privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்இந்தியா ஒரு பயங்கரவாத நாடு – ஆதாரங்கள் !

இந்தியா ஒரு பயங்கரவாத நாடு – ஆதாரங்கள் !

-

ந்த ‘சம்பவம்’ பல பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்றல்ல. தொலைக்காட்சியும், கணினியும், ஒரு நாள் கிரிக்கெட்டும் அமலில் இருந்த நாகரீக காலமான 1991-ம் ஆண்டில்தான் அது நடந்தது.

பிலிபிட் போலி துப்பாக்கி சூட்டினால் பாதிக்கப்பட்டவர்கள்
பிலிபிட்டில் போலிசு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சீக்கியர்களின் குடும்ப உறுப்பினர்கள்

வயிற்றுக்கு இல்லை என்றாலும் பகவானுக்கு படைத்து மகிழும் பக்தி உள்ள நாட்டின் வழக்கப்படி பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கிய மக்கள் சிலர் ஒரு ஆன்மீக யாத்திரை செல்கின்றனர். ஜூலை 12, 1991 அன்று அவர்கள் வந்து கொண்டிருந்த பேருந்து உ.பி மாநிலத்தின் கக்லாபுல் மலைப்பகுதி அருகே உத்திர பிரேதச போலிசால் நிறுத்தப்பட்டது. பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மட்டும் அருகே பிலிபிட்டில் இருக்கும் குருத்துவாராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 11 சீக்கிய ஆண்கள் மட்டும் தனி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டனர். மாலையில் கூடுதல் போலீஸ் படை சேர்ந்து கொள்ள, அந்த சீக்கிய ஆண்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.

ஜூலை 12, 1991 அன்று, அந்த மூன்று குழுக்களைச் சேர்ந்த சீக்கியர்கள் பிலிபிட் மாவட்டத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் காலிஸ்தான் தீவிரவாதிகள், அவர்கள் மீது நிறைய குற்ற வழக்குகள் இருந்தன, ஆயுதங்கள் – வெடிமருந்தை மீட்டோம் என்றெல்லாம் போலீசு அடுத்த நாள் கூசாமல் புளுகியது. எதற்காக இந்த புளுகல்? தீவிரவாதிகளைக் கொன்றால் பணமும், விருதும், பதவி உயர்வும், புகழும் கிடைக்கும் என்பதற்காக இந்த போலீஸ் பயங்கரவாதிகள் அப்பாவி சீக்கிய மக்களைக் கொன்று தீர்த்தனர்.

போலி துப்பாக்கி சூட்டில் பலியான அப்பாவி சீக்கியர்கள்
போலிசு வெறியர்களால்க கொல்லப்பட்ட அப்பாவி சீக்கியர்கள்

இந்த பயங்கரத்தைச் செய்த போலிசார், வில்சந்தா, புரன்புர், நவுரியா காவல் நிலையங்களைச் சேர்ந்தவர்கள். இந்த கொடூரத்தை சி.பி.ஐ விசாரிக்குமாறு பல்வேறு சட்ட போராட்ட அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின் கீழ் சி.பி.ஐ விசாரித்தது. கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள், பதவி உயர்வுக்காக போலிசால் கொல்லப்பட்டனர் என்று சி.பி.ஐ கண்டுபிடித்து மொத்தம் 57 போலீசார் மீது 1995-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக் காலத்தில் பத்து போலிசார் இயற்கையாக இறந்து போனார்கள்.

அதன் பிறகு தற்போது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் மிச்சமிருக்கும் 47 பயங்கரவாதி போலிசாரை குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது. இந்த 47 பேர்களில் 38 பேர் நீதிமன்ற காவலிலும், 13 பேர் பல்வேறு போலிஸ் துறைகளில் பணியாற்றி வருபவர்கள்.

திங்களன்று 4.4.2016, சிறப்பு நீதிபதி லாலு சிங் 47 போலிசாருக்கும் ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்தார். மேலும் கொல்லப்பட்ட 11 சீக்கிய மக்களின் குடும்பங்களுக்கும் தலா 14 இலட்சம் கொடுக்குமாறும் அதை குற்றவாளிகளிக்கு விதிக்கப்பட்ட அபராதத்திலிருந்து வசூலிக்குமாறும் உத்தரவிட்டிருக்கிறார். தற்போது 38 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், ஒன்பது பேர்கள் இன்னமும் வெளியே இருக்கிறார்கள். அவர்களை கைது செய்யுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சி.பி.ஐ வழக்கறிஞர் சதீஷ் ஜைஸ்வால் கூறியிருக்கிறார்.

சீக்கிய மக்களை மூன்று பிரிவாக பிரித்து, மூன்று பிரிவு காவல் நிலையங்களுக்கான பகுதிகளில் கொன்று போட்டதை வைத்து பார்க்கும் போது இது தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மட்டும் செய்தது போல இல்லை, உயர் காவல் துறை அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறது. ஆனால் வேண்டுமென்றே சி.பி.ஐ அந்த அதிகாரிகளை விசாரணையிலிருந்து விலக்கி வைத்து விட்டதாக நீதிபதி கூறியிருக்கிறார். மேலும் சி.பி.ஐ-ச் சேர்ந்த இந்த வழக்கிற்குரிய விசாரணை அதிகாரிகள் முழு சுதந்திரத்துடன் செயல்படுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் மேலதிகாரிகளே இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்யக் கூடாது என்று வழிநடத்தியிருப்பதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது.

pilibhit_fake_encounter
குற்றவாளிகளாய் தீர்ப்பளிக்கப்ப்ட்ட போலிசுக்காரர்கள்!

அந்த வழிகாட்டலின் பேரில் முக்கியமான போலிஸ் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் விசாரணை அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டனர். மேலும் இந்த கொடூரக் கொலையின் சதித்திட்டத்தை தீட்டிய கயவர்கள் சில மேலதிகாரிகள் வழக்கிற்குள் கொண்டு வரப்படவே இல்லை. இவையும் இத்தீர்ப்பில் நீதிமன்றத்தால் மதிப்பிட்டிருக்கும் வார்த்தைகள்.

குற்றவாளி போலிசாரின் குடும்பங்கள் நீதிமன்றத்திலேயே தீர்ப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அத்தகைய அனுமதி இல்லாத கொலை செய்யப்பட்ட சீக்கிய குடும்பங்களின் உறுப்பினர்கள் தீர்ப்பு குறித்து பொறுமியிருக்கிறார்கள். “குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்திருக்க வேண்டும், இதற்காக மேல் முறையீடு செய்வோம்” என்று கொலை செய்யப்பட்ட பல்ஜீத் சிங்கின் மனைவி பல்வீந்தர் ஜீத் கவுர் கூறியிருக்கிறார். கொலை செய்யப்பட்ட சீக்கியர்களின் குடும்பங்கள் பல பஞ்சாபின் குர்தாஸ்பூரில் வாழ்பவர்கள்.

நண்பர்களே யோசித்துப் பாருங்கள்! சாமி கும்பிடச் சென்ற மக்களை போலிஸ் பிடித்துச் சென்று கொன்று போட்டு 25 வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, அதுவும் போலிஸ் சர்வாதிகாரத்தை ஆதரிக்கும் மோடியின் ஆட்சியில் மேல் முறையீட்டில் தப்பிப்பதற்கு வாய்ப்பு உள்ளதோடு, குற்றத்தில் பங்கேற்ற மேல் மட்ட போலிஸ் அதிகாரிகள் தப்பிவிட்டதாக நீதிமன்றமே கூறயிருக்கிறது என்றால்?

இங்கே உழைக்கும் மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் நல்லதொரு வாழ்க்கை கிடைக்கவில்லை என்றாலும் வாழும் உரிமை கூட கிடையாது என்றால் இது என்ன நாடு?

இந்தியா அமைதியான முறையில் இருக்கும் ஒரு பயங்கரவாத நாடு என்பதை ஏற்கிறீர்களா?