privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

-

மார்க்ஸ் பிறந்தார் – 3

(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

1. “கிளர்ச்சியற்ற மந்த நிலைமையின்” விலங்குகளில்

ஆ) ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

க்காலத்திய பிரஷ்ய அற்பவாதி கட்டுப்பாட்டின் மீது மோகம் கொண்டிருந்தார். மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தியின் மாடிவீடுகளில் – இராணுவ ரீதி, ஆன்மீக ரீதி ஆகிய இரண்டிலுமே- பயிற்சி பெற்ற அற்பவாதி பிரம்பின் மூலம் ஏற்படும் கட்டுப்பாட்டை உடனே ஏற்றுக் கொண்டார். உலகமே அதைப் பொறுத்திருக்கிறது என்று மனப்பூர்வமாக நம்பினும் பிரம்பின் மீது உண்மையிலேயே நாயைப் போன்ற பிரியம் அவருக்கு ஏற்பட்டிருந்தது; தன்னுடைய எசமான விசுவாசத்தை நிரூபிப்பதற்காக அதன் மீது கை வைத்த நபருடைய குரல்வளையைக் கடிப்பதற்குத் தயாராக இருந்தார். அவரே பிரம்பின் பாத்திரத்தை மனமுவந்து நிறைவேற்றினர். “கலவரம் செய்பவர்களைத்” தண்டித்தார்.

அற்பவாதி தன்னுடைய சொந்தப் புனிதத் தன்மை, தன்னுடைய நடத்தையின் குறை சொல்ல முடியாத ஒழுக்கத்தில் மிகவும் போதையடைந்திருப்பதால் எல்லோருக்கும் ‘ஒழுக்கத்தைப் போதிப்பது’ எல்லோரையும் சரியான பாதையில் இட்டுச் செல்வது தன்னுடைய புனிதமான கடமை என்று கருதுகிறார், ஒரு நபர் வசதியாக வாழ்க்கை நடத்த உதவி செய்யாத எப்பொருளைப் பற்றியும் அறியாதிருப்பது உயர்வுடையது என்று கருதுகிறார். அப்படியே அவர் தன்னுடைய சொந்த அறிவின்மையை மிகவும் உயர்வுடைய நற்பண்பு என்று அகம்பாவமான முறையில் பாராட்டுகிறார்.

இப்படிப்பட்ட ஒரு நபரை மார்க்ஸ் பின்வருமாறு வர்ணிக்கிறார்; நேற்று கிரைஃப்ஸ்வால்டிலிருந்து ஹாஸ்லே வந்தார். அவரைப் பொறுத்தமட்டில் கிராம மதகுருவைப் போல அவர் அணிந்திருக்கும் பெரிய பூட்ஸ்கள் நான் எப்பொழுதும் வியப்படைய செய்யும் ஒரே விஷயமாகும். அவர் கிராம மதகுருவின் பூட்ஸ்களைப் போலவே பேசினார், அவருக்கு எந்த விஷயத்தைப் பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை. அவர் களைப்புத் தருகின்ற கன்டெர்பெரி அன் ஸெல்மைப் பற்றி சில தொகுதிகளடங்கிய ஒரு நூலை வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார், அவர் பத்து வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார், இன்றுள்ள விமர்சனப் போக்கைத் தூக்கியெறிய வேண்டும் என்று நினைக்கிறார், மத உணர்வு என்பது வாழ்க்கை அனுபவத்தின் வெளியீடு என்று கருதுகிறார், அப்படிக் கூறும் பொழுது ஒரு வேளை குழந்தைகளை வெற்றிகரமாக வளர்ப்பதை மற்றும் அவருடைய பருத்த தொந்தியைக் குறிப்பிடுகிறார் போலும்; ஏனென்றால் பருத்த தொந்திகள் பலவிதமான அனுபவங்களுக்கு ஆளாகின்றன; கான்ட் சொல்வதைப் போல அது கீழே போனால் நயமற்ற செயல் ஆகிறது, அது மேலே போனால் மத ரீதியான அகத் தூண்டுதலாகிறது. மத மலச்சிக்கலைக் கொண்ட இந்த சமயவாதி ஹாஸ்ஸே என்ன மனிதர்!”(1)

காண்ட்

ஹாஸ்ஸே ரகத்தைச் சேர்ந்த அற்பவாதிகள் ஆர்ப்பாட்டமான சொற்பொழிவுகள் செய்வதை மிகவும் விரும்புகிறார்கள்; அவர்களுடைய இழிவான, வரையறுக்கப்பட்ட தேவைகளின் உலகத்தைத் ‘தலை மற்றும் இதயத்தின்’ தேவைகள் என்று கவனத்தைத் திருப்புவதற்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் போராட்டக்காரர்களைப் போல நடிப்பதையும் விரும்பாதவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் எப்பொழுதுமே “மரணமடையும் வரை’ போராடுபவர்களல்ல, ஆனால் வயிற்றுக்காகப்’ போராடுபவர்கள்.

அவர்களுடைய நட்சத்திரக் கனவுச் சிந்தனையின் ஒழுக்கங்கெட்ட தன்மையை உண்மையைத் தேடுகின்ற புத்தார்வக் கற்பனையான முயற்சி என்று ஏமாற்றுகின்ற பொழுது அவர்கள் சிந்தனையாளர்களைப் போல நடிக்க முயற்சிக்கின்றார்கள்; ஆனால் சாதாரணமாக “தெய்வச் செயல்’ என்பதற்கு மேல் அவர்களால் போக முடியவில்லை. அலுப்புத் தருகின்ற, சிறுதரமான செய்திகளிலும் “ஆன்மீக அறிவுரைகளைக்’ கொண்ட வீண் பேச்சுக்களிலும் தங்களுடைய அறிவு மந்தத்தை நயப்படுத்துகிறார்கள்.

ஆங்கில அறவியல்வாதியான ஜெரிமி பெந்தாம் (1748-1832) “அற்பவாதிகளின் தந்தை’’ என்று மார்க்ஸ் பெயரிட்டார். அவர் 19ம் நூற்றாண்டின் முதலாளி வர்க்க அறிவின் நிதானமான ஏட்டுப் புலமையும் தொணதொணக்கும் அசிரீரி போன்றவர், “முதலாளி வர்க்க முட்டாள்தனத்தின் மேதை”(2). தன்னுடைய சொந்த ஆணவ முன்னேற்றத்தை சமூகத்தில் “உபயோகமாகவுள்ள” அனைத்துக்கும் அளவுகோலாகக் கருதுகின்ற அற்பவாதியை முன்மாதிரியான மனிதன் என்று பெந்தாம் “வெகுளித்தனமான அறிவு மந்தத்தில்” பிரகடனம் செய்தார்.

‘கவிஞர்கள் மத்தியில் மார்ட்டின் டப்பருடைய இடத்தைத் தத்துவஞானிகள் மத்தியில் பெந்தாம் கொண்டிருக்கிறார்'(3) என்று மார்க்ஸ் மூலதனத்தில் எழுதினார். சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தின் அற்பவாத வட்டாரங்களில் மார்ட்டின் டப்பர் அதிகமான செல்வாக்குப் பெற்றிருந்தார். அவருடைய கவிதையின் ஆர்ப்பாட்டமான கொச்சைத் தனமும் போலியான ஆழமும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. மார்க்சின் புதல்வியர் மார்க்சிடம் 1865இல் சில வினாக்களுக்கு விடைகளே ஒப்புதல்களில் பதிவு செய்தார்கள். “நீங்கள் வெறுப்பது என்ன” என்று கேட்கப்பட்ட பொழுது “மார்ட்டின் டப்பர்”(4) என்று மார்க்ஸ் பதிலளித்தார். மார்க்சின் வாழ்க்கை முழுவதும் கூலி எழுத்தாளர்கள், திருட்டுத்தனமான அரசியல் சதிகாரர்கள், திறமையற்ற வாய்வீச்சுக்காரர்களைக் கொண்ட பெரும்கூட்டம் அவரை ஈவிரக்கமற்ற முறையில் சித்திரவதைச் செய்தது. அக்கூட்டத்திலிருந்து மார்க்ஸ் ஒரே ஒரு நபரை, தன்னுடன் தனிப்பட்ட முறையில் எத்தகைய சம்பந்தமும் இல்லாத ஒரு நபரின் பெயரைச் சிறிதும் குறிதவறாமல் மார்க்ஸ் தேர்ந்தெடுத்தார். அற்பவாதியின் கீழ்த்தரமான ஆசைகளுக்குத் தீனி போடுகின்ற மலிவான வெற்றியின், இலக்கிய ரீதியான அற்பவாதத்தின் உருவகம் என்று மார்ட்டின் டப்பரைப் பற்றி மார்க்ஸ் கருதினார்.

மார்ட்டின் டப்பர்

அத்தகைய அற்பவாதத் ‘தத்துவாசிரியர்’ “மேன்மையான, புனேவியலான, இலட்சிய வடிவமான” அனைத்தையும் வழிபாடு செய்கிறார், ‘கொச்சையான பொருள்முதல்வாதத்தை வெறுக்கிறார். பொருள்முதல்வாதம் என்ற சொல் பெருந்தீனி, மதுமயக்கம், காமவெறி, உடலின்பங்கள், ஆணவம், தன்னலம், கருமித்தனம், பேராசை, லாபவேட்டை, பங்குச் சந்தை மோசடிகளை – சுருக்கமாகச் சொல்வதென்றால் அவர் இரகசியமாக ஈடுபடுகின்ற இழிவான தீச்செயல்கள் அனைத்தையுமே குறிப்பதாக அற்பவாதி புரிந்து கொள்கிறார். “கருத்து முதல்வாதம்’’ என்ற சொல் நல்லனவற்றில் நம்பிக்கை, எல்லோருக்கும் பரோபகாரம், பொதுவான முறையில் “அதிகச் சிறப்பான உலகத்தில்’’ நம்பிக்கையைக் குறிப்பதாக அவர் புரிந்து கொண்டார். “அதிகச் சிறப்பான உலகத்தைப் பற்றி அவர் மற்றவர்களுக்கு முன்னால் செருக்காகப் பேசினாலும் அவர் கஷ்டப்படுகின்ற பொழுது அல்லது அவருக்கு வழக்கமான “பொருள்முதல்வாத” மிகைப் பழக்கங்களால் அவர் ஒட்டாண்டியாகிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் மட்டுமே அவர் அதன் மீது நம்பிக்கை வைக்கிறார், அப்பொழுது அவர் தனக்கு மிகவும் பிடித்தமான பாட்டைப் பாடுகிறார் ‘மனிதன் என்பவன் யார்?-பாதி மிருகம், பாதி தேவதை’ “(5) .

அற்பவாதியின் இந்தப் பாடலே மனத்தில் கொண்டுதான் ஹென்ரிஹ் ஹேய்னெ பின்வரும் கவிதையை எழுதியிருப்பாரோ?

நான் கெட்டவனல்ல, நல்லவனுமல்ல;
என்னிடம் வேகமில்லை, கணக்கமுமில்லை.
நான் நேற்று முன்னே சென்றால்,
நான் இன்று பின்னால் செல்வேன்.
ஒளி மிக்க மதவாதி நான்
பெண்குதிரையல்ல, ஆண்குதிரையுமல்ல;
ஸோஃபோக்ளிஸ், சாட்டை இருவருமே
என்னுடைய எழுச்சியின் ஊற்றுக்கள்.”(6)

“ஸோஃபோக்ளிசையும் சாட்டையையும்” தீவிரமாக நேசிக்கின்ற இவர்கள் மிகவும் உணர்ச்சிக் கனிவானவர்கள்! ‘பாட்டாளியை அருவருப்பான, கெட்டுப்போன கீழ்மகன் என்பதற்கு மாறாக வேறு எவ்விதத்திலும் பார்க்காத அதே அற்பவாதக் கொச்சைத்தனம், 1848 ஜூன் மாதத்தில் பாரிசில் நடைபெற்ற படு கொலைகளே – அவற்றில் மூவாயிரத்துக்கும் அதிகமான இந்தக் கீழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் – பற்றி திருப்தியுடன் கைகளைத் தேய்த்துக் கொள்வது, மிருகங்களை இரக்கமில்லாமல் நடத்துவதைத் தடுக்கின்ற உணர்ச்சிப் பசப்பான சங்கங்களைக் கேலி செய்வதைப் பற்றி ஆவேசமடைகின்ற அதே அற்பவாதக் கொச்சைத்தனம்”.(7) அற்பவாதத்துக்குப் பல முகங்கள் உண்டு என்பது உண்மையே. அது நயமான, பண்படுத்தப்பட்ட வடிவங்களை மேற்கொள்வதும் உண்டு; அப்பொழுது அதைச் சுலபமாக அடையாளங் காண முடியாது. அது நவீன ஒப்பனையைப் பின்பற்றி ஒவ்வொரு புதிய யுகத்திலும் தன்னுடைய உடையலங்காரத்தை மாற்றிக் கொள்கிறது.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மானிய சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் அற்பவாதம் உறுதியாக இடம்பெற்றிருந்தது. விஞ்ஞானம், கவிதை, அரசியலை அது கெடுத்திருந்தது.

ஆனால் அற்பவாத ஜெர்மனி மொத்த ஜெர்மனி அல்ல என்பது உண்மையே; பிறந்து கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்தின், “போலித் தந்தையர் நாட்டின் மீது சாபத்தை’ (ஹேய்னெ) நெய்து கொண்டிருந்த ‘சைலி ஸிய நெசவாளர்களின்” ஜெர்மனியும் இருந்தது. லேஸ்ஸிங், கேதே, கான்ட், ஃபிஹ்டே, ஹெகல் ஆகியோருடைய ஜெர்மனியும் இருந்தது. ஆனால் கேதே, ஹெகலைப் போன்ற மாபெரும் மேதைகள் தங்களுடைய காலத்துக்கு மேலே, அற்பவாதச் சதுப்புக்கு மேலே உயர்ந்து நின்றவர்கள் கூட அவ்வப்பொழுது அந்தச் சதுப்பில் சிக்கிக் கொண்டார்கள். ஆனால் “பூமியில் சொர்க்கத்தைப் படைப்பதைப்” பற்றி “புதிய பாடலைத் தொடங்கியவர்கள்’ அவர்களிடம் நம்பிக்கை வைத்தார்கள்.

ஹெகல்

1840க்களில், அதாவது சமூக நடவடிக்கைக் களத்தில் மார்க்சும் எங்கெல்சும் தோன்றிய காலத்தில் ஜெர்மனி “கிளர்ச்சியற்ற மந்த நிலைமையிலிருந்து’ வெளிவரத் தொடங்கியிருந்தது. ஜெர்மனி புரட்சியைச் சூல் கொண்டிருந்தது; ஜெர்மன் மூலச்சிறப்பான தத்துவஞானம் அதற்கு ஒரு வகையான தத்துவத் தயாரிப்பாக உதவியது.

ஹேய்னெ மிகவும் பொருத்தமாகக் கூறியதைப் போல அரசரின் தலையின் மேல் கில்லட்டின் விழுவதற்கு முன்பாக வொல்தேரினுடைய சிரிப்பு ஒலிக்க வேண்டியிருந்ததென்றல், பிரெஞ்சு சமூக உணர்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய மாண்டெஸ்கியே, ரூஸோ மற்றும் டிட்ரோவின் கருத்துக்கள் 18ம் நூற்றாண்டின் இறுதியில் அந்த நாட்டில் நடைபெற்ற அரசியல் புரட்சிக்கு முன்னர் வந்தன என்றால் அதே முறையில் கேதேயின் இருளடர்ந்த மெஃபிஸ்டோபிலியச் சிரிப்பும் கான்ட் ஹெகல் ஆகியோருடைய செறிவு மிக்க தத்துவக் கட்டுமானங்களும் ஜெர்மனியில் புரட்சி ஏற்படப் போகிறது என்று உலகத்துக்குப் பிரகடனம் செய்தன.

கான்ட்டின் தத்துவஞானம் ஒரு பக்கத்தில் பிரெஞ்சுப் புரட்சியின் கருத்துக்களிலும் மறு பக்கத்தில் அக்காலத்திய இயற்கை விஞ்ஞானத்தின் சாதனைகளினாலும் பேணி வளர்க்கப்பட்டது. அவருடைய பரந்த அறிவு பிரபஞ்சம் அனைத்தையுமே அறிவதற்கு, வானியல் மற்றும் கணிதம் முதல் அறவியல் மற்றும் அழகியல் முடிய, முந்திய காலச் சிந்தனை முன்வைத்த கேள்விகள் அனைத்துக்குமே விடைகளைத் தருவதற்கு முயற்சித்தது.

மனிதன் மற்ற இலட்சியங்களை அடைவதற்குச் சாதனம் அல்ல, அவன் சமூக வளர்ச்சியின் தன்னிலை முடிவு என்று ரூஸோ வழியில் கான்ட் அறிவித்தார். தற்செருக்கான, உடைமை நலன்களுடைய போராட்டத்துக்கு எதிராக தார்மிகக் கடமை என்ற தலைமையான அவசியத்தை அவர் முன்வைத்தார்: பகுத்தறிவின் ஆணைகளுக்குத் தக்க முறையில் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நட. மக்கள் அதிகாரம் சுயேச்சையானது மற்றும் சட்டத்தின் முன்னிலையில் எல்லோரும் சமம் என்ற கருத்துக்களே அவர் வளர்த்துக் கூறினார்.

ரூஸோ

கான்ட் மனிதனுடைய அறிவை, புரிந்து கொள்வதற்கும் படைப்பதற்கும் அவனுடைய திறமையை தத்துவஞான ஆராய்ச்சியின் மையப் பொருளாக வைத்தார். சிந்தனை பற்றிய எதேச்சாதிகார-மத அமைப்பின் விலங்குகளிலிருந்து அவர் சந்தேகம் என்ற ஆவியை – “கடவுளால் வழங்கப்பட்ட” உண்மைகளின் முடிவான மற்றும் தனிமுதலான தன்மை பற்றி சந்தேகம், முழுமையான மற்றும் அகல்விரிவான அறிவை நாம் என்றேனும் அடைவதற்குரிய திறமையைப் பற்றி சந்தேகம்-விடுதலை செய்து வெளியே அனுப்பினார்.

அறிய முடியாத ‘’தன்னிலைப் பொருள்களுடன்” கான்ட் கடவுளையும் சேர்த்தார்; அதன் மூலம் ஜெர்மனியில் மதத்தைப் பற்றிய தத்துவஞான விமர்சனத்துக்கு அடிப்படை அமைத்தார். ஆனால் கான்ட்டிடம் அதிகமான துணிச்சலேயோ அல்லது குறையில்லாத சிந்தனைத் தொடர்ச்சியையோ நாம் அநேகமாகக் காண முடியாது. அவர் தத்துவத் துறையில் கூட பிறவிப் புரட்சிக்காரர் அல்ல. ஓர் அடி முன்னே வைக்கும் பொழுது அவர் எப்பொழுதுமே பின்னால் பார்த்துக் கொள்வார். பிரெஞ்சுப் புரட்சியினாலும் இயற்கை விஞ்ஞானங்களில் ஏற்பட்ட புரட்சியினாலும் தூண்டிவிடப்பட்ட மேதா விலாசம் நிறைந்த கருத்துக்களை ஜெர்மன் தத்துவஞானத்துக்குள் இரகசியமாக, “பின் கதவின்’’ வழியாகக் கொண்டு வருவதற்கு, குறுகிய மனப்பான்மை கொண்ட ஜெர்மன் அற்பவாதிக்கு அதிர்ச்சியளிக்காத வடிவத்தில் அவற்றை எடுத்துக் கூறுவதற்கு அவர் முயற்சி செய்தார். கான்ட் தன்னிடத்தில் முதலாளி வர்க்க மிதவாதியையும் முடியாட்சிவாதியையும், ஐயுறவுவாதியையும், பகுத்தறிவுவாதியையும், பொருள்முதல்வாதியையும், கருத்துமுதல்வாதியையும், நாத்திகவாதியையும் மதத்துக்கு நாகரிகமாக ஆதரவளிப்பவரையும் மிகவும் நம்ப முடியாத விதத்தில் ஒன்று சேர்த்திருந்தார்.

கான்ட்டின் குறைகளை, அவருடைய அரை மனசுத் தன்மை, முன் ஜாக்கிரதை ஆகியவற்றைப் பரிகாசம் செய்த ஹேய்னெ இந்த “சிந்தனை உலகத்தை அழிப்பவரை” பிரெஞ்சு ஜாக்கொபின்வாதிகளின் தலைவரான மக்சிமிலியான் ரொபெஸ்பியேருடன- பிரெஞ்சுப் பிரபுக்களைப் பயமுறுத்துவதற்கு அவருடைய பெயரை உச்சரித்தால் போதும்- ஒப்பிட்டார். மற்றவை எப்படியிருந்தாலும் அவர்களிடத்தில் பொதுவான சில குணாம்சங்கள் இருப்பதை ஹேய்னெ கண்டறிந்தார். முதலாவதாகவும் முதன்மையாகவும் அதே உறுதியான, சமரசம் செய்யாத, உணர்ச்சியற்ற, நிதானமான நேர்மை. இதைத் தவிர இருவரிடமும் எதையும் ‘நம்ப மறுக்கும் திறமை’ இருக்கிறது. ஒரே வேறுபாடு என்னவென்றால் ஒருவர் அதைக் கருத்துக்களுக்குக் கையாண்டு விமர்சனம் என்று பெயரிட்டார், அடுத்தவர் அதை மனிதர்களுக்குக் கையாண்டு குடியரசுவாத நற்பண்பு என்று பெயரிட்டார். முடிவில் ‘இருவரிடமும் அற்பவாத வரிச் சட்டம் மிகவும் அதிகமான அளவுக்கு இடம் பெற்றிருந்தது- அவர்கள் காபிக் கொட்டைகளையும் ஜீனியையும் நிறுத்துக் கொடுக்க வேண்டுமென்று இயற்கை முடிவு செய்திருந்தது; ஆனால் அவர்கள் மற்றவற்றை நிறுத்த வேண்டுமென்று விதி கட்டளையிட்டது; அவர்களுடைய தராசுகளில், ஒருவருடைய தட்டில் அரசரையும் அடுத்தவருடைய தட்டில் கடவுளையும் வைத்தது….”(8) ரொபெஸ்பியேரைப் பொறுத்தமட்டில் ஒரு வேளை இது மிகவும் வன்மையானதாக இருக்கலாம்; ஆனால் ஒரு கையில் கடவுளுக்கு “மரண தண்டனையையும்’ மறு கையில் “மன்னிப்பையும்’ வைத்துக் கொண்டிருக்கும் கான்ட்டுக்கு இது மிகச் சரியானதே.

ஹேய்னெ பின்வரும் காட்சியை வேடிக்கையான முறையில் சித்தரிக்கிறார். அதில் சோகநாடகத்துக்குப் பிறகு கேலிக்கூத்து தொடர்கிறது. முதலில் இம்மனுயேல் கான்ட் இரக்கமேயில்லாத தத்துவஞானியாக நடிக்கிறார். அவர் விண்ணேச் சாடுகிறார், மொத்தக் காவற்படையையும் வாளுக்கு இரையாக்குகிறார், கடவுள் இருக்கிறார் என்கின்ற எல்லா வாதங்களையும் தவிடு பொடியாக்குகிறார். உலகத்தின் கர்த்தா வான கடவுள் இப்பொழுது மறுக்கப்பட்டு, தன் உடலிலிருந்து பெருகும் இரத்த வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கிறார். எல்லோரிடமும் கருணை காட்டிய கடவுள் இனிமேல் கிடையாது, தகப்பனாருக்குரிய அன்பு இல்லை, இந்த உலகத்தில் சுய தவிர்ப்புக்காக மறு உலகத்தில் வெகுமதி இல்லை. அழியாத ஆன்மா அதன் கடைசியான வேதனையில் மூச்சுத் திணறிப் புலம்பிக் கொண்டிருக்கிறது……

கிழவன் என்பவர் காண்ட் அவர்களின் பனியாள் லாம்ப்பெ (இடது ஓரம் உள்ளவர்)

கிழவன் லாம்ப்பெ, கான்ட்டின் விசுவாசமிக்க ஊழியன், வாழ்நாள் முழுவதும் பேராசியருக்குப் பின்னால் அவருடைய குடையைத் தூக்கிக் கொண்டு போனவன். அவன் அங்கே நடைபெற்ற அனைத்தையும் பீதியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் முகத்திலிருந்து வியர்வையும் கண்ணீர்த் துளிகளும் விழுந்து கொண்டிருக்கின்றன.

இம்மனுவேல் கான்ட் இதைக் கண்டு அனுதாபப்படுகிறார்; தான் ஒரு மாபெரும் தத்துவஞானி மட்டுமல்ல, அன்புமிக்கவர் என்பதை எடுத்துக்காட்டுகிறார், அவர் சிந்திக்கிறார், பாதி நல்லெண்ணத்துடனும் பாதி பரிகாசத்துடனும் பேசுகிறார்: ‘’கிழவன் லாம்ப்பெக்கு ஒரு கடவுள் அவசியம். இல்லாவிட்டால் அந்த ஏழை மனிதன் மகிழ்ச்சியோடிருக்க மாட்டான்; ஆனால் பூமியில் மனிதன் மகிழ்ச்சியோடிருக்க வேண்டும்- அதாவது செய்முறைப் பகுத்தறிவுக்குத் தகுந்தவாறு; மிகவும் சரி, செய்முறைப் பகுத்தறிவு கடவுள் இருக்கட்டும் என்று உத்தரவிடட்டும்.”(9)

கான்ட்டின் தத்துவஞான முடிவுகளில் கூட அவருக்குள்ளிருந்த அற்பவாதியின் கை மேலோங்கியிருந்தாலும் அவருடைய எழுத்துக்களில் இருந்த விமர்சன உணர்ச்சி ஜெர்மனியில் மாபெரும் அறிவுக் கிளர்ச்சியைத் தூண்டியது: அந்த அறிவுக் கிளர்ச்சி ஃபிஹ்டே, ஷேல்லிங், குறிப்பாக ஹெகலின் தத்துவஞானத்தில் நிறைவடைந்தது. கான்ட் தொடங்கிய தத்துவஞானப் புரட்சியை ஹெகல் அதன் தர்க்க ரீதியான முடிவுக்குக் கொண்டு வந்தார். அவருடைய எழுத்துக்களிலடங்கிய தத்துவச் சிந்தனையின் விமர்சனச் சக்தி அவரால் வளர்க்கப்பட்ட இயக்கவியல் முறையின் உதவியுடன் வன்மையான ஆயுதத்தைப் பெற்றது. எந்தத் தத்துவ ரீதியான வறட்டுச் சூத்திரம் தனிமுதலானது, அழிக்கப்பட முடியாதது என்ற கருத்தை -அதே சமயத்தில் எந்தச் சமூக அமைப்பும் அழிக்கப்பட முடியாதது, நிரந்தரமானது என்பதையும் ஹெகலிய இயக்கவியல் உறுதியாக மறுத்தது. ஹெகலினால் வளர்க்கப்பட்ட இயக்கவியல் தத்துவஞானத்தை வர்ணிக்கின்ற பொழுது, அது ஒன்றையுமே முடிவானதாக, புனிதமானதாகக் கருதவில்லை என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டார். “அது ஒவ்வொன்றின், ஒவ்வொன்றிலுமுள்ள தற்காலிகத் தன்மையை வெளிப்படுத்துகிறது.”(10)

“மெய்யானவை ஒவ்வொன்றும் அறிவு பூர்வமானது; அறிவு பூர்வமானவை அனைத்தும் மெய்யானவை’’ என்பது ஹெகலின் பிரபலமான ஆய்வுரையாகும். மனிதகுல வரலாற்றுக் களத்தில் மெய்யானவை ஒவ்வொன்றுமே காலப்போக்கில் பகுத்தறிவுக்கு முரணாகி விடுவதால் அவை புரட்சியினால் ஒழிக்கப்படுவதற்குரிய நிலையை அடைகின்றன என்ற பொருளில் மேற்கூறிய ஆய்வுரையை விளக்க முடியும். ஹென்ரிஹ் ஹேய்னெ மாபெரும் கவிஞர் மட்டுமல்ல, அவர் ஒரு ஆழமான தத்துவஞானியாகவும் இருந்தார். அவர் ஹெகலிடம் தத்துவஞானத்தைப் பயின்றவர். ஹெகல் தன்னுடைய இயக்கவியல் கட்டுமானங்களே அமைத்துக் கொண்டிருந்த பொழுது “இசையமைப்பாளருக்குப் பின்னால்” அவர் எப்படி நின்று கொண்டிருந்தார்’ என்பதை அவர் வர்ணித்தார்.

உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக அவர் அதை மிகவும் தெளிவில்லாத, செயற்கையான முறைகளில் எழுதினார். யாராவது அதைப் புரிந்து கொண்டு விடலாமோ என்ற அச்சத்தில் அவர் சில சமயங்களில் கவலையோடு சுற்றுமுற்றும் பார்ப்பதை நான் கண்டிருக்கிறேன். அவருக்கு என்னிடத்தில் அதிகமான பிரியம், ஏனென்றால் நான் அவருக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாக நம்பினார், அந்தச் சமயத்தில் அவர் அடிமைப் புத்தி உடையவர் என்று கூட நான் நினைத்தேன். ஒரு நாள் மெய்யானவை ஒவ்வொன்றும் அறிவு பூர்வமானது என்ற சொற்களை நான் ஆட்சேபித்த பொழுது அவர் விசித்திரமான முறையில் சிரித்தார்: “அறிவு பூர்வமானவை அனைத்தும் மெய்யானவை” என்றும் அதற்குப் பொருள் காணலாம்” என்றார், அவர் அவசரமாகச் சுற்று முற்றும் பார்த்தார், ஆனால் சீக்கிரத்திலேயே அமைதியடைந்தார். ஏனென்றால் அவர் கூறியதை ஹென்ரிஹ் பெர் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தார். நான் இந்த அணியலங்காரங்களைப் பிற்காலத்தில்தான் புரிந்து கொண்டேன். கிறிஸ்துவ சமயம் முற்போக்கானது, ஏனென்றால் அது மரணமடைந்த கடவுளைப் பற்றி போதிக்கிறது, ஆனால் புறச்சமய வழிபாட்டில் கடவுள்களுக்கு மரணத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்று வரலாற்றுத் தத்துவஞானத்தில் அவர் ஏன் கூறினார் என்பதையும் நான் பிற்காலத்தில் தான் புரிந்து கொண்டேன். ஆகவே கடவுள் இருக்கவில்லை என்றால் அது எத்தகைய முன்னேற்றமாக இருந்திருக்கும்!”

ஃபாவுஸ்டு நாடகத்தில் வருகின்ற மெஃபிஸ் டோபிலேப் போல ஹெகல் கூறியிருக்க முடியும்: “மென்மேலும் அதிகமாக மறுக்கின்ற ஆன்மா நான், அது மிகச் சரியே-ஏனென்றால் தோன்றியவை அனைத்துமே அழியக் கடவன.”

ஆனால் ஹெகல் தன்னுடைய இயக்கவியலிருந்து உலகைக் குலுக்குகின்ற ”மெஃபிஸ் டோபிலிய” முடிவுகளைப் பெறவில்லை. அவர் மிக அதிகமான அளவுக்கு கெளரவமான குடிமகனாகவும் பிரஷ்ய அரசரின் விசுவாசமான ஊழியனாகவும் இருந்தார். கான்ட்டைப் போல ஹெகல் விஞ்ஞானத்தில் அற்பவாதியாக இருந்தார். அவர் இயக்கவியல் என்ற வாளை உறையிலிருந்து வெளியே எடுத்தார்; அதை உடனடியாகத் தன்னுடைய அமைப்பு என்னும் துருப்பிடித்த உறைக்குள் மறைத்துவிட்டார். உறையை உயர்த்தி உதடுகளில் முத்தமிட்டார், தன்னுடைய அரசரான மூன்றாவது பிரெடெரிக் வில்ஹெல்முக்கு முன்னால் ‘வீரப்பெருந்தகைமையுடன்’ முழந்தாளிட்டு பிரபலமான இரவுத் தொப்பி அணிந்திருக்கும் தன் தலையையும் குனிந்து வணங்கினார், அதற்காக அரசாங்கத் தத்துவஞானி என்ற பட்டத்தையும் பெற்றார்.

மூலச்சிறப்பான ஜெர்மானியத் தத்துவஞானப் பாரம்பரியத்திலிருந்து “புரட்சியின் இயற்கணிதத்தைப்” படைப்பதற்கு – அந்த வார்த்தைகளின் உண்மையான பொருளில் மற்ற தலைகள், மற்ற குணாம்சங்கள் அவசியமாக இருந்தன. பழைய சமூகத்தின் அற்பவாத விலங்குகள் அனைத்திலிருந்தும் விடுதலையடைந்தவர்கள், தங்கள் காலத்துக்கு மேல் உயர்ந்து நின்றவர்கள், தங்களுடைய சொந்தச் சிந்தனையின் விளைவுகளைக் கண்டு அஞ்சாதவர்கள்,அவற்றைத் துணிவுடன் செயல்படுத்தக் கூடியவர்கள், விஞ்ஞானத்துக்கு மாறா உறுதிப்பாடும் புரட்சிக்கு விசுவாசமுமே ஒரே உறுதியாகக் கொண்டவர்கள் அப்படிப்பட்டவர்கள்.

மாபெரும் மனிதர்கள் அவர்களுடைய மாபெரும் நடவடிக்கைகளுக்கு நிலைமைகள் முதிர்ச்சி அடைந்திருக்கும் இடங்களில், நேரங்களில் தோன்றுகிறார்கள். ஹெகல் மரணமடைந்த வருடத்தில் கார்ல் மார்க்ஸ் என்ற பதின்மூன்று வயதுச் சிறுவன் டிரியர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அந்த நகரத்துக்குப் பக்கத்திலுள்ள பார்மன் என்ற இடத்தில் பதினொன்று வயதான பிரெடெரிக் எங்கெல்ஸ் வசித்தார்.

அவர்கள் இருவரும் பிறப்பால் ரைன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இது முற்றிலும் தற்செயலான நிகழ்வுதானா?

ரைன் பிரதேசம் இரண்டு மாபெரும் பண்பாடுகளின்-ஜெர்மானிய, பிரெஞ்சுப் பண்பாடுகளின்-தாக்கத்துக்கு உட்பட்டிருந்தது. நெப்போலியன் காலத்தில் அது பிரான்சின் ஒரு பகுதியாகக் கூட ஆயிற்று. ஜெர்மனியின் மற்ற பகுதிகளைப் போலல்லாமல் அங்கே நிலப்பிரபுத்துவ மரபுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டிருந்தன.

ஆனால் ரைன் பிரதேசம் பிற்போக்கான பிரஷ்ய எதேச்சாதிகாரத்தின் ஆட்சிக்குள் வந்த பொழுது அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மிக அதிகமாக ஏமாற்றமடைந்தார்கள். வேறுபாடு பளிச்சென்று தெரிந்தது! ரைன் பிரதேசத்தில் சில அரசு அதிகாரிகள் கூட மிதவாத மற்றும் தீவிரவாதக் கருத்துக்களைப் பேசியது இயற்கையே.

அண்டை நாடாகிய பிரான்சைக் குலுக்கிக் கொண்டிருந்த புரட்சிகரமான புயல்களின் இடியோசை ரைன் பிரதேசத்தில் மிகவும் தெளிவாகக் கேட்டது. பிரெஞ்சுப் பொருள்முதல்வாதம் மற்றும் அறிவியக்கத்தின் கருத்துக்கள் ரைன் பிரதேசத்தின் மூலமாக ஜெர்மனிக்குள் வந்து கொண்டிருந்தன. மற்ற எல்லா இடங்களைக் காட்டிலும் அதிக இயற்கையான முறையில் இங்கே மூலச்சிறப்பான ஜெர்மன் தத்துவஞானக் கருத்துக்கள் கற்பனாவாத சோஷலிச (குறிப்பாக சான்-சிமோனின்) கருத்துக்களுடன் மோதிக் கொண்டன. உணர்ச்சிமிக்க, கற்பனையான கவிதை, மத்திய காலத்தின் அரசகுலக் காதற் கதைகள், மாதாகோவில் இசை ஆகியவற்றில் வளர்க்கப்பட்ட ஜெர்மானியர்களுடைய சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளின் மீது அண்டை நாட்டின் நகைச்சுவையான, பரிகாசமான கலை புத்துணர்வூட்டுகின்ற தாக்கத்தைக் கொண்டிருந்தது.

இவை தவிர, ஜெர்மனியிலேயே அதிகமாக வளர்ச்சியடைந்த, பல்வகையான தொழில்துறை ரைன் பிரதேசத்தில் இருந்தது. எனவே அங்கே பழைய சமூகத்துக்குப் “புதைகுழி தோண்டுகின்ற” தொழில்துறைப் பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது.

இல்லை, ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ், எங்கெல்ஸ் பிறந்தது தற்செயலானதல்ல.

குறிப்புகள் :
(1) Marx, Engels, Collected Works, Vol. 1, Moscow, 1975, pp. 387-88.
(2) ” K. Marx, Capital, Vol. 1, p. 571,
(3)  Ibid.
(4) Reminiscences of Marx and Engels, Moscow, 1957, p. 266,
(5)  Karl Marx and Frederick Engels, Selected Works, in three volumes, Vol. 3, Moscow, 1976, p. 353.
(6)  The Works of Heinrich Heine, New Poems, Vol. 10, London, 1904, p. 189.
(7)Marx, Engels, Collected Works, Vol. 10, Moscow, 1978, p.242.
(8)s Heinrich Heine, Works of Prose, New York, 1943, p. 198.
(9)Heinrich Heine, Works of Prose, p. 200.
(10)Karl Marx and Frederick Engels, Selected Works, in three volumes, Vol. 3, p. 339.

  • கில்லட்டின் (guilotine) – மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சிரச்சேதம் செய்வதற்குப் பிரான்சில் மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியின் போது உபயோகிக்கப்பட்ட இயந்திரம் டாக்டர் கியோட்டேன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. – மொ-ர்,

– தொடரும்


நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகத்துக்கு இந்த சுட்டியை சொடுக்கவும் :