privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்நுகர்வு வெறி ஏவிவிடும் பாலியல் வன்கொடுமை

நுகர்வு வெறி ஏவிவிடும் பாலியல் வன்கொடுமை

-

“பெருகிவரும் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் நுகர்வு வெறியே!” என்ற தலைப்பில் பெண்கள் விடுதலை முன்னணி சென்னை பல்லாவரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று (09/08/2014) மாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது!

கடந்த ஒரு மாத காலமாக, பேருந்துகளில், ரயிலில், குடியிருப்பு பகுதிகளில் என மக்கள் மத்தியில் 6000 துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் தொடர் பிரச்சாரம் செய்தார்கள். பெண்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. இளைஞர்கள் மத்தியில் நுகர்வு வெறிக்கு எதிராக ஒரு கருத்து மாற்றத்தை உருவாக்க முடிந்தது!

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய, பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் இராஜி “நாள்தோறும் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் சமூகத்தில் பெருகிவருகிறது. இதற்கான சமூக தீர்வை முன்வைத்து பெண்களை திரட்டி இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

கலைஞர் தொலைக்காட்சியில் குத்தாட்ட நிகழ்ச்சியாக ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியை தடை செய்ய கோரி சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை சுட்டிக்காட்டியும், குரோம்பேட்டை மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மார்க் கடையை திறக்கவிடாமல், பகுதி மக்களை அணிதிரட்டி, விடாப்பிடியாக போராடியதையும் சுட்டிக்காட்டி, மக்களைத் திரட்டி போடும் பொழுது தான் பாலியல் வன்முறை பிரச்சனையை கூட தீர்க்கமுடியும்” என பேசினார்.

கண்டன உரை நிகழ்த்திய பெண்கள் விடுதலை முன்னணியில் சென்னை கிளை செயலாளரான தோழர் உஷா “தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக்கு இதே இடத்தில் அந்த சமயத்தில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்பொழுது பிரச்சாரம் செய்த பொழுது சிலர் ‘ஏன் இங்கு போராடுகிறீர்கள்?” என கேள்விக்கேட்டனர். அதற்கு பிறகு தமிழகத்தில் பல பாலியல் வன்முறைகள் நடந்திருக்கிறது. ஆனால், நான்கு நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா சட்டபேரவையில் பேசிய பொழுது, கருணாநிதி ஆட்சியை விட தன் ஆட்சிக்காலத்தில் பெண்கள் மீதான வன்முறை 50 சதவிகிதம் குறைந்திருக்கிறது என்றும், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். இது கடைந்தெடுத்த பொய். புகார் கொடுக்க சென்ற பெண்களை காவல்துறை எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதும், புகார் பதிவு செய்ய மறுப்பதும் அவ்வப்பொழுது செய்திகளில் வந்துகொண்டு தான் இருக்கின்றன. முதல்வரின் பேச்சைக் கேட்டு, அதிமுககாரர்கள் எல்லோரும் பெஞ்சை தட்டுகிறார்கள். மற்ற ஓட்டுக்கட்சிகள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். பெண்கள் பிரச்சனை உட்பட எந்த சமூக பிரச்சனை குறித்தும், உருப்படியான விவாதம் சட்டமன்றத்தில் எதுவும் நடப்பதில்லை.

விளம்பரங்களில் பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார்கள். ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களில் கூட பெண்களை ஆபாசமாக காட்டுவது தொடர்ந்து நடந்துவருகிறது!

இந்தியாவில் காட் ஒப்பந்தத்திற்கு பிறகு தாரளமயம், தனியார்மயம், உலகமயம் கொள்கைகள் அமுலானதிலிருந்து சமூகத்தில் நுகர்வு வெறி என்பது பல்கி பெருகியுள்ளது. பல நுகர்வு பொருட்களையும் வாங்கி குவிப்பது என்பதும், புதிது புதிதாக வாங்கி அனுபவிப்பது என்பதும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விஷம் போல பரவியுள்ளது. இதில் பெண்ணையும் பொருளாக பார்க்ககூடிய கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளது.

பெருகிவரும் பாலியல் வன்முறையை தீர்க்க, துவக்கமாக சமூகத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்ளும் பொழுது அல்லது பார்க்கிற பொழுது, செருப்பால் அடியுங்கள். இப்படி பெண்கள் சகித்துக்கொண்டு செல்வதால் தான் மேலும் மேலும் தைரியம் பெற்று பாலியல் தொந்தரவுகளை செய்கிறார்கள். எனவே, ஏதேனும் பிரச்சனையென்றால், பெண்கள் விடுதலை முன்னணியை தொடர்புகொள்ளுங்கள். உங்களுடன் எப்பொழுதும் துணை நிற்போம்!” என்று பேசினார்.

ஆர்ப்பாட்டம் நடந்தது பல்லாவரத்தின் மார்க்கெட் பகுதி என்பதால், நூற்றுக்கணக்கான மக்கள் ஆங்காங்கே நின்று கவனித்தனர். “செல்போனில் ஆபாச படங்கள் இளைஞர்களை சீரழிக்கிறது. நீங்கள் பேசியது சரி” என்றார் ஒரு பெண்.  “இந்த மாதிரி குற்றங்களுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் மன்னித்து விடுவதால் தான் குற்றம் பெருகிறது” என ஒரு பெண் ஆவேசமாக தன் கருத்தை சொன்னார். அலுவலத்திலிருந்து வேலையை விட்டுச் சென்ற பெண் “நாங்க மனசுல நினைக்கிறதை, நீங்கள் நடைமுறையில் சரியாக செய்கிறீர்கள்” என சொன்னார்.

பெண்கள் மீது திணிக்கப்படும்
பாலியல் வன்முறை வெறியாட்டத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

பெண்ணைப் போக பொருளாக
ஆணுக்கும் பெண் அடிமையாக
நடத்துகின்ற நிலவுடைமை பண்பாட்டை
அறுத்து எறிவோம்! அறுத்து எறிவோம்!

தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது
பாலியல் வன்கொடுமை நடத்துவதை
நியாயப்படுத்தி பேசுகின்ற
ஆதிக்க சாதி பண்பாட்டை
வேரறுப்போம்! வேரறுப்போம்!

சாத்திரம் என்றும்
சடங்குகள் என்றும்
மடமைக்குள்ளே பெண்களை தள்ளும்
பார்ப்பனிய சாதி பண்பாட்டை
ஒழித்துக்கட்ட உறுதி ஏற்போம்!

மறுகாலனியாதிக்க கொள்கைகளை
எதிர்ப்பின்றி நடத்துவதற்கு
அரசே திட்டமிட்டு பரப்புகின்ற
நுகர்வு வெறி கலாச்சாரத்தை வேரறுக்க
அணிதிரள்வோம்! அணிதிரள்வோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

துண்டறிக்கை

  • சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையைச் சாதிப்போம்!

பெருகிவரும் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் நுகர்வுவெறியே!

ன்பார்ந்த உழைக்கும் பெண்களே!

“வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்று நகைகள் கொள்ளை – கொள்ளையடித்த பணத்தில் அடுக்குமாடி வீடு, ஆடம்பரத் திருமணம், சொகுசான வாழ்க்கை”, 

“சப் – இன்ஸ்பெக்டர் கழுத்தறுத்து கொலை – கள்ளக்காதலி கைது”,

“எனக்கு கிடைக்காத நித்யா யாருக்கும் கிடைக்கக் கூடாது – கொலை செய்த காதலன் வாக்குமூலம்”,

“பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை, கொடூரமாக கொலை”

என்ற செய்திகளை படிக்கும் போதே அருவருப்பாக இருக்கிறதா?

ஏன் இந்த வக்கிரம்?

“ஏற்கனவே இதெல்லாம் நடப்பதுதானே. இதில் புதிதாக என்ன இருக்கிறது” என்று கேட்கிறீர்களா? முன்பு நடந்தது வேறு. இப்பொழுது நடப்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. முன்பெல்லாம் பசி வறுமையின் காரணமாக திருடினான். நகரமாக இருந்தால் அண்டாவும் குண்டாவும் திருடினான். ஆனால் இன்று அப்படியா? இல்லை. உல்லாசமாக இருப்பதற்காக அல்லவா திருடுகிறான்.

ஆடம்பரமாக, உல்லாசமாக வாழ பணம் தேவை. அதை உழைத்து சம்பாதிக்க முடியாது. அதற்கு வாய்ப்பும் இல்லை. அப்படி என்றால் என்ன செய்வது? கொள்ளையடிப்பதை தவிர வேறு வழியில்லை. தேவைப்பட்டால் கொலையும் செய்யலாம். அதுவும் வக்கிரமான கொலை. கழுத்தை அறுத்துக் கொலை, பெற்றெடுத்த, பாலூட்டி சீராட்டி வளர்த்த தாயைக் கொல்வது, பாசமிகு தந்தையைக் கொல்வது, தன்னை நேசித்த காதலியை பாலியல் கொடுமை செய்து கொல்வது .

இப்பொழுது சொல்லுங்கள். பசிக்காக – வறுமைக்காகவா கொல்கிறார்கள்? இல்லை. ஆன்டிராய்ட் போன், விதவிதமான ஆடைகள், வகைவகையான உணவுகள், குடிக்க சாராயம், அனுபவிக்க பெண்கள் என விதவிதமாக ருசிக்கவே செய்கிறார்கள்.

அப்படி என்றால் இதற்கெல்லாம் யார் காரணம்?

வேறு யாருமில்லை. உழைப்பவனுக்கு அடிமாட்டு கூலியைக் கொடுத்துவிட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் சுயநலத்தையே கொள்கையாகப் பரப்பும் கார்ப்பரேட் முதலாளிகளும், பன்னாட்டுக் கம்பெனிகளும், தனியார் மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பெயரில் கொண்டு வந்த நுகர்வுவெறிதான் காரணம். அதாவது மறுகாலனியாக்கக் கொள்கைதான் காரணம்.

படித்த படிப்புக்கு வேலை இல்லை, வேலைக்குக்கேற்ற கூலியில்லை. ஆனால், இவர்கள் பரப்பும் நுகர்வுவெறியானது, “எப்படியாவது இதையெல்லாம் அனுபவிச்சி தீர்த்திடனும்” என்ற பேராசையைத் தூண்டுகிறது. இதுவே, நுகர்வுவெறியில் மாணவர் – இளைஞர்களை தள்ளிவிடுகிறது. இந்த நுகர்வுவெறியை, இதை அடைவதற்கான வக்கிரப் புத்தியை நமது சிந்தனையில் திணிக்கும் வேலையை சினிமா – சீரியல் – விளம்பரங்களும், இவர்கள் நடத்தும் ஆபாசக் கூத்துக்களும் செவ்வனே செய்கின்றன.

இந்த நுகர்வு கலாச்சாரம், உழைத்த பணத்தை வைத்துக் கொண்டு நேர்மையாக வாழ்பவர்களைப் பிழைக்கத் தெரியாத கோமாளிகள் என்று அவர்களின் உயர்ந்த ஒழுக்கத்தை இழிவுபடுத்துகின்றது. ஆனால், உழைக்காமல் அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி கொழுத்த, வரியை – வங்கிக் கடனை ஏப்பம் விட்ட, திருடிய அம்பானி – டாடா போன்ற கொள்ளையர்களைப் பாராட்டுகிறது.

எந்த சீரியலாவது ஒழுக்கமான குடும்பத்தைக் காட்டுகிறதா? எந்த விளம்பரமாவது நல்லதை சொல்கிறதா? எந்த வீடியோ கேமாவது பிள்ளைகளை நல்வழிப்படுத்துகிறதா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

“பணம் இருந்தா ஆயிரம் பொண்டாட்டி கிடைப்பா?”

“எவ்வளவு நாள்தான் நானும் நல்லவனாகவே நடிக்கிறது”

என வசனம் பேசும் அஜீத்தும், வெட்டியாக பொழுதைப் போக்கி கெத்து காட்டுவது, திருடுவது, அடுத்தவனை ஏமாற்றுவது போன்றவைகளையே கதைகளாக்கி நடித்து வரும் கார்த்தி, விமல், சிவா, சிவகார்த்திகேயன் போன்ற கழிசடைகளும் நம் பிள்ளைகளைச் சீரழிக்கவில்லையா?

மலிவு விலை செல்போன்கள், மெமரி கார்டுகள், இன்டர்நெட்கள் வீடு தேடி வந்து நம் பிள்ளைகளின் மனதில் பாலியல் வக்கிரங்களைத் திணித்து சீரழிப்பது – படிப்பு சொல்லித்தர வேண்டிய அரசே குடிக்கச் சொல்லித் தந்து ஊற்றிக் கொடுப்பது என தூண்டப்படும் நுகர்வுவெறியால் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் பெருகிவருவதை சகித்துக் கொள்ள முடியுமா?

ஆனால், இதை சகஜமாக கருதும் அளவிற்கு நம்முடைய சிந்தனையை – உணர்வை மழுங்கடித்து சொரணையற்றவர்களாக மாற்றி வருகிறார்கள்.

யார் தெரியுமா?

சினிமா, சீரியல், விளம்பரங்களை நடத்தும் நிறுவனங்கள், அவைகளுக்கு பணத்தை வாரி இறைக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள், இவைகளுக்கு அடியாள் வேலை செய்யும் அதிகாரிகளும், போலீசும், ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளும்தான்.

இதற்கு விடிவே இல்லையா? ஏன் இல்லை?

“எரிகிறத பிடிங்கினா கொதிக்கறது அடங்கும்” என்று மக்கள் கூறுவதுபோல, பிரச்சினைக்கு ஆணிவேரான நுகர்வுவெறியைப் பரப்பும் கார்ப்பரேட் சீரழிவுக் கலாச்சாரத்தையும், அரசே சாராயம் விற்கும் அக்கிரமத்தையும் ஒழிக்க வேண்டும். இவற்றை தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பெயரில் அதாவது மறுகாலனியாக்கக் கொள்கை மூலம் திணித்து, இதற்கு அடியாள் வேலை செய்யும் மக்கள் விரோத அரசை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும். இதற்கு மாற்றாக நாமும் ஒரு மாற்று அதிகாரத்திற்கான கமிட்டியைக் கட்ட வேண்டும்.

“இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆகிற விசயமாக சொல்லுங்கள்” என்று ஒதுங்கி நின்றால் எதுவும் நடக்கப் போவதில்லை. உங்கள் வீடு கொள்ளை போகலாம். ஏதோ ஒரு பொறுக்கியால் உங்கள் பிள்ளைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகலாம். கொலை செய்யப்படலாம். இக்கொடுமைகளை விடவா, இதை மாற்றுவதற்கான போராட்டத்தை நடத்துவது கடினம்?

நமது வாழ்க்கைக்காக நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்? உங்களோடு கைகோர்த்து போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

வாருங்கள் போராடுவோம், சாதித்துக் காட்டுவோம்.

பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.