eddington) ஒரு முழு சூரிய கிரகண காலத்தில், அக்கணிப்பு சரி என தமது சோதனை மூலம் கண்டறிந்தார். எனில், இக்கூற்று நிரூபிக்கப் பட்டுவிட்டதாக கூற முடியுமா? பின்பு ஏன் இன்றளவும், gravitational lensing போன்ற மற்ற நிரூபணங்கள் தேடி அலைகிறார்கள்? அது முடிந்து போன பிரச்சனை என மூட வேண்டியது தானே! டார்வின் கோட்பாடு, அவர் புத்தகம் வெளியிடபின் நிரூபணம் ஆகியதா, இல்லையா? ஆம் எனில், எதற்கு மெண்டல், மரபணுவியல் என மேலும் ஆதாரம் சேகரிக்க வேண்டும். இப்படியே போனால், எப்போது இந்த “நிரூபணம்” பூர்த்தியாகும்? அவ்வாறு பூர்த்தியாகும் முன் எதற்கு இவ்வளவு அலட்டல்?

    ஐயந்திரிபற்ற நிரூபணம் என்பது என்னுள்ளங்கவர் கணிதவியலில் மட்டுமே சாத்தியம்! அங்குதான், நிரூபணம் என்பதற்கு தெளிவான வரையறை உண்டு. “”There are no integers x, y, z and n such that x^n + y^n = z^n, for n >= 3” என்ற எம்பெருமான் பியரே டி ஃபெர்மாட் (Pierre de Fermat) அவர்களின் பிரசித்தி பெற்ற கூற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் (what constitutes a proof) என்பதற்கு தெளிவான வரையறை உண்டு. 1994 இல் எம்பெருமான் ஆண்ட்ரூ வைல்ஸ் (Andre Wiles), இதை நிரூபித்தபின் இது உண்மைக் கூற்று என ஏற்கப்படுகிறது. அதற்கு முன்பு வரை, அது விடைதெரியாத கூற்று (conjecture) என்று மட்டுமே அழைக்கப்பட்டது. இத்தனைக்கும், இது உண்மையாய் இருக்கும் என நம்பும் வகையில் ஏகப்பட்ட ஆதாரங்கள் இருந்தன. இருப்பினும், கணிதவியலாளர்கள், இது “உண்மை” எனச் சொல்லி ஊரை ஏமாற்றவில்லை. Conjecture என்று மட்டுமே அழைத்தனர்.

    கணிதவியலின் உட்பிரிவான கணிதக் கணினியியல் என்ற துறையில் இருந்து ஒரு உதாரணம் (“நானும் ரவுடிதான்” என்ற ரீதியில் இத்துறை சார்ந்தோர்தான் இவ்வாறு சொல்லிக் கொள்கிறார்கள் என்பதையும், தீவிர கணிதவியலாளர்கள் இதை முழு மனதோடு ஏற்பதில்லை என்ற பாலிடிக்ஸ் விஷயத்தை தற்சமயம் தள்ளி வைப்போம்!) இத்துறையின் அடிப்படை கோட்பாடுகளில் “P”, “NP” என இரண்டு இருக்கின்றன. இவை இரண்டும் ஒன்றா, அல்லது வேறுவேறா (“Is NP=P?”) என்பது இத்துறையின் அடியாழத்தில் உள்ள ஒரு கேள்வி. இக்கேள்விக்கு விடை தெரியாமல் அடுத்த கட்ட நிகழ்வு சாத்தியமில்லை. உதாரணமாக, தமிழக அரசியலில், திமுக, அதிமுக இரண்டும் நிஜமாகவே வேறுவேறு கட்சிதானா, அல்லது யாரோ ஒருவர் மறைந்திருந்து இரண்டையும் இயக்குகிறாரா என ஒரு ஐயம் எழுகிறது என கொள்வோம். இதற்கு விடை தெரியாமல், எப்படி தமிழக அரசியல் பேசுவது? (அப்படி இயக்குபவர்தான் தரகு முதலாளிக் கும்பல் என குரல் கொடுப்போர், சற்று சைடு வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!) அத்தனை முக்கியக் கேள்விக்கு இன்றுவரை விடை தெரியாது. இதை தீர்த்து வைப்போருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு கொடுப்பதாக கிளே (Clay) கணித ஆய்வு நிறுவனம் தண்டோரா போட்டு அறிவித்துள்ளது. இவ்வாறு, பரிசு தர அந்நிறுவனம் தேர்ந்தெடுத்த ஏழு கணிதக் கேள்விகளுள் இதுவும் ஒன்று. இவை இரண்டும் வெவ்வேறானவை என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. மேலும், இத்துறையில் இருப்போரில், கிட்டத்தட்ட அனைவரும் இவ்வாறே கருதுகின்றனர். விடை கண்டறியும் வரை சும்மா இருந்தால் சோத்துக்கு என்ன செய்வது என்ற பிரச்சனையில், இவை வெவ்வேறானவை தான் என்ற கணிப்பு (assumption) செய்து கொண்டு மேலே சென்றுள்ளனர். இந்த கணிப்பு அடிப்படையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக, லாரி லாரியாக ஆய்வுக் கட்டுரைகள், முனைவர் பட்ட ஆய்வுகள், நூல்கள் என ஊடு கட்டி விளையாடி உள்ளனர். யாராவது இவ்விரண்டும் ஒன்றே என நிரூபிக்கும் பட்சத்தில், அத்தனையையும் தூக்கி குப்பையில் தான் போட வேண்டும். அவை தவறென்ற அர்த்தத்தில் அல்ல, அவை அர்த்தமற்றவை (irrelevant) என்ற அர்த்தத்தில். எதற்கு சொல்கிறேன் என்றால், அத்தனை தீவிரமாக, இவ்விரண்டும் வெவ்வேறானவை என நம்பப்படுகின்றன. இருப்பினும், ஒருவர் நான் இவை ஒன்றென கருதுகிறேன் எனச் சொன்னால், அவரை யாரும் முட்டாள் என்று ஏளனம் செய்யமாட்டார்கள். “சுவாரஸ்யமாக உள்ளது. நீங்கள் ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்” என மரியாதையோடுதான் நடத்துவர். மேலும், இன்றளவும், இக்கணிப்பை அடிப்படையாக கொண்டு ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினால், “NP, P இரண்டும் வெவ்வேறென்ற கணிப்பின் அடிப்படையில் சொல்கிறேன்” என மறக்காமல் பிள்ளை சுழி போட்டு விட்டுதான் மேலே பேசுவார். அக்கூற்று நிரூபிக்கப் படாத ஒன்று என்ற உண்மையின் மீது அத்தனை மரியாதை.

    அறிவியலில் தான் நிரூபணம் என்பதற்கு வரையறை கூட இல்லாத சூழலில், அரைகுறை “ஆதாரங்களை” முன்வைத்து எல்லவாற்றையும் “உண்மை” என்பது போல சொல்லி ஊரை ஏமாற்றுகிறார்கள். எதற்கு இந்த எகத்தாளம்? பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்கு என்ற நிலை அல்லவா இது?

    ஒரு பிரசித்தி பெற்ற ஜோக் சொல்லி இப்பகுதியை முடிப்போம். வானியல், இயற்பியல், கணிதம் ஆகிய மூன்று துறை அறிஞர்கள் ஸ்காட்லாந்து நாட்டின் கிராமப்புற பகுதியில், ஒரு வண்டியில் சென்று கொண்டு இருந்தனர். தூரத்தில் ஒரு கருப்பு ஆடு சைடு போஸில் நின்று கொண்டு இருந்தது. உடனே, வானியல் அறிஞர் சொன்னார், “ஸ்காட்லாந்து நாட்டில் எல்லா ஆடுகளும் கருப்பாக உள்ளன”. இயற்பியல் அறிஞர் சொன்னார், “நாம் ஒரு ஆட்டைத்தான் பார்த்திருக்கிறோம். எனவே அவ்வாறு கூற முடியாது. ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ஆடுகளில் ஒன்று கருப்பு என்று மட்டுமே கூற முடியும்”. கணிதவியல் அறிஞர் “நாம் ஆட்டின் ஒரு பக்கத்தைதான் பார்த்திருக்கிறோம். எனவே, ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ஆடு ஒன்றின் ஒரு பக்கம் கருப்பு என்று மட்டுமே சொல்ல முடியும்” என்றார்!

    • அது எப்படிங்க வெங்கி, எழுத்தாளர் சுஜாதா மாதிரியே உயங்களால மட்டும் எழுத முடியுது

      • ரெண்டு பெரும் ஜல்லியடிக்கிறோம் எனச் சிலர் காரணம் கூறக் கூடும். அல்லது புலி-பூனை, கான மயிலாட என்ற ரீதியில் காரணம் சொல்ல முடியும் 🙂

    • வெங்கடசேன் அவர்களுக்கு,

      தாங்கள் எழுதிய டார்வின் கோட்பாட்டின் மீதான கணிதவிமர்சனத்தை படித்தேன். நல்ல முயற்சி. அவற்றில் சிலவற்றை மறுத்து என் பார்வையை வைக்க விரும்புகிறேன்.

      அறிவியலில் ஒரு கூற்றை ஐயந்திரிபற நிரூபிக்க தேவையான தெளிவான வரையறைகள் கிடையாது என்பதில் கணிதத்தையும் சேர்க்க வேண்டும். நிகழ்தகவு பரவலை மையமாக வைத்துதான் ஒட்டுமொத்த இயற்பியலும் இயங்குகிறது. உதாரணமாக மின்சாரம் கம்பியின் வழியே பாய்வதற்கு மின் கடத்து திறன் (Conductivity) காரணம் என்று தெரியும். ஆனால் அதே மின் கடத்து திறன் குறைந்த வெப்பநிலையில் என்னவாக இருக்கும் என்பதற்கு நாங்கள் காசை சுண்டிப்பார்க்கிறோம். Canonical Ensemble, Grand-canonical Ensemble என்று தாலியறுக்கின்றனர். ஆனால் இதன் சிறப்பு என்னவென்றால் துல்லியமாக இயற்பியலின் நிகழ்வுகளை விளக்க முடியும். இதன் பொருள் Approximations, நிகழ்வுகளை விளக்குகின்றன. வேறுவிதமாக சொல்வதென்றால் இயற்பியலில் Exactly Solvable Problems என்று இரண்டோ மூன்றோதான் இருக்கின்றன. இதற்கு காரணம் நாங்கள் பகுதிவகைக் கெழு சமன்பாடுகளைத்தான் (Partial Differential Equations) பெரிதும் நம்பியிருக்கிறோம். இவற்றிற்கு தோரயாமான தீர்வுகள் தான் உண்டு. Analytical Solutions கிடையாது.

      மற்றொரு வாதம் வைப்போம். வகை நுண் கணிதமும் தொகைநுண் கணிதமும் இதே approximations வகைப்பட்டவைதான். Summation என்பதற்கும் Integration என்பதற்கும் எது அடிப்படை? எடுத்துக்காட்டாக ஒரு ஒழுங்கற்ற பொருளின் பரப்பளவை கண்டுபிடி என்றால் நாங்கள் நாடி ஓடி வருவது Area under the Curve என்கிற Integration வகைகளுக்குள் தான். முதலில் ஒழுங்கற்ற பொருள் பல ஒழுங்கான பொருளின் வடிவங்களாக பிரிப்போம். அப்பொருள் மிகக் குறைந்த பெருமங்களையும் (Maxima) மற்றும் சிறுமங்களையும் (Minima) கொண்டிருப்பதாக Highly Educated Guess ஒன்று அடிப்போம். Discontinuity ஏதாவது இருந்தால் போனா போகுது அதை விட்டு விட்டு கணக்கிட முடியுமா என்று பார்ப்போம். கடைசியில் நீங்கள் பலாப்பழ தோலைக் கொடுத்தால் கூட 3சிக்மா தரத்தில் (அதாவது 10000இல் ஒரு பங்கு தவறு மட்டுமே இருக்கும் அளவில்) துல்லியமாக கணக்கிட்டு பிறகு மாட்டுக்கு தீனியாக போடுவோம். Approximation போறாதா?

      டார்வின் கோட்பாடு எதை சாதித்தது?

      இப்ப டார்வின் கேசுக்கு வருவோம். சில பேர் இதை கருதுகோள்கள் என்ற விதத்தில் ஒதுக்கிதள்ளுகிறார்கள். டார்வின் கோட்பாட்டை விளக்குவதற்கு இங்கிலாந்தின் தொழிற்புரட்சி ஒரு சிறந்த சான்று. Pepper Moth முன்னொரு காலத்தில் வெள்ளை நிறத்தில் தான் இருந்தது. ஆனால் தொழிற்சாலை மாசுக்கள் சூழலை கருமையாக்கிய பொழுது தன் உடல் நிறமே எதிரிகளுக்கு காட்டிக் கொடுத்தது. இப்பொழுதெல்லாம் அந்தப் பூச்சி கருப்பு நிறத்திற்கு தன் உடலை மாற்றிக்கொண்டுவிட்டது. நீர் தான் இன்னமும் நம்மாழ்வர் பாடலை பாடிக்கொண்டு அற்புதம் அற்புதம் என்கீறிர்.

      ஆப்பிரிக்க யானைகள் இப்பொழுதெல்லாம் தந்துத்துடன் பிறப்பதில்லை. இருந்தாதானே புடுங்குவாய்ங்க. பேசாம தந்தமே இல்லாமல் பிறந்துவிட்டால் யார் நம்மை கொல்வார் என்று கஜமுகனுக்கு கொள்ள அறிவு!

      இன்னொரு உதாரணம் வைப்போம். சிம்பன்சியின் மனித மூளையின் அளவு 384 கிராம் மட்டுமே. தற்போதைய மனிதனின் மூளை அளவு 1.352 கிகி. உழைப்புதான் மனிதனை விலங்குகளிடத்திலிருந்து பிரிக்கிறது என்கிற மார்க்சியத்தின் அடிப்படையே இங்குதான் நிறுவப்படுகிறது. பரிமாண வளர்ச்சியில் ஆதிகால மனிதன் குரங்கின் மூளை அளவைத்தான் ஒத்திருந்தான். ஏனெனில் அவன் வேலை செய்யவில்லை. நிமிர்ந்து நிற்க பழகவில்லை. இடம் பெயரவில்லை. நெருப்பு தெரியாது. மாமிசம் உண்ணவில்லை. ஆஸ்ட்ரலோபதிகஸின் மூளை அளவு 440cc மட்டுமே. ஆனால் ஹோமோ எரக்டஸின் மூளையின் அளவு 930cc.

      இது எதை நிருபிக்கிறது? திரேதா யுகத்தில் அதவாது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிருஷ்ணுக்கு மூளையும் கம்மி முதுகெலும்பும் கிடையாது. முதுகு எழும்பு நெருப்பை கண்டுபித்த காலத்தில் இடம்பெயர்ந்த காலத்தில் வந்தது, மதம் அடிபடுகிறது. பார்ப்பன ராமனுக்கு மூளை வளர்ச்சி இருந்திருக்க வாய்ப்பில்லை. வெறும் சைவசாப்பாட தின்னா குரங்குமாதிரிதான். ராமனுக்கு மூளை எடை 384கிராமை தாண்டி இருக்கிற வாய்ப்பில்லை என்பதை டார்வின் கோட்பாடுகள் ஜயம் திரிபற நிருபீக்கின்றன.

      மற்றவற்றை சோறு தின்னுட்டு எழுதுறேன்.

      • அன்புள்ள தென்றல்,
        “இதை எல்லாம் சும்மனாச்சிக்கோ, முற்போக்கு ஆசாமி என பெயரெடுக்கவோ சொல்லவில்லை. உள்ளூர, உற்சாகத்தோடுதான் சொல்கிறேன்” என்று நோட்டீஸ் அடித்து சொன்ன பிறகும் இப்படியா எதிர்கேள்வி கேட்பது? மேலும், கதாகாலக்ஷேபம் செய்யும்போது சமர்த்தாக கதை கேட்க வேண்டும் என்பதே மரபு. இப்படி குறுக்கே குரல் எழுப்பி புரட்சி செய்வது என்ன நியாயம்? தவிரவும், ஒருவன் அதிபயங்கர விதண்டாவாதம் செய்யும் போது, எதிர்வாதம் செய்வது அதிகொடூரம் என்ற ஊர் அலர் உங்களுக்கு வருமன்றோ? நீங்கள் கேள்வி கேட்பதால், விதண்டாவாதத் தன்மையை தீவிரப் படுத்த வேண்டியுள்ளது!

        ஆப்பிரிக்க யானை பற்றி சொன்னீர்கள். பிறக்கும் யானைகளில் எத்தனை சதவீதம் தந்தமின்றி பிறக்கின்றன, முற்காலங்களில் இந்த சதவீதம் எத்தனை போன்ற விவரங்கள் தெரிந்தால் தான் மேலும் பேச முடியும். எனினும், தற்கால யானைகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என வைத்துக்கொண்டாலும், 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் யானைகள் பரிணாம வளர்ச்சி மூலம்தான் உருவாகின என்று எப்படி கூற முடியும். இன்றைய மனிதர்கள் விமானத்தில் பறக்கிறார்கள் என்பதால், சிந்துச் சமவெளி மக்களும் விமானத்தில் பறந்தார்கள் என கூற முடியுமா? அக்கால பரிணாம வளர்ச்சி பற்றி நிரூபிக்க அக்கால ஆதாரங்கள் கொண்டுதான் செய்யமுடியும். இந்த யானைகள் நிலைக்கும், இக்கோட்பாட்டு நிரூபணத்துக்கும் உள்ள தொடர்பு எவ்வகையானது? முதலில் நிரூபணமாகாத கோட்பாடு, யானைகள் பற்றிய ஆதாரம் கிடைத்த பின் நிரூபணம் ஆகிவிட்டது என கூறலாமா? இனி ஆதாரம் தேடத் தேவை இல்லையா? யானை பற்றி மட்டும் போதுமா, இல்லை ஒட்டகம், புலி, பிலாடிபபஸ் போன்ற மற்ற விலங்குகளும் ஏதோ ஒரு வகையில் மாறுகின்றன ஆதாரம் வேண்டுமா? காண்டாமிருகங்கள் தம் கொம்புகளை இழக்கத் தொடங்கி விட்டவனவா? குண்டோதரன் வயிற்றை ஆகாரம் கொண்டு நிரப்புவது போல, ஆதாரங்களைக் கொண்டு .இப்படியே நிரப்பிக்கொண்டு போனால் எப்போதுதான் நிரூபணம் பூர்த்தி ஆகும்? ஏதாவது வரையறை உண்டா?

        இரண்டு, மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்டிரலோபிதிகஸ், ஹோமோ எரக்டஸ் வாழ்ந்த காலத்தில் இருந்த திரு கிருஷ்ணன் என்றொரு நபர் சிறிய மூளை கொண்டிருந்தார் எனக் கூறினீர்கள். அறிவியல் மீதான எனது அதிபயங்கர விமர்சனத்துக்கு அழகான விளக்க உதாரணம் இக்கூற்று. அவர் காலத்தில் வாழ்ந்த மனித குடும்ப மண்டை ஒட்டுத் துண்டுகள் கிடைத்துள்ளன. முழுதான ஒரு மண்டையோடு கூட கிடைக்கவில்லை. அவற்றை ஆராய்ந்து விட்டு, அக்கால மக்கள் சிறு மூளைக்காரர்கள் என்ற முடிவுக்கு வந்தாகி விட்டது. இந்த மண்டையோடுகள் மூலம் அவற்றின் சொந்தக்காரர்கள் சிறுமூளை படைத்தவர் என்றுதான் கூற முடியுமே தவிர அக்கால மக்கள் அனைவரைப் பற்றியும் எப்படி சொல்ல முடியும்? குறிப்பாக திரு கிருஷ்ணன் மூளை அளவு பற்றி தெரிய வேண்டுமானால், அவரது மண்டையோட்டை ஆராய்ந்தால்தான் தெரியும்! உங்களிடம் அது உள்ளதா? வினவு தள மறுமொழிகளை முதன் முறையாக படிப்போர், எனது மறுமொழிகளை மட்டும் படித்து விட்டு, வினவு வாசகர்கள் சரியான லூசுப் பேர்வழிகள் என்ற முடிவுக்கு வருவது தவறல்லவா?

        —————————————————-

        எம்பெருமான் டார்வின், வைல்ஸ் போன்றோர் கருத்துக்களை படிப்பது ஒரு புறம். நம்மாழ்வாரைப் படிப்பது வேற டிபார்ட்மெண்ட். முதலாவது முதலாவது மூளை சம்பந்தப்பட்டது. இரண்டாவது மனம் சம்பந்தப்பட்டது. நீங்கள் இளையராஜா இசையை அனுபவிப்பீர்களா, அல்லது அதன் frequency பற்றி ஆராய்ச்சி செய்வீர்களா? அழகான, உதயசூரியனை ரசிக்க வேண்டும், அத்தருணத்தில் ஹைட்ரஜன், ஹீலியம், நியூக்ளியர் பியூஷன் என்றெல்லாம் ஆராயக் கூடாது. அஞ்சறைப் பெட்டியில் அது அதற்கென்று இடம் உண்டு. கலந்து விட்டால் கெட்டுவிடும். That that thing, that that place!

        ——————————————————

        நீங்கள் சொன்ன “approximations” எல்லாம் தினசரி பயன்பாட்டு நோக்கில் அமைந்தவை. உதாரணமாக, pi என்பதை வசதிக்கு தக்க, 3.14, 3.141, 3.1415 என்று வகுத்துக் கொள்கிறோம். எனினும், அதன் முழு வரையறை Tailor series சார்ந்து அமைந்துள்ளது அல்லவா? கால்குலஸ் என வரும்போது, பொறியியல் பயன்பாடு நோக்கில் தான் நாம் அதிகம் படிக்கிறோம். அவ்வகையில் approximations எழுகின்றன. எனினும், கணிதவியல் ஆய்வாளர்கள் நுணுக்கமாக இவற்றை வகுத்துள்ளனர். Real numbers என்ற கோட்பாட்டை துல்லியமாக வரையறுக்க எவ்வளவு மெனக்கெடுகிரார்கள் என நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அதன் மீதுதான், limits என்பதில் தொடங்கி மொத்தமும் அமைக்கிறார்கள். Approximations என வரும்போது கூட, இது approximation என சொல்லி, முடிந்தால் உண்மையான அளவுக்கு எவ்வளவு நெருக்கத்தில் உள்ளது என்றும் கூறுகிறார்கள். ஒரு approximate அளவே உண்மையான அளவு என கூறுவதில்லை.

        • வெங்கடேசன் அவர்களுக்கு,

          இடையில் அடிக்கடி குறுக்கே புகுவதற்கு வருந்துகிறேன். இனி அப்படி நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் முழுவதுமாக உரையாடினால் என்னைப் போன்ற பல நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

          உங்களது காட்டமான மறுமொழியை படித்தேன். பல இடங்களில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருக்கிறது. ஆகையால் அடுத்த முறை விவாதிக்கிற பொழுது கீழ்கண்ட பார்வைகளுக்கும் பதில் தந்தால் நன்றாயிருக்கும்.

          1.டார்வின் கொள்கைகளில் தாங்கள் கொண்ட முற்போக்கும் உற்சாகமும் என்ன? ஒருவரது மத நம்பிக்கையை இது அசைக்கவில்லை என்றால் நீங்கள் சுட்டிக்காட்டுகிற கோசம் போட்டு கோலி சோடா குடிப்பதைப் தானே காட்டுகிறது? உங்கள் பேராசியர் கேட்பதைப் போன்று பிஸ்கட் பாக்கெட்டை பிரித்தே பார்க்காமல் அதை எப்படி உண்ண முடியும்?

          2.ஆதாரங்களை கொண்டு நிறுவுவதும் நிரூபணம் பூர்த்தியாவதும் எல்லா அறிவியல் துறையிலும் உள்ள செயற்பாடுகள் தான். தாங்கள் மட்டும் பரிணாமக் கொள்கையை துப்பறியும் சாம்பு போன்ற நாவலாக வாசித்தால் அதற்கு யார் பொறுப்பு? இத்துணைக்கும் மெண்டலிவியன் இன்ஹெரிட்டன்சை மிக எளிய முறையில் விளக்கியிருந்தீர்கள்என்பதை தங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.

          3.கிருஷ்ணனின் மூளை அளவில் தாங்கள் சற்று crash ஆனதைப் போல் தெரிகிறது. நீரின் தனிச்சுழி வெப்பநிலையை கணக்கிடுவதற்கு நாங்கள் கணிதத்தின் Extrapolation முறையைத் தான் கையாளுகிறோம். இதன்படி ஹோமோ செப்பியன் மூளை அளவைக் கணக்கிடுகிற பொழுது ஹோமோ எரக்டஸ் ஆஸ்ட்ரலோபதிகஸ் போன்ற மண்டை ஓடுகளை வைத்துதான் ஒரு Extrapolation கணக்கை சொல்கிறோம். இது ஆர் எஸ் எஸ்ஸை அம்பலப்படுத்த பெரிதும் உதவுகிறது. நீங்கள் சொல்வதைப் போல இதில் தவறு இருப்பினும் நமக்கு மற்றுமொரு கணித முறை இருக்கிறது. 1இலட்சம் பிளேடுகள் கொண்ட பெட்டியில் ஒரு பிளேடு தரமற்றதாக இருப்பதற்கு நாம் பாய்சான் நிகழ்தகவு பரவலைப் பயன்படுத்துகிறோம். கிருஷ்ணனை அங்குள்ள மக்களில் அதிக மூளை கொண்டவராக பரிசீலித்து அரிதான நிகழ்ச்சிக்கான நிகழ்தகவை கணக்கிட்டு பார்த்தால் என்ன விடை கிடைக்கும்? அந்த முடிவை அறிவிக்கலாம் இல்லையா? இது இரண்டுமே தவறு என்றால் அதற்கு கணிதமோ டார்வினோ பொறுப்பல்ல. உங்களின் மதபிடிப்புதான் காரணம். வேதிக் கணிதம் தாங்கள் வாழ்கிற காலத்தில்தான் கோலோச்சுகிறது என்பது உங்களுக்கு அவமானம் இல்லையா? அதில் Scientific Rigor தொலைந்து போகிறது இல்லையா?

          4. மூளை மனம் என்றால் என்ன? எங்களுக்கு விளக்கவும். தாங்கள் கேட்ட கேள்வியை (“முதலாவது மூளை சம்பந்தப்பட்டது. இரண்டாவது மனம் சம்பந்தப்பட்டது. நீங்கள் இளையராஜா இசையை அனுபவிப்பீர்களா, அல்லது அதன் frequency பற்றி ஆராய்ச்சி செய்வீர்களா?”) உங்களிடம் திருப்பிக்கேட்கிறேன் பதில் சொல்லுங்கள். மதங்களின் பெயரில் மனிதர்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட்டும் சுரண்டபட்டும் இருக்கிற பொழுது தாங்கள் பக்தி பாசுரம் பாடுவீர்களா? இல்லை அம்மதங்களிலிருந்து மக்களை விடுவிக்க ஆராய்ச்சி செய்வீர்களா? மதவிசயத்தில் தாங்கள் பயன்படுத்தப் போவது மனமா? மூளையா?

          5. கீழ்கண்ட வரிகளில் தாங்கள் கூறும் முயற்சிகள் பரிணாமத் துறைக்கு பொருந்தாதா? “Real numbers என்ற கோட்பாட்டை துல்லியமாக வரையறுக்க எவ்வளவு மெனக்கெடுகிரார்கள் என நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அதன் மீதுதான், limits என்பதில் தொடங்கி மொத்தமும் அமைக்கிறார்கள். Approximations என வரும்போது கூட, இது approximation என சொல்லி, முடிந்தால் உண்மையான அளவுக்கு எவ்வளவு நெருக்கத்தில் உள்ளது என்றும் கூறுகிறார்கள். ஒரு approximate அளவே உண்மையான அளவு என கூறுவதில்லை.”

          பொறுமையாக எழுதுங்கள். சற்று இடைவெளிக்குப் பின் சந்திக்கிறேன்.

        • நீண்ட வருடங்களாக அடைக்கப்பட்ட குகையில் இருந்த உய்ரினங்களுக்கு கண்கள் உருவாகவில்லை

          ஒரு தீவில் இருந்த மிக நீண்ட காம்புடன் இருந்த மலரை பார்த்த டார்வின் , அங்கு மிக நீண்ட அழகு உடைய குருவி கிறுக்க வேண்டும் என்று கூறினார் . அதன்படி அப்படி ஒரு உயிரினம் தேடி கண்டு பிடிக்கப்பட்டது

          ஆழமான கடலில் உயிரினங்கள் இருக்காது என்று நினைத்த இருட்டில் , எரிமலையில் இருந்து வரும் வெப்பத்தை சக்தியாக கொண்டு இயங்கும் யுஇரினங்கல் கண்டு பிடிக்கப்பட்டன .

          அரைகுறை எலும்பை வைத்து சொல்வதையே நம்ப முடியவில்லையே , எந்த ஆதாரமும் இல்லாத கிருஷ்ணனை எப்படி நம்ப முடிகிறது ?

          கற்பனை நண்பனை கைவிடுதல் கஷ்டம்தான்.

      • “உழைப்புதான் மனிதனை விலங்குகளிடத்திலிருந்து பிரிக்கிறது என்கிற மார்க்சியத்தின் அடிப்படையே இங்குதான் நிறுவப்படுகிறது.”

        அப்டி போட்ரா சக்கைன்னானாம்!

        என்னடா இன்னும் புரட்சியை நுழைக்கலயேன்னு பார்த்தேன். என்ன இவ்வளாவு அடக்கமா இருக்கீங்க ! இந்த பிரபஞ்சம் உண்டானதுக்கே காரணம் நாம்பதாம்ப்பா !

    • தொடர்வோம்….

      சிந்தனை என்று வருகிற பொழுது அதை கணிதம், இயற்பியல், உயிரியல் என்று பார்ப்பது சரியான அணுகுமுறையா என்று எனக்குத் தெரியவில்லை. வேண்டுமானால் ஸ்பெஷலிஸ்டுகள் இருக்கலாம். ஆனால் துண்டாக வெட்டி எறியப்பட்ட சிந்தனைப்புலம் என்ற ஒன்று கிடையாது.

      இயற்பியலில் கணிதத்திற்கு அர்த்தம் கேட்காதே என்று என்று என் பேராசியர்கள் பலமுறை சொல்வார்கள். விதாண்டாவாதத்திற்கு ஒரு உதாரணத்தை பரிசிலீப்போம். 1+2 என்னவென்று கேட்டால் மூன்று என்று சொல்லலாம் அதே சமயம் ஒரு ஆப்பிளையும் இரண்டு ஆரஞ்சுகளையும் கூட்டு என்றால் என்ன அர்த்தம்? 3 பழங்கள் என்று பதில் சொல்லலாம். இல்லையென்றால் வாயில் போட்டு சாறு பிழியலாம். இதைத் தாண்டி இந்தக் கணக்கிற்கு வேறு அர்த்தம் உண்டா?

      கணிதம் அர்த்தங்களின் அடிப்படையிலேயே இயங்குவதாக எனக்குப்படவில்லை. ஆனால் எதை எப்பொழுது கூட்ட வேண்டும் என்பதற்கான வரையறைகளை மட்டும் சொல்கிறது. இரண்டு எண்களைக் கூட்ட வேண்டுமானால் அவை சேர்ப்பு விதிக்கு (Law of Association) உட்பட வேண்டும். (1+2)+3 என்றாலும் 1+(2+3) என்றாலும் ஒரே பதிலைத் தரவேண்டும். இந்தவிதியை எங்கிருந்து பெற்றீர்கள்?

      மேலும் இரு எண்களைக் கூட்ட வேண்டுமானால் அவற்றிற்கு பொதுவான கூட்டல் சமனி இருக்க வேண்டும். அது தான் சுழி. எந்த எண் 1+0=1ஆக வருகிறதோ எந்த எண் 2+0=2 ஆக வருகிறதோ அந்த இரு எண்களைத்தான் கூட்ட இயலும் 1+2=3, மேலும் இதற்கு பிறந்த குட்டியும் இந்த விதியை ஒப்புக்கொள்கிறது 3+0=3. இவை எல்லாவற்றிற்கும் மேலாக 0,1,2 என்ற எண்கள் ஒரு குலத்தின் (சாதி அல்ல) கீழ் வரவேண்டும். அல்லது ஒரு NXN Spaceன் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். அண்ணாச்சி மளிகைக்கடையிலே கூட்டுகிற கணக்கிற்கு பின்னாடி இருக்கிற விதிகளை கணிதவியலாளர்கள் எங்கிருந்து பெற்றனர்? அவை வரையறைகளா? வாழ்க்கைப் போராட்டம் என்று டார்வின் சொல்வது அரைகுறை ஆதாரங்கள் என்றால் Abstract Mathematics எந்த வகையில் சேத்தி?

      Richard Feynman கணிதம் இயற்பியலின் அணிகலன் என்றார். (Maths is a jewel of Physics). இதன் அர்த்தம் ஓரளவிற்கு மேல் கணிதத்தை வைத்தும் விளக்கமுடியாது. மாறாக மனிதர்கள் உள்ளே புகுந்து வேலை செய்ய வேண்டும். சில உதாரணங்கள்.

      1. Theory of Small oscillations சிறு அலைவுறு இயக்கங்களுக்கான கோட்பாடு; குழந்தையை ஆட்டிவிடுகிற தூரியின் அலைவுறுநீளத்திற்கான சமன்பாட்டை தருவி என்கிற பொழுது கணிதத்தைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் தீர்வை நெருங்குகிற பொழுது வம்படியாக கணிதத்தை கழற்றிவைக்க வேண்டும். மீச்சிறு கோணங்களில் Sintheta வும் thetaவும் ஒன்றுதான். இப்படிச்சொல்லவில்லையென்றால் குழந்தையை மட்டுமல்ல நிறமாலை (Spectroscopy) துறையையும் ஆட்டியிருக்க முடியாது. அதாவது தொட்டியை தயவு செய்து வேகமாக இழுத்து ஆட்டாதே. அப்படி ஒரு நிலை கிடையாது அப்படியே இருந்தாலும் அது அலைவுறு இயக்கம் அல்ல என்று ஒரே போடாக போட்டுத்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். கணிதம் துல்லியமான தோராயங்களால் (Accurate Approximations) தான் உயிர் பிழைக்கிறது.

      2. உம்பெருமான் எடிங்கடன் சந்திரசேகரிடம் எப்படி நடந்துகொண்டார்? அண்டபெருவெடிப்புக்கொள்கைக்கு சந்திர சேகரின் எல்லை ஒரு ஆதாரம். அண்டபெருவெடிப்பு முன்னொரு காலத்தில் ஒரு கருதுகோளாகத்தான் பார்க்கப்பட்டது. அண்டம் வெடிந்திருந்தால் பல்வேறு நட்சத்திரங்களின் இன்றைய நிலை என்ன? கருந்துளை (Balck Hole) எப்படி உருவாகியிருக்க முடியும்? சந்திரா என்ன சொன்னார்? வெள்ளைக் குள்ள நட்சத்திரங்களின் அதிகபட்ச எடை 1.39சோலார் நிறையை விட அதிகம் இருக்க முடியாது. ஈர்ப்பு விசை உருவாக்குகிற வெப்பத்தில் அவை வெடித்துச் சிதறும். அப்படி வெடித்தால் அதன் அடுத்த நிலை கருந்துளை என்பதாகும். கருந்துளை உருவாவது ஏற்கப்படவில்லை என்ற காரணத்தால் சந்திரசேகர் லிமிட் எடிங்கடனால் நிராகரிக்கப்பட்டது. இதற்கு காரணம் எடிங்கடனின் கருத்துமுதல்வாத நோக்கு நிலை. கணிதமோ இயற்பியலோ ஒரு பொருட்டே அல்ல. வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது என்கிற பொழுது உங்களது எம்பெருமானும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல என்கிற பொழுது டார்வினுக்கு மட்டும் என்ன ஓரவஞ்சனை?

      3. குவாண்டம் இயற்பியலில் அலை-துகள் இருமை (Wave-Particle Dulaity) நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அறிஞர் டி-பிராக்லி அலை-துகளை தொடர்புபடுத்தி உருவாக்கிய சமன்பாடு கற்பிதத்தின் (Hypothesis) அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. நீங்கள் சொல்கிற டார்வினிடம் இருந்த அரைகுறை ஆதாரங்கள் கூட கிடையாது. ஆனால் இன்றைக்கு சோதனையின் மூலமாக பல்வேறு ஆதாரங்களை தரமுடிந்திருக்கிறது. என்ன காரணம்? பதின் மூன்றாம் வாய்பாட்டை 20தடவை உங்களைப் போன்றவர்களை எழுதச் சொல்லவேண்டும்.

      இது ஒருபுறம் இருக்க கணிதமும் அறிவியல் துறையின் ஒரு பகுதியே என்கிற பொழுது டார்வின் கோட்பாடுகளுக்கு கணிதத்தால் மிகப்பெரிய சேவையை செய்ய முடியும். எந்தத் துறையைவிடவும் டார்வின் கோட்பாடுகளுக்கு கணிதத்தால் மகத்தான பங்களிப்பை வழங்கமுடியும் என்கிற பொழுது விவாதம் எந்த திசையில் செல்கிறது என்று பிடிபடவில்லை. நேரமிருந்தால் பரிமாணத்திற்கு கணிதத்தின் பங்கு என்ன என்று சில உதாரணங்களை வைக்கலாம். ஆனால் அதுக்கு ஒரு நிபந்தனை உண்டு என்று நண்பர் மாவோ மேலே சுட்டிக்காட்டியிருக்கிறார் இப்படி.

      “இன்றுள்ள விஞ்-அறிவியல்நுட்பம் இந்த பூமியில் மட்டுமல்ல இன்னும் ஏழுபூமியில் உள்ளவர்களுக்கு உணவுதேவையை மருத்துவசேவையை பூர்த்திசெய்கிற பலத்தை அடைந்திருக்கிறது. நடப்பது என்னவோ வறுமை பற்றாக்குறை யுத்தபயம் போன்றவைகளே.இதை எப்ப எங்களால் தடுத்துநிறுத்த முடியுமென்றால்..மனிதன் ஒரு அரசியல்பிராணி என்பதை உணர்வதாலும் இந்த “ஜென்டில்மென்” பிரச்சனை தீர்க்கப்படும் போது மட்டும் தான்.”

      ஆனால் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று நமது வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. பார்ப்போம் எங்கு போய் நிறுத்துகீறிர் என்று!

    • பல எழுத்துப் பிழைகளுக்கு மத்தியில் சில திருத்தங்கள்,

      எடிங்டன் என்று வாசிக்க வேண்டும். தவறாக டைப் செய்திருக்கிறேன்.
      பரிணாமம் என்பதை பரிமாணம் என்று எழுதியிருக்கிறேன். திருத்தி வாசிக்கவும்.

  17. உலக ஊடகங்கள் அதாவது முதாலித்தவ ஊடகங்கள் காலவதியான அமைப்பு முறையை சரிசெய்வதற்கு முயன்று வருகின்றன.

    முதாலித்துவ அமைப்பு முறையே! மற்றவன் வயிற்றுக்கு போவதை திருடுவது என்பது தான்.

    புதுமைபித்தன்: அதோ! தங்கமுலாம் பூசியகண்னாடி அது ஏழையின் வயிற்றில் இருந்து திருடியவை தான் என்பது எத்தனையே சகாப்தங்களை கடந்துதான் எம்மால் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது.சூ

    காரணகாரியம் இல்லாமல் இந்த பூவுலகில் ஏதுவுமே நடப்பதில்லை. எல்லோருக்கும் ஒரு தேவை உண்டு வசதி படைத்தோருக்கு இன்னுமின்னும் அதிதேவைகள் உண்டு.

    இதற்காகவே யுத்தங்கள் படையெடுப்புகள் நடைபெறுகின்றன.
    இந்தியாவில் பெரும்பகுதியான இடங்களில் மதசண்டை இனச் சண்டையாக தான் மாறியமைக்க முடியும். இதற்கு சரியயான தேர்வு நரேந்திர மோடி அவர்களோ.

    யாரும் கேள்வி கேட்கலாம் ஜனநாயகமகாகவே அவர் தெரிவு செய்யபட்டார் என்று- உண்மை தான். இந்திய மக்களின் சிந்தனை அந்த மாதிரி தான் இருக்கிறது.

    கிட்லர் பதவிக்கு வந்ததும் ஜனநாயகரீதியில் தான்..

    எள்ளுகுத்துபடட்டும் எண்ணைகாக பாத்திருக்கிறோம்.

    சிறுகுறிப்பு; >தேவன் ஏழாம் நாள் ஓய்வாக இருந்தார்.அவர் எதையும் படைக்கவில்லை என்பதாக மாற்றி எழுதவும்.இந்த அபச்சாரபணி இன்று ஐரோப்பாவில் நாகரீகம் இல்லா விட்டாலும் தமிழ்நாட்டில் நாகரீகமாக்கி உங்களை கழுமரத்தில் ஏற்றி விடுவார்கள்.இது வெறும் முன்எச்சரிக்கையே!.-

  18. அன்புள்ள தென்றல், ராமன்,
    நான் சொல்லவருவதை நீங்கள் இருவரும் appreciate செய்ததாக தெரியவில்லை.

    ஒரு எளிய கேள்வி. இருநூறு ஆண்டுகால தனது முன்னோர்கள் கண்டறிந்த கூறுகளைக் கொண்டு, ஆண்ட்ரூ வைல்ஸ் Fermat’s theorem என்ற கூற்றின் நிரூபணத்தை 1994 ஆம் ஆண்டு பூர்த்தி செய்தார். அதாவது, 1993 வரை இக்கூற்று நிரூபிக்கப் படாத ஒன்று. 1994 இல் நிரூபிக்கப்பட்டது.

    பரிணாம வளர்சிக் கோட்பாடு ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறீர்கள். இதன் நிரூபணம் யாரால், எந்த ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது.

    நேரடி பதிலை யோசியுங்கள். நான் பத்தி பத்தியாக எந்த கோணத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன் எனப் புரியும். கணிதத்துக்கும், அறிவியலுக்குமான வித்தியாசம் புலப்படும்.

    நான் புதிதாக எதுவும் கூறிவிடவில்லை. I have just discussed the obvious.

    // ஆதாரங்களை கொண்டு நிறுவுவதும் நிரூபணம் பூர்த்தியாவதும் எல்லா அறிவியல் துறையிலும் உள்ள செயற்பாடுகள் தான் //

    உண்மைதான். ஆனால், நீங்கள் ஆப்பரிக்க யானை போன்ற எவ்வளவு ஆதாரம் கொடுத்தாலும், அவையெல்லாம் இக்கோட்பாடு உண்மையாய் இருக்க சாத்தியத்தை அதிகப்படுத்துமே தவிர, அறிவியல் கோட்பாடுகளை முழுமையாக நிரூபிக்க முடியாது. உதாரணமாக, ஐன்ஸ்டீன் வரும் வரை, நியூட்டனின் தத்துவம் “உண்மை” என அழைக்கப்பட்டது. இதற்கு உலக நிகழ்வுகளில் தொடங்கி, கோள்களின் சுழற்சி வரை ஏகப்பட்ட ஆதாரங்கள் இருந்தன. எனினும், ஐன்ஸ்டீனின் கோட்பாடு அதில் திருத்தம் செய்தது. “உண்மை” என மூடி வைத்தபின் திருத்த முடியுமா? ஐன்ஸ்டீன் எவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பார் என யாருக்குத் தெரியும். இவரின் கோட்பாட்டை எதிர் காலத்தில் திருத்த மாட்டார்கள் என என்ன உத்தரவாதம். எனில் இது எப்படி “உண்மைக் கூற்று” ஆகும். மறுபுறம், Fermat theorem என்பது முடிந்து போன விஷயம். இனி இந்தக் கூற்று உண்மையில்லை என எதிர்காலத்தில் யாரும் சொல்ல முடியாது. அது நிரூபிக்கப் பட்டுவிட்ட ஒன்று.

    ———————————————————————-

    இத்தனை எழுதியது அறிவியலை குறை கூறுவதற்காக அல்ல. அறிவியல் முறையின் எல்லைகளை சுட்டிக் காட்ட மட்டுமே. கணிதத்தை உள்ளே இழுத்தது ஒப்பீடு காட்ட மட்டுமே. ஒரு மாம்பழம் சற்று புளிப்பு என்பதை சுட்டி காட்ட, அதைவிட இனிய மாம்பழத்தை தருவதைப் போல. இந்தக் கூற்றும் தவறாக புரிந்து கொள்ளப் படக் கூடும். அறிவியல் செய்யும் ஆய்வுகள் இயற்கையைப் பற்றியவை. அது எதைப் பற்றி ஆயகிறதோ, அது அதனால் படைக்கப்பட்டதல்ல எனவே அதன் நிரூபணங்கள் முழுமையாக இருக்க முடியாது. கணிதம் தானே சொந்தமாக வரையறை செய்து உருவாக்கிய கோட்பாடுகளை ஆராய்வதால், முழுமையாகவும் துல்லியமாகவும் செய்ய முடியும். கணிதம் எதைப் பற்றி ஆய்கிறதோ, அது அதனால் உருவாகப்பட்டது. இதனால், அறிவியல் அதிக உபயோகமானதாகவும், கணிதம் அதிக துல்லியம் கொண்டதாகவும் உள்ளன. யானையின் பலம் நிலத்தில். முதலையின் பலம் நீரில்.

    ————————————————————————-

    ஆதியிலேயே, இந்த விமர்சனம் எழுதுவதன் நோக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

    // இக்கோட்பாட்டை முன்வைத்து எழுதினாலும், மனதளவில் விமர்சனம் வினவு, விடுதலை வகையறாக்கள் மீதானதே. உண்மையாய் இருக்க மிக அதிக சாத்தியம் உண்டெனினும், இக்கோட்பாடு ஐயந்திரிபற, சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்ட உண்மை (undisputed fact) என்ற ரீதியில் இவர்கள் பேசுவதனால்தான் விமர்சனம் எழுத வேண்டி உள்ளது. //

    மற்றபடி இக்கோட்பாடு உண்மையாய் இருக்க அதிக சாத்தியம் உண்டேன்றுதான் நினைக்கிறேன். இந்து மத புராண ரீதியிலான உலகப் படைப்பு கோட்பாட்டுக்கு முட்டு கொடுக்க நான் முயல்வதாக தோன்றுவது மாயை! பாற்கடலில் கிடந்தபடி மகாவிஷ்ணு உலகைப் படைத்தார் என்ற கப்சா கூற்றை நிராகரிக்க டார்வின் எல்லாம் தேவையில்லை. சாதாரண common sense போதும். எறும்பை நசுக்க புல்டோசர் எதற்கு?

    ———————————————————-

    எனது மத நம்பிக்கைகளை முன்வைத்து தென்றல் சில கேள்விகள் கேட்டார். நான் செய்வது இரட்டை குதிரை சவாரி. அறிவியல் எனக்கு மிகவும் பிடிக்கும். கலைஞர் பாணியில் சொல்வதானால், “அறிவியல் வாழ்க என கோஷம் போட்டவனே நான்தான். நானே ஒரு அறிவியல் ஆர்வலன் தான்”. அதே சமயம் இந்து மதத்தின் சில கூறுகளும் பிடிக்கும். தொலைக்காட்சி சீரியல் பாணியில் சொன்னால், ஒன்று என் மனைவி, மற்றது துணைவி. இரண்டையும் ஒரே வீட்டில் வைத்தால் தான் பிரச்சனை. ஆளுக்கொரு வீடு என்றால் பிரச்சனை இல்லை. மறுமொழி 9 தொடர்ச்சியாக, இந்த இரட்டை குதிரை சவாரி பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

    ———————————————————-

    // நிகழ்தகவை கணக்கிட்டு பார்த்தால் என்ன விடை கிடைக்கும்?

    நிகழ்தகவு அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மனிதரின் மூளை எப்படி உள்ளது என மற்றவர் மூளையை ஆராய்ந்துவிட்டு சொல்ல முடியாது. திரு கிருஷ்ணன் என்ற நபரின் மூளை பற்றி குறிப்பாக தெரியவேண்டும் என்றால் அவரின் மூளையை ஆராய்ந்தால் மட்டுமே முடியும்.

    // உம்பெருமான் எடிங்கடன் சந்திரசேகரிடம் எப்படி நடந்துகொண்டார்?

    என்னய்யா, திடீரென இந்த ஆய்வுக்குள் சென்று விட்டீர்கள்? Empire of stars புத்தகம் படித்திருக்கிறீரா? 🙂

    —————————————————————-

    அறிவியல் முறை பற்றி முதலில் பேசிவிட்டு பின்னர் டார்வின் கோட்பாடு மீது இதே விதண்டாவாத பாணியில் விரிவாக விமர்சனம் எழுத திட்டமிட்டிருந்தேன். இப்போதே நாக்கு தள்ளிவிட்டது. அந்த திட்டத்தை தொங்கலில் விட வேண்டியது தான் போலிருக்கிறது. பார்ப்போம் 🙁

    தென்றல், அதிகமாக குறுக்கே பேசி உலகிற்கு கிடைக்க இருந்த ஒரு முக்கிய பொக்கிஷத்தை கெடுத்துவிட்டீர்கள், அல்லது உலகில் மேலுமொரு குப்பை சேராமல் காத்துவிட்டீர்கள். நீவிர் வாழ்க 🙂

  19. அன்புள்ள தென்றல் ,
    // திரேதா யுகத்தில் அதவாது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிருஷ்ணுக்கு மூளையும் கம்மி முதுகெலும்பும் கிடையாது. முதுகு எழும்பு நெருப்பை கண்டுபித்த காலத்தில் இடம்பெயர்ந்த காலத்தில் வந்தது, மதம் அடிபடுகிறது //

    இதை கவனிக்காம உட்டுட்டனே! என்ன சார் இந்தியாவின் தலைநகரம் ஜப்பான் அப்படின்னு சொல்றீங்க? “முதுகெலும்பு” என எதைக் குறிப்பிடுகிறீர்கள்? Vertebral column தானே? அது மீனுக்கே உண்டே. .முதுகெலும்பு கொண்ட மீன்கள் காம்ப்ரியன் யுகத்தில், சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாயின. இந்த ஹோமினிட்கள், நெருப்பு எல்லாம் மிகப்பிந்தியவை, அதிக பட்சம் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கே முன்பு வந்தவை. கிருஷ்ணனை ஒரு ஹோமினிட் என்று தானே கருதுகிறீர்? வேறெதையோ சொல்ல வந்து வாய் தவறி “முதுகெலும்பு” என சொல்கி விட்டீர்களா?

  20. Proving Evaluation Theory by the process of Mutation:

    [1]Mutations to control genes can transform one body part into another. Scientists have studied flies carrying Hox mutations that sprout legs on their foreheads instead of antennae!
    http://evolution.berkeley.edu/evolibrary/article/mutations_05

    [2]Nylon was first made in 1935. Just 40 years later, in 1975, a bacterium was discovered that is able to digest and live off not nylon itself, but waste chemicals from its manufacture – chemicals that had not existed before nylon production began. It was later shown this bacterium, now known as Arthrobacter KI72, has evolved several types of enzymes capable of utilising these waste products. One type, 6-aminohexanoic acid hydrolase, encoded by genes called nylBs, has become known popularly as “nylonase”. As a dramatic example of evolution in action, nylonase has attracted a lot of attention over the years. But there has also been a great deal of confusion about how it evolved.
    http://www.newscientist.com/article/dn16834-five-classic-examples-of-gene-evolution.html?full=true#.U647rkA5iW4

  21. மரபியல் மாற்றம் மூலம் பரிணாமம் கோட்பாட்டை நிரூபித்தல் :Part I

    அறிமுகம் :

    டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம் என்ற இக் கட்டுரைக்கு உறுதுணையாக எழுதப்படும் “மரபியல் மாற்றம் மூலம் பரிணாமம் கோட்பாட்டை நிரூபித்தல்” என்ற இந்த துணைகட்டுரையீன் நோக்கம் தலைப்பை போன்றே மிக எளிமையானது.அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவை.மனிதஉடலுக்குள் கோடிகணக்கான கண்ணுக்கு புலப்படாத செல்கள் உள்ளன்.இச் செல்களை காண பல வகைபட்ட நுண்ணோக்கிகள் மட்டுமே பயன்படும்.ஒவ்ஒரு செல் உள்ளும் DNA[Deoxyribonucleic acid] உள்ளது.இந்த DNA, இரட்டை சுருள் அமைப்புடன் உள்ளது என்பதை கண்டு உணர்ந்ததுக்காக ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியவர்கள் நோபல் பரிசு பெற்றனர்.DNA உள் காணப்படும் நான்கு மூலக்கூறுகள் அடினைன் ( A), சய்டோசின் (C ), குவானைன் (G) மற்றும் தைமின் (T) ஆகியவை. Aவும் Tயும் நண்பர்கள் என்பதால் இவர்கள் இருவரும் மட்டுமே கை கோர்ப்பார்கள். அதுபோலவே Gயும் C யும் இணைவார்கள். [ AT, G C ]இந்த DNA கோடிகணக்கான A ,T,G ,C மூலக்கூறுகளால் உருவானது.

    con….

  22. மரபியல் மாற்றம் மூலம் பரிணாமம் கோட்பாட்டை நிரூபித்தல் : Part II

    Genes [மரபியல் தொகுப்புகள்]

    பல நூறு கோடி a-t, g-c இணைப்புகள் மூலம் கட்டமைக்கபட்ட DNA வை எளிமைபடுத்த ஒரு ரயில் வண்டியீன் அனைத்து தொடர் பெட்டிகளுக்கு உதாரணமாக கொள்ளலாம் எனில் அதில் உள்ள தொட்ற்சியான 5 பெட்டிகளை Gene [மரபியல் தொகுப்பு] க்கு ஒப்பிடலாம்.மனித செல்லில் உள்ள DNA வுக்குள் 20,000 முதல் 25,000 வரையிலான மரபியல் தொகுப்புகள்[Genes]பொதித்து வைக்கபட்டு உள்ளன. ஒவ்வொரு Genes [மரபியல் தொகுப்பும்]ஒரு குறிப்பிட்ட நம் உடல்சார்ந்த பண்புகளை[physical traits] கொண்டு உள்ளன. இந்த உடல்சார்ந்த பண்புகள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு இனபெருக்கத்தீன் போது கடத்தபடுவதால் தான் நாம் நம் பெற்றோர்கள் உடல்சார்ந்த பண்புககளை பெருகின்றோம்.

    con…

  23. மரபியல் மாற்றம் மூலம் பரிணாமம் கோட்பாட்டை நிரூபித்தல் : Part III

    மரபுவழி உடல் குறைபாடுகள் [genetic disorders]

    மரபுவழி உடல் குறைபாடுகள் [genetic disorders] ஏற்பட காரணம் ,இனபெருக்க செயலின் போது இணையும் கருமுட்டையும்[Ovum] ,விந்து அணுவும் [sperm cell] பெற்றோர்கள் இடம் இருந்து குழந்தைக்கு கடத்தபடும் Gene [மரபியல் தொகுப்பில்] உள்ள குறைபாடுகளே முக்கிய காரணம். ஒரு Gene [மரபியல் தொகுப்பில்] உள்ள குறைபாடு காரணமாக 6000 வரையீலான மரபுவழி உடல் குறைபாடுகள் [genetic disorders] பிறக்கும் 200 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்பட சாத்தீயம் உள்ளது கண்டு அறிய பட்டு உள்ளது.
    உதாரணம் :
    cystic fibrosis, sickle cell disease, Fragile X syndrome, muscular dystrophy, or Huntington disease

    ஒன்றுக்கு மேல்பட்ட Genes [மரபியல் தொகுப்பில்] ஏற்படும் குறைபாடு காரணமாகவும் மரபுவழி உடல் குறைபாடுகள் [poly genetic disorders] ஏற்பட வாய்ப்பு உண்டு.
    உதாரணம் :
    Alzheimer’s disease, breast cancer, leukemia, Down syndrome, heart defects, and deafness.

    Genes [மரபியல் தொகுப்பில்] குறைபாடு அல்லது மாற்றம் [mutation] ஏற்பட காரணம் என்ன ? என்ற கேள்வி நம் உள் எழும் எனில் நாமும் டார்வின் பரிணாமம் கோட்பாட்டை ஒட்டி சிந்திக்கீன்றோம் என்பது புலன் ஆகும்.

    con….

  24. மரபியல் மாற்றம் மூலம் பரிணாமம் கோட்பாட்டை நிரூபித்தல் : Part IV

    Genes [மரபியல் தொகுப்பின் ] விவரங்களை பொருவது எப்படி ?

    மனித மரபுத்தொகுதி ஆய்வு திட்டம்[ Human genome project] மூலம் கடந்த 27 ஆண்டுகலாக மனித DNA மீதான ஆய்வுகள் நடத்தபட்டு DNA வில் உள்ள 25,000 வரையிலான Genes [மரபியல் தொகுப்பிகள் ] கண்டு அறியபட்டு அவை தரவுதளங்களில் [database] வரிசை[sequence] படுத்த பட்டு உள்ளன.உதாரணத்துக்கு இத் தகவலை கீழ் கண்ட இணைய தளத்தீன் தரவுதளங்களில் [database] இருந்து நாம் பெற முடியும்.

    [1]DNA Data Bank of Japan [DDBJ]
    http://www.ddbj.nig.ac.jp/

    [2]National Center for Biotechnology Information [ NCBI]
    http://www.ncbi.nlm.nih.gov/

    [3]European Molecular Biology Laboratory [EMBL ]
    http://www.embl.org/

    con….

  25. மரபியல் மாற்றம் மூலம் பரிணாமம் கோட்பாட்டை நிரூபித்தல் : Part V

    கதிரியக்கத்தால் ஏற்படும் Genes [மரபியல் தொகுப்பில்] ஏற்படும் குறைபாடு அல்லது மாற்றம் [mutation] :

    1927 டாக்டர் H.J. முல்லர் அவர்கள் ஆய்வுக்காக டிரோசோஃபைலா பழ ஈக்களை கதிரியக்கத்துக்கு உட்படுத்தீனார்.இவை மிக விரைவாக இனபெருக்கம் செய்யும் என்பதால் அவற்றீன் நூற்றுகணக்கான சந்ததிகளையும் Dr. H.J. Muller அவர்களால் குறுகிய காலத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த முடிந்தது. கதிரீயக்கம் காரணமாக டிரோசோஃபைலா பழ ஈக்களீல் ஏற்பட்ட கோணலான இறக்கைகள்[crooked wings ] பழ ஈக்களீன் பல தலைமுறைகளுக்கும் தொடர்வதை கண்டு அறீந்தார். டாக்டர் முல்லர் அவர்களுக்கு இந்த ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவ் ஆய்வு நடந்த கால கட்டத்தில் அறிவியல் சமுகத்துக்கு Genes [மரபியல் தொகுப்பு] பற்றிய அறிவு முழுமை அடையாமல் இருந்ததையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.

    con…

  26. மரபியல் மாற்றம் மூலம் பரிணாமம் கோட்பாட்டை நிரூபித்தல் : Part VI

    மரபியல் தொகுப்பில்[Genes] ஏற்படும் மாற்றங்கள் [Mutations] மூலம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை புரிந்துகொள்ளுதல் [Understanding evolution theory by Gene Mutation]

    [1]Hox ஜீன்கள் கரு வளர்ச்சியை[ embryonic development] கட்டுப்படுத்தும் வலிமை வாய்ந்தவை. Hox ஜீன்கள் (ஈக்கள் மற்றும் மனிதர்கள் உட்பட) பல விலங்குகளில் காணப்படுகின்றன.இவை கட்டுப்பாடுத்தும் ஜீன்கள் என்று அழைக்கபடுவதற்கு காரணம் இவை மற்ற ஜீன்களீன் செயல்பாடுகளை கட்டுப்டுத்துகீன்றன. மேலும் Hox ஜீன்களில் ஏற்படும் மாற்றம் [mutation] உயிரிங்களீன் உடல் அமைப்பை மாற்றும் அளவுக்கு வலிமையானவை. மரபியல் விஞ்ஞானிகள் நடத்தீய ஈக்கள் ஆய்வு மூலம், Hox ஜீன்களில் ஏற்படும் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் ஈக்களீன் நெற்றியில் உள்ள உணர் கொம்புகளுக்கு [antennae] பதிலாக கால்களை முளைக்க வைக்க முடியும் என்பதை நிறுபித்தார்கள்.

    [2]MWS/LWS ஜீன்களில் ஏற்பட்ட மாற்றம் [mutation] காரணமாக வெவ்வேறு ஸ்பெக்ட்ரம் [நிறங்களை]நம்மால் கண்டறிய முடிகின்றது.

    [3]ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கலே [mutation] பரிணாம வளர்சிக்கு அடிப்படை. சுற்றுச்சூழலில் உள்ள கதிர்வீச்சு,இரசாயன பொருட்கள் காரணமாகவும் , DNA வை மறுபிரதி[ DNA replication] எடுக்கும் போதும் ஜீன்களில் மாற்றம்[gene mutation] நடைபெறுகின்றன.

  27. அன்புள்ள சரவணன்,
    மனித இனத்தின் நேரடி மூதாதை இனம் எது? அதாவது, எந்த இனம் பரிணாம வளர்ச்சி அடைந்து மனித இனமாக மாறியது? மானுடவியல் அறிஞர்கள் தங்கள் சச்சரவுகள் நீங்கி ஒரு முடிவுக்கு வந்து விட்டனரா? எனில்,அந்த இனத்தை X என அழைப்போம். இந்த X என்ற உயிரினத்தில் இருந்து தான் மனித இனம் உருவானது என்ற கூற்றை சரி பார்க்க எனக்கு சில ஆதாரங்கள் தேவை. முதலில் X க்கு இதயம் என்ற ஒரு பாகம் இருந்ததா இல்லையா? நம்மைப் போல் நான்கு அறைகளா, அல்லது தவளை போல் மூன்றா? இதையெல்லாம் ஆராய X இன் இதயம் சாம்பிள் கிடைக்குமா? அல்லது X இன் வெறும் எலும்புத்துண்டுகள் மட்டும்தான் கிடைத்துள்ளனவா? இதயம் சாம்பிள் கிடைக்காமல், அந்த X என்ற இனத்துக்கு இதயம் என்றொரு பாகம் இருந்தது என்பதையே சந்தேகப்படுகிறேன். இதயம் இல்லாத ஒன்றில் இருந்து இதயம் உள்ள ஒரு உயிரினம் உருவாக முடியுமா?

    • நண்பர் வெங்கி,

      கொம்பு இருந்த ஆப்ரிக்க யானை , பின்பு கொம்பு காணாமல் போன ஆப்ரிக்க யானை;
      மூலை சிறுத்த கிருஷ்ணா ;

      பற்றி நீங்களும் ,தென்றலும் ஆராய்வதை பார்த்த பின் தான் இன்றைய நாட்களில் நடைபெறும் பரிணாம வளர்ச்சியுடன் இனைந்த gene mutation ஆய்வுகளை பற்றி எழுதினேன். இப்படி பல நூறு கோடி ஆண்டுகளுக்கு பின் சென்று பரிணாம வளர்ச்சியை பற்றி ஆராயும் போது உள்ள நடைமுறை சிக்கல் என்ன என்றால் ஆதாரங்களை நேரடியாக கொடுக்க இயலாது என்பது தான். மானுடவியல் [humanistic] சார்ந்த மறைமுகமான ஆதாரங்கள் கொடுக்க படும் போது உங்களால் ஏற்க இயலவில்லை அல்லவா ?

      எனவே நான் , நீங்கள் இருவரும் நடத்தும் வரலாறுக்கு முந்தைய கற்காலத்தை பற்றிய விவாதத்தில் கலந்து கொள்ள இயலாது. அதே சமயம் பரிணாம வளர்ச்சி பற்றி இன்றைய காலகட்டத்துடன் இணைந்த genetics தூறையீல் நடக்கும் ஆய்வுகளையும் , அவற்றீன் முடிவுகளையும் உங்களுடன் பகிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

      நன்றி வெங்கி !

      • நண்பர் சரவணன்,
        நிச்சயமாக. நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் இக்கோட்பாட்டின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன. அவற்றை நான் நிராகரிப்பதாக கருத வேண்டாம். ஆனால், எவ்வளவு ஆதாரங்கள் கொடுத்தாலும், அறிவியல் துறையின் எந்த கூற்றையும் சர்ச்சைக்கப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்ட உண்மை (undisputed proven fact) என சொல்ல முடியாது என்ற கருத்தை வலியுறுத்தவே, அதிபயங்கர விதண்டாவாதம் செய்கிறேன். அவ்வகையில்தான் ஆதி மனிதனின் இதயம் கேட்பதெல்லாம்!

        உங்கள் கட்டுரை மற்றும் சுட்டிகளுக்கு நன்றி.

        • நண்பர் வெங்கி,

          அம்மை நோய்களுக்கு குழந்தை பிறக்கும் போதே தடுப்புசி போடாமல் வந்த பின்பு வேப்ப எலை தடவும் சமுகத்தில் பிறந்த நாம், அறிவியல் துறையில் நிருபணம் செய்ய பட்ட அறிவியல் கோட்பாடுகளையும் நம்ப மாட்டோம் என்று கூறுவது இச் சமுகத்துக்கு அறிவாளிகள் செய்யும் துரோகமாகவே நான் கருதுகீன்றேன்.

          //எவ்வளவு ஆதாரங்கள் கொடுத்தாலும், அறிவியல் துறையின் எந்த கூற்றையும் சர்ச்சைக்கப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்ட உண்மை (undisputed proven fact) என சொல்ல முடியாது என்ற கருத்தை வலியுறுத்தவே, அதிபயங்கர விதண்டாவாதம் செய்கிறேன்.//

        • சரவணன் சார்,
          நல்லா ஒரு குவாட்டர் அடிச்சிட்டு புலம்பணும் போல இருக்கு. இந்த உலகத்துல யாரும் என்னைய புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க. கல்லூரி காலத்துல என் படிப்புக்கு ஸ்நானப் ப்ராப்தி கூட இல்லாத “Introduction to anthropology” அப்படின்னு கோர்ஸ் எல்லாம் எடுத்து படிச்சிருக்கேன் சார் (எவ்வளோ மார்க் எடுத்தேன்னு கேக்கப்படாது).

          நான் என்ன இதெல்லாம் பொய், நம்பாதீங்கன்னா சொல்றேன். நான் என்ன சொல்ல வரேன்னா… சரி, உடுங்க. எத்தனை வாட்டி அதையே சொல்றது.

          தடுப்பூசி போடாம, வியாதி வந்தா பூசாரி, கோவில்னு போறவனை என்கிட்டே அனுப்பி விடுங்க. நான் புத்திமதி சொல்றேன். மொதல்ல டாக்டர் கிட்டதான் போகணும். எல்லாம் சரியானப்புறம் தெம்பா கோவிலுக்கு போயி வடை மாலை, மொட்டை எல்லாம் செய்யலாம். எது மொதல்ல, எது அடுத்துன்னு தெளிவா இருக்கணும்.

          பண்ற பாவத்துக்கு பிரயசித்தமாத்தான், திரைக்கதைல ஒரு பிளாஷ் பாக் போட்டு, இந்தக் கோட்பாட்டை விளக்கி விலாவாராவியா எழுத ஆரம்பிச்சிருக்கேன். எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்னாலும், ஒன்னு ரெண்டு பேருக்காவது புதுசா தெரிஞ்சுக்க ஏதாவது இல்லாமையா போயிடும்.

          தவிர, இப்படி ரூட்ட மாத்தினாலாவது, சீரியல் ஹிட்டாவுதான்னு பார்ப்போம் 🙂

          • Hi Venkat,

            குவாட்டர் அடிச்சிட்டு தான் புலம்பனும் என்று அவசியம் ஏதும் இல்லை வெங்கட்.ஆனா மேட்டர் என்ன என்றால் “அறிவியல் துறையின் எந்த கூற்றையும் சர்ச்சைக்கப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்ட உண்மை (undisputed proven fact) என சொல்ல முடியாது” என்று கூறும் அதே மூளை தான் அறிவியல் பயன்பாடுகள் [உம்: தடுப்புசி] என்று வரும்போது மட்டும் “தடுப்பூசி போடாம, வியாதி வந்தா பூசாரி, கோவில்னு போறவனை என்கிட்டே அனுப்பி விடுங்க. நான் புத்திமதி சொல்றேன்” என்று கூறி அறிவியல் பயன்பாடுகளை தயங்காமல் ஏற்கின்றது பார்த்திர்களா ?

            இதுக்கு பேரு தான் போட்டு வாங்குவது அல்லது சின்ன மீனை கொண்டு பெரிய மீனை பிடிக்கும் தொழில் நுட்பம் . [Ref my comment 28.1.1.1]

            • தடுப்பூசி நிதர்சனத்தில் வேலை செய்கிறது என்பதும், தடுப்பூசி போட்டால் வேலை செய்யும் என்பதை நிரூபிப்பதும் ஒன்றல்ல.

              நாளை சூரியன் உதிக்குமா, உதிக்குமா என சூதாட்டம் நடந்தால், உதிக்கும் என்றுதான் பணம் கட்டுவேன். ஆனால், நாளை சூரியன் உதிக்கும் என்பதை ஐயந்திரிபற நிரூபிப்பது வேறு விஷயம். அது அறிவியலுக்கு அப்பாற்பட்டது.

              நான் என்ன சொல்ல வரேன்னா… சரி, உடுங்க.

            • தடுப்பூசி போடுவதே கூட அபூர்வமாக பிரச்சனை உண்டாக்கும். நேரடி உதாரணம் கொடுக்க தேடியபோது இது கிடைத்தது. VAPP எனக் குறிப்பிடுவது பற்றி பாருங்கள். சுமார் இருபது லட்சம் குழைந்தைகளில் ஒரு குழந்தை என்ற அளவில் தடுப்பூசியே விஷமாகிறது. எனில் இந்த தடுப்பூசி போட்டால் குறிப்பிட்ட வியாதியே வராது என்பதற்கு நிரூபணம் இல்லை. இருந்தாலும்,தடுப்பூசி போட பரிந்துரைப்பது, இது அபூர்வம் என்பதனால்தான்.

              http://www.who.int/ith/vaccines/polio/en/

              சரவணபவன் தோசை நன்றாக இருக்கும் என்றுதான் சாப்பிடப் போகிறோம். அபூர்வமாக மோசமாகவும் ஆகலாம். “சரவணபவன் தோசை எந்நாளும் நன்றாக இருக்கும்” என்றெல்லாம் நிரூபிக்க சாத்தியமில்லை.

              • Hi Venkat listen this conversation :

                சரவணன் : ஐயோ சாமி சின்ன திருப்தி வெங்கடேசா , இந்த செங்கல்பட்டு வெங்கி இடம் இருந்து என்னைய காப்பாத்த மாட்டியா ?

                திருப்தி வெங்கடேசன் : நீ கைய வைத்து கொண்டு சும்மா இருக்கனும் ; அதை விட்டு செங்கல்பட்டு வெங்கி கருத்துக்கு பின்னூட்டமுனு பேருல எதையாவது தட்டி விட்டு அவரை உசுப்பு ஏத்திட்டு ; அப்புரம் குத்துது கொடையுதுனு பொலம்புவதில் அர்த்தமே இல்லை .[சாமி மெட்ராஸ் மொழி போசுதே !]

                சரவணன் : சரிங்க சாமி அவரு gens பற்றி நல்லா எழுதுராரு அதையே continue செய்யவாது சொல்லு சாமீ !

                • ஹி ஹி 🙂

                  இணையத்தில் சமீபத்தில் படித்த ஒரு நகைச்சுவை துணுக்கை உல்டா செய்து உமது கருத்துக்கு வலு சேர்க்கிறேன்!

                  திருப்பதி பெருமாள்: பக்தா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.

                  சரவணன்: சாமி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ரோடு போட்டு தாங்க.

                  தி பெ: பக்தா,அது கடினமான செயல் அல்லவா. நடுவில் கடல் இருக்கிறதே. கடலில் எப்படி ரோடு போடுவது? வேறேதாவது வரம் கேள்.

                  ச: அப்படின்னா, போறவன், வரவனையெல்லாம் கடிச்சு, கொதரிட்டு இருக்குற இந்த அரை லூசு வெங்கி கிட்டேர்ந்து விமோசனம் தாங்க சாமி.

                  தி பெ: ஆ! ஆ! அமெரிக்காவுக்கு ரோடு கேட்டாயே. சிங்கிள் லேனா, டபுள் லேனா?

                  🙂

  28. மரபியல் மாற்றம் மூலம் பரிணாமம் கோட்பாட்டை நிரூபித்தல் : Part VII

    முடிவுரை [conclusion ]:

    இக் கட்டுரையை எளிமைபடுத்தும் நோக்கத்துடன் குரோமோசோம்கள் ,அவற்றுக்குள் ஜீன்கள் தர்க்கபடி [logically but not physically] பொதித்து வேக்கபட்டு உள்ள விவரங்கள் , XX ,XY செக்ஸ் குரோமோசோம்கள் [XX/XY sex chromosomes] பற்றீய விவரங்களையும் தவீர்த்து உள்ளேன்.மேலும் எவரேனும் இனியும் டார்வின் அவர்களீன் பரிணாமம் கோட்பாட்டை மறுதலிபார்கள் எனில் அவர்களீன் ஸ்டெம் செல்களை சாம்பிள் எடுத்து அதன் HOX ஜீன்களில் மாற்றம்[gene mutation] செய்து ஒற்றை கொம்புகள் உடைய ஆனால் அவர்களை போன்ற மனிதர்களாகவே cloning Technology மூலம் உருவாக்கி உலகில் நடமாட விடுவேன் என்பதை அழுத்தமாக தெரிவித்துகொள்கின்றேன் 🙂

  29. அதிபயங்கர விமர்சனத்தின் தொடர்ச்சி!

    எந்த பெரிய கூற்று பற்றியும் சந்தேகம் எழும்போது, அதன் special cases பற்றி ஆராய்வது கணிதவியல் வழக்கம். அவ்வகையில், உலகில் தோன்றிய எல்லா உயிரினங்களும் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டுப் படி தோன்றின என்ற பெருங்கதையாடலை தள்ளிவைத்துவிட்டு, மனித இனம் (Homo sapiens) வேறேதோ உயிரினத்தில் இருந்து தோன்றியது என்ற குறிப்பான கூற்றை மட்டும் ஆராய்வோம். எனவே, இந்த கலபெகாஸ் ஆமை, பாரிஸ் பருந்து, காட்பாடி குள்ளநரி போன்றவற்றை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, இந்தக் கேள்விக்கு நேரடி தொடர்புடையனவற்றை பற்றி மட்டும் அலசுவோம்.

    மனித இனத்தின் நேரடி மூதாதை இனம் எது? எந்த இனம் பரிணாம வளர்ச்சி அடைந்து மனித இனம் உருவானது? இதற்கு “குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்” என சிலர் குத்துமதிப்பான பதில் தருகின்றனர். குரங்கு குலம் என்பதில் நூற்றுக்கணக்கான இனங்கள் (species) உண்டு. பழைய உலக குரங்குகள் (Old world monkeys), புதிய உலக குரங்குகள் (new world monkeys) என பெரும் பிரிவுகள் எல்லாம் உண்டு. அவ்வகையில், குறிப்பாக சொல்லாத இந்த கூற்றை விலக்கிவிட்டு, மானுடவியல் ஆய்வாளர்களை கேட்டால், பலதரப்பட்ட பதில்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, Australopithecus africanus, A. afarensis, Homo erectus, H. habilis என்பன போல. மேலும், இவை எதுவும் மனிதனின் நேரடி மூதாதை இனமன்று, இவை எல்லாமும் வேறேதோ ஒரு பொது மூதாதை (common ancestor) இனத்தில் இருந்து தோன்றின என்ற கருத்தும் உண்டு. இப்படி சர்ச்சைக்கு அப்பாற்பட்டு, மனித இனத்தின் நேரடி மூதாதை எது என்பது கூட நிச்சயமில்லை. எனவே, நமது ஆய்வைத் தொடர்வது கடினம். எனினும், அந்த நிச்சயிக்கப்படாத இனத்தை X எனக் கொண்டு தொடர்வோம்.

    (தொடரும்)

    • நண்பர் வெங்கி,

      இதை அறிவித்தது 22/6/2014. ஆனா இப்ப தான்

      X = undefined species for the evolution of Human

      என்பதையே 29/6/2014 அன்று தான் அறிவிக்கின்றிர்கள்.

      என்ன ஆயீற்று வெங்கி ? அதிக விளம்பரத்தாள் படம் flop ஆகிவிட போகிறது.

      பாத்து படத்தை ஓட்டுங்க வெங்கி 🙂

      //டார்வின் கோட்பாடு மீது கணிதவியல் நோக்கில் ஒரு அதிபயங்கர விமர்சனம். Don’t miss it!

  30. இந்த X என்ற உயிரினத்தில் இருந்து மனித இனம் எவ்வாறு உருவானது எனக் கேட்டால், பரிணாம வளர்சிக் கோட்பாடு நான்கு முக்கிய விஷயங்களை முன்வைக்கிறது. இவற்றை முதலில் எளிமைப்படுத்திக் காண்போம். இவற்றை விளக்குவது இரண்டு விதங்களில் பயன் விளைக்கும். முதலில், நமது உரையாடலுக்கு உதவும். இரண்டாவதாக, இத்தகு உயரிய சிந்தனை மீது விதண்டாவாத விமர்சனம் செய்தால், எமலோகத்தில் “பரோட்டா பக்ஷிணி” என்ற தண்டனைப்படி, ஒரு பூதம் உடலை பரோட்டா போல பிய்த்து தின்னும் என கருட புராணம் கூறுகிறது. எனவே, பரிணாம வளர்ச்சி கோட்பாடு பற்றி தமிழில் எழுதுவது விதண்டாவாதம் செய்த பாவத்துக்கு பரிகாரமாய் அமையும் என்ற பயனும் உண்டு. நுணுக்கமாய் பேசுவது நமக்கு தேவையில்லை என்ற வகையிலும், எனக்கு அதிக விவரங்கள் தெரியாது என்ற அடிப்படையிலும், எளிமைப்படுத்தி பேசுவோம்.

    இக்கோட்பாடு கூறும் விஷயங்களில் முதலாவது மரபணுத் தொகுப்பு (genome). மரபணு (gene) எனப்படுவது Adenine, Guanine, Cytosine, Thymine என்ற நான்கு வித வேதிப்பொருள்களால் ஆனது என சொல்லலாம். இவற்றை, A, G, C, T என அழைப்போம். இந்நான்கு பொருள்களையும், பலவிதங்களில் சரம் போல தொடுப்பதன் மூலம், பலவித மரபணுக்களை உருவாக முடியும். உதாரணமாக, AAGGCTCGC என்பது ஒரு மரபணு. GAACGATTC என்பது மற்றொன்று. மல்லிகை, சாமந்தி, கனகாம்பரம், முல்லை ஆகிய நான்கு மலர் குவியல்களை வைத்துக் கொண்டு, இஷ்டப்படி இப்பூக்களை தொடுத்தால் பலவித சரங்கள் உண்டாக்க முடியுமாப் போலே, A, G, C , T என்ற நான்கு மூலக்கூறுகளை இஷ்டப்படி சரமாகத் தொடுத்து பலவித மரபணுக்களை உருவாக்கலாம்.

    (தொடரும்)

    • நண்பர் வெங்கி,

      என் திருத்தங்களை ஏற்பிர்கள் என நம்புகின்றேன்

      Correction:

      மரபணுத் தொகுப்பு (genome)——>மரபணுக்களீன் மொத்த தொகுப்பு (genome or DNA )

      மரபணு (gene)——> ஒரு மரபணு தொகுப்பு (A gene)

    • Venkatesan,

      வாதத்திற்கு வருகிறேன் பேர்வழியென்று படிநிலைகளிலும் ஸ்பெக்டரங்களிலும் ஒளிந்து கொள்கிறீர்கள்.

      உங்கள் விதான்டாவாதத்திற்கு எல்லையா இருக்கப்போகிறது?

      ஜல்லி அடிக்கு முற்றும் போட்டவுடன் எனது பார்வைகளை வைக்கிறேன்.

      தொடருங்கள். ஆனால் விரைவில் முற்றும் போடப்பாருங்கள்.

  31. அறிவியல்- நீதிக்கோட்பாடுகளை அளவிடுவதாக இருந்தால் மனிதனுக்கு உரிய அடிப்படைத் தேவையான உணவு உடை உறைவிடம் என்கிற அத்தியாவசிய ஒளியில் வைத்து தான் ஆய்வு செயல் படல்வேண்டும் என்று நான் சொல்ல வில்லை விஞ்யாண சோசலிஸத்தின் தந்தையில் ஒருவரான பி.ஏங்கல்ஸ் அவர்கள் முன்மொழிகிறார்.

    இப்படி பார்க்கும் மதம் மாட்டிறச்சி பண்டியிறச்சி நாய்யிறச்சி எல்லாம் அடிபட்டு போகிறது. அறிவியல் என்பதும் எது என்பது கேள்விக் குறியாகிறது.

    இன்றைக்குள்ள அறிவில்யாளர்கள்-அறிவாளிகள் பண்டிதர்களை விட தொழிலாளர்கள் மதத்தை பற்றி பூர்வீகயுணர்வை இயற்கையாகப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

    இல்லையேல் தொழில்சாலைகளிலும் வயல்களில் காலம்கழிக்க மாட்டார்கள். தேவாலயத்திலும மசூதிகளிலும் கோவில்களிலும் பொய்களையும் புரட்டுக்களையும் பேசிக் கொண்டு காலங்கழித்துக் கொண்டிருப்பார்கள்?.

    ஆனபடியால் தான் வரலாற்றை முன்நோக்கி தள்ளும் புரட்சியாளர்களாக இருக்கிறார். நீங்கள் யாரும் அவர்களுக்கு முற்போக்குசிந்னை என கூறி வரலாற்று சக்கரத்தை பின்நோக்கி இழுத்துவிட முயற்சிக்காதீர்கள்.

    ஏனெனில் நீங்கள் எத்தனை பல்களைக்களகத்தைத்தை தடவி வந்தாலும் படித்தை மனப்பாடம் செய்து ஒப்பிவிக்கிற வரலாற்று சக்கரத்தை பின்நோக்கிதள்ளுவிடுகிற பிற்போக்காளர்களே!

    தொழிலாளர்களுக்கு அரசியலில் இருந்து மதத்தை எந்தமதம் என்றாலும்-இந்துமதம் என்றாலும் தனிமைப்படுத்தி சிறைப் பிடித்து அரசியலை தூய்மையாக்கிற வல்லமை அவர்களுக்கு இயற்கையாகவே அமையப் பெற்றது.

    தொழிலாளர் போராட்டங்களில் பல வெற்றிகளை பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.இந்திய தொழிலாளர்களை ஓர்யணிக்குள் கொண்டுவர பாடுபடுவோம்.

  32. இந்த gene எனப்படும் மரபணுச் சரங்களை ஒன்றிணைத்து நீண்ட சரமாக்கினால் அடிப்படைத் தொகுதிகளான குரோமசோம்கள் (chromosomes) கிடைக்கும். குரோமசோம் என்பதை ரயில் வண்டியோடு ஒப்பிட்டால், ஒரு மரபணுச் சரத்தை ரயில் பெட்டி எனலாம். நீண்டதோர் நைலான் கயிறாய் மடித்து, மடித்து, நடுவில் முடிச்சு போட்டு, கட்டு (bundle) ஆக்குவது போல, இந்த குரோமசோம் சரமும் மடித்துக் கட்டப்பட்டு இருக்கும் (இங்கே பாருங்கள்: http://en.wikipedia.org/wiki/Chromosome#mediaviewer/File:Chromosome.svg)

    இத்தகு குரோமசோம் கட்டுகள் உயிரின செல்களின் நியூக்ளியஸ் (nucleus) என்ற நடுப்பகுதியில் குடுகொண்டு அருள்பாலிகின்றன. எத்தனை குரோமசோம்கள் என்பது இனத்துக்கு, இனம் மாறுபடும். மனித இனத்துக்கு 46. ஒராங்குடான் இனத்துக்கு 48. சிங்கத்துக்கு 38. அரிசி செடிக்கு 24. எல்லாம் இரட்டைப்படையாகவே இருப்பதை கவனித்தீர்களா? நன்று. விருப்பமிருப்பின் பல்வேறு உயிரினங்களுக்கு எத்தனை குரோமசோம்கள் என்ற பட்டியலை இங்கே காணலாம் (http://en.wikipedia.org/wiki/List_of_organisms_by_chromosome_count)

    ஒரு மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் இவ்வாறு 46 குரோமசோம் கட்டுகள் இருக்கும். எந்தவொரு குரோமசோம் கட்டும், முன்பே சொன்னது போல A, G, C, T என்ற நான்கு மூலக் கூறுகளை ஏதோவொரு விதத்தில் கலந்து தொடுத்து உண்டானது. அவ்வகையில், இந்த 46 குரோமசோம்களில் எந்த இரண்டும் மாறுபட்ட சரங்களாக இருக்கும். எனினும், ஒரு மனிதனின் இரண்டு செல்களை எடுத்து அவற்றின் 46 சரங்களை ஒப்பிட்டால் ஒன்றாகவே இருக்கும். ஒரே புத்தகத்தை பல பிரதிகள் அச்சடித்து பல நூலகங்களில் வைக்குமாப்போலே, அம்மனிதனின் மூலப் பிரதியான 46 சரங்களின் தொகுப்பு, ஜெராக்ஸ் காப்பி செய்யப்பட்டு ஒவ்வொரு செல்லிலும் வைக்கப்பட்டுள்ளது. அம்மனிதனின், இத்தகு மூலப் பிரதியான 46 சரங்களின் தொகுப்பை, அம்மனிதனின் மரபணு முழுத்தொகுப்பு (genome) என்று அழைப்போம்.

    இந்த மரபணு முழுத்தொகுப்பானது, மனிதருக்கு மனிதர் வேறுபடும். ஒரு மனிதனின் முழுத்தொகுப்பனது தனித்துவமானது, வேறெந்த ஒருவரிடம் இருந்தும் மாறுபட்டது. கைரேகை போல. எனினும், சங்கப் பாடல், சினிமாப் பாடல் என்ற ரீதியில் ஒரேயடியாக மாறுபடும் என எண்ணிவிடக் கூடாது. சிறிதளவே மாறுபடும். ஒரு அரை சதவீதம் மட்டும் என வைத்துக்கொள்ளுங்களேன். மற்றபடி, இந்த சிறிய மாற்றங்களை தவிர, இருவர் முழுதொகுப்பும் கிட்டத்தட்ட ஒன்றுதான். எனினும், இந்த சிறிதளவு மாற்றமே ஒரு மனிதனை வேறொரு மனிதனிடம் இருந்து மாறுபடுத்திக்காட்ட போதுமானதாக உள்ளது.

    இங்கே ஒரு முக்கிய செய்தியைப் பார்ப்போம். அனைத்து மனிதருக்கும் கிட்டத்தட்ட ஒரே மரபணு முழுத்தொகுப்பு என்ற வகையில், மனித இனத்துக்கு என பொதுவான ஒரு முழுதொகுப்பை உருவாக்க முடியும். இதை மனித இன முழுத்தொகுப்பு (human genome) என அழைப்போம். அவ்வாறே, சிம்பன்சி குரங்கு இனத்துக்கும் இன அளவிலான முழுத்தொகுப்பை (chimpanzee genome) கண்டறிய முடியும். இவ்வாறு செய்து, இவ்விரு இன முழுதொகுப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சுமார் நான்கு சதம் மட்டுமே வித்தியாசப் படுவதாக கண்டறிந்துள்ளனர். மறுபுறம், கோழியோடு ஒப்பிட்டால், இந்த வித்தியாசம் 40% ஆக உள்ளது! இதை வைத்து பார்க்கும்போது மனித இனத்துக்கும், சிம்பன்சி இனத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கணிக்க முடியும். (நன்றி: http://www.sciencedaily.com/releases/2004/12/041208230523.htm, http://genome.wellcome.ac.uk/doc_WTD020730.html).

    ஒரு கொசுறு செய்தியை சொல்லிவிட்டு, இந்தப் பகுதியை பூர்த்தி செய்வோம். ஒரு மனிதனின் மரபணு முழுத்தொகுப்பு தனித்துவமானது என்ற விஷயம் தடயவியலில் பயன்படுத்தப் படுகிறது. உதாரணமாக, ஒரு கொலை நடந்த இடத்தில் கிடைக்கும் கொலைகாரனின் ரத்தத் துளியை ஆராய்ந்து, அவனது மரபணு முழுத்தொகுப்பு பற்றிய விவரங்கள் சேகரித்துவிட்டு, அதை சந்தேகப் பட்டியலில் உள்ள ஆசாமிகளின் மரபணு முழுத்தொகுப்போடு பொருத்தி, உண்மையை கண்டறிகிறார்கள். கைரேகையைப் பொருத்துவது போல.

    (தொடரும்)

    பி கு: அதிபயங்கர விமர்சனத்துக்கு நடுவே நிஜ அறிவியல் பற்றி எழுதத் தொடங்கிய பின், முன்னதை விட பின்னதைப் பற்றி எழுதுவதே அதிக உற்சாகம் தருவதாக உணர்கிறேன் 🙂

  33. Hi Venkat,

    [1]keep it up வெங்கட்! 🙂

    [2]கைரேகை,அருள்பாலிகின்றன போன்ற சொற்கள் இருப்பினும், அவற்றை தவிர்த்து பார்க்கும் போது உங்க்ளீன் கருத்து பயன் உள்ளவை.

    [3]மரபணு தொகுப்பு பொறியியல்[genetic engineering], மரபணு தொகுப்பு அடிப்படையிலான மருந்து வடிவமைப்பு [Gene based Drug Design] ஆகிய பரிணாம வளர்சிக் கோட்பாட்டை வலியுறுத்தும் அறிவியல் துறைகள் வரும் நூற்றாண்டுகளில் மனித குலத்துக்கு மிகவும் பயன் அளிக்கும் என்பதையும் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்

    //பி கு: அதிபயங்கர விமர்சனத்துக்கு நடுவே நிஜ அறிவியல் பற்றி எழுதத் தொடங்கிய பின், முன்னதை விட பின்னதைப் பற்றி எழுதுவதே அதிக உற்சாகம் தருவதாக உணர்கிறேன்//

    • கைரேகை என்ற உடன் கைரேகை ஜோசியம் நினைவுக்கு வந்ததால் அதையும் சேர்த்து விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும் வெங்கட்

    • Structure based Drug designing கூட கிட்டதட்ட பரிணாம வளர்சிக் கோட்பாட்டை வலியுறுத்தி அல்லவா உள்ளது ?

  34. வெங்கடேசன்,
    எனக்கு இந்த அறிவியல் துறையாக இருக்கட்டும் கணிதவியல் துறையாக இருக்கட்டும் அந்த துறைசார்ந்த அறிவு மிகவும் குறைவு தான் .அதனால் தான் இந்த பின்னூட்டத்தில் பங்கு பெறாமல் நடக்கும் விவாதங்களை படித்து கொண்டு இருக்கிறேன்.

    /முதலில் அறிவியல் துறையில், ஒரு கூற்றை ஐயந்திரிபற நிரூபிக்க தேவையான தெளிவான வரையறைகள் கூட கிடையாது.//
    //ஐயந்திரிபற்ற நிரூபணம் என்பது என்னுள்ளங்கவர் கணிதவியலில் மட்டுமே சாத்திய//
    என்னுடைய கருத்து என்னவெனில் அறிவியலைக் கணிதத்தில் இருந்துப் பிரித்து பார்பதேன்பதே சரியானதாக இல்லை.
    இது போன்ற கருதுகோள்கள் நமக்கு ஏன் தோன்றுகின்றன என்பதில் இருந்து அதன் நம்பகத்தன்மை உள்ளது. மேலே இருந்து லேலே விழும் ஆப்பிள், காற்றில் பறக்கும் இலவம் பஞ்சு, வானுர்தி, புவிஈர்ப்பு விசைக்கு மேலாக நிலை நிறுத்தப்படும் செயற்கைக்கோள் என முற்றாக உண்மையாக இருப்பதால் தான் அது நிகழ்கின்றன. ஏனெனில் , அது ஏற்கனவே புறத்தில் இருக்கிறது. அறிவியலாளர்களின் வேலை அதை விளக்குவது தான். எடுத்துகாட்டாக, 100 ஆப்பிள்கள் மரத்தில் இருந்து விழுந்தால் அதில் 99 மட்டுமே கிழே விழும் மற்றொன்றைப் பற்றி தெரியாது என்ற நிலை அறிவியலில் கிடையாது. மரத்தில் இருந்து அனைத்து பழங்களும் கிழே விழுந்தால் தான் நான் நம்பவேன் என்பது நகைப்பிற்குரியது.

    கணிதத்தில் இன்பினிட்டி என்று ஒன்று உள்ளதே. ப்ரோபபிளிட்டி (Probability theory ) மற்றும் random process என்றும் கிளைகள் உள்ளதே இதற்கும் இயற்பியலுக்கும் கூட நெருங்கிய தொடர்பு உள்ளதே. இவையெல்லாம் ஒரு ஊகக் கணக்கு தான் என்றுதான் நான் புரிந்து கொண்டுள்ளேன் . . கிடைக்கும் புறச் சான்றுகளில் இருந்து, அதிலிருந்து பெறப்படும் தடங்களில் இருந்தும் அதை அதற்க்கு முன்பு கிடைத்த படிமங்களோடு சேர்த்து ஆராய்வதில் இருந்து பரிணாமவியல் அறிவியலாகிறது. டார்வின், அவரது காலத்தில், கிடைத்தப் படிமங்களையும்,தடங்களையும் வைத்து பரிணாமம் நடக்கிறதென்றும் அதற்கு சான்றாக ஏகப்பட்ட படிமங்களையும் அகழ்ந்தெடுத்து ,ஆய்வு செய்தார்.

    இதைப் பற்றி “http://aatralarasau.blogspot.in ” எனும் வலைபதிவில் சார்வாகன் என்பவர் எழுதி உள்ளார்.

    பரிணாமம் எப்படி நிகழ்கிறது என்பதில் வேண்டுமென்றால் அறிவியலாலர்களுக்கிடையே வேறுபாடுகள் இருக்கலாம். எடுத்துகாட்டாக [puncutated equilibrium] எனும் விளக்கம் ஸ்டீஃபன் ஜே கோல்ட் என்பவரால் முன்வைக்கபடுகிறது. இது டார்வின் முன்வைத்த இயற்கை தேர்வு மட்டுமே பரிணாமத்தை நிகழ்த்தும் என்பதற்கு மாறாக வேறொரு கோணத்தில் இருந்து அதை விளக்குகிறது.

    பரிணாமவியல் ஒரு ஐயந்திரிபற நிரூபிக்கபட்ட உண்மை என்பது அறிவியலாளர்களால் ஏற்றுக் கொல்லப்பட்ட ஒன்று. ஒவ்வொரு நொடியும் பரிணாமம் நடக்கிறது. கண்ணுக்கு புலப்படாத நுன்னியிரியிலிருந்து மனிதன் வரைக்கும் நிகழ்கிறது . அதை விளக்கும் விதத்தில் வேண்டும் என்றால் வேறுபாடுகள் உண்டு.

    நன்றி.

    • நண்பர் சிவப்பு,
      ஒன்றையே திரும்ப, திரும்ப வெவ்வேறு விதங்களில் சொல்வதற்கு கூச்சமாக உள்ளது.

      தொடரை முடித்தபின் மொத்தமாக ஒருமுறை சாரம்சப்படுத்துகிறேன். அது உங்களுக்கு பதில் தருவதாக அமையலாம்.

      // கணிதத்தில் இன்பினிட்டி என்று ஒன்று உள்ளதே. ப்ரோபபிளிட்டி (Probability theory ) மற்றும் random process என்றும் கிளைகள் உள்ளதே இதற்கும் இயற்பியலுக்கும் கூட நெருங்கிய தொடர்பு உள்ளதே. இவையெல்லாம் ஒரு ஊகக் கணக்கு தான் என்றுதான் நான் புரிந்து கொண்டுள்ளேன் //

      அப்படியல்ல. நடைமுறையில்தான் பிராபிளிட்டி, ரேண்டம் பிராசஸ் போன்றவை ஊகக் கணக்கு போல் பயன்படுத்தப்படுகின்றன. கறாராக கேட்டால், கணிதத்தில் அவற்றை வேறுமாதிரி வரையறுப்பார்கள்.

    • நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. அறிவியல் உலகில் ஒப்புக்கொள்ளப்படும் கருத்துதான் இது. இது பற்றி பேசினால், அவர்கள் பதில் “அதுக்கு இப்போ இன்னான்குற” என்பதாகவே இருக்கும். சரி, London School of Economics பேராசியர் ஒருவரின் கட்டுரையை தருகிறேன். நான் நீட்டி முழக்கி சொல்ல முயன்றதை எல்லாம் இவர் அழகாக சொல்லி உள்ளார். முதலிலேயே, இதற்கு சுட்டி விட்டு சும்மா இருந்திருக்கலாம்!

      http://www.psychologytoday.com/blog/the-scientific-fundamentalist/200811/common-misconceptions-about-science-i-scientific-proof

      • Hello Venket,

        சடோஷி கனசாவாவின் [Satoshi Kanazawa] குரல் இன வெறியா?

        வாழ்த்துகள் வெங்கட். நீங்க சரியான ஆள் உடன் தான் கூட்டணி சேர்ந்து இருக்கின்றீர்கள். அவருடைய இந்த ஒரு கட்டுரையை மட்டும் அல்ல பல கட்டுரைகளை படிக்கும் வாய்ப்பு நீங்க கொடுத்த லிங்க் மூலம் கிடைக்க பெற்றேன். சடோஷி கனசாவா [Satoshi Kanazawa] எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா ?

        [1]Psychology Today யில் அவர் எழுதீய ஒரு இன வெறி கட்டுரையீன் தலைப்பு “கருப்பு பெண்கள் எந்த பிற பெண்களை விட குறைந்த கவர்ச்சிகரமான உள்ளது ஏன்?” என்பது ஆகும்.அதை படித்து விட்டு உலகம் முழுதும் உள்ள அறிவு சார் மக்கள் அவருக்கு என்னமா செருப்படி கொடுத்தாங்க தெரியுமா ? Psychology Today இருதியாக அந்த இன வெறி கட்டுரையை தன் இணைய தளத்தில் இருந்து மன்னிப்பு கேட்டு கொண்டு நீக்கியது. லண்டன் ஸ்கூல் ஆப் எகாநோமிக்ஸ் இயக்குனர் ஜூடித் ரீஸ் அவர்களும் மன்னிப்பு கேட்டார் என்ற விசயம் எல்லாம் நம்ம வெங்கிக்கு தெரியாம போனது மிக்க வியப்பை எமக்கு அளிகின்றது. மேலும் அவரது இந்த ஆராய்ச்சிக்காக மாதிரி அளவு,சமூக அல்லது பொருளாதார காரணிகள் பற்றிய தகவல்களை அவரால் வழங்க முடியவில்லை.

        [2]இது போலவே அவருடைய பல பல பலான கட்டுரைகளும் இன வெறியை கக்கும் [குரைக்கும்] நாயீன் குரலாகவே உள்ளது. அக் கட்டுரைகளை பற்றீய வீளக்கம் வேண்டுமா வெங்கட் ? அறிவியல் பற்றி பேச இவரை தவீர வேற ஆள் கீடைக்கவீல்லையா வெங்கட் ?

        • நான் கூறிவரும் கருத்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அந்த வகையில், இது பற்றி ஏற்கனவே நிச்சயம் ஏற்கனவே எழுதி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கூகுளில் தேடிய போது கிடைத்த முதல் கட்டுரை இது. அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை நான் கூறி வரும் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன. எனவே, சுட்டி கொடுத்தேன். அவரைப் பற்றியோ, அவர் எழுதிய மற்ற விஷயங்கள் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது. இப்போது நண்பர் முற்போக்கு சொன்ன மறுமொழி கூட சடோஷியின் கட்டுரையோடு ஒத்துப் போவதைக் காணலாம். அவரது இந்தக் கட்டுரை பற்றி ஏதேனும் சொல்ல இருந்தால் சொல்லுங்கள். அவரது மற்ற விஷயங்கள் பற்றிய கருத்துக்கள் இங்கே முக்கியமில்லை.

  35. திரு. வெங்கடேசன்,

    “indisputable proof is not possible in science but only in mathematics”

    the above statement is correct, scientific laws cannot be proved and it varies with time and also mathematics only have proof’s. but here you missed one important thing. why you didn’t question mathematics only have proof but not science. you cannot compare mathematics and science in this way, why?

    let see, science explores what is happening around us in the universe. scientific methodology is to observe and try to formulate a theory to explain the past, present and the future. it will do the experiment to get evidence. at some point of time any new experiments disprove the theory than new theory comes up to explain. science moves in this way and right now we have this only better way to understand the truth about the universe. it has no authority and it accept the changes. it uses mathematics as a tool to understand the physical universe.

    whereas mathematics is not science. as you previously mentioned it is about logic(and in science majority of times logic fails). mathematics was formulated by humans. numbers, triangle circle etc are resultant of the human consciousness. in short we can say mathematics is a universe created by human mind. since human created it they defined the laws of that universe. so they know nook and corner about this mathematical universe and they can prove anything. for our convenience only we defined numbers, triangles , circle etc. we defined triangle and finally proved some of the sides of the triangle are 180 degree. we defined what is an right angle triangle and proved pythagoras theorem.

    but science is not like this. we didn’t defined anything in this universe and we are trying to understand it from the observations. it may be correct or may be wrong. but scientific methodology will take us towards the right direction.evolution is also doing the same thing.

    so by comparing mathematics and science in this way you are misleading all the people.

    தமிழில் இதை எழுத கடினமாக இருந்ததால் ஆங்கிலத்தில் எழுதிஇருக்கிறேன்.

    இதற்கான பதிலை தமிழில் எழுதுவது கடினமாக இருப்பதால், ஆங்க்கிலத்தில் எழுதுகிறேன்

    • முற்போக்கு அவர்கள் வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய ஆங்கில மறுப்புரையின் குத்துமதிப்பான தமிழாக்கம்.

      வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரி மொழிபெயர்த்து இருப்பதால் கோர்வையாக இருக்காது. எனினும் இதன் கருத்துக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது என் விருப்பமாகும்.

      —————————————————————————-

      “அறிவியலில் ஐயந்திரிபு அற்ற நிருபணங்கள் சாத்தியமில்லை; அது கணிதத்தில் மட்டுமே சாத்தியம்” என்று சொல்வது சரியே. அறிவியல் விதிகள் நிரூபிக்க இயலாதவை. மேலும் அவை காலத்திற்கு ஏற்ப மாறுகின்றன. அதே சமயத்தில் கணிதத்தில் நிரூபணங்கள் மட்டுமே இருக்கின்றன!! இங்கு நீங்கள் மிக முக்கியமான விசயத்தை தவற விடுகிறீர்கள். கணிதம் அறிவியலைக் கொண்டிராமல் நிரூபணங்களை மட்டுமே கொண்டிருக்கிறது என்று ஏன் தங்களால் கேள்வி எழுப்ப முடியவில்லை? உங்களால் இவ்விதத்தில் கணிதத்தையும் அறிவியலையும் ஒப்பீடு செய்ய முடியவில்லை? ஏன்?

      இதை மேலும் பரிசிலீப்போம். பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிவியல் வெளிக்கொண்டுவருகிறது. அறிவியல் முறைகள் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் நடப்பவற்றை ஆராய்ந்து கோட்பாடுகளை வடிவமைப்பதன் மூலம் விளக்க முயல்கின்றன. ஆய்வுகளை நிகழ்த்துவதன் மூலமாக ஆதாரங்களைப் பெறுகின்றன. சில தருணங்களில் புதிய சோதனைகள் கோட்பாடுகளை தவறென்று காட்டுகின்றன. அப்பொழுது புதிய கோட்பாடுகள் நிகழ்வுகளை விளக்கும் பொருட்டு வருகின்றன. அறிவியல் இவ்விதமாகத்தான் செயல்படுகிறது. தற்சமயம் நம்மிடம் உலகத்தைப் பற்றிய உண்மைகளை உணர்வதற்கு இத்தகைய சிறந்த வழி மட்டுமே இருக்கின்றன. இத்தகைய அறிவியல் முறை எவ்விதமான மேலாண்மையையும் கொண்டிருக்கவில்லை. இது மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறது. மேலும் பொருளாயத உலகத்தை பற்றி அறிந்துகொள்வதற்கு கணிதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.

      இது இப்படியிருக்க கணிதம் என்பது அறிவியல் அன்று. தாங்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதைப் போன்று கணிதம் தர்க்கத்தைப் பற்றியது. அறிவியலில் தர்க்கங்கள் பெரும்பாலான நேரங்களில் தோல்வியுறுகின்றன. கணிதம் மனிதர்களால் வடிவமைக்கப்பட்டது. எண்கள், முக்கோணம் மற்றும் வட்டம் போன்றவைகள் மனித சிந்தனையின் விளைபொருளாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால் கணிதம் மனித சிந்தனையால் உருவாக்கப்பட்ட பிரபஞ்சம் என்று நம்மால் கூற முடியும். மனிதர்கள் உருவாக்கிய காரணத்தால் பிரபஞ்சத்தைப் பற்றிய விதிகளை இவர்கள் வரையறுக்கிறார்கள். எனவே இவர்களுக்கு கணித உலகத்தைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக தெரியும். மேலும் இவர்களால் எதையும் நிரூபிக்க முடியும்.

      நம்முடைய வசதிக்காகவே நாம் எண்கள், முக்கோணங்கள் மற்றும் வட்டங்களை வரையறுத்திருக்கிறோம். முக்கோணத்தை நாமே வரையறுத்துவிட்டு இறுதியில் முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் உருவாக்கும் கோணங்கள் 180டிகிரி என்று நிரூபிக்கிறோம்!!!
      செங்கோணமுக்கோணம் எதுவென்று வரையறுத்துவிட்டு பித்தாகரஸ் தேற்றத்தை நிரூபிக்கிறோம்.

      ஆனால் அறிவியல் அப்படிப்பட்டதல்ல. நாம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எதையும் வரையறுப்பதில்லை. மாறாக ஆய்வுகளிலிருந்து இவற்றை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். ஒருவேளை இது சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கக்கூடும். ஆனால் அறிவியல் முறைகள் நம்மை சரியான திசை நோக்கிச் செலுத்துகின்றன. பரிணாமவியலும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

      எனவே அறிவியலையும் கணிதத்தையும் இவ்வாறாக (வெங்கடசேனின் பின்னூட்டங்கள்) மதிப்பிடுகிற பொழுது அனைவரையும் தவறாக வழிநடத்துகிறீர்கள்.

      ———————————————————–

  36. நண்பர் முற்போக்கு,
    தெளிவாக, சுருக்கமாக பேசியமைக்கு நன்றி. உங்கள் கருத்தோடு முழுதும் உடன்படுகிறேன்.

    // “indisputable proof is not possible in science but only in mathematics”. the above statement is correct, scientific laws cannot be proved and it varies with time //

    அவ்வளவுதான் விஷயம். இதுவே நான் பேசி வந்ததன் மையக் கருத்து. அறிவியல் பற்றி எழுதப்படும் பொதுஜன கட்டுரைகளும், வாசகர்களும் மேலே சொன்ன விஷயத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. அறிவியல் விதிகளை absolute truth என்பது போல வேத வாக்காக எண்ணுகின்றனர். இப்படி எண்ணுதல் சரியல்ல என்பதை சுட்டிக் காட்டுவதே நான் எழுதியதன் முக்கிய நோக்கம். ஒப்பீடு காட்டி விளக்கவே கணிதத்தை இழுத்து வந்தேன்.

    உங்களைப் போல அமைதியான தொனியில் எழுதி இருந்தால் பிரச்சனை வந்திருக்காது. மாறாக, அறிவியல் மோசம், கணிதம் சிறந்தது என்ற தொனியில் ஆர்பாட்டமாக (உதாரணமாக, மறுமொழி 15) எழுதியது குழாயடி சண்டைக்கு வழிவகுத்து விட்டது. இவ்வாறு ஆர்பாட்டமாக செய்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முக்கியக் காரணம் சுஜாதா பாணியில் ஜாலியாக எழுத முயன்றது. துணைக்காரணம் ஒரு கெட்ட நோக்கம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். பகுத்தறிவாளர்கள், பரிணாம வளர்ச்சி கோட்பாடு போன்றவற்றை விளக்கும் போது, அறிவியல் முறையில் அமைதியாக விளக்குவது இல்லை. மாறாக, மத ரீதியான நம்பிக்கைகளை கேலி, கிண்டல் செய்து கொண்டு ஆர்பாட்டமாக எழுதுகின்றனர். இதற்கு எதிர்வினையாக, கணிதத்தில் Proof என்பதற்கு உள்ள Gold Standard ஐ, அறிவியலுக்கு பொருத்தி விதண்டாவாதம் செய்யும் எண்ணம் வந்தது. “ஏன்டா, அறிவியல்ல Proof அப்படின்னு ஒரு கான்சப்டே கிடையாதே, இன்னிக்கு ஒன்னு சொல்வாங்க, நாளைக்கு மாத்திப்பாங்க, அப்புறம் என்னடா துள்றீங்க” என்ற ரீதியில் விதண்டாவாதம் செய்யத் தோன்றியது! (இந்த வினவுக் கட்டுரையை மீண்டும் ஒருமுறை படித்தபோது, அது அமைதியான ரீதியில் எழுதி அமைந்திருப்பதை உணர்கிறேன்.).

    // so by comparing mathematics and science in this way you are misleading all the people.

    உண்மைதான். இதற்காக நண்பர்களிடம் (குறிப்பாக தென்றல்) மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கூடவே “indisputable proof is not possible in science but only in mathematics” என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லிவிடுவோம்.

    வாங்க எல்லாரும் காபி சாப்பிடலாம். நான் ஸ்பான்சர் பண்றேன் 🙂

    சுபம்.

    —————————————————-

    மரபணுவியல், பரிணாம வளர்சிக் கோட்பாடு பற்றி எனக்குத் தெரிந்ததை தமிழில் எழுதிப் பார்க்கும் ஆசையில் எழுதிவருவதை சாவகாசமாக தொடர திட்டமிட்டுள்ளேன்.. இதனால், ஏதும் பயனுண்டா எனத் தெரியவில்லை. சும்மா செய்து வைப்போம். பின்னர், பாதியில் நின்று போன அதிபயங்கர விமர்சனத்தையும் முடித்து விட திட்டம். நான் தனியாவர்த்தனம் செய்து கொள்கிறேன். நண்பர்கள், வேறு உருப்படியான வேலை பார்க்க செல்லலாம் 🙂

    • Hi venket,

      மரபணுவியல், பரிணாம வளர்சிக் கோட்பாடு பற்றி நன்றாக தானே எழுதுகின்றீர்கள். தொடரலாமே ! மேலும் சடோஷி கனசாவாவின் [Satoshi Kanazawa] மேட்டரில் இருந்து நீங்க நழுவாமல் பதில் சொன்னாலும் நன்றாக தானே இருக்கும்! 🙂

      //மரபணுவியல், பரிணாம வளர்சிக் கோட்பாடு பற்றி எனக்குத் தெரிந்ததை தமிழில் எழுதிப் பார்க்கும் ஆசையில் எழுதிவருவதை சாவகாசமாக தொடர திட்டமிட்டுள்ளேன்.. இதனால், ஏதும் பயனுண்டா எனத் தெரியவில்லை. //

      • நன்றி சரவணன்.

        // தொடரலாமே

        ஆம், அப்படித்தான் திட்டமிட்டுள்ளேன்.

    • நண்பர் வெங்கடேசன்,

      தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      மேலும் பரினாம் வளர்ச்சி பற்றி எளிமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள சுட்டிகளை பருங்கள். இது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

      1) the following link explained origin of species in layman language. Topics: what is evolution? what is natural selection? what is gene? what is DNA? in animated form.

      http://www.youtube.com/channel/UC_cznB5YZZmvAmeq7Y3EriQ

      2)Why Evolution is True and Why Many People Still Don’t Believe It (Jerry Coyne, 2012)

      http://www.youtube.com/watch?v=CW9G2YVtBYc

  37. Hi Venkatesan,

    கணிதம் , அறிவியல் ஒரு எளீய விளக்கம்:

    [1]கணிதமும் , அறிவியலும் வேறு வேறு என்று நாம தான் சண்டை போடுகின்றோம். ஆனா பாருங்க , பால்காரர் மாட்டை வளர்த்து , புல்லு போட்டு[எத்துனை கட்டு ?] , புண்ணாக்குவைத்து[என்ன அளவு] [nutritionist and dietetics science and Numerical Math ] அப்புறமா பால் கறந்தபின் ஒன்னுக்கு ஒன்னு , ஒன்னுக்கு ரெண்டு என்று தண்ணீர் கலப்பது எதை வைத்து என்பது நமக்கு தெரியும் அல்லவா ?

    [2]கோயம்பேடு மார்கட்டில் 20 lorry ஆந்திரா வெங்காயம் இன்னிக்கு வந்தா விலை குறைவதும்[rs 15/per kg] , 2 lorry ஆந்திரா வெங்காயம் இன்னிக்கு வந்தா விலை ஏறுவதும்[rs 30/per kg ] இயல்பு தானே ?[Demand and Supply Economics theory with Numerical Math ]

    கணிதமும் , அறிவியலும் ஒருங்கினைந்தது என்பதற்கு இன்னும் 100000000000000000000 விளக்கம் இது மாதிரி கொடுக்கலாம் வெங்கட். இது போன்ற சாதாரணமாக பணிகளை [Mundane Tasks] செய்யும் போது பால்காரர் மற்றும் கோயம்பேடு வியாபாரி அறிவியலையும் , கணக்கையும் , பொருளாதாரத்தையும், கணக்கையும் தனி தனியா பிரித்து பார்ப்பது இல்லை. நாம் தான் அறிவியலையும் , கணக்கையும் நம்ம வசதிக்காக வேறு வேறு பிரிவுகலாக பிரித்து வினவில் வந்து மொக்க போடுகின்றோம்.

    • என்ன சரவணன்,
      // நாம் தான் அறிவியலையும், கணக்கையும் நம்ம வசதிக்காக வேறு வேறு பிரிவுகலாக பிரித்து வினவில் வந்து மொக்க போடுகின்றோம். //

      மறுபடியும் மொதல்லேர்ந்தா? ரெண்டும் வேற வேற தான் சார் 🙂

  38. Hi Venkatesan,

    கணிதம் , அறிவியல் ஒரு சிறிது மேம்பட்ட விளக்கம்:

    ஒரு 10 ஆம் வகுப்பு மாணவன் இயர்பியல் ஆசிரியர் இடம் கீழ் கண்ட கேள்வியை கேட்கின்றார்.

    A ship started floating from its place towards south. After floating 6 km, it turned to its left floated 5 Km after then it floated further 3 km after turning left. It then turned to its left and continued its float for 9 km. How far is it away from its starting point ?

    இதுக்கு பதில் கண்டுபிடிக்க அந்த மாணவன் என்ன செய்வான் ? பேப்பர் ,பென்சில் எடுத்து கோடு கீழீப்பானா ? இல்லை….. சார் இது math class கிடையாது , physics class என்று கூறுவானா ?

    கடைசியில் பித்தகோரஸ் theorem apply செய்து sqrt(4 x 4 + 3 x 3) = sqrt(25)= 5 என்று கூறுவான் அல்லவா ?

    சாதாரன வேலைகளை செய்யும் போது கணிதத்தையும், அறிவியாலையும் பீரிக்காத பால்கார, கோயம்பேடு மனுஷன் ,கொஞசம் கடின வேலை செய்யும் போதும் கணிதத்தையும், அறிவியாலையும் பீரிக்காத மாணவன் இருக்க நாம மட்டும் பிரித்து பார்ப்பது ஏன் ?

    அதை பற்றியும் பார்க்கலாமா ?

    • correction: ஒரு 10 ஆம் வகுப்பு மாணவன் இடம் இயர்பியல் ஆசிரியர் கீழ் கண்ட கேள்வியை கேட்கின்றார்.

  39. Hi Venkatesan,

    கணிதம் , அறிவியல் ஒரு மேம்பட்ட விளக்கம்:

    நம்ம நாட்டுல Msc math படித்த எத்துனை பேருக்கு அதன் உண்மையான பயன்பாடு தெரியும் ?

    உதாரணத்துக்கு ஒருங்கிணைந்த கணிதத்தீன் பயன்பாடு [Application of Integral Mathematics] தெரியும் ?

    [1]ஒரு வளை கோட்டின் கீழ் உள்ள பரப்பளவை கண்டு பிடிக்க [ Area Under a Curve ]

    [2] இரு வளை கோடுக்ளீன் இடைபட்ட பரப்பளவை கண்டு பிடிக்க [Area Between 2 Curves]etc etc…

    அதே சமயம் ஒரு அனுபவம் உள்ள கட்டீட்ட வடிவமைப்பாளர் ஈர தன்மை உள்ள [soil science ] நிலத்தில் 11 மாடி கட்டிடம் கட்ட அடித்தளம் [foundation] எந்த ஆழத்துக்கு அமைக்க வேண்டும் என்பதை எளிமையாக கூறுவார் அல்லவா ?

    கணிதத்தீன் மீதான சரியான புரிதல் இல்லாமையும் , அதன் பயன்பாடு தெரியாமையும் மட்டுமே கணிதத்தை, அறிவியல் மற்றும் பிற துறைகளில் இருந்து விளக்கி எதீர் திசையில் நிறுத்துகின்றது என்பது என் கணிப்பு.[Yes Math is also a Application side of Science and art ]

    என்னது Math & ஆர்ட் ஆஆஆஆஆ ? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது !

    தமிழ் இலக்கியத்தில் கணிதம் பற்றி அடுத்தது பார்க்கலாமா ?

  40. Hi Venkatesan,

    கணிதம் & தமிழ்[இலக்கியம்] ஒரு எளீய விளக்கம்:

    உலகில் எதற்கும் அடங்கா மொழி ஆகிய நம் மொழி தமிழ் எண் கணிதத்துடன் இணைந்தது என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும்.

    எழுத்துகளின் மாத்திரை அளவு : எழுத்துகளை ஒலிக்கக்கூடிய காலத்தை அளவிடும் ஓர் அலகே மாத்திரை எனப்படும். ஓர் எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும் என்னும் வரையறை செய்திருப்பது தமிழ் இலக்கணத்தின் தனிச்சிறப்பாகும். பொருள்களை அளப்பதுபோல ஒலியையும் (ஒலிக்கும் கால அளவு) அளந்துள்ளனர் தமிழர். அவ்வளவையே மாத்திரை என்றனர். இதைக் குறித்துத் தொல்காப்பியர் கூறும் போது கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடிக்கும் நேரமே மாத்திரை என்று விளக்குகிறார். இதனைப் பின்வரும் நூற்பாவால் உணரலாம்.

    கண்ணிமை நொடிஎன அவ்வே மாத்திரை
    நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே.

    செய்யுள்களில் சீர் வகைகள்: சீர் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துக்கள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரையான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன. இவை,

    ஓரசைச்சீர்
    ஈரசைச்சீர்
    மூவசைச்சீர்
    நாலசைச்சீர்

    வெண்பா:வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரைக் கொண்டிருக்கும்.

    Tanks to http://ta.wikipedia.org


    கணிதத்தை பிற துறைகளில் இருந்து பிரிப்பவர்களை நினைக்கும் போது, நாத்திகம் பேசும் எனக்கும் “அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயிலே மண்ணு!” என்ற முதீர் மொழி தான் நினைவுக்கு வருகின்றது.

  41. @Saravanan

    //உலகில் எதற்கும் அடங்கா மொழி ஆகிய நம் மொழி தமிழ் எண் கணிதத்துடன் இணைந்தது என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும்//

    I dont want blah blah Tamils are great. List all the mathematical achievements.
    And how they used mathematics.

    • Raman,

      எங்கையோ இருந்து பொழக்க வந்த நாதரி கூட்டம்…., செத்து போன சம்ஸ்கிருதத்தை துக்கி பீடித்து மணி ஆட்டி கோவிலீல் டப்பாங்குத்து ஆடும் போது தனித்து இயங்கும் தமிழை நான் அடங்கா மொழி என்னும் போது …….., உமக்கு எங்க… வலிக்குது ? முடிகொண்டு போவிய? மணி ஆட்டுவதற்கு என்றே பொறந்த ஆரிய சனம் மட்டும் தான் எம் மொழி தமிழை பழிக்கும் _____ !

      //I dont want blah blah Tamils are great//

      • @Saravanan

        அறிவியல் கணித பின்னூடத்தில் வந்து என்னோட மதம்தான் அறிவியல், மொழிதான் கணிதம்னு அழிச்சாட்டியம் பண்ணிட்டு ஆரியன் திராவிடன்னு ஆரபிச்சாச்சு . உங்களை எல்லாம் திருத்தவே முடியாது

        • Raman,

          தமிழ் மொழி மீதும், தமிழர் மீதும் நீர் ஆரிய-பார்பன வெறியுடன் மலத்தை கக்கும் போது உமக்கு என்ன பதில் கொடுக்க முடியும் ? இலை போட்டு சாப்பாடு போடவா முடியும் ?

          உங்களை[ஆரிய-பார்பன] எல்லாம் திருத்தவே முடியாது.

          //அறிவியல் கணித பின்னூடத்தில் வந்து என்னோட மதம்தான் அறிவியல், மொழிதான் கணிதம்னு அழிச்சாட்டியம் பண்ணிட்டு ஆரியன் திராவிடன்னு ஆரபிச்சாச்சு . உங்களை எல்லாம் திருத்தவே முடியாது//

      • நாகரீகமாக இராமன் அவர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு தாங்கள் நாகரீகமாகவே பதில் அளித்திருக்கலாம். தாங்களோ..?

        இனியொரு சந்தர்ப்பத்தில் இந்த விதியை பின்பற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்!.

        • mao,

          இராமன் கூறும் இதற்கு பெயர் தான் நாகரிகம் என்றால் ….

          Raman Said in his comment 43: I dont want blah blah Tamils are great.

          நீங்கள் வேண்டுமானால் அவரை கொண்டாடலாம். எம்மால் முடியாது.

          • mao,

            இராமன் கூறுவது : நான் அபத்த அபத்த தமிழர்கள் சிறந்தவர்கள் என்று நினைக்கவில்லை.

            இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை[தமிழ் இனம்] பற்றி தவறான கருத்து இல்லையா?

            • சரவணன்,
              ராமன் “blah blah” என்றது தமிழர்களை அல்ல. உங்கள் மறுமொழிகளை. அதாவது, எதையாவது “blah blah” எனப் பேசிவிட்டு, “Tamils are great” என முடிக்காதீர்கள். தமிழர்கள் கணிதத்துக்கு ஆற்றிய பங்களிப்புகளை நேரடியாக பட்டியலிடச் சொல்கிறார். இப்படித்தான் எனக்குப் புரிகிறது.

              இப்போது நேரடி பதில் சொல்லலாமே. தமிழர்கள் கணிதத்துக்கு ஆற்றிய பங்களிப்புகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்.

              • Venkatesan,

                [1]கணிதம் ,மனித வரலாற்றுடன் இணைந்தது என்பதற்கு நான் கூறி உள்ள ஆதாரங்களை நீங்கள் மறுக்காமல் ,இராமனின் “I dont want blah blah Tamils are great [நான் அபத்த அபத்த தமிழர்கள் சிறந்தவர்கள் என்று நினைக்கவில்லை]” இந்த கருத்துக்கு ஆதரவு தரும் அளவுக்கு நீங்கள் உணர்வுடன் இருப்பது கண்டு எமக்கு மிக்க மகிழ்வு தான் 🙂 இராமன் ஒருவேளை என் மீது நீங்கள் கூறுவது போல தனி மனித தாக்குதல் நடத்தி இருந்தால் உதிரும் ரோமம் அளவுக்கு மரியாதை கொடுத்து இருப்பேன். ஆனால் அவரின் தாக்குதல் ஒரு இனத்தின் மீது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள உங்களை தடுக்கும் உணர்வு எது ?

                [2] தமிழ் இலக்கணம்,எண் கணிதத்துடன் இணைந்தது என்பதை கூறும் போதே பொறாமை கொள்ளும் அளவுக்கு இராமன் போன்ற மனிதர்கள் உள்ள போது தமிழர்களீன் வரலாற்றில் அவர்களீன் கணித அறிவை ஆய்வு செய்தால் இராமனின் நிலை என்னவாகும் என்பதையும் வரும் நாட்களில் பார்ப்போமே ! [இராமன் பொறாமையில் காய்ந்து கருவாடாக போகா வீட்டால் எமக்கு மகிழ்வு தான்] 🙂

              • Venkatesan,

                [1]தமிழர்கள் கணிதத்துக்கு ஆற்றிய பங்களிப்புகள் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் கணக்கு புலி ராமனுஜன் அவர்களிடம் இருந்து தொடங்கலாமே!

                [2] லண்டனில் அவர் கழித்த அவர் வாழ் நாளின் இருதி 6 ஆண்டுகள்[1914 to 1919] மிகவும் சிறப்பு வாய்ந்தவை

                //தமிழர்கள் கணிதத்துக்கு ஆற்றிய பங்களிப்புகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்.//

                • ராமானுஜரை தமிழராக ஏற்று கொண்டுவிட்டேர்களா ? உங்கள் கணக்குப்படி அவர் ஆரியர் ஆச்சே ? என்ன கொடுமை சரவணன் இது ? 🙂

                  • இராமன் ,

                    [1]திரு ராமானுஜம் அவர்கள் என்ன தமிழ் மீதும்,தமிழர் மீதும் உம்மை போலவே வெறுப்பு உணர்வு கொண்டாரா ?

                    [2]திரு ராமானுஜம் அவர்கள் என்ன “அபத்த அபத்த தமிழர்கள் சிறந்தவர்கள் என்று நினைக்கவில்லை” உம்மை போலவே உளறினாரா ?

                    [3]இராமன், இதற்கு எல்லாம் ஆதாரம் இருந்தால் கொடுங்கள் ,உங்களுடன் சேர்த்து அவரையும் ஆரிய சனங்களுடன் சேர்த்தது விடலாம். தகுந்த ஆதாரம் நீங்கள் கொடுக்காத வரை அவர் எங்கள் தமிழரே 🙂

    • திரு. ராமன்

      //I dont want blah blah Tamils are great. List all the mathematical achievements.
      And how they used mathematics.//

      தமிழர்களுக்கு போதுமான கணித அறிவு இல்லாமலா 1800 ஆண்டுகளுக்கு முன்பு கடல் போன்று பொங்கி வரும் காவிரியை எதிர்த்து கல்லணையை கட்டினார்கள். 1800 ஆண்டுகள் கடந்தும் அனைத்து இயற்க்கை இடர்பாடுகளையும் தாங்கிக் கொண்டு இன்றும் அழியாத சான்றாக விளங்குகிறது என்றால் தமிழர்களின் துல்லியமான கணித அறிவு திறன் கொண்டு கட்டப்பட்ட கட்டுமானம் தான் காரணம். ஒரு வேலை இதற்க்கு வேத கணிதம் தான் காரணம் என்று நீங்கள் நினைத்தால், இது போன்றதொரு அணையை எந்த வட ஆரிய மன்னர்களாலும் கட்ட இயலவில்லையே ஏன்?. இந்திய தேசத்திலேயே பழமையான அணை இது தான்.

      இதற்க்கு சற்றும் குறைந்ததல்ல ராஜ ராஜ சோழனால் கட்ட பட்ட “ராஜ ராஜீஷ்வரம்” என்று போற்றப்படும் தஞ்சை பெருவுடையார் கோவில். கோவில், ஆன்மிகம் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அந்த பிரமாண்ட கலை பொக்கிஷம் 1000 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்னும் அழியாமல் அன்று போல் இன்றும் உள்ளதே அது எதனால்? பெருவுடையாரின் அருள் கடாக்ஷத்தால் மட்டுமா. கண்டிப்பாக இல்லை. அதை கட்டிய “ராஜ ராஜ பெருந்தச்சன்” என்கிற தமிழனின் அறிவினாலும் தான்.

      தமிழர்கள் binomial theorem, pythagoras theorem, calculas இதெல்லாம் கண்டுபிடித்தார்கள என்று தெரியாது. ஆனால்,தமிழர்களின் கணித அறிவிற்கு சான்றாக சில ஆதாரங்களை தருகிறேன், படித்து பரிசீலிக்கவும்

      http://en.wikipedia.org/wiki/Tamil_units_of_measurement

      http://en.wikipedia.org/wiki/Tamil_numerals

      http://www.keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/11461-2010-11-16-14-16-22

  42. சரவணன்,
    கணிதம் அறிவியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தியரெடிகல் இயற்பியல் முக்காலே, மூணு வீசம் கணிதமயமாக இருக்கும். இத்துறையின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான எட்வர்ட் விட்டன் (Edward Witten), பல கணிதத்துறை பரிசுகளும் பெற்றுள்ளார், கணிதத்தின் உச்சபட்ச பரிசான ஃபீல்ட்ஸ் மெடல் உட்பட.

    அறிவியல், கணிதம் இரண்டும் பகுத்தறிவு (rational thought), தர்க்கம் (logic) ஆகிய சாதனங்களை கொண்டு இயங்கும் பொதுதன்மை கொண்டவை. எனினும், கணிதம் ஒரு முக்கிய விஷயத்தில் மற்றெல்லா அறிவுத்துறைகளில் இருந்தும் வித்தியாசப்படும். இது பற்றி அறிய, முற்போக்கு எழுதிய மறுமொழியை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

  43. Hi Venkatean,

    கணிதம் பிறந்த கதை [வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தீன் கதை] :

    புரதான பொது உடைமை சமுகம் :

    [1]எண் கணிதம் தான் அனைத்து விதமான கணிதங்களுக்கும் முன்னோடி என்பதை தாங்கள் அறிவீர்கள். அது பிறந்ததே ஆதி மனிதனின் அடிப்படை அறிவியல் வளர்ச்சியுடன் இணைந்த பயன்பாட்டை சார்ந்து தான். வேட்டை ஆடிய ஆதி மனிதன் அதை தன் குழுவுடன் பங்கீடு செய்வதற்கு தான் முதலில் 1 2 3 4 5 6 7 8 9… என்ற எண்களை குறியீடாக [codes] பயன் படுத்தினார்கள். உணவை பங்கீடு செய்யும் தேவை அவனுக்கு ஏற்பட்டு இருக்கவில்லை எனில் அக் எண் குறியீடுகளுக்கும் 1 2 3 4 5 6 7 8 9… [Numeric codes] தேவை இல்லை அல்லவா ? கணிதமும் ,அறிவியலும் வேறு வேறு என்றால் கணிதம் மனிதனின் கற்பனையில் தோன்றியதாக தானே அர்த்தம். ஆனால் எதார்த்தத்தில் உணவு பங்கீட்டு தேவைக்காக தான் எண் குறியீடுகளை [codes] உருவாகினான்.

    ஆண்டான் அடிமை சமுகம் :

    [2]காடுகளில் வாழ்ந்த ஆதி மனிதன் ஆற்று பாசன சமவெளியை நோக்கி இடம் பெயர்ந்த போது அவனுக்கு இயற்க்கை அதிக விடயங்களை கற்றுகொடுத்தது.பயீர் வகைமைகள், அவற்றிக்கு விளைய ஆகும் கால அளவு, அவற்றின் தேவை ,மறுபடியும் பயீர் செய்யும் முறைகளை TRIAL அண்ட் ERROR முறையில் கற்றான்.

    [3]காலத்தை அளக்க சூரியன் குறியீடாக கொள்வதற்க்கு அது ஒரு புறம் தோன்றி மறுபுரம் மறைவதையுன், அது நகர்வதையும்[Their understanding] , வானில் அது இருக்கும் இடத்தையும் அடிபடையாக கொண்டான். சூரியன் இல்லா உலகில் காலம் என்ற அலகை ஆதி மனிதன் கற்பனை செய்து இருக்க முடியுமா வெங்கட் ?ஆதி மனிதன் தான் இயற்க்கையில் இருந்து கற்றவற்றை உறுதி செய்து கொள்ள [ஆவணம் செய்து கொள்ள ] அவனுக்கு எண் குறியீடுகள் [codes] அவசியம் தேவைபட்டது.

    con….

    Note:

    Instead of reading this long story, Venket you can listen music from Ilayaraja’s Music “Noting but wind”. This same story was narrated by Raja through his brilliant music album called as noted above!

  44. Hi Venkatean,

    கணிதம் பிறந்த கதை [வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தீன் கதை] :

    ஆண்டான் அடிமை சமுகம் :

    நிலம் தனி மனிதனின் தனி சொத்து ஆனது இந்த ஆண்டான் அடிமை சமுகத்தீன் வளர்ச்சி போக்கில் தான். நிலம் அரசனின் சொத்து ஆனாது. அந்த நிலத்தில் இருந்து உற்பத்தி செய்ய பல்வேறு வர்கங்கள் ஏற்பட்டான. நிலம் அளக்கபட்டது. வகைமை படுத்தபட்டது.சதுர,செவ்வக அமைப்பில் ஆனா நிலங்களீன் பரப்பு கணகீடு செய்ய சதுர,செவ்வக வடிவங்கள் மீது தனி மனித முயற்சிகள் நடந்தன.

    con….

  45. கணிதம் பிறந்த கதை [வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தீன் கதை] :

    முதலாளித்துவ சமுகம் :

    நீர் ஆவி என்ஜின், மின்சாரம் ஆகிவை கண்டுபீடிக்கபட்ட உடன் எழுந்த தொழில் புரச்சியீன் செல்ல பிள்ளையான முதலாளித்துவ சமுகத்த்தீன் தேவை கருதியே கணிதம் சார் Operation Research என்ற துறையில் பல்வேறு முறைகள் கண்டு பிடிக்கபட்டன. உம்: சிறந்த முறையில்[optimal] வேலையை பகிரும் பிரச்சனை[assignment problem], சிறந்த முறையில்[optimal] உற்பத்தி பொருட்களை போக்குவரத்து மூலம் சந்தைக்கு கொண்டு செல்லுதல் [transportation problem] மற்றும் simplex method ,duel simple method போன்றவை.

    Note:

    We will see about Land lord society later

    con…..

  46. திரு வெங்கிடேசன் அவர்களே ?

    நீங்கள் கல்வி அலுவலகத்தில் விழுப்புரத்தில் பணிபுரிகீறிர்களா ? அல்லது பணி புரிந்தீர்களா ?

  47. கணிதம் பிறந்த கதை [வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தீன் கதை] :

    நில பிரபுத்துவ சமுகம் :

    இச் சமுகத்தில் உழைக்கும் மக்களை [பண்ணை அடிமைகளை ] சுரண்டி உபரியாக்கபட்ட [நிலத்தில் இருந்து கிடைத்த வருமானம்] லாபம் தேவாலயம், கோவில் கட்ட என்று திருப்பி விடபட்டது. அக் கட்டுமானங்கள் இன்றும் மிகவும் உறுதியானவையாக இருக்க காரணம் அக் கால மனிதர்கள் கட்டுமானப் பணிகள் போது அடித்தளத்தை எவ்வாறு அமைப்பது பற்றிய கட்டுமானம் சார்ந்த கணித அறிவை அனுபவம் மூலம் பெற்று இருந்ததும்,அந்த அறிவை திறம்பட பயன்படுத்தியதுமே ஆகும்.

    உதாரணத்துக்கு தஞ்சாவூர் பெரிய கோயிலை எடுத்துகொள்ளலாம். 0.33 மீட்டர் என்பது தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது.

    For More information visit:

    http://karthiktpl.blogspot.in/2011/12/blog-post_5020.html

  48. இனத்தின் பெருமை பேசியே தமிழ்ப் பாட்டாளிவர்க்கம் ஏமாற்று பட்டு வருகிறது.

    இந்த இனப்பெருமைக்கு விடைகொடுத்தால் தான் நாம் ஏதாவது சாதிக்க முடியும் என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

    பானையில் கணிதத்தை போட்டு கஞ்சியாக்க முடியுமாக இருந்தால் … வயிற்றுப் பசியே போயிடுமே!வறுமை கூடா அகன்றிடுமே!!

    உழைப்புக்கும் சுரண்டலுக்கும் முதாலித்துவத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் உரிய போராட்டம் அல்லவா?தேடுவது.

    தமிழ்நாட்டில் தமிழனின்பெருமை பேச நிறையவே ஆட்கள் இருக்கிறார்கள்.தமிழ்நாடு-இந்தியாவின் பாட்டாளிகளின் அரசியல் அறிவை உயர்த்துவது தான் இன்றுள்ள முக்கிய பணி.

    • மனோ ,

      உங்கள் கருத்துகளில் இருந்து இரு முரண்பாடுகளை காண்கின்றேன்:

      [1]அரசனும் , ஆண்டானும் கூறுவதே வரலாறு என்பதை கம்யுனிஸ்டுகள் நாம் தவறு என்று வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தீன் அடீப்படையீல் மறுக்கும் போது , மக்களீன் நடைமுறை வாழ்வுடன் இணைந்த கணிதத்தை வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தீன் அடீப்படையீல் தானே ஆய்வு செய்ய முடியும் ? அதில் என்ன தவறு காண்கின்றீர்கள் ?

      //பானையில் கணிதத்தை போட்டு கஞ்சியாக்க முடியுமாக இருந்தால் … வயிற்றுப் பசியே போயிடுமே!வறுமை கூடா அகன்றிடுமே!!//

      [2]ஒரு மொழியும் அதன் மக்களும் பார்பனியத்தல் அவதூறு செய்யபடும் போது அதற்க்கு எதீராக குரல் கொடுக்கும் கடமையும் கம்யுனிஸ்டுகளையே சார்ந்து உள்ளது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அந்த நோக்கத்துடன் தானே ம க இ க , தமிழர் வழிபாட்டு உரிமைக்காக கருவரை நுழையும் போராட்டம், சிதம்பரம் கோவில் தமிழ் வழீபாட்டு உரிமை போராட்டம், தமிழ் மக்கள் இசை விழா ஆகியவற்றை நடத்தி உள்ளது. நான் தமிழுக்கும் கணிதத்துக்கும் தொடர்பு உண்டு என்பதை எளிமையாக கூறும் போது ஒரு “சிலருக்கு” மட்டுமே வர வேண்டிய கோபம் உங்களுக்கும் வருவதன் காரணம் என்ன ?

      //தமிழ்நாட்டில் தமிழனின்பெருமை பேச நிறையவே ஆட்கள் இருக்கிறார்கள்.தமிழ்நாடு-இந்தியாவின் பாட்டாளிகளின் அரசியல் அறிவை உயர்த்துவது தான் இன்றுள்ள முக்கிய பணி.//

      • வியாசன்,

        நான் தமிழுக்கும் கணிதத்துக்கும் தொடர்பு உண்டு என்பதை எளிமையாக கூறும் போது ஒரு “சிலருக்கு” மட்டுமே வர வேண்டிய கோபம் வியாசனுக்கும் வருவதன் காரணம் என்ன ?

        வியாசன் ஒரு போலி தமிழ் தேசியவாதி என்பதால் தானே!. 🙂

  49. “இயற்கையின் இயக்க இயலுக்கு” என்ற பி.எங்கெல்ஸ் சின் சில முக்கிய பகுதிகள்:

    இயற்கை விஞ்ஞானத்தின் இப்போது புதிதாக துவங்கிய முதல் கட்டத்தின் பிரதான வேலை தன் அருகாமையில்லுள்ள விஷயாதாரங்களை உடனடியாக ஜீரணத்து தேர்ச்சி பெறுவதே.மிகப் பெரும்பான்மையான துறைகளில் அது அரிச்சுவட்டில்லிருந்து துவங்கவேண்டியிருந்தது.யூக்லிட் வடிவகணிதத்தையும் ப்தாலமின்யின் சூரியமண்டல அமைப்பு தத்தவத்தையும் பண்டையகாலம் சொத்தாக விட்டு சென்றது.அராபியர்கள் தசாம்சமுறை அல்ஜிப்ராவின் தொடக்க விபரங்கள் நவீனகால எண்கள் இரசவாதம் ஆகியவற்றை விட்டு சென்றனர்;கிறிஸ்தவ மத்தியகாலம் ஒன்றையும் விட்டு செல்லவில்லை.

    அவசியத்தின் நிமித்தமாக இந்த நிலையில் பூவுலக விண்ணுலக கோள்களின் இயந்திரவியல் என்ற இயற்கை விஞ்ஞாணத்தின் மிகமிக அடிப்படையான விஞ்ஞானமே முதலிடம் பெற்றது.மேலும் இதற்கு பக்கத்திலேயே இதற்கு துணையாக நிற்கும்வகையில் கணிதவியல் முறைகளை கண்டுபிடித்து நேர்த்தியாக்குவதும் நடந்தது.மகத்தான சாதணைகள் இதில் சாதிக்கப்பட்டன.

    நியூட்டன் லின்னேயஸ் இவர்களால் இனங்கண்டு கொள்ளும் காலத்தின் இறுதிக் கட்டத்தில் விஞ்ஞாணங்களின் இப்பிரிவுகள் ஒருவகையான தேர்ச்சி பெற்றதை நாம் காண்கிறோம். மிக முக்கியமான கணிதவியல் அடிப்படை லட்சணங்கள் ஸ்தாபிக்கப் பட்டன்;விஷேமாக டெக்கார்ட்டின் பகுப்பு முறை வடிவகணிதம் நேப்பெரின் லாகரிதம் லேய்ப்னிட் ஒருவகையில் நியூட்டன் ஆகியோரின் வகையீட்டு நுண்கணிதம் என்றவாறு.கெட்டிப் பொருளின் இயந்திரவியலுக்கு இது பொருந்தும். அதனுடைய பிரதான நியதிகள் இறுதியாக தெளிவாக்கப்பட்டன.முடிவாக சூரியமண்டலத்தை ஆராயும் வானியல் கோள்களின் இயக்கத்தைப் பற்றிய நியதிகளை கேப்ளர் கண்டுபிடித்தார். பருப்பொருளின் பொதுவான இயக்க நியதிகளின் கண்ணோட்டத்திலிருந்து நியூட்டன் அவைகளை வரையறுத்தார்.

    இயற்கை விஞ்ஞானத்தின் இதர பிரிவுகள் இந்த ஆரம்பகட்ட நிறைநேர்த்திற்கும் கூட வெகு தூரத்திற்கு பிற்பட்டு நின்றன.இந்த காலத்தின் இறுதிவாக்கில் தான் திரவப்பொருள்கள் வாயுப்பொருள்கள் ஆகியவற்றின் இயந்திரவியல் மேற்கொண்டு ஆராயப்பட்டது.பெளதிகவயல் தனது ஆரம்ப கட்டத்திலிருந்து-ஒளியிலைத் தவர அதிகமாக ஒன்றும் வளர்ந்துவிடவில்லை வானியல் நடைமுறை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய காரணத்தால் ஒளியியல் பிரமாதமாக அபிவிருத்தி பெற்றது. புளோஜிஸ்டன் தத்துவத்தால் இரசாயணவியல் இரசவாதத்தில் இருந்து முதல் தடவையாக விடுதலை பெற்றது.

    • மனோ ,

      ஒருபக்கம் …..,

      “பானையில் கணிதத்தை போட்டு கஞ்சியாக்க முடியுமாக இருந்தால் … வயிற்றுப் பசியே போயிடுமே!வறுமை கூடா அகன்றிடுமே!!”

      என்று நக்கல் நீங்கள் செய்து கொண்டு, மறுபக்கம்

      “கணிதமும், அறிவியல் பற்றீய இயற்கையின் இயக்க இயலுக்கு” என்ற பி.எங்கெல்ஸ்சின் சில முக்கிய பகுதிகளை நீங்கள் கொடுப்பது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா ? 🙂

      மனோ://தமிழ்நாட்டில் தமிழனின்பெருமை பேச நிறையவே ஆட்கள் இருக்கிறார்கள்.தமிழ்நாடு-இந்தியாவின் பாட்டாளிகளின் அரசியல் அறிவை உயர்த்துவது தான் இன்றுள்ள முக்கிய பணி//:-)

  50. திரு சரவணன்!

    1)கணிதம் அறிவியல் வரிசைக்கு உட்பட்ட தல்ல. வெறும் சூத்திரம் மட்டுமே.

    2)வினவு வில் எழுதுபவர்கள் கருத்துச் சொல்பவர்கள் யாரையும் நான் சந்தேககண் கொண்டு பார்த்ததில்லை. ஆனா ஆனா கம்யூட்ஸ்கட்சிகளே நிலைதடுமாறி தறிகெட்டு ஓடும்போது வினவை கோவிப்பதற்கோ சந்தேககப் படுத்துவதற்கோ எந்த இடமும் இல்லை.

    அடிமட்ட தொழிலாளர்களை கொண்டு ஒரு அமைப்பை கட்டி எழுப்ப வேண்டுமென முயல்கிற அமைப்பு.இந்த அமைப்பில் ஆயிரம் தவறுகள் இருந்தாலும் அதை நாளை துடைத்தெறிவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
    இதில்-நக்கலுக்கும் நளினத்திற்கும் இடமே இல்லை. தாங்கள் புரிந்து கொண்டது தவறுதலாக. முறையாக பார்த்தால் நீங்கள் தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    3)பார்பணியம் இந்தியாவைக் கெடுத்தால்.. ஆபிரிக்காவையும் லத்தீன் அமெரிக்காவையும் ஏன்? 2008-ம் ஆண்டிற்கு பிறகு ஐரோப்பாவின் அமெரிக்காவின் பெரும்பான்யாரோன் வாழ்வின் இயல்பு வாழ்வை கெடுத்தவர் யாரோ? இதற்கான பதிலை தாங்கள் தான் முன்மொழிய வேண்டும்.

    4) இயற்கையின் இயக்கவியலுக்கு என்கிறதை அதற்கு முன் கணிதமும் அறிவியலும் பற்றி என்று சேர்க்க யார் உரிமை தந்தது. தாங்களாகவே எடுத்துக் கொண்டதா?

    5) தஞ்சை பெரியகோவில் வெறும் ஆயிரம்வருடம் பழையானது தான். எகிப்திய பிரமீடுகள் நான்காயிரம் வருடங்கள் பழைமையானது. அதன் உள்கட்டமைப்புகள் இன்று இன்றுவரை யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.சமீபகாலமாக இதை கட்டியவர்கள் மனிதர்கள் அல்ல வேற்றுகிரகவாசிகளே என்று எழுதிய புத்தகமும் மில்லியன் கணக்காக விற்பனையாயிற்று.

    இதைவிட கால்மாக்ஸ் சுட்டிகாட்டிய கோதிக்கால்வாய்கல் சீனமதில் சுவர்கள் இந்த போன்றவை மனித உழைப்பில் தான் ஸயனம் புரிந்தன.-;இதுவே! வரலாற்று பொருள்முதல்வாதம் இதைவிட்டு ஒருயினத்தின் பெருமை பற்றிகதைத்து காலத்தை போக்காட்டுவதல்ல.

    6) மதம்வேறு. கடவுள்வழிபாடு வேறு.மதம் நிறுவனம் கடவுள்வழிபாடு ஆண்டாண்டுகாலமாக தொடர்ந்து வருவது.
    இயற்கையை வழிபடுதல் அதற்கு அடங்கிநடத்தல் என்றும் மதிப்புக்குரியதே!காலப்போக்கில் இதை அதிகாரவர்கம் தம் வசப் படுத்தியது.இப்படி தான் மதநிர்வனங்கள் காலப் போக்கில் உருவாகின.

    எல்லாமே வல்லவன் வகுத்ததே நீதியாயிற்று.

    தில்லை போராட்டத்தையும் இந்த அடிமட்டம் கொண்டுதான் அளக்க வேண்டியதாக உள்ளது.

    உழைப்பாளிகளுக்கு-அடக்கியொடுக்க பட்ட மக்களுக்கு தேவையானது மதம்மாறுவதல்ல.மதம் ஒரு அபின் என்பதை புரியவைப்பதை.இதற்கு நீண்டகாலம் தேவைப்படும் என்பதும் உண்மைதான்.

    நாம் செய்யவேண்டியது மதத்தையும் அரசியலைம் பிரித்து விடுவதே!. இதை நோக்கித்தான் எமது அரசியல் வேலை நகர்த்தப்பட வேண்டும்.

    இதை தெளிவுபடுத்துவதற்கு சந்தர்ப்பம் தந்ததிற்கு நன்றி சரவணன்.

    • Mao,

      இச் சமுகத்தில் உழைக்கும் மக்களை [பண்ணை அடிமைகளை ] சுரண்டி உபரியாக்கபட்ட [நிலத்தில் இருந்து கிடைத்த வருமானம்] லாபம் தேவாலயம், கோவில் கட்ட என்று திருப்பி விடபட்டது. அக் கட்டுமானங்கள் இன்றும் மிகவும் உறுதியானவையாக இருக்க காரணம் அக் கால மனிதர்கள் கட்டுமானப் பணிகள் போது அடித்தளத்தை எவ்வாறு அமைப்பது பற்றிய கட்டுமானம் சார்ந்த கணித அறிவை அனுபவம் மூலம் பெற்று இருந்ததும்,அந்த அறிவை திறம்பட பயன்படுத்தியதுமே ஆகும்.

      உதாரணத்துக்கு தஞ்சாவூர் பெரிய கோயிலை எடுத்துகொள்ளலாம்…………….

      என்று நான் கூறுவதை தாங்கள் படிக்க வீல்லை போலும்

      //5) தஞ்சை பெரியகோவில் வெறும் ஆயிரம்வருடம் பழையானது தான். எகிப்திய பிரமீடுகள் நான்காயிரம் வருடங்கள் பழைமையானது. அதன் உள்கட்டமைப்புகள் இன்று இன்றுவரை யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.சமீபகாலமாக இதை கட்டியவர்கள் மனிதர்கள் அல்ல வேற்றுகிரகவாசிகளே என்று எழுதிய புத்தகமும் மில்லியன் கணக்காக விற்பனையாயிற்று.

      இதைவிட கால்மாக்ஸ் சுட்டிகாட்டிய கோதிக்கால்வாய்கல் சீனமதில் சுவர்கள் இந்த போன்றவை மனித உழைப்பில் தான் ஸயனம் புரிந்தன.-;இதுவே! வரலாற்று பொருள்முதல்வாதம் இதைவிட்டு ஒருயினத்தின் பெருமை பற்றிகதைத்து காலத்தை போக்காட்டுவதல்ல.//

      con….

    • தில்லை போராட்டத்தையும் தவறு என்று கூற முயலுகீண்றீர்களா ?

      //6) மதம்வேறு. கடவுள்வழிபாடு வேறு.மதம் நிறுவனம் கடவுள்வழிபாடு ஆண்டாண்டுகாலமாக தொடர்ந்து வருவது.//

      Note:
      என் கேள்விகள் 50.1, 51.1 ஆகியவை இன்னும் உங்களால் நேரடியாக பதில் அளிக்க படாமல் தான் உள்ளன !

  51. Mao,

    [1]எப்படி அறிவியல் மனிதர்களீன் நடைமுறை வாழ்வுடன் இணைந்தோ, அப்படி தான் கணிதமும் . என் feedbacks 39,40,41 ஆகியவற்றில் எந்த கேள்வீயும் தாங்கள் எழுப்பாமல் இப்போது கணிதம் வெறும் சூத்திரம் மட்டுமே என்று கூறுகின்றீர்கள்.

    //1.கணிதம் அறிவியல் வரிசைக்கு உட்பட்ட தல்ல. வெறும் சூத்திரம் மட்டுமே.//

    வினவு தவறு செய்யும் போது தட்டி கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. தாங்கள் அவ் உரிமையை இது வரை பயன் படுத்தியதாக தெரிய வீல்லை.

    //2)வினவு வில் எழுதுபவர்கள் கருத்துச் சொல்பவர்கள் யாரையும் நான் சந்தேககண் கொண்டு பார்த்ததில்லை. ஆனா ஆனா கம்யூட்ஸ்கட்சிகளே நிலைதடுமாறி தறிகெட்டு ஓடும்போது வினவை கோவிப்பதற்கோ சந்தேககப் படுத்துவதற்கோ எந்த இடமும் இல்லை.

    ஒரு மொழி [தமிழ்] , ஒரு இனம் [தமிழ்] மீது பார்பனியம்-ஹிந்து மதம் தொடுக்கும் காலச்சார ,பண்பாட்டு தாக்குதலை உதறித் தள்ளும் தங்கள் போக்கு மிகவும் அபாயகரமானது.

    //3)பார்பணியம் இந்தியாவைக் கெடுத்தால்.. ஆபிரிக்காவையும் லத்தீன் அமெரிக்காவையும் ஏன்? 2008-ம் ஆண்டிற்கு பிறகு ஐரோப்பாவின் அமெரிக்காவின் பெரும்பான்யாரோன் வாழ்வின் இயல்பு வாழ்வை கெடுத்தவர் யாரோ? இதற்கான பதிலை தாங்கள் தான் முன்மொழிய வேண்டும்.//

    இயற்கையின் இயக்கவியலுக்கு என்கிறதை அதற்கு முன் கணிதமும் அறிவியலும் பற்றி என்று சேர்க்க உரிமை தந்தது யார் எனில் திரு பி.எங்கெல்ஸ் அவர்கள் தான். அவர் கூறுவது :

    ” அவசியத்தின் நிமித்தமாக இந்த நிலையில் பூவுலக விண்ணுலக கோள்களின் இயந்திரவியல் என்ற இயற்கை விஞ்ஞாணத்தின் மிகமிக அடிப்படையான விஞ்ஞானமே முதலிடம் பெற்றது.மேலும் இதற்கு பக்கத்திலேயே இதற்கு துணையாக நிற்கும்வகையில் கணிதவியல் முறைகளை கண்டுபிடித்து நேர்த்தியாக்குவதும் நடந்தது.மகத்தான சாதணைகள் இதில் சாதிக்கப்பட்டன.

    //4) இயற்கையின் இயக்கவியலுக்கு என்கிறதை அதற்கு முன் கணிதமும் அறிவியலும் பற்றி என்று சேர்க்க யார் உரிமை தந்தது. தாங்களாகவே எடுத்துக் கொண்டதா?//

    con……

  52. MAO,
    பாட்டாளி வர்கமும் எண் கணிதமும் :

    பிறக்கும் கொழந்தையீன் எடை 3.5kg என்று எடை பார்க்கும் மருத்துவர் முதல் அதே குழந்தை 80+ வயதில் மரணம் அடையும் போது 3.5 அடிக்கு பள்ளம் தோண்டும் சுடுகாட்டு தொழிலாளர் வரை 99.9 % [உழைக்கும்] மக்கள் தன் அன்றாட வாழ்வில் பயன் படுத்துவது எண் கணிதத்தை தான்.

    [1]கட்டிட மேஸ்திரி ,பிளம்பர், பிட்டர் , டைலர் என்று அனைத்து உழைக்கும் மக்களும் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது எண் கணிதத்தை தான்.

    [2]மருந்து தொழிற்சாலையில் மூலப்பொருட்கள்[raw materials] மீதான தர கட்டுப்பாடு ஆய்வு , முடிவுற்ற தயாரிப்பு[ finished product] மீதான தர கட்டுப்பாடு ஆய்வு ஆகியவை செய்யும் போதும் பயன்படுத்துவது எண் கணிதத்தை தான்.

    [3]வெறும் 0.1% உயர் நடுத்தர வர்க்க மக்கள் மட்டுமே [professor ,engineer, scientist etc ] பயன்படுத்துவது மேம்பட்ட கணிததத்தை [advanced Math]

    எதார்த்தம் இப்படி இருக்க நீங்கள் சரியான புரிதல் இல்லாமல் ,கணிதம் வெறும் சூத்திரம் மட்டுமே என்று கூறுவது , மார்சியத்தீன் மீதான உங்கள் புரிதல் எப்படி பட்டது என்ற கேள்வியை எழுப்புகின்றது

    • திரு சரவணன்!

      நீங்கள் “அம்பேத்தகர்” “ஈ.ரா.பெரியார்” போன்ற புத்தகங்களை மட்டும் வாசித்து திருந்த முடியாத அளவு கெட்டுப் போய்யுள்ளீர்கள்
      இவர்களால் பாட்டாளிவர்க்கம் எந்த அறிவையும் பெற முடியாது.
      பாட்டாளிவர்க்கத்திற்கு வாய்க்கரிசி போட…முதாலித்துவ பாராளுமன்றத்திற்கு சாதியின் பெயரில் ஒரு சிலரை அனுப்ப முடியுமே தவிர எந்தயொரு சாதியமைப்பையும் தகர்க முடியாது
      இந்த சாதியமைப்பை நிரந்தமாகக்கவே முடியும்.

      இந்தியாவின் சாபக்கேடே சாதியமைப்பு முறையும் வறுமையும் தான். இதை முற்றுமுழுதாக ஒழிக இந்தியா தொழிலாள வர்கத்தால் மட்டும் தான் முடியும்.அவர்களிடம் தான் இதற்கான வேலைதிட்டம் உள்ளது.

      சிறு ஆலோசணை தருகிறேன்.சமூகத்திற்கு நீங்கள் பயன்யுள்ள மனிதனாக வாழவேண்டுமென நினைத்தால் தொழிலாள வர்கத்திற்கு “தாய்நாடு இல்லை” என்கிற மாக்ஸின் ஞாணமுள்ள வார்த்தையை மறவாதீர்கள்.”கம்யூனிஸ்கட்சி அறிக்கை” “கூலியுழைப்பு மூலதனம்” இரண்டையும் திரும்பத்திரும்ப மனப்பாடம் செய்யுங்கள். நல்லதும் கெட்டதுமாக நடந்து முடிந்த சோவியத்யூனியன் மக்கள்சீன வரலாறுகளை அத்துடன் ஒப்பிட்டு பார்த்து அதன் தோல்விக்குரிய காரணங்களை கண்டு பிடிக்க முயற்சியுங்கள்.

      இப்படி முயன்றால் மட்டுமே பயன்னுள்ள மனிதனாக பரந்த அடக்கியொடுக்கப் பட்ட மக்களுக்காக வாழ-சேவையாற்ற முடியும்.இதுவே நான் உங்களுக்கு செய்யும் உபகாரம். இதையும் தவறுதலாக புரிந்துகொள்ள மாட்டீர்கள் என்பதே எனது விருப்பமும்.

      சிறுகுறிப்பு: இவ்விருபுத்தகமும் விஸ்ணுபுரம் போன்ற கனமான புத்தகமோ விலையான புத்தகமோ அல்ல.வெறும் 100 பக்கங்களை உள்ளடக்கியதே. உடனடியாக புரிந்த கொள்வதில் தான் சிலசிக்கல் ஏற்படும்.திரும்பத்திரும்ப படிக்கும் போது நீரோடைமாதிரி தெளிவாகிவிடும். முயற்சித்தால் முடியாது ஒன்றில்லை.

  53. மாஒ[mao] ,

    பல ஆளுமை கோளாறு[multiple personality disorder] என்றால் என்ன என்பதற்கு உங்கள் பின்னூட்டங்களை உதாரணமாக கொடுக்களால் போல் உள்ளதே !

    [1] ஒருபக்கம் நான் “அம்பேத்தகர்” “ஈ.ரா.பெரியார்” போன்ற புத்தகங்களை மட்டும் வாசித்து திருந்த முடியாத அளவு கெட்டுப் போய்யுள்ளீர்கள் என்று கூறுகின்றீர்கள் மறுபக்கம் “கம்யூனிஸ்கட்சி அறிக்கை” “கூலியுழைப்பு மூலதனம்” இரண்டையும் திரும்பத்திரும்ப மனப்பாடம் செய்யுங்கள் என்று கிருஸ்துவ மத போதகர் போன்று உபதேசம் செய்கின்றிர்கள்.

    [2]உங்களீடம் நான் கேட்ட எளீய கேள்விகளுக்கு பதில் கூறும் திறன் இன்றி பெரியாரையும் ,அம்பேத்காரையும் வலிய விவாதத்துக்கு இழுக்கீன்றீர்கள்.

    [3]உங்க்ளீன் சுய முரண்பாடுகளை பல முறை நான் சுட்டி காட்டியும் அதை களைய முயலாமல் மீண்டும் மீண்டும் வெட்டி வாதம் செய்கின்றீர்கள்.

    [4]இந்த விவாதத்தில் உங்களிடன் எழுப்பபட்ட உங்கள் முரண்பாடுகள் மீதான கேள்விகளுக்கு , முடிந்தால் பதில் கூறவும்.

  54. உண்மைதான் சரவணன்! ஆனால் சிறுமாற்றம் தேவை.கிஸ்தவ போதனை பெரும்பான்மையோரை மேல்உலக சொர்க்கத்தை பார்க்க அனுப்பிவிட்டு ஒருசிறுபான்மையோருக்கு இந்த பூமியை சொந்தமாக்குவதைப் பற்றியது.மாக்ஸ்சிய போதனை இந்த சிறுபான்மையோரை சொர்கத்திற்கு அனுப்பிவிட்டு பெரும்பான்மை யோருக்கு இந்த பூமியை சொந்தமாக்குவது பற்றியது.இது தான் இந்த போதனையில் உள்ள வித்தியாசம்.

    மற்றும் படி உங்களுக்கு பதில் தருவதில் சிக்கல் உள்ளது. உதாரணத்திற்கு பிரபலமான வாழைப்பழபகிடி இருக்கிறதே!அதே மாதிரி.வாழைப்பழத்திற்கு காசு கொடுத்தவன் நிலை என்நிலை. உதவிக்கு வருபவர்களுக்கும் அந்தநிலை தான் ஏற்படும்.

    ஆகவே என்னை பதில் கேட்டு தொந்தரவு செய்யாது மன்னித்து விடுங்கள்.

    • Mao,

      [1]பதில் சொல்லாமல் நழுவி ஓடுவது உங்கள் விருப்பம் எனில் எனக்கு ஒன்றும் துக்கம் இல்லை. இவ்வளவு நேரம் நீங்க பேசிய practice இல்லாத உங்க வறட்டு மார்சீயம் வாழப்பழ jokeஅய் விட ரொம்ப சூப்பர்.

      [2]மார்சீயம் நடைமுறைக்கு உரியது, மனப்பாடம் செய்து பஜனை போடுவதற்கு உரியதது இல்லை என்பது கூட தெரியாத உங்களுடன் பேசுவது வீண்.

      [3] பாட்டாளி வர்க்கம் தினமும் பயன் படுத்தும் நடைமுறை எண் கணிதத்தின் மீதான என் வீளக்கமும் உங்கள் மொவுனமும் சூப்பர்

      [4]தமிழ் இலக்கணம் கணிதத்துடன் இணைந்தது என்பதை எளிமையாக நான் வீளக்கும் போது உங்களுக்கு வந்த வெறுப்பு அதை விட சூப்பர்.

      [5] கணிதம் கஞசி காச்ச உதவுமா என்று நீங்கள் கூறி கொண்டே , “கணிதமும், அறிவியல் பற்றீய இயற்கையின் இயக்க இயலுக்கு” என்ற பி.எங்கெல்ஸ்சின் சில முக்கிய பகுதிகளை நீங்கள் கொடுப்பது எல்லாவற்றையும் விட சூப்பர்.

      பதில் சொல்லும் ஆற்றல் இல்லை என்றால் விவாத மேடைக்கு வரக்கூடாது என்ற வரையரை கூட தெரியாத உங்கள் அறிவு அனைத்தையும் விட சூப்பரோ சூப்பர் .Keep it up mao

      • அந்த ஒண்னு தான் இதுவென்றால்; நான்னென்ன யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

        • மாஒ[mao] வின் அரசியல் அறிவு இப்போது வாழை பழத்தில் போய் சறுக்கி விழுந்து முடிந்து விட்டது தான் இப்போது பெரும் சோகம் 🙂

  55. @தாயுமானவன் பிள்ளை

    கல்லணையில் உள்ள கணிதம் பற்றி தெரிந்து கொள்ள ஆசைபடுகிறேன் . அது சம்பந்தமான புத்தகம் இருந்தால் சுட்டி கொடுத்து உதவவும்.

    மற்றபடி எகிப்து மக்கள், பாபிலோனியர்கள் நூன்காயிரம் ஆண்டுகளுக்கு முனாலேயே கணித அறிவு பெற்று இருந்ததற்கு ஆதாரம் உள்ளது .

    சுவற்றில் சாத்தப்பட்டு இருந்த ஏணி , இரண்டடி நழுவினால் எவ்வளவு உயரம் குறையும் போன்ற கணக்குகள் பாபிலோனியர்கள் செய்து உள்ளார்கள் .

    நம் தமிழகத்தில் இது போல எதுவும் பெரிய கணக்குகள் செய்து இருகிறார்களா எனபது பற்றி தெரியவில்லை .

    ராஜ ராஜ சோழன் கட்டியது வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முனால் , அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “பாலிச சிதாதந்தம் ” என்று கிரக்கர் பாலின் கணக்குகள் இந்தியாவிற்குள் வந்து விட்டது . அடுத்து கணக் போடுவதற்காகவே,நிலம் அளப்பதர்காகவே ராஜராஜன் ஆரியர்களைதான் வடக்கில் இருந்து அழைத்துவந்தான் எனபது வரலாறு . அதை தமிழ் கட்டுமான உழைப்பு , பொருள் பங்களிப்பு இருக்கலாம் , கணித பங்களிப்பு இருந்ததா எனபது கேள்வி ? அதாவது தாஜ்மஹாலை கட்டியது துருக்கி பொறியாளர்கள் அனால் பொருள் நம்முடையது . அதைவைத்து கணித அறிவை கணக்கிட முடியாது

    தமிழ் எழுத்துக்கள் ஏன் ஆரியர் எழுத்தோடு ஒட்டி இருக்கிறது , தனித்துவம் தெரியவில்லையே

    ஒன்று க – சமஸ்கிருதம் ஏக
    ஏழு எ- சப்த
    எட்டு – அ – அஷ்ட

    தமிழன் பெரியவன் அறிவானவன் என்று தமிழ் நாட்டுக்குள் மட்டும் காதும் காதும் வைத்து பேசி மகிழ்வதால் யாதொரு பயனும் இல்லை .

  56. டார்வின் போன்ற அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ள இயற்கை அறிவியல் மட்டும் போதுமானதல்ல. சமூக அறிவியலான மார்க்சியத்தின் புரட்சிகள் தேவைப்படுகிறது.

    Respected Sir,

    As per darwinism everything will change, because they want to live in world.

    But as per your “Marxism” your people never allow to change any one, even your marx, lenin came and told please change for present situation also your people never allow to change any one.

    Than how will communism and socialism will come?

    For my best observation communism, socialism is spoil by own people only.

    One more best example Tamil is spoiled by Who?……..(all will know)

    Udayan

  57. பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.

    தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை?

    இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.

    மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.
    மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.
    http://www.onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/manithan_kuranglirunthu_piranthana/#.VFJOF1cr0jc

    • //எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.///

      அறிவியல் பூர்வமாகவும், தர்க்கரீதியிலும் விளக்கங்கள் பல அளித்த பின்பும் கூட நூற்றாண்டுகளாக சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அறிவுடைவர்களாக இருக்கமாட்டார்கள்.

      இந்த கட்டுரையிலும் இதற்கான பதில் உள்ளது. மதவாதிகளின் மூளை இயங்கும் (சிந்தனை) முறையிலும் இதற்கான பதில் உள்ளது :). பரிணாம வளர்ச்சியடையாத குரங்கின் மூளையை கொண்டிருப்பதால் தான் நீங்கள் இப்படி நூற்றாண்டு காலமாக சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்; இதுவே பரிணாம வளர்ச்சிக்கு நல்ல சான்று இல்லையா !

      முதலில் கட்டுரையை படிக்க வேண்டும். பின்னர் அதை அறிவியல் பூர்வமாகவும், தர்க்கரீதியிலும் முறியடிக்க முயல வேண்டும். குரங்கின் மூளையை கொண்டிருக்கும் மதவாதிகளிடம் இதை எதிர்பார்க்க முடியாதுதான். 🙂

    • நன்றி ameen baqavi அடிக்கடி பீஜே கருத்துக்களை மறுமொழிகள் இடவும் இங்களுக்கும் காமடியாக பொழுது போகும்.

    • நண்பர் பாகவி,
      பதிவினைப் படிக்காமல் ,நம்ம பீ.சே நபியோட வஹியை கொன்டாந்து வினவிலே இறக்கி புட்டிகளே நியாயமா???
      /பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்./
      மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரிகளும் 350 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு செல் உயிரியிடம் இருந்து கிளைத்து தழைத்து பரிணமித்தனர் என்பதே பரிணாமக் கொள்கை. எனப்படும் மனிதனும் ,சிம்பன்சியும் சுமார் 65 இலட்சம் ஆண்டு முன் ,பொது மூதாதையரைக் கொண்டு இருந்தனர் என்பதுதான் சரி.
      //தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை?//
      குரங்கு மனிதனை பெற்றடுப்பது பரிணாம அல்ல.அது அண்ணன் பீ சே வுக்கு வந்த வஹி!!! இருந்தாலும் அண்ணன் மனுஷ்ய புத்திரனை மிருக புத்திரன் என திட்டினார் என்பது சிந்திக்கத் தக்கது.
      //இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.//
      வஹிக்கு யாரிடமும் பதில் கிடைக்காது. அறிவியல் கேள்விக்கு மட்டுமே அறிவியல் பதில் கிடைக்கும்.
      //மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.//
      மேல் நிலை,கீழ்நிலை என்பதெல்லாம் சார்பு நிலை சார்ந்தது.ஒரு காலத்தில் டைனோசார்கள் உலக முழுதும் வாழ்ந்தன.இப்போது மனிதர்கள் வாழ்கிறோம்.
      மனிதர்களின் ஜீன்கள் தலைமுறை தலைமுறையாக மாறுவது ஆவணப் படுத்தப் பட்டாலும் ,எபோலா போன்ற புதிய கிருமிகளுக்கு உலக்மே அஞ்சினாலும் இப்படி ஒரு கேள்வியா? மன்னிக்கவும் வஹியா?

      //மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.//

      மனிதன் தனி இனம்தான், மனிதனுக்கு உள்ளேயே இரத்தப் பிரிவுகள் , ஒருவரின் உடல் உறுப்புகளைப் பிறருக்கு பொருத்த பல கட்டுப் பாடுகள் உண்டு என்பது தெரியுமா? ஒரு ஆதம்,ஹவ்வாவிடம் இருந்து அனைத்து இரத்தப் பிரிவு மனிதனும் தோன்றி இருக்க முடியுமா? ஆகவே ஒவ்வொரு இரத்தப் பிரிவு மனிதனும் வேவ்வேறு படைப்பா???
      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கலக்கிறீங்க மூமின்!!

Leave a Reply to Saravanan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க