privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விமண்ணுக்கேற்ற மார்க்சியமா ? மரபு வழி மார்க்சியமா ?

மண்ணுக்கேற்ற மார்க்சியமா ? மரபு வழி மார்க்சியமா ?

-

இந்தியப் பொதுவுடைமை இயக்கம்
வலது, இடது வரலாறு: மண்ணுக்கேற்ற மார்க்சியமா? மரபு வழி மார்க்சியமா?

ட்டுக் கட்சி அரசியல்வாதிகள் என்றால் எப்படியும் பேசுவார்கள், கேட்டுக் கேட்டுச் சலித்துப் போனதுதான். ஆனால், “அட இப்படியும் பேச முடியுமா” என்று ஒரு நிமிடம் திகைக்க வைத்துவிட்டார், சீனிவாசன்.

இவர் நேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் மற்றும் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார். ”ஒரு மூத்த கம்யூனிஸ்ட்” தலைவர் திடீரென்று, அக்கட்சியின் பரம எதிரியும், இந்து மதவெறி பாசிசக் கட்சியுமான பாரதீய ஜனதாவுக்கு எப்படி மாறினார்? ஏதாவது ஒரு முற்போக்கு சாயலுடைய கட்சிக்குத் தாவினால் கூட கொஞ்சமாவது நியாயமிருக்கும்.

சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர்.
சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர்.

”முன்புகூட சில சி.பி.ஐ. பிரமுகர்கள், தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் போயிருக்கிறார்கள். கடந்த தலைமுறையில் மோகன் குமாரமங்கலம், நந்தினி சத்பதி, கே.ஆர். கணேஷ் போன்ற சில தலைவர்கள் காங்கிரசு – இந்திரா மூலமாக சோசலிசத்துக்குப் பாதை போடுவதாகச் சொல்லிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆனால், இப்படியா!” திகைத்து நிற்கிறார்கள், அக்கட்சியில் சிலர்.

”பிழைப்புவாதம் எந்த வயதிலும் வரலாம், இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை” என்று சமாதானம் கூறுகிறார், கட்சியின் இளைய – புதிய தலைவர் மகேந்திரன்.

ஆனால், கட்சி மாறிய சீனிவாசன், தனது செயலுக்குச் சித்தாந்தபூர்வமான நியாயம் சொல்லுகிறார். ”மார்க்சியத்தின் மறுவடிவம் பா.ஜ.க.”

”அது எப்படி முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுகிறாரே” என்று நீங்கள் வியக்கலாம்.

”முடியும்” என்று சாதிக்கிறார். ”சிகப்பு வெளுத்தால் காவி” என்று கூடச் சொல்லவில்லை. “காவியும் ஒரு சிகப்பு வண்ணம்தான் – சாயல்தான் வேறு” என்று ”நிகழ்” காலத்துக்கு ஏற்ற ‘நிறப்பிரிகை”த் தத்துவம் பேசுகிறார்.

”இந்திய மண்ணில், இந்தியக் கலாச்சார மரபில், இந்தியத் தத்துவஞானத்தில் வேர்விட்டு, மார்க்சியத்தின் சிந்தனை வழியில் நாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கட்சியின் அமைப்பு விதியிலேயே திருத்தம் கொண்டு வரப்பட்டது. வேதங்களையோ, உபநிஷத்துக்களையோ, இதிகாசங்களையோ, புராணங்களையோ, மகாபாரதத்தையோ, இராமாயணத்தையோ பற்றிக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் எப்படிச் சிறந்த கம்யூனிஸ்டாக இருக்க முடியும்?” என்று கேட்கிறார், சீனிவாசன்.

மேலும், ”மார்க்சியம் என்பது விஞ்ஞானம். இதை இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுத்த இங்குள்ள கம்யூனிஸ்டுகள் தவறிவிட்டார்கள். காங்கிரசு, திராவிட இயக்கங்கள் போன்றவற்றின் சித்தாந்தங்களும் காலாவதியாகிவிட்டன. மார்க்சிய சிந்தனைகளை இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுத்தக் கூடிய கட்சி பா.ஜ.க. என்பதால்தான் அக்கட்சியில் சேர்ந்தேன்.”

1934-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஆங்கிலேய அரசு தடை செய்து, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியவுடன் பெரியார் சுயமரியாதைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.
1934-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஆங்கிலேய அரசு தடை செய்து, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியவுடன் பெரியார் சுயமரியாதைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.

“இந்திய மரபு, இந்திய அறிவு, இந்திய ஞானம் இவற்றில் நாம் வேரூன்றி நிற்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் வாதம். இது மார்க்சியத்தின் மறுவடிவம்தான்.” என்றும் கூறுகிறார்.

“ஒரு கம்யூனிசத் துரோகி கண்டதையும் பேசுவான். அதையெல்லாம் ஒரு பொருட்டாய்க் கொள்ளத் தேவையில்லை” என்று வெகு சுலபமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியும். இது ரொம்ப எளிமையான கணக்கு! பாரதீய ஜனதாவோ இந்து வெறி பாசிச – பார்ப்பன சனாதனக் கட்சி, அதில் போய் சேருகிறவன் வேறு எப்படி இருப்பான், எதிரியின் அணியில் சேருபவன் வேறென்ன பேசுவான் என்பதுதான் அந்தக் கணக்கு.

சீனிவாசன் எதிரி முகாமுக்குப் போய் விட்டதாலேயே அவர் சொன்ன கருத்துப் பற்றிக் கணக்குப் போடுவது பலருக்கு எளிதாகப் போய்விட்டது. பா.ஜ.க.வின் எதிரி முகாமாகிய ”நம்மிடையே” இருக்கும் இவர்களுடைய கருத்துக்களையும் பற்றிக் கணக்குப் போடுவது அதே பலருக்கு சிக்கலாக உள்ளது. பல சமயம் தவறாகவும் போய் விடுகிறது.

பா.ஜ.க.வையும் மார்க்சியத்தையும் இணைப்பதற்கு சீனிவாசன் பயன்படுத்தியிருக்கும் சங்கிலி, ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்.” முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சியாக அவர் இந்து மத வெறி பாசிச – பார்ப்பன சனாதனத்தை மார்க்சியத்திற்குள் புதைத்து மோசடி செய்ய முயலுகின்றார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தவிர, ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசுவோர் பட்டியலில் சமீபத்திய அவதாரம்தான் இந்தத் துரோகி என்பது மற்றொரு உண்மை.

“இந்தியப் பொதுவுடைமை இயக்கம் இதுவரை மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைக் கடைப்பிடிக்கவில்லை” என்பது சீனிவாசனின் குற்றச்சாட்டு, ”பா.ஜ.க.தான் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைப் பின்பற்றும் சரியான கட்சி” என்பது, அவர் எடுத்திருக்கும் முடிவு.

சீனிவாசனின் முடிவில் மாறுபட்டாலும் அவரது குற்றச்சாட்டில் முற்றாக உடன்படுபவர்கள் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திற்குள்ளும், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், தலித்தியம், தமிழினம், திராவிடம், சமூகநீதி எனப் பல்வேறு பிரிவுகளாக உள்ளவர்கள் வெளியேயும் ஏராளம்.

உள்ளே இருப்பவர்கள் வெளியே போகும்போதெல்லாம், வெளியே இருப்பவர்களின் நிலைப்பாடுகளை பொதுவுடைமை இயக்கத்தவர்கள் விமர்சிக்கும் போதெல்லாம், ஏதோ முற்றிலும் புதிதாகச் சொல்லுவதைப் போல முன்வைக்கப்படுவதுதான் ”மண்ணுக்கேற்ற மார்க்சியம் தேவை” என்கிற வாய்ப்பாடு.

இவர்கள் அனைவரும் இரண்டு உண்மைகளை மறந்து விடுகின்றனர்.

முதலாவதாக, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துக்கு எண்பது ஆண்டு கால வரலாறு உள்ளதென்றால், இந்த “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்கிற வாய்ப்பாட்டுக்கும் எண்பது ஆண்டுகால வரலாறு உண்டு.

இரண்டாவதாக, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் இந்த எண்பதாண்டு கால வரலாற்றில், ஒரு சில குறிப்பிட்ட, குறுகிய காலங்கள் தவிர இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தியதே ”மரபு வழி மார்க்சியம்” அல்ல; ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” தான். ஆனாலும், ”இந்தியப் பொதுவுடைமை இயக்கம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வகுத்து வழி நடத்தவில்லை. அது வரட்டுத்தனமாக மரபுவழி மார்க்சியத்தைப் பின்பற்றித்தான் பரிதாபகரமாகத் தோற்றுப் போய்விட்டது” என்று விமர்சிக்கப்படுகிறது.

பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார்
பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார்

இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” ”மரபு வழி மார்க்சியம்” என்கிற சொற்றொடர்களுக்கு ஒரே பொருள் விளக்கம் தருவதில்லை. அவரவர் நிலையில் நின்று பலவாறாக விளக்கங்களும் விமர்சனங்களும் தருகின்றனர்.

”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறுகளாகிய ஆன்மீகம், அகிம்சையை, ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மார்க்சியத்துடன் காந்தியத்தையும் இணைப்பதன் மூலம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று சிலர் சொல்லுகின்றனர்.

”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறுகளாகிய தேசிய இனப்பிரச்சினை, சாதிய முறை போன்றவற்றை ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மார்க்சியத்துடன் பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் இணைப்பதன் மூலம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள்.

இவ்விரு பிரிவினரின் கருத்துப்படி இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவியவர்களும், அதன்பின் தலைமையேற்றவர்களும் ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியத்தை அப்படியே பின்பற்றினார்கள் என்றாகிறது. ஆனால் அது உண்மையல்ல. இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர்கள் என்று ”அறியப்படும் அனைவரும்” மரபுவழி மார்க்சியத்தை ஆரம்ப முதலே ஏற்க மறுத்தவர்கள். உலகப் பொதுவுடைமைக் கட்சிகள் எல்லாம் இணைந்திருந்த மூன்றாவது அகிலம், அதன் மூலமாக லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் வழிகாட்டுதலை நிராகரித்தவர்கள்தான் அவர்கள்.

”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறு, இங்குள்ள தேசிய முதலாளிகள் முற்போக்கானவர்கள். மூன்றாவது அகிலத்தைச் சேர்ந்த போல்ஷவிக் (ரஷ்யப் பொது வுடைமைக் கட்சி) ஏஜெண்டுகளின் மரபுவழி மார்க்சியம் இதைக் கணக்கில் கொள்ளவில்லை. இந்திய தேசியக் காங்கிரசின் முற்போக்குப் பிரிவினருடன் ஐக்கியப்பட்டு, விடுதலையையும் சோசலிசத்தையும் சாதிப்பதுதான் மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்று சொல்லி, அந்த திசையிலே தான் பொதுவுடைமை இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள்.

”தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்” என்று மண்ணுக்கேற்ற மார்க்சியத்தின் பல பிரிவு வாதாடிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுபவர், சென்னை சிங்காரவேலர். அதுவும் 1923-லேயே, இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் மண்ணில் – மே நாள் கொண்டாடியவர்; 1925-ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்டுகளின் முதல் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியதுடன் அதில் நிறுவப்பட்ட பொதுவுடைமைக் கட்சிக்குத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சிங்காரவேலர்.

இந்தச் சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர். இவர் தனித்தன்மை வாய்ந்த, புரட்சியைச் சாதிக்கவல்ல, இரகசிய – சட்டவிரோத, ஆயுத பாணியாக்கப்பட்ட பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் ஒரு போதும் உடன்பாடு கொள்ளவில்லை.

இவருடைய அரசியல் வாழ்க்கையின் முன்பகுதி, காந்தியின் தலைமையிலான காங்கிரசுக்குள் பொதுவுடைமை இயக்க அமைப்புக்களை நிறுவி, விடுதலையையும் கம்யூனிசத்தையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் அமைந்தது. அப்போது வன்முறை தவிர்த்த மார்க்சியமே காந்தியம்; புத்தரும் பொதுவுடைமையும், காந்தியமும் ஒன்றே; வழிமுறை மட்டுமே வேறானது. புத்தரின் வாரிசாகவே காந்தியம் அமைந்துள்ளது; புத்தரும் காந்தியும் போதிக்கும் அகிம்சை புரட்சியே சரியானது – இவைதான் சிங்கார வேலரின் ஆரம்பகாலப் பொதுவுடைமைக் கண்ணோட்டம்.

மாஸ்கோவில் கம்யூனிசப் பயிற்சி பெற்று தென்னிந்தியாவிற்கு வந்த அமீர் ஹைதர் கான் தலைமறைவாக இருந்து சுந்தரைய்யா, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. ஐயங்கார், கே. பாஷ்யம் போன்றவர்களைக் கொண்டு இரகசியக் கட்சி வலைப்பின்னலை உருவாக்கியிருந்தார்.
மாஸ்கோவில் கம்யூனிசப் பயிற்சி பெற்று தென்னிந்தியாவிற்கு வந்த அமீர் ஹைதர் கான் தலைமறைவாக இருந்து சுந்தரைய்யா, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. ஐயங்கார், கே. பாஷ்யம் போன்றவர்களைக் கொண்டு இரகசியக் கட்சி வலைப்பின்னலை உருவாக்கியிருந்தார்.

இவருடைய அரசியல் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி, பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்துக்குள்ளேயே பொதுவுடைமை கட்சியைக் கட்டி விடுதலையையும் சமதருமத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டது. இதற்காக சுயமரியாதை இயக்கத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை சமதருமக் கட்சியை நிறுவினார். இந்தக் காலத்தில் சிங்காரவேலர் கொண்டிருந்த பொதுவுடைமைக் கண்ணோட்டத்தில் காந்தியம் கைவிடப்பட்டிருந்தது; இருந்தாலும் அகிம்சை முறையில் விடுதலை – பொதுவுடைமையைச் சாதிக்கும் நோக்கம் நீடித்தது. சாதி – மத எதிர்ப்பு போன்ற சுயமரியாதைக் கூறுகளும் சேர்க்கப்பட்டிருந்தன.

சிங்காரவேலர் காங்கிரசில் இருந்த போது அதற்குள்ளாகவே, பொதுவுடைமை காணும் நோக்கோடு ”இந்துஸ்தான் பஞ்சாயத்து” என்ற அமைப்பை நிறுவினார். பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுமாறு கம்யூனிச அகிலம் கோரியபோது அதற்குப் பதிலாக “இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி” (தொழிலாளர் விவசாயக் கட்சி)யை நிறுவினார். 1925, கான்பூரில் பொதுவுடைமையாளர்கள் மாநாட்டுக்குத் தலைமையேற்று, கட்சிக்கும் தலைவராவதற்கு முன்பு, தொழிலாளர் அரசியல் கட்சியை நிறுவினார். அது பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைப் போன்று இயங்கும், (ஆங்கிலேய ஏகாதிபத்தியப் பிரதமரான) இராம்சே மாக்டனால்டு போன்றோரின் கருத்துக்களை வழிகாட்டும் தத்துவமாக ஏற்கும் என்றார்.

காங்கிரசில் இருந்து கொண்டு அதன் மூலம் பொதுவுடைமை இயக்கத்தையும் கட்டும் சிங்காரவேலரின் முயற்சி, பொதுவுடைமை கொள்கையில் உடன்பாடு கொண்ட தொழிலாளர் தலைவர்கள் என்று திராவிட – தமிழினவாதிகளால் போற்றப்படும் திரு.வி.க., சக்கரை (செட்டியார்) பூரீராமுலு போன்றவர்களாலேயே முறியடிக்கப்பட்டது. அதுவும் கண்ணியமான முறையில் இல்லை. தொழிலாளர் போராட்டத்துக்காக காங்கிரசு கொடுத்த நிதியை சிங்காரவேலர் கையாடல் செய்தார், பதவிக்காக முறைகேடாக முயன்றார், கான்பூர் சதி வழக்கில் ஆங்கிலேயே அரசிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானார் என்கிற அவதூறு செய்து ஒதுக்கப்பட்டார்.

சிங்காரவேலரால் தலைமையேற்கப்பட்ட தொழிலாளர் போராட்டங்கள், அனைத்திந்திய தொழிலாளர் காங்கிரசின் தலைவர்களான வி.வி. கிரி, என்.எம். ஜோஷி ஆகியோரின் துரோகத்தால் தோல்வியடைந்தன. இதனால் வெறுப்புற்ற சிங்காரவேலர், அப்போது தொழிலாளர் போராட்டங்களை ஆதரித்த பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கம் கண்டார். ஆனால், 1934-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஆங்கிலேய அரசு தடை செய்து, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியவுடன் பெரியார் சுயமரியாதைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். இத்தோடு சிங்காரவேலரின் பொதுவுடைமை இயக்க முயற்சிகள் எல்லாம் முடிவுக்கு வந்தன.

ஏறக்குறைய 15 ஆண்டுகள் தனது ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” அடிப்படையில் தென்னிந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவி, வளர்க்க சிங்காரவேலர் முயன்றார். அதே காலகட்டத்தில் மேற்கு இந்தியாவில் டாங்கேயும் அவரது சீடரும், காந்தி ஆசிரமவாசியுமான சத்திய பக்தாவும் அதே முயற்சியை மேற்கொண்டனர்; வட இந்தியாவில் மணிலால் என்பவர் அதே முயற்சியில் இருந்தார். 1922 டிசம்பரில், கயாவில் கூடிய இந்திய தேசியக் காங்கிரசு மாநாட்டையொட்டி சிங்காரவேலர், டாங்கே, மணிலால் மூவரும் சந்தித்து ஒருங்கிணைப்புக்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பிறகு வங்காளத்தைச் சேர்ந்த முகுந்தலால் சர்க்காரோடு நான்கு மையங்களில் இருந்து நான்கு அறிக்கைகளை முன்வைத்து காங்கிரகக்குள்ளாகவே நான்கு ”பொதுவுடைமை” அமைப்புகளைத் தனித்தனியே அமைத்தனர்.

முதலாளித்துவ தேசியவாதத்தை ஆதரிப்பது, சட்டபூர்வ – வெளிப்படையான அமைப்பாக மட்டுமே செயல்படுவது, கம்யூனிச அகிலத்துடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமல் இருப்பது என்பதே அன்றைய பொதுவுடைமை இயக்கத்தின் பிரதான பெரும்பான்மை நிலையாக இருந்தது. தெற்கே சிங்காரவேலரும் வடக்கே டாங்கேயும் இந்த நிலையின் பிதாமகர்களாக இருந்தனர்.

1928-இல் கூடிய கம்யூனிச அகிலத்தின் ஆறாம் மாநாடு ”இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகி, எல்லாப் பொதுவுடைமைக் குழுக்களும் தனிநபர்களும் இணைந்து ஒன்றுபட்ட சட்டவிரோதமான கட்சியைக் கட்ட வேண்டும்” என்று அறிக்கை நிறைவேற்றியது. ஆனால் அதை அப்போதைய சி.பி.ஐ நிராகரித்து விட்டது. 1930 இல் மீண்டும் அகிலத்தின் அதிகார பூர்வ பத்திரிக்கை இந்தியாவுக்கான விமர்சனமும் செயல்திட்டமும் எழுதியது. இதை கல்கத்தா மையம் ஏற்ற போதும் டாங்கே தலைமையிலான பம்பாய் மையம் ஏற்கமறுத்து, காந்தி – காங்கிரசு தலைமையிலான இயக்கங்ளில் இணைந்து செயல்பட்டது.

ரணதிவே(வலது) மற்றும் A.K.கோபாலன்
ரணதிவே(வலது) மற்றும் A.K.கோபாலன்

இந்தியாவில் குடியேறி செயல்பட்டு வந்த பிரிட்டன் பொதுவுடைமையாளர்களும், கல்கத்தா மையமும் அகிலத்துக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் 1932-இல் இ.பொ.க.வின் தவறுகளைக் கடுமையாக விமர்சித்து பிரிட்டன், சீனா, ஜெர்மனிப் பொதுவுடைமைக் கட்சிகள் ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பின. 1933-இல் மீண்டும் சீனப் பொதுவுடைமைக் கட்சி, இ.பொ.கவின் அமைப்பு – நடைமுறைகள் மீது விமர்சன அறிக்கை அனுப்பியது.

வெளியிலிருந்து வந்த இத்தகைய இடையறாத முயற்சிகளின் விளைவாக 1933-இல் கூடிய இ.பொ.க வின் இரகசிய மாநாடு, பொதுவுடைமை அகிலத்தில் இணைவது என்றும் அதன் வழிகாட்டுதல்களை ஏற்பது என்றும் முடிவு செய்தது. டாங்கே தலைமையிலான காந்திய – காங்கிரசுக் கம்யூனிஸ்டுத் திட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய புரட்சிகர அறைகூவலை அந்த மாநாடு அமைத்த மத்தியக் குழு விடுத்தது.

ஆனால், ஆறாவது மாதமே கட்சியையும் அதன் துணை அமைப்புகளையும் ஏகாதிபத்திய அரசு தடை செய்தது. டாங்கே போன்ற ”மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகள்” எல்லாம் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் காங்கிரசு சோசலிசக் கட்சி என்கிற அமைப்பை காங்கிரசுக்குள்ளாகவே நிறுவி, அதில் இணைந்தனர். சிங்காரவேலருக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தின் பொறுப்பேற்ற ஜீவா தலைமையிலான மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகளும் அவர்களைப் பின்பற்றினர்.

காங்கிரசு – காந்திய வழியில் தமது ஆசிரம அரசியலைத் தொடங்கிய ஜீவா, 1932-இல் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். சிறையில் பகத்சிங்கின் கட்சித் தோழர்களிடம் போதனை பெற்று கம்யூனிச அரசியலை ஏற்றார். வெளியில் வந்ததும் பெரியார், சிங்காரவேலருடன் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து ஒரு நாத்திக மாநாடும், பிறகு ஒரு ஜமீன்தாரல்லாத மாநாடும் நடத்தினார். பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார். அதை அச்சிட்டவர் வெளியிட்டவர் என்கிற முறையில் பெரியாரும் அவரது சகோதரியும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததோடு, ஜீவாவையும் அப்படிச் செய்யுமாறு பெரியார் நிர்பந்தித்தார். ஜீவா மறுத்து விட்டார். பார்ப்பனரல்லாதவர்கள் எனத் திராவிட – தமிழினவாதிகளால் இன்றும் போற்றப்படும் பெருவியாபாரிகள் முதலாளிகள், நிலக்கிழார்களின் நிர்ப்பந்தம், அரசின் மிரட்டல் காரணமாக ”கொள்கையைவிட அமைப்பைப் பாதுகாப்பதே முக்கியமானது” என்று சொல்லி சுயமரியாதைத் திட்டதையும் பெரியார் கைவிட்டார்.

இதனால் வெறுப்புற்ற ஜீவா, ”சுயமரியாதை இயக்கம் அவமரியாதை இயக்கமாகிவிட்டது” என்று கூறி வெளியேறி, சிங்காரவேலரைத் தொடர்ந்து சுயமரியாதை சமதருமக்கட்சிக்குத் தலைமையேற்று பிரச்சாரமும், மாநாடும் நடத்தினார். அதற்கு சிறப்பு அழைப்பாளராக வந்த டாங்கே சிறப்புரையாற்றினார். அவரது ஆலோசனைப்படி சுயமரியாதை – சமதருமக் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசு மகாசபையிலும், காங்கிரசு சோசலிசக் கட்சியிலும் இணைந்தனர். 1936-இல் சேலத்தில் மாநாடு நடத்தி தமிழ்நாடு காங்கிரசு சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளராக ஜீவா ஆனார்.

மாஸ்கோவில் கம்யூனிசப் பயிற்சி பெற்று தென்னிந்தியாவிற்கு வந்த அமீர் ஹைதர் கான் தலைமறைவாக இருந்து சுந்தரைய்யா, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. ஐயங்கார், கே. பாஷ்யம் போன்றவர்களைக் கொண்டு இரகசியக் கட்சி வலைப்பின்னலை உருவாக்கியிருந்தார். அவர்கள் உருவாக்கி இருந்த “யங் கம்யூனிஸ்டு லீக்” என்ற இளைஞர் பொதுவுடைமை அமைப்பு ஆங்கிலேயக் காலனி அரசால் தடை செய்யப்பட்ட போது, அவர்களும் காங்கிரசு சோசலிசக் கட்சியில் இணைந்தனர்.

அகில இந்தியத் தலைமையான டாங்கே, நம்பூதிரிபாடு ஆகியவர்கள் வேத இதிகாசப் - புராணங்களில், பார்ப்பனிய சனாதனத்தையே மண்ணுக்கேற்ற மார்க்சியமாகத் தேடினார்கள்.
அகில இந்தியத் தலைமையான டாங்கே, நம்பூதிரிபாடு ஆகியவர்கள் வேத இதிகாசப் – புராணங்களில், பார்ப்பனிய சனாதனத்தையே மண்ணுக்கேற்ற மார்க்சியமாகத் தேடினார்கள்.

இக்கட்சியை வலுவாகக்கட்டி, பல தொழிலாளர் அமைப்புக்களை நிறுவி, பொருளாதார போராட்டங்களை நடத்திய போது, இக்கட்சியின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருந்த காங்கிரசு முதல் மந்திரி இராஜாஜியும், தொழில் மந்திரி வி.வி. கிரியுமே அவற்றை ஒடுக்கினர். இருந்தாலும் காங்கிரசுக்குள் செயல்பட்டு அதன் அமைப்புப் பதவிகளைப் பிடிப்பதில் முனைப்பாக ஈடுபட்டனர் ஜீவா போன்றவர்கள். இராஜாஜி, காமராஜர், சத்தியமூர்த்தி ஆகியோரோடு போட்டியிட்ட ஜீவா அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 திரிபுரா காங்கிரசில் சுபாஷ் சந்திரபோஸ், மற்றும் காந்தி-நேரு குழுக்களுக்கிடையே தலைமைக்காக நடந்த மோதலின் போது ஒற்றுமையை உருவாக்கவே டாங்கே, ஜீவா போன்றவர்கள் முயன்றனர். காந்தி கும்பல் அம்மாநாட்டில் தோற்றபோதும், நிர்ப்பந்தம் – மிரட்டல் மூலமாக சுபாஷ் சந்திரபோசை விரட்டி விட்டு தலைமையைக் கைப்பற்றியது. அதன் விளைவாக கம்யூனிஸ்டுகள் எனக் கருதப்பட்ட அனைவரையும் காங்கிரசு சோசலிசக் கட்சியிலிருந்து விரட்டும் வேலையை அது மேற்கொண்டது.

இப்படி வெளியேற்றப்பட்டவர்கள் ஜோஷி தலைமையில் தனிக் கட்சியாக அமைந்தனர். அதற்கு இங்கே ஜீவா, இராமமூர்த்தி போன்றோர் தலைமையேற்றனர். இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில் காங்கிரசின் நிலைப்பாடு எடுத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஜோஷி – டாங்கே போன்ற கம்யூனிஸ்டுகள். சோவியத் ஒன்றியத்தை இட்லரின் ஜெர்மனி தாக்கிய போது கம்யூனிச அகிலத்தின் நிலைப்பாட்டைத் தவறாகப் புரிந்து கொண்டனர். ஏகாதிபத்தியப்போரை எதிர்த்துப் புரட்சியைத் தொடுப்பதற்குப் பதில், சோசலிச அரசைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஆங்கில ஏகாதிபத்திய ஆதரவு நிலை எடுத்தனர். இதனால் தடை நீக்கப்பட்டு வெளியே வந்தார்கள்.

இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதும் நாடு முழுவதும் காந்திய காங்கிரசு வழிமுறைகளை நிராகரித்து, உடனடி விடுதலை கோரி, தொழிலாளர்கள், படைவீரர்களின் ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் வெடித்தன. இதன்பின்னணியில் கம்யூனிஸ்டுகளின் சதி இருப்பதாகக் கருதிய காங்கிரசு அமைச்சரவை பொதுவுடைமை இயக்கத்தைத் தடை செய்து அதன் அணிகளை வேட்டையாடியது. ஆனால் அதன் தலைவர்களோ, புரட்சிக்கு அவசியமான தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியையும், இரகசியக் கட்சி அமைப்புகளையும் நிறுவுவதற்குப் பதிலாக, காங்கிரசு, திராவிடர் கழகப் பிரமுகர்களின் ஆதரவுடன் வெறுமனே தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர். ஆந்திராவின் தெலுங்கானாவில் மட்டுமே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 1947 அதிகாரமாற்ற நெருக்கடியைப் பயன்படுத்தி, ஆயதந் தாங்கிய உழவர் பேரெழுச்சியாக வளர்த்தெடுத்தனர். அதேசமயம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரான ரணதிவே நாட்டின் நிலைமையை மிகை மதிப்பீடு செய்து ரஷ்யப் புரட்சியை அப்படியே காப்பியடித்து, உடனடியாகவே நாடு தழுவிய முறையில் ஆயுதப் பேரெழுச்சி நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் வழிகாட்டுதலைக் கொடுத்தார். இந்த “அதீதப் புரட்சி” காரணமாக கட்சிக்குப் பேரிழப்பு நேர்ந்ததோடு, டாங்கே, மோகன் குமாரமங்கலம், அஜாய் கோஷ் போன்ற துரோகிகளின் சரணடைவுக்குப் பிறகு தடைநீங்கி, இ.பொ.க. சட்டபூர்வக் கட்சியானது.

அதன்பிறகு, நாடாளுமன்ற சகதிக்குள் மூழ்கிக் கொண்டே, எந்தப்பாதையில் நகர்வது என்று குழம்பிக்கிடந்த போது, பொதுவுடைமைத் தலைவர்களுக்கு குருச்சேவின் வருகை பேருதவியாக அமைந்தது. அவர்கள் இந்திய – சீனப்போரைக் காரணமாக வைத்து ”கம்யூனிசக் கட்சி”. “மார்க்சிசக் கட்சி’ என்று இரண்டு பிரிவுகளாக இயங்கினாலும் அவர்களிடையே அடிப்படைத் திட்டத்தில் ஒரே ஒரு வேறுபாடுதான் இருந்தது.

1969-இல் இந்திரா காங்கிரசு அரசு சிறுபான்மையான போது, சி.பி.எம் அதை ஆதரித்துக் காப்பாற்றியது.
1969-இல் இந்திரா காங்கிரசு அரசு சிறுபான்மையான போது, சி.பி.எம் அதை ஆதரித்துக் காப்பாற்றியது.

காங்கிரசு, பிற்போக்குப் பெருமுதலாளிகளின் கட்சி அதனுடன் அணிசேரக் கூடாது என்பது ”மார்ச்சிஸ்ட் கட்சி”யின் நிலையாகவும், காங்கிரசு முற்போக்குத் தேசிய முதலாளிகளின் கட்சி, அதனுடன் அணிசேர்ந்தே ஆகவேண்டும் என்பது ”கம்யூனிசக் கட்சி’யின்” நிலையாகவும் இருந்தது. இந்த இருகட்சிகளுமே காங்கிரசு பற்றிய தத்தமது நிலையை தேர்தல் அரசியலுக்கேற்ப மாற்றிக் கொண்டுள்ளதால் இதுவொன்றும் அடிப்படையான வேறுபாடு அல்ல. 1969-இல் இந்திரா காங்கிரசு அரசு சிறுபான்மையான போது, சி.பி.எம் அதை ஆதரித்துக் காப்பாற்றியது. 1977 தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு, சி.பி.ஐ. காங்கிரசுக்கு எதிராகப்போய் சி.பி.எம்.மின் நிலை எடுத்தது. இப்போது காங்கிரசுக்கு ஆதரவு என்ற சி.பி.ஐ.யின் முன்னாள் நிலையை இரண்டு கட்சிகளுமே எடுத்துள்ளன.

தமிழகத்தில், சிங்காரவேலருக்குப் பிறகு, டாங்கேயின் வழியில் ஜீவா, கல்யாணசுந்தரம், பாலதண்டாயுதம் போன்றவர்கள் ஒரு பிரிவை வழி நடத்தினார்கள். நம்பூதிரிபாடு வழியில் ராமமூர்த்தி, பாலசுப்பிரமணியம், நல்லசிவம், சங்கரய்யா போன்றவர்கள் மற்றொரு பிரிவை வழிநடத்தினார்கள்.

இந்த இரண்டு பிரிவுகளுமே, ”மரபுவழி மார்க்சியத்தைப் பின்பற்றின, மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைப் பின்பற்றவில்லை” என்று இந்த இரண்டு ”மார்க்சியங்களை”யும் அறியாதவர்கள்தான் சொல்ல முடியும். இவ்விருபிரிவினருமே மார்க்சிய – லெனினியப் புரட்சிவழியை நிராகரித்து, குருச்சேவ், பிரஷ்னேவ், கோர்பச்சேவ், டென்சியாபிங் வழிமுறைகளைப் பின் பற்றுபவர்களாகத்தான் உள்ளனர்.

தேர்தல் அரசியல்வாதிகளாகச் சீரழிந்துபோய்விட்டார்கள் என்பதற்காகமட்டும் இதைச் சொல்லவில்லை. அகில இந்தியத் தலைமையான டாங்கே, நம்பூதிரிபாடு ஆகியவர்கள் வேத இதிகாசப் – புராணங்களில், பார்ப்பனிய சனாதனத்தையே மண்ணுக்கேற்ற மார்க்சியமாகத் தேடினார்கள். இதைத்தான் ”இந்திய மரபு. இந்திய ஞான. இந்தியக் கலாச்சாரம் ஆகியவற்றில் வேர் விட்டு பொதுவுடமை இயக்கத்தை வளர்க்க வேண்டும்” என்கிறார்கள்.

மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மரபுவழி மார்க்சியம் போதிக்கிறது.
மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மரபுவழி மார்க்சியம் போதிக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ”மார்க்சிஸ்ட்கட்சி – சி.பி.எம்”காரர்கள் நம்பூதிரிபாடின் சனாதன வியாக்கியானங்களைப் பற்றி ஒழுகுகின்றனர். ஆனால் சிங்காரவேலர், ஜீவா வழிவந்த சி.பி.ஐ.காரர்கள் பாரதி, வள்ளுவம், கம்பராமாயணம் இவற்றில் எல்லாம் பொதுவுடைமைச் சித்தாந்தத்தைத் தேடி “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” உருவாக்கி, அந்த வகையில் திராவிட – தமிழினவாதிகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர்.

இவை ஒருபுறமிருக்கட்டும். மரபு வழி மார்க்சியமே மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைத் தான் போதிக்கிறது. மார்க்சியத் துரோகிகளும் எதிரிகளும் அவதூறு செய்வதுபோல, எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைகளை வைத்திருப்பதாக மரபுவழி மார்க்சியம் ஒருபோதும் உரிமை கொண்டாடவில்லை. மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மரபுவழி மார்க்சியம் போதிக்கிறது. மார்க்சிய – லெனினிய இயக்கம் மட்டும்தான் இந்த வழியிலே முயற்சிக்கிறது. எனவேதான், அதிகாரபூர்வ கம்யூனிசக் கட்சிகள் புறக்கணித்த தேசிய இனம், சாதியப்பிரச்சினைகளை, தமிழின,  தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பே கையிலெடுத்தது.

இதைக் காண மறுத்துக் கண்களை மூடிக் கொள்ளும் தமிழின, தலித்தியவாதிகள் பெரியாரிய, அம்பேத்கரியப் பார்வையை ஏற்றுக் கொண்டால்தான் தேசிய இன, சாதியப் பிரச்சினையை அணுகித் தீர்க்கும் “மண்ணுக்கேற்ப மார்க்சியம் இல்லையென்றால் மரபுவழி மார்க்சியம்” என்று அடாவடி பேசுகின்றனர்.

மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர். இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி பாசிச- பார்ப்பன சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!

சாத்தன்
புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999.