privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்விசாரணை : பாண்டேவுக்கு போட்டியாக புதிய தலைமுறை மாலன்

விசாரணை : பாண்டேவுக்கு போட்டியாக புதிய தலைமுறை மாலன்

-

visaranai debate haiharan
பாண்டேவின் தம்பி ஹரிகரன் போலிசு இமேஜுக்காக போராட்டம்

து ஒரு விவாதம். மாவோயிஸ்ட்டுகளின் ‘வன்முறை’-யை வளர்ச்சியின் பெயரால் கிண்டிய பாண்டேயின் வழக்கமான விவாதம். தலைப்புக்கு பொழிப்புரையால் வலு சேர்க்க அழைக்கப்பட்டிருந்தார் அந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி. முதல் சுற்றிலேயே மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதிகள் இல்லை, கொள்கை, அரசியல் சார்ந்து செயல்படுபவர்கள், அவர்களது செயலில் வன்முறைகள் இருந்தாலும் பயங்கரவாதிகள் இல்லை என்று அவர் சொன்னதும் பாண்டேவுக்கு தாங்கவொண்ணா ஆத்திரம்!

இதற்காகவா இவரை அழைத்தோம் என மாவோயிஸ்ட்டுகளின் ‘வன்முறைகளை’ பட்டியலிட்டு இவை பயங்கரவாதமில்லையா, அவர்களை ஆதரிக்கிறீர்களா என்றதோடு, விட்டால் உடன் போலிஸ் கமிஷ்னருக்கு போன் போட்டு கைது செய்யட்டுமா என்ற ரேஞ்சில் பிபி எகிற காட்டுரைத்தார் திருவாளர் பாண்டே அவர்கள்.

அந்த போலிஸ் அதிகாரியோ மாவோவியஸ்ட்டுகளின் வன்முறையை பயங்கரவாதமாக பார்க்க கூடாது, மக்களின் ஏற்றத் தாழ்வு சம்பந்தமான பொருளாதார பிரச்சினையாக பார்க்க வேண்டும், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவதற்கு ஃபோர்ஸ் மட்டும் போதாது, ஃபாலிசியும் வேண்டும் என இறுதியில் மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்பது குறித்தே பேசுகிறார். எனினும் நேரடி பயங்கரவாதிகளாக அழைக்காமல் சுற்றிவளைத்து கொல்லும் இந்த முறை பாண்டேவுக்கு உண்மையில் தெரியாது. அதனால் அரசுக்கு ஆதரவாக கூட்டி வந்தவரையே மாவோயிஸ்ட்டுகளின் ‘ஆதரவாளராக’ மாற்றி இதயம் படபடத்தார். அன்று இரவு அவர் கூடுதலாக ஒன்றிரண்டு சப்பாத்திகளையும், பச்சை மிளகாயையும் கடித்திருக்க வேண்டும்.

எதிராளியை சுற்றி வளைத்து விசாரிக்காமல் சட்டென்று சுட்டுக் கொல்ல வேண்டும் எனும் ஒரு உண்மையான என்கவுண்டர் போலிசுதான் திருவாளர் பாண்டே அவர்கள். அவர் தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கியதால்தான் மற்றவர்களுக்கு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பெயர் கிடைத்திருக்கிறது.

பிப்ரவரி 2015, நான்காம் தேதி “விசாரணை” படம் வெளியான போது பாண்டே கொதி நிலையிலேயே இருந்திருப்பார். மொத்த காவல்துறையும் ஒரு திரைப்படத்தால் வில்லனாக மாற்றப்படுவது மட்டுமல்ல, சகாயம் போன்ற நடப்பு அதிகாரிகளே இந்த படத்தைப் பார்த்து போலிசின் அத்துமீறலை விமரிசித்திருக்கும் போது அவர் குறுமிளகாய் கடித்த வெறி பைரவராக அவஸ்தைபட்டிருப்பதில் அதிசயமில்லை.

உடனே அன்று மாலையே சுடச்சுட “விசாரணை (திரைப்படம்) பற்றி சகாயாத்தின் கருத்து நிதர்சனமா? மிகைப்படுத்தலா?” என்று தந்தி டி.வி விவாதத்தை தலைமை செய்தியாசிரியராக முடிவு செய்து விட்டார். இருப்பினும் நெறியாளராக தானே இல்லாமல் தம்பி ஹரிகரனை நடத்தச் சொல்லி விட்டார். ஒருவேளை அவர் கலை ஆர்வம் இல்லாத ஔரங்கசீப்பா, கற்பூரத்தின் மணமறியாத காளவாயோ தெரியாது. ஆனாலும் இந்த உலகில் தன் மனதின் துடுக்கறிந்த மிடுக்கன் மூத்த பத்திரிகையாளர் மாலன் அவர்களை அந்த விவாதத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்கிறாரே அங்கு நிற்கிறார் பாண்டே. இந்த விவாதத்தை பார்த்த பிறகு முதலுக்கே மோசமோ என்று அவர் ஆனந்தக் கண்ணீரில் தத்தளித்திருக்க வேண்டும்.

அந்நிகழ்ச்சியில் பாண்டேவால் ஆதிர்வதிக்கப்பட்ட ஹரிகரன் உரையை ஆரம்பிக்கிறார். அண்ணன் ஆத்திரம் கொண்ட அக்ரஹாரத்து லா பாயிண்ட் பாரிஸ்டரென்றால், தம்பி அதே லா பாயிண்டை கொஞ்சம் பெந்தகோஸ்தே பாஸ்டராக சற்று அன்னிய பாஷையுடன் முன்வைப்பவர்.

விசாரணை படத்திற்கு வெனிஸ் விருது, ரஜினி, கமல் பாராட்டு கிடைத்திருப்பதெல்லாம் பிரச்சினை இல்லை என்று சுளி போடும் ஹரிகரன், சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள், “காவல்துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரம்பற்ற அதிகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது. காவல் விசாரணையில் அத்துமீறல்களை கட்டுப்படுத்தும் சீர்திருத்த சட்டங்கள் தேவை” என்று படத்தைப் பற்றி கூறியதை முன்வைக்கிறார்.

அரசாங்கத்தின் அங்கமாக இருக்க கூடிய சகாயம் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவியதாம். ஆகவே வரம்பற்ற அதிகாரத்தை காவல்துறை பெற்றிருக்கிறதா, மனித உரிமை மீறல் காவல்துறையால் அதிகரித்து வருகின்றனவா, காலத்தால் தேவையா சகாயம் கூறும் சீர்திருத்தம் என்று மூன்று கேள்விகளை முன்வைத்து உரையாடலை துவக்குகிறார். இருப்பினும் இவற்றை விட முக்கியமான கேள்வி அரசின் அங்கமாய் இருக்கும் ஒரு அதிகாரி இப்படி கருத்து கூறலாமா? அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் காவல் துறை அத்துமீறல்கள் மிகைப்படுத்தப்படுகின்றனவா, என்பதை பட்டவர்த்தனமாக தெரிவிக்கிறார். இதுதானே அண்ணன் தீர்மானித்திருக்கும் கேள்வி என்பதால் நமக்கு வியப்பில்லை.

malan
மனு நீதியை கரைத்து குடித்த சாணக்கியருக்கு படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை!

குற்றவாளிகள் மட்டுமல்ல காவல்துறைக்கு ஆதரவாக ஏவல் வேலை செய்யும் கனவான்களும் தமது தடயத்தை விட்டுவிட்டே செல்கிறார்கள். ஓய்வுபெற்ற மூத்த காவல் துறை அதிகாரி – சித்தண்ணன், மூத்த பத்திரிகையாளர் மாலன், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் என மூன்று விருந்தினர்களை அறிமுகம் செய்த ஹரிகரன், கடைசியாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வந்த சிவ இளங்கோவை சொல்லிவிட்டு அவர் மட்டும் சகாயத்தின் கருத்தோடு ஒத்து போவதாக தெரிவிக்கிறார். இளங்கோவை தவிர மற்றவர் அனைவரும் ஹரிகரனையும் உள்ளிட்டு சகாயம் கருத்தை எதிர்ப்போர் என்பதோடு, முன்கூட்டியே இளங்கோவை பதம் பார்க்க இதமாக போட்டும் கொடுக்கிறாராம். இந்த பட்டியலில் வெற்றிமாறன் வரமாட்டார், எனெனில் அவர் வெனிஸ் வென்ற வீரன் என்பதால் மரியாதையுடனே நடத்த வேண்டியிருக்கிறது.

மற்றவர் கருத்து என்ன என்று தெரிவிக்காத போது சிவ இளங்கோவை மட்டும் அப்படி முன்கூட்டி ஏன் கூண்டில் நிறுத்துவது போல தெரிவிக்க வேண்டும்? ஆக விருந்தினர்களில் நெறியாளரையும் சேர்த்து மூவர் ஒரு கருத்திற்கும், ஒருவர் மறு கருத்திற்கும், வெற்றி மாறன் இயக்குநர் என்ற முறையிலும் என்றால் இது என்ன ஜனநாயகம்? அதிலும் மாலன், சித்தண்ணன், பாண்டே, ஹரிகரன் போன்ற அறிஞர்களை ஈடுகொடுக்க ஒரு அப்பாவியை திட்டமிட்டே தேர்வு செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு ‘விசாரணை’ என்கவுண்டர் பரவாயில்லையோ? ஏனெனில் செத்தவர்களுக்காக குரல் கொடுக்க கூட இங்கே இத்தனை தடை என்றால் போலிஸ் துறை ஏன் சுடாது?

பாண்டே இல்லாத குறையை போக்க வந்த மாலனிடமே முதலில் கேட்கிறார் நெறியாளர். சகாயத்தின் கருத்தை பொதுவாக பலரும் சொல்லுகிறார்கள், நீதிமன்றமும் தெரிவித்திருக்கிறது, மக்களின் கருத்தும் கூட, இதை சகாயம் என்ற மூத்த அதிகாரி சொல்லியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

தான் படத்தை பார்க்க வில்லை என்று பணிவாக மாலன் ஆரம்பிக்கும் போதே, போலிஸ் அத்துமீறல் குறித்த விவாதத்தின் நாயகனான படத்தைப் பார்க்காமலேயே கருத்து சொல்ல அவர் ஏன் அழைத்து வரப்பட்டார் என்று கேள்வி எழுகிறது. மனு நீதியை விளக்கியோ வெறுத்தோ கொலையோ இல்லை கலையோ எது நடந்தாலும் சாணக்கியருக்கு தீர்ப்பு சொல்ல படம் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை. மனுநீதியின் விதிகள் சுலோகமாய் ஒப்பிப்பதே தகுதி.

படம் குறித்து தெரிவித்த சகாயத்தின் கருத்திலும் படத்தை பற்றி இல்லை என்று பணிவை நியாயப்படுத்தும் மாலன் அடுத்த அடியிலேயே துணிந்து அந்தக் கருத்தில் Factual தவறு இருக்கிறது என்று எச்சரிக்கிறார். சொல் குற்றமல்ல, பொருள் குற்றமாம்.

மட்டற்ற அதிகாரம் போலிசிடம் இருப்பது உண்மையல்ல. தான் வழக்கறிஞர் இல்லையென்றாலும் பத்திரிகையாளன் என்ற முறையில் சட்டம் ஓரளவு தெரியும் என்று உரைக்கும் போதே வெற்றிமாறன் கொஞ்சம் கவலைப் பட்டிருக்க வேண்டும். போலிசின் அதிகாரங்கள் சட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்கின்றன ஐ.பி.சி 330, 331-லிருந்து அவர்களுக்கு விலக்கு கிடையாது. இந்தியன் போலிஸ் சட்டப்படி அவர்கள் என்ன செய்யலாம் – செய்யக்கூடாது என்று வரையறுக்கபட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன. டி.கே பாசு எதிர் மேற்கு வங்க அரசு வழக்கில் என்ன செய்ய வேண்டும் என்பது போல வரையறைகள் இருக்கின்றன. சட்டத்தில் குறைபாடு இல்லை. நடைமுறையில் நமது அதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தே சட்டம் எப்படி செயல்படுகிறது…. எனும் போது லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்த ஹரிகரன் –

“இவ்வளவு ஃசேப்கார்டு இருந்தாலும், உச்சநீதிமன்றம், மனித உரிமை கமிஷன், மகளிர் கமிஷன், மைனாரிட்டி கமிஷன் அனைத்தும் சகாயம் கூறியதைத்தானே சொல்கிறார்கள் இன்னும் இது மேம்பட வேண்டுமென கூறியதில் என்ன தவறு என்கிறார்.

போலிசுக்கு போகவேண்டாம், சேலம் கலெக்டர் இறுதிச் சுற்று படம் பார்த்து விட்டு ஃபோட்டோ எடுத்த நிருபரை அடித்ததாக புகார் வந்திருக்கிறது. இந்நிலையில் இன்னொரு சட்டம் தேவையில்லை, சீர்திருத்தப்படவேண்டியது போலிசுதான். சட்டமல்ல. என்கிறார் மாலன்.

சட்டம் சரி, அதிகாரிகள் தவறு, மதம் சரி, பின்பற்றுபவர்கள் தவறு என்ற அரதப் பழசான வாதத்தையே மாலனும் முன் வைக்கக் காரணம் இன்னும் மதத்திலோ சட்டத்திலோ யாரும் இதுவரை காணாத புனிதம் இருப்பதாக பல அப்பாவிகள் நம்புகிறார்கள். குடியரசுத் தலைவர் மாளிகையில் மாநில ஆளுநர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, அரசியல் சட்ட புனிதத்தை ஆளுநர்கள் காப்பாற்ற வேண்டும் எனும் போது அந்த புனிதம் அருணாச்சல் பிரதேசத்தில் பல்லிளித்துக் கொண்டிருப்பதும், அந்த இளிப்புக்கு காரணமான கவர்னர் அங்கே புன்னகைத்துக் கொண்டிருப்பதுமான நிலையில் புனிதத்திற்கு என்ன பொருள்?

அதிகாரம் அளிக்கும் மமதை என்பதே ஏன் உருவாகிறது? அந்த மமதையை சட்டம் ஏன் கறாரான முறையில் கட்டுப்படுத்தவில்லை, தண்டிக்கவில்லை? நல்லதொரு சட்டத்தை கெட்டதொரு அதிகாரி கேடாக பயன்படுத்த முடியுமென்றால் அதன் காரணம் அந்த கெட்டதொரு அதிகாரி அதே நல்லதொரு சட்டத்தை வைத்து தனது கெட்டதை நியாயப்படுத்த முடியும். எனில் அந்த நல்லொதொரு சட்டத்தை கீறிப்பார்த்து அதில் என்ன நல்லது, புனிதம், புண் என்று பார்க்க வேண்டியதில்லையா? எல்லோருக்கும் பொதுவான சட்டத்தை ஒரு அதிகாரி தனது அல்லது தனது வர்க்கத்திற்கு ஆதரவாக பயன்படுத்துகிறார் எனில், அவரது பணி குறித்த சட்டங்கள் அவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பதே உண்மை. சுருங்கச் சொன்னால் மக்களைப் பார்த்து பயமோ பொறுப்போ வராத வரைக்கும், அதை குறைந்த பட்சம் சட்டபூர்வமாகக் கூட நிலைநிறுத்தாத வரைக்கும், எந்த ஒரு அதிகாரியும் மக்களை வதைப்பதற்கு சட்டத்தினையே ஆயுதமாக ஏந்துவார்.

சகாயம் சொன்னதில் வேறு சில கேள்விகள் என்று மாலன் ஆரம்பிக்கும் போது – வாட் ஆர் தே? என்று அன்னிய பாஷையில் ஹரிகரன் ஊக்குவிக்கிறார்.

visaranai debate sithannan
என்கவுண்டர் கொலைகளை நிரூபிக்க முடியாத படியால் போலிசுக்கார்கள் நியாயவான்களே – சித்தண்ணன்

சகாயத்துக்கு சட்டம், அமைப்பு, அரசு, நடைமுறை தெரிந்தாலும் அவர் ஏன் இப்படி பேசினார் என்று ஆச்சரியமாக கேட்கிறார் மாலன். அதில் என்ன தவறு என்று ஹரிகரன் குறுக்கீடும் போது, அரசின் அங்கமாக இருந்து கொண்டு, அரசை விமரிசிப்பது தவறு என்கிறார். அரசு பதவி பிராமணத்தின் படி ஜெயா அரசு, மோடி அரசு கொள்கைகளைத்தான் விமரிசிக்க கூடாது. போலிசை பொதுவாக திருத்த வேண்டும் என்று சொல்வதில் என்ன பிரச்சினை? ஹரிகரன் கேட்கும் போது,

“ நீங்கள் ஒரு அமைப்பின் அங்கத்தினராக இருக்கும் போது அந்த அமைப்பே விமரிசக்க கூடாது, விமரிசிப்பதாக இருந்தால்அந்த சிஸ்டத்திலிருந்து வெளிவரவேண்டும்.” என்கிறார் மாலன். சகாயம் கூறியது விமரிசனமே இல்லை பொதுவான சீர்திருத்தம் என ஹரிகரன் மாலனுக்கு ஆதரவாகவே கேட்டாலும் அவர் மறுத்துரைப்பது போலவாம் இது.

போலிசுத் துறையின் அத்து மீறல்களை ஊகத்தின் அடிப்படையில் சொல்லக்கூடாது என மாலன் சொல்லும் போது, இந்தியா முழுவதும் சித்திரவதைகள், கொட்ட்டிக் கொலைகள் என்று ஹரிகரன் மெல்ல மறுக்கும் போது, WWE திரைக்கதையின் படி மாலன் இறுதியாக ஒரு அஸ்திரத்தை ஏவுகிறார்.

“சிலப்பதிகார காலத்தில் இருந்தே கொட்டடிக் கொலை – கஸ்டோடியல் டெத் நடக்கிறது” என்று அவர் எகத்தாளமாக போட்ட போது போலீசு சித்தண்ணன் வெற்றிச் சிரிப்பு சிரிக்க, ஹரிகரன் பின்னீட்டிங்க என்று தொடுப்பு சிரிப்பு சிரிக்க, கோவலன்தான் கொட்டடிக் கொலையின் முதல் பலி என்று மாலன் முடித்து வைக்க ஹரிகரன் அமைதியாகிறார்.

அமைதிக்கு பிறகு மாலன் வகுப்பு எடுக்கிறார்.

சட்டம் சரி அதிகாரி சரியில்லை என்றால் அதிகாரியை மாற்று, கார் ஓட்டுநர் சரியில்லை என்று காரை மாற்றச் சொன்னால் எப்படி? மாலன் முடிக்கும் போது, காரை மேம்படுத்தணுமுன்னு நீதிமன்றமே சொல்லவில்லையா என ஹரிகரன் பணிவான தொனியில் கேட்கிறார். ஏனெனில் நீதிமன்றம் சொல்லும் போது சகாயமும் சொல்லலாமே என்று பாயிண்ட் இன்னும் விளக்கப்படவில்லையல்லவா?

நீதிமன்றம் சொல்வதற்கு சூபர்வைசிங் அத்தாரிட்டி இருக்கிறது. நீதிமன்றம் அரசின் அங்கமல்ல, தனி துறை என்று மாலன் சொன்னதும் ஹரிகரனும் ஐ அன்டர்சேண்ட் – உங்களை எனக்கு தெரியாதா இதெல்லாம் ஒரு பாலன்சுக்காக கேட்பது – என்று ஒப்புதல் கொடுத்து விட்டு இளங்கோவிடம் வருகிறார்.

அப்பாவிகளும், அரசியல் இயக்கத்தினரும் காவல் நிலைய கொலைக்கூடங்களில் அன்றாடம் கொல்லப்படும் நிலையை இதெல்லாம் ஒரு பிரச்சினையா? கோவலன் காலத்திலிருந்தே இருக்கும் சாதா மேட்டர்தானே என்று பேசுவதற்கு நாக்கு மட்டுமல்ல, இதயமும் வெடிகளால் தடித்திருக்க வேண்டும். காஷ்மீரிலோ, வடகிழக்கிலோ இந்திய இராணுவம் கொலையாட்டம் போடும் ஒவ்வொரு தருணத்திலும் இதற்காக இராணுவத்தை குறை சொல்வது தவறு என்று துக்ளக்கில் சோ எழுதுவதை, ஆர்.எஸ்.எஸ் சமூக சேவகர்கள் சானல்களில் பேசுவதை மாலன் இன்னும் கொஞ்சம் இழுத்துச் சென்று ஆதி காலம் முதலே அப்படித்தான் என்று நியாயப்படுத்துகிறார்.

கோவலன் கொலையை மாலன், சோ, பாண்டே போன்ற அரசனை அண்டிப் பிழைக்கும் அறிவடியாட்களை வைத்து நாம் அறியவில்லை. அரசனையும் அவனது அரசாட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் தலைநகரத்தையும் எரிக்க வேண்டும் என்ற கலை கோபத்துடன் எழுதிய இளங்கோ அடிகள் மூலமே அறிகிறோம். அதே நேரம் இளங்கோவடிகளைப் போலல்லாமல் அரசனை அண்டிப் பிழைக்கும் புலவர் மரபும் தமிழ் மரபுதான். அதனால்தான் சுயநிதிக் கொள்ளை புகழ் பாரிவேந்தருக்கு புலவர் பணி செய்து பிழைப்பை ஓட்டும் புதிய தலைமுறை அறிஞர்களும் இங்கே நீதிமான்களாக அறியப்படுகிறார்கள்.

சிலப்பதிகார இளங்கோவிடமிருந்து சட்ட பஞ்சாயத்து இளங்கோவிற்கு வருவோம். “மாலன் எழுப்பியிருப்பது ஒரு வேலிடான பாயிண்ட், நியாமான கருத்தில்லையா? ரஜினி, கமல் போன்றோர் விசாரணை படத்தை சிலாகித்திருப்பது பிர்ச்சினையல்ல, ஆனால் சகாயம் அரசின் அங்கமாக இருந்து கொண்டே போலிசை குறை கூறியிருப்பது நியாயமா? என்று இளங்கோவிடம் கேட்கிறார் ஹரிகரன்.

விசாரணை படத்தை கமல், ரஜினி, மணிரத்தினம் போன்று மொக்கைத்தனமாக ஆதரிப்பது பிரச்சினையல்ல என்பது உண்மையே. ஏனெனில் அவர்கள் எவரும் சந்திரகுமார் எனும் தொழிலாளியின் காவல் நிலைய சித்திரவதைகளாக விசாரணையை பார்க்க வில்லை. பார்க்காததால்தான் வெற்றிமாறனின் திரை மொழியை சிலாகிக்கிறார்கள். சந்திரகுமாரை பார்த்தவர்கள் போலிசை திட்டுவார்கள். அதையே கொஞ்சம் நாசுக்காக சொன்னதற்காக சகாயத்தை ரவுண்டு கட்டுகிறார்கள். ஆக ஒரு படத்தை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி கருத்துரைக்க வேண்டும் என்பதை சட்ட விதிகளாக இங்கே விளக்குகிறார்கள்.

படம் பற்றி ஒவ்வருத்தரும் ஒரு மாதிரி பேசலாம். ஒரே மாதிரி பேசணுமுன்னு எதிர்பார்க்கூடாது. அரசின் கொள்கையை பேசுவதுதான் தவறு, ஆனா அது கூட பேசலாம். சான்றாக ஊழல் குறித்து பேசலாமே என்று இளங்கோ மெல்ல ஆரம்பிக்க, ஹரிகரன் குறுக்கிடுகிறார்.

இங்கே ஒன்றைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். விவாதத்தில் மற்றவரிடம் நாசுக்காய், ஜென்டில்மேன் கனவானாக பேசும் ஹரிகரன் இளங்கோவிடம் மட்டும் முரட்டுத்தனமாய் குறுக்கிடுகிறார்.

ஊழலைப் பற்றி நீங்க பேசலாம், நான் பேசலாம், அரசின் அங்கம் பேசலாமா என்று முழு அதட்டலுடன் கேடகிறார். அப்போது அவர் ஒலியும் மைக்கைத் தாண்டி அலறுகிறது. தே ஆர் பவுண்ட் பை சர்வீஸ் ரூல் சார்…என்று அன்னிய பாஷை மிரட்டல் வேறு.

கொள்கையை அமல்படுத்தும் இடத்தில் இருக்கும் சகாயம், வெளியே வந்து பேசாமல் உள்ளே இருந்து பேசுவது தவறு, கொட்டடிக் கொலை, சித்திரவதை செய்யும் அதிகாரத்தை சட்டம் தரவில்லை, ஆனால் அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் அத்துமீறல்களை வைத்து சட்டத்தை மாற்றச் சொல்வது தவறு என்று கிடுக்கிப் பிடி போடுகிறார் ஹரிகரன். பரவாயில்லையே பாண்டே தம்பிக்கு சீண்ட சொல்லிக் கொடுக்கணுமா என்று பாண்டே சிலாகித்திருப்பார்.

இந்த குறுக்கிடலில் மாலனும் சேர்ந்து கொள்ள சோர்ந்து போன இளங்கோவும், சகாயம் புது சட்டத்தை போட சொல்லவில்லை, சீர்திருத்தம்தான் கோருகிறார் என்று சொல்ல அத்தகைய தெளிவான நடையில் சகாயம் சொல்லவில்லை என்று ஹரிகரன் செல்லமாய் கோவித்துக் கொள்கிறார்.

சிவ இளங்கோவை உரையாடலில் ‘என்கவுண்டர்’ செய்த பிறகு வெற்றி மாறனுக்கு வருகிறார்கள். உலக அளவில் பாராட்டு பெற்றிருக்கிறார் என்பதால் நிறைய கனவான்-தனத்துடனயே வெற்றிமாறனுடன் பேசுகிறார்கள்.

உங்களைப் போன்று படைப்பாளிகளால் மதிக்கப்படும் இயக்குநர் காவல் துறை குறித்து பொதுப்புத்தியில் தவறான கருத்து ஏற்படுத்துவது சரியா? என்று நெறியாளர் கெட்கிறார். இந்தபடம்தான் அந்த கருத்த ஏற்படுத்துகிறது என்பது தவறு. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருக்கும் போது இந்த படம் ஒரு பக்கத்தை பற்றி மட்டும் பேசுகிறது. இது என் கற்பனையல்ல, சந்திரகுமார் எழுதிய வாழ்க்கை கதை. இந்த அனுபவம் பலருக்கும் நடக்கிறது, அதன்படி இது விதிவிலக்கானதும் அல்ல என்கிறார் வெற்றி மாறன்.

படத்தில் ஒரு பக்கத்தை மட்டும் காட்டுவதாலும், வெற்றிமாறன், தனுஷ் போன்றோர் சம்பந்தப்பட்டிருப்பதாலும் காவல் துறையே அத்து மீறல் என்று பொதுமைப்படுத்துவதாலும், வெனிசில் பார்க்கும் வெளிநாட்டவர் தமிழ்நாட்டு காவல்துறையை பற்றி என்ன நினைப்பார் என்று ஒரு ‘தேசபக்தராக’ கேட்கிறார் ஹரிகரன்.

ஏற்கனவே ஜெயாவின் வளர்ப்பு மகன் திருமணத்தில் பந்தக் கால் போட்டு, பந்தி பரிமாறி, கோலாட்டம், புலியாட்டம் ஆடிய இந்த போலிசை பற்றி புதிதாக என்ன நினைக்க முடியும்? சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி பழங்குடி பெண்கள், விழுப்புரம் ரீட்டா மேரி, அதிரடிப்படை அட்டூழியங்கள் என்று ரேப்பிலும், கொலையிலும் போட்டி போடும் இந்த காவல் துறையின் பெயர் குறித்து இவர்களுக்குத்தான் எவ்வளவு கவலை? என்ன இருந்தாலும் இவர்களையும் அதே காவல்துறைதானே பாதுகாக்கிறது அந்த நன்றி விசுவாசம்.

“நம்ம அக்கறை வெளிநாட்டுக்காரங்க என்ன நினைக்கிறாங்க என்பதா? இல்லை இந்த குறைகளை மாற்ற வேண்டும் என்று முயல்வதா என்னுடைய கருத்து இரண்டாவது” என்கிறார் வெற்றி மாறன்

visaranai debate“பல இலட்சம் கேஸ் காவல் துறைக்கு வருகிறது. உங்களுக்கும் தெரியும். எதெல்லாம் செய்யப்பட்டதா நீங்க்ள காட்டியிருக்கிறீர்களோ அவையெல்லாம் சட்டப்படியே தவறு. அத மீறி நடந்ததாக காட்றீங்க, காவல் துறையின் எல்லா அங்கத்தினரையும் அப்படி வில்லனாக காட்டினால் போலிசே இப்படித்தான் என்று சாமாயனியனுக்கு எழாதா சாமானியனை விடுங்கள், சகாயத்துக்கே எழுந்திருக்கிறதே?” கொஞ்சம் பாத்து அடிக்கப்பிடாதோ பாணியில் ஹரிகரன் மன்றாடுகிறார்.

அந்த மன்றாடுதலை கணக்கில் கொண்ட வெற்றி மாறனும் தனது படத்தில் நல்ல போலிசையும் காட்டியிருப்பதாகவும், எந்த கலையும் சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறது, சினிமாவின் தாக்கத்தை விட சமூகத்தின் தாக்கமே மக்களிடம் இருக்கிறது என்கிறார். இங்கு கூட அவர் தனது படத்தின் கலை விதிகளை முன்வைத்து பேசுகிறார்.

போலிசு யார் என்பதை இந்த படம்தான் புரிய வைக்க முடியும் என்று பாண்டேவின் பத்திரிகைத்துறை தம்பி ஹரிகரன் சொல்வதால் பாண்டே ஸ்கூலின் பொது அறிவு தரம் என்னவென்பதை அறியலாம். மற்றும் சாமானியனை விடுங்கள், சகாயத்துக்கே தோன்றிவிட்டதே என்று அலறும் ஹரிகரன், அதே சகாயம் போலிசுக்கு பயந்து சுடுகாட்டில் படுத்துறங்கிய போதே என்ன நினைத்திருப்பார் என்று பார்க்க முடியாத அளவுக்கு பாண்டே பைத்தியத்தில் முற்றியிருப்பது உறுதி.

நீங்க முக்கியமான படைப்பாளி, சினிமா என்பது பாதிப்பு ஏற்படுத்தும் பாத்திரத்தையும் ஆற்றுகிறது, வ.வு.சி, கர்ணன்னா யார் நினைவுக்கு வராங்க, சிவாஜிதானே என்று மீண்டும் மன்றாடுகிறார். வெற்றி மாறனோ சிரிக்கிறார்.

இந்த இடத்தில் பாண்டே பள்ளியின் பெருமையினை நிலைநாட்ட மாலன் உதவுகிறார்.

“உங்க கருத்தில் சிலவற்றோடு மாறுபடுகிறேன். பதேர் பாஞ்சாலி திரைப்படம் வந்த போது வறுமையை வெளிநாட்டில் விற்று பணம் சம்பாதிப்பதாக சத்ய ஜித்ரேவை விமரிசித்தார்கள், இது குறித்து படைப்பாளி கவலைப்பட தேவையில்லை. ஒரு படம் எதார்த்தத்தை பிரதிபலிப்பது தவறில்லை, ஒரே பக்கத்தை காட்டினாலும் தவறில்லை” என்று போலிசின் காட்டுமிராண்டித்தனத்தை காப்பாற்ற வேண்டி கலைஞனின் சுதந்திரத்தை கையிலெடுக்கிறார்.

“ஸ்லம்டாக் மில்லியனர் படம் இந்தியாவை வெளிநாட்டில் தவறாக சித்தரிப்பதாக கூறினார்கள். அதை எழுதியவர்தான் இன்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்” என்று அவருக்கு கொடுக்கப்பட்ட விக்கிபீடியா தகவலை சொல்லுகிறார் ஹரிகரன். வெளிநாட்டிலேயே குடி கொண்டு விமானத்திலேயே பறந்து கொண்டு இந்தியாவையே வெளிநாடுகளில் விற்பவரே இங்கு பிரதமர் என்பது இன்னும் விக்கிபீடியாவில் ஏறவில்லை போலும்.

“உள்நாடு, வெளிநாடு ஆடியன்சை வைத்து ஒரு படைப்பாளி படம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. படைப்பு உந்துதலை வைத்துத்தான் பண்ண வேண்டும். நான் 50 வருடமா சினிமா பார்க்கிறேன். அதில் வரும் போலிஸ் ஆபிசர் போல நேரில் பார்த்தது இல்லை. சினிமாவுக்கு மிகைப்படுத்தல்கள் இருக்கிறது, அது சினிமாவுக்கு அளிக்கப்பட்ட சலுகையும் கூட. தங்கப்பதக்கம், சிங்கம் சூரியா போன்றோரின் வீர தீர பராக்கிரமங்கள், அதே போன்று போலிசு வில்லன்கள், எவரையும் தான் நேரில் பார்த்ததில்லை என்று ‘விசாரணை’ திரைப்படத்தை ஓரே அடியாக தூக்கி எறிகிறார் மாலன். படைப்பு உந்துதல் என்று பில்டப் கொடுத்து விட்டு, சினிமான்னா மிகைப்படுத்தல் என்று ஏறிமிதிப்பது இதெல்லாம் சாதாரண அறிஞர்களுக்கு சாத்தியமே இல்லை.

மாலன் கூறிய கருத்துக்களையே முன்னாள் போலிசு அதிகாரி சித்தண்ணன் கொஞ்சம் அதிகார தோரணையோடு கூறினார். அதிலும் சகாயம் கூறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எச்சரித்தார். ஆனாலும் மாலனைப் போல ஒரு நளினமான நரித்தனம் இவரின் உறுமலில் இல்லை. ஒருவேளை மீசை, கிராப் தோரணைக்காக கூட்டி வந்திருப்பார்களோ தெரியவில்லை. இருப்பினும் சகாயம் கூறியதை கமர்சியலாக படக்குழுவினர் விளம்பரத்திற்கு பயன்படுத்தியது தவறு என்று சித்தண்ணன் ஆணித்தரமாக கூறுகிறார்.

அதை வைத்து வெற்றிமாறனிடம் வருகிறார் ஹரிகரன்.

ஒரு திரைப்படம் பார்த்து பிரபலங்கள் சொல்வதை விளம்பரமாக பயன்படுத்துகிறார்கள். அப்படி சகாயம் கூறியது விசாரணை விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதெல்லாம் ஒப்புதல் பெற்று வெளியிட்டீர்களா என்றெல்லாம் படுத்தி எடுக்கிறார்.

அப்படிப் பார்த்தால் ரஜனி மொட்டை அடித்த தருணங்களையெல்லாம் நியூசாக போட்டு பக்கத்தில் விளம்பரத்தையும் காட்டுவதற்கு தந்தி பேப்பர் மட்டும் அனுமதி பெற்றிருக்கிறதா என்ன? எனினும் ஒரு அரசு அதிகாரியின் கருத்தைப் போட்டு மற்றுமொரு அரசு துறையை விமரிசிப்பது தவறில்லையா என்று சித்தண்ணன் மடக்குவதாக ஹரி கட்டியமைப்பதுதான் அயோக்கியத்தனம். சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்து ஜெயா ராஜினாமா செய்த பிறகும் குடியரசு நாளில் அவர் படந்தாங்கியே அணிவகுப்புகளெல்லாம் வந்தன. ஒரு ஊழல் குற்றவாளியை அரசு ஊர்வலத்தில் படம் காட்டுவது என்ன விதிகளின் கீழ் வருகிறது?

தனக்கு சட்டமெல்லாம் தெரியாது, ஒரு அமைப்பிற்குள் இருந்து கொண்டு அதன் தவறுகளை சொல்வதில் மாறலா என்ன தவறு என்று வெற்றிமாறன் சொன்னதும்,

சித்தண்ணன், ஹரிகரன் இருவரும் ரூல்ஸ் படி அது தவறு என்று மீண்டும் விளக்க இளங்கோ குறுக்கிடுகிறார், சொன்னால் என்ன தவறு என்று. திருமங்கலம் முறைகடுகளைப் பற்றி சகாயம் பேசும் போது போலிஸ் அத்துமீறல்களை ஏன் பேசக்கூடாது என்கிறார் அவர். உடனே சித்தண்ணன், ஊழலைக்கு கூட உரிய மேலதிகாரிகளிடத்தில்தான் பேச வேண்டும், பொது வெளியில் பேசக்கூடாது என்று அதட்டுகிறார்.

நல்ல போலிசுக்காரர்களையும் படத்தில் காட்டியிருக்கீங்க, நானும் மறுக்கலை, அந்த அதிகாரிகளும் கையறு நிலையில் இருப்பதாக காட்டுவது, மொத்த போலிசு துறையும், கெட்டுப் போனதாக காட்டுவது அதீத மிகைப்படுத்தலல்லவா? என்று ஏதோ ஒரு செட்டில்மென்டுக்கு வர நெறியாளர் முயல்கிறார். நடப்பது டிபேட்டா, கட்டப் பஞ்சாயத்தா என்று நமக்கு குழப்பம்.

இந்த படத்தோட உள்ளடக்கத்துக்கு நாங்க சரியாகத்தான் செய்திருக்கிறம், முத்துவேல் இன்ஸ்பெக்டரோட நெருக்கடி எல்லாத்துக்கும் தெரியும், எல்லா சிஸ்டத்துலயும் உள்ளவங்களுக்கும் தெரியும். சிஸ்டம் என்பது தனிநபரை விட பெரிதானது என்று எங்களையும் புரிஞ்சுக்கோங்கோ என்று வெற்றிமாறன் பதிலளிக்கிறார். இது குறித்து வேறு ஒரு தருணத்தில் பார்க்கலாம்.

விளம்பரத்தை பத்தி பேசுற போது, ஒரு விசயத்தை நேரடியாக கொடுக்காமல் ஆழ்மனதில் கொடுக்கும் போது வேறு விதமா அதை பதிய வைக்க முடியும். (இது ஹரிகரனுக்கும், வெற்றிமாறனுக்கும் தெரியுமாம்) விசாரணை என்ற சொல் சகாயத்தோட பிணைக்கப்பட்டிருக்கு, கூகிளில் போய் விசாரணை என்று போட்டால் சகாயம் விசாரணைகள் நிறைய வரும் இதை பயன்படுத்தவே அந்த விளம்பரம் போடப்பட்டதா என்றொரு கேள்வி இருப்பதாக மாலன் பயங்கரமான ஒரு ஆய்வு கண்டுபிடிப்பை போடுகிறார்.

இந்த இடத்துல மாலன் எங்களுக்கு அதிகமா கிரெடிட் கொடுக்கிறார், அந்த அளவு எங்களுக்கு அறிவில்லை என்று வெற்றி மாறன் சொன்னதும் மாலன் சொன்னது ஆய்தான் ஆய்வல்ல என்பது எத்தனை பேருக்குத் புரியும்?

இதுவரை நடந்த என்கவுண்டர் வழக்குகளில் எத்தனை போலிசு தண்டிக்கப்பட்டார்கள் என்பதை போலிசுக்காரர்களின் நியாயமாக சித்தண்ணன் எடுத்துப் போடுகிறார். இன்னொரு இடத்தில் செம்மர என்கவுண்டரை தான் கண்டித்திருப்பதாகவும் கூறினார். அவரது கருத்துப்படி பார்த்தால் செம்மரக் கடத்தல் போலி மோதல் வழக்கில் எந்த போலிசும் தண்டிக்கப்படப் போவதில்லை. அதனால் போலிசுக்காரர்கள் நியாயமானவர்கள் என்றாகும். எனில் சித்தண்ணன் பேசும் விசயம் நிச்சயம் ஒரு சேம் சைடு கோலே அன்றி வேறல்ல.

இறுதியாக மாலன் தினமணியில் தான் எழுதிய ஒரு கட்டுரைக்கு விளம்பரத்தை போட்டுவிட்டு சகாயம் செய்வது விதிப்படியும் மரபுப்படியும் தவறு என்கிறார். அப்படிப்பட்ட சகாயம் மேல் அரசு ஏன் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனபதற்கு பல காரணங்கள் – இவரை ஹீரோவாக்க வேண்டாம், பெருந்தன்மை – இருக்கும் என்கிறார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் சகாயம் சொன்ன பொத்தாம் பொதுவான ஒரு கருத்தைக் கூட இவர்கள் சகித்துக் கொள்ளத் தயாரில்லை. அதை கச்சிதமாக தயாரித்துக் கொண்டு விதித்தவறு, மரபுத்தவறு, நடவடிக்கை, பெருந்தன்மை என்று சட்டபூர்வமாக பேசுவதாக காட்டிக் கொண்டே போலிசுத் துறையை நியாயப்படுத்துகிறார்கள். போலிசு பொறுக்கிதான் என்று சொன்னால் போலிசுக்கு வரும் கோபத்தை விட போலிசை அடியாட்களாக தீனி போட்டு வளர்க்கும் ஆளும் வர்க்கத்திற்குத்தான் கோபம் வரும். அதுதான் மாலன். அதை காட்டத்தான் தந்தி டி.வி விவாதம்.

பரவாயில்லை பாண்டேவுக்கு ஒரு நல்ல ஜோடி கிடைத்திருக்கிறது.