முட்டுச்சந்தில் விவசாயம்! மரணத்தின் விளிம்பில் விவசாயிகள்!!
சீர்காழி வட்டம், பழையபாளையம், கொடக்காரமூலை கிராமம் நஞ்சை முப்போகமும், புஞ்சை இரண்டு போகமும் விளைந்த பகுதியாகும். மற்றும் மா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கும் குறைவில்லை. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு அதிக வருமானம் ஈட்டித் தந்த பகுதி; அறுவடை காலங்களில் வெளியூரிலிருந்து இங்கு வந்து பஞ்சம் பிழைத்தனர். குள்ளக்காரு நெல் விவசாயத்தின் மூலம் இப்பகுதி விவசாயிகளுக்கு பொக்கிஷம் போல வருமானம் கிடைத்தது.
வளமான இக்கிராமங்கள் இன்று விவசாயம் பாதிக்கப்பட்டும், விவசாயம் என்றாலே வெறுப்பை ஏற்படுத்துவதாக மனம் நொந்து கூறுகின்றனர் விவசாயிகள். பெரும்பாலும், இப்பகுதியில் உள்ள கூலி விவசாயிகள், சிறுவிவசாயிகள், பஞ்சம் பிழைக்க கேரளா, சேலம், பாண்டி போன்ற இடங்களுக்கு செங்கல் சூளைகளில் வேலைசெய்ய குடும்பத்துடன் செல்கின்றனர்.
காவிரிநீர் கடைமடை பகுதிக்கு முறையாக வராததாலும், அப்படி வந்தாலும் இறால் குட்டைகளில் உப்புநீர் ஏற்றுவதால் சதுப்பு நிலமாக மாறிவிடுவதாலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது அரசின் மக்கள் விரோத திட்டமான மீத்தேன் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி-ன் துரப்பண வேலைகளால் மிகப் பெரும் அபாயம் ஏற்பட்டு நிலத்தடி நீர் மற்றும் நிலம் மாற்றம் அடைந்து நஞ்சாகி வருகிறது. இந்த ஆண்டு ஒரு போகம் சாகுபடி செய்தும், கொடக்கார மூலை விவசாயிகள் ஒருபடி நெல் கூட அறுவடை செய்ய முடியாமல் மழை வெள்ளத்தால் அழிந்து போய் விட்டது.
பழையபாளையம் விவசாயிகள் 4.5 வீதம்தான் கண்டுமுதல் செய்துள்ளனர். வங்கிகளிலும், கந்துவட்டிக்கும், நகைக்கடன் பெற்றும், விவசாயம் செய்த விவசாயிகள் கடனை எப்படி அடைப்பது எனவும், சிலர் மானங்கெட்ட தொழிலை செய்வதை விட குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் மனம் நொந்து கூறுவது நெஞ்சை வலிக்கிறது.
- இப்பகுதி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் அரசு இந்த பருவத்தில் விவசாயம் செய்து பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களை சிறப்புக் குழு அமைத்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
- வெள்ளக் காலங்களில் வெள்ளம் புகாமல் தடுக்க நல்லூர் உப்பனாற்றின் கரையை உயர்த்தி பலப்படுத்தி தடுப்பணையும், கடல் உப்புநீர் விளைநிலங்களில் புகாமல் தடுக்க வெள்ளமேடு என்ற இடத்தில் நீர் ஒழுங்கிகள் (தடுப்பணை) கட்ட வேண்டும்.
- இப்பகுதிகளில் இறால் குட்டைகள் வைப்பதை தடை செய்து விவசாயிகளையும், விவசாய விளைநிலங்களையும் பாதுகாக்க வேண்டும்.
- இப்பகுதி விவசாயம் குள்ளக்காரு நெல் சாகுபடிக்கு மார்ச் மாதம் முடிய கீழணையிலிருந்து ராஜன் வாய்க்கால் மூலம் ஊசி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு குள்ளக்காரு சாகுபடியைக் காப்பாற்ற வேண்டும்.
தமிழக அரசே! இந்திய அரசே!
- நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப் பெறு!
- கொடக்கார மூலையில் நீரின்றி கருகும் நிலையில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு சிறப்புக் குழு அமைத்து பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் வழங்கு!
- நல்லூர் உப்பணாற்றில் வெள்ளமேடு என்ற இடத்தில் தடுப்படை (நீர் ஒழுங்கிகள்) அமைத்து கடல்நீர் உள்ளே புகுவதை தடுத்து நிறுத்து!
- கொடக்கார மூலை, பழைய பாளையம் கிராமங்களில் குடிநீரையும், விவசாய விளைநிலங்களையும் நஞ்சாக்கி அழிக்கும் இறால் பண்ணைகளையும், மீத்தேன் எரிவாயு எடுக்குத் திட்டத்தையும் தடைசெய்!
- கொடக்காரமூலை, பழையபாளையம் கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக மகசூல் செய்துள்ளதாக பொய்க் கணக்கு அனுப்பிய புள்ளியல் துறை அதிகாரி மீது விசாரணை செய்து நடவடிக்கை எடு!
விவசாயிகளே
- காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் தி கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேஷனையும், ஓ.என்.ஜி.சியையும் தடுத்து நிறுத்தப் போராடுவோம்
- காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைகட்டும் கர்நாடகாவின் அராஜகத்தையும் துணைபோகும் மோடி அரசின் சதிச்செயலையும் தடுத்து நிறுத்த போராடுவோம்.
என்ற முழக்கங்களுடன் 05-03-2015 வியாழன் காலை 10 மணிக்கு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தோழர் த. இரவி, வட்டச் செயலர், விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமை தாங்கினார்.
திரு சிவப்பிரகாசம், தலைவர், விவசாயிகள் சங்கம்
திரு S. இமயவரம்பன், தலைவர், கரும்பு விவசாயிகள் சங்கம்
திரு விஸ்வநாதன், செயலர், விவசாயிகள் சங்கம்
திரு V. மனோகர், முன்னோடி விவசாயி
திரு T. மோகன், தலைவர், கொடக்காரை மூலை, சிறுவிவசாயிகள் நீர்ப்பாசனதாரர்கள் சங்கம்.
திரு G. கிருஷ்ணமூர்த்தி, செயலர், கொடக்காரை மூலை, சிறுவிவசாயிகள் நீர்ப்பாசனதாரர்கள் சங்கம்
திரு பாஸ்கரன், பொருளாளர், விவசாயிகள் சங்கம்.
தோழர் வீரசோழன்
தோழர் ந. அம்பிகாபதி, நாகை மாவட்ட அமைப்பாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி.
ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினார்கள்.
இவண்
கொடக்காரமூலை சிறுவிவசாயிகள் நீர்ப்பாசனதாரர்கள் சங்கம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்.
தொடர்புக்கு – 9843480587