privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி !

மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி !

-

தேசத்துரோகி! இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளை, அவர்களது வாழ்வாதாரமான விளைநிலத்தை, பன்னாட்டு, கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பிடுங்கிக் கொடுக்கும் மோடியை வேறெப்படி அழைப்பது?

தேச துரோகி மோடி
விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி, இந்த தேசத்துக்கு இழைக்கப்படும் துரோகமன்றி வேறென்ன?

பனியா, மார்வாரி தரகு முதலாளிகளின் எச்சில் காசில் பதவியைக் கைப்பற்றிய மோடி, மே 26-ம் தேதியன்று பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடன், இந்த நிலப்பறி சட்டத்தை இயற்றுவதற்கான வேலைகளைத்தான் தொடங்கியிருக்கிறார். காங்கிரசு கூட்டணி அரசால் 2013-இல் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல், மறுகுடி அமர்வு, மறுவாழ்வுச் சட்டத்தை (Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 – LAAR) திருத்துவதற்காக, மாநில வருவாய்த்துறை அமைச்சர்களின் கூட்டத்தை, ஜூன் 27 அன்றே கூட்டியிருக்கிறது மோடி அரசு. பின்னர் டிசம்பர் 2014 – இல் இதற்கான அவசரச் சட்டம். தற்போது கடும் எதிர்ப்புக்கிடையிலும் அதை நாடாளுமன்றத்தில் நிரந்தர சட்டமாக நிறைவேற்ற முயற்சிக்கிறது மோடி அரசு. இந்தச் சட்டத்தின் தேவை என்ன?

கிராமப்புறத்திலோ, நகர்ப்புறத்திலோ சிறுதொழில் ஒன்றை நடத்த விரும்பும் தொழில்முனைவர் தனக்குத் தேவையான நிலத்தை தனது சொந்த முயற்சியில்தான் வாங்கிக்கொள்கிறார். விற்க விருப்பமில்லாத ஒரு விவசாயியின் நிலத்தை அவர் கட்டாயப்படுத்தி அபகரித்தால் அது குற்றம் என்பதுதான் சட்டத்தின் நிலை. சாலைகள், துறைமுகங்கள், மருத்துவமனைகள் போன்ற சமூகத்தின் பொதுத் தேவைகளுக்காக நிலத்தைக் கையகப்படுத்த வேண்டியிருக்கும்போது, விற்க விருப்பமில்லாதவராயினும் பொதுநன்மை கருதி விற்க வேண்டியிருக்கிறது. சாலைகள் முதல் பொதுத்துறை ஆலைகள் வரையிலானவற்றுக்கு முன்னர் இப்படித்தான் நிலம் கையகப்படுத்தப்பட்டது – அதுவும் ஒரு காலனிய காலச் சட்டத்தின் கீழ். அச்சட்டப்படி பொதுநலனுக்காக நிலம் இழந்த பலர் இன்னமும் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

தமிழகம் - நிலம் கைப்பற்றல்.
சென்னைக்கு அருகில் கும்மிடிபூண்டி வட்டத்தில் அமைந்துள்ள கண்ணன் கோட்டை கிராமத்தில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி பயிர்களை அழித்து, நிலங்களை கையகப்படுத்தியது தமிழக அரசு.

ஆனால், தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய கடந்த 15, 20 ஆண்டுகளில், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனையே பொதுநலன் என்று சித்தரித்து, விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களை காலனியச் சட்டத்தின் கீழ் பிடுங்கி அவர்களுக்கு வழங்கத்தொடங்கியது அரசு. மத்திய – மாநில அரசுகள் நடத்திய இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக, நாடெங்கும் மக்கள் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தினர். தொழில் தொடங்கி வேலைவாய்ப்பு தரப்போவதாக கூறிக்கொண்டு பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துக் கொண்ட அம்பானி, அதானி, டாடா போன்ற தரகு முதலாளிகள், அவற்றை ரியல் எஸ்டேட்டுகளாக்கி விற்றிருப்பதும் வேறு பல முறைகேடுகளும் மறுக்கவியலாதபடி அம்பலமாகின. இதன் விளைவாக வேறு வழியின்றி காங்கிரசு கூட்டணி அரசு புதியதொரு சட்டத்தை (LAAR – 2013) இயற்ற வேண்டியிருந்தது.

இச்சட்டத்தின்படி, ஒரு பகுதியில் தனியார் முதலாளிகள் நிலம் வாங்கு வதாக இருந்தால் நில உடைமையாளர்களில் 80% பேர் விற்கத் தயாராக இருக்கவேண்டும். அரசுத்துறை-தனியார்துறை கூட்டுத் திட்டங்களாக இருந்தால் 70% பேரின் சம்மதம் வேண்டும். அப்பகுதி உள்ளூராட்சி மற்றும் கிராமசபையின் ஒப்புதலைப் பெறவேண்டும். கிராமப்புற நிலங்களுக்கு சந்தை விலையைப் போல 4 மடங்கும், நகர்ப்புற நிலங்களுக்குச் சந்தை விலையைப் போல 2 மடங்கும் ஈட்டுத்தொகை தரப்படவேண்டும்.

கோண்டு இன மக்கள்
மோடி அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த நகலை எரிக்கும் நியம்கிரி பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்த கோண்டு பழங்குடியின மக்கள்.

குறிப்பிட்ட பகுதியில் விளைநிலங்களைக் கையகப்படுத்துவதனால் அப்பகுதியில், விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்து வாழும் நிலமற்ற விவசாயிகள், கைவினைஞர்கள், உதிரி தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் வாழ்வாதாரப் பாதிப்பு (social impact assessment) மதிப்பிடப்பட்டு அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

அப்பகுதியில் சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிக்கப்படும் (environmental impact assessment) என்பதும், விவசாயத்தின் மூலம் கிடைத்து வந்த வேலைவாய்ப்பு எவ்வளவு, அந்த இடத்தில் தொடங்கப்படும் தொழிலால் கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்பு எவ்வளவு என்பதும் மதிப்பிடப்பட வேண்டும். ஒரு போகத்துக்கு மேல் விளையும் நிலத்தை, (மிகவும் விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர) கையகப்படுத்தக் கூடாது. பயன்பாட்டுக்கு 5 ஆண்டுகளுக்குள் கொண்டுவரவில்லையானால், உடைமையாளர் வசமே நிலத்தைத் திருப்பித் தரவேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஏமாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடரலாம்.

நெடுஞ்சாலை, ரயில்பாதை, அணுசக்தி, இராணுவம் உள்ளிட்ட 13 வகையான அரசின் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தினால், அவற்றுக்கு மேற்கூறிய நிபந்தனைகள் பொருந்தாது என்றும் அச்சட்டம் விதிவிலக்களிக்கிறது.

மக்கள் சொத்தை ஆக்கிரமித்துத் தின்றே ருசி கண்டுவிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இச்சட்டப்படி நிலம் வாங்குவது கட்டுப்படியாகவில்லையாம். இச்சட்டத்தின் கீழ் நிலம் வாங்கக்கூடாது என்று கட்டுப்பாடாக இருந்த முதலாளிகள், ‘செயல்படாத’ மன்மோகன்சிங்கை இறக்கி விட்டு, அந்த இடத்தில் ‘செயல்படும்’ ரவுடியை அமர்த்தினார்கள். உடனே செயல்பட்டு விட்டது மோடி அரசு.

தற்போது மோடி கொண்டுவந்திருக்கும் சட்டம், 13 துறைகளுக்கு காங்கிரசு அரசு அளித்திருந்த விதிவிலக்குகளை “சற்றே” அதிகரிப்பதாக சொல்லிக் கொண்டு, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் விதிவிலக்கு பட்டியலில் கொண்டு வந்து, அதன் மூலம் “விதி” என்ற ஒன்றே இல்லாமல் செய்து விட்டது.

ஜந்தர் மந்தர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மோடி அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தங்களை எதிர்த்து டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

மோடியின் சட்டப்படி, அரசுத்துறைகளுக்கு மட்டுமின்றி, எந்தவொரு தனியார் முதலாளிக்காக நிலத்தை கையகப்படுத்துவதாக இருந்தாலும், உடைமையாளராகிய விவசாயியின் ஒப்புதலை அரசு கேட்கவே தேவையில்லை. அப்பகுதியைச் சேர்ந்த நிலமற்ற கூலி விவசாயிகள், கைவினைஞர்கள் போன்றோருக்கு நிவாரணம் தரத் தேவையில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் பரிசீலிக்கத் தேவையில்லை. 3 போகம் விளையும் நிலமானாலும் அதனைக் கையகப்படுத்துவதற்குத் தடையில்லை. கையகப்படுத்திய நிலத்தை 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தாவிட்டாலும் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை.

“தனியார்” என்பதை ஒரு தொழில் நிறுவனம் என்று 2013 சட்டம் வரையறுத்திருந்தது. மோடியின் சட்டப்படி தனியார் என்பது நபராகவோ, தன்னார்வ நிறுவனமாகவோ கூட இருக்கலாம். அது மட்டுமல்ல, தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளையும் கூட “பொதுத் தேவை” என்று வரையறுத்து, அவர்களுக்கு விளைநிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்கிறது.

நிலத்தின் சந்தை விலையைத் தீர்மானிப்பது உள்ளிட்டு, இந்த சட்டத்தை அமலாக்கும் அதிகாரம் பெற்ற மத்திய, மாநில அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடுக்க முடியாது. அரசின் அனுமதி பெறாத பட்சத்தில் அதை எந்த நீதிமன்றமும் விசாரிக்க கூடாது.

– இவைதான் மோடி கொண்டு வந்திருக்கும் சட்டத்தின் சரத்துகள். இதனை “சட்டம்” என்ற பெயரால் அழைப்பதே அயோக்கியத்தனமானது. மன்னர்களும் இளவரசர்களும் தம் கண்ணில் படும் அழகிய பெண்களை அந்தப்புரத்துக்குத் தூக்கி வரச்சொல்லி, இதற்காகவே நியமித்து வைத்திருக்கும் தனிப்படைக்கு ஆணையிடுவார்களாம். அப்படி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நிலத்தைக் கைப்பற்றித் தரும் தனிப்படைதான் மோடி அரசு.

2013 சட்டம் விதிக்கும் நிபந்தனைகள் காரணமாக, பல இலட்சம் கோடி முதலீடு தேங்கி நிற்கிறதாம். இந்த சட்டம் நிறைவேறிவிட்டால் தொழில்துறை வளர்ந்து கோடிக்கணக்கில் வேலைவாய்ப்பு கிடைக்குமாம். இதனை எதிர்ப்பவர்கள் கார்ப்பரேட்டுகள், உள் கட்டுமானம் ஆகிய சொற்களையே கெட்ட வார்த்தைகள் ஆக்குகிறார்கள் என்று சீறுகிறார், அமைச்சர் அருண் ஜெட்லி.

ஜெட்லி கூறுவது கலப்படமற்ற பொய். சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நாடெங்கும் ஒதுக்கப்பட்ட பெரும்பகுதி நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக்கப்பட்டு விட்டன. மும்பை தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் மட்டும் 2.5 இலட்சம் ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநில அரசிடமும் குவிந்திருக்கும் பல இலட்சம் ஏக்கர் நிலத்தில் தொழில் தொடங்க ஆளில்லை. சி.பொ.ம. என்ற பெயரில் மகாராட்டிராவில் 2006-ஆம் ஆண்டிலேயே 1250 ஹெக்டேரை வளைத்துப் போட்டு, அதில் தொழில் தொடங்காத முகேஷ் அம்பானி, அங்கே மேலும் 35,000 ஹெக்டேர் கேட்கிறார். டில்லி, மும்பை தொழில் தாழ்வாரம் என்ற பெயரில் 10 இலட்சம் ஏக்கர் நிலத்தை வளைப்பதற்கான வேலைகளை மத்திய அரசு செய்து வருகிறது. நொய்டா பகுதியில் நிலம் கையகப்படுத்தியபோது விவசாயிகளுக்கு ஒரு சதுர மீட்டர் நிலத்துக்குத் தரப்பட்ட விலை ரூ.820. பின்னர் அது கைமாற்றி விற்கப்பட்ட விலையோ ச.மீட்டருக்கு 35,000 ரூபாய். ஆறு வழிச்சாலை, கிராமப்புற வீடுகட்டும் திட்டம், அடிக்கட்டுமானங்களை நிறுவுதல் என்ற பல பெயரில் தரகு முதலாளிகளுக்கு நிலத்தையும் கொடுத்து, தொழில் வாப்பையும் அரசுதான் ஏற்படுத்திக் கொடுக்கிறதேயன்றி, முதலாளிகள் சொந்தமாக எதையும் செய்யவில்லை.

ஆங்கிலத் தொலைக்காட்சியில் இச்சட்டத்தை ஆதரித்து வாதாடும் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த சேஷாத்திரி சாரி, “மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 15% கூட பங்களிக்க முடியாத விவசாயத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கினால் வளர்ச்சியை எப்படி சாதிக்க முடியும்? வறுமையை எப்படி ஒழிக்க முடியும்” என்று பார்ப்பனக் கொழுப்பு வழியப் பேசுகிறார்.

இடுபொருள் விலையை அதிகரித்து, கொள்முதல் விலையைக் குறைத்து, பாசன வசதியை அழித்து எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்கி விவசாயியை வறுமையில் தள்ளிவிட்டு, பிறகு அவர்களையே குற்றம் சாட்டுகிறார்கள் இந்தக் கிரிமினல்கள். 50% க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து சோறு போட்டு வரும் விவசாயம் அழிந்தால், இந்த நாடே உணவுப் பாதுகாப்பை இழந்து கப்பலை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கவேண்டி வரும். விவசாயிகள் நாடோடிகளாக, நகர்ப்புறங்களில் அலைந்து மடிய வேண்டிவரும்.

தனியார்மய-தாராளமயக் கொள்கையின் கீழ் இவர்கள் முன்வைக்கும் வளர்ச்சியென்பது வேலைவாய்ப்பை வழங்காத வளர்ச்சி. அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளின் காலை நக்கும் வளர்ச்சி. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு என்பது வேலைவாய்ப்பை பெருக்குவதுமில்லை, வறுமையை ஒழிப்பதுமில்லை. ஆற்றுமணலையும், தாது மணலையும், கிரானைட்டையும் கொள்ளையடித்து விற்பதுகூட மொத்த உள்நாட்டு உற்பத்தியை கூட்டத்தான் செய்கிறது. நிலக்கொள்ளையும் அத்தகையதுதான். இங்கிலாந்தில் விபச்சாரம் மற்றும் போதை மருந்து வியாபாரத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் புரள்வதால், அதையும் மொ.உ.உற்பத்தியில் (0.7 சதவீதம்) சேர்த்துக் கொண்டு விட்டது பிரிட்டிஷ் அரசு. மொ.உ.உற்பத்தியை உயர்த்த மோடி முன்வைக்கும் பாதையும் அத்தகையதுதான்.

நிலப்பறி சட்டத்தின் காரணமாக, டில்லி சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் தோற்றபோதிலும், பிற மாநிலத் தேர்தல்களிலும் மக்களின் இந்தக் கோபம் பிரதிபலிக்கும் என்று தெரிந்திருந்த போதிலும், தனது கூட்டணிக் கட்சிகளே இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையிலும், அம்பானி, அதானிகளின் ஆசையை நிறைவேற்றித் தருவது எப்படி என்ற கோணத்தில்தான் தனது வியூகங்களை வகுத்து வருகிறது மோடி அரசு.

குஜராத் இனப்படுகொலையின்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மோடி வெளிப்படுத்திய வன்மத்தைக் கண்டோம். இந்நாட்டின் விவசாயிகள் மீதும் உழைக்கும் வர்க்கத்தின் மீதும் பார்ப்பனப் பாசிசக் கும்பல் கொண்டிருக்கும் துவேசத்தையும் வெறுப்பையும் இச்சட்டத்தில் காண்கிறோம். இது விவசாயிகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் இன அழிப்புக்கு நிகரானதொரு தாக்குதல். விவசாயிகளையும் இந்த நாட்டையும் பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், வெறி பிடித்த இந்த மிருகத்தை வீழ்த்துவதொன்றுதான் வழி.
_______________________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015 தலையங்கம்
_______________________________________