privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்டாஸ்மாக் உடைப்புப் போராட்டங்கள் : மக்கள் அதிகாரத்தின் வெற்றி !

டாஸ்மாக் உடைப்புப் போராட்டங்கள் : மக்கள் அதிகாரத்தின் வெற்றி !

-

டப்பாரை ஏந்திய பெண்கள் டாஸ்மாக் கடைகளை இடித்துத் தள்ளுகிறார்கள். பெட்டிபெட்டியாகச் சாராய புட்டிகளை வீதியில் போட்டு உடைக்கிறார்கள். அதிகாரிகள் ஒரு பொட்டல்காட்டுப் புறம்போக்கில் இடம் பிடித்துக் கடை கட்டினாலும், மறுநாளே மக்களால் அது முற்றுகையிடப்படுகிறது. இரவு பகலாக கடை அகற்றப்படும் வரை முற்றுகை தொடர்கிறது. சாராய பாட்டில் லாரிகள் மறித்து விரட்டப்படுகின்றன. கடைக்கு இடத்தை வாடகைக்கு விட முனையும் நபர்களை ஊரே கூடி நின்று எதிர்க்கிறது.

இந்த எழுச்சி இன்று தோன்றியதல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீதிமன்ற உத்தரவின்படி கடையை அகற்று என்று நடத்திய போராட்டத்தில்தான் சசி பெருமாள் மரணமடைந்தார். ஜெயா அரசு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படாது என்பதையும், நீதிமன்றமே தனது உத்தரவு மீறப்படுவதைத் தட்டிக் கேட்காது என்பதையும் மக்கள் புரிந்து கொண்ட தருணம் அது. அடுத்த சில நாட்களில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை நொறுக்கிய போது, போலீசின் தாக்குதலுக்கு அஞ்சாத அவர்களது உறுதி புதியதோர் பாதையைக் காட்டியது.

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் பற்றிப் பரவத் தொடங்கின. ம.க.இ.க. பாடகர் தோழர் கோவனைத் தேசத்துரோக வழக்கில் கைது செய்தபோது, அரசுக்கு ஆதரவாக வாதாட அ.தி.மு.க. அடிமைகளும் ஆர்.எஸ்.எஸ். பங்காளிகளும் மட்டுமே ஜெயலலிதாவுடன் நின்றனர். 2015-இல் சசிபெருமாள் மரணத்தைக் கொச்சைப்படுத்திய ஜெயலலிதா, “படிப்படியாகக் குறைத்து, மொத்தமாக மூடுவேன்” என்று 2016-இல் ஒரு  “போங்காட்டம்” ஆடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இவையனைத்தும் மெரினா எழுச்சிக்கு முந்தைய நிகழ்வுகள். அதன் பின்புலங்களில் ஒன்று எனவும் கூறலாம். தற்போது நடந்து வரும் மக்கள் எழுச்சி, நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வேறொரு வடிவிலான தொடர்ச்சி. நடந்து வரும் போராட்டங்களைக் கவனியுங்கள். போலீசுடன் இழைவதற்கும் வேனில் ஏறியபடி போஸ் கொடுப்பதற்கும் கட்சித்தலைவர்கள் யாரும் இல்லை. அதிகார வர்க்கத்துடன் மக்கள் நேருக்குநேர் பொருதுகிறார்கள். கன்னத்தில் அறைந்தாலும், தடிக்கம்பால் தாக்கினாலும் அடங்காமல் சீறிச் சினந்து வருகிறார்கள். இது அடிக்கு அஞ்சாத போர்க்குணம் மட்டுமல்ல. இந்த போர்க்குணத்தை உள்ளிருந்து கிளர்த்துவது இந்த அரசமைப்பின் மீதான வெறுப்பு. போராட்டக் களங்களில் வெற்றி பெறும் பெண்கள், மக்களின் அதிகாரத்தை நாம் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல் இருக்கக்கூடும். ஆனால், தமது அதிகாரம் செல்லாக்காசாகிப் வருவதை அதிகாரவர்க்கம் ஒவ்வொரு கணமும் உணர்ந்து புழுங்கிக் கொண்டிருக்கிறது.

“மூடு டாஸ்மாக்கை!” என்ற முழக்கத்தை முன்வைத்துப் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தலைமையில் சென்னை-பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம். (கோப்புப் படம்)

இன்று 3000 கடைகளுக்கு மேல் மூடப்படுவதற்குக் காரணம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது உண்மைதான். எனினும், இதுவே முழு  உண்மையல்ல. “கோயில், பள்ளி, மருத்துவமனைக்கு அருகில் மதுக்கடை கூடாது” என்ற விதி மீறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அத்தகைய கடைகளை மூடச்சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவுகள் ஒன்றா, இரண்டா? ஒரு கடையைக்கூட அரசு மூடியதில்லை. நெடுஞ்சாலைக் கடைகளை மூடுமாறு நீதிமன்றம் கூறியபோது, பின்வாசலை முன்வாசலாக்கி, “இது வேறு கடை” என்று நீதிமன்றத்துக்குச் சொன்ன அரசு இது. அதையும் வேடிக்கை பார்த்த நீதிமன்றம்தான் இது.

தற்போது மட்டுமென்ன? தீர்ப்பை மீறிக் கடை திறப்பதற்கு தன்னாலான முயற்சிகளையெல்லாம் அரசு செய்துதான் பார்த்தது. அரசை முடக்கியிருப்பது, நீதிமன்றத்தின் அதிகாரம் அல்ல, மக்களின் அதிகாரம்! கடப்பாரையும் துடைப்பமும் ஏந்திய பெண்கள்! “மக்கள் எதிர்ப்பு காட்டும் இடங்களில் நாங்கள் கடை திறக்க முயற்சிக்க மாட்டோம்” என்று உயர் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளிக்கிறார் அரசு வழக்கறிஞர். இது மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத நிலையில் போடப்படும் யோக்கிய வேடமல்லவா?

வேடம் போடுவது அரசு மட்டுமா? “மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தை சற்றுக் குறைப்பதற்காவது உத்தரவிடுங்கள்” என்று பா.ம.க. வழக்கறிஞர் பாலு 2015-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேட்டபோது, “அதெல்லாம் அரசின் கொள்கைப் பிரச்சினை, நாங்கள் தலையிட முடியாது” என்று கூறியது உயர் நீதிமன்றம். இன்றோ “குடியிருப்புப் பகுதிகளில் கடை வைக்காதீர்கள்” என்று கொள்கைப் பிரச்சினையில் “தலையீடு” செய்கிறது.

பச்சையப்பன் கல்லூரி வாயிலில் வைத்திருந்த மதுக்கடையை “சட்டவிரோதமானது” என உயர் நீதிமன்றம் அன்று கண்டிக்கவில்லை. மாறாக, “சட்டத்தை மாணவர்கள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது” என்று கூறி, அவர்களைச் சட்டவிரோதிகள் ஆக்கியது. கடையை உடைத்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட மாணவனைப் பிணையில் விட வேண்டுமானால், “50,000 ரூபாய் டாஸ்மாக்கிற்கு இழப்பீடு கட்ட வேண்டும்” என அன்று உத்தரவிட்டது. இன்றோ சிறை, போலீசு அதிகாரிகளைக் கண்டிக்கிறது.

“மூடு டாஸ்மாக்கை!” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு திருச்சியில் நடத்திய சிறப்பு மாநாட்டில் திரண்ட மக்கள் திரளின் ஒரு பகுதி. (கோப்புப் படம்)

இந்த மாற்றங்களுக்கு என்னதான் காரணம்? நிச்சயமாக “சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவேண்டும்” என்ற அக்கறையோ, “மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்ற ஜனநாயகப் பண்போ காரணமல்ல. தங்கள் அதிகாரம் செல்லுபடியாகவில்லை என்பதனால் இவர்கள் பின் வாங்குகிறார்கள். இப்போதைக்கு பின்வாங்குவதன் மூலம்தான் தங்கள் அதிகாரத்தின் கவுரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று பதுங்குகிறார்கள். மக்களின் குரலுக்கு மேலே தங்கள் குரலை ஓங்கி ஒலித்துத் தலைப்புச் செய்தியாக்குவதன் மூலம், “நிலைநாட்டப்படுவது நீதிமன்றத்தின் அதிகாரம்தான்” என்ற மயக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்துகிறார்கள்.

கடைகள் உடைபடுகின்றன என்பதைக் காட்டிலும், இந்த அரசமைப்பு குறித்த பிரமைகள் உடைபடத் தொடங்கிவிட்டன என்பதே இன்றைய போராட்டங்களின் முக்கியத்துவம். “கள்ளச்சாராயம் விற்பவனிடம் மனுக் கொடுப்பதும், கலெக்டரிடம் கொடுப்பதும் ஒன்றுதான்” என்று மக்கள் தெளிந்து விட்டார்கள். இந்த அரசதிகாரத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக கோபுரத்தில் ஏறிக் கூவினாலும் பயனில்லை என்று உணர்ந்து விட்டதனால்தான், அத்தகைய போராட்ட வடிவங்கள் உதிர்ந்து விட்டன.

தமிழகத்தின் தற்போதைய டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களை டில்லியில் நடத்தப்பட்ட விவசாயிகளின் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் கையாண்ட “போராட்ட வடிவங்கள்” விவசாயிகளின் சுயமரியாதையைக் குலைக்கின்ற வகையிலானவை என்பது மட்டுமல்ல, அவையெல்லாம் மோடியின் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகள் என்று அவர்கள் கூறிக் கொண்டார்கள்.

விவசாயத்தைப் புறக்கணிப்பதையும் விவசாயியை வாழ விடாமல் அழிப்பதையுமே தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் அரசின் “கவனத்தை ஈர்த்து” கருணையைப் பெற முயற்சித்த அந்த அணுகுமுறை ஒருபுறம். “எங்கள் குடியைக் கெடுப்பதுதான் உன் கொள்கை எனும்போது, நாங்கள் ஏன் உன்னிடம் மனுக் கொடுக்க வேண்டும்” எனக் கேட்டு, மதுக்கடைகளை உடைத்தெறிகின்ற தமிழகம் ஒருபுறம்.

இது போராட்ட வடிவம் குறித்த பிரச்சினையல்ல. அரசிடம் பணிந்து மன்றாடப் போகிறோமா – அரசைப் பணிய வைக்கப்போகிறோமா என்பது குறித்த பிரச்சினை. கல்விக்கொள்ளையோ, மணற்கொள்ளையோ, தண்ணீர்க்கொள்ளையோ எதுவும் இந்த அரசின் உறுப்புகளை மீறி நடப்பதல்ல. அனைத்தும் அவற்றால் நடத்தப்படுபவை. முறைகேடுகளே முறையாகிப்போயிருக்கும் சூழல் இது. எனவேதான், முறையீடுகளும் மன்றாட்டங்களும் முட்டுச்சந்துக்கு வந்துவிட்டன.

ஆம். இது முட்டுச்சந்து. கையில் கடப்பாரை ஏந்தியிருக்கும் பெண்கள் மதுக்கடையை மட்டும் தகர்க்கவில்லை. “இந்த அரசமைப்பின் அதிகாரத்துக்குட்பட்டுத்தான் தீர்வு காண முடியும்” என்று மக்களின் மூளைக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் முட்டுச்சந்தையும் சேர்த்துத் தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தை மாற்றியமைக்கும் மக்கள், தம் நடவடிக்கையின் ஊடாக தங்கள் சிந்தனையையும் மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். அதை அவர்கள் அந்தத் தருணத்திலேயே உணர்ந்து விடுவதில்லை. பின்னர் உணராமல் இருப்பதுமில்லை.

-மருதையன்

புதிய ஜனநாயகம், மே 2017