privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கஇந்தித் திணிப்பு : பிரிவினைவாதி மோடி !

இந்தித் திணிப்பு : பிரிவினைவாதி மோடி !

-

மைய அரசின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக இருந்துவரும் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தியை ஒற்றை ஆட்சிமொழியாகக் கொண்டுவருவது; தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய ஆதாரமான துறைகளில் இந்தி ஆதிக்கத்தைத் திணிப்பது எனும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளுக்கு அரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அவற்றை நாடாளுமன்றம் உள்ளிட்டு மைய அரசின் துறைகளுக்கும், மாநில அரசுகளுக்கும் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்திருக்கிறது, மோடி அரசு.

1950-இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சாசனம், அடுத்த பதினைந்து ஆண்டுகளில் (1965-இல்) ஆங்கிலத்தை அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதை அகற்றிவிட்டு, இந்தியை மட்டும் அலுவல் மொழியாக்கப் பரிந்துரைத்தது. இந்த அடிப்படையில் அன்றிருந்த நேரு அரசாங்கம் இந்தியை மைய அரசின் ஒரே அலுவல் மொழியாக அறிவிக்க முயன்றதையடுத்துதான், தமிழகத்தில் மொழிப் போராட்டம் வெடித்தது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் நேரு அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்தன. மொழிப் போரில் தமிழக இளைஞர்களும் மாணவர்களும் செய்த தியாகத்தின் விளைவாகத்தான், “இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றும்வரை, இந்தியோடு, ஆங்கிலமும் மைய அரசின் அலுவல் மொழியாகத் தொடரும்” என்ற திருத்தம் இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டது.

இத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நாள் தொடங்கியே அதனைச் சிறுகச்சிறுகக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை மைய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்காகவே, மைய அரசின் அலுவல் மொழி தொடர்பான சட்டத்தின்கீழ் இந்தியை ஊக்குவிப்பதற்கான நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு, அக்குழு பல்வேறு பரிந்துரைகளை ஒன்றன்பின் ஒன்றாக அளித்து வருகிறது. இப்பொழுது அரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிருக்கும் பரிந்துரைகள், அக்கமிட்டி அளித்திருக்கும் ஒன்பதாவது அறிக்கையாகும்.

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தித் திணிப்பு.

இந்தியைத் திணிப்பதில் காங்கிரசு எட்டடி பாய்ந்தால், பா.ஜ.க. பதினாறு அடி பாயும். மேலும், இந்து மதவெறிக் கும்பலுக்கு நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்தியைத் திணிக்கும் கயமைத்தனங்களைப் பதவியேற்றவுடனே தொடங்கிவிட்டது மோடி அரசு. மைய அரசு அதிகாரிகள் தமது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், மைய அரசின் கோப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இந்தியிலும் தயாரிக்கப்பட வேண்டும் என அடுத்தடுத்து உத்தரவுகளை இட்ட பா.ஜ.க. அரசு, மைய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இந்திப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான கமிட்டிகளை அமைத்தது. தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியைத் திணித்த மோடி அரசு, அதற்கு எதிரான எதிர்வினைகள் அடங்கும் முன்பே, நாடு தழுவிய அளவில் இந்தியை மென்மேலும் வலுக்கட்டாயமாகத் திணிப்பது தொடர்பான 110 பரிந்துரைகளை வெளியிட்டிருக்கிறது.

  • இந்தி மொழியைப் பாடத் திட்டங்களில் கட்டாயமாக்குவது தொடர்பாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் முதல்கட்டமாக, மைய அரசு பாட வாரியத்தின்கீழ் இயங்கும் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகள் மற்றும் மைய அரசு நேரடியாக நடத்திவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அனைத்திலும் பத்தாம் வகுப்பு முடிய இந்தி மொழி பயிலுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

  • அனைத்திந்திய அளவில் இந்தியைக் கட்டாய மொழிப்பாடம் ஆக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திட்டங்கள் வைக்கப்பட வேண்டும்.

  • மாநில அரசுகள் நடத்தும் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய மொழிப் பாடமாக்குவது தொடர்பாக மாநில அரசுகளோடு மைய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்.

  • பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தி வழி வகுப்புகளைத் தொடங்குவதற்கான செயல் திட்டத்தை வகுப்பதோடு, அதற்கேற்ப நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • இந்தி பேசாத மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியில் தேர்வு எழுதவும், நேர்முகத் தேர்வுகளை நடத்தவும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

  • மைய அரசு நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களில் ஐம்பது சதவீதம் இந்தி மொழியிலும் மீதமுள்ள 50 சதவீதம் ஆங்கிலம் அல்லது பிராந்திய மொழிகளிலும் இருக்க வேண்டும்.

  • இந்தி மொழி விளம்பரங்களை செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும், ஆங்கில மொழி விளம்பரங்களை உட்பக்கங்களில் வெளியிட வேண்டும்.

  • குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் இந்தி மொழியைப் படிக்கவும், பேசவும் அறிந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் இந்தி மொழியில் மட்டுமே பேசவும், இந்தி மொழியில் மட்டுமே அறிக்கைகளை வெளியிடவும் வேண்டும்.

இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழக மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய மொழிப் போர். (கோப்புப் படம்)

இவை தவிர, மைய அரசின் ரயில்வே துறை, விமான போக்குவரத்துத் துறை, வெளியுறவுத் துறை ஆகியவற்றில் இந்திப் பயன்படுத்தப்படுவதை அதிகரிப்பதற்குப் பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த 117 பரிந்துரைகளுள் 110 பரிந்துரைகளுக்கு அரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருக்கிறார். மீதமுள்ள ஏழு பரிந்துரைகள் அவராலேயே நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்றால், அவை எத்துணை கொடூர இந்தி ஆதிக்கச் சிந்தனையைக் கொண்டிருக்கும்?

நிராகரிக்கப்பட்ட பரிந்துரைகளுள் ஒன்று, நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்தைச் சதித்தனமான முறையில் முன்வைக்கிறது. மற்றொன்று, நாடெங்கும் இந்தி வழி கல்விக்கூடங்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் பிராந்திய மொழிகளுக்கோ, இந்திக்கோ முன்னுரிமை அளிக்காத ஆங்கில வழி பள்ளிக்கூடங்களுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்கிறது. வேறொன்று, இந்தி மொழியைப் பயன்படுத்தாக மைய அரசு ஊழியர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறது.

தமிழைப் பயிற்று மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாகக் கொண்டுவர வேண்டும், அதற்கான அங்கீகாரம் தமிழுக்கு அளிக்கப்பட வேண்டும் எனத் தமிழகத்தில் கோரிக்கைகளும், அதற்கான போராட்டங்களும் நடந்துவரும் நிலையில், அதனையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், தமிழை இரண்டாம், மூன்றாம் நிலைக்குத் தள்ளக்கூடிய இப்பரிந்துரைகளைத் தமிழகத்தின் மீது திணித்துவிட முயற்சிக்கிறது, மோடி அரசு. தமிழகத்தின் பள்ளிக் கல்வியில் தமிழ் மொழி ஏற்கெனவே இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழை ஒரு மொழிப் பாடமாகக்கூடப் படிக்காமல் உயர் கல்வியை முடித்துவிடக் கூடிய அவலமான நிலை தமிழகத்தில் நிலவிவரும் நிலையில், மோடி அரசு அளித்துள்ள பரிந்துரைகள் எதிர்காலத்தில் தமிழுக்குப் பெருங்கேட்டினையே ஏற்படுத்தும்.

தமிழை, சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக அங்கீகரிக்கக் கோரி உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்தினுள் நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்கும் தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வு, முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு ரத்து, ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்துவதன் மூலம் விற்பனை வரியை விதிக்கவும், வசூலிக்கவும் இதுகாறும் தமிழக அரசிற்கு இருந்துவந்த உரிமை பறிப்பு, ரேஷன் கடையில் அரிசி, பருப்பு வழங்குவதற்குக்கூட மைய அரசின் அனுமதி தேவை என்ற இழிநிலை – இப்படித் தமிழக அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டுவரும் வேளையில், தமிழக மக்களை இரண்டாம்தர குடிமக்களாக, தமிழை இந்தி ஆதிக்கத்திற்கு அடிபணிந்து கிடக்கும் குற்றேவல் மொழியாக மாற்றும் தீய நோக்கத்தோடு இந்தி-இந்துவெறி பிடித்த மோடி அரசு இப்பரிந்துரைகளைத் தமிழகத்தின் மீது சுமத்தியிருக்கிறது.

தமிழ், தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தி பேசாத மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, பஞ்சாப், மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களை, பெரும்பான்மையான மக்களை, அம்மக்களின் தாய்மொழிகளை இரண்டாம்தர நிலைக்குத் தள்ளும் அபாயகரமான சதித் திட்டம்தான் இப்பரிந்துரைகள். ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒரே சந்தை என்ற இந்து மதவெறிக் கும்பலின் பேராசையின் நீட்சியாகத்தான் இந்தியை முதன்மைப்படுத்தும் இப்பரிந்துரைகள் கொண்டுவரப்படுகின்றன.

நாடு தழுவிய அளவில் இந்தியைத் திணிக்கும் இப்பரிந்துரைகள், தி.மு.க.வும் பங்கு பெற்றிருந்த காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன. அதனைக் காரணமாகக் காட்டி, வேறு வழியில்லாமல்தான் இப்பரிந்துரைகளை மோடி அரசு நடைமுறைப்படுத்துவதாகக் கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது, இந்து மதவெறிக் கும்பல். இந்த வாதம் மிகப்பெரிய மோசடி, பார்ப்பனக் களவாணித்தனத்தின் வெளிப்பாடு.

காங்கிரசு இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் எனத் தேர்தலுக்குத் தேர்தல் முழக்கமிடும் மோடி, முந்தைய காங்கிரசு அரசால் உருவாக்கப்பட்ட இப்பரிந்துரைகளைக் கைவிட மறுப்பதேன்? திட்டக் கமிசன் உள்ளிட்டு காங்கிரசால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை, திட்டங்களைக் கைகழுவிவரும் மோடி அரசு, காங்கிரசால் உருவாக்கப்பட்ட இப்பரிந்துரைகளை, மன்மோகன் சிங் அரசுகூட நடைமுறைப்படுத்த்த் துணியாத இப்பரிந்துரைகளை நிறைவேற்றத் துடிப்பதேன்?

மொழிப் போர் தியாகிகளை நினைவுகூர்ந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் மக்களை கலை இலக்கியக் கழகமும் இணைந்து சென்னையில் நடத்திய பேரணி. (கோப்புப் படம்)

காரணம், அனைவரும் அறிந்ததுதான். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதன் புத்தி போகாது என்பார்களே, அதுபோலத்தான் பா.ஜ.க.வும். மாநில உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர் மோடி என அதன் சுயதம்பட்டமெல்லாம் மோசடியானது. உச்சி முதல் உள்ளங்கால் வரை இந்து-இந்தி, ஆரிய பார்ப்பன மேலாதிக்கம், சமஸ்கிருத வெறி கொண்டதுதான் அக்கட்சி. ஆட்சியைப் பிடித்தவுடன், ஆசிரியர் தினத்தை “குரு உத்ஸ்வ்’’ என சமஸ்கிருத மொழியில் மாற்றியது ஒன்றே அக்கட்சியின் ஆரிய பார்ப்பன வெறியை அம்பலப்படுத்திவிட்டது.

பல்வேறு தேசிய இனங்கள், மதச் சிறுபான்மையினர், பல்வேறு மொழிகள், பண்பாடு எனப் பன்முகம் கொண்டிருக்கும் இந்திய நாட்டை, இந்து-இந்தி-இந்தியா என்ற அடிப்படையில் ஒற்றைத் தேசமாக வலுக்கட்டாயமாக மாற்றியமைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிஸ்டுகளின் இலட்சியம். அந்த அடிப்படையில்தான், பசுவதைச் சட்டத்தை நாடெங்கும் கொண்டுவர வேண்டுமெனத் துடிக்கிறார்கள். சமஸ்கிருதமயமான இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக மட்டுமல்ல, தேசிய மொழியாகவும் அறிவித்துவிட முயலுகிறார்கள். நாடெங்கும் ஒரே சமயத்தில் ஒரே தேர்தல் என்ற மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள். அரசியல் சாசனச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின்கீழ் காஷ்மீருக்கு  அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு உரிமையை மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கு கல்வி, சுகாதாரம், பொது விநியோகம், வரி வசூலிப்பு உள்ளிட்ட துறைகளில் அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளையும் பறித்து, இந்திய யூனியன் என்பதைச் சட்டபூர்வமாகவே அழித்து, இந்தியாவில் ஒற்றையாட்சி முறையை ஏற்படுத்திவிடவும் திட்டமிடுகிறார்கள்.

இப்பார்ப்பன பாசிச நோக்கங்களை நிறைவேற்றுவதில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே உள்ள வேறுபாடு, விஷத்தைப் பாலில் கலந்து நைச்சியமாகக் கொடுப்பதா, அல்லது நேரடியாக வாயில் ஊற்றுவதா என்பதுதான். மேலும், இந்தியாவை ஆரிய பார்ப்பன தேசமாக உருவாக்குவது இந்த தேசியக் கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசனச் சட்டமே இந்து-இந்தி-இந்தியாவை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டிருக்கிறது. பசுவதைச் சட்டத்தைக் கொண்டுவருவது, இந்தியை ஆட்சி மொழியாகத் திணிப்பது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பறிப்பது, கோயில் கருவறையில் சூத்திரச் சாதியினர் நுழைவதைத் தடை செய்வது – என பார்ப்பன பாசிஸ்டுகளின் நோக்கத்தை, மேலாதிக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டுதான் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

“வேற்றுமையில் ஒற்றுமை”யாக இருந்துவரும் இந்தியாவை உடைக்க “பிரிவினைவாதிகள்”, “பாக். கைக்கூலி”களெல்லாம் தேவையில்லை. அந்த வேலையை மோடி அண்ட் கம்பெனியே சுறுசுறுப்பாகச் செய்து வருகிறது. தமது இந்து-இந்தி-இந்தியா திட்டத்தின் மூலம், அரசியல் சாசனத்தின் துணையோடு!

-குப்பன் 

புதிய ஜனநாயகம், மே 2017