privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தொலைந்த நிலம்

-

முகம் கொள்ளாத பூரிப்போடும், ஏங்கிக் கிடைத்த சந்தோசத்தோடும், வீட்டம்மா காது கேக்காது என்பதை மறந்தும் தனத்திடம் பேசினார் முருகைய்யன்.

“மாச கடைசியில ஆத்துல தண்ணி தொறந்து விட்றதா பேப்பர்ல போட்ருக்காம்புள்ள. போன வருசம் போல இந்த வருசமும் வானத்த பாத்துட்டு ஒக்காந்து இருக்கனுமேன்னு நெனச்சேன். ஏதோ ஆண்டவன் கண்ண தொறந்துட்டான். எங்கனையோ கடன ஒடன வாங்கி நட்டு வச்சா கஞ்சிதண்ணிக்காவது வரும். என்னால ஆட்டோவுல (குட்டியானை) ஏறி எறங்க முடியாது. ஒம்பொறந்தவங்கிட்ட சொல்லி, கெடக்குற எருவ கொஞ்சம் அள்ளி வயல்ல போட சொல்லு”.

nel“என்னத்த அதிசயமா பேப்பர்ல போட்ருக்கானுவொ, வாய ஒரு பக்கம் கோனிகிட்டு, வெத்தல பாக்க கொதப்பிகிட்டு எச்சித்தெரிக்க பேசற நீ.” என்று காதுல விழாத எரிச்சலில் திட்டியது அந்தம்மா. அந்த அம்மாவுக்கு புரியும்படி சாடையுடன் விளக்கினார் பெரியவர்.

“ஆமா! போன வருசம் நடவு செலவுக்கு காதுல கழுத்துல கெடக்குறெதல்லாம் வாங்கி அடகு வச்ச. இன்னும் திருப்பி தரல. ஒரு புடி கருதறுக்க முடியாம கருகிப் போச்சு. இந்த வருசம் எதெல்லாம் அடகு கடைக்கி எடுத்துட்டு போப்போறியோ”.

“இந்த வருசம் மேட்டூரணையில தண்ணி வரத்து நல்லா இருக்காம்புள்ள! கவலப்படாத, அறுப்பறுத்து வளைஞ்சு போன ஒம்முதுகு நிமிர்றா மாறி  ஒட்டியாணம் பண்ணி போட்றேன்.” சந்தோசத்துல மனைவியை வம்புக்கிழுத்தார், பெரியவர்.

அவர்களின் ஊடலை ரசித்த அதே வேளையில் சாதாரண விவசாயிகளின் வாழ்க்கை ரசிக்கத் தக்கதாக இல்லை. அவரிடமே கேட்டுப் பார்ப்போமென பேச்சு கொடுத்தேன்.

“எனக்கு 80 வயசாகுது. நான் எளவட்டமா இருக்கையில இந்த ஓல வீட்டையும் பதினஞ்சு மா (5 ஏக்கர்) நெலத்தையும் விட்டுட்டு போனாரு எங்கப்பா. அவரு குடுத்த நெலத்துல இன்னைக்கி ஒரு குழி நெலம்மில்ல. எல்லாம் வித்துட்டேன். எங்கப்பனாவது இத வச்சுட்டு போனான். நம்ம பிள்ளைகளுக்கு என்னத்த வச்சுட்டு போறோம்னு நெனச்சு நம்ம காலத்துக்குல்ல இந்த வீட்ட இடிச்சுட்டு ஒரு ஓட்டு வீடு கட்டிடுவோன்னு பாக்குறேன் முடியல. இதுதான் வெவசாயம் என்ன முன்னேத்துன கதை.”

“அந்த காலத்துல பாகவதர் கிருதாவும், வெள்ள வேட்டியும் கட்டின ஒரு சோக்காளி மைனரு நானு. பணக்காரன் பண்ற பகட்ட பாடுபட்டு கஞ்சி குடிக்கிற நாம பண்ணுனா, நெலைக்காதுங்கிறது புத்திக்கி எட்டாம போச்சு. மாடா உழைக்க வேண்டிய வயசுல ஊதாரியா சுத்திட்டு எல்லாத்தையும் எழந்துட்டேன்.”

“வருசம் பூறா ஒழைக்கிறவனே தசுகூலி (வெள்ளாமை செலவு) செலவுக்கு கடன ஒடன வாங்கி செலவு செஞ்சுட்டு அறுப்பறுத்ததும் கடனடைப்பான். முதுகு வளையாத எனக்கு எவனாவது கடங்கொடுப்பானா? 100 குழிய அடகு வச்சு நடவு தசுகூலிக்கு செலவு செய்வேன். பாதி நெலத்த எழந்த பிறகு என்ன செய்றதுன்னு தெரியாம டவுனுல இருக்குற நம்ம சேந்த சாதிக்காரன்னுங்க, பழக்கமானவங்க கிட்ட இத்தன ரூவா பணத்துக்கு இத்தன மூட்ட நெல்லு தர்ரேன்னு வட்டிக்கி வாங்குவேன்.”

“நம்ம கெட்ட நேரம், காலத்துல மழையும் பேயாது, தொண்ட கருதா இருக்குற நேரத்த பாத்து ஆத்துல தண்ணியும் வராது. ஒன்னு வெள்ளாம சரியில்லாம போயிரும், ஆண்டவன் புண்ணியத்துல தப்பிதவறி வெளஞ்சாலும் சொந்தக்காரப் பய கல்யாணம், காதுகுத்து, கருமாதின்னு மொய் செஞ்சு செஞ்சே, போட்ட மொதலு மண்ணோட போயிரும். மறுவருச நடவு செலவுக்கு நெலத்த அடகு வாங்குனவங்கிட்டையே மேக்கொண்டு பணம் வாங்குவேன். காலப்போக்குல நெலத்த மூக்க (மீட்க) முடியாம கெரயத்துக்கே (விற்பனை) எழுதி குடுத்துருவேன். இப்புடியாவே எல்லாம் போச்சு. அதெல்லாம் நெனச்சுப் படுத்தா தூக்கமே வராது.”

“ஒன்னப்போல என்னப்போல உள்ளவனா வாங்குனா? ஊருக்குள்ளேயே பெரும் பணக்கார பஞ்சாயத்துக் கார குடும்பம். அரசாங்க உத்தியாகம் வேற உண்டு. வாங்குன சம்ளம்மெல்லாம் ஊருக்குள்ள 5 வட்டி 10 வட்டிக்கி குடுத்து ஊரையே வளச்சுப் போட்டானுவ. அவ்வளவு ஏன்? அவைங்க சொந்தக்கரானுவ நிலத்தையே கடன கொடுத்து வளைச்சு புட்டானுவ. இப்ப அந்த குடும்பங்க ஒன்னுமில்லாம நொடிச்சு போச்சு. கூட பொறந்தவங்ளையே விட்டு வைக்காதப்ப, ஊதாரியான என்ன விட்டு வைப்பாய்ங்களா?” என்னையும் சேத்து சோலிய முடிச்சுப்புட்டானுவொ.”

“அது போக, எங்க குடும்பம் போல ஒன்னுமில்லாமா போயி கண்டிக்கி பொழைக்க போன எங்கூருக்காரரு, கையில கொஞ்சம் காசோட திரும்பி வந்தப்போ, என் நெலமைய புரிஞ்சுகிட்டு நேரடியா கேக்க முடியாம ‘கையில கொஞ்சம் காசு இருக்கப்பு. யாரும் நெலம் எதுவும் விக்கிறதா காதுல விழுந்தா சொல்லு’ன்னு சொன்னாரு. அவருகிட்ட கொஞ்சத்த கொடுத்தேன்.”

“ஒருத்தனுக்கு கோயில்ல பூசாரி வேல. கூடுதலா பில்லி, சூனியம், சோழி போட்டு பாக்குறது, வெத்தல மை மாயம், மந்தரம்னு கொடிகட்டி பறந்தான். சுத்துப்பட்டு ஊருல உள்ள எல்லா சனமும் பணத்த கொண்டாந்து கொட்டுச்சு. என்னப்போல உள்ளவங்க நெலத்த எல்லாம் அந்த பூசாரி வாங்குனான். எனக்கு என்ன மை வேல பன்னாணோ மிச்சம் மீதி இருந்தத இவங்கிட்ட கொடுத்துட்டேன். முடிஞ்சது சோலி.”

“எல்லாம் எழந்த பின்னே என்ன செய்றதுன்னு தெரியல. டவுனுக்கு போயி பழ யாவரம் பண்ண ஆரம்பிச்சா எங்கூட்டுக்காரி. நானு மாட்டு சந்தைக்கி போயி தரகனா மாடு வாங்கி குடுக்க ஆரம்பிச்சேன. வெக்கத்த விட்டு சொல்லனுன்னா கொஞ்ச நாளு எந்தம்பி சாராயம் காச்ச போனான். பொறவு டீக்கட வச்சான், கூடவே இட்லி வட போட்டான். அப்பறந்தான் கொஞ்சம் தப்பி பொழச்சு வந்தோம். எங்காத்தா செஞ்ச புண்ணியத்துல கிளாரு (சுண்ணாம்பு) மண்ணுல குந்தி போயி கருகுன பயிராட்டம் இருந்த எங்க வாழ்க்க கொஞ்சம் துளுரு விட ஆரம்பிச்சது.”

“என் சித்தப்பா ஒருத்தரு, நெலத்த அடகு வச்சுட்டு சிங்கப்பூருக்கு பொழைக்க போன எடத்துலயே செட்டிலாயிட்டாரு. அந்த நெலத்த மூட்டு வாய்தா வரி கட்டி எங்களுக்கு சொந்தமாக்கிகிட்டோம். அப்புறம் அவன இவன புடிச்சு கோயில் நெலத்த கொஞ்சம் குத்தகைக்கி நட ஆரம்பிச்சேன். ஏதோ வயித்துக்கும் வாயிக்கும் பெரிய பஞ்சம் வந்துராம பொழப்பு ஓடுனிச்சு.”

“பசங்க தலப்பட்டு இப்பதான் கொஞ்சம் பரவாயில்ல, வீட்டுக்கு கரண்டு இழுத்தோம், ஒரு சட்னி அரைக்கிற மிசினு வாங்குனோம், காலம் போன கடைசியில அவ கழுத்துக்கு ஒரு செயினு வாங்கி போட்ருக்கானுவொ பசங்க. இதெல்லாம் வெவசாயம் பாத்து இல்ல. பசங்க வெளியதெருவ (வெளியூர்) போயி சம்பாரிச்சதால. ஒரு பய பூச்சிமருந்து கடைக்கி வேலைக்கி போறான். இன்னோருத்தன் மெட்ராஸுல வேலப் பாக்குறான். பாப்போம் இனிமேலாவது விடிவு காலம் வருமான்னு.”

“என்னப் போல மைனராட்டம் போடாம யோக்கியமா புழைச்சவனுக்கும் இதுதான் கதி. அவங்களும் எழந்த நெலத்த திரும்ப வாங்குவோமான்னு கனவு கண்டுட்டு இருக்காய்ங்க தெரியுமா? எதுத்த வீட்டுல ஆறு பசங்க பிள்ளைகள படிக்க வக்கெறெதுக்காகவே பொன்னா வெளையிர பூமி ரெண்டு வேலி (ஒரு வேலி – 7 ஏக்கர்) நெலத்த வித்தாங்க. படிச்சுட்டா வேல கெடச்சுரும்,  இதவிட அதிகமா நெலபலம் வாங்கி சௌகரியமா இருப்பாங்கன்னு ஆசப்பட்டாங்க. ஆறு பேருல ஒருத்தனுக்கு மட்டும் போட்டி தேர்வு எழுதி கெவுருமெண்டு உத்தியோவம் கெடச்சுது. மத்த பய எல்லாரும் ஏதோ ஒரு வேலைய பாத்து பொழப்பு நடத்துறானுவொ. நெலம் போனதுதான் மிச்சம். பட்டதாரியானாலும் கஷ்டம் தீரல”.

“எம்பங்களாளி பய ஒருத்தன் மூணு பொண்ண கட்டிக்கொடுக்க மூணு ஏக்கர் நெலத்த வித்தான், என்ன செய்ய. முன்னெல்லாம் நாலு மூட்ட, அஞ்சு மூட்ட நெல்லு குடுத்து நிக்கிற மாட்டுல ஒன்ன ஓட்டி கொடுத்து பொழச்சுக்கங்கன்னு பொண்ண கொடுப்போம். இப்ப நெலம அப்படியா இருக்கு? இன்ன வண்டிதான் வேணும், தேக்கு கட்டுலுதான் வேணுன்னு லிஸ்ட் போட்றானுவொ. வெவசாயம் பண்ற நம்மால இதெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாதும்மா. ரெண்டும் கெட்டான நம்மள மாறி நடுவுல இருக்குற விவசாயிகிட்ட நெலமெல்லாம் கைல நிக்காதாத்தா. நாங்களே டவுனுக்கு பொழக்க போற வயசுப்பசங்கள வெச்சுத்தான் வெவசாயின்னு காலத்த ஓட்டுறோம்.”

பெரியவருகிட்ட பேசி முடிஞ்சதும் யோசிச்சு பாத்தேன்.

முன்னெல்லாம் கிராமத்துக்கு போகும் போது திரும்பி பார்க்குற இடமெல்லாம் பசுமை மாறாம கண்ணுக்குள்ளேயே நிக்குமுனு பாரதிராஜா படத்த பாத்த ஜனங்க நினைப்பாங்க. அந்த பச்சையும் பசுமையும் சிறு, நடுத்தர விவசாயிங்களுக்கு சொந்தமில்லைங்கிறது யாருக்கும் தெரியாது. ஒன்னு அந்த நிலம் மிராசுதார்களுக்கோ இல்லையினா குத்தகைக்கு எடுத்த கணக்குலதான் வரும். இப்ப அந்த இரவல் பசுமைக்கும் சோதனை. விவசாயி கஷ்டத்த புரிஞ்ச அரசோ இல்லை உதவியோ, தீர்வுகளோ எந்த எழவும் எப்பவும் கிராமங்கள அண்டுனதில்ல.

போதாக்குறைக்கு ரியல் எஸ்டேட்டுக்காரனுவ கையளவு இடத்த கூட விடாம தட்டிப்பறிக்கிறானுவ. பஸ் வசதியே இல்லாத கிராமத்துல கூட யாருன்னே தெரியாத வெளியூர் காரங்க நெலம் வாங்கி பண்ணை வீடு உருவாக்கி சொகுசா தங்க வந்து போறாங்க. கொஞ்ச கொஞ்சமா நெலத்த வளச்சு முள்வேலி போட்டு என்னென்னமோ பயிருங்கள போட்டு விவசாயம் நடத்துராங்க. வரப்பு விவசாயம் ஊர ஒண்ணா வைச்சதுன்னா, வேலி விவசாயம் எல்லாத்தையும் பிரிச்சு போடுது.

தண்ணி எடுத்து விக்கிற கம்பனிங்க வந்தாச்சு. இவ்வளவு ஏன்! பக்கத்தூருல ஏதோ ஒரு வெளி நாட்டுக்காரன் வளச்சு வாங்கி நீச்சல் குளத்தோட பங்களா அமைச்சு வெளிய தெரியாமெ வேல நடத்துறாரு. இன்னும் சென்னை பெரும்புள்ளிங்களெல்லாம் கிராமம் கிராமா வாங்கி போடுறாங்க. விவசாயத்துல நொடிச்சுப் போயி நிமிர முடியாம இருக்குறவங்க கிட்ட என்னைக்கும் நிலம் தங்காது.

வயல்கள்ல வேலை இருக்கும் போது பார்த்துட்டு, வேல இல்லாத நேரம் கேரளா, திருப்பூருன்னு வேறு வருமானமும் பாக்க போராங்க. பெரியவரு முருகைய்யனோட தம்பியும் அப்படி போனவருதான்.

வெவசாயம் செய்ய முடியாம பயந்துகிட்டு ஊரு ஊரா போற ஜனம் என்னைக்கு இவங்கள எதித்து நிக்க முடிவு செய்யுதோ அன்னைக்குத்தான் கிராமங்களுக்கும் நம்ம நாட்டுக்கும் விமோசனம். அப்படி ஒரு விடுதலை வந்த பிறகு வர கிராமங்கள் எப்படி இருக்கும்? நிச்சயமா தமிழ் சினிமா கிராமங்கள் மாறி இருக்காதுன்னு தோணுது!

– சரசம்மா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க