privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்இன்ஜினியரிங் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !

இன்ஜினியரிங் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !

-

மிழக பொறியியில் கல்லூரிகளில், தலித் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் (11.08.2014) ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.

அண்ணா பல்கலைக் கழகம் கவுன்சலிங்
அண்ணா பல்கலைக் கழகம் கவுன்சலிங்

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் புள்ளிவிவரப்படி 2006-07-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சாதிகளின் மாணவிகள் 2,361 பேர் சேர்ந்தனர். 2013-14-ம் ஆண்டில் 10,505 மாணவிகள் சேர்ந்திருக்கின்றனர். பொதுப்பிரிவு மாணவிகளின் நிலையோ இந்த வேகத்தில் அதிகரிக்கவில்லை.

2006-07-ல் 4,498 ஆக இருந்த பொதுப்பிரிவு மாணவிகள், 2013-14-ல் 6,535-ஆக மட்டுமே அதிகரித்திருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலும் 2013-14-ம் ஆண்டில் பொதுப்பிரிவு பெண்கள் 184-ஆக இருக்க, தலித் மாணவிகள் 577 ஆக சேர்ந்திருக்கின்றனர்.

இந்த ஆண்டுகளில் பொதுவாக பொறியியல் மாணவர் சேர்க்கை 2.5 மடங்கு அதிகரித்திருக்கும் போது தலித் மாணவிகளின் சேர்க்கை விகிதம் 4.4 மடங்காக அதிகரித்திருக்கிறது. தலித் ஆண் மாணவர்கள் 2013-14-ம ஆண்டில் 18,988 பேர் சேர்ந்ததை ஒப்பிட்டு பார்த்தாலும் மாணவிகளின் விகித வளர்ச்சி மிக அதிகம்.

“அவர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாக இந்த மாற்றத்தை பார்க்கலாம். அவர்களது சூழ்நிலையிலிருந்து வெளியே வரும் வழியாக, கல்வியை பார்க்கும் விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது” என்று லயோலா கல்லூரியின் உதவி பேராசிரியர் அம்ரிதா லெனின் கூறியிருக்கிறார்.

எனினும் இந்த புள்ளிவிவரங்கள் கூறும் தலித் மாணவிகளின் வளர்ச்சி உண்மையானதா?

2011-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 16.6% தலித் மக்கள் வாழ்கிறார்கள். ஒட்டு மொத்த இந்திய தலித் மக்கள் தொகையில் 7.2%-த்தைக் கொண்டிருக்கும் தமிழகம், தலித் மக்கள் வாழும் நான்காவது பெரிய மாநிலமாகும். தமிழகத்தின் மக்கள் தொகை விகிதப்படி இங்கே 18% தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.

தற்போதைய நிலவரத்தின் படி தமிழகத்தில் 570 பொறியியில் கல்லூரிகள் உள்ளன. சில நிர்வாக பிரச்சினைகள், அரசின் மேலோட்டமான கண்காணிப்பு நாடகம், நடவடிக்கை காரணமாக இந்த எண்ணிக்கை சற்று குறையலாம். எனினும் மேற்கண்ட தலித் மாணவிகள் குறைவாக சேர்ந்தாக கூறப்படும் 2006-07-ம் ஆண்டிற்கு பிறகு சுமார் 280-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இங்கே புதிதாக துவங்கப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 2013-ம் ஆண்டில் இரண்டு மடங்கு கல்லூரிகள் அதிகரித்திருக்கின்றன.

ஆகவே தலித் மாணவிகளின் சேர்க்கை வளர்ச்சியில் இந்த கல்லூரி பெருக்கம் மறைந்திருக்கிறது. மொத்தமுள்ள பொறியியல் கல்லூரிகள் உள்ள 2,36,417 இடங்களில் தலித் மக்களின் 18% சதவீத இருப்பின்படி 42,255 பேர் படிக்க வேண்டும். ஆனால் இரு பால் பிரிவு தலித் மாணவர்களை கூட்டினாலும் அது 30,000 மட்டுமே வருகிறது. இதில் அரசு கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான 15% இட ஒதுக்கீட்டின் படி சுமார் 2,000 இடங்கள் வரலாம். இவற்றில் கட்டணம் குறைவு என்பதோடு, இங்கு படித்தால் ஒப்பீட்டளவில் மதிப்பும், வேலை வாய்ப்பும் சற்று அதிகம் என்பதால் தலித் மாணவர்களில் அதிக மதிப்பெண் வாங்கும் பிரிவினர் கண்டிப்பாக சேர்ந்து விடுவார்கள். மீதி இடங்கள் அதிக கட்டணம் வாங்கும் தனியார் கல்லூரிகள். இதில்தான் பிரச்சினையே.

சரி, எது எப்படியோ தலித் மக்களின் விகிதத்திற்கு நெருக்கமாக இந்த எண்ணிக்கை வருகிறதே என்று சிலர் எண்ணலாம். அப்படி வைத்துக் கொண்டாலும் தலித் மாணவர்கள் சேர்க்கை வளரும் விகிதத்தில் மற்ற பிரிவினர்களும் இருக்க வேண்டுமல்லவா? அப்படி இல்லை என்பதை இந்தக் கணம் வரை கிட்டத்தட்ட பாதி இடங்கள் அதாவது 1,00,000-த்திற்கும் மேற்பட்ட இடங்கள் யாரும் சேராமல் இருக்கும் யதார்த்தம் நிரூபிக்கின்றது. பல கல்லூரிகள் ஒரு மாணவரைக் கூட சேர்க்காமல் கடை விரித்திருக்கின்றன.

இந்த காலி இடங்களை ஓரளவாவது நிரப்ப வேண்டுமென்பதற்காக சுயநிதிக் கல்லூரிகள் தமது சேர்க்கை காலத்தை நீட்டியிருக்கின்றன. பல்வேறு முறைகளில் மாணவர்களை சேர்க்க பிரச்சாரமும் செய்து வருகின்றன. அதிலொரு முயற்சியாகத்தான் இந்த ஊடகச் செய்தியை பார்க்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்கா, சீனாவின் கூட்டுத் தொகையை விட அதிகமான பொறியியல் மாணவர்களை இந்தியா வருடந்தோறும் உற்பத்தி செய்கிறது. கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவர்கள். இவற்றில் ஐ.டி நிறுவனங்கள் சராசரியாக ஆண்டு தோறும் சுமார் 50,000 மாணவர்களை மட்டும் பணிக்கு அமர்த்துகின்றன. அதுவும் தற்போது குறைந்து வருவதோடு, சம்பள விகிதமும் சரிந்து வருகிறது. இந்த எண்ணிக்கைக்கு நிகராகவோ இல்லை குறைவாகவோ உற்பத்தித் துறை நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கின்றன. இந்த ஒரு லட்சத்தை கழித்து விட்டால் மீதியுள்ளோரில் கால்வாசிப் பேர் ஏதோ ஒரு வேலையை மிகக் குறைந்த சம்பளத்திற்காக ஏற்கின்றனர். முக்கால்வாசிப்பேர் வேலையற்று இருக்கின்றனர். இவர்களும் இறுதியில் வேறுவழியின்றி ஏதோ ஒரு வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்கள்.

சாதி கௌரவம், சொத்துடைமை உள்ளவர்கள் மட்டும் திருமணத்திற்கு விலை பேசும் சரக்காக பொறியியல் படிப்பை பயன்படுத்துகிறார்கள். பெரும்பான்மையினர் படித்து நல்ல வேலை கிடைத்து அதிக சம்பளம் வாங்க முடியும் என அப்பாவித்தனமாக நம்பி ஏமாறுகிறார்கள்.

இது நடுத்தர வர்க்கத்திற்கு பட்டுத் தெரிந்த பிறகே பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாகும் நிலைமை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றது. இந்த நிலைமையில் தலித் மாணவிகள் அதிகம் சேர்கிறார்கள் என்பதை எப்படி பார்ப்பது?

தாழ்த்தப்ப்ட்ட மக்களில் நடுத்தர வர்க்கமாக, மாத சம்பளம் வாங்கும் பிரிவினரே இத்தகைய உயர்கல்விகளில் தமது பிள்ளைகளை சேர்க்கின்றனர். இதற்காக தமது சொத்துக்களையும், வாழ்நாள் வருமானத்தையும் அடகு வைத்து படிக்க வைக்கின்றனர். ஏழைகளில் இத்தகைய படிப்பிற்கு வரும் வாய்ப்பு மிகக் குறைவு. அதிலும் லட்சத்திற்கு ஒரு மாணவருக்கு தினமணி போன்ற ஊடகங்களின் கௌரவ நன்கொடை மூலம் வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆரம்பக் கல்வி, பள்ளிக் கல்வி படிப்பில் இடைநிறுத்தம் செய்து வெளியேறும் எண்ணிக்கையில் தலித் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க அளவில் படிக்கும் இம்மக்களும், அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு ஒழிக்கப்படுவதிலிருந்தும் இதை புரிந்து கொள்ள முடியும். எந்த வசதிகளுமற்று நடத்தப்படும் அரசு கலைக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிகம் படிக்கிறார்கள். எனினும் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் கணிசமாக படிக்கின்றனர். மேற்கண்ட பிரச்சினைகள் இவர்களுக்கும் பொருந்தும்.

பொறியியல் படிப்பின் விகிதத்திற்கு நிகராக நிலவுடைமையிலோ இல்லை மற்ற தொழில் சொத்துக்களிலோ தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை. கிராமங்களிலிருந்து கூலி வேலைக்காக குடும்பம் குடும்பமாக வெளியேறும் பிரிவினரில் இவர்களே குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றார்கள்.

இதன்படி பார்த்தால் சமூகத்தில் ஏற்படும் எத்தகைய விழிப்புணர்வும் இம்மக்களை கடைசியில்தான் எட்டும். அதனால்தான் பொறியியல் படித்தால் வேலை கிடைப்பது நிச்சயமில்லை, படிப்பதற்கு அதிக பணம் புரட்ட வேண்டும் என்ற யதார்த்தத்தின் படி மற்ற பிரிவு மக்கள் அதை புறக்கணிக்கத் துவங்கும் பொழுது தலித் மக்கள் அதில் அதிகம் சேர்கிறார்கள் என்பது வளர்ச்சியா இல்லை ஏமாற்றுதலா?

அவர்களது பொருளாதாரத்தை சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் கைப்பற்றும் சதியை வளர்ச்சி, சாதி அடக்குமுறைக்கு எதிரான எதிர்வினை என்று மட்டும் சுருக்கிப் பார்ப்பது சரியா என்பதே நமது கேள்வி.

கிராம அளவில் நிலவுடைமை சமூக அமைப்பில் பொருளாதார ரீதியில் தலித் மக்களுக்கு விடுதலை கிடைக்காத வரை இத்தகைய சீர்திருத்த முயற்சிகள் அவர்களை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் மற்ற சாதி மக்களையும் திசை திருப்பும் ஒன்றாகும்.

குறைவு, கூடுதல் என்று எண்களை கொண்டு வளர்ச்சியை காட்டும் ஊடக அறிஞர்கள் சமூகத்தின் இயக்கத்தை உள்ளது உள்ளபடி பார்க்க மறுப்பது தற்செயலான ஒன்று அல்ல. ஏழைகளை ஏழைகளாக இருக்க வைக்கும் முயற்சி பழைய பஞ்சாங்க முறையில் இல்லை என்றாலும் இன்ஜினியரிங் வடிவில் வருதால் அதை புதிய கம்ப்யூட்டர் பஞ்சாங்கம் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

மேலும் படிக்க