privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி ? காஷ்மீர் மாணவி நேர்காணல்

இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி ? காஷ்மீர் மாணவி நேர்காணல்

-

JNU நேரடி ரிப்போர்ட் – 6

ஸ்ரீநகரில் இருக்கும் தர்ஹா
ஸ்ரீநகரில் இருக்கும் தர்ஹா

“தோழர், எனது பெயர், புகைப்படம் மற்றும் வேறு அடையாள விவரங்களை நீங்கள் வெளியிடக் கூடாது என்கிற உத்திரவாதம் கொடுத்தால் தான் என்னால் பேச முடியும்”.

“ஏன்”

”உங்களுக்கே தெரிந்திருக்கும்.. இப்போது கண்ணையா குமாரை பயங்கரமான அரக்கனாக காட்டி விடலாம் என்கிற அவர்களது உத்தி பூமராங் ஆகி விட்டது. அடுத்து உமரை அப்படி சித்தரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். இப்போது புதிதாக வளாகத்தில் உள்ள காஷ்மீரிகளை குறிவைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்… எனவே “ஒரு காஷ்மீரி மாணவி” என்று மட்டும் குறிப்பிடுங்கள் போதும்”

“நிச்சயம் அவ்வாறே குறிப்பிடுகிறோம் தோழர்.. சரி, இந்தியா நூறு துண்டுகளாக உடையட்டும் என்கிற முழக்கத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?”

“இப்போது மட்டும் என்ன அது ஒரே துண்டாகவா இருக்கிறது?”

“நீங்கள் யோசித்து தான் பேசுகிறீர்களா?”

“இன்றைய நிலையில் காஷ்மீரிகளோ, வட கிழக்கு இந்தியர்களோ.. எங்களுக்கெல்லாம் யோசிப்பதற்கு நேரமில்லை. எங்களுக்காக நீங்கள் தான் யோசிக்க வேண்டும்”

“இப்படிக் குதர்க்கமாக பேசினால் எப்படி? ஏற்கனவே நீங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்கள் என்றல்லவா இங்கே பிரச்சாரம் செய்யப்படுகிறது?”

“நாங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்களா? நாங்கள் இந்தியாவை எந்தளவுக்கு வெறுக்கிறோமோ அதே அளவுக்கு பாகிஸ்தானையும் வெறுக்கிறோம். எங்களை சுதந்திரமாக விட்டால் போதும் பிழைத்துக் கொள்வோம்”

”இந்திய அரசு உங்களுக்காக நிறைய செலவு செய்கிறது நிறைய சலுகைகள் கொடுத்துள்ளது என்றெல்லாம் வெளியே பிரச்சாரம் செய்யப் படுகிறதே? அவ்வளவையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக பேசுவது நன்றி கெட்டத்தனம் என்றல்லவா ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்கிறார்கள்?”

”முதலில் எங்களுக்காக செலவு செய்கிறது என்று சொல்வதே பித்தலாட்டமான வாதம்… எங்களை வைத்து செல்வு செய்கிறது என்று சொல்ல வேண்டும். அப்படி செலவு செய்யப்படும் பணம் எங்கே போகிறது தெரியுமா? ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு. இராணுவம்தான் அத்தனை காசையும் தின்கிறது. இவர்களின் வேலை என்ன தெரியுமா? நல்ல வளமான இடத்தை ஆக்கிரமித்து முகாம் போட்டுக் கொள்கிறார்கள்.. அரசு ஒதுக்கும் காசில் நன்றாக குடித்து விட்டு பெண்கள் தனியே எதிர்ப்படும் போது அவர்கள் பார்க்கும் விதமாக தங்கள் ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்….. உங்கள் குடும்பத்துப் பெண் பிள்ளைகளை அந்த இடத்தில் வைத்து யோசித்துப் பார்த்தால் தான் உங்களுக்கு எங்கள் வலி புரியும்”

“இந்த மாதிரியான அத்துமீறல்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கிறதல்லவா?”

“அத்துமீறல்கள் என்று ஒரே வார்த்தையில் எங்கள் வாழ்க்கையை நீங்கள் சுருக்க முடியாது. ஒன்றரை லட்சம் மக்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.. சுமார் பத்தாயிரம் பெண்கள் அரை விதவைகளாக இருக்கிறார்கள்… அரை விதவை என்ற பதத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

”சொல்லுங்கள்”

”இந்தப் பெண்களின் கணவன்மார்களெல்லாம் இராணுவத்தால் ‘விசாரணை’ என்ற பேரிலோ அல்லது வேறு முகாந்திரங்களைச் சொல்லியோ அழைத்துச் செல்லப்பட்டவர்கள்… எத்தனையோ ஆண்டுகளாகியும் அவர்களெல்லாம் திரும்பவில்லை.. கட்டியவன் இருக்கிறானா செத்துப் போய் விட்டானா என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இறந்து விட்டான் என்று உத்திரவாதமாக தெரிந்தால் கூட மறுமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கலாம்.. அல்லது மனதை சமாதானப்படுத்திக் கொண்டு எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கலாம்.. தங்கள் கணவன்மார்களுக்கு என்ன நேர்ந்ததென்றே இவர்களுக்குத் தெரியாது… ஆண்டுக்கணக்கில் இப்படி அரை விதவைகளாகவே கழித்து வருகிறார்கள்…”

”இதெல்லாம் இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் வந்ததில்லையே…”

“எப்படி வரும்? ஜே.என்.யு விவகாரத்தில் பார்க்கிறீர்கள் அல்லவா? வேட்டையாடும் வெறியோடு எங்கள் மீது பாய்ந்து குதறும் வாய்ப்புக்காகத்தானே காத்திருக்கின்றன இந்த ஊடகங்கள்.. அரை விதவைகள் பற்றிச் சொன்னேன் அல்லவா..? அதே போல் எண்பதினாயிரம் அனாதைகளை உங்கள் இராணுவம் எங்களுக்குப் பரிசளித்துள்ளது தெரியுமா. இப்போது சொல்லுங்கள் இதெல்லாம் எங்களுக்கு உங்கள் அரசாங்கம் கொடுத்த சலுகைகளா?”

“ஆனால் இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் இந்தியாவின் மற்ற பகுதி மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடாது?”

“தோழர்.. புரிந்து கொள்ளுங்கள்.. அங்கே ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரனையோ போலீசையோ உளவாளியையோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.. நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது.. நாங்கள் எங்களைச் சுற்றி இருக்கும் யாரையும் நம்ப முடியாது. யாரையும், எதையும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் பிழைத்துக் கிடக்கவே முடியும்.. ஆள் தெரியாமல் யாரிடமாவது எதையாவது பேசப் போனால் ‘எல்லையைக் கடக்க முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் புகைப்படம் இதோ’ என்று மறுநாள் ரத்தம் தோய்ந்த எங்கள் சடலங்கள் தலைப்புச் செய்தியில் வந்து விடும்.. எப்போதும் யாரோ உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கும் அந்த உளவியல் சித்திரவதையை மற்றவர்கள் உணர்வது கடினம்.”

”ஆனால், இது ஒடுக்கப்படும் எல்லா மக்களும் எதிர் கொள்வது தானே? தண்டகாரண்யாவிலும் வட கிழக்கிலும் கூட மக்கள் இதே துயரங்களைத் தானே எதிர் கொள்கிறார்கள்?”

“நான் தெளிவாக ஒன்றைச் சொல்லி விடுகிறேன். நாங்கள் புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்திய துணைக்கண்டமெங்கும் ஒடுக்கப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். அவர்களோடெல்லாம் ஒரு ஐக்கியத்தைக் கட்டமைப்பதன் மூலம் தான் இந்திய ஆளும் வர்க்கத்தை வெல்ல முடியும் என்பதும் எதார்த்தமானது தான்… ஆனால், அப்படியான ஒரு ஐக்கியம் வரும் வரைக்கும் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? செத்து மடிய வேண்டுமா? என்றோ ஒரு நாள் வரும் புரட்சிக்காக இன்றைக்கு நாங்கள் பிணங்களை எண்ணி விளையாடிக் கொண்டிருக்க வேண்டுமா? எங்கள் மாநிலத்தில் மூன்றில் ஒருவர் உளவியல் ரீதியாக மன அழுத்த நோயால் (Dipression) பீடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? தோழர்… நாங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முதலில் உடனடியாக நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிய வைக்க வேண்டும்.. எங்கள் குரல்கள் நின்று விட்டால் குரல்வளைகள் அறுத்து எரியப்பட்டு விடும். ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்துபட்ட ஒற்றுமைக்காக நாங்கள் என்றுமே நிற்கிறோம்.. ஆனால் அதுவரை சும்மா இருக்க முடியாது..”

”சரி. இதை ஊடகங்கள் தான் கண்டு கொள்ள மறுக்கின்றன. ஆனால், நீங்கள் அதை ஊடகங்களிடம் எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளீர்களா?

”குனான் போஷ்புரா சம்பவங்களைப் பற்றி வாசித்திருப்பீர்களே… 90 பெண்கள் உங்கள் இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர். அதில் எட்டு வயது சிறுமியும் 84 வயது கிழவியும் அடக்கம். நாங்கள் என்ன செய்யட்டும்? உங்கள் இராணுவம் வரும் போது எங்கள் பெண்கள் தயாராக படுத்துக் கொள்ள வேண்டுமா? அதைத் தான் தேசபக்தி என்பீர்களா? ஒன்று தெரியுமா… இந்த சம்பவங்கள் அம்பலமான போது சில இந்திய பத்திரிகையாளர்கள், காஷ்மீரி பெண்களை அவர்களது கணவன்மார்களால் திருப்திபடுத்த முடியவில்லை என்பதால் தான் இந்திய இராணுவ வீரர்களை உறவுக்கு அழைத்துள்ளனர் என்று எழுதினர்..  இப்பேர்பட்ட ஊடகங்களிடமா எங்கள் வலிகளைச் சொல்ல முடியும் என்கிறீர்கள்?”

”தோழர்.. எங்களால் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது… ஆனால், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் காஷ்மீரி பண்டிட்டுகளை முன்னிறுத்திக் காட்டுகிறார்கள். நீங்கள் தான் பண்டிட்டுகளை விரட்டியடித்தீர்களாமே? பண்டிட்டுகளின் துயரம் மட்டும் துயரம் இல்லையா?”

”பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறியது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது தான்…. ஆனால், நீங்கள் கதையின் ஒரு பக்கத்தை மட்டுமே வாசித்திருக்கிறீர்கள். மறுபக்கத்தையும் பாருங்கள்.. நான் எனது அம்மாவிடம் இது பற்றி கேட்டிருக்கிறேன். பண்டிட்டுகள் வாழ்ந்த பகுதிகளில் திடீரென முஜாஹிதின்கள் பெயரில் சில நோட்டீசுகள் தோன்றியிருக்கின்றன. அதில் பண்டிட்டுகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. உடனடியா இந்திய இராணுவம் அவர்களை பாதுகாப்பாக இராணுவ ட்ரக்குகளில் ஏற்றி வெளியேற்றியது என்று என் அம்மா என்னிடம் சொல்லி இருக்கிறார்… நான் ஒன்று கேட்கிறேன்.. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு ஏதாவது பாதுகாப்புப் பிரச்சினை என்றால் அரசு என்ன செய்ய வேண்டும்? அவர்களைப் பாதுகாக்க வேண்டுமா வெளியேற்ற வேண்டுமா?”

காஷ்மீர் மக்களின் போராட்டம்: "இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,"
காஷ்மீர் மக்களின் போராட்டம்: “இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,”

“நீங்கள் இதை சதித்திட்டம் என்கிற கோணத்தில் மட்டுமே பார்க்கிறீர்களா?”

”இல்லை அப்படியும் ஒரு கோணம் இருக்கிறது என்பதை முன்வைக்கிறேன். மற்றபடி போராளிகள் பண்டிட்டுகளோடு முறையான ஒரு உரையாடலை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதும்… சுதந்திர காஷ்மீரில் அவர்களும் ஒரு அங்கம் என்பதையும் புரிய வைத்திருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தும் கூட.. அந்த வகையில் இதில் போராளிகளின் தவறும் உள்ளது. நான் கதையின் மறுபக்கம் என்று சொன்னதில் வேறு சில அம்சங்களும் உள்ளன,,,”

“அதைப் பற்றி விளக்குங்களேன்”

”ஷேக் அப்துல்லா நிலச்சீர்திருத்தத்தை அமல் செய்வதற்கு முன் பெரும்பாலான நிலங்கள் காஷ்மீரில் சிறுபான்மையினராக இருந்த பண்டிட்டுகளிடம் தான் இருந்தது. நாங்களெல்லாம் அவர்களிடம் கூலிகளாக இருந்தோம். நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட்ட பின்பு அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் துவங்கியிருந்தனர். அதற்கும் முன் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் எனது தாத்தாவின் காலத்தில் பண்டிட்டுகள் தான் பெரும்பான்மையான அரசு வேலைகளில் இருந்தார்கள்.. நாங்களோ படிப்பறிவற்றவர்கள்.. எங்களை அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே நடத்தினர். எங்கள் சமூகங்களுக்குள் கலப்புத் திருமணம் போன்ற எந்த சம்பந்தங்களும் ஏற்பட்டதில்லை… நாங்கள் கிட்டத்தட்ட இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டோம். சொல்லப் போனால் பண்டிட்டுகள் வெளியேறியது தான் நான் இப்போது ஜே.என்.யுவில் சேர்ந்து படிக்கவும், உங்கள் முன் அமர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருக்கவும் காரணம்”

”சம உரிமை என்கிற அளவில் சொல்கிறீர்கள்… மற்றபடி நடைமுறையில் பண்டிட்டுகளோடு உங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தன?”

”தோழர் அதெல்லாம் மிகப் பழைய விவகாரங்கள்… சிலவற்றை எனது தாத்தா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் அரசு பதவிகளில் இருப்பதால் எங்களை கிள்ளுக்கீரைகளாகவே மதிப்பார்கள்.. உதாரணமாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாங்கள் எங்கள் நிலத்தைப் பதிவு செய்யச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்… ஒரு பண்டிட் என்ன செய்வார் என்றால்.. பத்திரத்தின் வாக்கியங்களை வேண்டுமென்றே தவறாக பொருள் வரும் படி எழுதி விடுவார்… பிறப்பு இறப்பு சான்றிதழ் தரும் அதிகாரி என்றால் குலாம் முகமது என்கிற பெயரை வேண்டுமென்றே கும்மு என்று எழுதி விடுவார்.. இதையெல்லாம் சரிசெய்ய நாங்கள் ஆண்டுக் கணக்கில் அரசாங்க அலுவலங்களின் படிகளில் ஏறி இறங்க வேண்டும்… இந்த மாதிரி நிறைய சொல்லலாம்.. ஒன்று சொல்லுங்கள், பண்டிட்டுகள் உள்நாட்டு அகதிகளாக இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் நீலிக்கண்ணீர் வடிக்கிறதே… எங்காவது ஒரு பண்டிட் பிச்சையெடுப்பதையோ சோற்றுக்கே சிரமப்படுவதையோ காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்..”

“இருபதாம் நூற்றாண்டுத் துவக்கத்தின் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் கதையைப் போன்றதுதானோ இது?”

”உண்மை தான்.. சமீபத்தில் நான் ஒரு கட்டுரை வாசித்தேன். தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை.. அவர்களை திராவிட இயக்கம் தான் திட்டமிட்டு வெளியே விரட்டியடித்ததைப் போல் எழுதியிருந்தார்..”

”எல்லா பார்ப்பனர்களும் ஒன்றே போல் சிந்திப்பது ஒரு ஆச்சர்யம் தான்.. சரி, இந்து பண்டிட்டுகளை விடுங்கள்.. ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் சுதந்திர கோரிக்கை குறித்து என்ன கருதுகிறார்கள்?”

”ஜம்மு மற்றும் லடாக் பகுதி மக்கள் விடுதலையை ஆதரிக்கவில்லை. விடுதலைக்கான கோரிக்கை காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் தான் உயிர்ப்போடு இருக்கிறது. இதில் என்னுடைய கருத்து என்னவென்றால், மற்ற மக்கள் பிரிவுகளிடையே முறையான ஒரு உரையாடலை முன்னெடுக்க போராளிகள் தவறி விட்டார்கள் என்றே கருதுகிறேன். காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள இசுலாமிய மத அடையாளம் மற்றவர்களை நெருங்கவிடாமல் செய்கிறது”

”மத அடையாளம் பற்றிக் குறிப்பிட்டீர்கள்… வகாபிசம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.. எங்கள் பக்கத்தில் முசுலீம்களிடையே வகாபிய போக்கு தற்போது செல்வாக்கோடு வளர்ந்து வருகிறது…”

”சரியான கேடுகெட்டவர்கள் இந்த வகாபிகள்.. இப்போது காஷ்மீரில் தர்காக்களை இடிக்க வேண்டும் அது இது என்று உளறிக் கொண்டு திரிகிறார்கள். வகாபிய இழிமகன்கள் இந்திய அரசின் உளவாளிகளாக இருப்பார்கள் என்று எனக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் உள்ளது”

“கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களே?”

”மேலும் கடுமையான வார்த்தைகள் கிடைக்கவில்லை தோழர். வரலாற்று ரீதியில் எங்களுக்கு இசுலாம் அறிமுகமானதே சூஃபி ஞானிகளின் வழியே தான். அது மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது என்பதை நான் சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்… இப்போது வகாபியம் என்ன செய்கிறதென்றால் எங்கள் சுதந்திர போராட்டத்திற்கு இனம் கடந்து மத சாயம் பூசுகிறது. இசுலாமிய வெறியையும் பாகிஸ்தானையும் தாலிபானையும் முடிச்சுப் போடுவதும் அதன் தொடர்ச்சியாக எங்கள் சுதந்திரப் போராட்டத்தை பயங்கரவாதமாக கட்டமைத்துக் காட்டுவதும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எளிதானது தானே? அந்த வகையில் இவர்கள் மறைமுகமாக இந்திய ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்கிறார்கள்”

”எப்படி அவ்வளவு உத்திரவாதமாகச் சொல்கிறீர்கள்?”

“சமீபத்தில் ஒரு தர்ஹா இடிக்கப்பட்டது… எல்லாருக்கும் அதை இடித்த வஹாபிய கும்பல் யாரென்பது நன்றாகவே தெரியும்.. இந்தியாவுக்கும் தெரியும் – அங்கே தான் இந்தியாவுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாதே.. ஆனால், ஒருவர் மீது கூட போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை. தர்ஹா இடிக்கப்பட்ட பின் மக்களிடையே இரண்டு பிரிவினரும் அடித்துக் கொண்டனர். இந்த சண்டை சச்சரவுகளின் போக்கில் எங்களது சுயநிர்ணய உரிமை குறித்த கேள்வியே மறந்து போனது. இந்திய ஆளும் வர்க்கம் எதிர்பார்ப்பதும் இதைத் தானே?”

”போராளி இயக்கத்திற்குள் சாதிய வேறுபாடுகள் உள்ளதெனச் சொல்லப்படுவது பற்றி?

”பக்கர்வாலா மற்றும் குஜ்ஜார் சாதி இசுலாமியர்கள் அனேகமாக போராளிகளாகவும், சையது, கான் போன்ற உயர்சாதிகளாக கருதப்படும் இசுலாமிய பிரிவினர் மட்டுமே இவ்வியக்கங்களின் தலைமையில் இருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. இந்தக் கூற்று முழுமையாக உண்மையும் அல்ல முழுப்பொய்யும் அல்ல. சையது, கான் பிரிவினரும் கூட போராளிகளாக மடிந்துள்ளனர். இசுலாம் காஷ்மீருக்கு அறிமுகமான போது அங்கே இருந்த அத்தனை சாதிப் பிரிவுகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டது. ஏற்றத்தாழ்வுகள் எந்த மாற்றமும் இன்றி நூற்றாண்டுகளாக அப்படியே நிலவி வந்தன. போராளி இயக்கங்களை விடுங்கள், காஷ்மீரி இசுலாமிய சமுதாயத்தில் பல்லாண்டுகளாக இந்த சாதிப் பாகுபாடு நிலவி வந்தது. இப்போதும் கூட சையது மற்றும் குஜ்ஜார் பிரிவினரிடையே திருமண பந்தங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றல்ல. அவ்வாறு அரிதாக நடக்கும் திருமண உறவுகள் கூட வர்க்கச் சமன்பாட்டை கணக்கிலெடுத்துக் கொண்டே நடக்கின்றன.  விமர்சனங்கள் வைப்பதென்றால், சமூகத்தில் நிலவிய சாதிப் பாகுபாடுகளை போக்குவதற்கு போராளி இயக்கங்கள் முழு மனதோடு முயற்சிக்கவில்லை என்று வைக்கலாம்”

”இந்திய இராணுவத்தால் நீங்கள் எதிர் கொள்ளும் துன்பங்களைப் பற்றிச் சொன்னீர்கள்… ஈழம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

”ஓ… நிறைய.. எங்களுக்கெல்லாம் பிரபாகரன் ஒரு மிகப் பெரிய நாயகன் தெரியுமா? அவரை எங்கள் சகோதரராகத் தான் நாங்கள் கருதுகிறோம். பிரபாகரன் மரணம் அடைந்த அன்று நாங்கள் பள்ளத்தாக்கில் பந்த் அனுசரித்தோம்… அதே போல் பிரபாகரனின் மகன் புகைப்படங்கள் வெளியான போதும் நாங்கள் எங்கள் குழந்தைகளில் ஒருவன் இறந்து போனதைப் போல் உணர்ந்தோம்.. அன்றைக்கு மக்கள் கூடும் பொதுவிடங்களில் எல்லாம் மரண வீட்டைப் போல் அமைதி நிலவியதை நானே பார்த்தேன்…”

“பெரியார், திராவிட இயக்கங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

“காஷ்மீரில் இருந்த வரை கேள்விப்பட்டதில்லை.  இங்கே ஜே.என்.யு வந்த பிறகு நிறைய கேள்விப்படுகிறேன்… பெரியாரை வாசிக்க வேண்டும் என்று உத்தேசித்திருக்கிறேன்”

“தமிழ்நாட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்”

காஷ்மீரில் இந்திய இராணுவம்
காஷ்மீரில் இந்திய இராணுவம்

”ஓ… நீங்கள் மற்ற இந்தியர்களைப் போல் அல்லவென்று தெரியும். வடக்கே இருக்கும் தேசியக் கற்பிதங்கள் உங்களிடம் செல்லாது என்று தெரியும். ஆர்.எஸ்.எஸ் போற்றிக் கொண்டிருக்கும் தேசியம் என்கிற சித்திரத்தை நீங்கள் மதிப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் எல்லைக் கோடு எங்கள் பக்கத்தில் தானே இருக்கிறது? மேலும் நாங்கள் முசுலீம்களாகவும் பிறந்து தொலைத்து விட்டோமே?”

”சரி, பாரதிய ஜனதா பி.டி.பி கூட்டணி பற்றி சொல்லுங்களேன். பி.டி.பி ஒரு பிரிவினைவாதக் கட்சி என்றல்லவா அறியப்படுகிறது.. அப்படி இருக்கும் போது பாரதிய ஜனதா எப்படி அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டது?”

”தவறான தகவல்… பி.டி.பி போலி விடுதலை பேசும் – அதையும் மென்மையான குரலில் பேசும் – ஒரு துரோகத்தனமான கட்சி. போராளி இயக்கங்களில் இருந்து சரணடையும் கைக்கூலிகள் மற்றும் இராணுவமே உருவாக்கி வைத்திருக்கும் உளவாளிகளின் கட்சி தான் பி.டி.பி. நீங்கள் தோழர் தானே.. உங்களுக்குப் புரியும் விதமாக சொல்கிறேன் – இவர்கள் முதலாளிகளே உருவாக்கி விடும் தொழிற்சங்கங்களைப் போன்ற கருங்காலிகள்”

“ஆனால், அவர்கள் தானே தேர்தலில் வென்றார்கள்?”

”உண்மை தான்.. மோடியின் நாடாளுமன்ற பிரச்சாரத்திற்கு ஜம்மு ஏமாந்து போனது…. அதே நேரம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் உமர் அப்துல்லா கெட்ட பெயர் வாங்கியிருந்தார்.. இதெல்லாம் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கு சாதகமாகப் போய் விட்டது.. ஆனால் இந்தக் கூட்டணி பி.டி.பியின் அரசியல் தற்கொலை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“ஒரு சிறிய உதாரணம் மட்டும் சொல்கிறேன்.. சாதாரணமாக இராணுவத்தால் கொல்லப்படும் போராளி ஒருவரின் சவ ஊர்வலத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.. ஆனால், சமீபத்தில் இறந்து போன முப்தி முகமதுவின் சாவுக்கு சில ஆயிரம் மக்கள் கூட வரவில்லை.. ஒரு அனாதைத் தெருநாயைப் போல முப்தியை குழியில் இட்டு மூடினார்கள்..”

”சரி தோழர்.. எமது கேள்விகள் முடிந்தன. எங்களுக்கு நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?…”

”தமிழ்நாட்டு மக்களை எங்கள் பக்கம் நிற்கச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறேன்.. “எங்கள்” என்பதில் காஷ்மீரிகள் மட்டுமல்ல ஜே.என்.யுவையும் சேர்ந்தே குறிப்பிடுகிறேன்.. மிக்க நன்றி!”

–    தொடரும்

– வினவு செய்தியாளர்கள்.

முந்தைய பாகங்கள்:

inner_design2