privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபார்ப்பான் வைத்ததுதான் சட்டம் !

பார்ப்பான் வைத்ததுதான் சட்டம் !

-

02-brahmasri-criminalழலை ஒழித்துக்கட்டுவதுதான் எமது முதல் வேலை” – எனத் தனது 56 அங்குல மார்பைத் தட்டி, சவால்விட்டு ஆட்சிக்கு வந்துள்ள மோடி கும்பல், ஊழலோடு சமாதான சகவாழ்வு நடத்திவருவதை ஜெயா-ஜெட்லி சந்திப்பு தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

கடந்த காங்கிரசு ஆட்சியில் 2ஜி, நிலக்கரி ஊழல்-முறைகேடுகள், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் – என அடுத்தடுத்து ஊழல்களும் முறைகேடுகளும் அம்பலமானதை வைத்துக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், கார்ப்பரேட் ஊடகங்கள், அன்னா ஹஸாரேவின் தலைமையில் திரட்டப்பட்ட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர், அவ்வூழல் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதிகள், கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி நம்ம ஊர் கார்த்திக், சூர்யா, விஜய் உள்ளிட்ட சினிமா கழிசடைகள் வரையிலான இந்தக் கூட்டணி எப்படியெல்லாம் ஆட்டங் காட்டினார்கள்.

ஊழல்தான் இந்தியாவைப் பீடித்திருக்கும் தீராத நோய்; ஊழல்தான் இந்தியா வல்லரசாவதைத் தடுத்து வருகிறது என்றெல்லாம் கூப்பாடு போட்டு, இந்தக் கூச்சலையே இந்தியாவின் எழுச்சியாக, ஊழலுக்கு எதிரான இந்தியாவாகப் பரபரப்பூட்டித் தம்மை நேர்மையின், அறத்தின் காவலர்களாகக் காட்டிக்கொண்டு, தேர்தல் வெற்றியை அறுவடை செய்துகொண்ட பா.ஜ.க. பார்ப்பனக் கும்பல் தன்னை நம்பியவர்களின் நெற்றியில் பெரிதாக நாமத்தைச் சாத்திவிட்டது.

ஜெயாவின் ஆதரவோடு நடந்த வாஜ்பாயி ஆட்சி, ஜெயாவின் ஊழல்-அதிகார முறைகேடு குற்றங்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நீதிமன்றங்களைக் கலைத்து, அவருக்கு எதிரான நாற்பத்தி சோச்சம் ஊழல் வழக்குகளையும் சாதாரண நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொடுத்தது. அப்பொழுதே தன் மீதான வருமான வரி ஏய்ப்பு வழக்கைக் கைவிட வேண்டும் எனத் துண்டுச் சீட்டில் ஜெயா எழுதிக் கொடுத்ததை, இப்போதைய மோடி ஆட்சி நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது.

ஜெயாவின் நெருங்கிய நண்பரான அருண் ஜெட்லி நிதியமைச்சரான பிறகு, அவரை டெல்லியில் போய்ச் சந்தித்துத் திரும்பிய ஜெயா, வருமான வரி வழக்கில் அபராதத் தொகையைக் கட்டத் தயாராக இருப்பதாக வருமான வரித் துறையிடம் சமரச மனுவொன்றை அளித்ததும், அதனை ஏற்றுக் கொண்டு அருண் ஜெட்லியின் அதிகாரத்தின் கீழ் வரும் வருமான வரித் துறை ஜெயாவிற்கு எதிரான வழக்கைக் கைவிடுவதாக அறிவித்திருப்பதும் பார்ப்பன – பாசிசக் கும்பலின் ஆட்சியில் நீதியின் கதி அதோகதிதான் என்பதை நிரூபிக்கிறது.

காங்கிரசு கூட்டணி ஆட்சியின்பொழுது, 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கனிமொழியின் சி.ஐ.டி. நகர் வீட்டிற்கு அரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்று கருணாநிதியைச் சந்தித்ததையும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆ.ராசாவின் தோளில் பிரதமர் மன்மோகன் சிங் கைபோட்டதையும் மாபெரும் ஒழுக்கக் கேடுகள் என்றும், அறம் கொன்ற செயல்களென்றும் குற்றம் சாட்டி வானத்துக்கும் பூமிக்கும் தாவிக்குதித்த பா.ஜ.க., அந்நிகழ்வுகளைக் காட்டி நாடாளுமன்றத்தையே முடக்கியது. இவையெல்லாம் 2ஜிவழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்துக்குத் தவறான செய்தியைத் தராதா?” என கேள்வி எழுப்பித் தம்மை யோக்கிய சிகாமணிகளாகக் காட்டிக்கொண்ட இக்கும்பல், ஜெயா-ஜெட்லி சந்திப்பை நியாயப்படுத்த வேறொரு அளவுகோலை வைக்கிறது.

ஜெயா சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதால் அவ்வழக்கு முடியும்வரை அவரை நிரபராதியாகத்தான் கருத வேண்டும்; எனவே, ஜெயாவை அருண் ஜெட்லி சந்தித்திருப்பது சட்டப்படி தவறல்ல” என சில மூத்த வழக்குரைஞர்கள் நியாயத்தை வளைத்துத் தெரிவித்திருக்கும் கருத்துக்களைக் கொட்டை எழுத்துகளில் பத்திரிகைகளில் பிரசுரித்து, பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தைக் கூச்ச நாச்சமின்றி மூடிமறைத்திருப்பதோடு, தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயாவையும் விடுவித்துவிடுகிறது, பார்ப்பனக் கும்பல். ஆ.ராசாவிற்கும் கனிமொழிக்கும் அவர்கள் இந்த நியாயத்தைப் பொருத்துவதில்லை. ஏனென்றால், நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை என்றாலும் அவர்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட, சூத்திர சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனால், ஜெயாவோ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தாலும், அவர் பிரம்மஸ்ரீ கிரிமினல்.

02-jaya-jaitley2ஜி வழக்கில் ஊழலுக்கு எதிராக பெரும் சவுண்டுவிட்ட உச்சநீதி மன்றம் ஜெயாவுக்கு மட்டும் கியூவில் முன்னுரிமை தந்து பெயில் வழங்கிய விவகாரத்தில் விஞ்சி நிற்பது பணப் பாசமா, பார்ப்பனப் பாசமா என்பதையே யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து குடியரசு தினவிழா அணிவகுப்பின் அலங்கார வண்டிகளில், ஜெயாவின் திருவுருவப்படங்கள் கம்பீரமாக அணிவகுத்துச் செல்ல, கவர்னரும், தலைமைச் செயலரும், போலீசு டி.ஜி.பி.யும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கு விரைப்பாக நின்று சல்யூட் அடிப்பதைக் காண்கிறோம். பிணையில் இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்காக சவுதாலாவின் பிணையை ரத்து செய்து சிறைக்கு அனுப்பியது டெல்லி உயர்நீதி மன்றம். உச்ச நீதிமன்ற, மிச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பார்வையில் இவையெல்லாம் படவில்லை போலும்! இதற்குப் பெயர்தான் சட்டத்தின் ஆட்சியாம்!

மன்மோகன் சிங் அரசாங்கத்தை சோனியா காந்திதான் கீ கொடுத்து இயக்கி வருகிறார் என்றும்; சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டிருந்த தேசிய ஆலோசனைக் குழுவை சமையலறை அமைச்சரவை என்றும் நக்கலடித்தும் விமர்சித்தும் பேசி வந்த தேசியப் பத்திரிகைகள் தமிழகத்தில் ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி பினாமி ஆட்சி நடத்திவருவது குறித்தும், ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் – என இங்கும் ஒரு சூப்பர் அமைச்சரவை இயங்கி வருவது குறித்தும் ஒரு வார்த்தையும் பேசாமல், கல்லுளிமங்கனாய் நடந்து கொள்கின்றன. பா.ஜ.க.வோ இன்னும் ஒருபடி மேலே போய், “அவசரச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் நோக்கில்தான் ஜெயா-ஜெட்லி சந்திப்பு நடந்ததாக’’க் கூறியிருப்பதன் மூலம், சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார மையமான ஜெயாவை, சட்டபூர்வமாகவே அங்கீகரித்து விட்டது.

பார்ப்பான் கொலை செய்தால் சிகைச்சேதம்; சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம் – என சாதிக்கொரு நீதி பேசுவதுதான் மனுநீதி. இந்த ஒருதலைபட்சமான பார்ப்பன நீதியைத்தான் ஜெயா என்ற கிரிமினல் விசயத்தில் பா.ஜ.க முதல் நீதிமன்றங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். மனுநீதிதான் சட்டம் என்று அமலாகிறது. காலம் கனியும்போது வெளிப்படையாகவே அறிவிப்பார்கள்.

புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2015